திங்கள், 29 ஜூன், 2015

ஆழல்

                                                                                   
நீருக்குள்  அமிழ்வதும்
பெண்ணுக்குள் ஆழ்வதும் இரண்டல்ல;  ஒன்றே
அனுபவம் சாட்சி

எவ்வளவு கவனமாக இருக்கிறோமோ
அவ்வளவு அனிச்சையாகவே
அமிழும்போதும் ஆழும்போதும்
அடைத்துக் கொள்கின்றன கண்கள்

இருளின் ஒளியிலேயே பார்த்து
உணர்கிறோம்
நீரில் நீர்மையையும்
பெண்ணில் பெண்மையையும்

பார்ப்பதில் பாதியும்
விளங்காப் புதிர்
உணர்வதில் பாதியும்
தெளியா ஊகம்

ஊகித்த புதிருக்கும்
புதிரான  ஊகத்துக்கும்
இடையில் மூழ்கும்போது
நம்மை இழக்கிறோம்
நீரோடு நீராக
பெண்ணோடு பெண்ணாக

நீர்க் காதலின் விசையிழுப்பில்
வளைந்து நீள்கிறோம்
நீரோட்டக் கைகளைப் பற்றிக் கொள்கிறோம்
குமிழிகளில் அருந்துகிறோம்
சுழிகளில் சுழல்கிறோம்
வளைவுகளில் புரள்கிறோம்
சரிவுகளில் வழிகிறோம்
ஊற்றுகளில் பீறிடுகிறோம்
தலைகவிழ்ந்து ஒடிகிறோம்
ஊகிக்க முடியாப் புதிர்ப்புனலில்
சுற்றிச்சுற்றிச் சுழன்றுசுழன்று வெள்ளமாகிறோம்

எனினும் ஒருபோதாவது
நீர் மேனியின் நிஜப் பரப்பை
நிதானமாகப் பார்த்தோமா?
துல்லியமாய் உணர்ந்தோமா?

அடுத்த முறை ஆகட்டும்
நீரில் ஒளிகரையும் உயிர்க்கூத்தைக் காண
அடையாக் கண்களுடன் ஆழலாம்.

@













4 கருத்துகள்: