வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

கான மூர்த்தி




                                 கான மூர்த்தி 





பாடகர் பாடுகிறார்
இரு வினைகள் நிகழ்கின்றன

ஆழ்ந்து மூழ்கி
சமுத்திரத்தின் ஆதி அலையைத் தேடுகிறார்
அதுவோ
அநாதிகாலமாக
வற்றாத ஊற்றில் குமிழியாக முகிழ்த்து
ரீங்கரித்துக் கொண்டேயிருக்கிறது

எவ்விப் பறந்து
ஆகாயத்தின் முதல் விண்மீனைத் துளாவுகிறார்
அதுவோ
இருளின் வெளியில்
மின்னிமின்னி ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

பாடகர் திரும்புகிறார்
இரு கொடைகள் கிடைக்கின்றன

கொண்டுவந்த குமிழி கடலாக அலைகிறது
கொண்டுவந்த விண்மீன் வானாக விரிகிறது

அந்தக் கொடைப் பொழுதில்
பாடகர்  மண்ணில் கடலாகிறார்
கேட்பவன் குமிழியாகிறான்
அவர் நிலத்தின் விசும்பாகும்போது
கேட்பவன் நட்சத்திரமாகிறான்
பாடகர் மௌனமாகும் வசிய கணத்தில்
நெரித்த திரைக்கடலாகிறது குமிழி
பாயுமொளியாகிறது வான்சுடர்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக