புதன், 24 பிப்ரவரி, 2010

THE SCENT OF THE GRANNY




a trembling voice
will enter the house
calling ''baboo...''

enters the granny

enter the scents
every time
granny enters

granny has two types of
fragrances
one her own-
a cocktail of the sacred ash and the
betal leaf

the other
the fragrance of her affection
and her bag of affection has different fragrances

every time
she steps in
different scents
step in

banana chips
fried in coconut oil
oranges
sweet tamarind
fried fish

granny's call
never enters
the house
with a scentless bag

granny had a
sky of words
and a sun too

once in a while
the sun would rise
in my own little world
to reveal several faces

so many faces
so many people

krishna draped in golden silk
karna crying like a river
ekalavya with a broken finger
the princess with fluttering wings
aswathama roaming with pussy wounds
sita swallowed by the doubting rama
poonthanam pacing with a brimming pot of wisdom
the madman of naaranathu rolling stone.

so many people
so many faces

my world
was a festival of faces
lit by granny's sun

leaving behind
her scents and
her sun
granny vanished
one day

today
in my mind
full of images
granny is
yet another image

did i say
granny possessed a
single fragrance?
no
granny had different scents

her head
smelt the
fried coconut
face
with the fragrance of sandal
armpit
smelt of sweat
breasts
fragrant with the herb
fingers
with the touch of tulsi
her feet
fragrant with the roots

the scent i like of her -
the fragrance of the breeze
blowing through the hole of her drooping earlobe.
because
the blowing breeze
also reeks with the fragrance
of her calling my name...'baboo'.
@



Translated into english - jhnani

’பாட்டி மணம்’ கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு

திங்கள், 22 பிப்ரவரி, 2010

உ ன து பா த ங் க ள்


















ன் முகத்தைப் பார்க்க முடியாதபோது
உன் பாதங்களைப் பார்க்கிறேன்.
வளைந்த எலும்பாலானவை உன் பாதங்கள்,
திடமான சின்னப் பாதங்கள்.
அவையே உன்னைத் தாங்குகின்றனவென்றும்
உனது இனிய பாரம்
அவற்றின் மேல்தான் உயர்கிறதென்றும்
எனக்குத் தெரியும்.
உன் இடை, உன் மார்பகங்கள்,
உன் முலைக்காம்புகளின் இரட்டைச் சிவப்பு,
சற்றுமுன் பறந்துபோன
உன் கண்களின் கூடுகள்,
உன் விரிந்த கனி வாய்,
உன் செந்நி¢ற முடிச்சுருள்.
ஆனால்,
நான் உன் பாதங்களைக் காதலிக்கிறேன்.
ஏனெனில்,
அவை பூமியிலும் காற்றிலும்
நீரிலும் நடந்தன-
என்னைக் கண்டடையும்வரை.


பாப்லோ நெரூதா

தற்காலக் கவிதை - சில கேள்விகள், சில சித்திரங்கள்

















சமீபத்திய வருடங்களின் கவிதைப் பெருக்கத்தை யோசிக்கும்போதெல்லாம் திருச்சூர் பூரக் காட்சியும் மனதில் திரையீடாகும்.

இருபுறமும் யானைகள். அவற்றின் முதுகுகளில் முதுகு ஒன்றுக்கு இருவராக வண்ணக்
குடைகளும் வெண்சாமரங்களும் பிடித்த மனிதர்கள். யானைகளுக்குக் கட்டியிருக்கும் பொன்முலாம் பூசிய பட்டங்கள் வெயிலில் மின்னுகின்றன. அந்த மினுக்கத்தால் வெயில் இன்னும் அதிகமாகப் பிரகாசிக்கிறது. யானைகளின் நேருக்கு நேரான வரிசைக்கு பின்னால் பல வண்ண மக்கள் திரள். முன்னால் வெவ்வேறு வாத்தியக் கருவிகளுடன் ஏறத்தாழ இருநூறு கலைஞர்கள்.வெவ்வேறு வாத்தியங்களிலிருந்து அவர்கள் வாசித்து எழுப்பும் வெவ்வேறு தாள ஒலிகள் ஒரே உயிரின் லயமாகக் கேட்கின்றன. சீரான ஒத்திசைவில் கலைஞர்களின் உடல்கள் இயங்குகின்றன. மக்கள் திரளின் பல்லாயிரம் கைகள் தாளத்துக்கு ஏற்ப உயர்ந்தும் தாழ்ந்தும் அசைகின்றன. உலகின் மிகப் பெரிய தாளவாத்தியக் கச்சேரியான பூரம் பஞ்சவாத்தியத்தின் உச்ச கட்டம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. முத்தாய்ப்பான அந்த கட்டத்தில் எல்லா வாத்தியக் கருவிகளும் இயங்குகின்றன. ஒலியளவு செவியை அதிரச் செய்வதாகிறது.பிரதான மேளக்காரர்களில் ஒருவர் அத்தனைப் பரபரப்புக்கும் அத்தனை விமரிசைகளுக்கும் நடுவில் சக கலைஞரோடு உரையாடிக்கொண்டிருக்கிறார். அவரும் வாத்தியத்தைக் கொட்டியபடியே அதைக் கேட்டு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். இருவரும் முகம் மலரச் சிரித்துக் கொள்கிறார்கள். ஒரு பெரும் நிகழ்வுக்குள் நடந்த இந்தக் குறுஞ்செயல் கவனத்தில் சாசுவதமாகத் தங்கிவிட்டது.

தமிழ்க் கவிதை பற்றிய சிந்தனையின்போது தவிர்க்க இயலாமல் இந்தக் கேரளச் சித்திரம் வந்து படரும். இதற்கு தர்க்கரீதியான பொருத்தம் இருக்கிறதா என்று சந்தேகம் எழும். எனினும் ஏதோ ஓர் ஒற்றுமையை மனம் இனங் கண்டிருக்கிறது. இன்றைய கவிதைப் பெருக்கமும் அதன் செயல்களும் விவரித்த காட்சியுடன் ஒப்பிடக் கூடிய ஒன்றாகவும் தோன்றியிருக்கிறது. நூற்றுக் கணக்கான கவிஞர்கள் இருக்கிறார்கள். கவிஞர்கள் பரஸ்பரம் உரையாடிக் கொள்கிறார்கள். வெவ்வேறு கவிதைகளின் தனிக் குரல்கள் ஒன்று கலந்து ஒரே மொழியின் துடிப்பாகின்றன. இவை எல்லாம் ஒற்றுமைகள். வேற்றுமையும் இருக்கிறது. வாத்தியக் கலைஞர்களின் வாசிப்புக்கு எதிர்வினையாற்றும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம். கவிதைக்கு வாசகர்கள் குறைவு. அல்லது இல்லவே இல்லை. கவிதை எழுதுபவர்கள், அதை வாசிப்பவர்கள் இருவரும் ஒரே பிரிவினராக இருக்கிறார்கள். புதிய நூற்றாண்டின் கவிதைகள் பற்றி யோசிக்கும்போது எழும் முதல் சித்திரம் இது.

@

நவீனத் தமிழ்க் கவிதை வெவ்வேறு கட்டங்களில் பெரும் அலை வீச்சாக எழுந்திருக்கிறது. 'எழுத்து' பத்திரிகையின் வாயிலாக உருவான அறிமுக அலை. எழுபதுகளில் திரண்டு எண்பதுகளில் வீச்சடைந்த அங்கீகாரம். இவற்றை விடத் தீவிரமாகவும் பரவலாகவும் கவிதை எழுந்தது தொண்ணூறுகளிலும் அதன் முத்தாய்ப்பாகப் புதிய நூற்றாண்டிலும்.

முந்தைய இரு காலப் பகுதிகளை ஒப்பிட்டும்போது மிக அளவில் கவிதைகளும் கவிஞர்களும் அறிமுகமாயிருப்பது கடந்த பத்தாண்டுகளுக்குள் என்று கருதுகிறேன். தொண்ணூறுகளுக்கு முன்புவரையிலான கவிதைகளை வகைப் படுத்துவது எளிதாக இருந்தது. அபத்தமான பிரிவினை என்றாலும் அகவயமானவை, புறவயமானவை என்று பெரும்போக்காகச் சொல்லிவிட முடிந்தது. இன்று அது எளிதல்ல. புதிய கவிதைகளை வகைப் படுத்துவ தென்பது தவளைகளை தராசிலிட்டு நிறுப்பதுபோல விநோதமாக முடியும்.
கவிதைப் பெருக்கத்துக்கான முகாந்திரங்களைச் சற்று யோசித்துப் பார்க்கலாம். இவை ஒரு கவிதைப் பயிற்சியாளனின் பார்வையில் தென்படுபவை. விமர்சன அடிப்படைகள் வலுவாகக் கொண்டிராதவை. கவிதைக்காரனாக என்னுடைய அக்கறைகள் கவிதையின் பிறப்பிலும் வளர்ச்சியிலும் செயலிலும் ஊன்றியவை. அதன் பிறப்புச் சான்றிதழில் அல்ல.அந்தக் கணிப்புகள் விமர்சகன் செய்ய வேண்டியவை. துரதிருஷ்வசமாக இன்றைய கவிதைகளை நுட்பமாக உணர்ந்து அவற்றின் செழுமையையும் ஊனத்தையும் வரையறுத்துச் சொல்லும் விமர்சகன் இல்லை. இது புதிய கவிதைகள் பற்றிய சிந்தனையில் உருவாகும் இரண்டாவது சித்திரம்.

@

முந்தைய கவிதைகள் நகர்ப்புறக் கல்வி பெற்றவர்களின் பங்களிப்பாக இருந்தது. அதற்குப் பின்னர் ஒரு புதிய தலைமுறை கல்வியில் தேர்ந்து இலக்கியத்தில் செயல்பட ஆரம்பித்தது. அந்த எண்ணிக்கை இரண்டாயிரங்களில் அதிகம். கவிதை எழுதுவதும் எழுதிய கவிதையை இதழ்களில் வெளியிடுவதும் நூலாக அச்சியற்றுவதும் எளிதான செயலல்ல. கணிப்பொறியின் பயன்பாடு பரவலாக ஆன பின்னர் இதழ் வெளியீடுகளும் நூல் தயாரிப்பும் இலகுவாயின. அண்ணா மறைவையொட்டி முதல் கவிதை எழுதிய கலாப்ரியாவுக்கு கவனத்துக்குரிய தொகுப்பு வர பாரதி நூற்றாண்டு வரை கால அவகாசம் வேண்டியிருந்தது. இன்னொறையும் கருத்தில் கொள்ளலாம். அதுவரை எழுதப்பட்ட கவிதைகள் தளர்ச்சியான செய்யுள் தன்மையையும் பொருள் இறுக்கத்தையும் கொண்டிருந்தன. புதுக்கவிதை என்ற வடிவமே மரபான வடிவத்துக்கு எதிரான கலகம் என்று எண்ணுகிறேன். அது உரைநடையில்தான் புதிய உணர்வின் வெளிப்பாடாக நிலைபெறுகிறது. செய்யுளை விட உரைநடை அதிக ஜனநாயகத்தன்மை கொண்டது என்பதும்
அதிக எண்ணிக்கையில் கவிஞர்கள் உருவாகக் காரணமாக இருக்கலாம்.

மேற்சொன்னவை கவிதைக்கான புறத் தூண்டுதல்கள் மட்டுமே. கவிதையை நிர்ணயிக்கும் அகத் தூண்டுதல் வேறு. நடுத்தர வர்க்கப் படிப்பாளிகளிடமிருந்து முந்தைய கவிதைகள் உருவாயின. அவை அல்லாத கவிதைகள் அரசியல் பிரச்சாரத்துக்காக எழுதப்பட்டன. புதிய நூற்றாண்டின் கவிதை வேறொரு தளத்திலிருந்து உயிர்த்தெழுந்தது. கல்வியறிவின் வெளிச்சத்துடனும் தமது இருப்பு நிலை பற்றிய விழிப்புணர்வுடனும் அறிமுகமான புதிய தலைமுறை கவிதைக்குள் பிரவேசித்தது. அதுவரை சொல்லப்படாத வாழ்வின் பாடுகளைச் சொல்ல முற்பட்டது. அதுவரை பேசப்பட்டிருந்த கவிதை மொழியைப் புனரமைத்தது. அதுவரை முன்வைக்கப்படாத நிலக் காட்சிகளைத் தீட்டியது. அதுவரை வெளியரங்கமாகாத மனக் கோலங்களை படர விட்டது. இரண்டாயிரங்களின் கவிதையியலை இந்தப் புதிய தலைமுறை நிர்ணயித்தது. தனக்கு முன்னிருந்த கவிதைகளைப் புதிய கோணத்தில் பார்க்கவும் தனக்கு முன்பு கவிதையில் ஈடுபட்டவர்கள் தம்மைப் புதுப்பித்துக் கொள்ளவும் வலியுறுத்தியது.

பல கிளைகள் கொண்டது இரண்டாயிரங்களில் கவிதைக்குள் நுழைந்த தலைமுறை.தலித்தியம். பெண்ணியம், சூழலியல், பின் நவீனத்துவம் என்று விவாத வசதிக்காக இவற்றை வகைப்படுத்தலாம். இவை முன்வைக்கும் கவிதையியலின் கூறுகள் தமிழ்க் கவிதைப் பரப்புக்குள் முன்னரே மங்கலாக இடம் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் தனது கவிதையியலுக்குள் பயிலாத ஒன்றை - அது வடிவமோ, கருத்தாக்கமோ எதுவானாலும் ஒரு மொழி ஏற்றுக் கொள்வது அரிதென்று தோன்றுகிறது. காரணம், மொழி கலாச்சாரத்தின் கொள்கலம். சானட் போன்ற ஆங்கிலக் கவிதை வடிவங்களையும் அந்நியப் பழக்க மரபுகளையும் தமிழ்க் கவிதை புறந்தள்ளக் காரணம் இதுதான். ஒரு நீக்ரோவின் உணர்வை நமது கவிதையியல் துலக்கமாக வெளிப்படுத்த இயலாது. ஆனால் பள்ளர்களின் வாழ்க்கையையும் நந்தனின் பதற்றத்தையும் உணரக் கூடிய சுரணையுள்ள மொழி அதை ஏற்று விரிவாக்கும். கடவுளின் விரிமார்பில் சேரத் தவிக்கும் தடமுலைகளைப் பேசக் குரல்கொடுக்கும் மொழி பெண்ணின் இருப்பை மதிக்கும். காமத்தையும் உடலெழுத்தையும் அங்கீகரிக்கும். இயற்கையை ஆராதிக்கும் கவிதையியல் சுற்றுச் சூழல் அக்கறைகளுக்கு வழி கோலும். கவிதையியலின் கலாச்சார இயல்பு இது என்று வரையறுக்கலாம். எனினும் கவிதை எப்போதும் மாமூல் கருத்தாடல்களுக்கு எதிரானது. அது அதிகம் வெளிப்பட்டது தற்காலத்தில் என்று பெருமிதப்படலாம். இந்த எதிர்க் குணமேகவிதையின் பெருக்கத்துக்குக் காரணியாக இருக்குமா? மூன்றாவது சித்திரத்தை மிளிரச் செய்யும் கேள்வி இது.

@

இந்தக் கிளைகள் ஒரு புறம். கூடவே எழுபது ஆண்டுக் காலமாக உருவாகி வளர்ந்த புதுக் கவிதையின் முதன்மைப் போக்கிலுள்ள கவிதைகளும் இரண்டாயிரங்களில் மாற்றமடைந்தன. நவீனத்துவம் என்ற அடையாளத்திலிருந்து விலக்கிப் பின் - நவீனத்துவம் என்ற அடையாளத்துடன் விவாதிக்கப்படுகின்றன.இந்த அடையாளம் மேம்போக்கானது என்று கருதுகிறேன். தவிர இன்றைய உலகமயமாக்கலின் செல்லக் கருத்தாகவும் இந்த அடையாளம் மாறிவிட்டது. தொலைபேசியைப் பயன்படுத்துவது நவீனத்துவம்.கைத்தொலை பேசி உபயோகிப்பது பின் நவீனத்துவம்.
உண்மையில் கவிதையின் நிரந்தரமான கோரிக்கை நவீனமாக - புதுமையாக - இருப்பது.எந்தக் கருத்தாக்கத்தையும் கேள்விக்குட்படுத்துவது, படிமம்போன்ற முந்தைய கவிதை அணிகளைத் துறப்பது, உரைநடைத்தன்மையிலேயே கவிதையை எழுதுவது, கடவுள் - சாத்தான் என்ற எதிரீடுகளில் இருவரையும் ஒன்றாக்குவது, மதிப்பீடுகளைக் கலைத்துப் போடுவது என்று பின் நவீனக் கவிதைக்குச் சொல்லப்படும் இலக்கணங்கள் எல்லாக் காலத்தையும் சேர்ந்த கவிதைக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. நம் முன் இருக்கும் படைப்புகளைக் கணக்கில் கொள்ளாமல் உருவாக்கப்பட்ட கருத்தாடல் என்றும் படுகிறது. இதை ஒதுக்கிவைத்து விட்டு பின் நவீனத்துக்கு நம்மிடையே இருக்கும் படைப்புகளை முன்னிருத்தி மாற்றான வரையறைகளைக் கண்டடையலாம். இவை என் வாசிப்பிலிருந்து தொகுத்துக் கொண்ட வரையறைகள். இதன் மூலம் இன்றைய கவிதைகளை மேலும் விரிவான பின்புலத்தில் காண விரும்புகிறேன்.ஒவ்வொரு பதிற்றாண்டிலும் மொழி மாறுகிறது. இந்த மாற்றம் புனைகதைகளை அதிகம் பாதிப்பதில்லை. ஏனெனில் அதில் ஓர் அனுபவப் பதிவோ கதையாடலோநிகழ்கிறது. சரியாகச் சொன்னால் புனைகதை ஓர் அனுபவத்தை அதன் பின்னணித் தகவல்களுடன் வரலாறாக மாற்ற முனைகிறது. கவிதை ஓர் அனுபவத்தை காலத்தின் படிமமாக மாற்ற முற்படுகிறது. நிகழ்கால மொழியில் படிமமாக்கலை எந்தக் கவிதையியல் நிறைவேற்றுகிறதோ அதைப் பின் நவீனத்துவக் கவிதை என்று அழைக்க விரும்புகிறேன். இந்தப் படிமமாக்கலில் அதுவரை இருந்த தேய்வழக்குகள் உதறப்படுகின்றன. காட்சிகள் மாற்றமடைகின்றன. விலக்கப் பட்ட வாழ்க்கையின் பண்பாட்டுக் கூறுகள் கவிதையின் அலகுகளாகின்றன. பல தொனிகளில் வெளிப்படும் குரல்கள் கவிதை மொழியின் சாரமாகின்றன. குறிப்பாகக் கோட்பாடுகளின் உதாரணமாக அல்லாமல் மனித மனத்தின் - மனித இருப்பின் எல்லா கோணங்களையும் எந்தப் பார்வை சித்தரிக்க முனைகிறதோ அதைப் பின் நவீனத்துவக் கவிதை என்று சொல்ல விரும்புவேன். இதற்கான சான்றுகளை கவிதை மீது கவனமுள்ள வாசகரால் எளிதில் இனங்காண முடியும். இது தற்காலக் கவிதை எனக்குள் விரிக்கும் நான்காவது சித்திரம்.

@

ஈழக் கவிதைகளைக் குறிப்பிடாமல் தற்காலத் தமிழ்க் கவிதையின் சித்திரம் முழுமையடையாது. கடந்த மூன்று பதிற்றாண்டுகளாக ஈழத்துக் கவிதைகள் தமிழகக் கவிதைகளையும் தமிழகக் கவிதைகள் ஈழத்துக் கவிதைகளையும் பாதித்து வந்திருக்கின்றன. இரண்டு நிலைகளில் இந்தப் பாதிப்பு செயலாற் றியிருக்கிறது. ஒன்று: அரசியல் சார்ந்து. மற்றது: பெண்மொழி சார்ந்து.

ஈழத்துக் கவிதைகளின் செல்வாக்கில்லாமலிருக்குமானால் தற்காலக் கவிதையியலில் அரசியல் விவாதத்துக்கான தருணங்கள் இல்லாமலிருந்திருக்கும். நவீனத் தமிழ்க் கவிதை அரசியலை தீண்டத் தகாததாகவும் அரசியலை மையப்படுத்தி எழுதப்படும் கவிதைகளைப் பிரச்சாரக் கவிதைகள் என்றும் ஒதுக்கியே வைத்திருந்தன. அவசரநிலைக் காலம் பற்றி தமிழில் எழுதப்பட்ட சீரிய கவிதை ஒன்றே ஒன்று மட்டுந்தான் என்பது இந்த இலக்கிய விலக்கைப் புரியவைக்கும்.
போருக்குள் நிகழும் வாழ்வு பற்றிய ஈழத்துக் கவிதைகள்தாம் தமிழ்க் கவிதைக்குள் அரசியலுக்கான இடத்தை உறுதிப் படுத்தியது. பெண்நிலையில் வாழ்வை எதிர்கொள்ளும் பார்வைக்கும் ஈழத்துக் கவிதைகளிடம் கடன்பட்டிருக்கிறோம். 'சொல்லாத சேதிகள்' என்ற தொகுப்பு தமிழ்க் கவிதையியலில் உருவாக்கிய அதிர்வுகளின் பின் விளைவுகள் காத்திரமானவை.

இந்தப் பாதிப்புகளின் ஸ்தூல அடையாளங்களை தற்காலக் கவிதையில் எளிதில் காணலாம்.ஈழத் தமிழின் சொல் வழக்குகள் பலவும் எந்தத் தடையுமின்றி தமிழ்க் கவிதைகளில் பயன்படுத்தப்படுவதையும் மறு பக்கத்தில் தமிழ்க் கவிதைச் சொற்கள் ஈழக் கவிதையில் புகுந்திருப்பதையும் உணரலாம்.

@

கடந்த பதிற்றாண்டில் வெளியாகியிருப்பவற்றில் கவிதை நூல்களே கணிசமாக இருக்கும். இதழ்களில் வெளியாகும் கவிதைகளை விட மும்மடங்குக் கவிதைகள் இணையத்தில் வெளியாகின்றன. இந்தக் கவிதை வெளிப்பாட்டின் நோக்கங்களும் வெவ்வேறு. சிலருக்கு அது ஓர் அடையாள அட்டை. அதைப் புனைகதைக்கான ஒத்திகைச் சீட்டாகப் பயன்படுத்தலாம். திரைப் பிரவேசத்துக்கான கடவுச் சீட்டாகக் கொள்ளலாம். அரசியலில் எந்தப் பங்களிப்பும் செய்யாத ஒருவருக்கு கௌரவப் பதக்கமாகலாம். இலக்கியத்தில் அதிகாரம் செலுத்தக் கூடிய மாய நாற்காலியாகலாம். எதிர்பாலினரை வசீகரிக்கும் ஒப்பனையாகலாம். பாவம், தமிழ்க் கவிதை. இத்தனை நோக்கங்களுக்கும் அது ஈடு கொடுக்கிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளாக இப்படித்தான் ஈடுகொடுத்திருக்கிறது. சீட்டுக் கவியாக, ஆருடக் கருவியாக, பரிசல் இரக்கும் பாத்திரமாக, தற்பெருமையை அறைந்து சொல்லும் முரசாக, கடவுளின் பல்லக்காக என்று பலவிதமாக ஈடுகொடுத்த மரபில் அவற்றையெல்லாம் மீறி வாழ்வின் கணங்களை நிரந்தரப் படுத்தியும் மனதின் உள் ஆழங்களைத் திறந்து காட்டியும் மனித இருப்பின் சிக்கல்களை ஆராய்ந்தும் விரிந்த சுதந்திர வானத்துக்காக வேட்கைகொண்டும் கவிதை தொடர்ந்து உயிர்ப்புடன் இருந்து வருகிறது. தற்காலப் பெருக்கத்தில் அது எங்கே என்று கண்டடைவதுதான் இரண்டாயிரங்களின் வாசகனின் முன் நிற்கும் சவால்.
@
முதற் பத்தியில் இடம் பெற்ற பூரக் காட்சியில் வாத்தியக் கலைஞர்கள் இருவரும் பேசிக் கொள்வதுபோலத்தான் இரண்டு கவிஞர்கள் உரையாடிக் கொள்கிறார்களா? அல்லது கவிஞன் தன்னுடைய வாசகனிடம் உரை யாடுகிறானா? இந்தச் சித்திரம் இப்போது கேள்வியாகிறது.


நன்றி: ’காலச்சுவடு’ (இதழ் 121) ஜனவரி 2010.

சனி, 13 பிப்ரவரி, 2010

கவிதையில் மனித உறவுகள்

நண்பர்களே, 'இருபத்தியோராவது நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைச் செல்நெறிகள்’ என்ற பொதுத்தலைப்பு இந்தக் கருத்தரங்கத்துக்குக் கொடுக்கப் பட்டுள்ளது. எனக்கு அளிக்கப் பட்டிருக்கும் துணைத் தலைப்பு - கவிதையில் மனித உறவுகள். இந்தத் துணைத் தலைப்பை முன்மொழிந்தவர் ஒன்று வில்லங்கமானவராக இருக்க வேண்டும். அல்லது மிகவும் எச்சரிக்கையுணர்வு கொண்டவராக இருக்கவேண்டும். ஏனெனில் தலைப்பில் இரண்டுவித மன நிலைக்குமான கூறுகள் இருக்கின்றன.

கவிதை என்ற சொல் மூலம் குறிக்கப்படும் உணர்வுநிலை எவ்வளவு விரிவானதோ அதே அளவுக்கு மனித உறவுகள் என்ற சொற்சேர்க்கை வழியாகச் சுட்டப்படும் இயல்பும் விரிவானது. மனிதனுடன் தொடர்புடைய எதுவும் கவிதைக்கு விலக்கானதல்ல. அதேபோல, மனிதன்கொள்ளும் எந்த உறவும் கவிதைக்குப் புறம்பானதல்ல. கவிதை என்ற சொல்லுக்குள் ஒரு கடல் மறைந்திருக்கிறது.அதைப்போன்ற இன்னொரு கடல் மனித உறவுகள் என்ற சொற்சேர்க்கையில் ஒளிந்திருக்கிறது. இரண்டு கடல்களை ஒரு குப்பிக்குள் அடக்க வேண்டிய கட்டாயத்தைத் தலைப்பு கொண்டிருக்கிறது. இதை வில்லங்கம் என்று சொல்லாமலிருப்பது எப்படி?

கவிதைக்குப் பொருளாகும் மனித உறவுகளும் உறவுகளைப் பொருள்படுத்தும் கவிதை யாக்கமும் முற்றானவையல்ல.. மனித உறவை எந்த மிச்சமு மில்லாமல் கவிதை சித்தரித்து விட்டது என்று சொல்வதற்கோ மனிதன் கொள்ளும் எல்லா உறவுகளும் முழுமை யடைந்து விட்டன என்று அறிவிப்பதற்கோ ஒருபோதும் வாய்ப்பில்லை. அந்த வாய்ப்பு ஒருபோதும் வராது. எனினும், கவிதையும் உறவுகளும் அப்படியான நிறைவை நோக்கியே முன்னேறுகின்றன. இது ஓர் எச்சரிக்கை. எனக்கு அளிக்கப் பட்டிருக்கும் தலைப்பை இந்தக் கோணத்திலிருந்தே அணுகுகிறேன்.

சரியாகச் சொல்லப்போனால் இந்த இரண்டு எல்லைகளுக்குள் நிகழும் ஊஞ்சலாட்டம்தான் கவிதையாக்கம். வாழ்க்கையின் நிகழ்வுகளுக்கும் வாழ்க்கையை மதிப்பிடும் படைப்புச் செயல் பாட்டுக்கும் இடையில் நிகழும் ஊஞ்சலாட்டம். அது வேடிக்கையானது. அதேசமயம் எச்சரிக்கையானதும் கூட. இதையே ஒரு பகுப்பாக வைத்துக் கொண்டால் நவீனத் தமிழ்க் கவிதையையே வேடிக்கையானவை; எச்சரிக்கையானவை; இரண்டும் கலந்தவை என்று பிரித்து விடவும் முடியும்.

அண்மைக் காலமாக எழுதி வரும் கவிஞர்களில் சிலரை இந்தப் பகுப்புக்கு உட்படுத்திப் பார்க்கலாமென்று கருதுகிறேன். இசை, முகுந்த் நாகராஜன், சங்கர ராம சுப்ரமணியன் ஆகியோரின் கவிதைகளை வேடிக்கையானவை என்றும் குட்டி ரேவதி, சல்மா, சுகிர்தராணி போன்றோரின் கவிதைகளை எச்சரிக்கையானவை என்றும் யூமா வாசுகி, இளங்கோ கிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் முதலியோரின் கவிதைகளை வேடிக்கையும் எச்சரிக்கையும் கலந்தவை என்றும் சொல்ல விரும்புகிறேன். இதில் வேடிக்கை என்று நான் பயன்படுத்தும் சொல் மிக எச்சரிக்கையானது. எச்சரிக்கை என்று கையாளும் வார்த்தை வேடிக்கையானது.

கவிதை தொடர்பான விவாதங்களில் கவிதை என்றால் என்ன? என்ற புராதனமான கேள்வி எப்போதும் கேட்கப்படுவதுண்டு. அதற்கான நிலையான பதில் எதுவுமில்லை. அந்தந்தக் காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்பவோ கவிஞன் அல்லது திறனாய்வாளனின் மனப் பாங்குக்கு ஏற்பவோ இதற்கான பதில் முன்வைக்கப்படுவதும் உண்டு. இந்தத் தலைப்பை யொட்டி இன்னொரு தற் காலிகமான பதிலை முன்வைக்க விரும்புகிறேன். மனித உறவின் கலாச்சார முகங்களில் ஒன்று கவிதை.

முன்பே குறிப்பிட்டதுபோல மனித உறவுகள் என்ற சொற்சேர்க்கை விரிவானது. பறவை அதன் பறத்தலைப் பற்றிய எந்தத் தடயங்களையும் ஆகாயத்தில் விட்டு வைப்பதில்லை. மீன் அதன் நீந்தலின் சுவடுகளை நதியில் தேக்கி வைப்பதில்லை. ஆனால் மனித ஜீவனுக்கு அது போன்ற சுதந்திரம் இல்லை. அவன் இருந்த்தற்கும் வாழ்ந்ததற்குமான ஏராளமான அடையாளங்களை மண்ணில் பதித்துச் செல்ல வேண்டியிருக்கிறது. அவை தாம் உறவுகளை உருவாக்குகின்றன. இந்த உறவுகளின் ஆகத்தொகையே கலாச்சாரம் அல்லது பண்பாடு. மனிதன் தவிர்த்த பிற உயிரினங்களின் தேவை உயிரியல் சார்ந்தது. மனிதத் தேவைகளோ உயிரியலை மட்டும் சார்ந்தவையல்ல. அவன் உறவு கொள்ளும் எல்லாவற்றையும் சார்ந்தது. மனிதன் மனிதனோடு கொள்ளும் உறவு, மனிதன் இயற்கையோடு கொள்ளும் உறவு, மனிதன் காலத்தோடு கொள்ளும் உறவு, மனிதன் இடத்தோடு கொள்ளும் உறவு, மனிதன் கருத்துகளோடு கொள்ளும் உறவு, மனிதன் முந்தைய தலைமுறையோடு கொள்ளும் உறவு, மனிதன் கனவுகளோடு கொள்ளும் உறவு - என்று உறவின் நிலைகள் விரிவானவை. எண்ணற்ற கிளைகள் கொண்டவை. மனிதன் கொள்ளும் உறவுபோலவே அவன் கொள்ளும் உறவின்மையையும் உறவில் நேரும் முரண்களையும் பகைகளையும் கூட உறவின் கூறாகவே இலக்கியம் கருதுகிறது.

அப்படிக் கருதுவதனாலேயே இலக்கியம் உருவாகிறது. கவிதை உருவாகிறது. கலைகள் உருவாகின்றன. இது எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் பண்பாட்டுச் செயல்பாடு. ஆனால் இந்தச் செயல்பாடு காலத்தையொட்டியும் மனிதன் உருவாக்கும் சமூகச் சூழலையொட்டியும் மாற்றமடைகின்றன. அதற்கு இருபத்தியோராம் நூற்றாண்டு உட்பட எந்தக் காலமும் விலக்கல்ல. இன்றைய கவிதை உட்பட எந்தக் கவிதையும் விலக்கல்ல.

காலமும் சமூகமும் வாழ்நிலைகளும் தொடர்ந்து மாற்றம் பெற்று வருகின்றன. அதை யொட்டி இலக்கியமும் குறிப்பாகக் கவிதையும் மாற்றம் பெறுகின்றன. அதில் இடம் பெறும் உறவுகளும் மாற்றத்துக்குள்ளாகின்றன.

ஓர் எடுத்துக்காட்டாகக் காதல் பற்றிய கவிதையைப் பார்க்கலாம். காலங் காலமாகக் கவிதை கொண்டாடி வரும் ஓர் உறவு - காதல். சங்க காலம் முதல் இன்றுவரை கவிதையின் ஊற்றாக இருக்கும் இந்த உறவு ஒரே அர்த்தத்தில் பேசப் படுவதில்லை. 'காதல் வசப்பட்டவர்கள், குதிரைமீது ஏறிக்கொள்வதைப்போலப் பனை மடல் மீது ஏறிக்கொள்வார்கள். எருக்கம் பூவைச் சூடிக்கொள்வார்கள். பிறர் சிரித்தாலும் மதிக்க மாட்டார்கள்' என்று ஓர் ஆணின் காதல் மனதை 'குறுந்தொகை'ப் பாடல் சிலாகிக்கிறது. அது நாமறியாத ஒரு நூற்றாண்டின் போக்கு.'பங்கமொன்றில்லாமல் முகம் பார்த்திருந்தால் போதும்' என்று பாரதியின் ஆண் திருப்தியடைந்து விடுகிறான். இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் மனநிலை. இருபதாம் நூற்றாண்டு நகர்ப்புறக் காதலனின் மனநிலையை ஞானக்கூத்தன் கவிதையொன்று சொல்கிறது.

'கதைகேட்கப் போய்விடுவாள் அம்மா.மாடிக்
கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா.சன்னத்
தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி
தூங்கி விடும். சிறுபொழுது தாத்தாவுக்கு
விசிறியதும் அவரோடு வீடு தூங்கும்.

பூக்களெல்லாம் மலர்ந்தோய்ந்த இரவில் மெல்லக்
கட்டவிழும் கொல்லையிலே பவழமல்லி.
கதைமுடிந்து தாய்திரும்பும் வேளைமட்டும்
தெருப்படியில் முழுநிலவில் அந்த நேரத்
தனிமையிலே என்நினைப்புத் தோன்றுமோடி
? '

இதற்கு முற்றிலும் வேறானது இன்றைய காதலனின் மனவோட்டம். தேவதேவன் கவிதை அதை இப்படிச் சொல்கிறது.

'கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்.
ஒரு காப்பி சாப்பிடலாம் வா'.


தேவதேவன் அறிமுகப்படுத்தும் காதலன் பயந்தாங்குளியாகவோ கூச்ச சுபாவியாகவோ இருக்கலாமோ என்னமோ?

ஆனால் பெண்கள் காதல் உறவில் வெளிப்படையானவர்களாக மாறி யிருக்கிறார்கள். சுகந்தி சுப்ரமணியனின் ஒரு கவிதையில் வீட்டை விட்டு வெளியே எங்கும் அழைத்துச் செல்லாத காதலன் அல்லது கணவன் மீதான புகார் ஒலிக்கிறது. அந்த மனநிலையை இன்றைய உறவு பற்றிய கருத்தாக்கங்கள் புரட்டிப் போட்டிருக்கின்றன.காதல் என்ற உணர்வே ஒப்புக்குச் சொல்லப்படுவது.அதன் உண்மையான பொருள் காமம் சார்ந்தது. காதல் பெண்ணை வழிபடுகிற ஆணாதிக்கத் தந்திரம். அவளது உடலிருப்பைக் கண்டு கொள்ளா மலிருக்கிற பாராமுகம். இதை மறுக்கிற குரலில் உறவின் புதிய பொருளை குட்டி ரேவதியின் கவிதை சொல்கிறது.

'வருடிப் பார்த்திருக்கிறாயா என் காமத்தை/
ஒரு புதிய காகிதத்தில் எழுத விரும்புவதைப்போலவோ
அல்லது ஒரு குழந்தையின் விரல்களைப் பற்றும் ஆர்வத்துடனோ
? '
என்று கேட்கிறது. இந்த மனநிலையும் உறவுப் பரிமாணமும் இருபத்தியோராம் நூற்றாண்டின் கருத்தாக்கம் என்றே கருதுகிறேன்.
உறவுகளின் மீது ஒட்டப்பட்டிருந்த புனிதச் சீட்டுகளை புதிய கவிதைகள் சுரண்டி எறிந்திருக்கின்றன. தாய்மையைப் பற்றிய கருதுகோள்கள் கேள்விக்குள்ளாக்கப் பட்டிருக்கின்றன. தாய்மை என்பது இயற்கையான நல்லியல்பு,தாய் மீதான பாசம் பிள்ளைக் கடன் என்ற கருத்துக்களை இன்¨றைய கவிதைகள் நொறுங்கிவிழச் செய்திருக்கின்றன. என்.டி.ராஜ் குமாரின் இந்தக் கவிதையை அதற்கு எடுத்துக் காட்டாகச் சொல்ல விரும்புகிறேன்.'
பற்றி எரிகிற தீயை அணைக்கிற மனவியே,
சூசகமாய் ஒரு வார்த்தை சொல்/
சோற்றில் விஷம் வைத்து அம்மாவைக் கொன்று விடுகிறேன்'

என்று அதிர்ச்சியூட்டுகிறது கவிதை. இந்த அதிர்ச்சிக்குக்காரணம் உறவுகள் மீதான பூச்சுக்களைக் களைந்து விட்டு கவிதை எதார்த்தத்தை முன்வைக்க விரும்புவதுதான். இது தாயை மட்டுமல்லதாய்மையின் சந்தனக் காப்புச் சார்த்திய எல்லா விக்கிரகங்களின் மீதான கற்பனைகளையும் பெயர்ப்பதுதான்.

இதுவரை சொன்னவை வரையறுக்கப்பட்ட உறவுகளை முன்னிருத்திப் பேசப்பட்டவை. மனிதன் தானாகத் தேர்ந்தெடுத்துகொள்ளும் உறவுகளின் சுதந்திரத்தையும் சுதந்திரமின்மைகளையும் நவீனக் கவிதைகள் முன்வைக்கின்றன. தொண்ணூறுகளில் எழுதப்பட்ட சமயவேலின் 'சந்தி' என்ற கவிதை இது.
'நான் உன் கணவரோடு
நீ என் மனவியோடு
நம்மை எதிரெதிர் ஆசனங்களில் அமர்த்தி
வேடிக்கை பார்க்கும் மிக்சரும் காபியும்.
எல்லாம் பேசிக்கொண்டோம்
அந்த ஒரே விஷ்யம் மட்டும்
தொடப்பட முடியாமல்/
நம்மைச் சுற்றிப் புதைந்து எழுந்து
புதைந்து நழுவிக் கொண்டிருந்தது
நம் முழு இருப்பையும் அசைத்து விடும்
ஒரு கனத்த கேள்வியின் விசுவரூபத்தின் முன்
தடுமாறி நின்றோம்.


ஏற்கனவே அறிமுகமான ஓர் ஆணும் பெண்ணும் தங்கள் உறவின் இழப்பை மீட்டெடுக்க முடியாமல் போவதன் சூழலைச் சொல்கிறது கவிதை. ஒரு கையறு நிலை மௌனத்தில் முடிகிறது. இதே உறவின் சூழலை இதே உறவின் இயல்பை மனுஷ்யபுத்திரனின் அண்மைக்காலக் கவிதை வேறு மொழியில் சொல்கிறது.
'சிநேகிதிகளின் கணவர்களுடனான சிநேகங்களில்
எப்போதும் உருவாகி விடுகிறது ஒரு சதுரங்கக் கட்டம்
ஒரு கலைக்க முடியாத பாவ்னையின் நிழல்
ஒரு சர்க்கஸ் கோமாளியின் அபாயகரமான சாகசங்கள்
ஒரு அபத்த வெளியில் விரிக்கப்பட்ட வலை'.
என்று முன்னேறுகிற கவிதை ஓர் உறவின் மீதான பண்பாட்டு இடக்கரடக்கலைக் கேலி செய்கிறது. அந்தக் கேலி இந்த நூற்றாண்டின் துக்கம் கூட.
'நான் குழப்பமடைவதெல்லாம்
சிநேகிதியைப் பெயர் சொல்லாமல் அழைப்பது எப்படி என்று?
அல்லது பெயர்களை வெறும் பெயர்களாக
எப்படி உச்சரிப்பது என்று
ஒரு சிநேகிதியை சிஸ்டர் என்று அழைக்கும்
ஒரு ஆபாசக் கலாச்சாரத்திலிருந்து
எப்படித் தப்பிச் செல்வது என்று'
.
இப்படியான ஒரு கவிதை சென்ற நூற்றாண்டில் எழுதப் பட்டிருக்க வாய்ப்பில்லை.

வாழ்வு. கலை பற்றிய கண்ணோட்டங்களும் மாறியிருக்கின்றன. வாழ்வுடனும் கலையுடனும் மனிதனுக்குள்ள உறவைப் பற்றிய கவிதை ந.பிச்சமூர்த்தியின் 'கொக்கு'.
'படிகக் குளத்தோரம் கொக்கு
செங்கால் நெடுக்கு
வெண்பட்டுடம்புக் குறுக்கு
முடியில் நீரை நோக்கும் மஞ்சள் கட்டாரி மூக்கு
வாழ்வு குளம் செயலும் கலை.
நாமும் கொக்கு
சிலவேளை மீனழகு
பலவேளை நிழலழகு
எதுவாயினென்ன?
தவறாது குளப்பரப்பில்
நம்மழகு தெரிவதே போதாதா
?'
என்று சாத்வீகமான அணுகுமுறையைப் பரிந்துரைக்கிறார் பிச்சமூர்த்தி. அப்படியான உறவல்ல இன்றைய காலம் நமக்குக் கொடுத்திருப்பது. இதை இசையின் கவிதை அடையாளம் காட்டுகிறது.
'இச் சாக்கடை நீரில்
உறுமீன் ஏது?
கிடைக்கிற குஞ்சுகளைக் கொத்தித் தின்
என் கொக்கே.'
என்ற வரிகள் சமகால உறவின் அறிவிப்பு.

சமூகத்துடன் மனிதன் கொள்ளும் உறவும் இன்று வேறு பொருள்களைக் கொண்டிருக்கிறது. தனி மனிதன், சமூக மனிதன் என்று இருமையாகத் தென்பட்ட உறவு இன்றைய கவிதையில் தனி மனிதனின் மூலம் வெளிப்படும் சமூகம் என்றாகி இருக்கிறது. இதை ஒட்டிய நெருக்கமும் விலகலும் கவிதைக்குப் பொருளாகின்றன. ஏற்பும் நிராகரிப்பும் கவிதைப் பொருளாகின்றன. த.அரவிந்தனின் 'கல்லாட்டம்' என்ற கவிதை மறைமுகமாக ஒரு சமூக உறவின் சித்திரத்தைத் தீட்டுகிறது.

'யாரும் விளையாடாத மைதானத்தில்
ஒரு கல் நடுவராக நிற்கிறது.
ஒரு கல் ஓடிவந்து சுழற்பந்து வீசுகிறது
ஒரு கல் ஏறிவந்து
மட்டையால் விளாசுகிறது.
மூன்று கற்கள் அண்ணாந்தபடியே
பறக்கும் பந்தைப் பிடிக்க ஓடுகின்றன
எதனிடமும் சிக்காமல் பந்து
எல்லைக் கோட்டைக் கடக்க
பல கற்கள் கைதட்டுகின்றன'
.
இதில் அரசியலின் விளையாட்டும் விளையாட்டின் அரசியலும் சித்தரிக்கப்படுகின்றன. சமூக வாழ்வில் வெற்றிகள் பாராட்டப்படும் பொதுமனப்பான்மையைக் கவிதை கேலி செய்கிறது. அதன் மறுபக்கமாக தோற்கடிக்கப்படுபவர்களின் துயரத்தை நிழலுருவமாகக் காட்டவும் செய்கிறது.

வாழ்க்கையை இலக்கியம் எப்படி அளக்கிறது? டி.எஸ் இலியட் தன்னுடைய கவிதையொன்றில் இதற்கான பதிலைக் குறிப்பிட்டிருந்தார். 'இலக்கியம் வாழ்க்கையை தேக்கரண்டியால் அளக்கிறது'. கவிதையின் மனித உறவுகள் என்ற சமுத்திரத் தலைப்பை தேக்கரண்டியால்தான் என்னாலும் அளக்க முடிகிறது. மனித உறவுகள் என்று நாம் எதையெல்லாம் குறிப்பிடுகிறோமோ
அவையனைத்தையும் கவிதை பொருட்படுத்தி உள்வாங்கிக் கொள்கிறது. இந்த உள் வாங்கல் இருபத்தியோராம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதையில் மிக விரிவாகவே நிகழந்து வருகிறது. இதைப் பற்றிய ஓர் இருப்புக் கணக்குக்கு நான் தயாரில்லை.ஒன்று, நான் கவிதையாக்கத்தில் கவனம் செலுத்துபவன். கணக்கெடுப்பாளனாக மாறினால் கவிதையுடனான என் உறவு குலைந்து விடலாம். இரண்டாவது, ஒன்பது ஆண்டுகளுக்குள்ளாக ஒரு நூற்றாண்டின் போக்கைக் கணிப்பது கடினம். எனினும் கவிதை ஆர்வலானாக சிலவற்றை முன்வைக்க விரும்புகிறேன்.
இதுவரை கவிதைக்குள் அனுமதிக்கப்படாமலிருந்த பல உறவுகள் நவீனக் கவிதையில் மையப் பொருளாகி இருப்பதை இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் கவிதைப் போக்கில் நிகழ்ந்திருக்கும் முதன்மையான அம்சமாகக் குறிப்பிடலாம். சமூகத்தில் நடந்திருக்கும் மாற்றங்களின் விளைவாக மனிதன் ஒற்றை அடையாளம் கொண்டு சுருக்கப்படுகிறான்/சுருக்கப்படுகிறாள். இதற்கு எதிராக அவன் கொள்ளும் நிலைப்பாடுகள் புதிய உறவுத் தளங்களை உருவாக்குகின்றன. பெண்ணுக்கான இடம், இதுவரை ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு உரிய இடம், அரசியலுடன் உறவு கொள்வதற்கும் கொள்ளாமலிருப்பதற்குமான இடம், குடும்பத்தை உருவாக்குவதற்கும் உருவாக்காமலிருப்பதற்குமான இடம் என்று புதிய தளங்கள் உருவாகியிருப்பது நவீனக் கவிதையின் போக்கில் தென்படுகிறது. தனது தனித்துவ, சமூக அடையாளங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சி இன்று முன்னெடுக்கப்படுகிறது. அவை புதிய உறவுகளை ஏற்படுத்துகின்றன. சூழலுடனான உறவு, வரலாற்றுடனான உறவு, தொன்மங்களுடனான உறவு என்று அவை வளர்ச்சியடைகின்றன. இதை புதிய போக்கு எனலாம். இந்தப் பேச்சில் முன்பு ஓர் இடத்தில் குறிப்பிட்டது போல உறவின் கலாச்சார முகமே கவிதை. வேறு எந்த நூற்றாண்டிலும் கண்டிராத அக நிர்ப்பந்தங்களும் புறத் திணிப்புகளும் இருபத்தியோராம் நூற்றாண்டில் அதிகமாக இருக்கிறதோ என்னவோ? அப்படி இருப்பவற்றை எதிர்கொள்ள இன்றைய கவிதை மனித உறவுகளை மறு பார்வைக்கு ட் படுத்துகிறது. வாழ்க்கை புதிய உறவுகளை உருவாக்குகிறது. கவிதை அதை மதிப்பிடுகிறது. ஏனெனில் வாழ்வுக்கும் கவிதைக்குமான உறவு வெறும் இலக்கியம் சார்ந்தது மட்டுமல்ல; அது புதியதை விரும்புகிற மனிதனின் வேட்கை. இன்றைய கவிதையில் மனித உறவுகள் இடம் பெறுவது இந்த நோக்கில்தான் என்று கருதுகிறேன்.
சரி, எனக்கும் உங்களுக்கும் கவிதையின்பாலுள்ள உறவு என்ன? அதுவும் மனித உறவுதானே.

@

கோவை பாரதியார் பல்கலைக் கழகமும் சாகித்திய அக்காதெமியும் இணைந்து 9 பிப்ரவரி 2010அன்று கோவையில் நடத்திய கருத்தரங்கில் பேசியது.

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

மரினா ஸ்வெதயேவா கவிதைகள்
























1

நெற்றியில் முத்தமிடுவது...

நெற்றியில் முத்தமிடுவது வேதனையைத் துடைப்பதற்காக
நான் உன் நெற்றியில் முத்தமிடுகிறேன்

கண்களில் முத்தமிடுவது உறக்கமின்மையை நீக்குவதற்காக
நான் உன் கண்களில் முத்தமிடுகிறேன்

உதடுகளில் முத்தமிடுவது நீர் அருந்துவதற்காக
நான் உன் உதடுகளில் முத்தமிடுகிறேன்

நெற்றியில் முத்தமிடுவது ஞாபகத்தைத் துடைப்பதற்காக
நான் உன் நெற்றியில் முத்தமிடுகிறேன்.



2

இரண்டு சூரியன்கள் குளிரவைத்துக்கொண்டிருக்கின்றன...

இரண்டு சூரியன்கள் குளிரவைத்துக்கொண்டிருக்கின்றன,
கடவுளே, என்னைக் காப்பாற்றும்.
ஒன்று - சொர்க்கத்தில், மற்றது - இதயத்தில்.
இதற்கொரு காரணமுண்டா என்னிடம்?
இரண்டு சூரியன்களும் என்னை முழுப்பைத்தியமாக்கின.
அவற்றின் கதிர்களில் வேதனையில்லை - எல்லாம் போயின.
தகிக்கும் சூரியனே முதலில் உறைந்து போகும்.



3

ஒவ்வொரு கவிதையும் அன்பின் குழந்தை


ஒவ்வொரு கவிதையும் அன்பின் குழந்தை
கைவிடப்பட்ட வேசியின் பிழை
மேலே காற்று அலைய
சாலையோரத்தில் விடப்பட்ட சந்ததி
இதயத்தில் ஓர் ஆழக்கடலும் ஒரு பாலமும் உண்டு
இதயத்தில் வாழ்த்தும் துக்கமும் உண்டு
யார் அதன் தகப்பன்? நிலவுடைமையாளனா?
ஒருவேளை நிலவுடைமையாளனாகவோ அல்லது
திருடனாகவோ இருக்கலாம்.



4

உனது ஆன்மா...

உனது ஆன்மா சிறகுகளுடன் பிறந்திருக்குமானால்
குடிசைக்கோ அரச மாளிகைக்கோ என்ன பொருள்?
செங்கிஸ்கான் என்ன? கொள்ளைக்கூட்டம் என்ன?
மொத்த உலகத்தில் எனக்கு இரண்டு எதிரிகள் இருக்கிறார்கள்
அவர்கள் ஒரே படிமத்தில் இணைந்த இரட்டைப் பிறவிகள் -
பசியின் பசியும் பெருந்தீனியின் பெருந்தீனியும்.

@













வெண்ணிற வெப்பம்






















@

வெண்ணிற வெப்பத்தில் ஓர் ஆன்மாவைப் பார்க்கவும்
பார்த்தபின் கதவருகே பணியவும் உனக்குத் துணிவுண்டா ?
நெருப்பின் பொதுநிறம் சிவப்பு ; ஆனால்
ஜுவாலையின் நிபந்தனைகளுக்கு உலோகத்தாது இணங்கும்போது
தைலம் பூசப்படாத நிறமற்ற சுடராக ஒளிரும்.
நேர்த்தியான உருமாற்றத்தின் அடையாளமான
கிராமத்துக் கொல்லனின் உலைக்கூடம் இரைச்சலிடும்.
பொறுமையற்ற தாதுக்களை
சம்மட்டியாலும் ஜுவாலையாலும் சுத்திகரிக்கும் -
நியமிக்கப்பட்ட ஒளி உருமாற்றத்தை நிராகரிக்கும் வரை.

- எமிலி டிக்கின்சன்.



@


பிறமொழிக் கவிதைகளை வாசிப்பதில் ஆர்வமுண்டு. அவற்றைப் பின் தொடர்ந்து செல்வதுமுண்டு. இந்தச் செயல்பாடு என்னுடைய எல்லைகளை விரிவு படுத்திக் கொள்வதற்காக. எனினும் ஆங்கிலம் வழியாகக் கிடைக்கும் பிற மொழிக் கவிதைகளை வாசிப்பதில் காட்டும் அக்கறையை அசலான ஆங்கிலக் கவிதைகளை வாசிப்பதில் காட்டியதில்லை. பெரும்பாலான ஆங்கிலக் கவிதைகள் பாடத் திட்டப் பொருட்களாக அறிமுகமானவை; அவற்றைப் பயிற்றுவித்தவர்கள் தேர்வில் மதிப்பெண் பெறும் உபாயங்களைச் சொல்லித்தந்தார்களே தவிர கவிதையின் ஜீவனை உணரும் வழியைக்
கற்றுத் தரவில்லை. ஆங்கிலக் கவிதை மீதான அக்கறையின்மைக்கு இவை காரணங்களாக இருக்கலாம். கவிதை எழுத்தில் ஈடுபாடு முற்றியபோதும் அறிந்துகொள்ளும் விருப்பத்தில் வாசித்த கவிதைகளும் சொற்பம். டி.எஸ். இலியட், எஸ்ரா பவுண்ட், ஸ்டீபன் ஸ்பெண்டர், சில்வியா பிளாத் இவர்களைத் தாண்டி எவரையும் வாசிக்க முடிந்ததில்லை. விதிவிலக்கு - எமிலி டிக்கின்சன்.

எமிலியின் கவிதைகளின் முழுத் தொகுப்பு நீண்ட காலம் கைவசமிருந்தது. ஆயிரத்திச் சொச்சம் பக்கங்கள் உள்ள புத்தகம். அதை இலக்கிய நண்பர் ஒருவர் 'நீயே வெச்சிக்கோ' என்று கொடுத்திருந்தார்.அமெரிக்க இதழான 'ஸ்பா'னுக்கு ஆண்டுச் சந்தா செலுத்துபவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நூல் அது.அதை அவர் கொடுத்த சூழ்நிலையும் வித்தியாசமானது. தற்கொலை செய்துகொள்வதற்காக சவரப் பிளேடால் கழுத்தை வெட்டிக்கொண்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் நண்பர். மருத்துவமனையில் அவரைப் பார்க்கப் போனபோது தலைமாட்டில் இருந்த அலமாரி மீது எமிலி டிக்கின்சனின் முழுக் கவிதைத் தொகுப்பு உட்கார்ந்திருந்தது. தற்கொலைக்கு முயற்சி செய்து தப்பித்தவர் மருத்துவமனைக்கு வரும்போது எதற்காகப் புத்தகத்தைக் கொண்டு வந்தார்? அதுவும் எமிலி டிக்கின்சனின் கவிதைத் தொகுப்பை? என்று அப்போது எழுந்த கேள்வி விடுபடாப் புதிராக இன்றும்மனதில் இருக்கிறது. மருத்துமனையிலிருந்து திரும்பி வந்த சில நாட்களுக்குப் பின்னர் நண்பர் எமிலியை என்னிடமிருந்து மீட்டுக்கொண்டு போனார். வருத்தமாக இருந்தது.குண்டு எமிலி போன துக்கத்தை மாற்றிக்கொள்ள பென்குவின் வெளியீடாக வந்த நடுத்தரப் பருமனுள்ள எமிலியைக் கண்டுபிடித்தேன். அவ்வப்போது வாசித்தேன்.

எமிலி டிக்கின்சனின் கவிதைகள் எளிதில் புரிபடாதவை. அவற்றில் பயிலும் மொழி எளிமையானது. எனினும் அது வெளிப்படுத்தும் அர்த்தம் பூடகமானது;கலாச்சார வேரோட்டமுள்ளது. விவிலியத்தின் எதிரொலிகள் கொண்டது. பழைய ஏற்பாட்டில் வரும் 'யோபுவின் புத்தகம்' எமிலியின் கவிதைகள் மீது செல்வாக்குச் செலுத்தியிருக்கலாம் என்று ஒவ்வொரு வாசிப்பிலும் தோன்றுவதுண்டு. அந்த அளவுக்கு அந்தரங்கமானவை எமிலியின் கவிதைகள். அவை பிடிகொடுக்காமல் விலகி நிற்பதன் காரணமும் இந்தத் தனித்துவம்தான்.

@

மலையாள எழுத்தாள நண்பர் உண்ணியின் அழைப்பு எமிலி டிக்கின்சனைப் பற்றி யோசிக்கத் தூண்டியது. அவர் அழைத்தது சமீபத்திய நியூயார்க்கர் இதழைப் பார்க்கச் சொல்லுவதற்காக. அதில் எங்கள் இருவருக்கும் பிடித்தமான சிலி எழுத்தாளர் ராபர்ட்டோ பொலானோவின் கதை இருக்கிறது. அந்த இதழை வாங்கச் சொல்லவே அவர் அழைத்திருந்தார். வாங்கினேன். பொலானோவைன் கதையைத் தாண்டி என்னை ஈர்த்தது இதழில் வெளியாகியிருக்கும் இன்னொரு கட்டுரை. அது எமிலி டிக்கின்சனைப் பற்றி ஜுடித் துர்மான் எழுதியது. எமிலிக்கும் அவரது நண்பரான தாமஸ் வெண்ட்வொர்த் ஹிக்கின்சனுக்கும் இடையில்
நிலவிய இலக்கிய உறவு பற்றியது ஜூடித்தின் கட்டுரை.

ஹிக்கின்சன் இலக்கிய ஆர்வலர். அடிமைமுறை எதிர்ப்பாளர். பெண்ணுரிமை கருத்துப் பரப்புநர். கூடவே பூக்களைப் பற்றையும் இயற்கையைப் பற்றியும் கட்டுரைகள் எழுதும் இயற்கை நேசர். அவர் எழுதிய 'இளம் படைப்பாளருக்கு ஒரு கடிதம்' என்ற கட்டுரையும் அதன் பின்விளைவுகளும்தான் எமிலி டிக்கின்சன் என்ற கவிஞரை உலகத்துக்கு அறிமுகப் படுத்துகிறது. இலக்கிய உலகுக்கு அறிமுகமாகும் இளம் எழுத்தாளர்களை முன்னிருத்தி அவர் எழுதிய கட்டுரையின் ஒற்றை வரி எமிலியைத் தூண்டி விட்டது. 'ஒரு சொல்லுக்குள் ஏராளமான வேட்கைகளின் ஆண்டுகள் இருக்கலாம்; ஒரு வாக்கியத்தில்
பாதி வாழ்க்கையே இருக்கலாம் ' என்ற கட்டுரை வரி அவரை உசுப்பியது. இதைத்தானே தன்னுடைய கவிதையும் செய்கிறது என்று எமிலிக்குத் தோன்றியது.தன்னுடைய நான்கு கவிதைகளின் படியையும் கூடவே ஒரு கடிதத்தையும் ஹிக்கின்சுக்கு அனுப்பினார்.
’ என்னுடைய கவிதை உயிருள்ளதா என்று சொல்ல முடியுமா?'என்ற வேண்டுகோள் கடிதத்தில் இருந்தது.' என்னை ஏமாற்றிவிட வேண்டாம்' என்ற வாசகத்துடன் கையொப்பமிடாமல் கடிதத்தை முடித்திருந்தார் எமிலி.

எமிலி டிக்கின்சன் சுமாரான வசதியும் செல்வாக்குமுள்ள குடும்பத்தில் பிறந்தவர். உயர் தரமான கல்வி பெற்றிருந்தார். சிறுவயது ஆர்வம் கவிதையெழுத்தை அவரது தீராத வேட்கையாக மாற்றியிருந்தது. ஆரம்பத்தில் எழுதிய கவிதைகளில் சில குடும்ப நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் பிரபலமான பத்திரிகையில் எமிலியின் பெயரில்லாமலேயே வெளியானது. அவருக்குத் தன்னுடைய கவிதைகளை சுய மதிப்பு ச்செய்ய முடியவைல்லை. எழுதிய கவிதைகளையெல்லாம் காகிதச் சுருள்களாகச் சுருட்டி மேஜை அலமாரியில் பதுக்கி வைத்திருந்தார். மிக நெருக்கமான நண்பர்களுக்கு மட்டுமே அவரது கவிதைகள் அறிமுக மாகியிருந்தன.

'தன்னை ஏமாற்றிவிட வேண்டாம்' என்று எமிலி கடித்தத்தில் குறிப்பிட்டதற்குக் காரணமிருந்தது.எமிலியின் கவிதைகள் அதீதப் படிமங்களால் நிறைக்கப்பட்டவை என்று அவருடைய நண்பரும் பெரும் அறிஞருமான செவால் கருத்துச்சொல்லி அவரை 'ஏமாற்றி'யிருந்தார். ஹிக்கின்சன் நல்லவேளை எமிலியை ஏமாற்றவில்லை. மாறாக ஆக்கபூர்வமான சில விமர்சனங்களை முன்வித்திருந்தார். அதை 'அறுவைச் சிகிச்சை' என்று ஏற்றுக்கொண்டார் எமிலி. அவர் தந்த உற்சாகமும் ஆலோசனைகளும் எமிலியின் கவிதையெழுத்தைத் தீவிரப்படுத்தின. இறப்புக்கு முன்வரை கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு கவிதைகளை எழுதியிருந்தார் எமிலி. ஹிக்கின்சன் என்ற நன்பர் இல்லாமலிருந்தால் ஒருவேளை எமிலியின் கவிதைகள் புதையுண்டு போயிருக்கலாம்.
இத்தனைக்கும் இரு நண்பர்களும் முகத்துக்கு முகம் சந்தித்துக்கொண்டது இரண்டே முறைதான். ஆனால் இருவருக்குமிடையில் வாழ்நாள் முழுவதும் கடிதத் தொடர்பு இருந்து வந்தது. எமிலி யின் மறைவுக்குப் பிறகு சகோதரி லாவினியா எல்லாக் கவிதைகளையும் தொகுத்து வெளியிட முனைந்தார். அலமாரிகளில் சுருட்டி வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான காகிதச் சுருள்களில் இருந்த கவிதைகளை வகைப்படுத்துவதும் அவற்றின் கரட்டு வடிவங்களை நீக்கி முழுமையான வடிவங்களைக் கண்டடைவதும் சிரமமாக இருந்தன. தொகுப்பாளரான மேபெல் லூமிஸ் டோடுக்கு உடன் நினைவு வந்த பெயர் ஹிக்கின்சன். தன்னுடைய தோழியின் கவிதைகளை வகைப்படுத்தும் பொறுப்பை ஹிக்கின்சன் ஏற்றுக் கொண்டார். அந்தக் கவிதையின் உள்ளோட்டங்களை அவரால் மட்டுமே பின்தொடர முடிந்தது என்பதற்குக் காரணம் இருவருக்குமிடையே நிலவிய நட்பு. அதைச் சார்ந்த கடிதப் போக்கு வரத்து.

மரணத்தையும் தனிமையையும் ஒரு பெண் உணரும் கோணத்தில் வெளிப்படுத்தியவை எமிலியின் கவிதைகள். சொந்த அனுபவங்களிலிருந்தே அவற்றை அவர் கவிதைக்கு இடம்பெயர்த்தார். ஆனால் விவிலியக் குறிப்பீடுகளும் நடையும் அவற்றை இன்னொரு தளத்துக்கு மாற்றின. அதே சமயம் அவருடைய தனி வாழ்வின் அடையாளங்களை இனங்காண முடியாத பூடகத்தன்மையையும் கொடுத்திருந்தன. அந்த மர்மம்தான் எமிலி டிக்கின்சன் கவிதையை இன்றுவரை நிலைநிறுத்துகிறது என்றும் கருதலாம்.

வெண்ட்வொர்த் ஹிக்கின்சன் - எமிலி டிக்கின்சன் நட்பைப் பற்றி விரிவாக நூலில் எழுதப்பட்டுள்ளது. பிரெண்டா வைன் ஆப்பிள் எழுதியுள்ள 'வைட் ஹீட்'என்ற புத்தகம் கவிஞர்களின் உளவியலையும் கவிதையின் மர்மங்களையும் பற்றிப் பேசுகிறது. சரியாகச் சொன்னால் 'நியூயார்க்கர்' இதழ்க் கட்டுரையின் நோக்கம் அந்தப் புத்தகம் தரும் வெளிச்சத்தில் எமிலி டிக்கின்சனின் கவிதைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்துவதுதான். தனிமையில் அடைக்கலம் தேடும் மனங்கள், இடையீட்டின் மூலம் நீதி தேடும் உத்வேகமும் எமிலியின் கவிதையில் இருப்பதாக ஜூடித் வரையறுக்கிறார். புதிய அமெரிக்க வாசகர்களிடம்
மீண்டும் இந்தக் குணங்கள் மீண்டெழுந்திருக்கின்றன. அதனால் எமிலி டிக்கின்சன் இன்றைய கவிஞராகிறார் என்று குறிப்பிடுகிறார்.

இதெல்லாம் இலக்கிய விவகாரம். மேற்சொன்ன கட்டுரையையும் புத்தகத்தையும் வாசித்துக் கொண்டிருந்தபோது ஒரு புதிர் மனதுக்குள் விழுந்தது. வாசிப்பு முடிந்ததும் புதிரின் மர்மம் இரண்டு மடிப்புகளாக அவிழ்ந்தது.

வெண்ட்வொர்த்தின் மனதிலலிருந்த துணைவிப் பிம்பம் எமிலி டிக்கின்சனுக்குப் பொருத்தமாக இருந்திருக்கிறது. ஹிக்கின்சனின் கருத்துப்படி ' பெண் ஒன்று அடிமை; அல்லது சமமானவள். இரண்டையும் தவிர இடைப்பட்ட இடமில்லை' .ஹிக்கின்சனின் மனைவியான மேரி சானிங் நோயாளி. எனவே அடிமை. எமிலியோ அறிவிலும் படைப்பூக்கத்திலும் இணையானவர். இது முதல் மடிப்பு. வெண்ட் வொர்த் ஹிக்கின்சனுக்கு ஒரு கனவு இருந்தது. ஒரு பெருங்கவிஞனாக வேண்டும். தான் பெரும் மதிப்பு வைத்திருக்கும் எமர்சனிடம் தன்னுடைய ஆரம்பகாலக் கவிதைகளைச் சமர்ப்பித்தார். அவை எமர்சனால் நிராகரிக்கப் பட்டன.இது இரண்டாவது மடிப்பு. அதன் பின்னர் ஹிக்கின்ஸ் கவிதை எழுதவில்லை. கட்டுரையாளரானார். ஒருவேளை அவர் கவிஞராக அங்கீகரிக்கப் பட்டிருந்தால்
எமிலி டிக்கின்சனைப் பொருட்படுத்தியிருக்க மாட்டார்.ஒருவேளை எமிலி டிக்கின்சன் என்ற கவிஞர் அறியப்படாமல் போயிருக்கலாம்.

@