வியாழன், 17 டிசம்பர், 2009

கடவுளின் எண்



















நீர்மட்டத்துக்குமேல்
திவலைகள் உருண்டிறங்கும்
இடதுகை மட்டும் தெரிய ஒருவன்
குளத்தில் மூழ்கும் காட்சி
அவ்வப்போது கனவில் படர்ந்து
தூக்கம் முறிகிறது.

எல்லாரும் பார்த்திருக்க மூழ்கியவனின்
கடைசி வார்த்தைகள்
ஆழத்திலிருந்து குமிழிகளாய் உயர்ந்து
மேற்பரப்பில் மிதந்தன.

படியருகே அலைந்த மீன்கூட்டம்
இரை என்று விரைந்து
குமிழிகளைக் கொத்தி உடைத்தன
சிதறிய வார்த்தைகள் நீர் வட்டங்களாகக்
குளமெங்கும் பரவின
சதுரக் குளத்தைத் தாண்டிய வட்டங்கள்
கையணையில் தலைசாய்த்துறங்கும்
கரைப் பெருமானின் கால்களைத் தீண்டின
ஈர மொழியில் முறையிட்டன

அறிதுயிற் பெருவிழிகள் மெல்லத் திறந்து
இடது கையால் பாதம் சொறிந்த பின் - அவர்
மேனியை நீட்டி மீண்டும் கிடந்தார்
இரவு மேகம் இறங்கியதுபோல்
மெல்ல அடைந்தன தாமரைக் கண்கள்

கடவுளின் விழிகளே மூடிய பின்னர்
நமக்கென்ன என்று எல்லாரும் தவிர்த்தனர்
எல்லா முகத்திலும் கடவுளின் நிர்க்குணம்
எல்லா நடையிலும் குற்றத் தடுமாற்றம்

இறந்தவன் மிதந்து கரை மீட்டபோது
இடதுகையைக் கவனமாய்ப் பார்த்தேன்
உள்ளங்கையில்
பெயரோ எண்ணோ
எழுதிய சுவடு கலைந்த மிச்சம்

என் பெயரல்ல
என் எண்ணல்ல
பார்த்த எல்லாரும் நிம்மதியடைந்தோம்

அவ்வப்போது கனவில் தெரியும்
இடது உள்ளங்கையில் கறைபோலிருப்பது
யார் பெயர், யார் எண்?
நெருங்கிப் பார்க்க முற்படும் முன்பே
தூக்கம் முறிக்கும் கனவு
குற்றம் உணர்த்தும் நெஞ்சு

ஒருவேளை
கடவுளின் பெயரோ எண்ணோ ஆக
இருக்கக்கூடுமோ அது?

திங்கள், 14 டிசம்பர், 2009

பலிக்கோழை




@



அபத்தமானவையென்றும்
கொடூரமானவையென்றும்
தெரிந்தும் கூட
உமது ஆணைகளை ஓர் எழுத்துப் பிசகாமல்
நிறைவேற்றியிருக்கிறேன், ஐயா,
அப்போதெல்லாம் நான்
என்னாலேயே அவமதிக்கப் பட்டிருக்கிறேன்.

கொன்றது நாமல்ல எனினும்
சடலங்களைக் காட்டி யாசிக்கச் சொன்னீர்
உமது வாக்கை மறுக்கத் தெரியாமல்
ஒலிபெருக்கிவைத்து
ஒப்பாரி பாடினேன்
அப்போதெல்லாம் என் கண்ணீர்
எனக்கே மூத்திரமாய்க் கரித்தது

விரித்த துண்டில் சிதறிய நாணயங்களை
பொறுக்க நீர் குனிந்தபோது
நிலம் பிளந்து உம்மை விழுங்கட்டுமென்று
விரும்பியிருக்கிறேன்
அதுவோ உம் நிலம்
நீர் சொல்லாமல் இளகுமா?

சிதைத்தது நாமல்ல எனினும்
குலைந்த முலைகளையும் கிழிந்த யோனியையும்
எல்லாரும் காண வெளியரங்கமாக்கச் சொன்னீர்
உமது கட்டளைக்குப் பணிந்து
பேரொளி விளக்கைப் பொருத்தி
ஊர்க் காட்சியாக்கினேன்
அப்போதெல்லாம் என் விந்து
என்னையே அமிலமாகப் பொசுக்கியது

காட்சிக் கட்டணத்தை
வசூலிக்க நீர் நடந்தபோது
மலைசரிந்து நீர் புதையக் கூடாதாவென்று
பிரார்த்தித்திருக்கிறேன்
அதுவோ உம் கடவுள்
நீர் ஆட்டுவிக்காமல் இயங்குமா?

விபத்துக்குக் காரணம் நாமல்ல எனினும்
இறந்து கிடந்தவனின் உடைமையை அபகரிக்கச் சொன்னீர்
உமது சொல்லுக்குப் பணிந்து
தடயமில்லாமல் திருடினேன்
அப்போதெல்லாம் என் குடல்
என் வாய்க்குள் நாகமாய் நெளிந்தது

பறிமுதல் பொருளை
கக்கத்தில் இடுக்கிக்கொண்ட உம்மை
சிறைக்குள் தள்ளிவிடத் துடித்திருக்கிறேன்
அங்கோ உம் அதிகாரம்
நீர் பேசினால் கம்பிகள் நிற்குமா?

இவை உதாரணங்கள் ஐயா,
இதைச் செய்தவர் நீரல்ல
ஆனால் நீர்தான் என்றும்
தெரியும் எனக்கு
இதைச் செய்தவன் நானல்ல
என்மேல் அமர்ந்திருக்கும் நீர்தான் என்றும்
தெரியும் உமக்கு.

எல்லாம் கடந்து
இன்று நீர்
அபகரித்தது என் பொருளை
சிதைத்தது என் குறியை
கொல்லவிருப்பது என்னை

அதைச் செய்பவர் நீரல்ல
ஆனால்
என்னைப்போன்ற இன்னொரு பலிக் கோழையின்
தோளில் வீற்றிருக்கும் நீர்தான்

நீர் அறியாமல்போனீர்
என் அவமானங்களில் கனன்றுகனன்று
இப்போது நான் எரிதழல் -
ஓர் எழுத்துப் பிசகாமல்
உமது ஆணைகளை நிறைவேற்றிய நான்
உமது பாதங்களைத் தொட்டு
ஒருமுறை ஒரே ஒருமுறை
வணங்க விரும்புகிறேன் ஐயா.

