ஞாயிறு, 13 நவம்பர், 2011

கபீர் நெய்துகொண்டிருக்கிறார்






மனம் - தறி
வாக்கு - இழை
பூமிக்கான ஆடையை
நெய்துகொண்டிருக்கிறார் கபீர்

நெய்யும் துணியின் மறுமுனை
எங்கே முடிகிறது?
நதிபோல் கடலிலா?
வானம்போல் வெளியிலா?

சொல்கிறார் கபீர்:
'உருவமற்ற நாடா
ஊடோடிப் பின்னிய துணி
கரையோ நுனியோ இல்லாதது'.

நெசவின் தரமென்ன?
கனத்த கம்பளியா?
இழைத்த பருத்தியா?
மெல்லிய பட்டா?

சொல்கிறார் கபீர்:
'நீரினும் மெல்லியது
புகையினும் நுண்ணியது
காற்றினும் எளியது'

நெய்த துணிக்குச் சாயமெது?
வெயிலின் காவி?
பிறையின் பசுமை?
நட்சத்திர வெள்ளி ?

சொல்கிறார் கபீர்:
'நிறம் நிறத்திலிருந்தே பிறக்கிறது
எனவே
எல்லாம் ஒரேநிறம்
உயிரின் நிறமென்ன சகோதரா!
நீதான் கண்டுபிடியேன்'

தறி இறக்கி நிறந்தோய்த்த துணியை
எப்படிப்போய் விற்க?
எவர்வந்து வாங்க?

சொல்கிறார் கபீர்:
'வாங்குபவர் மொய்க்கும்
சந்தையில் நானில்லை
என் இடம்தேடி
வாடிக்கை வருவதில்லை'

உடுப்பவர் இல்லாமலா உடை?
எவர் அணிவார் பூமியின் வஸ்திரம்?

சொல்கிறார் கபீர்:
'தோல் ஒன்று எலும்பும் ஒன்று
சிறுநீர் மலம் எல்லாம் ஒன்று
ஒரே ரத்தம்
ஒரே மாமிசம்
ஒரே துளியில் உருவானது பிரபஞ்சம்
பிராமணனென்ன? சூத்திரனென்ன?
உடுப்பவன் யாரானால் உடைக்கு என்ன?'

எவர் நிர்வாணம் காக்குமிந்தச் சொல்?
ஆண் அல்லது பெண்?

சொல்கிறார் கபீர்:
அதுதானே மனிதா, பெருங்குழப்பம்
வேதம் எது?
குர் ஆன் எது?
எது புனிதம்?
எது நரகம்?
ஆண் எது? பெண் எது?
காற்றோடு விந்துமுயங்கி
இறுகிச் சுட்ட மண்பாண்டம்
விழுந்துடைந்த பின்பு
என்ன என்பாய்?

மனம் - தறி
உண்மை - இழை
பூமிக்கான வாக்கை
நெய்துகொண்டிருக்கிறார் கபீர்.




வாசிப்பு






காத்திருக்க வேறிடமின்றி
நூலகத்தை நீங்கள் தேர்ந்தது
இயல்பானது -

காலத்தைக் கடந்து
வெளியை மீறி
மொழியைத் துறந்து கேட்கும்
குரலுக்காகவோ
அல்லது
காகிதமணத்தின் போதைக்காகவோ
அல்லது
அலுத்துச் சுழலும் மின்விசிறியின்
சங்கீத மீட்டலுக்காகவோ
அல்லது
நூலகத்தில் கவிந்திருக்கும்
நிர்ப்பந்த அமைதிக்காகவோ
நீங்கள் நூலகத்தைத் தேர்ந்திருக்கலாம்.

காலியிருக்கைகள் பல கிடக்க
முந்திய விநாடியில்
ஆளெழுந்துபோன
நாற்காலையைத் தேர்ந்ததும்
இயல்பானது -

காற்றோட்டமான இடமென்பதாலோ
அல்லது
முன்னவர் மிச்சமாக்கிய
மனிதச் சூட்டை உணர்வதற்காகவோ
அல்லது
பின்னல் அவிழ்ந்த ஆசனத்தை
யோசனையுடன் முடைவதற்காகவோ
அல்லது
கற்பனைக்கு உகந்த தோற்றத்தில் உட்கார்ந்து
மனதுக்குள் ரசிப்பதற்காகவோ
நீங்கள் நாற்காலியைத் தேர்ந்திருக்கலாம்.

நூலகத்தில் நீங்கள் அமர்ந்திருக்கும் மேஜைமேல்
முன்பு இருந்தவர்
பாதி வாசித்துக் குப்புறக் கிடத்திய
புத்தகத்தை எடுத்ததும்
அவர் விட்டுப்போன பக்கத்தில்
வாசிப்பைத் தொடங்கியதும்
இயல்பானது.

எனது சந்தேகம்
அவர் எங்கே நிறுத்தினார் என்பதை
நீங்கள் அறிவீர்களா?
இரண்டு பக்கங்களில்
இரண்டு பக்கங்களிலுமுள்ள பத்திகளில்
இரண்டு பக்கப் பத்திகளின் வாக்கியங்களில்
எங்கே அவரது நிறுத்தம்?
அங்கிருந்து நீங்கள் தொடங்குவீர்களா?
அல்லது
நீங்களும் மேஜைமேல்
குப்புறக்கிடத்திப் போனால்
அடுத்தவர் எங்கிருந்து தொடங்குவார்?

ஒரு புத்தகம்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு புத்தகமாவது
எவ்வளவு இயல்பானது.

புதன், 2 நவம்பர், 2011

புத்தகங்களின் கூட்டறிக்கை






பொதுவாக நாங்கள் நிர்க்குணமானவர்கள்
எங்களைப் புரட்டும்போது
முனகலைவிடவும்
சுவாசத்தைப்போலவும் எழும்
மெல்லிய ஓசையிலிருந்து
நீங்கள் அதைத் தெரிந்து கொண்டிருக்கலாம்.


நீங்கள் அறியாத ஏதோ வனத்தின்
பூர்வ ஜென்ம பந்தம்
இன்றும் எங்களுக்குள் தொடர்கிறது
நாங்கள் புரண்டுகொடுக்கும்போது
ஒரு கானகமும் அசைவதைக் கவனித்திருக்கலாம்


நீங்கள் தொட்டுத் துடிப்பறியாத நாளங்களில்
மண்ணின் குருதி
இன்றும் எங்களுக்குள் பாய்கிறது
மை வரிகளுக்கிடையில் விரலோட்டும்போது
அதன் ஓட்டம் அதிர்வதை உணர்ந்திருக்கலாம்


உங்களில் யாரோ ஒருவரின்
கண்டு தீராக் கனவு
இன்றும் எங்களுக்குள் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது
திரைக் காட்சியைப்போல
முதுகுக்குப் பின்னாலிருந்தல்ல
தொலைக்காட்சியைப்போல
தலைக்கு முன்னாலிருந்தே
அது எல்லார் கண்களுக்குள்ளும் நுழைவதைப் பார்த்திருக்கலாம்

பொதுவாக நாங்கள் சாத்வீகமானவர்கள்
எங்களில்
உன்னதர்களும் நடுவர்களும் கடையர்களும்
நிர்வாணிகளும் வேடதாரிகளும்
வழிகாட்டிகளும் திசைதிருப்பிகளும் இருப்பது உண்மை
எனினும்
நாங்கள் விதிகளை மதிப்பவர்கள்
எங்களைப்போல வரிசையைக் கடைப்பிடிப்பவர்களை
நீங்கள் ஒருபோதும் காணமுடியாது

நாங்கள் சமாதானப் பிரியர்கள்
எங்களுடைய
ஒரு பக்கம் கிழியும்போது
மறுபக்கம் தானாகவே பிய்த்துக் கொள்கிறது
அழிந்தும் அழியாமல் இருக்கிறோம் என்பது உண்மை
ஏனெனில்
நாங்கள் பக்கங்களில் மட்டும் இருப்பவர்களல்ல

நாங்கள்
குணமற்றவர்கள்
இன்முறையானவர்கள்
அமைதி விரும்பிகள்

எனினும் நீங்கள்
எப்போதும் எங்களை நினைத்து மிரளுகிறீர்கள்
வரிசையாக நிற்கும் நாங்கள்
விதிகளை மீறி
ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்படுவோம் என்றும்
அதன் உயரம்
உங்களை விட உயர்ந்திருக்குமென்றும்
அஞ்சுகிறீர்கள்
பிய்த்துக் கிழித்தாலும்
எங்கள் பக்கங்களுக்கிடையிலிருந்து
அழியாக் கனவுகளின் சாபம்
உங்களைப் பின் தொடரும் என்று
பயப்படுகிறீர்கள்

உங்கள் வெருட்சிக்குக் காரணம்
நாங்களல்ல
பயத்தின் களிமண் கால்களில் நிற்கும்
உங்கள் அதிகார உடல்

நாங்கள் அப்பாவிகள்
தன்னியக்கமில்லாத வெறும் ஜடங்கள் -
மனதில் ஜுவாலையுள்ள ஒருவர்
எங்களைத் தொடும்வரை.