சனி, 12 ஏப்ரல், 2025

 



                                                      காணீர் ... அகண்ட காவிரி

                                                                              ***




 

திரூரில் சில நாட்களுக்கு முன்பு, ( பிப்ரவரி 28 – மார்ச் 3, 2025 )  நடைபெற்ற துஞ்சன் உற்சவத்தில் பங்கேற்கச் சென்றிருந்தபோது மலையாளக் கவிஞர், நண்பர் பி.ராமனையும் சந்தித்தேன். கடந்த இரு ஆண்டுகளிலாக வெளிவந்திருக்கும்  அவரது இரண்டு கவிதைத் தொகுப்புகளை ( நனவுள்ள மின்னல் / ஈரமுள்ள மின்னல்) , ஆ ஸ்தலம் அணிஞ்ஞ ஷர்ட் ஞான் / அந்த இடம் அணிந்த சட்டை நான் ) அன்பளிப்பாகக் கொடுத்தார். வீடு திரும்பி தொகுப்புகளை வாசிக்கத் தொடங்கினேன். வேகமான வாசிப்பிலும் இரண்டு கவிதைகள் கவனத்தைப் பிடித்து நிறுத்தின. அவை இரண்டும்  இசையைப் பற்றிய கவிதைகள். இரண்டுக்கும் பாட்டுடைத் தலைவர் சங்கீத கலாநிதி சஞ்சய் சுப்ரமணியன்.





 

சமகால இலக்கியவாதிகள் பலருக்கும் அபிமானப் பாடகர் சஞ்சய் சுப்ரமணியன் என்பது அவர்களுடைய படைப்புகள் வழியாக வெளிப்படுவதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. இலக்கியவாதிகள் தங்களது துறையல்லாமல் இன்னொரு கலைத் துறையிலும் ஆர்வமுடையவர்கள் என்பதன் சான்றாகவும் கலைகள் ஒன்றை ஒன்று பாதிக்கும் தன்மை கொண்டவை என்பதன் சான்றாகவும் இதைக் கொள்ளலாம்.

 

நிகழ் கால எழுத்துக்களில் அதிகம் சீராட்டப்பட்டிருப்பது சஞ்சய் சுப்ரமணியனும் அவரது இசையும்தான். நேரடியாகவும் உள்ளுறையாகவும் அவரது இசை கணிசமான ஆக்கங்களில் பேசப்பட்டிருக்கின்றன. கவிஞர் இசையும் இந்தக் குறிப்பை எழுதுபவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளில் சஞ்சயின் இசை தரும் அனுபவத்தை விவரித்திருக்கிறார்கள். மலையாளக் கவிஞரான வி.எம். கிரிஜா ஒரு கவிதையில் சஞ்சயின் ‘கர்ப்பூரம் நாறுமோ…’ என்ற ஆண்டாள் திருமொழியும் ‘பெற்றதாய் தனை மக மறந்தாலும்…’ என்ற வள்ளலாரின் பாடல் விருத்தமும் தனக்குள் ஏற்படுத்திய சலனங்களைப் பதிவு செய்திருந்தார். அண்மையில் வெளியாகியுள்ள சஞ்சய் சுப்ரமணியனின் வாழ்க்கைக் குறிப்புகளின் தொகை நூலான ‘ஆன் தட் நோட்’ டுக்கு ஸ்ருதி இதழில் நேர்த்தியான மதிப்புரையையும் கிரிஜா எழுதியிருக்கிறார். சஞ்சயின் பாட்டுத் திறத்தால் பாலிக்கப்பட்டு  நாங்கள் மூவரும் எழுதிய கவிதைகள் , முறையே இசையின் ‘மகத்தான ஈ’ , கிரிஜாவின் ‘மாத்திரைகள் மட்டுமே’ என்னுடைய ‘கானமூர்த்தி’ ஆகியவை விகடன் தடம் இதழில் ‘ ஒரு பாடகரும் மூன்று கவிஞர்களும்’  என்று வெளியாயின.

 

சஞ்சய் சுப்ரமணியன் பாடிய அருணாசல கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனைகளில் ஒன்றான ‘ எழுந்தாளே பூங்கோதை’யையும் ( ராகம்: மோகனம் ) அவர் பாடியிருந்தால் என்ற கற்பனையின் விளைவாக தியாகராஜரின் சாரி வெடலின ( ராகம்: அசாவேரி ) கீர்த்தனையையும்  மையப் பொருளாகக் கொண்டவை பி.ராமனின் இரண்டு கவிதைகளும். அவற்றின் தமிழாக்கத்தை இங்கே பகிர்கிறேன்.

 

கவிதைகள் ‘ எந்த ருசிரா ராமா’…

 

                                              எழுந்தாளே பூங்கோதை


சீதையை மகுடமாக ஏந்திய

தீச்சுடர்கள் பாடுகின்றன

‘எழுந்தாளே பூங்கோதை’

 

தீமரக் கிளையில் பூத்த

பூப்போலே எழுந்தாளே

 

சுடவேயில்லை , கீழே பூமியும் பாடுகிறது

‘எழுந்தாளே’

 

அந்தக் குளிரூற்றை வேர்  உறிஞ்சுவதால்

தீமரம் குளிர்கிறது; குளிர் அலைகளுக்குமேல்

சீதையின் முகம் காட்சியளிக்கிறது

உலர்ந்து உதிர்ந்திருக்கலாம் திரு நெற்றியில் இட்ட குங்குமம்

சூடு தணிக்க இப்பாடல் இல்லாமலிருந்தால்

சஞ்சயின்  எழுந்தாளே துணைவராதிருந்தால் தேவி

உள்ளே பொசுங்கியிருப்பாள் அக்கினி தேவன் கைகளில்

 

தீயைக் குளிரவைத்து சீதையைப் பொசுக்காமல்

பூமிக்குத் திரும்பத் தந்த பாடலே நன்றி.


தலைக்காவிரி



                                                                            பாகமண்டலம்


                                                           சாரி வெடலின...


தலைக் காவேரியில் இப்போது

என் காலை நனைக்கும் நீர்

எத்தனையோ நாட்கள் கழித்து

ஒருமுறை

திருவையாற்றைக் கடந்து போகலாம்

 

தியாகராஜரின் சாரி வெடலின…

அசாவேரியில் ஒழுகும் காவேரிக் கீர்த்தனை

நூற்றாண்டுகளினூடே

மீண்டும் மீண்டும்

என்னை அடைவதுபோல அல்ல

 

ஒரு குளம் காவேரி

கீழே பாகமண்டலத்தில்

நதியாகச் சட்டென்று தோன்றும்

சங்கமமாக விரியும்

 

சஞ்சய் சுப்ரமணியன் பாடி

நான் கேட்டதில்லை

‘சாரி வெடலின…’

 

எனினும்

… ஈ காவேரி ஜூடரே

 

சஞ்சயின் குரல்வளையில்

சட்டென்று தோன்றி

எனக்குள் எப்போதும்

துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டேயிருக்கும்.


                                                                           பி ராமன் 

 

வியாழன், 10 ஏப்ரல், 2025

குளிர் தருவின் நிழல்

                                                          குளிர் தருவின் நிழல்

என்னுடைய கணினிக் கோப்புகளை அண்மையில் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். முன்பு எழுதிய சில கட்டுரைகளும் கவிதைகளும் அங்கங்காகச் சிதறி ஒளிந்திருந்தன. அவற்றை வரிசைப்படுத்தவும் விலக்கவும் ஒருமுறை வாசித்துப் பார்ப்பது நல்லது என்று வாசிப்பில் ஈடுபட்டேன். சில கட்டுரைகள் வாசிப்புக்குச் சேதாரம் விளைவிக்காதவையாக இருந்தன. அவற்றில் ஒன்று என்னுடைய கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர். கமலேசுவரனைப் பற்றி எழுதிய கட்டுரை. பேராசிரியரின் எண்பத்தைந்தாம் வயது நிறைவையொட்டி அவரது நண்பர்களும் நம் விரும்பிகளும் மாணவர்களும் பங்கேற்ற  மலருக்காகக் கட்டுரையை எழுதினேன். மலர் வெளிவந்திருந்தும் காணக் கிடைக்கவில்லை. வெளிவந்திருந்தாலும் பரவலாக வசிக்கப்படும் வாய்ப்பில்லை. எனவே கட்டுரையைப் பத்திரப்படுத்தி வைக்கும் நோக்கிலும் பேராசிரியரின் மாணவர்கள் எவராது அவரை நினைவுகூரலாம் என்ற ஆசையிலும்  எவருக்காவது சின்ன அளவிலாவது பயன்படலாம் என்ற எதிர்பார்ப்பிலும் இங்கே பகிர்கிறேன்.





                            டாக்டர்  கே எஸ் கமலேசுவரன் துணைவியாருடனும் மாணவர்  பெருமாள் முருகனுடனும்  


 

ன்னிடம் பயின்ற மாணவர்களைக் குறிப்பாக நினைவில் வைத்துக் கொள்வது ஓர் ஆசிரியருக்கு இயலாத செயல். ஆனால் தங்கள் மீது நல்லாதிக்கம் செலுத்திய ஆசிரியரை மாணவர்கள் எப்போதும் நினைவுகூர்வது இயல்பு. எனக்குக் கற்பித்த ஆசிரியர்களில் நினைவில் அகலாது நிற்கும் தகுதியுடையவர்களில் பேராசிரியர் டாக்டர். கே. எஸ். கமலேசுவரனும் ஒருவர். அவரிடம் பயின்றவன், அவரது ஆளுமையால் பாதிப்படைந்தவன் என்ற நிலைகளில் அவர் எனக்கு மறத்தற்கு அரியவர்.

 

எனது கல்லூரிப் படிப்பைக் கோவை,  பூசாகோ கலை அறிவியல் கல்லூரியில் மேற்கொண்டேன். புகுமுக வகுப்பு, பட்ட வகுப்பின் முதல் இரண்டு ஆண்டுகளில் தமிழ்ப் பாடத்தைக் கற்றுக் கொடுத்தவர்களில் கமலேசுவரனும் ஒருவர். செய்யுட் பகுதிகளைக் பேராசிரியர். பாஸ்கரதாசும் உரைநடை, துணைப்பாடப் பகுதிகளைக் கமலேசுவரனும் கற்பித்தார்கள். அவர்களிடம் கற்ற தமிழ்தான் இன்று ஓர் எழுத்தாளனாகவும் இலக்கியச் செயல்பாடுகளில் தொடர்ந்து ஆர்வம் கொள்பவனாகவும் வைத்திருக்கும் காரணிகளில் முக்கியமானது. சரியாக அரை நூற்றாண்டுக் காலத்துக்குப் பின்னரும் அந்த நினைவுகள் பசுமை மங்காமல் மிளிர்கின்றன. அந்தப் பாடங்கள் காலாவதியாகாமல் தொடர்கின்றன.

 

புகுமுக வகுப்பில் முதல் தமிழ்ப் பாடவேளையிலேயே டாக்டர். கமலேசுவரன் அறிமுகமானார். நான் பயின்றது உயிரியல் பிரிவில். அந்தப் பிரிவின் தலைவரான தாவரவியல் பேராசிரியர் ராஜாராம் முதலில் அறிமுகமானார். இரண்டாவது அறிமுகமானவர் தமிழ்ப் பேராசிரியரான கமலேசுவரன் அவர்கள்.  கறுத்த குள்ளமான உருவம். அரைக் கை சட்டையும் கால் சராயும் அணிந்த தோற்றம். வகிடெடுத்து ஒழுங்குபடுத்தினாலும் ஒதுங்காமல் நெற்றியில் விழும் கோரை முடி, அதை அடிக்கடி ஒதுக்கி விட உயரும் கைகள். தடித்த கண்ணாடி. இந்தக் கோலத்தில் அவரைப் பார்த்த முதல் நொடி இன்னும் நினைவில் இருக்கிறது. மற்ற மாணவர்களுக்கு அவரைப் பற்றிய எண்ணம் என்னவாக இருந்திருக்கும் என்று ஊகிக்க முடியவில்லை. ஆனால் மாணவர்களைத் தோழமையுடன் ‘குஞ்சுகளா’ என்று அழைத்த பாங்கு என்னை அவர்பால் ஈர்த்தது. அவருடைய மாணவனாக இருந்த நாள்கள் அனைத்திலும்  அந்த அழைப்பைக் கேட்கும்  வாய்ப்பு அமைந்தது.

 

அன்று புகுமுக வகுப்புப் பாடத்திட்டத்தில் புதுமைப் பித்தன், அகிலன், ஜெயகாந்தன், ஜெகசிற்பியன், அறிஞர் அண்ணா ஆகியோர் உள்ளிட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இடம் பெற்றிருந்தது. தொகுப்பின் முதல் கதை புதுமைப் பித்தனின் ‘ஒரு நாள் கழிந்தது’. கமலேசுவரன் முதல் வகுப்பில் பேசியதும் அதைப் பற்றித்தான். மாணவர்களுடனான அறிமுகத்துக்கும் ஆசிரியரின் தன்னறிமுகத்துக்கும் பிறகு கதையைப் பற்றிய பேச்சைத் தொடங்கினார். கதையை முன்னிருத்தியதற்குக் காரணம் அறிமுக  வகுப்பிலேயே மாணவர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தி விடக் கூடாது என்ற நல்லெண்ணமாக இருக்க வேண்டும். ஆனால் அது எல்லா மாணவர்களுக்கும் உகந்ததாக இல்லை. அந்தப் பேச்சு  நான் ஏற்கனவே அறிந்த உலகத்துக்கு என்னை மீண்டும் அழைத்து செல்லும் வாசலாக இருந்தது. ‘புதுமைப் பித்தன் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ என்ற அவருடைய கேள்விக்குத் தயக்கத்துடன் எழுந்து உற்சாகத்துடன் புதுமைப்பித்தன் தொடர்பாகச் சில வார்த்தைகளைச் சொன்னேன். அப்போது அந்தத் தடித்த கண்ணாடிக்குப் பின்னால் அவருடைய விழிகள் விரிந்து சிரித்ததைக் காண முடிந்தது. பிந்தைய ஆண்டுகளில் அந்த விழிநகையைப் பல முறை பார்க்க முடிந்தது.

 

அன்றைய பாடவேளை முடிந்ததும் தமிழ்த் துறைக்கு வந்து பார்க்கும்படிச் சொன்னார். போனேன். என்னைப் பற்றி விசாரித்தார். என்னுடைய இலக்கிய ஆர்வத்தைக் குறித்துக் கேட்டார். ‘புதுமைப்பித்தன் யார்னு கேட்டா எம்ஜியார் படத்தைப் பற்றித்தான் சொல்றாங்க. என்ன பண்றது? நீ சொன்னது ஆச்சரியமா இருந்ததுப்பா’ என்று பாராட்டினார். ஓர் இளம் இலக்கிய ஆர்வலனுக்கு அது பெரும் ஊக்கம். பின்னர் அவ்வாறு பல முறை ஊக்கமூட்டியிருக்கிறார்.

 

அப்போது கல்லூரியில் ‘மாணவர்களுக்காக மாணவர்களால் நடத்தப்படும்  மாணவர்’ இதழ் ஒன்று வெளியிடப்பட்டது. பெயர் ‘புது வெள்ளம்’. மாணவர் இதழ் எனினும் பொறுப்பாளராகத் தமிழ்த் துறைப் பேராசிரியர் முத்துராமலிங்கம் இருந்தார். அதன் முதல் இதழிலேயே என்னுடைய கதை ஒன்று வெளிவந்தது. இரண்டாம் இதழில் கவிதையும் கதையும் வெளியாயின.  அவற்றை ஒட்டித் தமிழ்த்துறைக்கு அடிக்கடி செல்லும் தேவையும் வாய்ப்பும் ஏற்பட்டன. அந்தத் தருணங்களில் அதிகமும் சந்தித்தது டாக்டர். கமலேசுவரனைத்தான் என்பது தற்செயல்  அல்ல. துறையின் பிற பேராசிரியர்களுடன் உரையாடுவதை விட அவருடன் உரையாடுவதன் மூலம் புதிய செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது என்பதே காரணம். அந்தப் போக்குவரத்தில் நவீனச் சிற்றிதழ்களையும் புதிய புத்தகங்களையும் குறித்து அறிந்துகொள்ள முடிந்தது. தமிழ்த்துறை நூலகத்திலிருந்து சில நூல்களை எடுத்துச் சென்று வாசிக்கும் சலுகையையும்  அளித்திருந்தார்.

 

புகுமுக வகுப்புக்குப் பிறகு எனது படிப்பில் ஓர் ஆண்டு இடைவெளி விழுந்தது. வெறும் பட்டப்படிப்புக்குப் பதிலாக வேறு படிப்பை விரும்பினேன். குடும்பப் பொருளாதாரச் சூழலால்  அந்தக் கனவு நிறைவேறாமல் போனது. ஓர் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அதே கல்லூரியின் இளம் அறிவியல்- வேதியியல் பட்ட வகுப்பில் சேர்ந்தேன். அது மகிழ்ச்சியைக் கொடுத்தது. நான் பார்த்து வியந்த அற்புதமான கல்லூரி நூலகத்துக்குச் செல்லவும் என் தமிழைச் செம்மைப்படுத்த உதவும்  தமிழாசிரியர்களைச் சந்திக்கவும் மீண்டும் கிடைத்த வாய்ப்பு அந்த மகிழ்ச்சியின் பின்னணி.

 

இடைவெளி ஏற்பட்டிருந்த ஓராண்டில் நிறைய வாசிக்கவும் கவனத்துடன் எழுதவும் கற்றுக் கொண்டிருந்தேன். அதை எனக்கு உணர்த்தியவரும் டாக்டர். கமலேசுவரன் அவர்கள்தான். பட்ட வகுப்பின் முதலாம் ஆண்டைப் பெரும்பாலும் கல்லூரி நூலகத்திலேயே செலவழித்தேன். பாடத்துக்குத் துணையாகும் புத்தகங்களை வாசித்ததை விட இலக்கிய நூல்களை வாசித்ததே அதிகம். அப்படி ஒரு நாள் நூலகத்தில் நான் வாசித்துக் கொண்டிருந்தேன். வாசித்துக் கொண்டிருந்தது ஓர் ஆங்கில நூல். பிரெஞ்சு எழுத்தாளரும் தத்துவவாதியுமான சார்த்தரின் ‘ எக்சிஸ்டென்ஷியலிசம் ( Exisitentialism ? ) என்ற நூல். வாசிப்பில் மூழ்கியிருந்தபோது புத்தகத்தின் மீது நிழல் விழுவதை உணர்ந்தேன். என் முதுகுப் பக்கமாக இருந்து நான் வாசித்துக் கொண்டிருந்த நூலின் பக்கத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார் பேராசிரியர். வகுப்பு நடக்கும் நேரத்தில் ஒருவன் அத்துமீறலாக நூலகத்தில் இருக்கிறான் என்பதைக் கண்டுபிடித்து விட்டார் என்ற அச்சத்தில் எழுந்து நின்றேன். அவர் புத்தகத்தை எடுத்து முகப்பைப் பார்த்து விட்டு மேசைமீதே வைத்தார். ‘அடே குஞ்சு நீ இதையெல்லாம் படிக்கிறியா என்ன? ‘ என்று கேட்டு விட்டு நகர்ந்தார். அச்சம் நீங்கிப் பெருமூச்சு விட்டேன். அந்த நாளின் சுப விளைவு மறுநாள் தெரிந்தது.

 

அடுத்த நாள் உயிர் வேதியியம் வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது அறை வாசலில் பேராசிரியர் கமலேசுவரன் வந்து நின்றார். வகுப்பை நடத்திக் கொண்டிருந்த பேராசிரியர் சுதாகரிடம் அனுமதி கோரி என்னை வெளியே அழைத்தார். போனேன். கையிலிருந்த கனமான புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். ‘நீதான் எக்சிஸ்டென்ஷியலிசம் படிக்கிறியே, இதையும் படி’ என்று அவர் கொடுத்த புத்தகம் சார்த்தரின் ‘இருப்பும் இன்மையும்’ ( Being and Nothingness ). அவர் கொடுத்தது என்பதனாலேயே அந்தப் புத்தகத்தை விழுந்து விழுந்து படித்தேன். அவரிடம் திரும்பக் கொடுத்தபோது ‘படிச்சேன் சார், ஆனா ஒண்ணும் புரியல’ என்றேன். ‘சரி , புரியவரைக்கும் படி. அதை நீயே வெச்சுக்கோ’ என்றார். மிக நீண்ட காலம் அந்தப் புத்தகம் என் புத்தகச் சேகரிப்பில் இருந்தது. பேராசிரியரை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. இருப்பிடம், ஊர் மாற்றங்களில் அந்த நூல் காணாமற் போனது. ஆனால் அந்த இன்மை பேராசிரியரின் இருப்பைப் பற்றிய உணர்வைப் போக்கி விடவில்லை.

 

பேராசிரியர் கமலேசுவரனின் வகுப்புகள் ஆர்வமுள்ள மாணவருக்கு சுவாரசியம் அளிப்பவை. பாடப் பொருளைச் சார்ந்து தீவிரமாக அமைந்தவை. மையப் பொருளை விட்டு விலகாத பயிற்று முறை அவருடையது . மையப் பொருளை ஒட்டிய வெளி விவரங்கள், சம காலத் தகவல்கள் இடம் பெறும் . இவையெல்லாம் பாட வேளையின் ஒரு மணி நேரத்தின் முக்காற் பங்கில் நிறைவேறும், எஞ்சிய கால் மணி நேரம் ஏறத்தாழ அரட்டைப் பொழுதுதான். ஆனால் அந்த அரட்டையிலும் பயனுள்ள தகவல்களும் புதிய பார்வைகளும் நிச்சய்ம் இருக்கும். சமயங்களில் நகைச்சுவையும் ததும்பும். அந்த நகைச்சுவை காலமெல்லாம் நினைத்துச் சிரிக்கவைப்பதாகவும் . இலக்கியத்தில் இடம் பெறும் வருணனைகளப் பற்றி ஒருமுறை சொல்லிக் கொண்டிருந்தார். ‘புலவர் சொல்கிற வர்ணணைகளை ஆராய்ந்து பார்த்தால் வில்லங்கமாக இருக்கும் . அன்ன நடைன்னு சொல்றாங்க இல்லையா, அதைப் பார்த்திருக்கீங்களா? சகிக்காது. பொச்ச ஆட்டீட்டு நடக்கறதப் பார்த்தா நல்லாருக்குமா?’ என்று கேட்டதும் வகுப்பே அதிர்ந்து சிரித்தது. இன்றும் அந்த கூட்டுச் சிரிப்பு ஞாபகத்தில் முழங்குகிறது.

 

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழுக்குச் செம்மொழித் தகுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம் , அ.ராமசாமியின் முன்னெடுப்பில் நடத்திய இலக்கிய நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டேன். நண்பர் பெருமாள் முருகனும் கலந்து கொண்டிருந்தார். அவரது உரை கேட்க அமர்ந்திருந்த மாணவர்களில் ஒருவனாக நானும் அமர்ந்திருந்தேன். உரை இயல்பாகத் தொடங்கி வகுப்பறைப் பாட வேளையாக மாறியது. மெல்ல மெல்லத் தகவல்கள் கோக்கப்பட்டு வளர்ந்து உச்சத்தை எட்டியது. முடியும்போது தீவிரமான வகுப்பறையில் பாடம் கேட்ட உணர்வு எழுந்தது. கூடவே இதே போலப் பாடம் நடத்துவதை முன்பே கேட்டிருக்கிறோம் என்ற எண்ணம் ஓடியது. சற்று நேரம் யோசித்த பின்னர் மூலம் பிடிபட்டது. அது பேராசிரியர் கமலேசுவரனின் பயிற்று முறை. முருகனும் அவர் மாணவர் என்பது நினைவுக்கு வந்ததும் பேராசிரியரின் பாதிப்புப் புலப்பட்டது.

 

என்னுடைய கல்லூரி நாட்களில் கமலேசுவரனை இளநிலை பட்ட வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடத்தைக் கற்றுத்தரும் வாத்தியாராக மட்டுமே அறிந்திருந்தோம். ஏனெனில் அன்று முதுநிலைப் பட்ட வகுப்பில் மட்டுமே தமிழ் தனிப்பாடமாக இருந்தது. அவருக்கு அணுக்கமான மாணவர்கள் ஒரு சிலர் மட்டுமே அவரது ஆளுமையின் இன்னொரு பக்கத்தை அறிந்திருந்தார்கள். மொழியியலாளராக அவரது பங்களிப்பைப் புரிந்து கொண்டிருந்தார்கள். அவரை ஒரு மொழியியல் ஆய்வாளராக நான் அறிந்து கொண்டதும் எதிர்பாராத செயல். அது அவரும் பங்களிப்புச் செய்து வந்த ‘புலமை’ இதழ் மூலம் நிகழ்ந்தது. அவர் எனக்கு வாசிக்கக் கொடுத்த இதழ்களில் புலமையும் இருந்தது. ஆனால் அது என்னுடைய வாசிப்புக்காகக் கொடுக்கப் பட்டதல்ல. எனது இன்னொரு ஆசிரியரான கோவை ஞானியிடம் சேர்ப்பிக்க என்னிடம் ஒப்படைக்கப் பட்டது. எல்லா இதழ்களையும்புரட்டிப் பார்ப்பதுபோல அதையும் புரட்டிப் பார்த்ததில் பேராசிரியரின் கட்டுரையையும் வாசிக்க நேர்ந்தது. வாசிப்பில் எழுந்த ஐயங்களை அவரிடம் கேட்டேன். ‘இன்னிக்கு சாயங்காலம் வகுப்பு முடிந்ததும் துறைக்கு வா’ என்றார். சென்றேன். ‘ராத்திரி வீட்டுக்கு வரலேன்னா தேட மாட்டங்கன்னா என் கூட வா’ என்றார். எங்கள் பகுதியிலிருந்து வந்து படிக்கும் சக மாணவரிடம் வீட்டுக்குத் தகவல் தெரிவிக்கச் சொல்லி விட்டு அன்று மாலை அவருடன் அவர் வீட்டுக்குச் சென்றேன். அன்றைக்கு அவர் மட்டுமே இருந்தார். தயாராக இருந்த உணவை அருந்தி முடித்த பின்பு அவரது மொழியியல் வகுப்பு நடைபெற்றது. புதிய திசையின் கதவுகளைத் திறந்து விட்ட சிறப்பு வகுப்பு அது. அன்று அதன் பயன் தெரியவில்லை. இலக்கியத்தில் மும்முரமாக ஈடுபட்ட காலத்தில் புதிய பேசுபொருளாக மொழியியலும் இடம் பெற்றபோது அவர் எடுத்த தனி வகுப்பின் பொருத்தம் விளங்கியது.

 

டாக்டர். கமலேசுவரன் மரபான தமிழ்ப் பேராசிரியர் அல்லர் என்பது என் கருத்து. பிற தமிழாசிரியர்களிடம் காணப்பட்ட தமிழ் வெறி அவரிடம் காணப் பட்டதில்லை. அவரிடம் கண்டது தமிழ் மீதான பற்றும் அதை அறிவியல் சார்ந்து பார்க்கும் அணுகுமுறையும். அவரது ஒப்பாய்வுகளிலும் மொழி ஆய்வுகளிலும் ஓர் இலக்கியப் பயிற்சியாளனாக எனக்குத் தேவையானதாக எடுத்துக் கொண்டது அந்தப் பார்வையைத்தான். கல்லூரிப் பருவத்துக்குப் பின்பு அவரை அனேகமாகச் சந்தித்ததில்லை. அது விட்டகுறையாக இப்போது உறுத்துகிறது. தொடர்பில் இருந்திருந்தால் இன்னும் திட்பமான எல்லைகளை இலக்கியத்திலும் எட்டியிருக்க முடியும். முடியாமற் போனது பேரிழப்புத்தான்.

 

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவரைச் சந்தித்தேன். அவருக்கு என்னையும் எனக்கு அவரையும் அடையாளம் தெரியவில்லை. நினைவூட்டல் அவருக்குப் பயனளிக்கவில்லை என்பது உரையாடலில் விளங்கிற்று. அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுப் பல ஆண்டுகள் கடந்திருந்தன. உடல் தளர்ந்திருந்தது. நினைவு அந்தி வெளிச்சத்தை அடைந்திருந்தது. இரண்டு விஷயங்கள் அன்று சட்டென்று புலப்பட்டன. ஒன்று; முன்னாள் மாணவனை பன்மையில் அழைத்தார். இரண்டு : குஞ்சு என்ற வாஞ்சையான முகமனை மறந்திருந்தார். அவற்றை அவரும் அவரது துணைவியாரும் உபசரிப்பால் ஈடுகட்டினார்கள். முதிய வயதிலும் இளமை மிளிர அவர்கள் காட்டிய விருந்தோம்பல் என்றும் நினைவில் சுவை குன்றாமலிருக்கும்.

 

இந்தச் சந்திப்புக்குப் பிறகும் ஏனோ அவருடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற முனைப்பு உருவாகவில்லை. அதையும் பேராசிரியரே நிறைவேற்றினார். சென்ற ஆண்டு ( 2023 ) இதய நோய் அறுவைச் சிகிச்சைக்கு உள்ளானேன். இன்றைய மருத்துவ முன்னேற்றத்தில் அது பொருட்படுத்தப்பட வேண்டாதது  என்பதால் அதைப் பற்றி யாருக்கும் தெரிவிக்கவும் விரும்பவில்லை. ஒரு நாள் காலை தொலைபேசி அழைத்தது. ‘’ நான் கமலேசுவரன் பேசுகிறேன். அறுவைச் சிகிச்சை பற்றிக் கேள்விப்பட்டேன். நலமாக இருக்கிறீர்களா?’’ என்று விசாரித்தார். விசாரிப்புக்குச் சட்டென்று பதில் சொல்ல முடியாதபடி குரல் தழுதழுத்தது. கண்கள் நிறைந்தன. அந்தப் பெருந்தன்மைக்கு முன் பேச்சு வரவில்லை.

 

பெருமரங்கள் நிழல் கொடுக்கின்றன. அந்தக் கொடையை மரங்கள் நினைவில் கொள்வதில்லை. ஆனால் நிழலை உணர்ந்தவன் அந்தக் கொடையை மறப்பதில்லை. பேராளுமையான கமலேசுவரனின் நிழலில் இளைப்பாறிய ஆயிரக் கணக்கான மாணவர்களில் நானும் ஒருவன் என்பது கிடைத்த வாய்ப்பு அல்ல; கிட்டிய பேறு.

                                                                                    @

புகைப்படத்துக்கு நன்றி: பெருமாள் முருகன்

 


 


 

 

 

 

 

 

 

வெள்ளி, 24 ஜனவரி, 2025

 




எம்.டி.யின் காலம் 

 

நவீன மலையாள இலக்கியத்தில் எம்.டி. வாசுதேவன் நாயருக்குக் கிடைத்த முதன்மையும் புகழும் வாசக அங்கீகாரமும் கேரளத்தில் வேறு எந்த எழுத்தாளருக்கும் வாய்க்கவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். 1950 களில் தொடங்கி 2000 வரையிலான நீண்ட அவருடைய எழுத்து வாழ்க்கையில் அனேகமாகப் பின்னடைவு ஏற்பட்டதில்லை. அவருடைய கடைசிச் சிறுகதைத் தொகுப்பு 1998 இலும் கடைசி நாவல் 2002 இலும் வெளிவந்தன. அதன் பின்னர் அவருடைய படைப்பாக எதுவும் வெளியாகவில்லை. ஆனால் எம்டியின் அதுவரையான படைப்புகளில் மனம் தோய்ந்திருந்த வாசகர்கள் அவரிடமிருந்து எதோ ஒன்றுக்காகக் காத்திருந்தார்கள். அப்படி அவர்கள் காத்திருக்கும் மனநிலையை ஒரு படைப்பாளியாக எம்டி உருவாக்கி வைத்திருந்தார். அவருடைய ஏறத்தாழக் கடைசி எழுத்தாக நான் வாசிக்கக் கிடைத்தது ஒரு சிறு பத்தி. மலையாள மொழி வாரத்துக்காக அவர் எழுதிய மொழிப் பிரகடனம். மலையாள மொழியின் சிறப்புகளை வரிசைப்படுத்தி சொல்லி விட்டு இறுதியாக 'என் மொழியே நான் நானே என் மொழி' என்று அந்தப் பிரகடனத்தை முடித்திருந்தார். அது பொதுவான பிரகடனமல்ல; தன்னைப் பற்றிய எம்டியின் பிரகடனமும் கூட என்றே தோன்றியது. எழுத்தாளன் காலத்தின் கையில் ஒப்படைத்துச் செல்வது தன்னுடைய மொழியைத்தான்.


எம்டியை ஒரு காலகட்டத்தின் பிரதிநிதி என்றும் காலகட்டத்தை உருவாக்கிய முன்னோடியென்றும் கருதுகிறேன். அவர் எழுத வந்தது முற்போக்கு இலக்கியத்தின் செல்வாக்கு மங்கத் தொடங்கிய காலத்தில். வைக்கம் முகம்மது பஷீர், தகழி சிவசங்கரப் பிள்ளை, பொன்குன்னம் வர்க்கி, பி.கேசவதேவ், செறுகாடு போன்ற எழுத்தாளர்கள் மனிதர்களின் சமூக வாழ்க்கையை எதார்த்தமாகச் சித்தரிக்கும் படைப்புகளை உருவாக்கியிருந்தார்கள். இதற்கு இணையாகவே எஸ்.கே.பொற்றேகாடு உரூப் ஆகியவர்கள் கற்பனைவாத
ப்  புனைவுப் போக்கைக் கடைப்பிடித்தார்கள். மனித அகங்களை முன்னிருத்திய படைப்புகளை எழுதினார்கள். இந்த இரண்டு வகையான எழுத்து முறைகள் சாதனைகளை முன்வைத்தது போலவே  போதாமையையும் கொண்டிருந்தன. மனித மனத்தின் உட்கிடைக்கைகளை அவை இயல்பாக வெளிப்படுத்தவில்லை என்பதே அந்தப் போதாமை. அந்தப் போதாமையை இல்லாமற் செய்த எழுத்துகள்  எம்டியுடையவை. மனிதர்களின் அகச் சிக்கல்களை மிகையுணர்ச்சி சாராமல் இயல்பாக வெளிப்படுத்தும் படைப்புகளை எம்டி வழங்கினார். தனி நபர்களே அவற்றில் முதன்மை பெற்றார்கள். அவருடைய சம காலத்தவர்களான மாதவிக் குட்டியும் டி.பத்மனாபனும் இதே போக்கிலான படைப்புகளை எழுதினார்கள். ஆனால் இந்தப் போக்கின் வலுவான பிரதிநிதியாக எம்டியைத்தான் குறிப்பிட விரும்புகிறேன். அழுத்தமானது அதே சமயம் மென்மையானது, மிதமானது அதேசமயம் அமைதியானது உணர்ச்சிகரமானது அதேசமயம் அசட்டுருக்கம் இல்லாதது என்று எம்டியின் எழுத்தைச் சொல்வேன்.


சமூக எதார்த்தத்தை மையமாகக் கொண்ட படைப்புகளும் அக உணர்வுகளைச் சித்தரித்த செவ்வியல் நோக்கிலான ஆக்கங்களும் தேக்கம் காணத் தொடங்கிய கால அளவில் மலையாள இலக்கியத்தில் நவீனத்துவம் அறிமுகமானது. புழக்கத்திலிருந்த எழுத்து முறைகளை நவீனத்துவம் கேள்விக்குட்படுத்தியது.
படைப்பின் உள்ளும் புறமும் மாறின.  எதார்த்தமான படைப்பாக்கத்தில் ஈடுபட்டிருந்த முக்கியமான எழுத்தாளர்கள் நவீனத்துவத்துக்கு மாறினார்கள். அதுவரை தன்னுடையதான எதார்த்தவாதப் போக்கில் கதைகள் எழுதி வந்த ஓவி விஜயன் நவீனத்துவத்துக்கு மாறியதை உதாரணமாகச் சொல்லலாம். நவீனத்துவத்தின் அலை வீச்சு அந்த அளவுக்கு வீரியமானதாகவும் பரவலானதாகவும் இருந்தது.

 

ஆனால் நவீனத்துவப் போக்கைப் பற்றி அறிந்திருந்த எம்டி இந்தப் அலை வீச்சுக்கு ஈடுகொடுத்தார். தானாகக் கண்டடைந்த எழுத்துமுறையிலேயே காலூன்றி நின்றார். அதையே தொடர்ந்தார். ஆனால் ஓர் இலக்கியவாதியாக நவீனத்துவ எழுத்தை ஊக்குவித்தார். இன்று நவீனத்துவ எழுத்தாளர்களாகக் கொண்டாடப்படும் சக்கரியா, என்.எஸ்.மாதவன், சேது, ஓவி விஜயன் ஆகியோரது படைப்புகள் அவர் ஆசிரியராக இருந்த மாத்ருபூமியில் வெளியாயின. அமெரிக்க நவீனத்துவ எழுத்தின் முன்னவர்களில் ஒருவராகக் கருதப்படும் ஹெமிங்வேயைப் பற்றி விரிவான அறிமுக நூலையும் (ஹெமிங்வே -ஒரு முகவுரை ) அவர்தான் எழுதினார். இவையெல்லாம் ஒரு காலகட்டத்தை உருவாக்கிய பிரதிநிதியாக அவரை அடையாளம் காட்டுபவை.

 

குறிப்பிட்ட சூழலில் மனிதர்கள் எப்படி நடந்து கொள்கிறாள் என்பதற்கு இணையாகவே எப்படி நினைக்கிறார்கள், எப்படிச் சிந்திக்கிறார்கள் என்பதை எம்டி தன்னுடைய படைப்புகளில் ஆராய்ந்தார். இந்த ஆராய்ச்சியே அவரது படைப்புகளில் இடம் பெறும் பாத்திரங்களின் செயல்கள் அந்தப் பாத்திரங்களின் கதையாக மட்டுமல்ல அவர்கள் வாழும் சமூகத்தின் கதையாகவும் குடும்பங்களின் கதையாகவும் உறவுகளின் கதையாகவும் மாற உதவுகின்றன.


மலையாளிகளின் சமூக வாழ்க்கையின் ஒரு குறிப்பிடத் தகுந்த காலப் பகுதியை எம்டி தன்னுடைய படைப்புகளில் சித்தரித்தார். மருமக்கள் தாய முறையிலிருந்து மக்கள் தாய முறைக்குக் கேரளத்தின் சமூகம் மாறிக்கொண்டிருந்த காலம். அதன் விளைவாக எழுந்த சிக்கல்களையே எம்டியின் கணிசமான படைப்புகளும் பேசுகின்றன. தாய்வழிச் சமூக மரபில் தாய் மாமனே ( தாய் மாமனே ) ஒரு குடும்பத்தின் காரணவர் (தலைவர்). அவரது அதிகாரமே
ஓங்கி நின்ற நாட்கள் அவை. ஆனால் கல்வியும் உலகியல் அறிவும் கைவரப் பெற்ற புதிய தலைமுறை அந்த அதிகாரத்தின்கீழ் மூச்சுத் திணறியது. அதிலிருந்து விடுபடத் தவித்தது. அந்த அதிகாரத்தை எதிர்த்தது. இந்த சிக்கலான காலத்தின் மனிதர்கள் படும் அவலங்களையே எம்டி தன் எழுத்தில் வெளிப்படுத்தினார். குறிப்பாக இளம் தலைமுறையின் மௌனக் கோபத்தை அவரது படைப்புகள், பெரும்பான்மையும் அவரது முக்கியமான நாவல்கள், வெளிப்படுத்தின. தறவாட்டு அமைப்பில் தாங்கள் இழந்துபோன சுயத்தை மீட்டெடுக்கும் சீற்றம் அது. கேரள சமூகத்திலும் இந்தக் கோபம் நிலவியது. அந்த எதார்த்தத்தை எம்டி எழுத்தில் காட்டினார் என்பதும் எம்டி எழுத்தில் காட்டிய எதார்த்தம் நடைமுறை வாழ்க்கையில் பிரதிபலித்தது என்பதும் உண்மை. இலக்கியமும் வாழ்க்கையும் இணையும் அந்தப் புள்ளியை எம்டி சுட்டிக் காட்டினார். அறுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளிலும் மலையாளத்தில் எழுதப்பட்ட பல நாவல்களும் கோபக்காரர்களை முதன்மைப் பாத்திரங்களாகக் கொண்டிருந்தன என்பது நினைவுக்கு வருகிறது.


எம்டியின் முதல் நாவல் 'நாலுகெட்டு'. 1958 இல் வெளிவந்தது. தொடராக இல்லாமல் நாவலாகவே வெளிவந்த படைப்பு இது. தலைப்பு எடுத்துக் காட்டுவதுபோல நாலுகெட்டுத் தறவாட்டின் அங்கமான அப்புண்ணியின் அனுபவங்கள்தாம் கதையாடல். வாழ்க்கையால், அதை நிர்ணயிக்கும் மனிதர்களால் பட்ட அவமானங்களுக்குப் பழி தீர்க்கத் துடிப்பவன். அந்தச் சிக்கல்களையே நாவல் பேசுகிறது. குற்றவுணர்வும் துணிவும் வன்மமும் கழிவிரக்கமும் சாகசமும் இணைந்த  ஆளுமையாக அவனைச் சித்தரிக்கிறார் எம்டி. இந்த குணச்சித்திரம் அவரது மற்ற நாவல்களான காலம், அசுரவித்து ஆகியவற்றின் ஆக்கத்திலும் காண முடிகிறது.

 

'காலம்' (1969) நாவலின் மையப்பாத்திரமான சேது தறவாட்டிலிருந்து வெளியேறத் தவிக்கிறான். படிப்பை முடித்து தொழில் செய்து முதலாளியாகிறான். தன்னுடைய சுய நலத்துக்காகத் தன்னை நேசிக்கும் பெண்களைச் சரணடையச் செய்கிறான். இறுதியில் இதுவரை தான் அடைந்த எதுவும் நிரந்தரமில்லை என்று உணர்கிறான்.

 

'அசுரவித்து' ( 1962 ) நாவலின் பாத்திரமான கோவிந்த குட்டியுடன் சமூகம் முரண்படுகிறது. இந்து முஸ்லிம் விரோதம் கிராமத்தையே உலுக்குகிறது. இஸ்லாமைத் தழுவி அப்துல்லாவாக மாறுகிறான்.


கெட்டி தட்டிப் போன அமைப்புக்களுக்கெதிராக மனிதர்கள் மேற்கொள்ளும் போராட்டத்தையே இந்த நாவல்கள் ஆராய்கின்றன. தங்களது அகப் போராட்டங்களின் இறுதியில் இந்தக் கதை மாந்தர்கள் அடையும் பக்குவம் அல்லது படிப்பினைகள்தாம் முக்கியமானவை. நாலுகெட்டு நாவலின் பாத்திரமான அப்புண்ணியின் எண்ணம் தன்னுடைய தந்தையைக் கொன்ற செய்தாலியைப் பழிவாங்குவது. ஆனால் அவன் பெறும் அனுபவங்கள் இறுதியில் அவனை செய்தாலியின் பாதுகாவலனாக மாற்றுகின்றன. பழி வாங்குவதற்கான தகுதியை வளர்த்துக் கொண்டால் போதும் பழி வாங்க வேண்டுமென்று அவசியமில்லை என்பதை உணர்த்துகி
ன்றன தன்னுடைய வாழ்க்கையை அவலத்துக்குள்ளாக்கிய கிராமத்தினரை அப்துல்லா என்ற கோவிந்தன் குட்டி கருணையின் மூலமாக வஞ்சம் தீர்த்துக் கொள்கிறான். காலராவால் மரித்தவர்களை அடக்கம் செய்ய முன்வந்து அன்பால் பகையை வீழ்த்துகிறான். காலம் நாவலின் மையப் பாத்திரமான சேதுவை வீழ்த்துவதும் பழி தீர்த்துக் கொள்வதும் மனிதர்களல்ல; காலம்தான்.


எம்.டியின் படைப்புகள் மீதான விமர்சனங்களில் ஒன்று அவை ஆண் உலகை மையமாகக் கொண்டவை என்பது. அதை அவரது படைப்புகளின் மீதான விமர்சனமாக இல்லாமல் அந்தக் காலத்தின் மீதான குற்றச்சாட்டாகவே
காண விரும்புகிறேன். பெண்களுக்கு முதன்மையில்லாத கூட்டுக் குடும்ப அமைப்பில், ஆணுக்கு மட்டுமே அதிகாரமுள்ள அமைப்பில் இது பொருத்தமானது. தவிர்க்கவியலாதது என்றே படுகிறது. ஆணின் பிடிக்குள் நெரிபடும் பெண்களையும் இதே படைப்புகளில் சித்தரித்திருக்கிறார் என்றும் பதிலாகச் சொல்ல முடியும். அதை நிவர்த்தி செய்யும் விதத்தில் எம்டி எழுதிய நாவல் மஞ்ஞு (1964). எம்.டியின் நாவல்களில் பெண்ணை மையமாகக் கொண்ட ஒரே நாவல் இதுதான். விமலா என்ற தனியள் காத்திருக்கிறாள். தன்னைக் காதலித்து விட்டுப் போன உத்தரவாதமில்லாத காதலன் திரும்ப வருவான் என்று காத்திருக்கிறாள். அவளுடன் சேர்ந்து ஒரு ஆண் காத்திருக்கிறார். முகமறியாத அன்னிய தேசத்துத் தகப்பனுக்காக ஒரு சிறுவன் காத்திருக்கிறான். ஆணின் காத்திருப்பை விடப் பெண்ணின் காத்திருப்பு முடிவற்றது என்கிறது நாவல்.


எம்டி படைப்புகள் மீதான இன்னொரு விமர்சனம் அவை குடும்பக் கதைகள் என்பது. குடும்பம் என்ற அமைப்பை சமூகம் என்ற பெரிய கட்டுமானத்தின் நுண்வடிவமாகக் காண்கிறார் என்று இதற்கு பதிலளிக்க முடியும். குடும்பம் என்ற சின்ன வடிவத்தைச் சமூகம் என்ற பெரிய வடிவமாகச் சித்தரித்தது போலவே பிரம்மாண்டமானது என்று கற்பிக்கப்பட்ட இதிகாச வடிவத்தையும் எம்டி கையளவு உலகமாக மிக நேர்த்தியாக 'இரண்டாம் ஊழ' (1984) த்தில் காட்டுகிறார். எம்டி படைப்புகளின் ஆதார இயல்புகள் ஒன்று திரண்ட நாவலாக இதைக் குறிப்பிடலாம். இதன் மையப்பாத்திரம் பீமன். சமூக நாவல்களில் நாம் பார்த்த ஆண் பாத்திரங்களின் இதிகாச வடிவம். அவனும் கைவிடப்பட்டவன். சகோதரர்கள் ஐவரில் பலசாலி. அதிகாரத்தில் தருமனுக்குப் பிறகுதான் அவனுக்குப் பங்கு. காதலில் அர்ஜுனனுக்குப் பின்னர்தான் அவனுக்கு இன்பம். எல்லாச் சூழ்நிலையிலும் அவனுக்கு விதிக்கப்பட்டது இரண்டாவது இடம். பீமனின் இந்தக் குமுறலிலிருந்தே மகா பாரதக் கதை விரிகிறது. பீமனுக்குச் சமூகம் தன்னைப் புறக்கணிக்கிறது என்ற கோபம் இருக்கிறது. இரண்டாம் இடத்தில் இருப்பதன் காரணமாக எழும் கொந்தளிப்பே கதையின் மையமாகிறது. நாவல் வெளியானபோது மாபெரும் இதிகாசத்தை எம்டி தறவாட்டுக் கதையாகச் சுருக்கி விட்டார் என்று சொல்லப்பட்டது. இப்போது வாசிக்கும்போது அந்தக் குற்றச் சாட்டு பொருத்தமற்றது என்று தோன்றுகிறது. உண்மையில் மகா பாரதம் சித்தரிப்பது குடும்பப் பகையைத்தான். உறவினர்களே ஒருவருக்கொருவர் எதிரியாகி மோதிக் கொள்வதைத்தான். தெய்வீகக் கதை என்று பாராட்டப்படும் ஒன்றை மானுடக் கதையாக எம்டி மாற்றியிருக்கிறார். இதில
அமானுஷ்யமான சம்பவங்களோ, அசாதாரண மனிதர்களோ இல்லாமல் சித்தரித்திருப்பதை அவரது படைப்பாற்றலின் வெற்றியாகவே பார்க்கிறேன். அவரது படைப்பியல் சார்பு அவதாரப் பெருமையையோ அல்லது இதிகாச மகிமையையோ சார்ந்தது அல்ல. மானுட துக்கத்தின் ஊற்றுக் கண்ணை அடையாளம் காண்பது.

 

எம்டி யின் அக்கறை மனிதர்களை மனிதர்களாக இல்லாமல் செய்யும் அவலத்தை எடுத்துக் காட்டுவது என்று வரையறுக்கலாம். சமூகப் படைப்புகளில் மட்டுமல்ல தொன்மக் கதைகளிலும் இந்த அக்கறையைக் காண முடியும். இரண்டாம் இடத்திலிருந்தே உதாரணத்தைக் காட்டவும் முடியும். அர்ஜுனனின் மகன் அபிமன்யு போர்க்களத்தில் பலியாகிறான். அந்த மரணத்துக்கு பாண்டவ குலம் முழுவதும் கண்ணீர் சிந்துகிறது. அதே களத்தில் பீமனின் புதல்வன் கடோத்கஜனும் கொல்லப்படுகிறான். ஆனால் அந்த மரணம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.கிருஷ்ணனும் ' இதில் துக்கப்பட ஒன்றுமில்லை. கடோத்கஜன் கொல்லப்பட்டதால் அர்ஜூனன் உயிர் தப்பியது. அதற்காக மகிழ்ச்சியல்லவா அடையவேண்டும்' என்று உபதேசம் செய்கிறான். இந்த முரண்நிலை வரலாறு முழுவதும் தொடர்வதையே எம்டி குறிப்பாகக் காட்டுகிறார். இந்தக் கண்ணோட்டமே எம்டியை  செவ்வியல் கலைஞராகவும் அதேசமயம் நவீன மனத்தினராகவும் காட்டுகிறது.


மகத்தான நாவல்களை எழுதியவர். எனினும் மேலும் மகத்தானவராக
நான்  உணர்வது அவரது சிறுகதைகளில்தான். மறுமலர்ச்சிக் காலக் கதைகளுக்கும் நவீனத்துவக் கதைகளுக்கும் பின் நவீனத்துவக் கதைகளுக்கும் ஈடு நிற்கக் கூடிய கதைகள் அவருடையவை. இயல்பிலேயே செவ்வியல்தன்மை கொண்டவை. இந்த மதிப்பீட்டில் அவரை தி.ஜானகிராமனுடன் ஒப்பிட விரும்புகிறேன். வடிவிலும் பொருளிலும் செவ்வியல்தன்மை குன்றாத கதைகளை எழுதியவர்கள் இவர்கள். மாத்ருபூமி வார இதழ் நடத்திய சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற வளர்த்து மிருகங்கள் கதை எம்டியை மலையாளத்தின் முக்கியமான சிறுகதையாளர்களில் ஒருவராக அடையாளம் காட்டியது. முன்பே சிறுகதைகளை எழுதியிருந்தாலும் வளர்ப்பு மிருகங்கள் கதையே அவருக்குப் பெயர் ஈட்டித்தந்தது. இன்று வாசித்தாலும் புதுமை குன்றாத கதையாக மிளிர்கிறது. புதுமை, உத்தி என்று மெனக்கெடாமல் தனது மரபிலான கதைகளையே எழுதினார். ஆனால் அவை காலத்தைக் கடந்தவையாக நிலைபெற்றிருக்கின்றன. தன்னுடைய கிராமமான கூடல்லூரையும் அங்கே ஓடுகிற நிளா நதியையும் அங்கு வாழ்கிற எளிய மனிதர்களையுமே எம்டியின் கதைகள் சித்தரித்தன. இன்று கூடல்லூர் ஓர் இலக்கியத் தலம். எம்டியின் கதைகள் அந்தத் தலத்தின் புராணங்கள்.

 இலக்கியவாதி பத்திரிகையாளர் திரைப்படக்காரர் என்று எம்டிக்குப் பல்முகங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் முதன்மையானது இலக்கியவாதி என்ற அடையாளம்தான். 'நான் முதலும் முடிவுமாக ஓர் இலக்கியவாதி. மற்றவை எல்லாம் அதை ஒட்டியவைதாம்' என்று எம்டி பல தருணங்களிலும் குறிப்பிட்டிருக்கிறார். பத்திரிகையாளர், சினிமாக்காரர் ஆகிய நிலைகள் அவரது இலக்கியத்துக்குப் புகழைச் சேர்த்தன. அவரது இலக்கியப்புகழ் பிற துறைகளுக்கும் சிறப்புச் சேர்த்தன. மூன்றும் சேர்ந்த அவரது ஆளுமை அரியது. அந்த அருமைதான் கேரளக் கலை கலாச்சாரச் சூழலில் அவரை நிகரற்றவராக ஆக்கியது.


இரண்டு முக்கியமான சந்தர்ப்பங்களில் எம்டி பேசியவற்றை மேற்கோள் காட்டி இந்தப் பேச்சை நிறைவு செய்ய விரும்புகிறேன். முதலாவது, சாலியார் நதி மாசுபடுத்தப்படுவதை எதிர்த்து கோழிக்கோட்டில் நடந்த மக்கள் பேரணியைத் தொடங்கி வைத்து எம்டி ஆற்றிய உரை.

 

தாஸ்தயேவ்ஸ்கியின் ஒரு கதை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது. கதையின் பெயர் முதலை. யாரும் பார்த்திராத ஒரு நாட்டுப் புறத்துக்கு ஒரு முதலையைக் கண்காட்சியாகக் கொண்டு வருகிறார்கள். ஒரு பெரிய முதலை. முதலையைப் பார்க்க வந்த ஒரு ஆள் தவறுதலாக முதலையின் வாய்க்குள் விழுந்து விடுகிறான். அவனைக் காப்பாற்றச் சிலர் முயல்கிறார்கள். வாதங்களும் பிரதிவாதங்களும் நடக்கின்றன. கடைசியில் முதலையின் வாயில் அந்த ஆள் விழுந்ததுதான் தவறு என்று சொல்லப்படுகிறது. இப்போது முதலையைக் காப்பாற்றுவதுதான் முக்கியம் என்றாகிறது. முதலை காப்பாற்றப்பட்டு விடுகிறது. இந்தக் கதையில் வரும் முதலையின் வாயில் சிக்கிய மனிதனின் நிலைதான் சாலியார் மக்களின் நிலைமை. முதலையைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் நமக்கில்லை. நான் காப்பாற்ற வேண்டியது மனிதனைத்தான். பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கான இந்த அறப் போராட்டத்தில் என்னுடைய சொற்களாலும் செயலாலும் பலவீனமான இந்த உடலாலும் செய்யக் கூடிய எல்லா உதவிகளையும் அளிக்கிறேன்.


இரண்டாவது மேற்கோள் ஞானபீடப் பரிசு பெற்றபோது பேசியது.


மானுட இயல்பின் கால மாற்றங்கள் எப்போதும் என்னை ஈர்த்து வந்திருக்கின்றன. மனித நிலைமையின் சிக்கல்கள் என்னை ஈர்க்கின்றன. மிகக் கொடியவன் என்று சொல்லப்பட்ட ஒருவன் ஒருமுறையாவஹ்டு தன்னுடைய மென்மையான மனதைத் திறந்து காட்டுகிறான். நன்மைகளின் நிறைகுடம் என்று புகழப்பட்டவன் எதிர்பாராத விதத்தில் தன்னுடைய கொடிய கோரைப் பற்களைக் காட்டுகிறான். மனிதன் என்ற நித்திய விந்தையைப் பற்றி நான் சிந்தித்து நிம்மதியிழக்கிறோம்.

 

இந்த இரண்டு மேற்கோள்களில் ஒலிக்கும் மானுடத் தவிப்புதான் எம்டி என்ற எழுத்தாளனிலூடே காலம் பகிரங்கப்படுத்திய செய்தி என்று நம்புகிறேன்.




 களம் இலக்கிய அமைப்பு, கோவை - 20.1.2025 அன்று நடத்திய கூட்டத்தில் ஆற்றிய உரை.