சனி, 15 அக்டோபர், 2016

புலி ஆட்டம்





ன் செல்லப் பிராணி
பரம சாது என்றால்
நம்ப ஏனோ மறுக்கிறீர்கள்

சிரிக்கும்போதும் சினந்து எரியும் கண்கள்
அப்போதுதான்
திரித்து முறுக்கிய நார்வட வால்
கணக்காகப் பார்த்து
தாறுமாறாகக் கீறிய ரோமக் கோடுகள்
பாலை வெய்யிலின் உக்கிர சருமம்
நெளியும் உயிரைக் கவ்வும் வளைஎயிறுகள்
நிலம் கிழிக்கும் கொன்றை உகிர்ப் பாதங்கள்

எல்லாம் இருப்பதால்
அஞ்சி மிரண்டு நடக்கிறீர்கள்

என் செல்லப் பிராணி
சாகபட்சணி என்றால்
ஒப்புக்கொள்ள ஏனோ  தயங்குகிறீர்கள்

பசித்தால்
பசும் புல்லைத்தான் மேய்கிறது
தாகித்தால்
துளசி தீர்த்தமே அருந்துகிறது

பாருங்களேன்
புஜிபுஜி என்று அழைத்தால்
ஒரு பூனையைவிட
எவ்வளவு ஒய்யாரமாக
ஓடிவந்து காலடியில் ஒண்டிக்கொள்கிறது

உண்கலத்தில் பரிமாறிய வாதுமைக் கொட்டைகளை
ஒரு அணிலைவிட
எவ்வளவு பக்குவமாகப் பிளந்து கொறிக்கிறது

உண்ட களைப்பில்
ஒரு தியானியைவிட
எவ்வளவு சாந்தமாக சுகாசனத்தில் அமர்கிறது

பாருங்களேன்
அன்பு மீதூற அனிச்சையாக
சூச்சூ என்று ஒலி எழுப்பியதும்
முதல் மழைத்துளியில் சிலிர்க்கும் அரசந்தளிர்போல
எவ்வளவு பரவசத்துடன் முதுகைச் சிலிர்க்கிறது.

பரமசாது என் செல்லம் என்பதை
எவ்வளவு சொன்னாலும் ஏற்க மறுக்கிறீர்கள்.

என் அருமைப் பிராணி
வன் விலங்கு என்று
உங்களைப் போலவே எனக்கும் தெரியும்
எனக்குத் தெரியும் என்பது
என் செல்லத்துக்குத் தெரியாது.


செவ்வாய், 4 அக்டோபர், 2016

நடிகையும் பாதிரியாரும்






                            எர்னெஸ்டோ கார்டினல்


பழைய குறிப்பேடுகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன். எழுதத் தொடங்கி பாதியில் நின்று போன கவிதைகள். தலைப்பு மட்டும் எழுதி இன்று நினைவுக்கே வர மறுக்கும் கவிதைகள், கால், அரை, முக்கால்வாசியில் கைவிட்டவையும்  முழுதாகச் செய்து செம்மைப்படுத்தாமல் விட்டனவுமான பிற மொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்புகள் என்று பலவும் பழுப்பேறிய பக்கங்களில் இருந்தன. அவற்றில் ஒன்று லத்தீன் அமெரிக்கக் கவிஞரான எர்னெஸ்டோ கார்டினலின் கவிதை. ஏறத்தாழ முழுமையாக மொழிபெயர்த்து முடித்த கவிதை. 1986  ஆரம்பத்தில்  கொல்லிப் பாவை இதழில் வெளியிட ராஜமார்த்தாண்டனுக்கு அனுப்பி வைத்தது நினைவிருக்கிறது. இந்தக் கவிதையுடன் அனுப்பிய சொந்தக் கவிதைகள் இரண்டும் பாப்லோ நெரூதாவின் இரு கவிதைகளும் வெளிவந்தன. கார்டினலின் கவிதை வெளியாகவில்லை. அச்சகத்தில் பிரதியைக் காணாமற் போக்கிவிட்டார்கள் என்று மார்த்தாண்டன் பின்னர் தெரிவித்தார். மீண்டும் நகலெடுத்து அனுப்பச் சொல்லியும் ஏனோ செய்ய வில்லை. 

இன்று பழைய நோட்டுப் புத்தகத்தில் இந்தக் கவிதையைப் பார்த்ததும் எல்லாம் நினைவில் புரண்டன.

நிகராகுவாவைச் சேர்ந்த எர்னெஸ்டோ கார்டினல் கவிஞர். அரசியல்வாதி. சேசு சபைப் பாதிரியார். விடுதலை இறையியல் என்ற கருத்தாக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்.நிகராகுவாவின் பண்பாட்டுத்துறை அமைச்சராக பதிற்றாண்டுக் காலம் இருந்தார். நெரூதாவின் சமகாலத்தவர். 2005 ஆம் ஆண்டு நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் ஹரால்ட் பின்டர் பரிசு பெற்றார்.  கார்டினலுக்கு இப்போது 91 வயது.


                மர்லின் மன்றோவுக்கான பிரார்த்தனை






ர்த்தரே,
உலகெங்கும் மர்லின் மன்றோ என்று அறியப்பட்ட
இந்த இளம் பெண்ணை ஏற்றுக் கொள்ளும்
அது அவளுடைய இயற்பெயர் அல்ல எனினும்
( உமக்கு அவளுடைய இயற்பெயர்,  
ஆறு வயதில் வன்கலவிக்குள்ளான அநாதையும்
பதினாறு வயதில் தற்கொலைக்குத் துணிந்த
அங்காடிச் சிறுமியுமானவளின் பெயர் தெரியும் )
அவள் இப்போது எந்த ஒப்பனையுமின்றி உம் முன்னால் வருகிறாள்
தனது பத்திரிகைத் தொடர்பாளர் இல்லாமல்
புகைப்படக்காரர்கள் இல்லாமல்
ஆட்டோகிராப் வேட்டைக்காரர்களும் இல்லாமல்
அண்டவெளியில் இரவை எதிர்கொள்ளும் விண்வெளி வீரனைப்போலத்
தனியாக உம் முன்னே  வருகிறாள்


சிறுமியாக இருந்தபோது தேவாலயத்துக்குள்
தலைதாழ்த்தி வணங்கிக் கொண்டிருந்த மக்கள் திரள் முன்னால்
நிர்வாணமாக நடப்பதாகக் கனவு கண்டாள்
( டைம் இதழ் தெரிவித்தபடி )
அவர்களின் தலைகள் தரையில் படிந்திருந்ததால்
தலைகளில் மிதித்து விடாமல் கெந்தி நடக்க வேண்டியிருந்ததாம்.

உளவியலாளர்களை விடவும் நீர் எங்கள் கனவுகளை நன்றாக அறிவீர் 
தேவாலயம், வீடு, குகை , சகலமும் கருப்பையின் பாதுகாப்புப் பிரதிநிதிகளே.
ஆனால் அதை விடவும் வேறு ஏதோவும் கூட.
அந்தத் தலைகள் அவளுடைய விசிறிகள், அது நிச்சயம்
( ஒளிக்கற்றையின் கீழே இருளில் தலைகளின் பிரார்த்தனை )
ஆனால், தேவாலயம் 20 செஞ்சுரி ஃபாக்ஸின் ஸ்டூடியோ அல்ல
பளிங்கும் பொன்னும் இழைத்த ஆலயம்
அவளுடைய உடலின் ஆலயம்.
அங்கிருந்து மனித குமாரன் கையில் சவுக்குடன்
உமது வீட்டைக் கள்வர் குகையாக்கிய
20 செஞ்சுரி ஃபாக்ஸ் ஸ்டூடியோ முதலாளிகளை
விரட்டித் துரத்திக் கொண்டிருந்தார்.

கர்த்தரே
பாவங்களாலும்கதிர் வீச்சாலும் மாசடைந்த இந்த உலகில்
நட்சத்திரமாகக்  கனவு கண்ட 
வேறு எந்த அங்காடிச் சிறுமியையும் போலவே
இந்த அங்காடிச் சிறுமி மீதும்
நீர் பழி சுமத்தாது இரும்

அவள் கனவு இப்போதுதான் உண்மையாகியிருக்கிறது
( ஆனால் ஒரு டெக்னிக் கலர் உண்மை )
நாங்கள் கொடுத்த திரைக் கதைக்கு ஏற்பவே அவள் நடித்தாள்
எங்கள் சொந்த வாழ்க்கைக் கதை, ஆனால் அது அபத்தமானதாக இருந்தது
அவளை மன்னிப்பீராக, கர்த்தரே,
நாங்கள் எல்லாரும் பணிபுரிந்த
இந்த மகத்தான பிரம்மாண்ட தயாரிப்புக்காக
20 செஞ்சுரிக்காக எம்மையும் மன்னிப்பீராக.

அவள் காதலுக்காகப் பசித்திருந்தாள்; நாங்கள் அவளுக்கு 
மயக்க மருந்துகளின் சலுகையளித்தோம்
நாங்கள் புனிதர்களல்லர் என்பதால்
அவளுடைய விரக்திக்கு
உளப்பகுப்பாய்வு பரிந்துரைக்கப்பட்டது.
காமிராபற்றிய அவளுடைய அதிகரிக்கும் அச்சத்தையும்
ஒவ்வொரு காட்சிக்கும் புதிதாகக் கோரும்
ஒப்பனை மீதான் அவளுடைய வெறுப்பையும்
அந்த அச்சுறுத்தல் அவளுக்குள் எப்படி உயர்ந்தது என்பதையும்
அதுவே ஸ்டூடியோவுக்குச் செல்ல 
அவளைத் தாமதமாக்கியது என்பதையும்
நினைத்துப் பார்க்கிறோம், கர்த்தரே.

வேறு எந்த அங்காடிச் சிறுமியைப் போலவே
அவளும் நட்சத்திரமாகக் கனவு கண்டாள்
ஆனால் அவள் வாழ்க்கை எதார்த்தமில்லாதது
மனநல் மருத்துவர் விளக்கிக் சொல்லிக் கோப்புக்களில் சேர்க்கும்
கனவைப்போல எதார்த்தமில்லாதது.
அவளுடைய சரசங்கள் 
கண்களை மூடிக்கொண்டு இடும் முத்தம் போன்றது
கண்களைத் திறந்ததும்
ஒளிவிளக்குகளைக் கொல்லும் ஒளியில்
இருப்பதை உணர்கிறாள்.
படமாக்கப்பட வேண்டிய ஷாட்டுக்கான
திரைக்கதைப் பிரதியை இயக்குநர் விட்டுச் செல்லும்
அறையின் இரு சுவர்களுக்கு இடையே ( அது ஒரு சினிமா செட் )
அந்தக் கண்கள் அவளைக் கொண்டு செல்கின்றன.

ஒரு படகின் மீது ஏற்றப்பட்ட கப்பல்
சிங்கப்பூரில் ஒரு முத்தம்
ரியோவில் நடனம்
விண்ட்சர் பிரபுக்குல மாளிகையின் வரவேற்பறை
எல்லாமும் எளிய வசிப்பிடத்தின் இடுங்கிய அறைக்குள்ளேயே
பார்க்கப்படுகின்றன.
கடைசி முத்தமில்லாமலேயே திரைப்படம் முடிவடைகிறது.

தொலைபேசியைக் கையில்  பிடித்துக்கொண்டே
தனது படுக்கையில் மரித்துக் கிடந்தவளாகக் காணப்பட்டாள்
அவள் யாரை அழைக்கவிருந்தாள் என்பதை
துப்பறிவாளர்கள் ஒருபோதும் துலக்கவில்லை
தோழமையான குரலின் எண்ணுக்கு மட்டுமே அழைத்த
எவரையும் போலவே அவள் இருந்தாள்.
'ராங் நம்பர் ' என்ற பதிவு செய்யப்பட்ட குரலை மட்டுமே கேட்டாள்.
அல்லது தொடர்பு துண்டிக்கப்பட்ட தொலைபேசியை அடையும் முன்பே
பொறுக்கிகளால் தாக்கப்பட்ட எவரையும்போலவே இருந்தாள்


கர்த்தரே,
அவள் அழைக்கவிருந்ததும் அழைக்காமல் விட்டதும்
( ஒருவேளை யாரோ அல்லது
லாஸ் ஏஞ்சல்ஸ் தொலைபேசிப் புத்தகத்தில் பெயரில்லாத எவரோ )
எவர் வேண்டுமானாலும் ஆகட்டும் ,
அந்த அழைப்புக்கு நீரே பதில் சொல்லும்.



திங்கள், 30 மே, 2016

பஷீரின் ‘காதல் கடிதம்’ - முன்னுரை






லக்கியத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் சார்ந்து ஆக மொத்தம் முப்பத்தியெட்டு புத்தங்கங்களை வைக்கம் முகம்மது பஷீர் அளித்திருப்பதாக அவரது நூல் விவரப்பட்டியல் உறுதிப்படுத்துகிறது. அவற்றில் முதன்மை யானவை அவரது புனைவெழுத்துக்களே. கதைகளும் நாவல்களும். நூற்றுச் சொச்சம் கதைகள். பன்னிரண்டு நாவல்கள். மூன்று தொடர்கதைகள். இந்த வகைமைகளில் பஷீர் எழுதியவை தனித்துவமானவை. அவரது சிறு கதைகளைப் போலவும் நாவல்களைப் போலவும் அவருக்கு முன்பு எழுதப் பட்டிருக்கவில்லை.

மலையாளத்தில் சிறுகதை, நாவல் ஆகிய இரண்டு வடிவங்களும் அறிமுகமான சில பதிற்றாண்டுகளுப் பின்னர் எழுத வந்தவர் பஷீர். அவரது வருகைக்கு முன்புவரை, ஆரம்பகாலச் சிறுகதைகளின் வடிவங்களிலேயே சிறுகதைகள் எழுதப்பட்டுக் கொண்டிருந்தன. முதல் நாவல்களை அடியொற்றியே நாவல்கள் எழுதப்பட்டன. தனக்கு முன்பிருந்த இந்தப் புனைவெழுத்து வடிவங்களைக் கடந்தவையாகவே அல்லது மீறியவை யாகவே பஷீர் தனது சிறுகதைகளையும் நாவல்களையும் முன்வைத்தார். அவரது படைப்பு வடிவங்களுக்கு அவரே முன்னோடியும் தொடர்ச்சியும். 'மதில்கள்' நாவலில் 'நானே பூங்காவனமும் பூவும்' என்று  சொல்லுவது  அவரது  படைப்புச்  செயல்பாட்டுக்கும் பொருந்தும்.


சிறுகதை, நாவல் ஆகியவற்றுக்கு அன்று வாய்த்திருந்த உருவங்களுடனோ இன்று நடைமுறையில் இருக்கும் உருவங்களுடனோ பஷீரின் ஆக்கங்களுக்கு ஒற்றுமையில்லை. அவை பஷீரின் ' தான் தோன்றித்தன' மான வடிவங்கள். இலக்கிய வழக்கை ஒட்டியே  அவை சிறுகதைகள் என்றோ நாவல்கள் என்றோ பகுக்கப்படுகின்றன. அல்லது வகைப்படுத்தும்  வசதிக்காகவே அப்படிச் சொல்லப் படுகின்றன. குறிப்பாக, நாவல்கள். அவரது சமகாலத்து நாவல்களையும் இன்றைய நாவல்களையும் ஒப்பிட்டால் பஷீருடையவை நாவல்களே அல்ல. தான் எழுதுவது கதையல்ல ; சரித்திரம் என்றே பஷீர்  குறிப்பிட்டு வந்தார். தன்னை எழுத்தாளனாக அல்ல சரித்திரக்காரனாகவே அறிமுகப்படுத்திக் கொள்ளவும் செய்தார். சில சமயங்களில் சில பக்கங்களில்  சுருக்கமான வரலாறு. அதுவே சிறுகதை. சில சமயம் அதிகப் பக்கங்களில்  நீளும் சரித்திரம்.  அதுவே நாவல்.  'பாத்தும்மாவின் ஆடு' நாவலைத் தவிர பிற படைப்புகள் எதுவும் நூறு பக்கங்களைத் தாண்டாதவை. பெரும்பாலானவை முப்பது பக்கங்களுக்கு மிகாதவை. இவற்றை நாவல்கள்  என்று அழைப்பது உயர்வு நவிற்சி மட்டுமே. உண்மையில் இன்றைய இலக்கிய அளவுகோலின்படி இவை அனைத்தும் நீண்ட சிறுகதைகள் என்றே சொல்லப்பட வேண்டியவை. அப்படித்தான் அவை சொல்லப்பட்டுமிருக்கின்றன.மூன்றுசீட்டு ஆட்டக்காரனின் மகள், ஆனைவாரியும் பொன்குருசும், உலகப் புகழ் பெற்ற மூக்கு ஆகியவை தொடர் கதைகளாக வெளியானவை. வார இதழ்களில் இரண்டு முதல் நான்குவாரத் தவணைகளாக  நீண்ட சிறுகதைகள் என்ற  தலைப்பின் கீழ்தான்   இந்தப் படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. இதன் மூலம் மலையாள இதழியலில் தொடர்கதை என்ற வகைமைக்குத் தொடக்கமிட்ட பெருமையும் பஷீருக்கு உரியதாகிறது.


தன் படைப்புகள் பக்க அளவில் சிறியதாக இருப்பதன் காரணங்களை  பஷீரே விளக்கியிருக்கிறார். ஆரம்பக் காலத்தில் தனது படைப்புகளைத் தானே அச்சிட்டுப் புத்தகமாக்கினார். அதை அவரே சுமந்து சென்று பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் விற்பனை செய்தார்.  'புத்தகத்தின் விலை  ஓரணாவுக்குள் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அந்தத் தொகையின் மதிப்புக்குரிய புத்தகத்தைத்தான் கொடுக்க வேண்டும் என்றால் பக்கங்கள் குறைவாக இருக்கவேண்டும் . பக்கம் கூடினால் விலையும் கூடுமே? அதிக பக்கமுள்ள புத்தகத்தை அதிக விலை வைத்து அச்சிட எனக்கும் வசதியில்லை. இது ஒரு காரணம். குறைவான பக்கமுள்ள புத்தமாக இருந்தால்  வாங்குபவர் பஸ்ஸுக்கோ ரயிலுக்கோ காத்திருக்கும் நேரத்தில் அதை வாசித்து முடித்து விடுவார். அவரிடமிருந்து அதே புத்தகத்தைப் பாதி விலைக்கு வாங்கி மறுபடியும் இன்னோருவரிடம் முழு விலைக்கு விற்று விடுவேன். இந்த வியாபார உத்திதான் இரண்டாவது காரணம்' என்று விளக்கியிருக்கிறார் பஷீர். இது புறக் காரணம். அவரது படைப்பாக்க முறையே இந்தக் குறுவடிவங்களுக்குக்   காரணம்இன்று வாசிக்கக் கிடைக்கும்  பஷீர் படைப்புகள் பலவும் எளிதான தோற்றம் கொண்டவை; சரளமானவை; ஒரே வீச்சில் எழுதி முடித்தவைபோலத் தெரிபவைஆனால் உண்மையில் அவை அனைத்தும் பலமுறை திருத்தியும் மாற்றியும் எழுதப்பட்டவை. பிரயத்தனப்பட்டு சிடுக்குகள்  களையப்பட்டவைஅதன் மூலம் எளிமையான வடிவத்தை எட்டியவை. பஷீரின் செய்நேர்த்தியை இப்படி விளக்கலாம்: பிற எழுத்தாளர்கள் தமது படைப்பு மையத்துக்கு அனுபவத்தின் ஏதுக்களைச் சேர்த்தபோது பஷீர் படைப்புக்காகத் திரட்டியிருந்த கூறுகளை நீக்குவதில் கவனமாக இருந்தார். ஏற்கனவே செதுக்கி முடிக்கப்பட்ட சிலையிலிருந்து தேவையற்ற பகுதிகளை நீக்குவதுபோன்றது பஷீரின் செய் நேர்த்தி. பஷீரின் நாவல்களைப் பொறுத்தவரை இந்த வடிவச் சிக்கனமும் செய்நேர்த்தியும் முதன்முதலில் துலக்கமாக வெளிப்பட்டது  'காதல் கடிதம்' ( பிரேமலேக்கனம் ) நாவலில்தான்




ஷீர் நாவல்களில் ஆகச் சிறியது 'காதல் கடிதம்'. பஷீர் நாவல்களின் பிரத்தியேக இலக்கணத்துடன் பொருந்தும் முதல் நாவலும் இதுவே.பஷீர் எழுதிய முதல் நாவல் 'ஜீவித நிழல்பாடுகள்' . நாவலாகவே எழுதி முழுமையாக்கப்பட்ட படைப்பு. எனினும் 'நவஜீவன்' வார இதழில் தொடராகவே வெளியிடப்பட்டது. பஷீர் நாவலுக்குரிய குணங்கள் எதுவும் இல்லாத வெறும் கதை இது. அதனாலேயே 1939 இல் எழுதி வெளியான நாவல் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1954 இல்தான் புத்தக வடிவம் பெற்றது.
ஆனால் அன்றைய எழுத்தாளர்கள் கையாளத் தயங்கிய கதை மையத்தைப் பஷீர் துணிச்சலாக எடுத்துக் கொண்டார் என்பதே இந்த நாவலை முக்கியமான தாக்குகிறது. கதாநாயகன் முகம்மது அப்பாஸ் வேலைதேடி அலைகிறான். அந்தச் சந்தர்ப்பத்தில் வசந்தகுமாரி என்ற இளம் பெண்ணைச் சந்திக்கிறான். விபச்சாரத்தில் ஈடுபட்டிருப்பவள் என்று தெரிந்ததும் அவள்மேல் அருவெறுப்புக் கொண்டு  விலகுகிறான். வேலை கிடைத்து வாழ்க்கை நிலைப்படத் தொடங்கிய தருணத்தில் அவனுக்கு வசந்தகுமாரியின் நினைவு வருகிறது. அவளுடைய காதல் மிளிரும் கண்கள் அவனை ஓயாமல் பின் தொடர்கின்றன. நண்பன் ஜப்பாரின் உதவியுடன் அவளைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். அதுவரைக்கும் அவனுக்காகவே காத்திருந்த வசந்தகுமாரியுடன் இணைகிறான். இதுவே நாவலின் கதை. இன்றைய வாசிப்பில் இந்தக் கதைக்கு எந்தப் புதுமையும் ஈர்ப்பும் இல்லை. ஆனால் இரண்டு காரணங்களுக்காகவே அன்று வரவேற்புப் பெற்றது. ஒரு இளைஞன் பாலியல் தொழிலாளி ஒருத்தியைத் திருமணம் செய்து கொள்வதும் முஸ்லிம் இளைஞன் இந்துப் பெண்ணை மணந்து கொள்வதும் அன்று நடைமுறையை மீறிய ஒன்றாக இருந்தது. அந்த மீறலுக்காகவே இந்த நாவல் வரவேற்கப்பட்டது.


'காதல் கடிதம் ' பஷீர் எழுதிய இரண்டாவது நாவல். ஆனால் புத்தகமாக வெளிவந்த அவரது முதல் நாவலும் இதுவே. திருவனந்தபுரம் மத்திய சிறையில் கைதியாக அடைக்கப்பட்டிருந்த நாட்களில் சக கைதிகளுக்கு வாசித்துக் காண்பிப்பதற்காக பஷீர் எழுதிய 'வேடிக்கைக் கதை' இது. மூன்று ஆன்டுகளுக்குப் பின்பு  1943 இல் புத்தகமாக வெளியானது. மிகுந்த வரவேற்பைப் பெற்றது.


கேசவன்நாயர் என்ற இந்து இளைஞன் சாராம்மா என்ற கிறித்துவ இளம்பெண்ணைக் காதலிப்பதே கதையின் மையம்.இறுதிப் பகுதிவரை கேசவன்நாயரின் காதலைப் பரிகசித்துக் கொண்டே யிருக்கும் சாராம்மா கடைசியில்தான் அவன் மீதான அன்பை வெளிக்காட்டுகிறாள். அதுவரை அவனைக் கோல்முனைக் குரங்காக ஆட்டி வைக்கிறாள். ஒரு கட்டத்தில்  தலைகீழாகவே நிற்கச் செய்கிறாள். ஒரு நாயர் பையன் நஸ்ராணிப் பெண்ணின் பின்னால்  திரிவதும் அவள் அவனை ஆட்டி வைப்பதும் தங்கள் இனத்தை அவமதிப்பது என்று நாயர் சமூக அமைப்பான என்.எஸ்.எஸ். ( நாயர் சர்வீஸ்  சொசைட்டி )களமிறங்கியது. அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான அரசு புத்தகத்துக்குத்  தடை விதித்தது. 'இது ஒரு கலைப்படைப்பு. ஒரு தமாஷான கதை. இதன் நோக்கம் வாசிப்பவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பது மட்டுமே. நாயர்களை இழிவுபடுத்துவது அல்ல' என்று பஷீர் பதில் அறிக்கை வெளியிட நேர்ந்தது.


எளிய வேடிக்கைக் கதைதான் 'காதல் கடிதம்'. ஆனால் ஒருவகையில் பிற்கால பஷீர் நாவல்களுக்கு முன்னோடியானது. பிந்தைய நாவல்களின் பஷீரின் எழுத்தியல்பாகக் காணும் பல அம்சங்களை இந்த முதல் நாவல் கொண்டிருக்கிறது. எளிமையான கதையோட்டம். நேரடியான மொழி. பஷீரே உருவாக்கிய பிரத்தியேகமான சொற்கள். ஒலிக் குறிப்புகள். அசட்டுப் புத்திசாலிகளான ஆண்கள். அதிசாமர்த்தியமான பெண்கள். தன்னைத்தானே எள்ளலுக்கு ஆட்படுத்திக் கொள்ளும் போக்கு. சாதாரணமானதாகத் தென்படும் தருணங்களில் ஒளிந்திருக்கும் அசாதாரமான திருப்பங்கள். இந்த பஷீரிய இயல்புகள் முதன் முதல் வெளிப்படும் நாவல் 'காதல் கடிதம்'. எழுதப்பட்டு ஆறு பதிற்றாண்டுகள் ஆன் பின்னும் இந்தப் படைப்பு அதன் உயிர்ப்பும் ஒளியும் குன்றாமல் வாழ்கிறது என்பது இதைப் புனரெழுத்தாக்கும் தருணத்தில் அலாதியான மகிழ்ச்சியுடன் உணர முடிந்தது. மலையாள நவீனத்துவ எழுத்தின் ஆரம்ப அடையாளம் வைக்கம் முகம்மது பஷீரிடமிருந்துதான் புலப்படத் தொடங்கியது என்ற விமர்சன மதிப்பீட்டையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும் முடிந்தது. அந்த மகிழ்ச்சியையும் இலக்கிய மதிப்பையும் பஷீரைத் தமிழில் நேசிக்கும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

திருவனந்தபுரம்                                                சுகுமாரன்
27 பிப்ரவரி 2016