செவ்வாய், 27 மார்ச், 2018

பெருவலி குறித்து...







பெருவலி ’ நாவல் பற்றி சிவபிரசாத் எழுதியிருக்கிறார். இந்த நாவல் குறித்த முதல் பதிவு இதுவே. சிவபிரசாத்துக்கு மிக்க நன்றி. 

அவரது வலைப் பக்கம் இது:https://sivaprasadpaarvaikal.blogspot.in/?m=1


       ஜஹனாரா பேகம் : ராம்ராஜியத்தின் பெருவலி




என்னுடைய பள்ளி நாட்களில்  தமிழுக்கு அடுத்து நான் விரும்பி வாசித்தது வரலாற்று பாடம். குறிப்பாக முகலாய சாம்ராஜ்யத்தைப் பற்றிய பாடப்பகுதிகள்.வெற்று தகவல்களை வறட்டு மொழியில் சொல்லும் பாடநூலை மதிப்பெண்ணைத்தாண்டி புதிய உலகத்தை தெரிந்து கொள்ளும் உத்வேகத்தோடு வாசித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை. கல்லூரி காலத்தில் மதனின் "வந்தார்கள் வென்றார்கள்" வாசித்த போதும் அதே குதுகலம். 

முகலாயர்கள் வரலாற்றில் அப்படி என்ன இருக்கிறது. எது வசீகரிக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் பாபரில் தொடங்கி அவுரங்கசீப் வரையான மாபெரும் சாம் ராஜ்ஜியத்தின் தொடர்ச்சி, அதிகாரத்தை கைப்பற்ற நடத்திய பெரும்யுத்தங்கள், தலைமுறை தோறும் வரும் பேரழகிகள், தங்கள் புகழை நிலைபெறவைக்க ஸ்தாபித்த நகரங்கள், அரண்மனைகள், மசூதிகள், கல்லரைகள் என்று பிரமாண்டங்களின் கவர்ச்சியும், அரியணை ஆசையில் நிகழ்ந்த போட்டிகளும்,சூழ்ச்சிகளும், சகோதர யுத்தங்களும் புனைக்கதைகளுக்கு நிகரான சுவாரசியம்மிக்கவை. அந்த  வகையில் " பெருவலி" முகலாயர்கள் பற்றிய புனைவு என்பதால்வாசிக்கத் துவங்கினேன்.

கவிஞர் சுகுமாரனின் முன்னுரைகளுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். தன் அனுபவப் பரப்பிலிருந்து மெல்ல துவங்கி தான் எழுத எடுத்துக் கொண்ட படைப்பின் மையத்தை மின்னல் வெட்டில் வெளிச்சம் பாயிச்சுவார். அது அந்த படைப்பை வாசிக்க பெரும்திறப்பாக இருக்கும். இப்படி சுகுமாரனின் முன்னுரையால்உந்தப் பட்டு நிறைய கிளாசிக் நாவல்களைப் படித்திருக்கிறேன். இன்று அவரேகிளாசிக் தன்மையுள்ள கதையை எடுத்துக் கொண்டு நாவல் படைத்துள்ளார்.

இந்த நாவல் இரண்டு பகுதியாக எழுதப்பட்டுள்ளது. முதல் பகுதி முகலாயபேரரசின்அக்பர் காலம் முதல் பேரரசர் ஷாஜகான் காலம் வரை மூன்றுதலைமுறை மன்னர்களிடம் பணி செய்த பானிபட் என்ற வயது முதிர்ந்த ஆணின் (நபும்சகம்) பார்வையில் சொல்லப்பட்டுள்ளது. இந்த பானிபட் இளவரசிஜஹனாராவின் நம்பிக்கைக்கு உரியவனாகவும், அரசியல் சதுரங்கத்தில் காய்கள் எவ்வாறு நகர்த்தப்படும் என்பதை தன் அனுபவங்களால் யூகிக்க தெரிந்தவனாகவும்இருக்கிறான்.இவன்கற்பனை பாத்திரம் என்றாலும் எனக்கு ராமாயணத்தில் வரும்கூனியை ஏதோ ஒருவிதத்தில்  ஞாபகப்படுத்துகிறான்.  இவன் பார்வையில்தான்
நாவல் துவங்குகிறது. 

பேரரசர் ஜஹாங்கீர் பெயரில் நூர் மஹல் ஆட்சி செய்து கொண்டிருக்கிறாள்.
அதிகாரம் தன் கைகளுக்குள்ளேயே இருக்க சூழ்ச்சி செய்து தக்காணத்தில் ஷாஜ கானையும் அவன் குடும்பத்தையும் சிறை பிடிக்கிறாள். அந்த சூழ்ச்சியைதகர்த்து வெற்றி வீரனாய் ஷாஜகான் ஆட்சியில் அமர்வதில் ஆரமித்து, அவரின்அன்பு நாயகிமும்தாஜ் பேகம் பதினான்காவது பிரசவத்தின் போது அதிக ரத்தபோக்கால் இறந்ததுவரையான கதையைச் சொல்கிறான். 

“அதிகாரத்துக்காக மனிதர்கள் என்னவெல்லாம் செய்யக் கூடுமென்பதை மூன்று தலைமுறைகளாகப் பார்த்திருக்கிறேனே! பணிவு காட்டுவார்கள். நயந்து பேசுவார்கள், பாசம் பொழிவார்கள், சதி செய்வார்கள், உறவுபாராட்டுவார்கள். உறவு பாராட்டியவர்களுக்கே பகையாவார்கள்.பகைவனுக்கு நட்பாவர்கள். வாளால் வெட்டிக் கொல்வார்கள். வெற்றிஈட்டுவார்கள். வெற்றி பெற்றதும் எல்லாம் மறப்பார்கள். எல்லாரையும்அடக்கி ஆள்வார்கள். தனது ஆட்சி முடியாதது என்று கனவு காண்பார்கள்.அந்த கனவிலேயே புதையுண்டுகிடப்பார்கள்”.

“துணிச்சல் தனியானதல்ல. ஒரு பகுதி நுண்ணறிவு, ஒரு பகுதி அடங்காமை,ஒரு பகுதி பயம் எல்லாம் சேர்ந்தது தான் துணிச்சல்”  என பானி பட் என்றஅடிமையின் மன ஓட்டமாக செல்லப்படும் விஷயங்கள் அனைத்திலும் 
சுகுமாரன் என்ற ஆளுமையின் நுண்ணுணர்வு  மற்றும்  கவித்துவத் தெறிப்பு களையும் உணரமுடிகிறது. அது நாவலை இன்னும் மனதிற்கு நெருக்கமான பிரதியாகமாற்றுகிறது. 

இரண்டாம் பகுதி ஜஹனாராவின் பார்வையில் சொல்லப்படுகிறது. பதினான்கு
வயதில் அரசியல் விவகாரங்களில் அலோசனை சொல்லும் நுண்ணறிவு. தர்பாரில்தனி ஆசனம். மூன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் தெரிந்திருந்தன. கவிதையும்
காவியமும் வேதங்களும் புராணங்களும்  அறிந்திருந்தாள். மதநூல்களைப் பயின்றிருந்தாள். பாடவும் ஆடவும் கற்றிருந்தாள். கட்டடக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தாள். கப்பல்களும் தனி மாளிகையும் ததும்பி வழியும் கஜானாவும் பணிவிடை செய்ய அடிமைகளையும் பெற்றிருந்தாள். அரச குடும்பத்துப் பெண்களில் யாரையும் விட செல்வமும் செல்வாக்கும் அவளுக்கு இருந்தன. எல்லாம் இருந்தன. ஆனால் எது இருந்தால் இவையெல்லாம் மேலானவை ஆகுமோ அந்த ஒன்று அவளுக்குக் கிடைக்கவில்லை. காரணம்அவள் பெண்ணாக இருந்தாள். துன்புறுத்தும் இந்த உண்மை போதாதாஜஹனாராவை மையமாக்கி 
எழுத? எனத் தன் பின்னுரையில் சுகுமாரன்குறிப்பிடுகிறார். 

அக்பர் காலத்தில் அரச குடும்பத்து பெண்கள் திருமணம் செய்ய தடைவிதித்திருந்தார். காரணம் தன் வாரிசுகளோடு, மருமகன்களும் அரியணைபோட்டியில் ஈடுபடக் கூடும் என்பதால் இந்த தடை நீடித்தது. எனவே அரண்மனைபெண்கள் தன் தந்தை, சகோதரன் என அதிகார மையங்களோடு அன்பு, விசுவாசம்,தியாகம் ஆகியவைகள் மூலமே தனக்கான முக்கியதூவத்தையும்,அதிகாரத்தையும் பெற முடிந்தது. 
ஜஹனாரா தன் தந்தையையும் சகோதரன்தாராவையும்  தன் சுயநலம் கடந்து நேசித்தாள்.

திருமணம் செய்யும் உரிமை மறக்கப்பட்டாலும் எதிர்பாலினத்தின் மேல் ஏற்படும்இச்சைகள் இல்லாமலாப் போய்விடும். ஜஹனாராவின் காதல் பற்றி வரலாற்றில் பல்வேறான யூகங்கள் நிழவுகிறது. இந்த யூகங்களிலிருந்து தனக்கு சரி எனத் தோன்றியதைத் தேர்வு செய்தது குறித்த சுகுமாரனின் பார்வை இவை.

 “ஜாஷஹானுக்கு அணுக்கமான தளபதி நவ்ஜத்கானை காதலனாகச் சித்தரிக்கிறார் இந்து சுந்தரேசன். ஆனால் ஜஹனாரா நவ்ஜத் கானை “காற்று வீசும் திசையில் சாயும் சிக்கமோர் மரம்” என்று துச்சமாகவே மதிப்பிடுகிறாள். தன் முப்பதாவது பிறந்த நாளில் தீ விபத்துக்கு உள்ளாகிறாள். அவளுக்கு மருத்துவம் பார்த்த காப்ரியேல் பெளட்டன் என்ற ஆங்கிலேயர் மீது காதல் கொண்டாள் என ருச்சிர் குப்தா சொல்கிறார். ஆனால் அவர் பதில் உதவியாக வங்காளத்தில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிலம் பெற்றுக் கொள்கிறார். ஷாஜஹானுக்கும் ஜஹனாராவுக்கும் இடையில் பிறழ் உறவு இருந்தது என்று எழுதுகிறார் இத்தாலி பயணியான நிக்கோலோ மனூச்சி. அதே காலக் கட்டத்தில் வந்த ஃபிரான்சைச் சேர்ந்த ஃப்ரான்ஸீவா பெர்னியர் மனூச்சியின் கருத்தை மறுக்கிறார்” என பல்வேறு கோணங்களைஉள்வாங்கி,துலேர் என்ற சிற்றரசன் மேல் ஜஹனாராவிற்கு காதல்
இருந்ததாக எழுதுகிறார். இருவரும் பேசிக் கொள்ளும் தருணங்கள் மிக குறைவாகஇருந்த போதிலும் அவனை நினைத்து ஜஹனாரா ஏங்கும்  காதல் தருணங்களைசுகுமாரன் கவிதை மொழியில் எழுதிச் செல்கிறார். 

சகோதரர்கள் தாரா, அவுரங்கசீப் இடையேயான அதிகார யுத்தமும், வெற்றி பெற்றஅவுரங்கசீப் தன் தந்தையை ஆக்ரா கோட்டையில் சிறை வைப்பது, தன்பிரியத்துக்குரிய தந்தையுடன் ஜஹனாரா தங்குவது என நாவல் விரிந்து பேரரசர் ஷாஜ கானின் மரணத்தில் முடிகிறது.

யுத்த களத்தில் வகுக்கப்படும் வியூகம் தான் வெற்றியைத் தீர்மானிக்கிறதுஎன்பதைஇளவரசன் தாரா உணரவேல்லை. தன்னை முன்னிலைப்படுத்தி போர் செய் அப்போது தான் சக்ரவர்த்தி ஷாஜஹான் செயலிழந்து கிடக்கிறார் என்ற அவுரங்கசீப்பின் பொய்யை முடியடிக்கவும், சக்ரவர்த்தியே தங்களுடன் இருக்கிறார்என்ற நம்பிக்கை வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கவும் முடியும் என்கிறார் ஷாஜகான். ஆனால் தாரா மறுத்துவிடுகிறான். அதே போல் " நம்முடைய பீரங்கிகள்எதிரிப்படையின் பெரும்பான்மையை நாசமாக்கிவிட்டன. இதுதான் தக்கதருணம்.நாம் முன்னேறலாம்.வெற்றி நம் பக்கமே" என்ற தளபதி கலீலுல்லாவின்வார்த்தைகளுக்கும் செவிசாய்க்க மறுத்து,"  முதலில் அவர்கள ஆக்கிரமிப்பைத் தொடங்கட்டும்.அப்போதுதான் நாம் எதிராக போரை நடத்த முடியும். அதுதான்
பாதுகாப்பானது" என்ற தளபதி ருஸ்தும்கானின் பேச்சை ஏற்கிறான். அதுஅவுரங்க
சீப்பிற்கே சாதகமாக அமைகிறது. அவுரங்கசீப்பை விட பலவிதங்களில் உயர்ந்தவனாக இளவரசர் தாரா இருந்த போதும் நெருக்கடியான நிலையில் தீர்க்கமான முடிவை எடுப்பதில் குழப்பம் கொள்கிறான். அதுவே அவன் வீழ்ச்சிக்குகாரணமாக அமைந்து விடுகிறது.

யுத்தத்தில் தோற்றவனின் மனைவிகளை அபகரிக்கும் போது தாராவின் இரண்டுமனைவிகள் தங்கள் செய்கையால் கவனம் பெறுகிறார்கள். ஒருத்தி முதல்மனைவியான ராணா தில். கடைசி வரை அவுரங்கசீப்பின் ஆசைக்கு இணங்காமல் தன்உயிரையேமாய்த்துக்கொள்கிறாள்." ராணா தில்லும் கைதிதான். ஆனால்அவளால் அவுரங்கசீபைத் தோற்கடிக்க முடிந்தது. அவனுடைய அதிகாரத்தை அவமதிக்க முடிந்தது. இச்சையை ஏளனம் செய்ய முடிந்தது. அகந்தையை முறியடிக்க முடிந்தது" என ஜஹனாரா பெருமை கொள்கிறாள்.

மற்றொருத்தி இரண்டாம் மனைவியான உதய்பூர் பேகம். இவள் ஆணைக்குப் பணிந்து அவுரங்கசீப் காமதொழுவத்தில் தளைக்கப்பட ஒப்புக்கொள்கிறாள்.

" இளவரசர் தாராவின் மனைவிகளில் ஒருத்தி என்ற பெயர். ஆனால்ஆரம்பத்திலிருந்த மோகம் கலைந்த பின்பு ஜனானாவின் உதிரிக் கூட்டத்தில் ஒருத்தியாகத்தான் அவரும் வைத்திருந்தார். என்ன, உணவுக்கும் உடைக்கும் யாசிக்கத் தேவையில்லாத வசதியான அடிமை. இளவரசருக்கு பிற பெண்களின் சரீரம் அலுக்கும்போது வந்து மேய்வதற்கான புல்வெளியாகத்தான் என் உடல் இருந்தது. அந்த மேச்சல் நிலத்தை இப்போது ஆலம்கீர் அவுரங்கசீப் ஆர்ஜிதம் செய்திருக்கிறார். இதிலும் என்ன புதிய மதிப்பு வந்துவிடப் போகிறது? எல்லாம் பழையது போலத்தான். எங்கள் வேதத்தில் ஒரு வசனம் இருக்கிறது. ' மனுஷர்கள்மண்ணிலிருந்து பிறக்கிறார்கள். மண்ணுக்கே திரும்பிப் போகிறார்கள்'.நான்வெறும் மண்ணாகத் திரும்பக் கூடாது. ஒரு பிச்சைக்கார யத்தீமாக நான் மடிந்துபோக விரும்பவில்லை " என்று தன் தரப்பை ஜஹனாராவிடம்
சொல்கிறாள். 

உண்மையில்  உதய்பூர் பேகம் இவ்வாறு பேசியிருப்பாளா எனத் தெரியவில்லை.ஆனால் வரலாற்றில் தென்படும் மெளன இடைவெளிகளையும், அதிகாரத்தின்
ஆணைக்கு பணிந்து  தங்கள் தரப்பைச் சொல்ல வாய்ப்பளிக்கப்படாமல் குரலற்றவர்களாய் இருக்கும் உதிரி பாத்திரங்களின் உணர்வுகளையும் பேசமுற்படுவதால் தான் சுகுமாரனின் இந்த புனைவு மதிப்பு மிக்கதாய் மாறுகிறது. எனக்கு ராணா தில்லையும் உதய்பூர் பேகத்தையும் சமமாகவே பவிக்க முடிகிறது.அவரவர் பார்வையில் அவரவருக்கான நியதிகள் இருக்கவே செய்கிறது.



பேரரசர் அவுரங்கசீப் வரலாற்றில் மதிப்பு மிக்கவராக இருந்தாலும் கூட இந்தநாவல்அவரை வில்லன் கதாபத்திரமாகவே சித்தரிக்கிறது. காரணம் இது ஜஹனாராவின் பார்வையில் சொல்லப்படும் நாவல். அவளுக்கு தன் சகோதரன் தந்திரம் மிக்க வெள்ளைப் பாம்பு தான். அந்த பாம்பின் விஸ்வரூபத்தால் அவளின்நம்பிக்கைக்கும் அன்பிற்கும் உரியவர்கள் அனைவரும் நிர்மூலம் ஆகிவிடுகிறார்கள். 

அரசியல் அதிகாரத்திற்கானப் போட்டி என்பது எல்லா காலத்திலும் ஒரே மாதிரிதான்இருக்கிறது. மன்னராட்சி, மக்களாட்சி என்று பெயர்களும் அதிகாரத்தைகைப்பற்றும்முறைகளும் மாறியிருக்கிறதே தவிர அதிகாரத்தில் இருக்கும் தலைவனின் மனநிலையும், அவனை சுற்றி துதிபாடும் அதன் மூலம் தன் அதிகாரத்தை வெளிப்படுத்தும் மனிதர்களின் மனநிலை எக்காலத்திலும் மாறவில்லை. அது மாறவும் மாறாது என்ற நிதர்சனத்தைத் தான் இந்த நாவலின் வழியே சுகுமாரனும் சொல்லி இருக்கிறார். அந்த வகையில் இது சமகால அரசியலை பேசும் நாவல் தான் என்றால் அது மிகையில்லை.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக