சனி, 29 அக்டோபர், 2011

திருவுடை மன்னரைக் காணில்...



ஊடகங்கள் மூலம் பரபரப்புக்குள்ளாகியிருக்கும் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி ஆலயம் தொடர்பான செய்திகளைப் படிக்கும், பார்க்கும், கேட்கும் போதெல்லாம் பின்வரும் காட்சி நினைவில் ஓடிக் கொண்டிருக்கும்.

கருவூல ரகசியம் வெளியாவதற்குச் சில மாதங்கள் முன்பு பத்மநாப சுவாமி கோவிலுக்குப் போயிருந்தேன். ஊரிலிருந்த வந்திருந்த தங்கையும் அவள் குழந்தையும் சுவாமி தரிசனம் செய்ய ஆசைப்பட்டிருந்தார்கள். தரிசனம் முடிந்ததும் ஆலய வளாகத்துக்குள்ளிருக்கும் குதிரை மாளிகை அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்றேன். திருவிதாங்கூர் மன்னராட்சியின் பெருமைகளைச் சொல்லும் அருங் காட்சியகம். வரலாற்றுச் சின்னங்களும் பண்பாட்டு அடையாளங்களும் கலைப் பொருட்களும் நேர்த்தியாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான அறைகள். பழங்காலக் கட்டக் கலையும் சிற்பக் கலையும் இணைந்த குதிரை மாளிகை அரண்மனை இன்றைய பார்வையில் ஓர் அற்புதம். அதன் மேல் தளத்திலிருக்கும் மாடத்திலிருந்து பார்த்தால் ஆலயத்தின் கோபுரம் தென்படும். அந்த மாடத்தில் அமர்ந்துதான் இசை விற்பன்னரான மகாராஜா சுவாதித் திருநாள் கீர்த்தனைகளை இயற்றி இருக்கிறார். நுழைவுக் கட்டணம் செலுத்திக் காத்திருந்த பார்வையாளர்களான எங்களை வழிகாட்டியான ஒரு பெண்மணி ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்றார். ஒவ்வொரு காட்சிப் பொருளின் முன்னாலும் நின்று அவற்றின் வரலாற்றையும் பண்பாட்டு முக்கியத்துவத்தையும் விளக்கினார். ஞானத்தின் பெருமிதம் ததும்பும் குரலில் பல மொழிகளில் விளக்கங்களைச் சொன்னார். துல்லியமான ஆங்கிலம். தெளிவான இந்தி, தீர்க்கமான மலையாளம், கொச்சைத் தமிழ் ஆகிய இந்திய மொழிகளிலும் கூட்டத்திலிருந்த சில வெளிநாட்டுப் பயணிகளுக்காக ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளிலும் அநாயாசமாக விளக்கமளித்துக் கொண்டிருந்தார்.

மூன்று ஆண்டுக் காலம் பத்மநாப சுவாமியின் அண்டை வீட்டுக்காரனாகக் குடியிருந்திருக்கிறேன். அவ்வப்போது உறவினர்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் ஆலயப் பிரவேசம் செய்து வழிகாட்டியாகச் சுற்றிக் காட்டி விளக்கியிருக்கிறேன். அதற்காக படித்தும் கேட்டும் விவரங்கள் சேகரித்திருந்திருக்கிறேன். அந்தத் தகவல்களை விடவும் விரிவான அறிவை வழிகாட்டிப் பெண் அளித்தார். திருவிதாங்கூர் மன்னர்களோ அல்லது மகாராணிகளோ கூட அவரளவுக்கு அந்த வரலாற்றை விளக்கிச் சொல்ல முடியாது என்ற பிரமிப்பு ஏற்பட்டது. எல்லாம் முடிந்து பார்வையாளர் கூட்டம் வாசலுக்கு வந்தபோது வழிகாட்டி ஓர் அறிவிப்பைச் செய்தார். 'இந்த அருங்காட்சியகம் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. அதற்குப் பெரிய நிதி ஆதாரங்கள் இல்லை. எனவே என் போன்ற கைடுகளுக்குச் சொற்பத் தொகையே சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது. நீங்கள் அளிக்கும் சிறு தொகை கூட எனக்குப் பேருதவியாக இருக்கும். உங்களால் உதவ முடியுமா? ' இதை அவர் ஆங்கிலத்தில் கேட்டார். அதனால் கௌரவக் குறைச்சலாகத் தோன்றவில்லை. பார்வையாளர்கள் எங்களால் முடிந்ததை அளித்தோம். அந்தத் தொகை நிச்சயமாக அறக்கட்டளை அவருக்கு அளிக்கும் ஊதியத்தை விடக் குறைவானதல்ல.

இந்தியாவிலேயே மிகப் பெரும் பணக்காரக் கடவுள் திருவனந்தபுரத்தில் வீற்றிருக்கும் அனந்த பத்மநாபசுவாமிதான் என்ற தகவல் தெரிய வந்தபோது மேற்சொன்ன காட்சி இன்னும் தெளிவாக மனதில் படர்ந்தது. இரண்டுக்கும் இடையிலுள்ள முரணைப் பற்றி யோசிக்கத் தூண்டியது.

த்மநாபசுவாமியின் சொத்து மதிப்பு இப்போது உலகம் அறிந்த ரகசியம். நூற்றி முப்பத்து ஆறு ஆண்டுகளாகத் திறக்கப்படாமலிருந்த ஆறு கருவூலங்கள் உச்ச நீதி மன்றத்தின்ஆணைப்படி திறக்கப்பட்டதும் வெளியான இந்த ரகசியம் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திருக்கிறது. மிகப் பெரிய செல்வந்தரைத் தரிசிக்கும் ஆர்வத்தில் பக்தர்களும் பயணிகளும் ஆலய வாசலில் வரிசையில் காத்து நிற்கிறார்கள். இன்றைய கணக்கில் இந்தப் பொக்கிஷங்களின் மதிப்பு தோராயமாக ஒருலட்சம்கோடி ரூபாய். இவை எல்லாம் நூற்றாண்டுகளின் பழைமை வாய்ந்தவை. தொல்லியல் மதிப்பை வைத்துப் பார்த்தால் இவற்றின் உண்மையான மதிப்பு பல மடங்கு அதிகம்.

நூற்றாண்டுகளாகத் திரட்டப்பட்ட இந்தச் செல்வம் பத்மநாபசுவாமிக்கு மன்னர்களாலும் சாதாரணக் குடிமக்களாலும் அளிக்கப் பட்டவை. திருவிதாங்கூர் அரசு விரிவாக்கம் செய்யப்பட்டபோது அதற்குள் அடக்கப்பட்ட சிற்றரசர்களிடமிருந்து பறிமுதல் செய்யப் பட்டவை. திருவிதாங்கூர் அரசின் வரி விதிப்பால் குடிமக்களிட மிருந்து வசூலிக்கப்பட்டவை. கேரளத்துடன் குறிப்பாக, திருவிதாங்கூருடன் வாணிபத் தொடர்பிலிருந்த வெளிநாட்டு வணிகர்களிடமிருந்து கப்பமாகவும் பொருட்கள் மீதான சுங்கமாகவும் பெறப்பட்டவை. இப்படிச் சொல்வது வியப்பை ஏற்படுத்தலாம். கோவிலுக்குக் காணிக்கைகளும் தட்சணைகளும்தானே அளிக்கப்படும்? வரியும், சுங்கமும் எப்படி ஆலயத்துக்கு அளிக்கப்பட முடியும் என்ற கேள்விகள் எழும். விடை திருவிதாங்கூர் வரலாற்றில் இருக்கிறது. புராணங்களில் திருவனந்தபுரத்தைப் பற்றிச் சொல்லப்படும் குறிப்புகள் நம்பிக்கைக் கதைகள். ஆதார வலுவில்லாதவை. ஆகவே, அவற்றை ஒதுக்கி வைத்து விட்டுப் பார்க்கலாம்.

கேரளத்தின் தெற்குப் பகுதியில் இருந்த சிற்றரசுகளில் அளவில் பெரிய நாடு வேணாடு. சேரமான் பெருமாளின் பரம்பரை என்று சொல்லப்படும் மன்னர்களின் ஆட்சி நடந்து வந்தது. வேணாட்டின் முக்கிய நகரமாகத் திருவனந்தபுரமும் இதயமாக அனந்தபத்மநாபசுவாமி ஆலயமும் கருதப்பட்டன.

சங்க இலக்கிய நூலான 'பதிற்றுப் பத்'தில் இடம் பெறும் குறிப்பே திருவனந்த புரத்தைப் பற்றிய முதல் வரலாற்றுச் சான்று. பின்னர் சிலப்பதிகாரத்தில் அனந்தபத்ம நாப சுவாமி ஆலயம் குறிப்பிடப்படுகிறது. கோவலன் படுகொலை செய்யப்பட்ட சீற்றத்தில் கண்ணகி மதுரையை எரிக்கிறாள். நகரம் அழிகிறது. கோவலனுக்கும் கண்ணகிக்கும் அடைக்கலம் கொடுத்த இடையர் குலப்பெண் மாதரி தங்களது குல தெய்வம் திருமாலிருக்கும் இடமான அனந்தன் காட்டுக்கு வருகிறாள் என்பது முதல் குறிப்பு. கனக விசயர்களுடன் போர் தொடுக்க ஆயத்தமாகும் சேரன் செங்குட்டுவன் படையெடுப்புக்கு முன்பு எல்லா ஆலயங்களிலிருந்தும் பிரசாதம் பெறுகிறான். அனந்தன் காட்டிலிருக்கும் திருமாலின் பிரசாதமும் அதில் ஒன்று என்பது இரண்டாவது குறிப்பு. இவை இரண்டையும் கடந்த சான்றுகள் பக்தி இயக்கக் காலத்தில் முன்வைக்கப்பட்டவை. நம்மாழ்வாரின் பாசுரங்களில் பத்மநாப சுவாமியைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. ஏறத்தாழ இந்தக் காலப் பகுதியில்தான் திருவனந்தபுரம் வைணவ சம்பிரதாயத்தில் போற்றப்படும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருகிறது. திவ்ய பிரபந்தத்தின் பதினோரு பாசுரங்களில் திருவனந்தபுரமும் பத்மநாபனும் இடம் பெறுகிறார்கள். சேர மன்னர்கள் மட்டுமல்லாமல் சோழ, பாண்டிய மன்னர்களும் இந்த ஆலயத்தின் உருவாக்கத்தில் பங்கு வகித்திருக்கிறார்கள்.

வெவ்வேறு மன்னர்களின் ஆட்சிக்காலங்களில் சிறுசிறு நாடுகளாக இருந்த பகுதிகளை பதினாறாம் நூற்றாண்டில் வேணாடு அரசராகப் பதவியேற்ற மார்த்தாண்ட வர்மா ஒன்றிணைத்தார். சிற்றரசர்களையும் ’நாடுவாழிகள்’ என்று அழைக்கப்பட்ட நில உடைமையளார்களையும் வீழ்த்தி அந்தப் பகுதிகளைக் கைப்பற்றினார். தெற்கே கன்னியாகுமரியையும் வடக்கே பரவூரையும் எல்லைகளாகக் கொண்ட நாடாக திருவிதாங்கூர் உருவானது. எல்லா முடியரசையும் போலவே திருவிதாங்கூரும் ரத்தச் சகதியிலிருந்து எழுந்த பூமிதான். அங்கிருந்தே திருவிதாங்கூர் என்ற நாட்டின் வரலாறும் பத்மநாப சுவாமி ஆலயத்தின் நவீன வரலாறும் ஆரம்பமாகின்றன.

மாமாவான ராம வர்மா மகாராஜா 'நாடு நீங்கி'யதைத் தொடர்ந்து மருமகனான அனிழம் திருநாள் வீரபால மார்த்தாண்ட வர்மா தன்னுடைய இருபத்து நான்காவது வயதில் அரியணையேறினார். தாய்வழிச் சமூகத்தில் மகன்களுக்கு அதிகாரமும் உரிமையும் இல்லை. மருமக்கள்தாய சம்பிரதாயத்தின்படி மருமகன்களே வாரிசுரிமை கொண்டவர்கள். இந்த மரபுக்கு விரோதமாக மறைந்த மன்னரின் மகன்கள் இருவர் ஆட்சிக்கு உரிமை கோரினர். அவர்களை அடக்கினார். முன்னர் ஆண்ட அரசருக்கு எதிராக உள்ளிருந்தே கலகம் செய்து வந்த அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த எட்டரை யோகம் போற்றிகளையும் எட்டு வீட்டுப் பிள்ளைமாரையும் அதிகார பீடங்களிருந்து நீக்கினார். அரியணையேறி இரண்டு ஆண்டுகளுக்குப் பின்புதான் தனக்கெதிராகச் சதியில் ஈடுபட்டவர்களை அழித்தொழித்து மார்த்தாண்ட வர்மா முழு அதிகாரத்தைப் பெற முடிந்தது. அதுவரை வேணாட்டின் தலைநகரமாக பத்மநாபபுரம் இருந்து வந்தது. அதையும் திருவனந்தபுரத்துக்கு மாற்றினார். இந்தச் சமயத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கையை திருவிதாங்கூர் வரலாறு ஆன்மீகமானது என்றும் தியாகம் பொருந்தியது என்றும் சிலாகிக்கிறது. உண்மையில் அது ராஜதந்திரமானது. பத்மநாப சுவாமியின் பக்தரான மார்த்தாண்ட வர்மான தமது அதிகார அடையாளங்களான உடைவாளையும் கேடயத்தையும் பத்மநாப சுவாமி சன்னதியின் படிக்கட்டில் வைத்தார். நாட்டைக் கடவுளுக்குச் சமர்ப்பித்ததன் குறியீடு அது. அன்று முதல் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் ஆட்சி கடவுளான பத்மநாபருக்கு உரிமையானது. இந்தச் சடங்குக்கு திருப்படித் தானம் என்று பெயர். பத்மநாப சுவாமிக்கு மூன்று பாத்திரங்களைக் கொடுத்த பெருமை மார்த்தாண்ட வர்மாவுக்கு உரியது. பத்ம நாபனைக் குலதெய்வம், காவல் தெய்வம், ராஜ்ஜியத்துக்கே அதிபதி என்று மூன்று பாத்திரங்களில் இயங்க வைத்தார். அவரது பிரதிநிதியாகவே தாம் ஆட்சியேற்பதாக அறிவித்தார். அந்த வகையில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முதல் மன்னர் பிரதிநிதியாக பத்மநாப தாசன் என்ற பணிவான அடையாளத்துடன் ஆட்சியை நடத்தத் தொடங்கினார். ஆக, திருவிதாங்கூரின் உண்மையான அரசர் சாட்சாத் ஸ்ரீ பத்மநாபன். அவரது ஆலயமே அதிகார மையம். அதற்கு ஏற்பவே கோட்டையும் காவலும் ஏற்படுத்தப்பட்டன. இன்றும் பத்மநாப சுவாமி கோவிலின் பிரதான உற்சவமான பங்குனி ஆறாட்டின்போது குதிரைப் படைகளும் சிப்பாய்களும் ஊர்வலத்தில் அணிவகுப்பது இந்த மரபின் தொடர்ச்சிதான்.

மார்த்தாண்ட வர்மாவைச் சிறந்த நிர்வாகி என்றும் திறமான ஆட்சியாளர் என்றும் தீரமான போர் வீரர் என்றும் தீவிரமான பக்தர் என்றும் வரலாறு சொல்கிறது. உண்மை. அவற்றையெல்லாம் விட அவர் தேர்ந்த ராஜ தந்திரி. ஆட்சிக்கு இடையூறு ஏற்பட்டு விடக் கூடாது என்ற எச்சரிக்கையில் ஆங்கிலேயர்களுடன் ஒத்துப் போனார். அதனால் ஆத்திர மடைந்த டச்சு படைத்தளபதி யூஷ்டாஷியஸ் டி லென்னாய் திருவிதாங்கூரின் மீது படையெடுத்தார். அவரை மார்த்தாண்ட வர்மா தோற்கடித்துச் சரணடையச் செய்தார். பின்னர் நண்பரும் ஆலோசகருமாக்கிக் கொண்டார்.

திருவிதாங்கூர் வரலாற்றில் நாட்டைக் காப்பதற்காக நடந்த போர் இதுமட்டுமே. மற்றவை மண்ணைக் கைப்பற்றுவதற்காகச் செய்யப்பட்டவை. பெரும்பான்மையான ஆக்கிரமிப்புகள் அமைதி உடன்படிக்கைகளில் முடிந்தன. மார்த்தாண்ட வர்மா காலம் முதல் இந்திய விடுதலை வரையிலான ஆண்டுகளில் திருவிதாங்கூர் அரச வம்சத்தின் எட்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். அண்டை மாநிலமான தமிழகத்திலும் இந்தியா முழுவதிலும் அரசியல் போராட்டங் களும் குறு நில மன்னர்கள், ஜமீந்தார்கள் இடையிலான சண்டைகளும் நடந்திருக் கின்றன. வெளிநாட்டு ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.அவ்வளவு கொந்தளிப்பான காலத்திலும் திருவிதாங்கூர் ராஜ்யம் ஆட்டம் காணாமல் நின்றதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று; நாட்டின் பாதுகாப்புக் கருதி மன்னர்கள் மேற்கொண்ட சமரசப் போக்கு. உண்மையில் அது அதிகாரத்தை இழந்துவிடாமலிருக்கச் செய்த தற்காப்பு ஏற்பாடு. பிரிட்டிஷ்காரர்களுக்குக் கப்பம் கட்டுவதற்காகவே குடிமக்கள் மீது வரி சுமத்தப்பட்டது. மிகவும்கீழ் நிலையிலிருந்த மக்களிடமிருந்து தலைக்கும் முலைக்கும் வரி வசூலிக்கப்பட்டது. இவையெல்லாம் பத்மநாப சுவாமியின் பெயராலேயே நடத்தப்பட்டன. இரண்டாவது காரணமும் கடவுளை மையப்படுத்தியதுத்தான்.நாட்டின் உண்மையான அரசர் பத்மநாப சுவாமியே என்றால் கடவுளுக்கு எதிராக யார் படை யெடுக்க முடியும்? இந்த இரண்டு காரணங்களுமே ஆட்சியைத் தொடர உதவியவை.

பதவிக்கு வந்த காலம் முதலே பத்மநாப சுவாமி ஆலயத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்ற சிந்தனை மார்த்தாண்ட வர்மாவுக்கு இருந்தது. அவர் பதவிக்கு வருவதற்குப் பல ஆண்டுகள் முன்னர் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஆலயத்தின் பல பகுதிகள்

எரிந்து போயிருந்தன. அவற்றின் சுவடுகள் எஞ்சியிருந்தன. அவை பக்தரான மார்த்தாண்ட வர்மாவின் மனதில் பெரும் துயரத்தை ஏற்படுத்தின. அரியணை ஏறியதும் ஆலயத்தைச் செப்பமிடுவதற்கான பணிகளை முடுக்கி விட்டார். அவரது கற்பனையின் விரிவுதான் இன்று காணும் பத்மநாப சுவாமி ஆலயம். அவருக்குப் பின் வந்த மகாராஜாக்களும் மகாராணிகளும் பத்மநாபதாசன் என்றும் பத்மநாப சேவினி என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களது கைங்கரியங்களும் தொடர்ந்தன. திருவிதாங்கூர் ராஜ வம்சம் கடைப்பிடித்த சமரசப் போக்கு அந்நியப் படையெடுப் புகளைத் தடுத்தது. அவர்கள் வலியுறுத்திய தெய்வ நம்பிக்கை மக்களை இடையூறில் லாமல் ஆட்சி செய்யத் துணை புரிந்தது. கடவுளின் மீது வைத்த நம்பிக்கையின் சாயலில்தான் திருவிதாங்கூர் பிரஜைகள் மகாராஜாக்களைப் பார்த்திருந்தார்கள். 'திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன் என்னும்' நம்மாழ்வார் பாசுர வரிகளை விசுவாசத்துடன் பின்பற்றிய சாதாரண மக்கள்தாம் எல்லாப் படையெடுப்பு களிலிருந்தும் கடவுளையும் அரச பரம்பரையையும் பாதுகாத்தவர்கள்.

காலங்காலமாக இந்தப் பிரஜைகள் மன்னருக்குச் செலுத்திய வரியும் தெய்வத்துக்குச் சமர்ப்பித்த காணிக்கைகளும் நூற்றாண்டுகளாகத் திரண்டுதான் அனந்த பத்மநாபனின் அளப்பரிய செல்வத்தை உண்டாக்கியிருக்கிறது. அவை மட்டுமே இந்த அளவு செல்வத்தை உருவாக்கியிருக்குமா? இல்லை. விதேச வாணிபத்தின் மூலம் ஈட்டப் பட்ட நிதி. சிற்றரசுகளை முற்றுகையிட்டுப் பறிமுதல் செய்த திரவியங்கள், வியாபார நிமித்தம் கேரளக் கடல் பகுதிகளில் வந்தேறிய அந்நியர்கள் சுங்கமாகச் செலுத்திய வைர,வைடூரியங்கள், கேரளத்தில் விளைந்த நறுமணப் பொருட்களைப் பண்ட மாற்றுச் செய்து சேகரித்த தங்க நாணயங்கள் இவை அனைத்தும் சேர்ந்தே கருவூலத்தை நிரப்பியிருக்கின்றன. இவை தவிர திருவிதாங்கூர் அரச வம்சத்தினர் அவ்வப்போது செலுத்திய காணிக்கைப் பொருட்கள். மன்னரின் முன்னால் பிரதிநிதி அன்றாடம் ஆஜராக வேண்டும் என்ற அரச கட்டளையை திருவிதாங்கூர் வம்சம் கறாராகப் பின்பற்றி யிருக்கிறது. ஒருநாள் ஆலயம் சென்று வழிபடத் தவறினால் குறிப்பிட்ட தொகை அபராதமாகச் செலுத்தப்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டின் மூலம் சேர்ந்த தொகைகள். குடிமக்களில் தவறு செய்தவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டங்கள், மன்னரும் மக்களுமே செலுத்திய பிராயச்சித்த தண்டங்கள், திருநெல் வேலி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களில் பரவிக் கிடந்த பண்டாரபூமி மூலம் கிடைத்த முப்பது சதவீத வருமானம். இந்த மொத்த வருமானங் கள்தாம் உலகின் பணக்காரக் கடவுளாக பத்மநாப சுவாமியை இன்று காட்டுகின்றன.

இந்த மொத்த நிதியும் ஆறு நிலவறைகளில் சேமித்து வைக்கப்பட்டன. இவற்றுக்குத் துல்லியமான கணக்கு வைக்கப்பட்டது என்பது திருவிதாங்கூர் ராஜ வம்சத்தைப் பாராட்டுவதற்கான வாய்ப்பு. மார்த்தாண்ட வர்மா காலம் முதல் இன்றுவரை கோவிலுக்கு வந்து சேரும் எல்லா காணிக்கைகளுக்கும் நடை வரவுக்கும் கணக்குகள் உள்ளன. இந்தக் கணக்குகள் குறிக்கப்பட்ட ஓலைச் சுவடிகள் சுருள்களாகச் சேமிக்கப் பட்டன. அவற்றின் எண்ணிக்கை முப்பது லட்சம் என்று சொல்லப் படுகிறது. ஆலயத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பல சுவடிகள் சாம்பலாயின. மிஞ்சிய ஓலைச் சுவடிகளிருந்து மதிலகம் ரேகைகள் என்ற பதிவுகள் தயாரிக்கப் பட்டன. ஆலயத்துக்கு வரும் பொருள் வரவுகள் கணக்கு வைக்கப்பட்டதே தவிர அவற்றின் எண்ணிக்கை ஒருபோதும் சரிபார்க்கப் படவில்லை. சேரமான் பெருமாள் மூன்றாம் பாஸ்கர ரவிவர்மா முதல் திருவிதாங்கூரின் கடைசி மன்னரான சித்திரைத் திருநாள் ராமவர்மா காலம் வரையிலும் குவிந்த செல்வம். இது அளவற்றது என்று பொதுவாகத் தெரியும். இந்தப் பொக்கிஷங்கள் சேமிக்கப்பட்டிருக்கும் நிலவறைகளில் இரண்டு மட்டுமே அன்றாட வழிபாட்டுச் சடங்குகளுக்காகவும் உற்சவ கால அலங்காரங்களூக்காகவும் திறக்கப்பட்டு வந்தன. இந்தப் பொக்கிஷங்களின் அளவு சொல்லப்படாத காரணத்தால் இதிலிருந்து என்ன எடுக்கப்பட்டாலும் தெரியாது. சோற்று மலையிலிருந்து ஒரு பருக்கையை எடுத்தால் தெரியாது; குறையாது என்று நினைப்பது போன்ற எண்ணமே இது. ஆனால் ஒரு பருக்கை குறைந்தாலும் அது தவறு; குறைவு என்று நம்பிய பத்மநாபசுவாமியின் பரம பக்தரான டி.பி. சுந்தரராஜன் என்ற வழக்கறிஞர் தொடுத்த வழக்கே இந்த ரகசியக் கருவூலத்தைத் திறக்கிற சாவியாக மாறியது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நிலவறைகளைத் திறந்து உருப்படிகளின் எண்ணிக்கையைப் பட்டியல் போடத்தான் ஆணையிட்டது. பட்டியல் தயாரிப்புக்கு இடையில்தான் அந்தப் பொருட்களின் மதிப்பும் வெளிவந்தது. உலகம் ஆச்சரியத்தில் கண்களை அகலமாக முழித்துப் பார்க்க நேர்ந்தது.

பொற் சிம்மாசனங்கள், பொற்கிரீடங்கள், தங்க விக்கிரகங்கள், பொன் நாணயங்கள், பொற்கயிறுகள், பதினெட்ட்டி நீளமுள்ள சரப்பொளி மாலைகள், தங்கக் கிண்டிகள், பொன் விக்கிரகங்கள், வெள்ளி ராசிகள், தங்க அங்கிகள்,தங்க மாலைகள், தங்கக் கட்டிகள், நவரத்தினக் கற்கள் போன்ற காலத்தால் அழியாத பொருட்கள்தாம்

கருவூலத்தில் காணப்பட்டவை. இவற்றின் நிகழ்கால சந்தை மதிப்புத்தான் இதுவரை

சொல்லப்பட்டிருக்கிறது. 1972 ஆம் ஆண்டு தொல்பொருட்கள், கலைப் பொருட்கள் பாதுகாப்புச் சட்டத்தின்படி இவற்றியெல்லாம் தொல்பொருட்களாகவே எண்ண வேண்டும். அதே ஆண்டு யுனெஸ்கோ பாரீசில் நடத்திய உலகப் பண்பாட்டு, இயற்கை மரபுச் செல்வங்கள் பாதுகாப்பு மாநாடு நூறு ஆண்டுகளைக் கடந்த எந்தக் கலைப் பொருளும் கட்டடமும் மரபுச் சின்னங்களாகக் காணப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. அதன்படி இவை எல்லாம் தொல்பொருட்கள்.இவற்றுக்கு தனிநபர் உரிமை கொண்டாட முடியாது. இந்த இடத்தில்தான் பத்மநாபசுவாமியின் செல்வம் பிரச்சனைக்குரியதாகிறது. இது திருவிதாங்கூர் ராஜ குடும்பத்துக்குச் சொந்தமானதா? முடியாட்சியே ஒழிக்கப்பட்ட பின் மன்னர் குடும்பத்துக்கு எப்படி உரிமை இருக்கும்? சரியாகப் பார்த்தால் ஜனநாயக அரசு அமைந்த பின்னர் பத்மநாப சுவாமியின் மன்னர் பதவியே பறி போயிருக்கிறதே?. ஆலயமே இந்தச் சொத்தின் உடைமையா? வைதீக மரபுப்படி பத்மநாப சுவாமி ஆலயத்துக்குள் செல்லவும்

வழிபடவும் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி. ஆனால் மன்னர் என்ற நிலையில் பத்மநாப சுவாமிக்கு வரி செலுத்தியவர்கள் இந்துக்கள் மட்டும்ல்ல; பிறமதத்தினரும் கூட. அவர்கள் அளித்த செல்வமும் இதில் இருக்கிறதே? அதை எப்படி வகைப் படுத்துவது? மன்னராட்சி இல்லாத நிலையில் இந்தச் சொத்துக்கள் பொதுவானவை.மக்களுடையவை. ஆனால் இதுவரையான ஜனநாயக அரசுகள் பொதுச் சொத்தில் நடத்தியிருக்கும் முறைகேடுகள் இந்தச் செல்வத்தின் மீதும் தொடராது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

பத்மநாப சுவாமியின் சொத்து முன்வைத்திருக்கும் கேள்விகள் பதில் காணச் சிரமமானவை. காலங்காலமாகத் திரண்ட செல்வவளம் மன்னர்களின் பங்களிப்பு மட்டுமல்ல. மக்களின் நன்கொடையும்தான். அதை மக்கள் நலத்துக்காகச் செலவிடு வதுதான் உசிதம் என்பது ஒரு வாதம். இவை பக்தியால் அளிக்கப்பட்டவை. அதனால் தெய்வ சம்மதமில்லாமல் தொடக் கூடாது என்பது மறு தரப்பின் வாதம். இவை இரண்டையும் மீறி இந்தச் சொத்துக்கு வேறு மதிப்புகளும் இருக்கின்றன. அதன் பழைமை சார்ந்த மதிப்பு. பண்பாட்டு மதிப்பு. கலை மதிப்பு. வரலாற்று மதிப்பு. இந்தச் செல்வத்தில் காணப்படும் நாணயங்கள் மூலம் அந்தக் கால வெளிநாட்டுத் தொடர்புகள் புலனாகின்றன. கலைப்பொருட்கள் மூலம் ஒரு கால கட்டத்தின் கலை ஞானம் தெரியவருகிறது. அணிகலன்கள், ஆபரணங்களிலிருந்து கலாச்சாரப் போக்குகள் தென்படுகின்றன. சில பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்து வதன் மூலம் பழைமையையும் வரலாற்றையும் அறிய முடியும். இது வருங்காலத் தலைமுறைக்கு உதவும்.

பத்மநாபசுவாமி சொத்தின் கலாச்சார மதிப்பை முன்னிருத்தி அதை இரண்டாகப் பிரிக்கலாம் என்பது மூன்றாவது தரப்பு. தொன்மையானவையும் கலாச்சாரம் தொடர்பானவையுமான பொருட்களை வகைப்படுத்தி அவற்றை ஓர் அருங்காட்சியகம் அமைத்துப் பாதுகாப்பது. எஞ்சியுள்ள சொத்தை கேரள மக்களின் மேம்பாட்டுக்காகச் செலவு செய்வது. ஆலோசனை சரியானது. மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள் இதன் மூலம் ’’’மகேசன் குரலே மக்கள் குரல்’’ என்று அமைதியடையலாம். உண்மையான பக்தர்கள் ‘ஆமாம், கடவுள் உலகியல் செல்வங்களுக்கு அப்பாற் பட்டவர்’’’ என்று ஆன்மீகமாகச் சிந்திக்கலாம். ஆனால் இதை நடைமுறைப்படுத்துவது எளிதல்ல.

அபரிமிதமான செல்வம் நிம்மதியைக் குலைக்கும் என்பது மனிதர்களுக்குமட்டுமல்ல; கடவுளுக்கும் பொருந்தும்.


நன்றி: டைம்ஸ் இன்று தீபாவளி மலர் 2011

வெள்ளி, 21 அக்டோபர், 2011

சமுத்திர ரகசியங்கள் ததும்பும் அகன்ற விழிகள்



’த சண்டே இந்தியன் ‘ பத்திரிகை தீபாவளிச் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளது.ரசிகர்களாக ஆண் ஆளுமைகள் தங்களுக்குப் பிடித்த திரைநாயகிகளைப் பற்றி எழுதிய கட்டுரைகள் கொண்டது ஒரு புத்தகம். அதில் நான் எழுதிய கட்டுரை இது.




நண்பரும் மலையாளக் கவிஞருமான பாலசந்திரன் சுள்ளிக்காடு 'சௌந்தர்ய லஹரி' என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். 'தேவ சபை நர்த்தகியான நீ சாபத்தினால் பூமிக்கு வந்தாய்' என்று தொடங்கும் அந்தக் கவிதை, நடிகை ஸ்ரீவித்யாவுக்கு சமர்ப்பணம் செய்யப் பட்டது. வாசகர் களுக்கிடையில் அந்தக் கவிதை வெகுவாகப் பாராட்டப் பட்டது. இலக்கிய வட்டாரங்களில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. கவிதைக்கான முகாந்திரம் என்ன என்று கேட்ட போது ' இன்றைக்கு நாற்பத்தைந்து ஐம்பது வயதை எட்டியிருக்கும் சிலருக்காவது அவர்களுடைய பதின் பருவத்தில் ஸ்ரீவித்யா கனவுப் பதுமையாக இருந்திருப்பார். எனக்கு இருந்தார். நீயும் என் வயதுதானே? ஏன் உனக்கு இல்லையா?' என்று எதிர்க் கேள்விகளை எழுப்பினார். உண்மையை ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியிருக்க வில்லை.

பாலன் சொன்ன சிலரைப்போல என் விடலைப் பருவக் கனவுகளிலும் இருந்த பெண் பிம்பங்களில் ஒன்று ஸ்ரீ வித்யா. பள்ளிக் கூடத்துக்கு மட்டம் போட்டுப் பார்த்த திரைப்படங்களில் ஒன்று ஸ்ரீவித்யா நடித்த 'நூற்றுக்கு நூறு'. அதே வயதில் வீட்டு ஜன்னல் கதவின் உள் பக்கத்தில் சினிமாப் பத்திரிகை யிலிருந்து வெட்டியெடுத்த படம் ஒன்றை சோற்றுப் பருக்கையைத் தேய்த்து ஒட்டி வைத்திருந்தேன். கவுன் அணிந்த பெண்ணின் மார்பளவுப் புகைப்படம். வலப் பக்கமாகத் தலையைச் சாய்த்துக் கைகளை இறுகக் கட்டி மோனலிசாப் புன்னகையுடன் நிற்கும் ஸ்ரீவித்யாவின் படம். அதுபோன்ற இளமைத் தோற்றத்தில் ஸ்ரீவித்யாவின் படத்தைப் பின்னர் பார்க்கவில்லை. சில படங்களுக்குள்ளேயே அவருடைய உருவத்தில் வயதுக்கு மீறிய முதிர்ச்சி தென்பட்டது. என்னுடைய ஜன்னல் படம் எழுபத்தி ஒன்றிலோ எழுபத்தி இரண்டிலோ பத்திரிகையில் வெளியானது. அப்போது ஸ்ரீவித்யாவின் வயது பதினெட்டு அல்லது பத்தொன்பது. நான்கு வருடங்கள் பிந்தி வந்த 'அபூர்வ ராகங்கள்' (1975) படத்தில் அவரை விடச் சில வருடங்களே இளையவரான ஜெயசுதாவுக்கு அம்மாவாகப் பாத்திரம் ஏற்றிருந்தார். மத்திய வயதுப் பாடகியான எம்.ஆர்.பைரவி பாத்திரத்தில் பொருந்தி நடிப்பதற்கு அன்று அவரளவு திறமைசாலிகள் இல்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம். அவரது தோற்றம் அதைவிட முக்கியமான காரணம் என்று தோன்றியது. திரை உலகில் பெண்களுக்குத்தானே சீக்கிரம் வயதாகிறது. அதன் வெளிப்படையான உதாரணங்களில் ஒருவர் ஸ்ரீவித்யா.

கல்லூரி மாணவியாக 'நூற்றுக்கு நூறு' (1971) படத்தில் அறிமுகமான ஸ்ரீவித்யாவுக்குக் கிடைத்த இளமையான நாயகி பாத்திரங்கள் குறைவு. 'சொல்லத்தான் நினைக்கிறேன்' (1973), 'ஆறு புஷ்பங்கள் (1977)' போன்ற ஒரு சில படங்களில்தான் அவருடைய வயதும் பாத்திரத்தின் வயதும் ஒத்துப் போயின. பின்னர் அவர் ஏற்று நடித்த பாத்திரங்கள் பெரும்பான்மையும் அவரது வயதுக்கு மீறியவை. அக்கா, அண்ணி, அம்மா, பாட்டி, மாமியார், பாத்திரங்கள்தாம் அவருக்காகத் தமிழில் காத்திருந்தன. கொஞ்சம் முயன்றிருந்தால் சினிமா வணிகத்துக்குத் தேவையான தகுதிகளுடன் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்க முடியும். பொலிவான தோற்றத்தை பராமரித்திருந் திருக்க முடியும். மேலும் சில ஆண்டுகள் இளம் நாயகியாகத் தொடர்ந்திருக்க முடியும். அதை அவர் விரும்பவில்லைபோல. எப்படி இருக்கிறாரோ அப்படியான தோற்றத்தில் நடிப்பதையே தேர்ந்தெடுத்தார். இளம் நாயகியாக இருப்பதால் திரையுலகில் சந்திக்க நேரும் தொல்லை களையும் எப்போது நட்சத்திர ஜொலிப்பு மங்கி விடுமோ என்ற பயத்தையும் சமாளிக்கவே மேற்சொன்ன பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தார் என்றும் தோன்றுகிறது. சோகத்தின் அத்தர் லேசாகப் பூசிய வட்ட முகம், சமுத்திர ரகசியங்கள் ததும்பும் அகன்ற விழிகள், நடனத்தில் பயின்ற உடலசைவுகள். இவை அவருடைய நடிப்புக் கருவிகளாயின.ஸ்ரீவித்யா நடிப்பின் நுட்பங் களைக் கற்றுக் கொண்டது நாட்டியத்திலிருந்து என்று யூகிக்கலாம்..

கவிஞன் இல்லாமல் கவிதையை வாசித்து விடமுடியும். ஓவியன் இல்லாமல் ஓவியத்தைப் பார்த்து விட முடியும். பாடகன் இல்லாமல் இசையைக் கேட்டு விட முடியும். ஆனால் ஆடுபவர் இல்லாமல் நடனத்தையோ நடிப்பவர் இல்லாமல் நடிப்பையோ பார்க்க முடியாது. இந்த நுட்பத்திலிருந்துதான் ஸ்ரீவித்யாவின் நடிப்பை அணுக முடியும்.நாட்டியத்தில் ஆடுபவரின் தோற்றம் மறைந்து ஆட்டம் மட்டுமே புலனாகிறது. இந்த ரகசியம் வெளிப்படுவதை ஸ்ரீவித்யாவின் நடிப்பில் காண முடியும். அப்படிக் காண உதவும் பாத்திரங்கள் தமிழில் அவருக்கு அரிதாகவே வாய்த்தன. அவற்றையும் நாட்டியப் பயிற்சியில் பெற்ற பாடங்கள் மூலம் செழுமைப் படுத்தினார். சின்ன அசைவுகள் மூலம் குறிப்பிட்ட சூழ்நிலையில் குறிப்பிட்ட பாத்திரம் என்ன செய்ய வேண்டுமோ அதை வெளிப்படுத்தினார்.

பாசில் இயக்கத்தில் வெளிவந்த 'காதலுக்கு மரியாதை' படத்தில் ஸ்ரீவித்யாவுக்கு அம்மா வேடம். படம் முழுவதும் பாசமுள்ள தாயாக வந்து உருகுவதைத் தவிர எதுவும் செய்யத் தேவையில்லை. ஆனால் உச்ச கட்டக் காட்சியில் மகன் காதலித்த பெண்ணை அவளுடைய பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டுத் திரும்பும்போது பெண்ணின் தாய் மகளிடம் சொல்லிக் கொண்டு போகச் சொல்லுவார். 'அவளை என் கிட்ட கொடுத்துடுங்க. கண்ணுக்கு கண்ணா வெச்சுப் பார்த்துக்கிறேன்' என்று பதில் சொல்வார் அம்மாவான ஸ்ரீவித்யா. வசனத்தை விட அதிக அர்த்தமுள்ளதாக இருக்கும் அவருடைய உடல்மொழியும் விழியசைவுகளும். கவனமாகப் பார்த்தால் அந்தக் காட்சியில் அதிகமான குளோஸ் அப் ஷாட்டுகள் வைக்கப் பட்டிருப்பதும் அவருக்குத்தான் என்பது புரியும். நாட்டியத்தில் சிறு அபிநயத்தின் மூலம் பாத்திரத் தின் இயல்பை வெளிப்படுத்துகிற இந்த நுட்பத்தை ஸ்ரீவித்யா திரைநடிப்பில் தனதாக்கிக் கொண்டார்.

அபூர்வராகங்களின் இந்தி வடிவம் 'ஏக் நை பஹேலி' (1984) என்று வெளியானது. தமிழில் ஸ்ரீவித்யா ஏற்றிருந்த பைரவி பாத்திரத்தில் ஹேமமாலினி நடித்திருந்தார். படத்தில் ஒரு காட்சி. தீவிரவாதி இளைஞன் பிரசன்னாவை (கமலஹாசன்) மனம் மாறச் செய்வதற்காகத் தன் வீட்டிலேயே அடைக்கலம் கொடுக்கிறாள் பைரவி. இசை உலவும் அந்த வீட்டில் பிரசன்னா மெல்லமெல்ல மனம் மாறுகிறான். ஒரு மிருதங்கத்தை எடுத்து லய சுத்தமாக வாசிக்கிறான். குளியல் அறையில் நீராடிக் கொண்டிருக்கும் பைரவி அவன் வாசிக்கும் தாளத் கட்டுக்குப் பொருத்தமாக ஸ்வரங்களை ஆலாபனை செய்கிறாள். இலக்கணம் பிசகாத வாசிப்பால் ஈர்க்கப்பட்டு ஈர உடையுடன் வந்து ஆச்சரியப்படுகிறாள். பின்னர் உடை மாற்றி வந்து அவனைப் பாராட்டுவாள். இரண்டு படங்கள். இரண்டிலும் அதே காட்சி. அதே இயக்குநர். கே.பாலசந்தர். அதே கதாநாயகன் .கமலஹாசன். இரண்டிலும் பைரவியாக நடித்தவர்கள் நாட்டியம் தெரிந்தவர்கள். ஸ்ரீவித்யாவும் ஹேமமாலினியும். எனினும் தமிழ்ப் படக் காட்சியிலிருந்த தீவிரம் இந்தியில் குறைவாகவே தென்பட்டது. காரணம், ஸ்ரீவித்யா என்று தோன்றுகிறது. இந்த நுட்பம்தான் ஸ்ரீவித்யாவைத் தமிழ்ச் சினிமாவில் புறக்கணிக்க முடியாத நடிகையாக்கியது. நீண்ட காலம் நிலைத்திருக்கவும் உதவியது. அதை இப்படிச் சொல்லலாம்: ஸ்ரீ வித்யா ஒரு ஸ்டார் அல்ல; பெர்ஃபார்மர். குறைந்தபட்ச சலனம் மூலம் பாத்திரத்தை முழுக்கவும் வெளிப்படுத்தும் திறமையைக் காட்டக் கூடிய தமிழ் வாய்ப்புகள் சொற்ப மாகவே இருந்திருக்கின்றன. தமிழில் நூற்றுச் சொச்சம் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை இரு கை விரலளவு கூடத் தேறாது. பதிலாக தனது திறமையை வெளிக்காட்ட இசைவானதாக மலையாளத் திரையுலகை ஸ்ரீவித்யா தேர்ந்தெடுத்தார். மொத்தம் நடித்த கிட்டத்தட்ட முந்நூறு படங்களில் சரிபாதிக்குமேல் மலையாளப் படங்கள் என்பது அவரது தேர்வை நியாயப்படுத்துகின்றன.

ஸ்ரீவித்யாவின் திரையுலக வாழ்க்கையை நான்கு கட்டங்களாகப் பிரிக்கலாம். இந்த நான்கு கட்டங்களும் அவருடைய தனி வாழ்க்கையு டனும் தொடர்பு கொண்டவை.சரியாகச் சொன்னால் அவரது தனி வாழ்க்கைப் பிரச்சனைகள் தாம் இந்தக் கட்டங்களையே உருவாக்கின. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் கட்டம். கதாநாயகியாக இரண்டாம் கட்டம். குணச் சித்திர நடிகையாக மூன்றாம் கட்டம். தொலைக் காட்சி நடிப்பில் ஈடுபட்ட நான்காம் கட்டம்.

புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் எம்.எல்.வசந்த குமாரியின் மகளாகப் பிறந்தவர் மீனாட்சி. குழந்தையைப் பார்த்த ஸ்ரீவித்யா உபாசகர் ஒருவர் அழைத்த பெயர்தான் பின்னர் அவருடைய அடையாளமானது. தந்தை விகடம் கிருஷ்ண மூர்த்தி அந்தக் கால ஹாஸ்ய நடிகர். ஸ்ரீவித்யாவின் குழந்தைப் பருவத்திலேயே நோய் காரணமாக வீட்டுக்குள் ஒடுங்கி யவர். குடும்பத்தைச் சுமக்கும் பொறுப்பு எம்.எல்.விக்கு வந்து சேர்ந்தது. பகலில் ரிக்கார்டிங். மாலையில் கச்சேரி என்று சக்கரச் சுழற்சியாக வாழ்ந்தார். ஸ்ரீவித்யாவும் சகோதரர் சங்கரராமனும் தாத்தாவின் பராமரிப்பில் விடப்பட்டனர். பத்தா வது வயதில் தாத்தா மறைந்தார். தனிமையில் விடப்பட்டார். அந்த தனிமை அவரை மரணம்வரை பின்தொடர்ந்தது. குடும்பத்தில் நிலவிய நிதிப் பிரச்சனைகள் பெற்றோரின் உறவில் விரிசலை ஏற்படுத்தின. ஸ்ரீவித்யாவின் இளம் பருவம் பயத்தில் கழிந்தது. இசையும் நாட்டியமும் கற்றுக் கொண்டது தான் பயத்தை விரட்ட உதவின.

பதின் மூன்றாம் வயதில் குழந்தை நட்சத்திரமாக 'திருவருட் செல்வர்' (1966) படத்தில் அறிமுகமானார். ஏறத்தாழ அதை யொட்டியே மலையாளத்திலும் குழந்தை நட்சத்திரமாக நுழைந்தார்.படம் - 'குமார சம்பவம்' (1969). இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கே.பாலசந்தரின் அறிமுக நாயகியாக 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில் நடித்தார். ஆனால் அவரது ஆர்வம் நடிப்பில் அல்ல; நடனத்தில்தான்.அந்தக் கட்டத்தில் திருமண வாய்ப்பும் தகைந்தது. அமெரிக்கா வாழ் விஞ்ஞானி ஒருவர் அவரை மணந்து கொள்ள விரும்பினார். குடும்பச் சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டிருந்த எம்.எல்.வி. மூன்று ஆண்டுக ளுக்குப் பிறகே திருமணம் என்று சொன்னதில் அந்த வாய்ப்பு தட்டிப் போனது. 'நடிக்க மாட்டேன்' என்று பிடிவாதம் செய்த மகள் முன்னால் வீட்டுக் கடன் பத்திரங்களைப் போட்டார் எம்.எல்.வி. காமிரா முன் நிற்கத் தயாரானார் ஸ்ரீவித்யா. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் வாய்ப்புகள் வந்தன. 1973 இல் ஏ.வின்சென்ட் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'செண்ட' மூலம் மலையாளத் திலும் 'அபூர்வ ராகங்கள்' மூலம் தமிழிலும் முன்னணிக் கதாநாயகியானார். தனி வாழ்க்கையிலும் 'அபூர்வ ராகங்கள்' அவருக்கு முக்கியமானதாக இருந்தது. அதன் கதா நாயகனும் நாயகியும் பரஸ்பரம் காதலித்ததாகச் சொல்லப்படுகிறது. நாயகன் நாயகி இருவரது குடும்பமும் சம்மதமும் தெரிவித்தன. நாயகனுக்குத் தன்னிடம் இருந்தது போலவே வேறொரு பெண் மீதும் காதல் இருப்பது தெரிந்ததும் சோர்ந்து போனார். அவரே இடக்கரடக்கல் நிமித்தம் ஆங்கிலத்தில் சொன்ன வாக்கியத்தை இப்படி மொழிபெயர்க்கலாம்: ' இன்னொரு பெண்ணுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை'

காதல் நிறைவேறாத ஆற்றாமையில் வாழ்க்கையில் பெருந் தவறைச் செய்ததாகப் பின்னர் குறிப்பிட்டார் ஸ்ரீவித்யா. 'தீக்கனல்' (1976) மலையாளப் படத்தில் நடிக்கும்போது அதன் துணைத் தயாரிப்பாளரும் துணை இயக்குநருமான ஜார்ஜ் தாமசைக் காதலிக்கத் தொடங்கினார். கிறித்துவ மதத்துக்கு மாறும் அளவுக்குத் தீவிரமாக இருந்த காதல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருமணத்தில் முடிந்தது. அவர் விரும்பியது அமைதியான குடும்ப வாழ்க்கையை. ஆனால் கணவரின் பணத்தாசை அதைத் தடை செய்தது. உறவில் பூசல்கள் தொடங்கி ஒன்பதாவது ஆண்டு விவாகரத்தில் முற்றுப் பெற்றது. அதுவரை சம்பாதித்த எல்லாவற்றையும் ஸ்ரீவித்யா இழந்தார். வீடு, வங்கிக் கையிருப்பு, சொத்துகள் எல்லாம் பறிபோயின. அவற்றை மீட்கப் போராடியதில் அவருடைய தனி வாழ்க்கை நரகமானது. இயக்குநர் ஆர்.சி.சக்தியும் மறைந்த நடிகர் செந்தாமரையும் பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து மீள அவருக்குத் துணையாக இருந்ததாகச் சொல்லப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் புதிய தலைமுறைக் கதாநாயகிகள் அறிமுக மானார்கள். ஸ்ரீவித்யா குணச் சித்திரப் பாத்திரங்க ளுக்கு மாறினார். தமிழில் அவருக்குக் கிடைத்த குணச்சித்திரப் பாத்திரங்கள் ஒரே வார்ப்பில் அமைந்தவை. இந்தப் பாத்திரங்களை அவரைத் தவிர வேறு யாரும் செய்திருக்கக் கூடும். அவற்றுக்குத் தொழில்முறை நியாயத்தைச் செய்தார். நடிகையாக வாழ்ந்த காலம் முழுவதும் அவர் மட்டுமே செய்திருக்க முடியும் என்று தமிழ்த் திரையுலகில் அமைந்த பாத்திரங்களாக சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வராகங்கள், மதுரகீதம் (1977), புன்னகை மன்னன்(1986), தளபதி (1991), கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் (2000) படங்களைத்தான் சொல்ல முடியும்.

தனது திறமைக்கான இடம் மலையாள சினிமாவில் இருப்பதை ஸ்ரீவித்யா இந்த மூன்றாம் கட்டத்தில் உணர்ந்தார். எண்பதுகளில் மலையாளத்தில் உருவான இடைநிலைப் படங்கள் அவருக்கான வாய்ப்பை விசாலமாக்கின. எம்.டி.வாசுதேவன் நாயர் போன்றோரது திரைக்கதையிலும் (இடவழியிலே பூச்ச மிண்டா பூச்ச 1979, வில்கானுண்டு ஸ்வப்னங்ங்கள் (1980) அன்றைய முக்கிய இயக்குநர்களின் படங்களிலும் ஸ்ரீவித்யா தவிர்க்க இயலாத வரானார். ஸ்ரீவித்யா என்ற பெர்ஃபார்மர் முழுப் பிரகாசத்துடன் தெரியவந்தது மலையாளப் படங்களில்தான்.'காற்றத்தே கிளிக் கூடு' ( 1983 - பரதன்), ஆதாமின்டெ வாரியெல்லு (1983), இரைகள் (1985 - கே.ஜி.ஜார்ஜ்), திங்களாழ்ச்ச நல்ல திவசம் ( 1985 - பத்மராஜன்) , ஸ்வாதி திருநாள் (1987), தெய்வத்தின்டெ விக்ருதிகள் (1992 - லெனின் ராஜேந்திரன்), ரசனா ( 1983 - மோகன்), கஸல், என்டெ சூர்ய புத்ரிக்கு ( கமல்) பவித்ரம் (1994 - டி.கே.ராஜீவ் குமார்) ஆகிய படங்களில் ஸ்ரீவித்யாவின் நடிப்பு பரவசப் படுத்துவது. தமிழ்ப் படங்களில் கொஞ்சம் உரத்த நடிப்பை வெளிப் படுத்திய அவரே இந்த மலையாளப் படங்களில் இயல்பான நடிப்பைக் கொடுத்திருந்தார். வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியில் அமைந்த பாத்திரங்களை தன் நடிப்பால் ஜீவனுள்ளதாக மாற்றினார். 'இரைகளில் கிறித்தவப் பெண், கஸலில் முஸ்லிம், பவித்ரத்தில் திருமண வயதில் மகனிருக்க கர்ப்பிணியாகும் தாய், ஆதாமின் வாரியெல்லில் பணக்காரக் கணவனிடமிருந்து மணவிலக்குப் பெறப் போராடித் தற்கொலை செய்து கொள்ளும் மனைவி ஆகிய பாத்திரங்களில் அவரைத் தவிர வேறு யாரும் சோபித்திருக்க முடியாது என்பது என் ரசிக விசுவாசம்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் எம்.எல்.வி. காலமானார். ஸ்ரீவித்யாவுக்கு இருந்த ஒரே அடைக்கலமும் போனது. அந்தக் கட்டத்தில் அவருக்கு ஆறுதலாக அமைந்தது நீண்ட காலமாக நடைபெற்று வந்த விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்ததுதான். உச்சநீதி மன்றம் அவருடைய சொத்துக் களை மீட்டுக் கொடுத்தது. தொண்ணூறுகளின் இறுதியில் வாய்ப்புகள் குறையத் தொடங்கின. முன்னாள் கனவுக் கன்னிகளாக இருந்த நடிகைகள் பலரும் அம்மாக்க ளாகவும் அண்ணிகளாகவும் மறு பிறவியெடுத்தபோது ஸ்ரீவித்யா தொலைக் காட்சிக்குத் திரும்பினார். அழைக்கப்பட்ட சினிமா வாய்ப்புகளை மட்டுமே ஒப்புக் கொண்டார். அவற்றில் பெயர் சொல்லும் படியானவை குறைவு.

புதிய நூற்றாண்டில் ஸ்ரீவித்யா சென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்குக் குடிபெயர்ந்திருந்தார். மலையாளப் படங்களிலும் தொலைக் காட்சித் தொடர்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். தெலுங்கு நடிகை சாரதாவுக்குப் பிறகு மலையாளக் கலாச்சார உலகம் சொந்தம் பாராட்டியது தமிழ் நடிகை ஸ்ரீவித்யாவிடம்தான் என்று படுகிறது. ஒரு நடிகையாக அவரை மதிப்பிட அவர் நடித்த மலையாளப் படங்கள்தான் துணைவரக் கூடும். தமிழில் செய்ததை விட வித்தியாசமான பாத்திரங்கள் அவற்றில்தான் கிடைத்தன. இரண்டு முறை மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் மூன்று முறை சிறந்த குணச்சித்திர நடிகைகான விருதையும் பெற்றார். எல்லா வற்றுக்கும் மேலாக அவருடைய இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டது.

ஸ்ரீவித்யாவை ஓரிரு முறை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தது. பணியாற்றிக் கொண்டிருந்த வார இதழின் ஆசிரியர் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டபோது நான் பேட்டி காண விரும்பிய பிரபலங்களில் ஸ்ரீவித்யாவும் ஒருவர். தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மேலிருந்த 'நல்லெண்ணம்' காரணமாக அவர் ஒப்புக் கொள்ள மறுத்துக் கொண்டே இருந்தார். அவருக்கு நெருங்கிய திரைப் பிரமுகர் ஒருவரின் சிபாரிசுக்கு இசைந்து அரை மனதுடன் சம்மதித்தார். ஆழ்வார் பேட்டையில் அவரது இல்லத்தில் சந்தித்த முதல் பத்து நிமிடங்கள் ஒரு காலத்திய கனவு தேவதையை நேரில் பார்ப்பதில் விடலைத்தனமான அசட்டுணர்ச்சிக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்ற எச்சரிக்கையில் இருந்தேன். எப்படியாவது என்னை சீக்கிரம் வழியனுப்பி வைத்துவிடும் எண்ணத்தில் அவர் இருந்தார். சம்பிரதாயமான கேள்விகளுக்குப் பிறகு அவர் நடித்த படங்களைப் பற்றி. குறிப்பாக மலையாளப் படங்களைப் பற்றிப் பேசத் தொடங்கியதும் அந்தப் பெரிய கண்களில் தோழமை சிரித்தது. முக்கால் மணி நேர உரையாடலில் அவருடைய மனம் கிட்டத்தட்டக் கொட்டப்பட்டிருந்தது. தண்டாயுத பாணிப் பிள்ளையிடம் நாட்டியம் கற்றுக் கொண்ட நாட்கள், முறையாகப் பயிலா விட்டாலும் ரத்தத்தில் இசை ஓடுவதை உணர்ந்த கணம், முதல் காதல், இரண்டாவது அவசரக் காதல், அதன் விபரீதங்கள். அம்மா எம்.எல்வியின் பாட்டு, மலையாள சினிமா, தமிழ் சினிமா, சொந்த வாழ்வு என்று எல்லாவற்றையும் பற்றிப் பேசினார். விடை பெற்ற போது பெருமிதமாக இருந்தது. பத்திரிகையாளனின் வெற்றிப் பூரிப்பு இருந்தது. இவ்வளவு பட்டவர்த்தனமான நேர்காணலை வெளியிட முடியுமா என்ற தயக்கமும் இருந்தது. மறுநாள் நேர்காணலைத் தாளில் எழுதத் தொடங்கிய சற்று நேரத்தில் தொலைபேசி அழைப்பு. எதிர்பார்த்தது போலவே ஸ்ரீவித்யா. நேர்காணலை வெளியிட வேண்டா மென்று கேட்டுக் கொண்டார். அது வெளியானால் பலரும் தர்மசங்கடப்படுவார்கள் என்றார். தேவதையின் வேண்டுகோளை எப்படி மீற? பேட்டி வெளியாகவில்லை. சில வருடங் களுக்குப் பிறகு அதே தகவல்களை வேறொரு தொலைக்காட்சிப் பேட்டியில் சொல்லியிருந்தார். சொந்த வாழ்க்கையின் கசப்புகளை புன்னகையுடனும் சிரிப்புடனும் யாரையும் குற்றம் சாட்டாமல் சொன்ன விதம் அவரை மேலும் மதிப்புக்குரியவராக்கியது.

மலையாளத் தொலைக்காட்சியின் தலைமைச் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய நாட்களில் ஸ்ரீவித்யாவை மீண்டும் சந்திக்க வாய்த்தது. பத்திரிகையாளர் யூனியன் நடத்தும் கருத்தரங்கத்துக்கு அழைப்பதற்காகச் சென்றிருந்தோம். அறிமுகப்படுத்திக் கொண்டபோது பழைய பேட்டியை நினைவுபடுத்தினேன். என்னை வெளியிட வேண்டாம் என்று தடுத்த அதே தகவல்களை தொலைக்காட்சி நேர்காணலில் சொல்லியிருப்பதை ஆதங்கத்துடன் சொன்னேன். 'அன்றைக்கு வேண்டாமென்று தோன்றியது. இப்போது பேசலாம் என்று பட்டது. அன்றைக்கு இருந்ததை விட இன்றைக்குப் பக்குவம் கூடியிருக்கிறதில்லையா? ஒவ்வொரு அனுபவத் திலிருந்தும் பக்குவமடையவில்லை என்றால் அப்புறம் நாமென்ன மனிதர்கள்?' என்றார். அந்த பதில் என்னை வெட்கமடையச் செய்தது. வருவதாக ஒப்புக் கொண்டிருந்தும் அவர் கருத்தரங்கத்துக்கு வரவில்லை. காரணம் உடல் நலமின்மை என்று தெரிவிக்கப் பட்டது. உண்மையில் அந்தச் சமயத்தில்தான் அவருக்கு மார்பகப் புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் கடைசிவரைஅதை ரகசியமாகவே வைத்திருந்தார். உருவக் குலைவு ஏற்படாமலிருக்கச் சிகிச்சைகள் மேற்கொண்டார். கடைசி வரை அந்த அகன்ற விழிகளின் உயிர்ப்பையும் முகத்தின் பிரகாசத்தையும் மருந்துவம் காப்பாற்றியது. மரணம் நெருங்குவது தெரிந்ததனாலோ என்னவோ தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார். படங்கள், தொடர்கள் என்று தன்னை மறந்து நடிப்பில் ஈடுபட்டார். மேடையேறிக் கச்சேரிகள் செய்தார். சாயிபாபாவின் பக்தராகியிருந்தார்.

கடைசியாக அவரைச் சந்தித்தது 'வேனல் மழ' என்ற தொலைக்காட்சித் தொடரின் பூஜை வேளையில். நான் பணியாற்றிய தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகவிருந்த தொடர். அதில் மையப் பாத்திரம் ஸ்ரீவித்யா. அந்தத் தொலைக்காட்சியில் அதுவரை ஒளிபரப்பான தொடர்களில் அசட்டுத் தனமில்லாத தொடர் அதுதான். நலம் விசாரிப்புடன் முடிந்த அந்தச் சந்திப்புக்குப் பிறகு அவரைப் பார்த்தது திருவனந்தபுரம் வி.ஜே. டி.ஹாலின் மையத்தில் திரளான மக்கள் கூட்டத்தின் நடுவில் உயரமான மேடைமேல் வைத்திருந்த கண்ணாடிப் பேழைக்குள். யாரோ ஒருவர் கூடையிலிருந்து ரோஜா இதழ்களை அள்ளிக் கையில் திணித்தார். அதைப் பேழைமேல் தூவியபோது எந்த நொடியும் 'ஷாட் ஓகே' என்ற குரல் வரும். விளக்குகள் மங்கும். பேழைக்குள்ளிருந்து எழுந்து வருவார் என்று தோன்றியது.

***


இணைப்பு: www.thesundayindian.com

செவ்வாய், 11 அக்டோபர், 2011

வம்ச புராணம்



பூர்வ ஜென்மத்தில் நாங்களெல்லாம்
கழுதைகளாக இருந்தோமாம்

பரண்பொருட்களுக்கிடையில்
பூசணம் பூத்துப் பதுங்கிக் கிடக்கும்
பழஞ்சுவடி ஆதாரம்
அவரவர்
இருப்பும் நடப்பும் அத்தாட்சி

எப்போதும் உண்மை
அதிர்ச்சியை அதிரச் செய்வது
எனினும் ஒருவேளை
சரியாகவும் இருக்கலாம்

குதிரையாக மாறும் முன்பு
விடுபட்ட பிறவி
கழுதையாகப் பரிணமித்ததுபோல
பிசாசாகவோ கடவுளாகவோ மாறுவதற்கிடையே
மனிதர்களாகத் திரிக்கப்பட்டவர்கள் நாங்கள்

சொல்லக் கேட்ட பாட்டனின்
பார்த்துப் பழகிய அப்பனின்
பார்த்துப் பார்த்து அலுத்த என்
முகங்களில் தெரிகிறது
கைவிடப்பட்ட விலங்கின் துயரம்
கண்களில் ததும்புகிறது
வழிந்து விடாத அப்பிராணிக் கண்ணீர்

எனவே
பழஞ்சுவடிச் சான்று ஒருவேளை
உண்மையாகவும் இருக்கலாம்

ஏழாம் பிறைபோல எனக்கும்
ஐந்தாம் பிறைபோலத் தந்தைக்கும்
மூன்றாம் பிறைபோலத் தாத்தாவுக்கும்
கழுதைக் கூன் முதுகுகளாம்

முதிர்ந்தவர் வார்த்தை ஒருவேளை
மெய்யாகவும் இருக்கலாம்

பாட்டன் சுமந்தது உப்பு மூட்டை
அப்பன் சுமந்தது பஞ்சுப்பொதி
நான் சுமப்பது மண்பாரம்

எனினும்
எங்களை விட அதிகம் சுமந்தாலும்
கழுதையின் முதுகில் கூன் விழவில்லை,
ஏன்?

















ஞாயிறு, 9 அக்டோபர், 2011

நதிக் காட்சி




கரையொதுக்கிக் கட்டப்பட்ட
அசையும் தோணிக்குள்
மிஞ்சிய மழைநீர்
அதில்
சிலிர்த்துக் கொண்டிருக்கிறது நிலவு
பூமிக்கு ஒளிபொழிந்த கருணையில்.

பக்கம் 175 ;பூமியை வாசிக்கும் சிறுமி (2007)