பதில் சொல்ல முடியாத கேள்விகள்


திருவனந்தபுரத்திலிருந்து சென்னை செல்லத் தயாராக நின்றிருந்த ரயிலில் எங்கள் பெட்டியில் அம்மாவுடன் ஏறியதுமே அந்தச் சிறுமி எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்தாள். மூன்றோ நாலோ வயது இருக்கும்.மாநிறம். கழுத்துவரை வெட்டிய சுருட்டை முடி. அதை மறைக்கும் குட்டி முக்காடு.திராட்சைக் குண்டுபோலக் கண்கள். இருக்கையை அடையாளம் கண்டதும் உட்கார்ந்து எல்லாரையும் ஒருமுறை பார்த்தாள்.எழுந்து அம்மாவின் கையிலிருந்த ராட்சசப் பெட்டியை வாங்கி சிரமப்பட்டு இழுத்து இருக்கைக்கு அடியில் தள்ளிவிட்டாள். மலையாளித் தனமான தோள் குலுக்கலுடன் எல்லாருக்கும் 'சலாம் அலைக்கும்' சொன்னாள். அந்த ஒற்றை நொடியில் எல்லாருக்கும் அவளைப் பிடித்துப் போயிற்று.

திரோந்திரத்திலிருந்து எர்ணாகுளத்துக்கு உம்மாவுடன் போகிறாள். அவளுக்கு அதுதான் முதல் ரயில் பயணம். பெட்டியில் இருந்த எல்லாரிடமும் அவளே பிரகடனப் படுத்திக் கொண்டாள். அவளுடைய உப்பா வளைகுடா நாட்டில் வேலை செய்கிறார். அங்கே நடந்த விபத்தில் அவருக்குக் காயம்பட்டிருக்கிறது.அதனால் அவர் வேலைபார்க்கும் கம்பெனி அவரை விமானத்தில் திருப்பி அனுப்புகிறது. அன்று இரவு விமானம் நெடும்பாசேரி விமானதளத்துக்கு வரும்.அங்கிருந்து உப்பாவை அமிர்தா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவார்கள். உம்மாவும் அவளும் உப்பாவைப் பார்த்துக்கொள்வார்கள். குழந்தை பேசுவதை அதன் தாய் அதட்டித் தடை செய்யப்பார்த்துத் தோற்றுப் போய்க்கொண்டிருந்தாள். தோல்வியை மறைக்க எல்லாரையும் பார்த்து வெளிச்சமில்லாத சிரிப்பை உதிர்த்தாள்.

என்னுடைய இருக்கைக்கு எதிரில் அம்மாவுக்கும் பெண்ணுக்கு இருக்கை. ''அங்கிள் என்னை ஜன்னலருகில் விடுவீங்களா?'' என்று மலையாளத்தில் கேட்டாள்.நான் நகர்ந்துஉட்கார்ந்தேன். அம்மவை விட்டு வந்து ஜன்னலருகில் உட்கார்ந்து கொண்டாள்.அவளுடைய சின்ன உடம்பிலிருந்து அத்தரின் கனத்த நெடி எழுந்து கொண்டிருந்தது.எல்ல முகங்களையும் பரிச்சயம் செய்துகொள்ளும் பாவத்தில் ஒருமுறை பார்த்தாள். பிறகு நோட்டம் ஜன்னலில் பதிந்தது. காட்சிகள் சுவாரசியமில்லாமல் போன நொடியில் அவளிடமிருந்து கேள்விகள் வந்து விழுந்தன. எல்லாருக்குமான கேள்விகள் அவளிடமிருந்தன.

என்னுடைய மீசை ஏன் வெள்ளையாக இருக்கிறது. அவளுடைய உப்பாப்பாவின் மீசை கருகருவென்று இருக்கும். அவர் பல் துலக்கும் பிரஷ்ஷால் கறுப்புப் பேஸ்ட் போட்டு மீசையையும் துலக்குவார். முன்னிருக்கையில் ஜன்னலுக்குப் பக்கமாக உட்கார்ந்திருக்கும் மாமி ஏன் அவ்வளவு பெரிய கம்மலை மூக்கில்போட்டிருக்கிறாள்.இது கம்மல் இல்லை குழந்தை. மூக்குத்தி என்றார் மாமி. அப்படியானால் வலிக்காதா? அவளுடைய வலியம்மாவுக்குக் காது நிறைய அலுக்கு. பெரிய கம்மல்.அதைப் போட்டுப் போட்டு காதே அறுந்து விட்டது. மாமியின் மூக்கு அறுந்து போகாதா? உப்பா வரும் விமானம் எத்தனை மணிக்கு நெடும்பாசேரிக்கு வரும்? அதற்குள் ரயில் அங்கே போய்ச் சேர்ந்து விடுமா? சேர்ந்து விடும் என்றாள் அம்மா. அடிபட்ட உப்பா எப்படி வருவார்?
நடந்து வருவாரா? சக்கர நாற்காலியில் உட்கார்ந்து வருவாரா? படுக்கையில் படுத்துக்கொண்டே வருவாரா? இந்த முறை உப்பா அவளையும் உம்மாவையும்
விமானத்தில் கொண்டு போவாரா? இது என்ன ஸ்டேஷன்? வர்க்கலை. அப்படியென்றால்? அது ஒரு பெயர். என் பெயர் ஜீனத். உங்கள் பெயர்? மாமி பெயர்?
அந்த அங்கிள் பெயர்? அங்கிள் பக்கத்திலிருக்கிற ஆன்ட்டி பெயர்? அந்த குழந்தையின் பெயர்? பெயர்களைத் தெரிந்து கொண்ட பிறகு கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள் அவள்.அம்மா கொடுத்த பதார்த்தத்தை யாருக்காவது வேண்டுமா என்று கேட்டு 'குழந்தையே தின்று கொள்ளலாம்' என்றதும் சாப்பிடத் தொடங்கினாள்.முடித்து விட்டு ஜன்னல் வழியாகப் பார்க்கத் தொடங்கினாள். மறுபடியும் கேள்விகள் கேட்பாளோ என்று பயமாக இருந்தது. பயந்தது போலவே மறுபடியும் கேள்விகள் ஆரம்பமாயின. அவளுடைய அம்மாவைத் தவிர எல்லாரும் தூங்குவதுபோல நடித்துக்கொண்டிருந்தார்கள். அம்மா அவளைப் பக்கத்தில் வந்து உட்கார அழைத்தாள்."இல்ல, நான் இங்கேயே இருக்கேன்" என்று ஏதோ கேட்கத் தொடங்கினாள்.

''குழந்தைக்குத் தூக்கம் வரவில்லையா?'' என்று கேட்டேன். இப்போது வரவில்லை. கொஞ்சம் கழித்ததும் வரும். அங்கிளுக்குத் தெரியுமா? தூக்கம் எங்கேயிருந்து வருகிறது? 'தெரியாது'' என்றேன். பதில் சொல்லச் சிரமமான கேள்விகளையே பெரும்பாலும் குழந்தைகள் கேட்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் ஒரு புது உலகம் கிடக்கிறது.அதன் திசைகளைத் திறந்து உள்ளே நுழைவதற்காக அவர்கள் உபயோகிக்கும் திறவுகோல்களாக இருக்கலாம் இந்தக் கேள்விகள்.

''காலுக்கு அடியிலேருந்துதான் தூக்கம் வருது.. நாம தூங்கறதுக்குப் படுத்ததும் கால்தான் முதல்லே தூங்கும்'' என்றாள் ஜீனத். நான் யோசிக்க ஆரம்பித்தேன்.

எர்ணாகுளம் சந்திப்பில் ஜீனத்தும் அம்மாவும் இறங்கினார்கள். விடைபெறும் முன்பு அவள் எல்லாரையும் தொட்டுத் தொட்டு நகர்ந்தாள். 'சிலிர்ப்பு' கதையில் ஜானகிராமன் எழுதியது போல இருந்தது. சைதன்னியமே ஒருமுறை ஸ்பரிசித்து விலகியதுபோல இருந்தது. அந்தக் குழந்தை இறங்கிப்போன பிறகு சில நிமிடங்கள் பெட்டியில் இருண்ட அமைதி கவ்வியிருந்தது.

@

ஷுன் டாரோ தனிக்காவா ஜப்பானின் பிரபலமான கவிஞராகக் கருதப்படுபவர். புகழ் பெற்ற தத்துவவாதியின் மகனாகப் பிறந்தவர்.கல்லூரிக்குப் போவதை
விடக் கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகரித்துப் படிப்பைப் பாதியில் விட்டவர். பத்தொன்பதாம் வயதிலேயே கவிஞராகப் பெரும் புகழ் பெற்றார்.

அவர் எழுதத் தொடங்கிய காலத்தில் ஜப்பானியக் கவிதையில் மேற்குப் பகுதியின் செல்வாக்கு அபரிமிதமாக இருந்தது.தனிக்காவாவுக்கு அந்தக் கவிதைகள் இரண்டாம் உலகப் போரால் ஜப்பானிய தேசத்துக்கும் கலாச்சாரத்துக்கும் நேர்ந்த தீங்குகளைப் பற்றிய புலம்பல்களாகத் தெரிந்தன . போருக்குப் பிந்திய தலைமுறையைச் சேர்ந்த இளங்கவிஞராக இருந்த தனிக்காவா யுத்தத் தோல்விக்குக்குப் பிறகு தன்னுடையதென்று ஜப்பான் கடைப்பிடித்திருந்த எல்லா
விழுமியங்களும் அழிந்து விட்டதாக நம்பினார்.அவருடைய பார்வை மேற்கத்தியகவிதைகளை நாடியது. பிரபஞ்சம் தழுவிய பிரக்ஞை என்ற கருத்தாக்கம் அவர் மனதில் பதிந்தது. நேற்றையும் நாளையையும் கடந்த ஒரு மனம். கலாச்சாரப் பாகுபாடுகளால் வகைப்படுத்தப் படாத மனம்.கவிதையில் சட்டகங்களைத் தாண்டிய மனம்.அப்படியான மனநிலையில்தான் கவிதை உருவாகும் என்று எண்ணினார். அதைக் கவிதையில் நடைமுறைப்படுத்தவும் செய்தார்.

''என்னுடைய கவிதைகளில் துன்பியலுக்கு இடமில்லை. மிகையான உணர்வுகளுக்கு இடமில்லை. மிகையான உனர்வுகளைக் கூட வெகுளித்தனமாக எழுதவே முய்ன்றிருக்கிறேன். அந்த மனம் குழந்தைகளிடம் தான் இருக்கிறது. அவர்களுடைய உலகம் புறவயமானது. குதூகலமானது. பதில் சொல்ல முடியாத கேள்விகளால் நிரம்பியது'' என்று குறிப்பிட்டார் தனிக்காவா. அவருடைய எழுத்துக்களில் பெரும்பாலானவை குழந்தைத் தனமாகவும்
குழந்தைகளுக்காகவும் எழுதப்பட்டவையாக ஆனது இயல்பானது.

@

நதி
----

அம்மா,
நதி ஏன் சிரித்துக்கொண்டிருக்கிறது?

ஏனென்றால்
சூரியன் அதைக் கிச்சுகிச்சு மூட்டுவதனால்.

அம்மா,
நதி ஏன் பாடிக்கொண்டிருக்கிறது?

ஏனென்றால்
வானம்பாடி அதன் பாட்டைப் புகழ்வதனால்.

அம்மா,
நதி ஏன் குளிர்ந்திருக்கிறது?

முன்பொரு காலத்தில் பனியால் நேசிக்கப்பட்டதை நினைப்பதால்.

அம்மா.
நதிக்கு எவ்வளவு வயதாகிரது?

வசந்தத்தின் அதே வயதுதான் நதிக்கும்

அம்மா,
நதி ஏன் ஓய்வெடுப்பதேயில்லை.

அது வீடு திரும்பவேண்டுமென்று
கடலம்மா காத்துக்கொண்டிருப்பதால்.

@


தனிக்காவாவின் இந்தக் கவிதையைப் பலமுறை வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஒரு பிஞ்சு முகம் கேள்விகளுடன் உள்ளுக்குள் துலங்கும். மேற்சொன்ன பயணத்துக்கு முன்பு வரையிலும் அந்தக் குழந்தை அநாமதேயம்.அதன் பின்னர் அந்த முகத்துக்கு ஜீனத் என்று பெயரிட்டேன்.

@

The Vintage Book of Contemporary Word Poetry.





/

புதன், 9 டிசம்பர், 2009

எங்கோ ...யாரோ...யாருக்காகவோ?


@


நண்பரும் கன்னடத்தில் புகழ்பெற்ற நாடகாசிரியரும் கவிஞருமான எச். எஸ். சிவபிரகாஷ் பன்மொழிக் கவிஞர்களின் சந்திப்புக்கு அழைத்திருந்தார். 2003 ஜனவரியில் கர்நாடக மாநிலம் பெல்காமில் கவியரங்கு நடந்தது.பெல்லாரியில் உள்ள லோகியாபிரகாசன் என்ற பதிப்பகத்தின் ஆண்டு விழாவையும் பதிப்பகம் வெளியிடும் புதிய நூல்களின் வெளியீட்டையும் ஒட்டி நடந்த இரண்டு நாள் பண்பாட்டு நிகழ்ச்சிகளின் பகுதியாகப் பன்மொழிக் கவியரங்கம் இருந்தது.

பெல்காம் மாவட்டமே பல்மொழிகள் பேசிகிற மாவட்டமாக இருந்தது. கோவா, மராட்டிய மாநிலங்களின் எல்லையில் அமைந்த மாவட்டம். அதனால்தான் பன்மொழிக் கவியரங்கமாக இருக்கட்டும் என்று தீர்மானம் செய்ததாக விளக்கம் சொன்னார் சிவா.தமிழ்க் கவிதை வாசிக்க நானும் மலையாளக் கவிதைக்காக சாவித்திரி ராஜீவனும் சென்றிருந்தோம். பத்தொன்பதாம் தேதிதான் எங்கள் கவிதை வாசிப்பு. ஆனால் அதற்கு முன்னும் பின்னுமாக இரண்டு நாட்கள் பெல்காமில் செலவிட நேர்ந்தது. கன்னடக் கவிஞர் சந்திர சேகர கம்பார் தலைமையில் கவியரங்கம்.அதில் பங்கேற்பது தவிர எனக்கு வேறு வேலையிருக்கவில்லை.மொழிபுரியாமல் கவிதைகளையோ சொற்பொழிவுகளையோ கேட்பது நரக நிர்ப்பந்தம். எனவே ஊர்சுற்றக் கிளம்பினேன். சிவா சில இடங்களைக் குறிப்பிட்டு அங்கெல்லாம் போய்வரலாம் என்றார்.

பெல்காம் கோட்டை, மகாத்மா காந்தி நினைவில்லம் என்று அலைந்தேன். கோட்டைக் குள்ளிருக்கும் சிறையில் காந்தி வைக்கப்பட்டிருந்தார் என்பதும் அதே பெல்காமில் காங்கிரஸ் சம்மேளனத்தில் பங்கெடுத்தார் என்பதும் அங்கே வைத்திருந்த குறிப்புகளிலிருந்து தெரிந்து கொண்ட தகவல்கள். கர்னாடகத்தில் நடத்தப்பட்ட ஒரே காங்கிரஸ் சம்மேளனம் அதுதான் என்பது அந்த நகரத்துக்கு முக்கியத்துவம் கற்பித்திருந்தது.

பழைமையை பின்னுக்குத் தள்ளிவிட்டு புதுமையைக் கைவசப்படுத்த எல்லா நகரங்களையும் போலத்தான் பெல்காம் இருந்தது.ஆனால் நகர மையத்தைக் கடந்தால் தென்படும் பல ஊர்கள் புதுமையின் சுவடே இல்லாமல் காலத்தின் அசைவின்மையில் உறைந்து கிடப்பவைபோலத் தோன்றின. சிவா சொன்ன ஒரு ஊர் சவுண்டட்டி. பெல்காம் நகரத்திலிருந்து இரண்டரை மணி நேரப் பயணத்தில் இருக்கிறது. 'போய்ப் பாருங்க, ஒருவேளை நீங்க திரும்பி வர விரும்பாமலும் இருக்கலாம்' என்று சொல்லிவிட்டுக் கண்களைச் சிமிட்டிச் சிரித்தார். அங்கே இருக்கிற எல்லம்மா கோவில் விசேஷம் என்றார். அதற்கு எதற்காகக் கேலியாகக் கண் சிமிட்டினார் என்று புரியவில்லை.துணைக்கு என்று பதிப்பக உரிமையாளர் அனுப்பியிருந்த கன்னட இளைஞரும் அதேபோலச் சிரித்தார்.இரு புறம் பெரிய ஆலமரங்கள் நின்றிருக்கும் சாலைகளைத் தாண்டி சவுண்டட்டி பேருந்து நிலையத்தில் காலூன்றியதும் சிவப்பிரகாஷ் ஏன் சிரித்தார் என்று புரிந்தது.பேருந்து நிலையத்தில் அங்குமிங்குமாக ஒப்பனை முகங்களுடன் பெண்கள் திரிந்துகொண்டிருந்தார்கள். பத்திரிகையாளனாக ஆந்திர மாநிலம் பெத்தாபுரம் , தமிழகத்தின் கூவாகம் போன்ற இடங்களில் அதுபோன்ற முகங்களை பார்த்திருந்த முன்அனுபவம் புரிதலை சுலபமாக்கியது.(இது தொடர்பான கட்டுரைகள் அன்னம் வெளியீடான 'திசைகளும் தடங்களும்' தொகுப்பில் உள்ளன).

குன்றின் மீது எல்லம்மாவின் கோவில் . ஜமதக்னி முனிவரால் சபிக்கப்பட்ட அவரது பத்தினி ரேணுகா தேவிதான் எல்லம்மா. கண்முன்னால் நடமாடுகிற இந்தப் பெண்கள் எல்லாரும் எல்லம்மாவின் புதல்விகள். தேவதாசிகள். அவர்கள்'கடவுளின் சேவகர்கள்; ஆனால் எல்லாருக்கும் மனைவிகள்' என்று மராட்டியில் ஒரு வாசகம் இருப்பதாக நண்பர் சொன்னார். நாங்கள் போனது சதாரணமான ஒரு நாள்.அதனால் கூட்டம் அதிகமில்லை.கோவிலுக்குள்ளும் கடைத்தெருவிலுமாக தேவதாசிகளும் திருநங்கைகளும் உலாவிக் கொண்டிருந்தார்கள். 'தேவதாசி முறைக்கு அரசாங்கம் தடை விதித்திருக்கிறது. ஆனால் பலனில்லை. இது மதச் சடங்காக மாற்றப்பட்டுவிட்டது. அதனால் எந்த அரசாங்கத்துக்கும் சட்டத்தை அமல்படுத்த தைரியம் வருவதில்லை' என்றார் நண்பர். அன்று மாலைவரை
அந்த மலைக்கோவிலுக்குள் அலைந்து கொண்டிருந்தோம்.அந்த அனுபவம் தனிக் கட்டுரைக்கான பொருள். இந்தக் குறிப்புக்குள் சேர்க்கக் கூடிய சம்பவம் ஒரு பாடலில் இருந்தது. ஆலயப் பிரகாரத்தில் அமர்ந்திருந்த தேவதாசிப் பெண்மணி இன்னொரு பெண்ணுக்குப் பாடிக் காண்பித்துக் கொண்டிருந்தார். கொஞ்சம் கரகரப்புள்ள இனிமையான சாரீரம் அந்தப் பெண்மணிக்கு.மொழி தெலுங்கு என்று புரிந்தது. கர்நாடகத்தில் தெலுங்கு ஒலிப்பது ஆச்சரியம் என்றேன். எல்லாம் பழைய விஜயநகர சாம்ராஜ்ஜியம் தானே? தெலுங்கு மொழி ஒலிப்பதில் வியப்பில்லை என்றார் நண்பர். தெலுங்குச் சொற்கள் அரைகுறையாகத்தான் புரிந்தன. அதில் கவிதையின் கூறுகள் இருப்பதுபோலப்பட நண்பரிடம் மொழிபெயர்த்துச் சொல்லும் படிக் கேட்டேன். அது பாடலல்ல. கவிதைதான். அவர் உடைந்த
ஆங்கிலத்தில் சொன்னவற்றை ஒரு தாளில் குறித்துக் கொண்டேன். அந்தத் தாள் விழாவில் வெளியிடப்பட்ட சிவப்பிரகாஷின் கன்னடக் கவிதைத் தொகுப்பின் பக்கங்களுக்குள் வெகுகாலம் ஒளிந்திருந்தது. நட்பு கருதி வாங்கிய புத்தகம். மொழிதெரியாததால் படிக்கப் படாமல் அலமாரியில் உறங்கிக் கிடந்த புத்தகம்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் புத்தகத்தை எடுத்து அந்தத் தாளை மீண்டும் படிக்கச் செய்தவர் வில்லியம் டால்ரிம்பிள். இந்திய வரலாற்று சம்பவங்களை அடிப்படையாக வைத்து நூல்களை எழுதும் டால்ரிம்பிளின் அண்மைக் காலக் கட்டுரை ஒன்றில் அந்தக் கவிதையின் வரிகள் இருந்தன. எல்லம்மா ஆலயத்துக்கு நேர்ந்து விடப்பட்ட தேவதாசிகளைப் பற்றிய கட்டுரை அது. (செக்ஸ் அண்ட் காடெஸ்ஸஸ் - தி நியூயார்க்கர் ஆகஸ்ட் 4 ,2008). நான் கேட்ட அதே பாடலை கட்டுரையில் அவரும் மேற்கோள் காட்டியிருந்தார். 'கையில் காசில்லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தடி' என்ற தமிழ்ப்பாடலின் அதே பொருளில் அதே பின்னணியில் வரும் தெலுங்குப் பாடல்.டால்ரிம்பிளின் கட்டுரையில் கிடைத்த புதிய தகவல் இந்தப் பாடல்களெல்லாம் செப்புப்பட்டயத்தில் பதித்து காலங் காலமாக திருப்பதி தேவஸ்தானப் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பது.கவிதை பொக்கிஷம் தான்.

@

நான் குறித்து வைத்த கவிதை பின்வருமாறு:


நான் மற்றவர்களைப்போன்றவளல்ல
என் இல்லத்துக்கு நீ எப்போதும் வரலாம்
ஆனால் கையில் காசிருந்தால் மட்டுமே.

நான் கேட்கிற அளவு காசில்லை என்றாலும்
கொஞ்சமிருந்தால் போதும்.
ஆனால் பிரபு கொங்கணேஸ்வரா,
ஒன்றுமில்லாமல் வந்தால் அனுமதிக்க மாட்டேன்

என் இல்லத்தின் பிரதான வாசலை மிதிக்க வேண்டுமென்றால்
நூறு பொன் வராகன் இருக்க வேண்டும் உன்னிடம்
பட்டு மெத்தை விரித்த
என் படுக்கையறையைப் பார்ப்பதென்றால்
இரு நூறு பொன் வராகன் இருக்கவேண்டும் உன்னிடம்.

என் இல்லத்துக்கு நீ எப்போதும் வரலாம்
ஆனால் கையில் காசிருந்தால் மட்டுமே.

என் அருகில் அமர்ந்து என் சேலையை
உன் கைகளால் களைவதென்றால்
பதினாயிரம்பொன் வராகன் இருக்கவேண்டும் உன்னிடம்.

என் முழுவட்ட மார்பகங்களைத் தொடவேண்டுமென்றால்
எழுபதினாயிரம் பொன் வராகன் இருக்கவேண்டும் உன்னிடம்.

என் இல்லத்துக்கு நீ எப்போதும் வரலாம்
ஆனால் கையில் காசிருந்தால் மட்டுமே.

உன் வாயை என் வாயருகே கொண்டுவரவேண்டுமென்றால்
உன் உதடுகளாம் என் உதடுகளைத் தொடவேண்டுமென்றால்
மூன்று கோடி ப் பொன்வராகன் இருக்கவேண்டும் உன்னிடம்.

என்னை இறுகத் தழுவவேண்டுமென்றால்
எனது காதல் மையத்தை ஸ்பரிசிக்க வேண்டுமென்றால்
எனக்குள்ளே மூழ்க வேண்டுமென்றால்,
கவனி,
பொன்மழையால் என்னைக் குளிப்பாட்ட வேண்டியிருக்கும்.

@

மலைக் கோவில் பிரகாரத்தில் இருள் நுழைந்து பரவிக் கொண்டிருந்தது. அந்தப் பெண் மேற்சொன்ன பாடலைமுடித்துவிட்டு வேறு பாட்டைப் பாட ஆரம்பித்தார்.பெல்காம் நகருக்குத் திரும்ப இரண்டு மணி நேரப் பயணம். நாங்களும் நடையைக் கட்டினோம். பேருந்து நிலையத்தில் பஸ்ஸுக்காக நீண்ட நேரம் காத்திருந்தோம். இரவு ஆரம்பமாகியிருந்தது. காத்திருப்பு சலிப்பாகத் தொடங்கியபோது சவுண்டட்டி பெல்காம் பேருந்து வந்தது.முண்டியடித்து
சீட்டைப் பிடித்தோம். சட்டென்று நிரம்பி விட்ட பஸ் நகரத் தொடங்கியது.ஜன்னல் வழியாகப் பார்த்தபோது கோவில் பிரகாரத்தில் கவிதை சொல்லிக் கொண்டிருந்த பெண் இன்னும் கூடுதலான ஒப்பனையுடன் பேருந்து நிலையத்துள்ளிருந்த கடையில் சாயா குடித்துக் கொண்டிருந்தார். அவர் கண்கள் மட்டும் அலைபாய்ந்து கொண்டிருந்தன.

அண்மையில் அந்தக் கவிதையை மீண்டும் புரட்டியபோது மறுபடியும் எல்லம்மாவின் புதல்வியின் முகம் நினைவில் தெளிவாக ஒளிர்ந்தது.

@

தலைப்பு ஜெயகாந்தன் கதையொன்றிலிருந்து எடுக்கப்பட்டது.

@
கட்டுரை ‘வார்த்தை’ இதழில் வெளியானது.

திங்கள், 7 டிசம்பர், 2009

இன்னும் நம்பிக்கையோடிருக்கிறோம்

@

பூமியே, என் இரத்தத்தை மூடிப் போடாதே, என் அலறலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக.

யோபு (16:18)
பரிசுத்த வேதாகமம்


@

எந்த மொழியில் இந்தக் கவிதைகள் எழுதப்பட்டுள்ளனவோ அந்த மொழிபேசும் இனத்தவர் இன்று வேற்றுக் கிரகவாசிகளாக அந்நியப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களது நிலம் பறிக்கப்பட்டிருக்கிறது. அதில் வேரோடியிருந்த அவர்களது வாழ்வு பெயர்த்தெறியப் பட்டிருக்கிறது. அவர்களது பண்பாடு அழிக்கப்பட்டிருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த போரின் விளைவாக அந்த இனம் சிதறிப் போயிருக்கிறது. தலைமுறைகளாகத் தொடர்ந்த போர், அகதிகளையும் அநாதைகளையும் ஊனமுற்றோரையும் மட்டுமே மிச்சமாக்கியிருக்கிறது. இடுகாடுகளை வரலாறாக்கியிருக்கிறது. பதுங்கு குழிகளை இறந்த காலமாகவும் அகதி முகாம்களை நிகழ் காலமாகவும் அடையாளப்படுத்தியிருக்கிறது.யுத்தம் மென்று துப்பிய சடலங்களுக்கிடையில் சாக மறுத்துத் தப்பிய ஓர் உயிரின் ஓலம் இந்தக் கவிதைகள். தன்னைப்போலத் தப்பிய சக உயிர்களின் அவலக் குரல்களும் இந்தக் கவிதைகளில் கேட்கின்றன.

இலக்கியத்தின் மேலான செயல்பாடுகளில் ஒன்று சூழலின் அனுபவத்தை வரலாறாக்குவது. தீபச்செல்வன் இந்தக் கவிதைகளில் மேற்கொண்டிருப்பது அந்தச் செயல்பாட்டைத்தான். ஆனால் இவை வரலாற்றுக் குறிப்புகள் மட்டுமல்ல; அனுபவத்தின் இடம் காலம் காரணங்களை மீறி வரலாற்றுச் சொல்லாடலின் பன்முக உண்மைகளாகச் சொல்லுவதற்கு ஏராளமான சாட்சியங்களை முன்வைக்கின்றன. அதனால் இவை கவிதையாகின்றன. இந்தக் கவிதைகளை எந்தத் தமிழ் வாசகனும் குற்ற உணர்வில்லாமல் எதிர்கொள்ள முடியாது என்று கருதுகிறேன். 'சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாகக்கண்டும் சிந்தையிரங்காமல்' கை பிசைந்து நின்றதன் குற்ற உணர்வு. இந்தக் கையறு நிலையே நமது மொழியைப்பேசும் இனத்தை உலகப் பார்வையில் அந்நியர்களாக்கியிருக்கிறது.

இன்னொரு நிலையிலும் நாம் குற்ற உணர்வுக்கு ஆளாக வேண்டியவர்கள். தமிழுக்கு ஒரு பண்டிதப் பெருமை உண்டு.நமது பழம் இலக்கியங்கள் தமிழ் வாழ்வை காதல் வீரம் என்று பகுத்து வியந்து கொண்டிருந்தன. போர் வெற்றி குறித்துபெருமிதம் கொண்டிருந்தன. நாம் பார்த்திராத அந்த அதிகார வெற்றியின் ரசத்தை என்ன சுவையென்று தெரியாமல் ருசித்துக்கொண்டிருந்தோம். ஈழத்துப் போர் நமக்கு அந்த ருசியை அடையாளம் காட்டிவிட்டது. அது ரத்தத்தின் ருசி.சக மனிதனின் மண்டையோட்டில் பரிமாறப்படும் சக உதிரத்தின் ருசி.இந்தத் தொகுதியிலுள்ள ஒவ்வொரு வரியும் அந்த ருசியை உணர்வில் புகட்டுகிறது. இதுவரை ஈழத்துப் போர்ப் பின்னணியில் எழுதப்பட்டவற்றில் எதார்த்தத்தின் கொடூரம் அதிகம் வெளிப்பட்ட கவிதைகளில் தீபச்செல்வனுடையவையும் ஒன்றாக இருக்கலாம்.

தீபச்செல்வன் ஈழத்தின் இருண்ட காலத்தின் மூன்றாம் தலைமுறை சாட்சி. முந்தைய தலைமுறைகளுக்கு எப்படியாவது போர் முடிந்து விடும் என்ற நம்பிக்கையிருந்திருக்கலாம். அதற்கான வாய்ப்புகளும் தென்பட்டன. ஆனால் மூன்றாம் தலைமுறையினரின் காலத்தில் போர் தீவிரமடைந்தது. தமிழ் பேசும் ஒவ்வொரு ஜீவனும் அரச பயங்கரவாதத்துக்கும் போராளிக் குழுவுக்கும் இடையில் சிக்குண்டு தவித்தது. இறுதி யுத்தத்தில் எல்லாம் அழிந்தன. அழிவின் நேர்சாட்சியாக இருக்கிறார் தீபச்செல்வன்; அந்தப் பேரவலத்தின் வாக்குமூலங்களாக அமைகின்றன இந்தக் கவிதைகள்.கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இந்த 2009 ஆம் ஆண்டு மே வரையிலான அன்றாட யுத்தக் கொடுமைகளையும் மக்களின் அலைமோதல்களையும் உயிருக்கு அஞ்சி ஓடிய ஓட்டங்களையும் அதற்குப் பின் வந்த நாட்களின் மனிதத் துயரங்களையும் ஏமாற்றங்களையும் ஒரு நாட் குறிப்புப்போலவே பதிந்திருக்கிறார். எல்லா நாட்களும் இருண்ட நாட்களே. எல்லா வெளிச்சமும் இருட்டின் சாயலே என்ற எதார்த்த நிலைமையை இந்தக் கவிதைகள் சொல்லுகின்றன. பெரும்கொடுமைகளுக்குள்ளான தினங்களிலும் கவிதை தீபச் செல்வனுக்கு ஆறுதலும் ஆயுதமுமாக இருந்திருக்கிறது என்பதை எப்படி எடுத்துக் கொள்ள?

கவிதைக்கான நாசூக்குகள் இவற்றில் இல்லை. சொற்களுக்கு மெருகேற்றவோ அனுபவத்துக்குச் செறிவூட்டவோ இந்தக் கவிதைகளில் அவகாசமில்லை. நீண்ட வரிகளில் நெடுந்துயரங்கள் எரிந்துகொண்டிருக்கின்றன. இந்தக் கவிதைகள் செப்பனிடப்பட்டவையாக இருக்குமானால் அவை காட்டும் நரகம் அழகியல் பொருளாகவே இருக்கும். ஆனால் பேரிழப்பின் நிஜத்தை கவிதைகள் காட்டுகின்றன. வரலாற்றை இலக்கியம் வெல்வது இங்கேதான் என்று குரூரமாக மகிழ்ச்சி கொள்ள நேர்கிறது. தமிழுக்கு இது நேர்ந்திருக்க வேண்டாம் என்ற மனப் பதைப்பும் ஏற்படுகிறது.

இன்று ஈழத்தின் கதியற்ற நிலைக்குக் காரணம் அரசபயங்கரவாதம் மட்டுமல்ல; ஆயுதப் போராளிகளின் தந்திரோபாயங்களின் தோல்வி மட்டுமல்ல; உலக அதிகாரங்களின் தீராப் பெரும் பசியும் அதை எதிர்க்க இயலாத மக்கள் மனோபாவமுமே முதன்மையான காரணம். இந்த எல்லாக் காரணிகளையும் தீபச்செல்வன் கவிதைகளில் பகிரங்கப்படுத்துகிறார்.உள்ளூர் அரசியல், தமிழக அரசியல், இந்திய அரசியல், உலக நாடுகளின் அரசியல் எல்லாம் இணைந்துதான் இந்த நூற்றாண்டின் மாபெரும் இன அழித்தொழிப்பை நடத்தியிருக்கின்றன. ஈழத்தின் ஒவ்வொரு நாளையும் விடிவற்ற நாளாக ஆக்கியிருக்கின்றன என்பதை இந்தக் கவிதைவரிசை புலப்படுத்துகிறது. 'எனினும் நீயும் நானும்/நமது சனங்களைப்போலவே/ இன்னும் நம்பிக்கையோடிருக்கிறோம்' என்று வெளிச்சத்துக்கு ஏங்குகிறது.

நிலத்திலிருந்தும் காலத்திலிருந்தும் ஏறத்தாழ முற்றிலும் பெயர்த்து வீசப் பட்ட ஓர் இனத்தின் வாதையைச் சொல்லும் கவிதைகளை வியாக்கியானிப்பது கடினம். ஏனெனில் அவை இலக்கிய வடிவமாக மட்டும் நிற்பவையல்ல. வரலாற்றின் வடுக்களாக நிலைத்திருப்பவை.மானுட நினைவில் குற்ற முட்களாகத் தைத்திருப்பவை. தலைமுறைகளைக் கடந்து எச்சரிக்கையாக இருப்பவை. ஓர் இலக்கியவாதி வரலாற்றாளனின் பாத்திரத்தை மேற்கொள்ளும் இந்தத் திருப்பத்தை தீபச்செல்வன் உண்மையுணர்வுடன் கடமையாற்றியிருக்கிறார். ஆனால் அது தன்னை அழித்துக் கொண்டு நிறைவேற்றும் கடமை.

இரண்டாம் உலகப் போரின் அழிவுகளைப் பதிவு செய்த இலக்கியங்கள் உலக இலக்கியத்தில் அதிகம். அதில் பெர்டோல்ட் பிரக்டின் வரியும் ஒன்று. 'இருண்ட காலத்தில் பாடல் இருக்குமா? இருக்கும். இருண்ட காலங்க¨ளைப் பற்றியதாக இருக்கும்'. தீபச்செல்வனும் ஓர் இனத்தின் இருண்ட காலத்தைக் கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார்.இருண்ட காலம் விலகும். வெளிச்சம் வரும் என்று நம்புகிறார்.அந்த நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டு ஒளிவரக் காத்திருப்பதுதான் நாமும் செய்யக் கூடியது.

*

(உயிர்மை பதிப்பகம் வெளியிடும் தீபச்செல்வனின் ‘ ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்’ கவிதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை)

நதியின் நீளம்

பூமியில் எழும்பி நின்ற
கருணையின் மூடுபனியைக்
கைப்பிடிக்குள் தேக்கினேன்
ஆதி நதியாயிற்று
அது.

பிடிக்குள் தளும்பிய நீரை
ஐந்துவிரல்களின் இடையில் கசியவிட்டேன்
அது
நான்கு ஆறுகளாகப் பெருகியோடியது.

முதலாவது ஆறு
உங்கள் வேட்கையின் கரையில் பாய்ந்தது
அதை
அதிகாரம் தழைப்பதற்காக ஒப்புக்கொடுத்தீர்கள்

இப்போது
நாவறண்டு திரிகிறீர்கள்.

இரண்டாவது ஆற்றை
உங்கள் ஆன்மாவின் துறைக்குள் ஓடவிட்டேன்
அதை
கனவுகள் வாங்க விற்றீர்கள்

இப்போது
உடல்சுமந்து அலைகிறீர்கள்

மூன்றாவது ஆற்றை
உங்கள் உறவுகளின் முடிச்சாக்கினேன்
அதை
பணயம்வைத்துத் தோற்றீர்கள்

இப்போது
சபிக்கப்பட்டுத் திரிகிறீர்கள்

நான்காவது ஆற்றை
உங்கள் பசிக்குணவாக்கினேன்
அதை
பனிப்பாளமாக்கிப் பதுக்கினீர்கள்

இப்போது
யாசித்துத் தடுமாறுகிறீர்கள்


நதியை நீங்கள்
நீளவாக்கில் அளந்தது பிழை

இரு கரைக்கும் இடையிலுள்ள தூரம்
இரு கரைக்கும் இடையிலுள்ள சஞ்சாரம்
இரண்டின் பெருக்கமே நதியின் நீளம்.

நீங்கள்
நிர்மாணித்த பாலங்களுக்குக் கீழே
ஆதியில் உற்பத்தியான நதிகளில்
பெருக்கெடுத்தோடுகிறது உதிரம்.

வனவாசி

அண்ணத்தில் ஒட்டிய மீசைத்துணுக்கைத்
துழாவி வெளியேற்றியதும்
படியிறங்கி அவன் போனதும்
தற்செயலல்ல;
நீண்ட யுகமாகக் காத்திருந்த தருணம்.

தாழிட்ட கதவுக்கு இப்பால்
அவள் மட்டுமானாள் அவள்

உடலில் கனத்த ஆடைகள் களைந்து
கொடியில் எறிந்தாள்
அவை
கசங்கி விரிந்து பசுந்தழைகளாயசைந்தன

நிலைக்கண்ணாடி
உருகிக் கரைந்து தரையில் தேங்கி
நீர்நிலையாகத் தளும்பி
அவள் பார்க்கச்
சிலிர்த்து நெளிந்தது

உலோகக் குழாய் அகன்று
முடிவற்ற அருவியாய்ப் பொழிய
நனைந்த உடலில் மிஞ்சிய துளிகளை
துவட்டி நீக்கியது காற்று

பாரமே இல்லாத நீர்க்குமிழிகள்போல
துள்ளி நடக்கையில் ததும்பின மார்புகள்

அறைக்குள் அலைந்த வெளிச்சம்
மழிக்கப்படாத உறுப்பில் கைவீசி அளைந்தது

யாருமற்ற பொழுதில் புலர்ந்துகொண்டே இருந்தாள்
யாருமற்ற இடத்தில் பரவிக்கொண்டே இருந்தாள்

அழைப்புமணி வெருட்டியதும்
எறிந்த தழைகளை மீண்டும் அணிந்து
தாழிட்ட கதவை நெருங்கும் முன்னர்
ஈர உடைகள் கனத்து எரிந்தன

வெளியேற்றியதாய் மறந்த
மீசைரோமம் பற்களுக்கிடையில் நெருடியதும்
திறந்த கதவுக்கு இப்பால்
அவன் வந்து நின்றதும்
தற்செயலல்ல.

'கதவைத் திறக்க ஏனிந்தத் தாமதம்'
கேட்டான் அவன்
'வீட்டுக்கு அப்பால்
வெகுதொலைவில் இருக்கிறதே என் கானகம்'
சொன்னாள் அவள்.

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

காமம் செப்புதல்


சுகுமாரன்
_________________

நீ தாகபூமியும்
நான் நீர்மேகமுமாய் இருந்தோம்
பிணக்குக்கு முன்பு.

உன் விடாய் தணிக்கப்
பொழியத் தயங்கியதே பிணக்கின் காரணம்

பிணங்கிக் குமுறிய பூமி
மேல்நோக்கி உருண்டது
நின்று தயங்கிய மேகம்
தழைந்திறங்கி மல்லாந்தது

இந்த உடற்பெயர்ச்சியில்
இப்போது
பூமி நான்
மேகம் நீ

பூமியை உறிஞ்சிவிடப்
பொழிகிறது
பொழிந்து தணிகிறது மேகம்

சினம் தணியக்
கூடலும் ஆயுதம் ஆவதெப்படி?
யோசித்துக் கிடந்த என் உதடுகளில்
சொட்டி விழுகிறது உன்
ஒரு துளிக் கண்ணீர்

அந்த ஒற்றைத் துளியில்
நூறு கடலின் உவர்ப்பு
அந்த ஒற்றைத் துளிக்கு
உறைபனிப் பாறையின் கனம்

ஆணொருபாகினி


சுகுமாரன்
_________________

மதனப்பள்ளி.
தெருவில் அனல் உதிரும் பகலாக இருந்தது அப்போது.

வட்டமிட்டிருந்தார்கள் அவர்கள். ஆண். பெண். குழந்தைகள்.
வட்டத்துக்குள்ளிருந்தாள் அவள்.

விநோத ரூபிணி. வீதி நர்த்தகி. அபூரணி. இரக்கத்துக்குரியவள்.
வட்டத்தின் உள் விளிம்பில் அவன். விநோதரூபன். வீதி இசைஞன். பூரணன். அவளின் தோழன். வட்டத்தைக் கடந்து ஒலிக்கிறது இசை. டோலக். திமிரி. யாசகக் குரல்.

வாரிப் பின்னிப் பூச்சொருகிய சிரம். இறைஞ்சும் கடல் விழிகள்.
கைகள் குன்றிய முடத் தோள்கள்.
ஆடையின் இருளுக்குள் இறுகிய மார்புகள்.
ஒசியும் இடை.
வளர்ச்சி முடங்கிய குறுந்தொடைக் கால்கள்.

வட்டத்தைத் தாண்டி முழங்குகிறது டோலக். கலைஞனின் மூச்சில்
யாசிக்கிறது திமிரி. வட்டத்துக்குள்
குட்டைப் பாதங்கள் சுழல ஆடுகிறாள் நர்த்தகி. வட்டமிட்டுப் பார்க்கிறார்கள்.
ஆண்கள். பெண்கள். கைதட்டித்
துள்ளுகிறார்கள் குழந்தைகள்.

நானும் பார்க்கிறேன்.

o

மதனப்பள்ளி.
ரயிலடியில்
குளிர் நடுக்கும் இரவாக இருந்தது அப்போது.

வெளிச்சச் சிதறல்கள். நடுவே இருக்கைகள். சரக்குப் பொதிகள்.
நடுவே யாசகர்கள். இருக்கைகளில்
பயணிகள். ஆண். பெண். குழந்தைகள். பொதிகளின் இருளில்
யாசகர்கள். இடுக்குகளில் பெருச்சாளிகள்.

இருள் விரிந்த நடைமேடை. உறக்கம் தொலைத்தவர்கள்
நடக்கிறார்கள். ஆண்கள். அந்நியர்கள்.

நானும் நடக்கிறேன். இருளின் சந்துகள். முயங்குகிறார்கள்.
ஆண்கள். பெண்கள். ஆண்கள்.

ஆண்கள். பெண்கள். பெண்கள். ஆண்கள். மூன்றாம் பாலினர்.
பெண்கள். மூன்றாம் பாலினர்.

பெருமூச்சு விடும் எஞ்ஜின்கள். இளைப்பாறும் பெட்டிகள்.
வந்தவை. போகவிருப்பவை. ஓய்ந்த
பெட்டிக்குள் பாடல் ஒலிக்கிறது. நகரும் ரயில் வெளிச்சம்
பாடலைக் காட்சியாக்குகிறது.

திளைக்கிறாள் அவள். விநோத நர்த்தகி. பாட்டில் கிறங்கித்
துவளுகிறான் அவன். விநோதக் கலைஞன். ததும்பும் இரு உடல்கள்.
கீழே அவன். மேலே அவள். துள்ளி உயர்கிறது கீழுடல்.

எம்பி அமிழ்கிறது மேலுடல். தேக வைபவம். நான் பார்க்கிறேன்.
காமத்தின் பேரிசை. நான் கேட்கிறேன். இரு உடல்கள் ஒன்றுக்கொன்று முழுமையாக்குகின்றன. நான் உணர்கிறேன். காலம் பரவசமாய் நிலைக்கிறது. நான் சிலிர்க்கிறேன்.

துய்ப்பின் கணங்கள் வடிகின்றன. பல்லக்கிலிருந்து விக்கிரகத்தை
இறக்குவதுபோலக் கையில்லாத
நர்த்தகியைப் பெயர்க்கிறான் கலைஞன். சரீரம் பிய்வதுபோல்
சரிந்து நிமிர்கிறது குறையுடல். நிர்வாண அபூரணி. கடல்விழி
விளிம்பில் மிதக்கிறேன் நான். மோகநீர் சுழலும் விழிக்குள்
ததும்புகிறது நாணம்.

பார்க்கக் கிடைத்ததா பரவசம்? எனவே நாணம். அந்தரங்கம்
காட்சியானதே? எனவே கனல்கிறது கோபம். இருளில்
மறைகிறார்கள் இருவரும்.

முயக்கத் தருணத்தில் உடல்கள் உடல்கள் மட்டும். ஆணில்லை.
பெண்ணில்லை. இரண்டும் துறந்த உயிருடல் மட்டும்.

நானும் நடக்கிறேன்.

o

மதனப்பள்ளியிலிருந்து திரும்பும்போது
கேட்டுக்கொண்டேயிருந்தது டோலக்கின் தாளம். கடவுளின்
இதயத்துடிப்புப்போல. தும்தும்நம் ததிம்தோம் நம். கேட்டுக்
கொண்டேயிருந்தது கடவுளின் முனகல்போல. குறையுடற்
பெண்ணின் இரவுப் பாடல்.

சிந்துபாத்தின் கடற்பயணம்

சுகுமாரன்

முற்றத்துக் கையகலக் குழியில் நெளியும்
மழை மிச்சத்தில்
ஏதோ செய்துகொண்டிருந்தான் சிறுவன்.

நீர்மேல் ஒரு காகிதத் துணுக்கு
அதன் மேல் ஓர் எறும்பு.

கேட்டதற்குச் சொன்னான்:
‘கன்னித் தீவுக்கு
சிந்துபாத்தின் கப்பலை அனுப்பிக்கொண்டிருக்கிறேன்.’

குழிக்கடலில் அப்போது
சீறிப் புரண்டது
ஒரு பேரலை.

காலயந்திரம்

சுகுமாரன்

புது வீட்டு வாசல் நிலையில்
கதவைப் பொருத்திக்கொண்டிருந்தார்கள்.

பொருந்தியதா என்று
முன்னும் பின்னும் கதவை அசைத்தார்கள்
அசைவில் உண்டாயின
வீடும் வெளியும்.

வேடிக்கை பார்த்திருந்த
சித்தாள் பெண்ணின் குட்டிச் சிறுமி
எல்லாரும் நகர்ந்ததும்
கதவில் தொங்கி
முன்னும் பின்னும் அசைத்தாள்.

பாதி மூடிய கதவு
உள்ளே திறந்தது. சொன்னாள்:
‘பாட்டி வீட்டிலிருந்து அம்மா வீட்டுக்கு வந்தாச்சு.’

இன்றிலிருந்து பிதுங்கிய ஒரு நொடி
காலத்தை மீறி
விரிந்தது
விரிகிறது
விரிந்துகொண்டேயிருக்கிறது