புதன், 21 செப்டம்பர், 2011

அஸீஸ் பே சம்பவம்


துருக்கி மொழியில் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளரான அய்ஃப்ர் டுன்ஷ் எழுதிய நாவல் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் தனது இணையத்தில் - பார்த்தேன் படித்தேன் - பகுதியில் பரிந்துரைத்திருக்கிறார். அவருக்கு மனமார்ந்த நன்றி. அவருடைய குறிப்பு இங்கே.








அஸீஸ் பே சம்பவம்

அய்ஃபர் டுன்ஷ் என்ற துருக்கிய எழுத்தாளரின் நாவலான அஸீஸ் பே சம்பவம், கவிஞர் சுகுமாரன் மொழிபெயர்ப்பில் வெளியாகி உள்ளது, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவல் சமகால துருக்கிய இலக்கியத்தில் முக்கியமான ஒன்று,

துருக்கிய நகரமொன்றின் மதுவிடுதியில் இசைக்கலைஞனாக உள்ள அஸீஸ் பேயின் வாழ்வை விவரிக்கும் இந்த நாவலின் இரண்டு மையப்புள்ளிகள் இசையும் காதலும், காதலின் அவஸ்தையும் அங்கீகரிக்கப்படாத இசையின் துயரநிலையும் நாவல் விவரிக்கிறது

மிலன் குந்தேராவின் நாவல் போல கதாபாத்திரங்களுக்கு இடையே உள்ள உறவையும் ஆழமான மனஉணர்ச்சிகளையும் நாவல் முதன்மைபடுத்துகிறது, அய்ஃபர் டுன்ஷ் நாவல் இந்திய மொழிகளில் முதன்முதலாக தமிழில் தான் வெளியாகியிருக்கிறது,

சுகுமாரனின் மொழிபெயர்ப்பு மிகச்சிறப்பானது, இசையும் கவித்துவமும் நிரம்பிய நாவலை நுட்பமாக மொழியாக்கம் செய்திருக்கிறார், துருக்கிய இசை மற்றும் இலக்கியங்களின் ஆழ்ந்த அனுபவம் இன்றி இது போன்ற மொழியாக்கத்தைச் செய்வது சாத்தியமானதில்லை, சுகுமாரன் துருக்கிய இசை மற்றும் இலக்கியத்தை ஆழ்ந்து அறிந்தே மொழியாக்கம் செய்திருக்கிறார் என்பதை மொழிபெயர்ப்பின் சரளம் மற்றும் சொற்பிரேயோகங்கள், கதையின் ஆதாரத்தொனியின் வழியே நன்றாக அறிய முடிகிறது,

அவசியம் வாசிக்க வேண்டிய நாவலிது.


http://www.sramakrishnan.com/?p=2588

••

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

சுந்தர ராமசாமியும் எம்.கோவிந்தனும் சில இலக்கிய யூகங்களும்

























என்னுடைய உரை சுந்தர ராமசாமியைமட்டும் பற்றியதல்ல; ஆனால் சுந்தர ராமசாமியையையும் பற்றியது.மலையாள எழுத்தாளரும் சிந்தனையாள ருமான எம். கோவிந்தனைப் பற்றிச் சில கருத்துகளையும் அவருக்கும் சுந்தர ராமசாமிக்கும் இடையில் நிலவிய பரஸ்பரப் பாதிப்புப் பற்றியயூகங்களையும் பகிர்ந்து கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். அதற்கு இந்த மேடையையும் இந்த ஆர்வலர் கூட்டத்தையும் விடப் பொருத்தமான சூழல் வேறு அமைய முடியாது.



எம். கோவிந்தனைப் பற்றி அதிகம் பேசியவரும் அடிக்கடி பேசியவரும் சுந்தர ராமசாமிதான். தமிழ் மலையாளக் கலை இலக்கியச் சூழல்கள் பற்றிய ஒப்பீடுகளில் தமிழுக்கு அவசியம் வரவேண்டிய மலையாள எழுத்தாளர்களில் ஒருவராக எம். கோவிந்தனைப் பல சமயங்களிலும் முன்னிலைப் படுத்தியிருக்கிறார். 'எம்.கோவிந்தன் மிக முக்கியமான சிந்தனையாளர். ஐரோப்பியச் சிந்தனைகளையும் கீழைத் தேயச் சிந்தனைகளையும்அவற்றின் சாரம் சார்ந்து அறிந்தவர். சகல அறிவுகளும் அவருடைய பார்வையில் வெளிப்படும்போது வயோதிகர் ஒருவர் திண்ணையில் அமர்ந்து பேசுவதுபோல் எளிமைப்படுகிறது.எதையும் நீர்க்கச் செய்யாத எளிமை அவருடையது. சிந்தனைக் கூர்மையும் விவேகமும் நகைச்சுவை உணர்ச்சியும் கொப்பளிக்கும் எழுத்து. ஓர் ஆளுமை என்று எடுத்துக் கொண்டால் அவரை எம். என். ராயுடனும் ராம் மனோகர் லோகியாவுடனும் ஒப்பிட்டுப் பேச முடியும். பெரியார்இயக்கத்தை வரவேற்றவர். அவ்வியக்கத்தை சேர்ந்த ஆரம்ப கால லட்சியவாதிகளுடன் தோழமை கொண்டிருந்தவர்.தமிழுக்கு வரவேண்டும் இவருடைய எழுத்து' என்று சாகித்திய அக்காதெமி நடத்திய இரு மொழி சிறுகதைப் பட்டறைபற்றிய கட்டுரையில் சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார். ( ஆளுமைகள் மதிப்பீடுகள் - பக் 367). பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு 1996 இல் எழுதிய இந்தக் கருத்தை அதற்கும் பத்தாண்டுகளுக்கு முன்பே நேர்ப் பேச்சில் சொல்லியிருந்தார்.



அந்தக் காலப் பகுதியில் மாதம் ஒருமுறையாவது சுந்தர ராமசாமியுடன் சில நாட்களைக் கழிக்கும் வாய்ப்பு எனக்குஇருந்தது. மலையாள நவீன இலக்கியத்துடன் அறிமுகம் ஏற்பட்டு வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அதில் சரியானதேர்வுக்குத் துணைபுரிந்தவர் சுந்தர ராமசாமி. மறுபடியும் சந்திக்கும் போது என்னுடைய மலையாள வாசிப்பைப்பற்றி அக்கறையுடன் விசாரிப்பார். இரண்டாவதோ மூன்றாதவதோ சந்தர்ப்பத்தில் அவர் பரிந்துரைத்த பெயர் எம். கோவிந்தன். அது மலையாள இலக்கியத்தில் நவீனத்துவத்தின்கொடிபட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தகாலம். இலக்கிய விவாதங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்றாக கோவிந்தன் பெயரும் இருந்தது. அதையொட்டி அவரைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தேன். அவர் நடத்திய சிற்றிதழான 'சமீக்ஷா' வின் சில இதழ்களையும் பார்த்திருந்தேன். ஒரு கவிஞராகவும் ம.ராஜாராம் தமிழாக்கம் செய்து நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடாக வந்திருந்த 'சமீபத்திய மலையாளச் சிறுகதைகள்' தொகுப்பில் 'சர்ப்பம்' என்ற நேர்த்தியான நெடுங்கதையை எழுதிய எழுத்தாளராகவும் கோவிந்தன் அறிமுகமாகி இருந்தார். ஆனால் சுந்தர ராமசாமி அவரை எனக்கு அறிமுகப்படுத்த நினைத்தது வெறும் எழுத்தாளராகவோ கவிஞராகவோ மட்டுமல்ல; ஒரு சிந்தனையாளராக.



பெரிய காரியங்களின் கடவுளர்களான சிந்தனையாளர்களின் நிழலைக் கண்டாலே ஓட்டமெடுக்கும் மனநிலை என்னுடையது. தன்னுடைய நூலகத்திலிருந்து கோவிந்தனின் 'தேடலின் ஆரம்பம்' என்ற புத்தகத்தை எடுத்துக் கொடுத்து வாசித்துப் பார்க்கும்படிச் சொன்னார். என்னுடைய அலர்ஜி பற்றிச் சொன்னேன். 'இல்ல, இவர் உங்களை அவ்வளவு ஒண்ணும் கஷ்டப்படுத்த மாட்டார். நீங்க படிக்கலாம்' என்றார். படித்தேன்.உண்மையில் வாசிப்பின் மூலம் புதிய எல்லைகளைக் காட்டக் கூடியவராக இருந்தார் கோவிந்தன். வெளிச்சத்தின் ஒரு கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால் மேலும் வெளிச்சத்துக்கு அதிலிருந்து இன்னும் அதிகம் வெளிச்சத்துக்கு அழைத்துச் செல்பவராக இருந்தார்.



'சுதந்திரத்தின் புதிய தொடுவானங்களைத் தேடி முன்னேறிச் செல்வதாக இருக்க வேண்டும் நம்முடைய வாழ்க்கையின்கோட்பாடு.பழைய கருத்துக்கள் தேடலுக்கு வழிகாட்டக் கூடியவனவாக இருந்தால் நல்லது. முடிந்தால் அவற்றின் உதவியுடன் , தேவைப்படுமானால் அவற்றைத் தூர எறிந்தும் தான் புதிய வாழ்க்கை முறையின் வெளிச்சத்தை நோக்கி நம்மால் முன்னேற முடியும். அதைத் தவிர வேறு வழியில்லை' என்ற கோவிந்தனின் கருத்தை சுந்தர ராமசாமியின்படைப்பு வாழ்க்கையோடும் கருத்துக்களுடனும் பொருத்திப் பார்க்கலாம். அவை துல்லியமாக இணைவதை உணரலாம்.



தொடர்ந்து புதிய தேடலுக்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த வராகவே சுந்தர ராமசாமி இருந்தார். படைப்புகளிலும் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்திலும். எழுபது வயதைக் கடந்த பின்னும் இன்னும் செய்து முடிக்கப் புதிய காரியங்கள் இருக்கின்றன என்று நம்பினார். கோவிந்தன் தொண்ணூறு வயதைக் கடந்த பின் மறைந்தார். அவருடையவலுவான பங்களிப்பு என்பது அந்த வயதுக்கும் கொஞ்ச காலத்துக்கு முன்பே முடிந்திருந்தது. ஆனால் அதன் விளைவுகள் அப்போதும் காத்திரமானவை யாகவும் தவிர்க்க முடியாதவையாகவும் இருந்தன. உலக அளவில் சோவியத் யூனியனின் சரிவுக்குப் பிறகு. இந்திய அளவில் பாப்ரி மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஜனநாயகம் இல்லாத எதேச்சாதி காரமாக உருமாறும்; சடங்குத்தனமாக நடைமுறைப்படுத்தப்பட்ட கம்யூனிசம் சிதைவுறும் என்றும் மதத்தை மனிதனுக்கு அடங்கியதாக அல்லாமல் மதத்துக்கு மனிதனைக் கருவியாக எண்ணும்போது பொதுவான மானுட மதிப்பீடுகள் கைவிடப்படும் என்றும் அவர் எழுதியிருந்தவை தீர்க்க தரிசனங்களாகக் கருதப்பட்டன. சரியாகச் சொல்வதென்றால் அவர் எழுதியும் பேசியும் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருந்த காலத்தை விட சிந்தனைக்கு ஓய்வளித்திருந்த காலத்தில் அவரது கருத்துகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் ஏற்பட்டிருந்தது.



'மதம் ஒரு போதை மருந்தாக இருக்கலாம். ஆனால் அந்த மருந்தைக் கைவிடுவதற்காக இன்னொரு போதை மருந்தை உட்கொள்ளத் தொடங்குவதில் என்ன முற்போக்குத்தன்மை இருக்க முடியும்?' என்று கோவிந்தன் கேட்ட கேள்வி முக்கியமானது. இந்தக் கேள்வியைத் தமிழ்ச் சூழலில் எழுப்பியவர் சுந்தர ராமசாமி என்று எண்ணுகிறேன். ஒருவரை யொருவர் பாதித்துக் கொண்ட இரு படைப்பாளர்கள் சந்திக்கும் புள்ளி இது.
சுந்தர ராமசாமியைப் பெரிதும் பாதித்த ஆளுமைகளில் எம். கோவிந்தனும் ஒருவர் என்பது என் யூகம். இலக்கியத்துக்கான அடிப்படைப் பார்வையை புதுமைப்பித்தனிடமிருந்தும் இலக்கியத்தின் தர நிர்ணயம் பற்றிய நோக்கைக் க.நா.சு. விடமிருந்தும் பெற்றிருந்தது போலவே வாழ்க்கை விசார¨ணையை அவர் எம்.கோவிந்தனிடமிருந்து பெற்றிருக்கக் கூடும் என்பதை சுந்தர ராமசாமியை வாசிக்கும் போதல்ல; கோவிந்தனை வாசிக்கும்போதே நான் இனங்காண்கிறேன். புதுமைப் பித்தனிடம் ஓர் எதிர்மறுப்புக் கண்ணோட்டம் இருந்தது. க.நா.சு விடம் ஓர் அத்வைதியின் பெரும்போக்கான அணுகுமுறை இருந்தது. சுந்தர ராமசாமியிடம் இந்த இரண்டுமில்லாத இம்மையியல் சார்ந்த ஒரு பார்வையைப் பார்க்க முடியும். அதனாலேயே ஆன்மீகம்,அமானுஷ்யம், தொன்மம் போன்ற கருத்தாக்கங்கள் அவரிடம் செலாவணி ஆவதில்லை. புதுமைப்பித்தனுக்கு வைதீக மரபில் நம்பிக்கை இல்லை என்றாலும் கூட அமானுஷ்யமான கூறுகள் படைப்புகளில் இடம் பெறுகின்றன. க.நா.சுவின் எழுத்திலும் ஆன்மீக வேட்கைக்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த இருவரின் பாதிப்பு சுந்தர ராமசாமியிடம் இருந்தாலும் அவருடைய படைப்புப் பார்வை இம்மை சார்ந்தது.'செக்குலர்ஆனது. அதைக் கோவிந்தன் வழியாக அடைந்த பாதிப்பு என்று கருதுகிறேன். இந்த இம்மையியல்பு நவீனத்துவத்தின் ஒரு கூறு என்று வைத்துக் கொண்டாலும் சுந்தர ராமசாமி கோவிந்தனிடமிருந்து பெற்றிருக்கலாம்.



பாதிப்பு என்று நான் சொல்லுவதைச் சரியாகச் சொல்ல வேண்டுமென்று நினைக்கிறேன். எம்.கோவிந்தனால் பாதிக்கப் பட்டவர் என்று சொல்வதன் மூலம் சுந்தர ராமசாமி கோவிந்தனை அப்பட்டமாகப் பின் தொடர்ந்தார் என்று அர்த்தமில்லை. அவருடைய மொழியிலேயே சொல்வதென்றால் 'உரலில் உலக்கை விழும்போது தரையில் வைத்திருக்கும் பாத்திரம் அதிர்வதுபோலத்தான்' இந்தப் பாதிப்பு.



ஜெயமோகன் நடத்திய நேர்காணலில் (விரிவும் ஆழமும் தேடி - பக் 59) 'உங்களை மானசீகமாக எம்.கோவிந்தனின் பின்காமி என்று சொல்லலாமா?' என்ற கேள்வி இடம் பெறுகிறது. அதற்கு சுந்தர ராமசாமி அளிக்கும் பதிலில் கோவிந்தனைப் பற்றிய அவருடைய கருத்து நிலை தெளிவாகிறது.
'பின் காமி இல்லை. எங்கள் இருவருக்குமே அந்த வார்த்தை பிடிக்காது. நாங்கள் நண்பர்கள். 1950 களில் எம்.கோவிந்தனையும் சி.ஜே தாமசையும் வெகு தீவிரமாகப் படித்தேன். சி.ஜே.யிடம் எனக்கு மயக்கமிருந்தது அவருடைய மொழியைச் சார்ந்து. கோவிந்தனிடம் மயக்கமற்ற மதிப்புக் கொண்டிருந்தேன். அவரை நான் ஒருபோதும் மறக்க முடியாது. சுயமாகச் சிந்திப்பதில் இருக்கும் பேரழகை நான் அவரிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். அவரைப் படிக்கும்போது என் குழந்தைகளுக்கு மலையாளம் தெரியவில்லையே என்ற வருத்தம் ஏற்படும். சிந்தனையின் இந்த நாட்டுவகை அவர்களுக்குத் தெரியாது. தமிழில் இந்த நாட்டு வகைக்கு உதாரணங்கள் இல்லை. புதுமைப்பித்தன் இந்த வகையாகச்சிந்திக்கக் கூடியவர் என்று தோன்றினாலும் மொழியின் அழகுகளிலும் நளினங்களிலும் சிக்கிக் கொள்ளக் கூடியவர்.திருவள்ளுவர் இந்தக் காலத்தில் இருந்தால் ஒருவேளை கோவிந்தனைப் போல எழுதியிருக்கலாம்.'



கோவிந்தனைப் பற்றிய இத்தகைய இனங்காணலை எந்த மலையாள எழுத்தாளரும் செய்ததில்லை. அவரை ஒரு மார்க்சீய எதிர்ப்பாளராகவும் எதிர் கலாச்சாரவாதியாகவுமே முன்னிலைப் படுத்தியிருக்கிறார்கள். அவரை அடிப்படையில் புரிந்து கொண்டு வகைப்படுத்தியவர் ஒரு தமிழ்ப் படைப்பாளர் என்பது தமிழ் வாசகனாக எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.



நீண்ட காலமாக அச்சியற்றப்படாமலிருந்த எம்.கோவிந்தனின் கட்டுரைகள் அண்மையில் ஒரு குட்டித் தலையணைப்பருமனுடன் நூலாக வெளியாகியிருக்கிறது. கிட்டத்தட்ட 1200 பக்கங்கள். இதுபோன்ற கனமான புத்தகங்களை வாசிக்க நான் கடைபிடிக்கும் உபாயம் ஒன்றிருக்கிறது. நூலின் பின் பகுதியில் இருக்கும் பெயர்க் குறிப்புப் பட்டியலில் எனக்கு விருப்பமான பெயர்களை, தெரிந்த பெயர்களைத் தேடுவது. 'புதிய மனிதன் புதிய உலகம்' என்ற கோவிந்தனின் நூலில் தமிழ்ச் சூழல் சார்ந்த பெயர்களைத் துளாவிக் கொண்டிருந்தேன். அண்ணாதுரை, பெரியார், சுப்ரமண்ய பாரதி, க.நா.சு.ராஜாஜி ஆகிய பெயர்கள் தென்பட்டன. அதில் இருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்த்த சுந்தர ராமசாமியின் பெயர் இல்லாமல் இருந்தது முதலில் அதிர்ச்சியளித்தது.



ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடனான நடந்த ஓரிரு சந்திப்புகளில் கோவிந்தன் சுந்தர ராமசாமி மீது கொண்டிருந்த மதிப்புப் புலப்பட்டது. முதல் முறையாக கோவிந்தனை நண்பர்கள் கி.ஆ.சச்சிதானந்தன், சி.மோகன், வசந்தகுமார் ஆகியோருடன் சந்தித்தேன். சுந்தர ராமசாமி சொல்லிச் சொல்லி மனதில் பதிந்திருந்த சித்திரத்துக்கு உயிர் கொடுத்தது போலிருந்த கோவிந்தனால் ஈர்க்கப்பட்டேன். அவருடைய 'உயிர்ப்பு' என்ற கதையை சுருக்கமாகத் தமிழாக்கம் செய்துதர வேண்டும் என்று கேட்டிருந்தார். மறுநாள் அந்த தமிழ்ச் சுருக்கத்துடன் போய்ச் சந்தித்தேன். அந்தக் கதையை குமார் சஹானி தமிழில் சினிமாவாக எடுக்கவிருப்பதாகச் சொன்னார். மயானக் காவல்காரன் ஒருவன் மரணத்தின் முன் தடுமாறுவதுதான் அந்தக் கதையின் மையம். அன்றைக்கு இருந்த இளமைக் குறும்பில் அதை விடவும் சிறப்பான கதையை 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி' என்ற தலைப்பில் ஜெயகாந்தன் எழுதியிருப்பதாகத் தெரிவித்தேன்.அந்த வகையில் குமார் சஹானி மூலம் தமிழுக்குக் கிடைத்திருக்க வேண்டிய சிறந்த திரைப்படத்துகான தங்கப்பதக்கத்தை கிடைக்காமல் செய்திருக்கிறேன்.



அன்றைய பேச்சில் அதிகம் குறிப்பிடப் பட்டவர் சுந்தர ராமசாமி. 'சுந்தர ராமசாமியெ அறியோ? ' என்று பொன்னானி மலையாளத்தில் கேட்ட போது 'இதென்ன கேள்வி, சுந்தர ராமசாமி என் சட்டைப் பைக்குள்தானே இருக்கிறார்' என்ற பீற்றலுடன் பதில் சொன்னேன். பிற்காலத்தில்தான் தெரிந்தது என் சட்டைப் பைக்குள்ளே இருந்ததுபோலவே சுந்தர ராமசாமி பலருடைய சட்டைப் பைகளுக்குள்ளும் இருந்திருக்கிறார். 'நீ மலையாளத்திலும் வாசிக்கிறாய் இல்லையா? சுந்தர ராமசாமி ஸ்டேட்டஸில் மலையாளத்தில் யாரையாவது சொல்ல முடியுமா?' என்று கேட்டார் கோவிந்தன். நான் பதிலை யோசித்து முடிப்பதற்குள் அவரே சொன்னார். 'இல்லை.யூ குட் நாட் ஹேவ் எ ராமசாமி இன் மலையாளம் அஸ் யூ குட் நாட் ஹேவ் எ கோவிந்தன் இன் தமிழ்'.



கோவிந்தன் ஏற்படுத்திய அதே அதிர்ச்சியை சுந்தர ராமசாமியும் அளித்திருந்தார். அவருடைய கட்டுரைகளில்கோவிந்தனைப் பற்றி மட்டுமாக எழுதப்பட்ட கட்டுரை எதுவும் இல்லை. இரங்கற் குறிப்புகளாக அவர் எழுதியிருப்பவற்றிலும் கூட மலையாளிகளான ஈ.எம்.எஸ் சும் பஷீரும் மட்டுமே இருக்கிறார்கள். கோவிந்தனின் மறைவுக்குப் பின்பு வெளிவந்த 'காலச் சுவடு' இதழில் கோவிந்தனின் ஒரு கட்டுரை - 'மனித மதிப்பீடுகள்' (சுந்தர ராமசாமின் காலச் சுவடு - பக்: 565) யின் மொழியாக்கம் இடம் பெற்றது. அதற்கு முன்னுரையாகக் கொடுக்கப்பட்டிருந்த வரிகள் சுந்தர ராமசாமி எழுதியவையாக இருக்கலாம் என்ற யூகத்தைத் தந்தது. அவதானியின் நாட்குறிப்பிலிருந்து... என்று அச்சிடப் பட்ட அந்த வரிகள் கோவிந்தனைச் சரியாக மதிப்பிட்டவை. 'என்னிடம் இயற்கையாக இருந்த சுதந்திர உணர்வும் உண்மையை கண்டையும் ஆசையும் கோவிந்தன் எழுத்துக்களால் வளர்ந்தன.' என்று ஜெயமோகனுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். 'பலா பலன்களைப் பற்றிக் கவலைப் படாமல் எழுது', ‘சகல மேன்மைகளும் கூடுவது சுதந்திரத்திலிருந்துதான்', ‘ஒரு கலைஞன் தன் காலத்திலேயே வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை'இவ்வகையான செய்திகளை அவர்களிடமிருந்து நான் தொடர்ந்து உறிஞ்சிக்கொண்டிருந்தேன்' என்று அதே பேட்டியில் சுந்தர ராமசாமி குறிப்பிட்டார்.



பரஸ்பரம் பாதித்துக் கொண்ட நபர்கள் தங்களது எழுத்தில் மற்றவரை முன்னிலைப் படுத்தாமல் விட்டதை இயல்பு என்று இப்போது நினைக்கிறேன். 'இலக்கியத்தில் நேரடியான உறவு இல்லாமலே பாதிப்புக்கு ஆளாகி விடுவதுண்டு. நேரடியான உறவு கொண்டிருந்தும் துர்ப்பலமான செல்வாக்கோடு நின்று விடுவதும் உண்டு. இலக்கியத்தில் செல்வாக்கு என்பது அருவமானது. வாடைக்காற்று அடிப்பதால் மழையிருக்கலாம் என்பது போன்ற அனுமானம்.செல்வாக்கின் வியாபகத்தை உள்ளங்கையில் ஏந்திக் காட்டவோ பார்க்கவோ முடியாது' (ஆளுமைகள் மதிப்பீடுகள் பக் 35) என்று சுந்தர ராமசாமி சொல்லியிருப்பதன் பொருள் கோவிந்தனை வாசிக்கும்போது எனக்குப் புலப்பட்டது.



கோவிந்தன் சிந்தனை அடிப்படையில் ஒரு ராடிகல் ஹூமனிஸ்ட். எம்.என்.ராயிடமிருந்து பெற்ற இந்தக் கருத்தாக்கத்தைதனது சுய சிந்தனை மூலம் விரிவாக்கம் செய்து கொண்டார். அதை இப்படிச் சுருக்கிச் சொல்லப் பார்க்கிறேன்.' மனிதனின் படைப்பாற்றலுடன் இணைத்துத்தான் சுதந்திரத்தைப் புரிந்து கொண்டார் கோவிந்தன். படைப்பு உருவாக்கத்தின் விதையும் அது முளை விட்டு வளர்வதற்கான சூழலும் அந்தக் கற்பனையில்தான் துலங்குகின்றன. இதில் தனிமனிதன் என்ற கருத்துக்கு அழுத்தம் அதிகம். ஆனால் அவனுடைய சமூக இயல்பை அந்த அழுத்தம் மறுப்பதில்லை. சமூகத்தை தனிநபருக்கு அப்பாற்பட்ட எதிர்த் துருவமாக நிறுத்துவது இல்லை. தனி மனிதனிடம் ஒளிர வேண்டியதும் அவனுடைய அனுபவமாக மாறவேண்டிய இயல்புதான் சுதந்திரம். கலையும் பண்பாடும் அரசியலும் பேரழகுகொள்வது இந்த மதிப்பீட்டை வெளிப்படுத்தும்போதுதான். அதையே படைப்பாற்றல் எனலாம். புதுமை எனலாம்.ஆதன் எதிரி அதிகாரம். மனிதன் மனிதனாக இருக்க இந்த அதிகாரங்களிடமிருந்து விலகி ஓட வேண்டியிருக்கிறது. மனிதன்என்ற மதிப்பீட்டைப் புரிந்து கொள்ள இந்த அதிகாரமற்ற சுதந்திரச் சூழலை உருவாக்க வேண்டும். படைப்பாற்றல் வெளிப்படும் பின்புலத்தை நிர்மாணிக்க வேண்டும். ஒரு படைப்பின் நோக்கமும் படைப்பாளியின் நடவடிக்கையும் இந்த மானுடச் சூழலை உருவாக்குவதுதான்.



கோவிந்தனின் இந்தக் கருத்துக்களைக் கருவிகளாக வைத்து சுந்தர ராமசாமியை கூடுதல் ஆழத்தில் புரிந்து கொள்ளமுடியும். சுந்தர ராமசாமியின் படைப்புகளை முன்வைத்து கோவிந்தனையும் புரிந்து கொள்வது சாத்தியம். இரு வேறு மொழிகளில் இயங்கியபோதும் இருவரையும் இப்படிப் புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எம்.கோவிந்தனின்ஜீவன் தமிழ் உயிரல்ல என்றாலும் திராவிட உயிர் என்பது ஒரு காரணம். சகல துறைகளிலும் மதிப்பீடுகள் முன்னைவிட வேகமாகச் சரிந்து கொண்டிருக்கும் காலம் இது. இதில் மானிடச் சூழலைப் பற்றிக் கனவு காணவும் யோசிக்கவும்கூட இந்த இருவரும் தேவைப்படுகிறார்கள். இந்தப் பெருங் கனவைப் பற்றி யோசித்தவர்கள் என்ற நிலையில்தான்இவரை வாசிக்கும்போது அவரும் அவரை வாசிக்கும்போது இவரும் நினைவுக்கு வந்தார்கள் என்று நினைக்கிறேன்.தவிர, கோவிந்தனை அண்மையில் வாசிக்கும்போதெல்லாம் சுந்தர ராமசாமி ஞாபகத்தில் இருந்து கொண்டேயிருந்தார். மலையாளத் திலிருந்து தமிழுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அவருடன் அமர்ந்து போட்ட பட்டியலில்எம். கோவிந்தனின் பெயரை முதலாவதாகச் சேர்த்ததும் ஞாபகத்தில் இருந்து கொண்டே இருந்தது.



சரியாக அறுபது வருடங்களுக்கு முன்னால், 1951 இல் வெளியான எம்.கோவிந்தனின் 'தேடலின் ஆரம்பம்' என்ற நூலில் ஒரு முன்னுரைக் கதை இருக்கிறது. லெஸ்ஸிங் எழுதியது. கடவுள் தன்னுடைய வலது கையில் முழுமையான உண்மையையும் இடது கையில் உண்மைக்கான தேடல் வேட்கையையும் வைத்துக் கொண்டு 'உனக்கு விருப்பமானதை எடுத்துக் கொள்' என்று என்னிடம் கேட்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது நான் எந்தத் தயக்கமும் இல்லாமல் கடவுளின் இடது கையைப் பிடித்துக் கொண்டு சொல்வேன்: 'எனக்கு இது போதும். முழுமையான உண்மை உங்களுக்குமட்டுமே உரிமையானது'.



சுந்தர ராமசாமியும் எம்.கோவிந்தனும் கடவுளின் இடது கையைப் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் என்பது அவர்களுக்குஇடையே உள்ள ஒற்றுமை.
@
ஜூன் 3,4, 5 நாட்களில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில் நடைபெற்ற சுரா - 80 பன்னாட்டுக் கருத்தரங்கில் பேசியது.

சக்திஜோதி கவிதைகள்













தாகம் அமைப்பு அண்மையில் வெளியாகியிருக்கும் ஆறு கவிதை நூல்களுக்காக நடத்தும் விமர்சன உரையாடல் நிகழ்ச்சி. இதில் பங்கேற்கக் கிடைத்த வாய்ப்புக்கு முதலில் நன்றி. தமிழில் இன்று கவிதை நூல்கள் அதிகம் வெளியாகின்றன.அதிக எண்ணிக்கையில் கவிஞர்கள் அறிமுக மாகிறார்கள். ஆனால் கவிஞர்களும் கவிதைகளும் பெருகியிருக்கிற அளவுக்குக் கவிதை பற்றிய விவாதங்களோ உரையாடல்களோ நடைபெறுவதில்லை. பத்திரிகைகளிலும் இதே நெருக்கடியைப் பார்க்கலாம். ஒரு கவிதைத் தொகுதிக்குப் பொருட்படுத்தத் தகுந்த மதிப்புரையோ ஒரு கவிஞரின் படைப்புப் பற்றிய விரிவான திறனாய்வோ வெளியாகும் வாய்ப்புக் குறைவு. கவிதையி பொறியில் சிக்கிக் கொண்டிருக்கும் இக்கட்டான தருணத்தில் இந்த உரையாடல் நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருகிறேன். இதில் என்னைப் பங்கேற்கத் தூண்டிய நண்பர்கள் 'காலச்சுவடு' கண்ணன், கவிஞர்கள் சக்திஜோதி, செந்தி மூவருக்கும் நன்றி.

இங்கே எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் ஆறு கவிதை நூல்களில் சக்திஜோதியின் 'எனக்கான ஆகாயம்' தொகுப்பைப் பற்றிப் பேசுவதற்கு முன்பாகச் சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விருப்புகிறேன். இது சக்திஜோதியின் மூன்றாவது தொகுப்பு.இதற்கு முன்பு அவருடைய முதல் தொகுப்பான 'நிலம்புகும் சொற்க'ளை வாசித்திருக்கிறேன். பொருட்படுத்தப்பட வேண்டியகவிஞர் என்ற எண்ணத்தை அந்தத் தொகுப்பு எனக்குத் தந்தது.இந்த நிகழ்ச்சியையொட்டி சக்திஜோதியின் எல்லாத் தொகுப்புகளையும் வாசிக்கும் வாயப்புக் கிடைத்தது. நான் பேசவேண்டியது அவருடைய மூன்றாவது தொகுப்பை முன்வைத்துத்தான். இருந்தாலும் அவருடைய இதுவரையான எல்லாக் கவிதைகளையும் ஒருசேர வாசித்தபோது கிடைத்த சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். அதற்கு இதை விடப் பொருத்தமான சந்தர்ப்பம் வாய்ப்பது அரிது.

சக்திஜோதியின் மூன்று தொகுப்புகளிலும் இடம் பெறும் கவிதைகள் பெரும்பான்மையும் ஒரே இயல்பைக் கொண்டிருப்பவை. முதல் தொகுப்பான 'நிலம்புகும் சொற்களில்' இடம் பெறும் 'காதல் வழி' என்ற கவிதையையும் மூன்றாம் தொகுப்பான 'எனக்கான ஆகாயத்'தில் இடம் பெறும் 'தருணம்' என்ற கவிதையையும் எளிதாக ஒப்பிட முடியும்.

ஆற்றின் கரைகளுக்குஇடையில் இருக்கின்றேன்
வெள்ளம் என்மீதுபுரண்டோடுகின்றது
தொண்டை வறண்டுதாகத்தில் தவிக்கின்றேன்
கால்கள்நீரில் மிதக்கின்றன
ஆற்றின் போக்கைஎதிர்க்கஇயலாமல்மீனாய் மாறுகின்றேன்.
தப்பிக்க இயலாது இனிநானும்
என்னிடமிருந்து நீரும்.

இதன் இன்னொரு சாயலை 'தருணம்' என்ற இந்தக் கவிதையில் பார்க்கலாம்.

கிளர்ந்தெழும் நினைவுகளின்சுழலில் சுழல்கிறது மனம்
நதியில் நீந்தும் மீன்களைப்போல
நினைவுகளில் பயணிக்கிறதுஒரு சொல்
அருகாமை நறுமணம் உணவுப் பொருட்கள் உடைகளின் வண்ணங்கள் என
ஏதாவது ஒன்றிலிருந்து
ஊற்றுப்போல நினைவுகள் உருக்கொள்கிறது.
குளத்துத் தாமரைக் கொடிகளில் சிக்கி
மிதப்பதுபோலவும்
சுழித்து ஓடும் நீரில்வந்தடையும்
சிறுதுரும்பெனவும்
நினைவுகளில் தடுமாறி நிற்கிறது சில தருணங்கள்
தாமரை இலைகளில் உருளும் நீர்த்துளிகளென
அத்தருணங்கள் மாறிமாறி வெவ்வேறு காலவெளிகளில்
ஓடுகிறது முழுதாய் விடுபடத் துடிக்கிறது
உன் நினைவு
தாமரை இலைமேல்படர்கிறது
ஒரு பூவைப் பறித்துக் கொண்டு திரும்புகிறேன்
கூடவே
நதிக்கரையில் காத்திருந்த தருணத்தையும்.

ஒரே மனதின் இரு வேறு நிலைகளைச் சொல்பவை இரு கவிதைகளும். ' காதல்வழி' என்ற முதல் கவிதையில் நினைவுகளின் வசப்படும் நிலை. 'தருணம்' கவிதையில் நினைவுகளைத் தன் வசப்படுத்திக் கொள்ளும் நிலை. தனிக் கவிதைகளில் அல்லாமல் மூன்று தொகுப்புகளிலும் ஒரு தொடர்ச்சியைக் கொண்டிருக்கிறார் சக்திஜோதி. இது அவருடைய கவிதை இயல்பாகத் தோன்றுகிறது. இந்த இயல்பில் ஒரு தீர்மானமும் முறைமையும் தென்படுகின்றன. இந்த முறைமை சார்ந்தே அவருடைய கவிதைத் தொகுப்புகள் உருவாக்கப் படுவதாகவும் தோன்றுகிறது.
இந்த முறைப்படுத்தலின் இன்னொரு அம்சம் தொகுப்புகளுக்கு எழுதப் பட்டிருக்கும் முன்னுரைகள். தமிழில் முன்னோடிகளான மூன்று எழுத்தாளர்களின் முன்னுரைகள் மூன்று தொகுப்புகளிலும் இடம் பெற்றிருக்கின்றன. பிரபஞ்சன், நாஞ்சில்நாடன், கல்யாண்ஜி. இப்படி அமைந்திருப்பது தற்செயலாகவும் இருக்கலாம். கல்யாண்ஜியின் முதன்மையான வெளிப்பாட்டு ஊடகங்களில் கவிதையும் ஒன்று. மற்ற இருவரும் கவிதையிலும் கைவரிசை காட்டியிருப்பவர்கள். இப்படியான பொருத்தமும் தற்செயலானதாக இருக்கலாம். இந்த மூன்று தொகுப்புகளின் தலைப்புகளிலும் ஒரு தேர்வும் தீர்மானமும் தெரிகின்றன. நிலம் புகும் சொற்கள், கடலோடு இசைத்தல், எனக்கான ஆகாயம். ஐம்பூதங்களில் மூன்றைத் தொகுப்புகளில் பிரதிநிதித்துவ ப்படுத்துவது தற்செயலானதல்ல என்பது என் ஊகம். இந்தத் தலைப்புகளையொட்டி யோசிக்கும் போது முன்னுரையாளர்களின் வரிசை கொஞ்சம் மாறியிருக்கலாம் என்று நினைக்கிறேன். கடலுக்குப் பிரபஞ்சனையும் நிலத்துக்கு நாஞ்சில் நாடனையும் ஆகாயத்துக்கு கல்யாண்ஜியையும் முன்னுரையாளர்களாக ஆக்கியிருக்கலாம். கூடுதல் பொருத்தமாக இருந்திருக்கும். அதனாலென்ன? இன்னும் இரண்டு பூதங்களுக்கான தொகுப்புகள் மிச்சமிருக்கின்றன. யார் யார் காற்றையும் தீயையும் பிரதிநிதித்துவப் படுத்துவார்கள் என்ற வாசகக் குறுகுறுப்புடன் காத்திருக்கிறேன். இல்லை இவை யெல்லாம் தற்செயலாக ஏற்பட்டவை என்று சக்திஜோதி சொல்வாரானால் அடுத்த தொகுப்பின்போது என்னுடைய அவதானிப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும்படி அவரைக் கேட்டுக்கொள்கிறேன்.

மூன்று தொகுப்புகளையும் ஒருமித்து வாசித்தபோது கவனித்த இன்னொரு அம்சம் என்னை மிகவும் வியப்படையச் செய்தது. மூன்று தொகுப்புகளும் ஒருவருக்கே சமர்ப்பிக்கப் பட்டிருக்கின்றன. இது தற்செயலானதல்ல; தீர்மானமானது. இந்தத் தீர்மானத்தின் வெவ்வேறு சாயல்களில்தான் சக்திஜோதியின் கவிதைகள் உருவாகின்றன. சமர்ப்பணத்தில் தென்படும் அளப்பரிய காதலைத்தான் இந்தக் கவிதைகள் பேசுகின்றன. இந்தத் தொகுப்பின் தன்னுரையில் அவரே அதை ஒப்புக்கொண்டுமிருக்கிறார். 'காதலும் பிரிவும் அதுசார்ந்த காட்சிகளும் நிரந்தரமாக எனது கவிதைகளின் அடையாளமாகி விட்டன. சமூகத்தில் மாற்றத்தை உண்டாக்குவதில் காதல் பெரும் பங்கு வகிக்கிறது' என்று குறிப்பிடுகிறார்.

ஓர் நபரின் மீதான காதல் மட்டுமல்ல; பிற உறவுகளின் மீதான காதல்,இயற்கை மீதான காதல் என்று இந்தக் கவிதைகள் வெவ்வேறு உருக் கொள்கின்றன. என்னைப் போன்ற ஒரு சந்தேகப் பேர்வழிக்கு இந்த உலகத்தில் அத்தனை காதல் சாத்தியமா? என்ற கேள்வி எழுவது சகஜம். ஆனால் காதலாகிக் கசியும் இந்த மனநிலையையே கவிதையின் இயல்பாக மாற்றிக் கொண்டி ருக்கிறார் சக்திஜோதி. தமிழில் எழுதும் பிற பெண் கவிஞர்களிடமிருந்து அவரை தனித்துக் காட்டும் அம்சம் இது.

தமிழில் வாசக கவனத்தைப் பெற எளிய வழி காதலை முன்வைத்து - உருக்கமான சரியாகச் சொல்வதென்றால் அசட்டுத்தனமான கவிதைகளைத் தயாரிப்பதுதான். இது ஆண் வழி.பெண்ணை வியந்து பரவசப்பட்டு அவளைக் கொண்டாடும் கவிதைகள். அல்லது காதலியின் வஞ்கத்தைச் சொல்லிப் புலம்பும் கவிதைகள். இவை ஆண்களின் பங்களிப்பு. மாறாக 'என்னைப் புரிந்து கொள்ளேன்' என்று இறைஞ்சும் அல்லது 'என் காதலுக்கு நீ தகுதியானவனல்லன்' என்று குற்றம் சாட்டும் பெண் வழிக் கவிதைகள். எடுத்துக் காட்டுகள் தராமலே உங்களுக்கு விளங்கும் என்று எண்ணுகிறேன். இந்தத் தேய்வழக்கிலிருந்து தப்பியவை சக்திஜோதியின் கவிதைகள். இவை காதலைப் பற்றிய கவிதைகளல்ல . காதலிலிருந்து உருவான கவிதைகள். காதலைப் பெண்ணும் ஆணும் பார்க்கும் பார்வையிலேயே வேறுபாடு இருக்கிறது. பெண்ணுக்கு அது வாழ்க்கை. ஆணுக்கு வாழ்வின் ஒரு பகுதி. அதனாலேயே சக்திஜோதியின் கவிதைகள் பெரிதும் காதலைச் சார்ந்து இருக்கின்றன என்று கருதுகிறேன்.

சக்திஜோதியின் கவிதைத் தொகுப்புகளுக்கு முன்னுரை எழுதிய மூன்று பேரும் அவரது கவிதைகளில் சங்க இலக்கியச் சுவடுகள் தென்படுவதாகத் தவறாமல் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதைக் கவிஞரும் ஏற்பளிப்புச் செய்திருக்கிறார். வெள்ளிவீதியாரின் சந்ததி என்று உரிமை பாராட்டிக் கொள்கிறார். இந்த உரிமை பாராட்டலை வேறு ஒரு கோணத்திலும் பார்க்கலாம். சங்கக் கவிதைகளில் இடம் பெறும் மாந்தர்களில் தீவினையாளர்களே இல்லை. தலைவனோ தலைவியோ தோழியோ தோழனோ தாயோ செவிலியோ யாரும் காதலுக்குத் தடை விதிப்பவர் களல்லர். சமூகப் பழக்கங்களும் இருத்தலின் தேவைகளும்தான் தடையாக அமைபவை. சக்தி ஜோதியின் கவிதைகளிலும் காதலுக்கு எந்தத் தடையும் இல்லை. பிரிவுகள்தாம் துக்கத்தையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றன. காதலில் நேரும் பிரிவு, தனிமை, விரகம் இவைதாம் இந்தத் தொகுதிக் கவிதைகளின் பாடு பொருட்களாக அமைகின்றன. பெரும்பாலும் பெண் நிலையிலி ருந்தே இந்தக் கவிதைகள் சொல்லப்படுகின்றன. விதிவிலக்கான ஒரு கவிதை 'தீபங்களின் நடுவே'. பெண் மீதான ஆணின் தவிப்பைச் சொல்கிறது. சமயங்களில் பெண்ணுக்கே தன்னுடைய நிலை மீது சந்தேகம் வந்து விடுகிறது. 'இதற்குமுன்' கவிதை அதை வெளிக்காட்டுகிறது. (பக் 51) இன்னொரு கோணத்திலும் சக்திஜோதியின் கவிதைகள் சங்கக் கவிதைகளின் சாயலைக் கொண்டிருக்கின்றன. சங்கக் கவிதைகளில் வெளியில் உள்ள இயற்கைச் சித்தரிப்பு அகத்தையே வெளிப்படுத்துகிறது. நதி.நிலவு, வானம், பறவை, வனம்,சாலைகள்,மழை, மலை, காற்று என்று எல்லாப் புறப் பொருட்களும் இந்தக் கவிதைகளில் அகத்தின் மாற்றுப் பொருட்களாகின்றன . 'அரும்புகள் மலரும் பருவம்' பக் 54 . பொழுதுகளும் காதலுக்கானவையாக மாற்ற மடைகின்றன.

'எனது இரவும் பகலும் / ஒரே நிறத்திலானதாய் மாறிவிட்டது' என்றும்
'அவன் / என்னிலிருந்து நீங்கிச் செல்லும்/ ஒவ்வொரு விடியலும்/ துயரம் மிக்கதாகவே புலர்கிறது' என்றும்

காதலனை முன்வைத்தே பொழுதுகளும் அமைகின்றன. காதலனுடனான இருப்பு. அதில் நேரும் பிரிவு, அது தரும் வேதனை இவையே இந்தத் தொகுப்புக் கவிதைகளின் மையம். பிரிவால் கொள்ளும் ஊடல் கூட காதலுக்கு ஊறு விளைவிக்கும் என்ற பெருந்தன்மையான நிலைப் பாட்டை இந்தக் கவிதை களினிடையில் காண முடிந்தது. சங்க காலக் கவிஞர்களிடமிருந்து சக்திஜோதி முன்னோக்கிச் செல்லும் தருணம் இது.

பெண்ணுரிமைப் பரப்புநர்கள் போற்றவும் தூற்றவுமான இரண்டு கவிதைகள் தொகுப்பில் அடுத்தடுத்து உள்ளன. பெண்ணின் இயல்புகளைப் பறித்துக் கொண்டவர்களுக்கிடையிலிருந்து அவள் மீண்டு எழும் செயலைச் சொல்கிறது இந்தக் கவிதை. பக் - 33.அதே கவிதையின் மறுபக்கம் ஆணின் நேசத்தில் பெண் தன்னை முற்றிலும் இழப்பதை 'பரிமாணம்' பக் - 34 பேசுகிறது. இந்தக் கவிதைகளுடன் ஒப்பிடும்போது எதிர்மறையாகத் தோன்றும் கவிதைகளையும் சக்திஜோதி எழுதியிருக்கிறார். குறுகிய பரப்புக்குள் வாழ விதிக்கப்பட்ட பெண்ணின் குமுறலைச் சொல்லும் கவிதை 'சமையலறை உலகிலிருந்து' வெளிப்படுகிறது. பக் - 30. இந்தக் கவிதையும் யாரையும் குற்றம் சாட்டவில்லை. தனது இருப்பை எந்த விமர்சனமும் புகாருமில்லாமல் ஏற்றுக் கொள்ளும் பெண்நிலையை முன்வைக்கிறது. இவ்வளவு அமைதியானதா காதலின் உலகம்? 'ஆம், என்பது சக்திஜோதியின் ஒப்புதலாக இருக்கிறது. அதை நிறுவுவதற்கான விரிவான சான்றுகள் அவருடைய கவிதைகள். நிகழ் உண்மைகளின் நகலெடுப்பல்ல படைப்பு. அதுவாய்த்த உண்மைகளைச் சார்ந்து உருவாகும் மாற்று உலகம். இந்த நோக்கில் சக்திஜோதியின் கவிதைகள் ஓர் மரபின், அதுவும் மேன்மையானது என்று கொண்டாடப்பட்ட ஓர் மரபின் அடிப்படைக் கூறுகளிலிருந்து சமகால உணர்வுடன் ஒரு மாற்று உலகை உருவாக்குகிறார். கவிதை எப்போதும் சமகாலத்தின் துடிப்புகளைக் கொண்டிருப்பது. நிகழ்காலத்திலிருந்தே கடந்த காலத்தைப் பரிசீலனை செய்கிறது.சக்திஜோதியின் கவிதைகள் கடந்த காலத்திலிருந்து நிகழ் காலத்தைப் பார்க்க முற்படுகின்றனவா என்ற சந்தேகத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

நினைவுகளை மீட்கும் முயற்சிகள் இந்தக் கவிதைகள். கடந்து போன வாழ்வின் கணங்களை மீட்கும் ஆசை இந்தக் கவிதைகளில் தென்படுகிறது. ’முடிந்த கதைகள்’, ’தோழி ஒருத்தியின் குரல்’, ‘வேங்கை இருந்த நிலம்’ ஆகியவை இந்த ஆசையின் உதாரணங்கள். முதலிரண்டு கவிதைகளும் தனி மனித உணர்வோட்டமாக நின்று விட மூன்றாவது கவிதை இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவில் நேரும் நவீன அத்துமீறலைச் சொல்கிறது.

சக்திஜோதியின் கவிதைகளை வாசித்துப் பெற்ற நெகிழ்வான மனநிலையில் நண்பர் ஒருவர் நினைவுக்கு வந்தார். மலையாளக் கவிஞரான ஜெயதேவன். ஆரம்பப் பள்ளி ஆசிரியர். ஆரம்ப வகுப்புகள்தாம் வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டு அதன்படியே சிறு குழந்தைகளுக்குக் கற்பித்துக் கொண்டிருப்பவர். மிகவும் மென்மையானவர். பள்ளிப் பிள்ளை களிடம் மாளாத அன்பு கொண்டவர். அந்த அன்பு அவர் பேச்சிலும் செய்கைகளிலும் தெரியும். ஓர் ஆள் இப்படி அன்பின் அவதாரமாக இருக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலான ஆசிரியப் பணியில் ஒரு முறை கூடப்பிள்ளைகளை அடித்ததில்லை. அடிப்பது என்ன? குரலை உயர்த்தி மிரட்டியது கூட இல்லை. நான் பணியாற்றிய பதிப்பகத்தின்வாயிலாக அவருடைய இரு கவிதைத் தொகுப்புகளை வெளியிட் டேன்.அந்த வெளியீட்டு விழாவில் பேசிய அனைவரும் ஜெயதேவனின் கவிதைகளைப் பற்றிப் பேசியதற்கு இணையாக அவரது நல்லியல்புகளைப் பற்றியும் பேசினார்கள். மலையாளத்தின் முக்கிய எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயர் உள்ளிட்ட எல்லாப் பேச்சாளர்களும் கவிதையும் கவிஞரும் ஒன்று என்ற தோரணையில்தான் பேசினார்கள். அன்று அந்தப் பேச்சுகளும் ஜெய தேவனின் செய்கைகளும் கொஞ்சம் செயற்கை யானவயோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. புத்தக வெளியீட்டுக்குப் பின்னர் கவிஞருடன் உருவான நெருக்கம் அந்த சந்தேகத்தைப் போக்கியது. அவர் மட்டுமல்ல அவருடைய மனைவியும் ஏழு வயது மகளும் கூட அன்பின் தூதுவர்களாகவே இருந்தார்கள். நேசத்தின் சிறகுகளை தங்கள் உடுப்புகளுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு நடமாடு கிறார்கள் என்று கூடத் தோன்றியது. ஆனால் அது அவர்களின் இயல்பு. அவர் கவிதைகளும் அந்த இயல்பிலிருந்தே பிறந்தவை. ஜெயதேவனிடம் பின்னர் கேட்டுமிருக்கிறேன்:‘ பூமியில் இவ்வளவு அன்பு சாத்தியமா? அதை மட்டுமே எழுதிக் கொண்டி ருக்கவும் வேண்டுமா?’ . அவருடைய இயல்பைப் பற்றிச் சொல்லி யிருப்பதனால் அவருடைய பதில் என்னவாக இருந்திருக்கும் என்பதையும் நீங்கள் ஊகிக்க முடியும்.

காதல் மேலான மானுட உணர்வு. அது நெருக்கமும் பிரிவும் பிரிவின் வேதனையும் மட்டும் தானா? அதில் ஒளிந்து கிடக்கும்தவிர்க்க முடியாத வஞ்சனையும் துரோகமும் வன்மமும் காதலின் பகுதிகள் அல்லவா? காலமும் இடமும் காதலால்தான் வரையறுக்கப்படுகிறதா? என்பன போன்ற கேள்விகளை சக்திஜோதியிடமும் கேட்கலாம். அதற்கான பதில்கள்தான் தனது கவிதைகள் என்று அவர் சொல்லக் கூடும். காதல் என்ற உணர்வுக்காகத் தனி நூலே தொகுக்கப்பட்டிருக்கும் மொழியில் அவர் அப்படிச் சொல்வது இயல்பானதாகவும் இருக்கக் கூடும்.
@
மதுரை தாகம் இலக்கிய அமைப்பு 13 மார்ச் 2011 அன்று நடத்தியஆறு கவிதை நூல்கள் - விமர்சன உரையாடல் நிகழ்ச்சியில் ஆற்றிய உரை.