ஞாயிறு, 6 டிசம்பர், 2009

ஆணொருபாகினி


சுகுமாரன்
_________________

மதனப்பள்ளி.
தெருவில் அனல் உதிரும் பகலாக இருந்தது அப்போது.

வட்டமிட்டிருந்தார்கள் அவர்கள். ஆண். பெண். குழந்தைகள்.
வட்டத்துக்குள்ளிருந்தாள் அவள்.

விநோத ரூபிணி. வீதி நர்த்தகி. அபூரணி. இரக்கத்துக்குரியவள்.
வட்டத்தின் உள் விளிம்பில் அவன். விநோதரூபன். வீதி இசைஞன். பூரணன். அவளின் தோழன். வட்டத்தைக் கடந்து ஒலிக்கிறது இசை. டோலக். திமிரி. யாசகக் குரல்.

வாரிப் பின்னிப் பூச்சொருகிய சிரம். இறைஞ்சும் கடல் விழிகள்.
கைகள் குன்றிய முடத் தோள்கள்.
ஆடையின் இருளுக்குள் இறுகிய மார்புகள்.
ஒசியும் இடை.
வளர்ச்சி முடங்கிய குறுந்தொடைக் கால்கள்.

வட்டத்தைத் தாண்டி முழங்குகிறது டோலக். கலைஞனின் மூச்சில்
யாசிக்கிறது திமிரி. வட்டத்துக்குள்
குட்டைப் பாதங்கள் சுழல ஆடுகிறாள் நர்த்தகி. வட்டமிட்டுப் பார்க்கிறார்கள்.
ஆண்கள். பெண்கள். கைதட்டித்
துள்ளுகிறார்கள் குழந்தைகள்.

நானும் பார்க்கிறேன்.

o

மதனப்பள்ளி.
ரயிலடியில்
குளிர் நடுக்கும் இரவாக இருந்தது அப்போது.

வெளிச்சச் சிதறல்கள். நடுவே இருக்கைகள். சரக்குப் பொதிகள்.
நடுவே யாசகர்கள். இருக்கைகளில்
பயணிகள். ஆண். பெண். குழந்தைகள். பொதிகளின் இருளில்
யாசகர்கள். இடுக்குகளில் பெருச்சாளிகள்.

இருள் விரிந்த நடைமேடை. உறக்கம் தொலைத்தவர்கள்
நடக்கிறார்கள். ஆண்கள். அந்நியர்கள்.

நானும் நடக்கிறேன். இருளின் சந்துகள். முயங்குகிறார்கள்.
ஆண்கள். பெண்கள். ஆண்கள்.

ஆண்கள். பெண்கள். பெண்கள். ஆண்கள். மூன்றாம் பாலினர்.
பெண்கள். மூன்றாம் பாலினர்.

பெருமூச்சு விடும் எஞ்ஜின்கள். இளைப்பாறும் பெட்டிகள்.
வந்தவை. போகவிருப்பவை. ஓய்ந்த
பெட்டிக்குள் பாடல் ஒலிக்கிறது. நகரும் ரயில் வெளிச்சம்
பாடலைக் காட்சியாக்குகிறது.

திளைக்கிறாள் அவள். விநோத நர்த்தகி. பாட்டில் கிறங்கித்
துவளுகிறான் அவன். விநோதக் கலைஞன். ததும்பும் இரு உடல்கள்.
கீழே அவன். மேலே அவள். துள்ளி உயர்கிறது கீழுடல்.

எம்பி அமிழ்கிறது மேலுடல். தேக வைபவம். நான் பார்க்கிறேன்.
காமத்தின் பேரிசை. நான் கேட்கிறேன். இரு உடல்கள் ஒன்றுக்கொன்று முழுமையாக்குகின்றன. நான் உணர்கிறேன். காலம் பரவசமாய் நிலைக்கிறது. நான் சிலிர்க்கிறேன்.

துய்ப்பின் கணங்கள் வடிகின்றன. பல்லக்கிலிருந்து விக்கிரகத்தை
இறக்குவதுபோலக் கையில்லாத
நர்த்தகியைப் பெயர்க்கிறான் கலைஞன். சரீரம் பிய்வதுபோல்
சரிந்து நிமிர்கிறது குறையுடல். நிர்வாண அபூரணி. கடல்விழி
விளிம்பில் மிதக்கிறேன் நான். மோகநீர் சுழலும் விழிக்குள்
ததும்புகிறது நாணம்.

பார்க்கக் கிடைத்ததா பரவசம்? எனவே நாணம். அந்தரங்கம்
காட்சியானதே? எனவே கனல்கிறது கோபம். இருளில்
மறைகிறார்கள் இருவரும்.

முயக்கத் தருணத்தில் உடல்கள் உடல்கள் மட்டும். ஆணில்லை.
பெண்ணில்லை. இரண்டும் துறந்த உயிருடல் மட்டும்.

நானும் நடக்கிறேன்.

o

மதனப்பள்ளியிலிருந்து திரும்பும்போது
கேட்டுக்கொண்டேயிருந்தது டோலக்கின் தாளம். கடவுளின்
இதயத்துடிப்புப்போல. தும்தும்நம் ததிம்தோம் நம். கேட்டுக்
கொண்டேயிருந்தது கடவுளின் முனகல்போல. குறையுடற்
பெண்ணின் இரவுப் பாடல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக