செவ்வாய், 27 மார்ச், 2018

பெருவலி குறித்து...







பெருவலி ’ நாவல் பற்றி சிவபிரசாத் எழுதியிருக்கிறார். இந்த நாவல் குறித்த முதல் பதிவு இதுவே. சிவபிரசாத்துக்கு மிக்க நன்றி. 

அவரது வலைப் பக்கம் இது:https://sivaprasadpaarvaikal.blogspot.in/?m=1


       ஜஹனாரா பேகம் : ராம்ராஜியத்தின் பெருவலி




என்னுடைய பள்ளி நாட்களில்  தமிழுக்கு அடுத்து நான் விரும்பி வாசித்தது வரலாற்று பாடம். குறிப்பாக முகலாய சாம்ராஜ்யத்தைப் பற்றிய பாடப்பகுதிகள்.வெற்று தகவல்களை வறட்டு மொழியில் சொல்லும் பாடநூலை மதிப்பெண்ணைத்தாண்டி புதிய உலகத்தை தெரிந்து கொள்ளும் உத்வேகத்தோடு வாசித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை. கல்லூரி காலத்தில் மதனின் "வந்தார்கள் வென்றார்கள்" வாசித்த போதும் அதே குதுகலம். 

முகலாயர்கள் வரலாற்றில் அப்படி என்ன இருக்கிறது. எது வசீகரிக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் பாபரில் தொடங்கி அவுரங்கசீப் வரையான மாபெரும் சாம் ராஜ்ஜியத்தின் தொடர்ச்சி, அதிகாரத்தை கைப்பற்ற நடத்திய பெரும்யுத்தங்கள், தலைமுறை தோறும் வரும் பேரழகிகள், தங்கள் புகழை நிலைபெறவைக்க ஸ்தாபித்த நகரங்கள், அரண்மனைகள், மசூதிகள், கல்லரைகள் என்று பிரமாண்டங்களின் கவர்ச்சியும், அரியணை ஆசையில் நிகழ்ந்த போட்டிகளும்,சூழ்ச்சிகளும், சகோதர யுத்தங்களும் புனைக்கதைகளுக்கு நிகரான சுவாரசியம்மிக்கவை. அந்த  வகையில் " பெருவலி" முகலாயர்கள் பற்றிய புனைவு என்பதால்வாசிக்கத் துவங்கினேன்.

கவிஞர் சுகுமாரனின் முன்னுரைகளுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். தன் அனுபவப் பரப்பிலிருந்து மெல்ல துவங்கி தான் எழுத எடுத்துக் கொண்ட படைப்பின் மையத்தை மின்னல் வெட்டில் வெளிச்சம் பாயிச்சுவார். அது அந்த படைப்பை வாசிக்க பெரும்திறப்பாக இருக்கும். இப்படி சுகுமாரனின் முன்னுரையால்உந்தப் பட்டு நிறைய கிளாசிக் நாவல்களைப் படித்திருக்கிறேன். இன்று அவரேகிளாசிக் தன்மையுள்ள கதையை எடுத்துக் கொண்டு நாவல் படைத்துள்ளார்.

இந்த நாவல் இரண்டு பகுதியாக எழுதப்பட்டுள்ளது. முதல் பகுதி முகலாயபேரரசின்அக்பர் காலம் முதல் பேரரசர் ஷாஜகான் காலம் வரை மூன்றுதலைமுறை மன்னர்களிடம் பணி செய்த பானிபட் என்ற வயது முதிர்ந்த ஆணின் (நபும்சகம்) பார்வையில் சொல்லப்பட்டுள்ளது. இந்த பானிபட் இளவரசிஜஹனாராவின் நம்பிக்கைக்கு உரியவனாகவும், அரசியல் சதுரங்கத்தில் காய்கள் எவ்வாறு நகர்த்தப்படும் என்பதை தன் அனுபவங்களால் யூகிக்க தெரிந்தவனாகவும்இருக்கிறான்.இவன்கற்பனை பாத்திரம் என்றாலும் எனக்கு ராமாயணத்தில் வரும்கூனியை ஏதோ ஒருவிதத்தில்  ஞாபகப்படுத்துகிறான்.  இவன் பார்வையில்தான்
நாவல் துவங்குகிறது. 

பேரரசர் ஜஹாங்கீர் பெயரில் நூர் மஹல் ஆட்சி செய்து கொண்டிருக்கிறாள்.
அதிகாரம் தன் கைகளுக்குள்ளேயே இருக்க சூழ்ச்சி செய்து தக்காணத்தில் ஷாஜ கானையும் அவன் குடும்பத்தையும் சிறை பிடிக்கிறாள். அந்த சூழ்ச்சியைதகர்த்து வெற்றி வீரனாய் ஷாஜகான் ஆட்சியில் அமர்வதில் ஆரமித்து, அவரின்அன்பு நாயகிமும்தாஜ் பேகம் பதினான்காவது பிரசவத்தின் போது அதிக ரத்தபோக்கால் இறந்ததுவரையான கதையைச் சொல்கிறான். 

“அதிகாரத்துக்காக மனிதர்கள் என்னவெல்லாம் செய்யக் கூடுமென்பதை மூன்று தலைமுறைகளாகப் பார்த்திருக்கிறேனே! பணிவு காட்டுவார்கள். நயந்து பேசுவார்கள், பாசம் பொழிவார்கள், சதி செய்வார்கள், உறவுபாராட்டுவார்கள். உறவு பாராட்டியவர்களுக்கே பகையாவார்கள்.பகைவனுக்கு நட்பாவர்கள். வாளால் வெட்டிக் கொல்வார்கள். வெற்றிஈட்டுவார்கள். வெற்றி பெற்றதும் எல்லாம் மறப்பார்கள். எல்லாரையும்அடக்கி ஆள்வார்கள். தனது ஆட்சி முடியாதது என்று கனவு காண்பார்கள்.அந்த கனவிலேயே புதையுண்டுகிடப்பார்கள்”.

“துணிச்சல் தனியானதல்ல. ஒரு பகுதி நுண்ணறிவு, ஒரு பகுதி அடங்காமை,ஒரு பகுதி பயம் எல்லாம் சேர்ந்தது தான் துணிச்சல்”  என பானி பட் என்றஅடிமையின் மன ஓட்டமாக செல்லப்படும் விஷயங்கள் அனைத்திலும் 
சுகுமாரன் என்ற ஆளுமையின் நுண்ணுணர்வு  மற்றும்  கவித்துவத் தெறிப்பு களையும் உணரமுடிகிறது. அது நாவலை இன்னும் மனதிற்கு நெருக்கமான பிரதியாகமாற்றுகிறது. 

இரண்டாம் பகுதி ஜஹனாராவின் பார்வையில் சொல்லப்படுகிறது. பதினான்கு
வயதில் அரசியல் விவகாரங்களில் அலோசனை சொல்லும் நுண்ணறிவு. தர்பாரில்தனி ஆசனம். மூன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் தெரிந்திருந்தன. கவிதையும்
காவியமும் வேதங்களும் புராணங்களும்  அறிந்திருந்தாள். மதநூல்களைப் பயின்றிருந்தாள். பாடவும் ஆடவும் கற்றிருந்தாள். கட்டடக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தாள். கப்பல்களும் தனி மாளிகையும் ததும்பி வழியும் கஜானாவும் பணிவிடை செய்ய அடிமைகளையும் பெற்றிருந்தாள். அரச குடும்பத்துப் பெண்களில் யாரையும் விட செல்வமும் செல்வாக்கும் அவளுக்கு இருந்தன. எல்லாம் இருந்தன. ஆனால் எது இருந்தால் இவையெல்லாம் மேலானவை ஆகுமோ அந்த ஒன்று அவளுக்குக் கிடைக்கவில்லை. காரணம்அவள் பெண்ணாக இருந்தாள். துன்புறுத்தும் இந்த உண்மை போதாதாஜஹனாராவை மையமாக்கி 
எழுத? எனத் தன் பின்னுரையில் சுகுமாரன்குறிப்பிடுகிறார். 

அக்பர் காலத்தில் அரச குடும்பத்து பெண்கள் திருமணம் செய்ய தடைவிதித்திருந்தார். காரணம் தன் வாரிசுகளோடு, மருமகன்களும் அரியணைபோட்டியில் ஈடுபடக் கூடும் என்பதால் இந்த தடை நீடித்தது. எனவே அரண்மனைபெண்கள் தன் தந்தை, சகோதரன் என அதிகார மையங்களோடு அன்பு, விசுவாசம்,தியாகம் ஆகியவைகள் மூலமே தனக்கான முக்கியதூவத்தையும்,அதிகாரத்தையும் பெற முடிந்தது. 
ஜஹனாரா தன் தந்தையையும் சகோதரன்தாராவையும்  தன் சுயநலம் கடந்து நேசித்தாள்.

திருமணம் செய்யும் உரிமை மறக்கப்பட்டாலும் எதிர்பாலினத்தின் மேல் ஏற்படும்இச்சைகள் இல்லாமலாப் போய்விடும். ஜஹனாராவின் காதல் பற்றி வரலாற்றில் பல்வேறான யூகங்கள் நிழவுகிறது. இந்த யூகங்களிலிருந்து தனக்கு சரி எனத் தோன்றியதைத் தேர்வு செய்தது குறித்த சுகுமாரனின் பார்வை இவை.

 “ஜாஷஹானுக்கு அணுக்கமான தளபதி நவ்ஜத்கானை காதலனாகச் சித்தரிக்கிறார் இந்து சுந்தரேசன். ஆனால் ஜஹனாரா நவ்ஜத் கானை “காற்று வீசும் திசையில் சாயும் சிக்கமோர் மரம்” என்று துச்சமாகவே மதிப்பிடுகிறாள். தன் முப்பதாவது பிறந்த நாளில் தீ விபத்துக்கு உள்ளாகிறாள். அவளுக்கு மருத்துவம் பார்த்த காப்ரியேல் பெளட்டன் என்ற ஆங்கிலேயர் மீது காதல் கொண்டாள் என ருச்சிர் குப்தா சொல்கிறார். ஆனால் அவர் பதில் உதவியாக வங்காளத்தில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிலம் பெற்றுக் கொள்கிறார். ஷாஜஹானுக்கும் ஜஹனாராவுக்கும் இடையில் பிறழ் உறவு இருந்தது என்று எழுதுகிறார் இத்தாலி பயணியான நிக்கோலோ மனூச்சி. அதே காலக் கட்டத்தில் வந்த ஃபிரான்சைச் சேர்ந்த ஃப்ரான்ஸீவா பெர்னியர் மனூச்சியின் கருத்தை மறுக்கிறார்” என பல்வேறு கோணங்களைஉள்வாங்கி,துலேர் என்ற சிற்றரசன் மேல் ஜஹனாராவிற்கு காதல்
இருந்ததாக எழுதுகிறார். இருவரும் பேசிக் கொள்ளும் தருணங்கள் மிக குறைவாகஇருந்த போதிலும் அவனை நினைத்து ஜஹனாரா ஏங்கும்  காதல் தருணங்களைசுகுமாரன் கவிதை மொழியில் எழுதிச் செல்கிறார். 

சகோதரர்கள் தாரா, அவுரங்கசீப் இடையேயான அதிகார யுத்தமும், வெற்றி பெற்றஅவுரங்கசீப் தன் தந்தையை ஆக்ரா கோட்டையில் சிறை வைப்பது, தன்பிரியத்துக்குரிய தந்தையுடன் ஜஹனாரா தங்குவது என நாவல் விரிந்து பேரரசர் ஷாஜ கானின் மரணத்தில் முடிகிறது.

யுத்த களத்தில் வகுக்கப்படும் வியூகம் தான் வெற்றியைத் தீர்மானிக்கிறதுஎன்பதைஇளவரசன் தாரா உணரவேல்லை. தன்னை முன்னிலைப்படுத்தி போர் செய் அப்போது தான் சக்ரவர்த்தி ஷாஜஹான் செயலிழந்து கிடக்கிறார் என்ற அவுரங்கசீப்பின் பொய்யை முடியடிக்கவும், சக்ரவர்த்தியே தங்களுடன் இருக்கிறார்என்ற நம்பிக்கை வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கவும் முடியும் என்கிறார் ஷாஜகான். ஆனால் தாரா மறுத்துவிடுகிறான். அதே போல் " நம்முடைய பீரங்கிகள்எதிரிப்படையின் பெரும்பான்மையை நாசமாக்கிவிட்டன. இதுதான் தக்கதருணம்.நாம் முன்னேறலாம்.வெற்றி நம் பக்கமே" என்ற தளபதி கலீலுல்லாவின்வார்த்தைகளுக்கும் செவிசாய்க்க மறுத்து,"  முதலில் அவர்கள ஆக்கிரமிப்பைத் தொடங்கட்டும்.அப்போதுதான் நாம் எதிராக போரை நடத்த முடியும். அதுதான்
பாதுகாப்பானது" என்ற தளபதி ருஸ்தும்கானின் பேச்சை ஏற்கிறான். அதுஅவுரங்க
சீப்பிற்கே சாதகமாக அமைகிறது. அவுரங்கசீப்பை விட பலவிதங்களில் உயர்ந்தவனாக இளவரசர் தாரா இருந்த போதும் நெருக்கடியான நிலையில் தீர்க்கமான முடிவை எடுப்பதில் குழப்பம் கொள்கிறான். அதுவே அவன் வீழ்ச்சிக்குகாரணமாக அமைந்து விடுகிறது.

யுத்தத்தில் தோற்றவனின் மனைவிகளை அபகரிக்கும் போது தாராவின் இரண்டுமனைவிகள் தங்கள் செய்கையால் கவனம் பெறுகிறார்கள். ஒருத்தி முதல்மனைவியான ராணா தில். கடைசி வரை அவுரங்கசீப்பின் ஆசைக்கு இணங்காமல் தன்உயிரையேமாய்த்துக்கொள்கிறாள்." ராணா தில்லும் கைதிதான். ஆனால்அவளால் அவுரங்கசீபைத் தோற்கடிக்க முடிந்தது. அவனுடைய அதிகாரத்தை அவமதிக்க முடிந்தது. இச்சையை ஏளனம் செய்ய முடிந்தது. அகந்தையை முறியடிக்க முடிந்தது" என ஜஹனாரா பெருமை கொள்கிறாள்.

மற்றொருத்தி இரண்டாம் மனைவியான உதய்பூர் பேகம். இவள் ஆணைக்குப் பணிந்து அவுரங்கசீப் காமதொழுவத்தில் தளைக்கப்பட ஒப்புக்கொள்கிறாள்.

" இளவரசர் தாராவின் மனைவிகளில் ஒருத்தி என்ற பெயர். ஆனால்ஆரம்பத்திலிருந்த மோகம் கலைந்த பின்பு ஜனானாவின் உதிரிக் கூட்டத்தில் ஒருத்தியாகத்தான் அவரும் வைத்திருந்தார். என்ன, உணவுக்கும் உடைக்கும் யாசிக்கத் தேவையில்லாத வசதியான அடிமை. இளவரசருக்கு பிற பெண்களின் சரீரம் அலுக்கும்போது வந்து மேய்வதற்கான புல்வெளியாகத்தான் என் உடல் இருந்தது. அந்த மேச்சல் நிலத்தை இப்போது ஆலம்கீர் அவுரங்கசீப் ஆர்ஜிதம் செய்திருக்கிறார். இதிலும் என்ன புதிய மதிப்பு வந்துவிடப் போகிறது? எல்லாம் பழையது போலத்தான். எங்கள் வேதத்தில் ஒரு வசனம் இருக்கிறது. ' மனுஷர்கள்மண்ணிலிருந்து பிறக்கிறார்கள். மண்ணுக்கே திரும்பிப் போகிறார்கள்'.நான்வெறும் மண்ணாகத் திரும்பக் கூடாது. ஒரு பிச்சைக்கார யத்தீமாக நான் மடிந்துபோக விரும்பவில்லை " என்று தன் தரப்பை ஜஹனாராவிடம்
சொல்கிறாள். 

உண்மையில்  உதய்பூர் பேகம் இவ்வாறு பேசியிருப்பாளா எனத் தெரியவில்லை.ஆனால் வரலாற்றில் தென்படும் மெளன இடைவெளிகளையும், அதிகாரத்தின்
ஆணைக்கு பணிந்து  தங்கள் தரப்பைச் சொல்ல வாய்ப்பளிக்கப்படாமல் குரலற்றவர்களாய் இருக்கும் உதிரி பாத்திரங்களின் உணர்வுகளையும் பேசமுற்படுவதால் தான் சுகுமாரனின் இந்த புனைவு மதிப்பு மிக்கதாய் மாறுகிறது. எனக்கு ராணா தில்லையும் உதய்பூர் பேகத்தையும் சமமாகவே பவிக்க முடிகிறது.அவரவர் பார்வையில் அவரவருக்கான நியதிகள் இருக்கவே செய்கிறது.



பேரரசர் அவுரங்கசீப் வரலாற்றில் மதிப்பு மிக்கவராக இருந்தாலும் கூட இந்தநாவல்அவரை வில்லன் கதாபத்திரமாகவே சித்தரிக்கிறது. காரணம் இது ஜஹனாராவின் பார்வையில் சொல்லப்படும் நாவல். அவளுக்கு தன் சகோதரன் தந்திரம் மிக்க வெள்ளைப் பாம்பு தான். அந்த பாம்பின் விஸ்வரூபத்தால் அவளின்நம்பிக்கைக்கும் அன்பிற்கும் உரியவர்கள் அனைவரும் நிர்மூலம் ஆகிவிடுகிறார்கள். 

அரசியல் அதிகாரத்திற்கானப் போட்டி என்பது எல்லா காலத்திலும் ஒரே மாதிரிதான்இருக்கிறது. மன்னராட்சி, மக்களாட்சி என்று பெயர்களும் அதிகாரத்தைகைப்பற்றும்முறைகளும் மாறியிருக்கிறதே தவிர அதிகாரத்தில் இருக்கும் தலைவனின் மனநிலையும், அவனை சுற்றி துதிபாடும் அதன் மூலம் தன் அதிகாரத்தை வெளிப்படுத்தும் மனிதர்களின் மனநிலை எக்காலத்திலும் மாறவில்லை. அது மாறவும் மாறாது என்ற நிதர்சனத்தைத் தான் இந்த நாவலின் வழியே சுகுமாரனும் சொல்லி இருக்கிறார். அந்த வகையில் இது சமகால அரசியலை பேசும் நாவல் தான் என்றால் அது மிகையில்லை.




புதன், 14 மார்ச், 2018

மது



கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த அட்டப்பாடி வனப்பகுதி யில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர் மது கொல்லப்பட்டார். கொல்லப் படக் காரணம் அவர்  திருட்டுச் செயலில் ஈடுபட்டார் என்பதே.




மேற்கு மலைத்தொடர் வனப்பகுதியில் பவானி ஆற்றங்கரையிலுள்ள புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஊர்களில் ஒன்றான  கடுகுமண்ணா பழங்குடிக் கிராமத்தைச் சேர்ந்த  மல்லியின் மகன் மது. அடுத்த ஊரான சிண்டக்கியி ல் உள்ள ஆதிவாசிகளுக்கான பள்ளியில் நான்காம் வகுப்புவரை படித்தவர். மனநலம் குன்றியவர். அதனாலேயே ஊருக்குள்  இருப்பதை விரும்பாமல் பாறை இடுக்குகளிலும் சிறு குகைகளிலுமாகப் பதுங்கி வாழ்ந்தார். கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மரணம்டையும் நாள்வரை ஒன்பது ஆண்டுகளாகத் தாயோ சகோதர சகோதரிகளோ அவரைப் பார்த்ததுமில்லை. பசிக்கும்போது குகையைவிட்டு வெளியேறும் மது கடைகளிலிருந்து பொருள்களைத் திருடிக் கொண்டு குகைக்குத் திரும்புவார். இந்தப் பட்டினிக் களவுதான் அவரது உயிரைப் போக்கியது. அப்படி அவர் திருடியது ஆடம்பரப் பொருளையோ, பணத்தையோ, நாட்டின் பாதுகாப்பு ரகசியத்தையோ,  வங்கிப் பணத்தையோ அல்ல.துச்ச விலைக்கு நம்மால் வாங்க முடிகிற அரிசியும் வெங்காயமும் மஞ்சள் தூளும் மல்லித் தூளும். பசியாற்றிக் கொள்வதற்காக மது திருடியதாகச் சொல்லப்படும்  இவற்றுக்காக அந்த இளைஞர் ஊர்க் காரர்களால் கட்டி வைத்து அடிக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தாக்குதலால்   மரணம் நிகழ்ந்திருக்கிறது. ஆக இது ஊர் கூடிச் செய்த கொலை.

சொற்பக் காசுக்கு நம்மால் வாங்கி விடக் கூடிய பொருள்களை வாங்கக் காசில்லாததாலேயே மது அவற்றைத் திருட நேர்ந்திருக்கிறது. பொருளாதார நிறைவு பெற்றதாகச்  சொல்லப்படும் நாட்டில் பசிக்காக ஒருவனைத் திருடத் தூண்டியது யார்திருடப்பட்டதாகச் சொல்லப்பட்ட பொருள்கள் திருடனின் கையிலிருந்து பறிமுதல் செய்யப்படவில்லை. மாறாக அவன் தங்கியிருந்த இடத்திலிருந்து எடுத்து வரப்பட்டன. அவை திருட்டுப் பொருள்கள்தான் என்பதற்கு என்ன ஆதாரம்? இவற்றையெல்லாம் விடக் கோரமானது மது என்ற ஆதிவாசி இளைஞனை நாகரீக சமூகத்தை நடத்திய விதம். அவர் தங்கியிருந்த குகைக்கு ஊர்வலமாகச் சென்ற கூட்டம் அவனிடமிருந்த களவுப் பொருள்களை மீட்டன.  குற்றவாளியான மதுவின் கைகளில் கற்களும் பாறைத் துண்டுகளும் நிரப்பிய பையைக் கொடுத்து  முக்காலி என்ற இடத்தின் நாற்சந்திவரை நடக்க வைத்தது. ஊர்கூடி  உடுத்திருந்த வேட்டியை உருவி அவர் கைகளைக் கட்டிவைத்து அடித்தது. மனநலம் குன்றிய அந்த அப்பாவியை விசாரணை செய்து அந்தப் பெரும் நிகழ்வை கைப்பேசியில் படம் பிடித்து சமூக  வலைத்தளத்தில் பதிவேற்றி வெற்றியைக் கொண்டாடியது. கையில் சுமையுடனும் சரமாரியாக விழுந்த அடியாலும் துவண்டு போன மது ஜீப்பில் காவல்நிலையத்துக் கொண்டு  செல்லும் வழியிலேயே உயிரை இழந்தார். இந்தப் பாதகச் செயலில் ஈடுபட்டவர்கள் என்று தெரிய வந்த பதினாறு பேர் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.

'' இதுபோன்ற மிருகத்தனமான செயல்கள் அறிவார்ந்த சமூகத்துக்குப் பொருத்தமானது அல்ல; நாம் நாகரீக சமுதாயமாக மேம்பட்டு விட்டோம் என்கிறொம். ஆனால் நடந்தி ருக்கும் நிகழ்ச்சி நம்மை நாகரீகமானவர்களாகக் காட்டவில்லை. இது கேரளத்துக்கு அவமானம்''  மது என்ற ஆதிவாசி இளைஞரின் படுகொலையைக் கண்டித்து கேரள முதல்வர்  பிணராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையின் வாசகங்கள் இவை.ஏறத்தாழ கேரளத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள்,பொதுமக் கள் உட்பட எல்லாத் தரப்பினரும் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக மதுவின் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்திருக் கிறார்கள்; முதல்வர் சொன்னதுபோலவே அவமானத்தை உணர்ந்திருக் கிறார்கள்; அதன் கசப்பைப் பகிர்ந்து விழுங்கியிருக்கிறார்கள். 

இத்தகைய செயல்கள் அவமானத்துக்குரியவை என்று தெரிந்தே  கேரளத்தின் நாகரிக சமூகம் அவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக ஆதிவாசிகள் மீதான பொதுச்  சமூகத்தின் பார்வை மனித இணக்கத்துக்கு முற்றிலும் எதிரானது. ஆதிவாசிகள் தொடர்ந்து எல்லா வகையிலும் துன்புறுத்தப்படுகிறார்கள். அவற்றில் வெளித்தெரிய வந்த  சம்பவங்களில் ஒன்றுதான் மதுவின் படுகொலை. நாகரிக சமூகத்தின் கௌரவச் சின்னமான கைப்பேசிப் பழக்கம் இங்கு அதன் அநாகரீகச் செயலுக்குச் சாட்சியானது என்பது கவனத்துக்குரிய முரண். அடுத்தவரின் துயரையும் அந்தரங்கத்தையும் கேளிக்கைப் பொருளாக்கும் நவீன மன்நிலையின் உதாரணமும் கூட.

கொல்லப்பட்ட மதுவல்ல ; பொது சமூகமே திருட்டில் ஈடுபட்டது. அட்டப்பாடி வனப் பகுதியைச் சேர்ந்த ஆதிவாசி ஊர்களின் மேம்பாட்டுக்காக அரசு ஒதுக்கிய தொகை ஒவ்வொரு ஆதிவாசிக்கும் பிரித்துக் கொடுக்கப் பட்டிருக்கு மானால் ஒவ்வொரு ஆதிவாசிக்கும் குறைந்தது ஒன்றரை லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும் என்று புள்ளி  விவரங்கள் சொல்கின்றன. அது நடைமுறைப் படுத்தப்பட்டிருக்குமானால் நூறு ரூபாய்க்கும் குறைவான அற்பத் தொகை வரும் பொருள்களுக்காக அந்த இளைஞன் திருட்டில்  ஈடுபட்டிருக்க மாட்டான். அவனுக்குக் கிடைத்திருக்க வேண்டிய பல நூறு ரூபாய்களை அபகரித்த பொதுச் சமூகம்தானே பெரும் கொள்ளைக் கூட்டம்? படிப்பறிவோ உலக ஞானமோ  இல்லாத அந்த மக்கள் இதைக் கேட்கவில்லை; கேட்க அனுமதிக்கப்படவில்லை என்பதும் தெளிவு. நாகரிகம் என்பது சக மனிதனையும் தன்னைப்போலக் கருதும் பரந்த  மனநிலை என்பது மாறிவிட்டிருக்கிறது. அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் இவற்றில் ஏதோ ஒன்றின் அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது; அதை வலுக்குறைந்தவர்கள் மீது  பிரயோகிப்பதே நாகரிகம் என்ற புதிய அர்த்தத்தை சமூகம் கடைப்பிடிக் கிறது. இந்தக் குற்றக் கலாச்சாரத்தின்  இரைதான் மது.

மதுவின் மரணம் சமூக ஊடகங்களின் உபயத்தால் வெளியுலகுக்குத் தெரிய வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அனுதாபத்தைப் பெற்றது. ஆதிவாசிகள் மீதான அத்துமீறல் நடவடிக்கைகளில் முதன் முதலாகக் குற்றவாளிகளைச் சட்டப்படி தண்டிக்க உதவியது. நல்லது. ஆனால் இது தனித்த நிகழ்வு அல்ல. தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொடுமைகள்  அதிகம் தெரிவதில்லை. இன்று மதுவின் படுகொலைக்குக் கண்டனம் தெரிவிக்கும் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இந்த அத்துமீறலில் பங்கு இருக்கிறது. அவர்களை உள்ளிட்ட்  பொதுச் சமூகத்தின் பார்வையை அவர்களே உருவாக்கினார்கள். ஆதிவாசி உதாசீனப்படுத்தப்படும் சூழலை அவர்களே உருவாக்கினார்கள். காரணம், அரசியல்.கேரளத்தின்  மக்கள் தொகையில் ஒரு சதவீதத்துக்கும் குறைவு பழங்குடிகளின் தொகை. அவர்கள் ஓட்டு வங்கிகள் அல்லர். எனவே அவர்கள் சார்பில் சிந்தப் படும் கண்ணீர் போலியானது. அவர்கள் மேம்பாட்டுக்காக பல் கோடி ரூபாய்கள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் இன்னும் ஆதிவாசிகள் வறுமைக் கோட்டுக்குக் கீழேயே இருக்கிறார்கள். அந்தத் தொகை என்ன  ஆயிற்று? அதை அந்த அப்பாவிகள் கேட்பதில்லை. வனவாசிகளான அவர்களின் நிலம் அவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்டது. நிலத்தை இழந்த அவர்கள் வாழ்வு தடுமாற்றத்துக்குள்ள்ளானது. அவர்களுக்கான நிலம் மீட்டெடுக்கப்படவே இல்லை. தொடர்ந்து போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டாலும் பலன் விளையவில்லை. வாழ்விடமும்  பறிபோய், ஜீவ ஆதாரமான கானக விளைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமையும் இழந்தவர்கள் பசிக்காகத் திருடுவது எப்படிக் குற்றமாகும்?

சற்று விளக்கமாகவே பார்க்கலாம். 1975 ஆம் ஆண்டு பிறரால் கையகப் படுத்தப்பட்ட பழங்குடியினரின் நிலங்களைத் திரும்பப்பெற சட்ட முன்வரைவு உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்தே அரசியல் கட்சிகளும் அவ்வபோது அதிகாரத்தில் இருந்த அரசுகளும் பொது சமூகமும் ஆதிவாசிகளை ஏமாற்றத் தொடங்கின. வரைவு தயாரிக்கப்பட்டு பதினோரு  ஆண்டுகளுக்குப் பின்னரே அது சட்டமாக இயற்றப்பட்டது. அதன் படி 1960 - 82 ஆண்டுகளுக்கு இடையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்டு ஆதிவாசிகளுக்கு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் சட்டத்தை அமல்படுத்துவதில் நடை முறைச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி அரசு அதைக் கிடப்பில் போட்டது. பழங்குடித் தலைவர்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். எவ்வளவு விரைவில் சட்டத்தை அமல்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவில் செய்ய வேண்டும் என்று நீதிமன்றமும் தெரிவித்தது. ஆனால் பொதுச் சமூகத்தின் நலன் கருதி 1992 சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆதிவாசிகளிமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டவற்றில் இரண்டு ஹெக்டேருக்கு அதிகமான பரப்புள்ள நிலத்தை மட்டுமே மீட்கலாம் என்று திருத்தப்பட்டது. இது ஆதிவாசிகளை ஏய்ப்பதற்கான தந்திரம். இரண்டு ஹெக்டேருக்கு அதிகமுள்ள நிலங்களைக் குடியேற்றக்காரர்கள் துண்டுபோட்டு உறவினர் களுக்கும் பினாமிகளுக்கும் பிரித்துக் கொடுத்தனர். பொதுச் சமூகம் சட்டத்தை மிகச் சாமர்த்தியமாக வளைத்த சம்பவம் இது. தொடர்ந்து வழக்குகளும் எதிர் வழக்குகளுமாகக் காலம் கடந்தது. கானக மண்ணே தங்களது வாழ்வும் வளமும் என்று நம்பும் பழங்குடியினர் கை பிசைந்து நின்றனர். 1999 இல் முன்னர் தீர்மானித்தபடியே இரண்டு ஹெக்டேருக்கும் அதிகமான நிலத்தை மீட்டு ஆதிவாசிகளுக்குப் பகிர்ந்து அளிப்பது என்ற அரசின் முடிவுக்கு வேறு வழியின்றி ஆதிவாசிகளும் ஒப்புக் கொண்டனர். ஆனால் அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. தங்கள் கோரிக்கைக் காக அதிவாசிகள் தொடர்ந்து  போராடினார்கள். வயநாட்டிலுள்ள முத்தங்ங, ஆரளம் , செங்ஙரா, அரிப்பா, பொ ட்டஞ்சிற என்று வனப் பகுதிகளில் தொடர்ந்த போராட்டங்கள் அவ்வப்போது இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அரசுகளால் முறியடிக்கப்பட்டன; புறக்கணிக்கப்பட்டன.

பழங்குடி மக்களுக்குரிய நிலத்தை அவர்களுக்கு அளிப்போம் என்று கேரளத்தின் இரு முன்னணிகளும் வாக்குறுதி அளித்துக் கொண்டே இருக்கின்றன. தங்களுக்கான குடிமைச்  சலுகைகள் பாதிக்கப்படும்போது ஓலமிடும் மலையாளிப் பொதுச் சமூகம் ஆதிவாசிகளுக்கான மண்¨ணை ஏன் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்புவதில்லை. அப்படிக் கேள்வி கேட்பது தங்களுக்குப் பாதகமாகும் என்ற சுயநலமே அந்தக் கபட மௌனத்துக்குக் காரணம். ஒருவேளை சிறிய அளவிலாவது ஆதிவாசி பூமி அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற எண்ணமே காரணம் என்று வைத்துக் கொண்டாலும் இன்னொரு கேள்வி எழுகிறது. அப்படி நிலத்தைப் பெற்ற பிறகும் ஆதிவாசிகள் ஏன்  இன்னும் வறுமையில் பிடியில் சிக்கியிருக்கிறார்கள்அந்த வறுமையின் அடையாளம்தானே கொல்லப்பட்ட மது என்ற ஆதிவாசி இளைஞர்? இந்தக் கேள்விகள் அபாயகரமானவை. அவற்றுக்குக் கிடைக்கும் பதில்கள் அப்பாவிப் பழங்குடிகளைப் பொதுச் சமூகம் சுரண்டி வாழ்கிறது என்ற உண்மையை அம்பலாமாக்கும். இது கேரளத்தின் ஆதிவாசிகளின்  நிலை மட்டுமல்ல. இந்தியா முழுவதிலும் ஆதிவாசிகள் எதிர்கொள்ளும் அவலம். இந்த நூற்றண்டிலும் நாகரீகமடைந்த பொதுச் சமூகம் அவர்களைக் கீழானவர்களாகவே கருதுகிறது. தனக்குச் சமமானவர்களாக அவர்கள் ஆகி விடக்  கூடாது என்று அஞ்சுகிறது. அதனாலேயே அவர்களிடமிருந்து மண்ணைப் பிடுங்குகிறது; உணவைப் பறிக்கிறது; உரிமைகளைக் களவாடுகிறது; உயிரையும் எடுக்கிறது. இந்தச் செயல்களுக்கெல்லாம் நாகரீகம் என்று பெயரும் சொல்லிக் கொள்கிறது. இந்த நாகரீக மேம்பாட்டின் இப்போதைய களப் பலி அட்டப்பாடி மது. நாளை இன்னொருவராக இருக்கலாம். ஏனெனில் அந்தக் காட்டுமிராண்டிகளை அழிப்பதுதானே நாகரீக வளர்ச்சி.

@

 அந்திமழை மார்ச் 2018 இதழில் வெளிவந்திருக்கும் கட்டுரை.
சிற்பம்: டாவின்சி சுரேஷ் , கொடுங்ஙல்லூர்.