திங்கள், 7 பிப்ரவரி, 2011

தீண்டப்படாத முத்தம்


சுகிர்தராணியின் கவிதைகள் பற்றி அவ்வப்போது எழுதியிருக்கிறேன். அவருடைய கவிதைகள் பற்றி இரண்டாவது முறையாக ஒரு பொது மேடையில் பேச நிற்கிறேன். இது ஒரே சமயம் மகிழ்ச்சியையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

கவிதை பற்றிப் பேசக் கிடைக்கும் எந்த வாய்ப்பும் மகிழ்ச்சியளிப்பது. அந்த வகையில் இதுவும் மகிழ்ச்சிகரமானது. ஆனால், கவிதை வாசிப்பவர்களை விடக் கவிதை எழுதுபவர்கள் அதிகமாக இருக்கும் ஒரு சூழலில் சக கவிஞரின் கவிதைகள் பற்றிப் பேச புதிதாக ஒருவர் முன்வராதது பற்றிய ஏமாற்றம். ஒரு கவிதை ஆர்வலனாகவே இந்த ஏமாற்றத்தை முன் வைக்கிறேன்.

இது சுகிர்தராணியின் நான்காவது தொகுப்பு. எட்டு ஆண்டுகளுக்குள் நான்கு தொகுப்பு என்பது அவருடைய இயக்கத்தைக் காட்டுகிறது. தொடர்ச்சியாகவும் அதிக எண்ணிக்கையிலும் எழுதுபவராக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இந்தத் தொகுதியில் ஐம்பது கவிதைகள் இருக்கின்றன. எல்லாமும் முந்தைய தொகுப்பான 'அவளை மொழி பெயர்த்த'லுக்குப் பின்னர் எழுதப்பட்டவை. கடந்த நான்கு ஆண்டுகளில் எழுதப்பட்டவை.இந்த நான்கு தொகுப்புகளையும் ஒருசேர வைத்துப் பார்க்கும்போது தன்னுடைய கவிதைக்கான தரத்தை சுகிர்தராணி அடைந்திருக்கிறார் என்பது புலப்படுகிறது. அதற்குப் பொருந்தும் உதாரணமாக இருப்பது இந்தத் தொகுப்பு. தொடர்ச்சியையும் தரத்தையும் எட்டியிருக்கும் ஒரு கவிஞரை சலுகைகள் எதுவுமின்றி நவீன கவிதையின் பொதுப் போக்கின் பிரதிநிதியாகக் கருதுவதுதான் சரி என்று எண்ணுகிறேன். அந்த வகையில் சுகிர்தராணியின் கவிதைகளை எங்கே வைப்பது என்று பார்க்க விரும்புகிறேன்.

தமிழில் பெண்கள் எழுதும் கவிதைகள் பற்றி இரண்டு வகையான கருத்துகள் நிலவுகின்றன. ஒன்று - பெண்கள் எழுதுவதெல்லாம் சாரமில்லாதவை. இலக்கியப் பெறுமானம் கற்பிக்கத் தகுதியானவையல்ல. இது பெண் எழுத்தின் மீது தீண்டாமை கற்பிக்கும் சிலரின் வாதம். இதில் முக்கியமான கவிஞர்களும் இடம்பெறுகிறார்கள். சமீபத்தில் ஓர் இலக்கிய இதழில் பிரபல எழுத்தாளர் ஒருவர் எழுதியிருந்தார். அழகான பெண்கள் அழகைப்பற்றியும் அழகில்லாத பெண்கள் யோனியைப்பற்றியும் கவிதைகள் எழுதும் மரபு கடைப் பிடிக்கப்படுகிறது என்று இலக்கியக் கோட்பாடுகளைப் பகடி செய்து எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இரண்டாவது கருத்து - பெருந் தன்மையாளர்களுடையது. யாரெல்லாமோ கவிதைகள் எழுதுகிறார்கள். பெண்களும் எழுதிவிட்டுப் போகட்டுமே. இது மேம்போக்கானது. இவ்விரு கருத்துக்களும் இலக்கியத்தின் அடிப்படைகளுக்கு எதிரானது. ஒரு புதிய போக்கை ஏற்றுக் கொள்ள முடியாத மனப்பாங்கு இலக்கியத்தை அடுத்த கட்ட வளர்ச்சி நோக்கிச் செலுத்த இயலாது என்ற விதியை ஒப்புக் கொண்டால் இந்தக் கருத்துக்களின் வெறுமையை நாம் உணர முடியும். இந்த விதியைச் சார்ந்தே இலக்கியம் புதிய களங்களைக் கண்டிருக்கிறது. இந்த இடத்தில்தான் சுகிர்தராணியின் கவிதைகள் பொருத்தப்பாட்டைக் காண்கின்றன.

பெண் கவிதைகள் உடலைச் சார்ந்த ஆரவாரமாக எழுதப்படுபவை என்ற பொதுக் கருத்தும் புழக்கத்தில் இருக்கிறது. பெண்ணின் அங்கங்களைப் பற்றிய குறிப்புகள் அப்பட்டமாகக் கவிதைகளில் இடம் பெறுவது பலரையும் மிரட்சிஅடையச் செய்துமிருக்கிறது. சுகிர்தராணியின் இந்தத் தொகுப்பு அவர்களை இன்னும் மிரட்சியடையச் செய்யலாம். உடல் தொடர்பான வலிகளை, வாதைகளை,ஆனந்தத்தை வேறு எந்தச் சொற்களால் குறிப்பிட முடியும்? பெண் கவிதை மொழியே உடலும் உடலின் உபாதைகளும் வேட்கைகளும் சார்ந்தது என்று ஜூலியா கிறிஸ்தவா குறிப்பிடுகிறார்.இது ஒரே சமயத்தில் மறுப்பும் படைப்புமாகிறது.இதுவரை தன் உடல் மேல் பதிந்திருக்கும் ஆண்மையச் சித்தரிப்பை உதறும் மறுப்பு.தன் உடல் தன்னுடைய உரிமைப் பொருள் என்று உணரும் சுதந்திரம்.இந்த நோக்கில் வெறும் வஸ்துவாக சுட்டிய சொற்கள் பெண்ணால் உச்சரிக்கப்படும்போது உடலைக் கடந்த இயக்கமாகின்றன.

ஆண் மையக் கருத்தாக்கங்கள் ஆயத்தம் செய்து வைத்திருக்கும் பெண் என்ற படிமத்தை பெண்களே எழுதும் மொழி நிராகரிக்கிறது.சாதி,இன,பால் வேற்றுமைகள் கொண்ட கலாச்சாரம் முன்வைக்கும் நிபந்தனைகளையும் சலுகைகளையும் மறுக்கிறது.ஒரு சமயம் இது மொழியின் சிக்கல்.அதேசமயம் இது கலாச்சாரத்தின் சிக்கலும் கூட.இவற்றை எதிர்கொள்ள உருவாக்கப்படும் சுதந்திரம் கவிதையின் சுதந்திரமும் கலாச்சாரத்தின் சுதந்திரமும் ஆகிறது. விரிவான தளத்தில் யோசித்தால் இந்த சுதந்திரம் பெண்ணை பெண்ணுக் குள்ளேயே சிறைப்பட அனுமதிக்காது என்று கருதலாம். மேற் சொன்ன இயக்கத்தையும் சுதந்திரத்தையும் வெளிப்படுத்தும் கவிதைகள் சுகிர்தராணியுடையவை என்பதற்கு இந்தத் தொகுப்பு சாட்சியம்.

மையப் பொருளைச் சார்ந்து சுகிர்தராணியின் கவிதைகளை மூன்றாகப் பகுக்கலாம். ஒன்று: இந்தக் கவிதைகள் எல்லாவற்றிலும் ஒலிப்பவை ஒடுக்கப்பட்டவர்களின் குரல்கள். அவை சாதி சார்ந்த ஒடுக்குமுறையாகவோ இனம் சார்ந்த ஒடுக்குமுறையாகவோ பாலினம் சார்ந்த ஒடுக்கு முறையா கவோ இருக்கின்றன. அவை குமுறல், சீற்றம், பழி வாங்கும் ஆவேசம், தமது வரலாற்றின் வெற்றிகள் பற்றிய கர்வம், எல்லாம் வெளிப்படும் குரல்கள் அவை.

இரண்டாவது: பெண்ணின் காமமும் காதலும் சித்தரிக்கப்படும் கவிதைகள். சுகிர்தராணியின் கவிதைகளைப் பொருத்தவரை காமமும் காதலும் ஒன்று தான். அதன் ஆதாரம் உடலின் சமிக்ஞைகள்தாம். காமமோ காதலோ மனம் சார்ந்தது என்ற ரொமாண்டிக்கான கருத்தை இந்தக் கவிதைகள் உதாசீனப் படுத்துகின்றன; புறக்கணிக்கின்றன. ஒரு கவிதையின் மையப்பாத்திரம் தன்னைக் 'காமத்தின் புராதனக் கோவில்' என்றே சொல்லுகிறது. சுகிர்த ராணியின் இரண்டாவது தொகுப்பான 'இரவு மிருக'தில் ஒரு கவிதை இருக்கிறது. 'உலகத்து மொழிகளின்/ அத்தனை அகராதிகளிலும்/ தேடித் தேடி/ கடைசியில் தெரிந்துகொண்டேன்/உன் பெயரில் காதலுக்கு/ நிகரான இன்னொரு சொல்லை.' இந்த மென்மையான கற்பனைகளை புதிய தொகுப்பில் காண்பது அரிது. மூன்றாவது கூறு: இந்தக் கவிதைகளில் இடம் பெறும் இயற்கை. சமீப காலத்தில் அதிக அளவுக்கு மனிதவயப்படுத்தப்பட்ட இயற்கை அல்லது இயற்கையை ஒட்டிச் சித்தரிக்கப்பட்ட மானுடக் கூறுகள் கொண்ட கவிதைகள் இவை என்று சொல்லலாம். மனித சரீரம் இயற்கையின் பகுதியாகவோ இயற்கையின் அம்சங்கள் மனித உடலின் விரிவாகவோ சித்தரிக்கப் படுகின்றன. 'முதல் கூடலுக்கு முன் நிகழ்ந்தவை' (பக் 39 ) என்ற கவிதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த மூன்று பகுப்பையும் ஒன்றிணைப்பது

கவிதையாக்கத்தில் சுகிர்தராணி பின்பற்றும் அரசியல். ஒரு அர்த்தத்தில் இது ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல்.இன்னொரு அர்த்தத்தில் பெண்நிலை அரசியல். ஒடுக்கப்பட்ட ஆணும் பாலின வேற்றுமையால் கீழானவளாகச் சித்தரிக்கப்படும் பெண்ணும் ஒரே தளத்தில் இருப்பவர்கள். அவர்கள் ஒரே துயரத்தை ஒரே கோபத்தை ஒரே விதியைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அண்மைக் காலத்தின் மாபெரும் மானுட அவலங்களான கயர்லாஞ்சியிலும் முள்ளிவாய்க்காலிலும் கொல்லப்பட்டவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்தத் தொகுப்பு அந்தச் சம்பவங்கள் பற்றியும் பல கவிதைகளில் பேசுகிறது.

பொதுவாக சுகிர்தராணியின் கவிதைகளில் விவிலியக் குறிப்புகள் அங்கங்கே காணப்படும். இந்தத் தொகுப்பில் அவற்றின் செல்வாக்கு அதிகம். கூடுதலாக புத்தனைப் பற்றிய சிந்தனைகள் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. அதற்கான காரணம் வெளிப்படையானது. 'காட்டு வேர்' என்ற கவிதையை இங்கே சொல்லலாம். பக் - 38.

இந்தத் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கும்போது தென்பட்ட சில விஷயங்கள் சுவாரசியமானவை. தொகுப்பில் ஐம்பது கவிதைகள் இருக்கின்றன. அவற்றில் தலைப்புக் கவிதை உட்பட ஏழு கவிதைகள் முத்தம் பற்றியவை. தீண்டப்படாத முத்தம். முதல் முத்தம்,கடைசி முத்தம், சபிக்கப்பட்ட முத்தம்,விலக்கப்பட்ட முத்தம்,சாம்பல் பூக்காத முத்தங்கள், உறையிடாத முத்தம் என்று போகிறது இந்தப் பட்டியல். இவை தவிர 14 கவிதைகளுக்குள் முத்தம் இடம்பெறுவதையும் குறிப்பிட வேண்டும். இதில் எந்த முத்தமும் மகிழ்ச்சியின் அடையாளமல்ல; வலியைச் சொல்பவை. தனிஆள் என்ற வகையிலும் சமூகம் சார்ந்தும் அது பரவசத்தை அல்ல; ஓர் இனத்தின் வஞ்சினத்தைச் சொல்லுகிறது. உடல் ஓர் ஆயுதமாக மாறும் அரசியலைப் பேசுகின்றன சுகிர்தராணியின் கவிதைகள். அவருடைய கவிதை இடம் இது என்று தோன்றுகிறது. மிக அதிகமான விமர்சனங்களை வரவழைக்கும் இடம்.

(2 ஜனவரி 2011 அன்று சென்னையில் நடைபெற்ற காலச்சுவடு நூல் வெளியீட்டு விழாவில் சுகிர்தராணியின் ‘தீண்டப்படாத முத்தம்’ தொகுப்பை வெளியிட்டு நிகழ்த்திய உரை)

@

ச்

திங்கள், 8 நவம்பர், 2010

கமலா சுரய்யா

















ூந்தூறலாக மழை. இடையிடையே குளிர் வெயில். மரங்களில் தேங்கியிருந்த நீர்த் துளிகள் இலையசைவில் உதிர்ந்து மேலே சொரிந்தன. மசூதிக் கோபுரங்க ளிருந்து பறந்து வந்த புறாக்கள் மரக் கிளைகளில் உட்கார்ந்து 'க்ரும் க்ரும்' என்று கேட்டன.கபருஸ்தானின் மண் பாதங்களில் நிரடியது. வெள்ளை பூசிய பழைய சமாதிகள். பச்சைக் கோடி போர்த்திய புதிய மண்மேடுகள். இவற்றுக்கிடையில் அவர் உறங்கும் இடம் எது? புறாக்கள் க்ஹூம் க்ஹூம்' என்று முனகிக்
கொண்டு பறந்து போயின.

வெள்ளிக் கிழமை தொழுகை முடித்து எல்லாரும் போயிருந்தார்கள்.பாளையம் பள்ளிவாசல் அமைதியாக இருந்தது. அதன் பின்னால் உள்ள இடுகாட்டில் தயக்கத்துடன் தேடிக் கொண்டிருந்தேன்.

'என்ன தேடுகிறீர்கள்?' என்று கேட்டார் மொல்லா.

'ஒரு சமாதியை. மாதவிக்குட்டியை அடக்கம் செய்த சமாதியை'

'அதை இங்கே தேடினால் எப்படி? ஏதாவது மயானத்தில் போய்ப் பாருங்கள்'

சொற்பிழையை உணர்ந்ததும் நாக்கைக் கடித்துக் கொண்டேன்.

'இல்லை, சுரய்யா, கமலா சுரய்யாவின் சமாதி?'

'அதோ அந்த மதிலுக்குப் பக்கத்தில்.ஒரு நீர்மாதளச் செடி தெரிகிறதா, அதுதான்'
அது செடிதான். மரமாக இன்னும் காலம் பிடிக்கும். மாதவிக் குட்டியின் இல்லை கமலாதாசின் இல்லை கமலா சுரய்யாவின் கதைகளில்தான் நீர்மாதளம் சீக்கிரம் வளரும். சீக்கிரம் பூக்கும்.அவர் எழுதிய ஒரு நாவலின் தலைப்பு 'நீர்மாதளம் பூத்த காலம்' என்பது நினைவுக்கு வந்தது.

கமலா சுரய்யாவின் சமாதிமேல் காய்ந்த இலைகள் கிடந்தன.மழைத் துளிகள் வலுத்து விழுந்தபோது அவை ஒலியெழுப்பின.துளிகள் விழவிழ இலையோசை கூடியது.யாரோ பேசுகிற ஒலிபோலக் கேட்டது.கமலாவின் குரலா? இல்லை.அது முதுமைப் பருவத்திலும் இளமையின் குரலாக இருந்தது. ஆங்கிலத்தில் பேசும்போது மல்பெரி இலையில் விழும் நீரின் குரல்.மலையாளத்தில் தென்னங் கீற்றில் சிதறும் ஜல சப்தம். பரபரப்பான வாகனப் போக்குவரத்து நிரம்பிய சாலைகளைக் கடந்து ஓர் ஆடும் அதன் குட்டிகளும் கபருஸ்தானுக்குள்
நுழைந்தன. எங்கேயிருந்து வந்திருக்கும் அவை? யோசித்துக் கொண்டிருந்த போது மொல்லா கேட்டார்: 'சார், போறீங்க இல்லையா?'

'ஆமாம். அனுமதி கொடுத்ததற்கு நன்றி' சொல்லி விட்டு இரண்டு ஐந்து ரூபாய் பொன் நாணயங்களை அவர் கையில் வைத்தேன். 'இது என்னத்துக்கு சாரே, சரி இருக்கட்டும்,உங்க மன சமாதானத்துகாக வாங்கிக்கிறேன்.சாரைப்போலத்தான் நிறையப் பேர் இந்த ஸ்திரீயோட கபரைப் பார்க்க அடிக்கடி வர்றாங்க. விதேசிகள் கூட வந்து பார்த்து விட்டுப்போகிறார்கள். ரொம்பப் பெரிய மனுஷிதான்போல' என்று நகர்ந்த மொல்லா ஆடுகளை விரட்டினார். 'இத்தனை நெருக்கடியான இடத்தில் இது மட்டும் எங்கிருந்தோ மக்களையும் கூட்டிகிட்டு வந்துடுது' என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

மழை கொஞ்சம் பலமாகப் பெய்ய ஆரம்பித்தது. 'சார், கொஞ்சம் நின்று விட்டுப் போகலாமே?' என்று சொன்னபடியே மொல்லா இடைவழியில் நுழைந்து பள்ளிவாசல் வராந்தாவில் ஏறினார். 'மழை அவ்வளவொன்றும் பெரிதாக இல்லை, நான் வருகிறேன்' என்றபடித் திரும்ப ஒருமுறை அந்த மரணப் பூங்காவை ஏறிட்டேன். வெள்ளாடு குட்டிகள் பின் தொடர நீர்மாதளத்தின் நிழலில் அண்டுவது கண்ணில் பட்டது.
@


கட்டிப் போடப்பட்ட வெள்ளாடு
@
அறியாமையின் தூணில்
கட்டிபோடப் பட்ட ஜந்து நான்
ஒருமுறை தூணைச் சுற்றி
மீண்டும் திரும்பிப்போய்
இன்னொரு முறை சுற்ற மட்டுமே முடியும்
வெடித்துச் சிதறும் வெடிகுண்டுகள்
என்னை வழிமறித்து நிறுத்துகின்றன.
எனக்கு இந்தக் காலத்தின் உளவியல்
அப்படியொன்றும் பிடிபடுவதில்லை
அதற்கு முலையூட்டும்
தத்துவ சிந்தனை என்று அவர்கள் அழைக்கும்
தாயையும் எனக்குப் புரியவில்லை
எனக்கு அறிமுகங்கூட இல்லாத
ஒருவரைக் காயப்படுத்த
என்னால் முடியாது
இன்று நிலவும் வெறுப்பை
என்னால் பங்கிட முடியாது
நான் எவருடையதோ ஒரு வளர்ப்பு மிருகம்.
காலத்தில் நெருங்கி வந்து
மெல்லமெல்ல நொறுக்குவதற்காகக்
கைவிடப்பட்ட
பழைய விளையாட்டுப் பண்டம்
பசி முற்றி
பிளாட்டோவின் 'குடியர'சையும்
காளிதாசனின் 'சாகுந்தல'த்தையும்
சொந்த நம்பிக்கைகளைப் பற்றிய
குர்ஜியேவின் அலசலையும்
அப்புறம்
நிச்சயமாக
வால்ட் விட்மனின்' புல்லின் இதழ்க"ளையும்
மெய்ந்து தீர்த்த
வெள்ளாடு நான்.
வெள்ளோட்டம் பார்க்க வரும்
கசாப்புக்காரர்களுக்குப் போதுமான
கொழுத்த இறைச்சி எனக்கில்லை
நோய்க்கே நோய்வந்தது போன்றவள் நான்
என்னை இரவு உணவாக்கிக் கொள்ள
யாருக்கும் விருப்பமிராது

வெறுப்புக்கும் ஆயுதச் சந்தைகளுக்கும்
தான் தோன்றிக் கொலைகளுக்குமான
இந்த நூற்றாண்டில்
இது ஒரு வரமேதான்.
( கமலாதாசின் கடைசிக் காலக் கவிதைகளில் ஒன்று)

ஞாயிறு, 18 ஜூலை, 2010

ஹபீஸ் கவிதைகள்


















உங்களது கண்ணுக்கும்
இந்தப் பக்கத்துக்கும்
இடையில்
நான் நின்றுகொண்டிருக்கிறேன்.

உங்களது காதுக்கும் ஒலிக்கும்
இடையில்
ஒருநாளைக்கு ஆயிரம்முறை
உங்கள் ஆன்மா நடந்துபோகும்
பொற்கூடாரத்தை வேய்ந்திருக்கிறான் நண்பன்.

ஒவ்வொருமுறை நீங்கள்
காபாவைக் கடந்துபோகும்போதும்
உங்கள் உடலிலிருந்து ஒரு பொன் நூலை
நழுவ விடுகிறான் சூரியன்.

ஒவ்வொருமுறை நீங்கள்
எந்தப் பொளுளைக் கடக்கும்போதும்
அதற்குள்ளேயிருந்து வணங்குகிறேன் நான்.

அவனுடைய அண்மைபற்றி
இன்னும் உங்களுக்குச் சந்தேகமிருந்தால்
எப்போதாவது கடவுளுடன் விவாதித்துப் பாருங்கள்.

உங்களது கண்ணுக்கும்
இந்தப் பக்கத்துக்கும்
இடையில்
ஹபீஸ் நின்றுகொண்டிருக்கிறான்.

என்னுள் மோதி நுழையுங்கள்.

@

2


இத்தனை காலங்களுக்குப் பிறகும் கூட
சூரியன் பூமியிடம் சொல்வதில்லை;
'நீ எனக்குக் கடமைப்பட்டிருக்கிறாய்'

அதுபோன்ற அன்பால்
என்ன நேர்கிறதென்று பாருங்கள்.
அது முழு ஆகாயத்தையும் சுடரச்செய்கிறது.

@

3

அழகான ஒற்றை பறவைபோல அல்ல

அவருடைய பாதம்
எனக்கு அருகில் பூமியைத் தொட்டதும்
கடவுளால் உலுக்கப்பட்டு
ஒரு கிளையையே முறித்துக்கொண்டு
என் மனதின் பரந்த குன்றுகளுக்கு மேலாக
பெரும் வெண்ணிறக் கூட்டங்களாக
எழுகின்றன இந்தக் கவிதைகள்.

@

4

இறந்த காலத்தை மன்னிக்க முடிகிறபோது
இசைக்கருவி இசைக்கத் தொடங்குகிறது

எதிர்காலத்தைப் பற்றி வருந்துவதை
இசைக்கருவி நிறுத்தும்போது
நீ
போதையேறிய சிரிப்புத் தொல்லையாக மாறுகிறாய்.

பிறகு கடவுள்
குனிந்து தன்னுடைய சிகைக்குள்
உன்னைக் கோதிவிடுகிறார்.

இசைக்கருவி
மற்றவர்களால் ஏற்பட்ட காயங்களை
மன்னிக்கிறபோது

இதயம்
பாடத் தொடங்குகிறது.

@

5

நான் மழையாகப் பொழிகிறேன்

ஏனெனில்
உங்கள் புல்வெளிகள்
கடவுளுக்காகக் காத்திருக்கின்றன.

நான் வெளிச்சத்தைச் சொற்களில் நெய்கிறேன்

உங்கள் மனம் அவற்றை ஏற்கும்போது
ஒரு மெழுகுவர்த்தி இருளுக்குச் செய்வதுபோல
நமக்கும் நிகழும்
எனவே
உங்கள் கண்கள் தமது துக்கத்தை மறுதலிக்கும்
பிரகாசமாய் மாறும்.

பிறந்த நாள் பரிசுபோல
என் சிரிப்பைப் பொதிந்து
உங்கள் படுக்கையருகில் போட்டிருக்கிறேன்

ஆகாயத்தின் ஒவ்வொரு விளக்குக் கம்பத்துக்கும் அருகில்
என் இதயத்தின் ஞானத்தை நட்டுவைத்திருக்கிறேன்.

தனவான் அடிக்கடி கிறுக்கனாகிறான்

தெய்வீகப் பித்தேறிய ஆன்மா
முடிவில்லாக் கருணையாக உருமாறுகிறது

நன்றித் தொகையின் பொன் மூட்டைகளைக் கட்டி
நிலவுகளின் காலடியில்
கோள்களின் காலடியில்
பரவச வெளிகளின் காலடியில்
பாடும் பறவைகளின் காலடியில்
தொங்கவிடுகிறேன்

நான் பேசுகிறேன்
ஏனெனில்
உங்கள் உடலின் ஒவ்வொரு அணுவும்
கடவுளைத் தேடிக்கொண்டிருக்கிறது.

@

6

நான்
கடவுளிடமிருந்து ஏராளமாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன்

எனவே
ஒரு கிறித்துவன் என்றோ
ஒரு இந்து என்றோ
ஒரு முஸ்லிம் என்றோ
ஒரு பௌத்தன் என்றோ
ஒரு யூதன் என்றோ
என்னை இனிமேலும் நான்
அழைத்துக்கொள்ள மாட்டேன்

உண்மை
என்னிடம் ஏராளமானவற்றைப் பகிர்ந்துகொண்டிருக்கிறது

எனவே
ஓர் ஆண் என்றோ
ஒரு பெண் என்றோ
ஒரு தேவதை என்றோ அல்லது
தூய ஆன்மா என்றோ
என்னை இனிமேலும் நான்
அழைத்துக்கொள்ள மாட்டேன்

அன்பு
முழுமையாக ஹபீஸுடன் நட்பு கொண்டாயிற்று

என் மனம் இதுவரை அறிந்த
எல்லா எண்ணத்தையும்
எல்லா பிம்பத்தையும் சாம்பலாக்கிவிட்டது.
என்னை விடுதலை செய்து விட்டது.

@

7



இன்னும் கூடப் பாதுகாப்பில்லாமல் உணரும்
பொருத்தமற்ற புதுமணத் தம்பதியர்
இருவரில் ஒருவர்போல

கடவுளைத் தேடியபடியே சொல்லிக்கொண்டிருக்கிறேன்
'என்னை முத்தமிடேன்'.
@

புதன், 30 ஜூன், 2010

கழுமரத்துக்குச் செல்பவனின் தனிமொழி

























ழுமரத்தை நோக்கிச் செல்லும்
என்னைப் பாருங்கள்
பத்து நிமிடங்களில்
கனவுகள் காலியான என் சிரம்
ஆசையொழிந்த உடலிலிருந்து துண்டிக்கப்படும்
நான் கொலைசெய்தவனின் உதிரம்
எனது அன்புக்காக அலறுவதைக் கேட்டேன்
அவனுடைய குடும்பத்தினரிடமும் கூட்டாளிகளிடமும்
நான் மன்னிப்புக் கோர வேண்டியிருந்தது
அந்த முற்றத்து மாமரத்தைக் கட்டியணைத்து
நான் அழ வேண்டியிருந்தது
மண்ணில் புரண்டு சகல உயிர்களுக்கும் உடைமையான
பூமியிடம் மன்னிப்பை யாசிக்க வேண்டியிருந்தது
பாதி கடித்து வைத்த பழத்துக்கும்
பாதி பாடிய பாட்டுக்கும்
பாதி கட்டிய வீட்டுக்கும்
பாதி வாசித்த புத்தகத்துக்கும்
பாதி சிநேகித்த சிநேகத்துக்கும்
பாதி வாழ்ந்த வாழ்க்கைக்கும்
நான் திரும்ப வேண்டியிருந்தது
நதியைக் கடந்துபோய்ப் பூரம் கொண்டாட வேண்டியிருந்தது
குன்றைக் கடந்துபோய்ப் பெருநாளையும்.
'நான் வந்துவிட்டேன்' என்று நண்பர்களிடம் சொல்ல
நெரிசலான பேருந்திலேறி
பட்டணத்துக்குப் போகவேண்டியிருந்தது
மகள் தன்னிச்சையான பெண்ணாகவும்
மகன் அழத் தெரிந்த ஆணாகவும்
ஆகியிருப்பதைப் பார்க்க வேண்டியிருந்தது
குளிரிலும் கண்ணீரிலும்
துணைக்குத் துணையாக வேண்டியிருந்தது
இலைகளை விடவும் பூக்களுள்ள
வேனிற்கால வாகைமரம்போல
எனக்கு நினைவுகளை விடவும் கனவுகளிருந்தன
நேற்றை விடவும் வெளிச்சமுள்ள
ஒரு நாளை இருந்தது
கதை சொல்லி மரணத்தை ஒத்திப்போட
நான் ஒரு ‘ஷெஹர்ஜாத்’ அல்ல
கதைகளின் விருட்சம் இலைகளுதிர்ந்து கழுமரமாயிற்று
’கடைசி ஆசை ஏதேனும் உண்டா? ' என்று
அவர்கள் என்னிடம் கேட்டார்கள்
புல்வெளியில் உட்கார்ந்து காது நிமிர்த்தும்
ஒரு முயலாக வேண்டுமென்று
ஒளிந்திருந்து கீச்சிடும்
ஓர் அணிலாக வேண்டுமென்று
வானவில் பறவையும் தலைமுறைகளின் நதியும்
பூக்காலத்தின் காற்றுமாக
ஆகவேண்டுமென்று
நான் சொல்லவில்லை
அவர்கள் எனக்குக் கொடுத்த இனிப்பில்
மரணத்தின் துவர்ப்பிருந்தது
கழுமரத்திலிருந்து தப்பிப் பிழைக்கும்
பூனையின் கண்களுள்ள கடுந்துவர்ப்பு
சட்டமியற்றுபவர்களே சொல்லுங்கள்,
தீர்ப்பெழுதுபவர்களே சொல்லுங்கள்
இரங்கக் கூட முடியாத
இந்தத் தீர்ப்புக்காக
நீங்கள் இரங்குகிறீர்கள் இல்லையா?
கொலைக்குற்றத்தின் வெக்கையான தர்க்கத்திலிருந்து
தூக்குத் தண்டனையின் குளிர்ந்த தர்க்கத்துக்கு
எவ்வளவு தூரம்?
கேள்விகளை
பூமியின் பசுமையில் விட்டுவிட்டு
அபராதிகளும் நிரபராதிகளும்
ரத்த சாட்சிகளும் நடந்துபோன
குருதி படர்ந்த இதே வழியில்
நானும் போகிறேன்
நாளையேனும்
ஒருவரும் இந்த வழியில் வரவேண்டியிராத
நா ளை உருவாகட்டும்.
நான் போகிறேன்
@
சச்சிதானந்தன் (மலையாளம்)

@
ஒன்னராடன் (கைதிகளின் உரிமைக்கான இதழ்) மே - ஜூன் 2010 இல் வெளியான கவிதையின் தமிழாக்கம் ‘காலச்சுவடு’ ஜூன் 2010 இதழில்
இடம் பெற்றது. ஓவியம் - ரவி.

--------------------------------------------------------------------------------------------------------------------------------
பெருநாள் - கிறிஸ்துமஸ்
‘ஷெஹர்ஜாத்’ - ‘1001 அரேபிய இரவுக’ளின் கதைசொல்லி.

செவ்வாய், 29 ஜூன், 2010

மலையாளக் கவிதைகள் - எஸ். ஜோஸப்

















அக்காவின் பைபிள்


அக்காவின் பைபிளில் இருப்பவை:
தையல் விட்ட ரேஷன் கார்டு
கடனுதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள்
கந்துவட்டிக்காரர்களின் அட்டை
திருவிழா, பண்டிகை நோட்டீசுகள்
அண்ணன் குழந்தையின் போட்டோ
குட்டித் தொப்பிக்கான தையல் குறிப்பெழுதிய காகிதம்
ஒரு நூறு ரூபாய் நோட்டு
எஸ்எஸ்எல்சி புத்தகம்.



அக்காவின் பைபிளில் இல்லாதவை:
முன்னுரை
பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு
நிலப்படங்கள்
சிவப்பு மேலட்டை.


மீன்காரன் / பக். 20/ 2003
****

காதலிக்கும்போது...

ஒருத்தியை மட்டுமாகக் காதலிக்கக் கூடாது
அவளுடைய மணம்,
நிறம், சிரிப்பையெல்லாம்
வெறுமே நினைத்துக்கொண்டு நடக்கக் கூடாது
எப்போதும்



அவளுடைய பவுடர்
சுவர்க்கண்ணாடியில் அசையும் மரக்கிளை
அவள் பத்திரப்படுத்திய பழைய பாட்டுகள்
கதைப் புத்தகங்கள்
அவுன்சு குப்பியில் நிரப்பிய மணல்
வெளியில் ரோஜா
பலரகமானவை.



ஜன்னலினூடே இருளும் அந்தியை
வெறுமே அவள் பார்த்தபடியிருப்பதையெல்லாம்
மனதில் நினைத்துக்கொண்டு நடக்கக் கூடாது

எப்போதும்
அவள் எப்போதும் இறந்துபோகலாம்
அவள் இல்லாத ஒரு பெரும் உலகம்
இங்கிருக்கும் எப்போதும் இதுபோலவே.



அவளில்லாமலும் வழிகள் நீளும்
திறந்திருக்கிறது ஒப்பனைப் பொருள்
சுவர்க்கண்ணாடியில் மரமசைகிறது

வழக்கம்போல இதோ
பறவைகள் வந்து
செடிகளுக்கு மேலே
சலசலத்து நிற்கின்றன



அப்படியே இருக்கையில் பொழுதும் இருளும்
ஒருத்தியை மட்டுமாகக் காதலிக்கக் கூடாது
அவளை நினைத்து அவன் தலை குனிந்து
நசிந்தவனைப் போல நடக்க நேரும்



இருட்டுக்குள் அவன் ஜன்னலாவானே
அவளை எப்போதும் கனவில் காண்பானே
கனவினூடவன்
அவளையும் தேடி
மரணத்தை நோக்கி
நடந்து போவானே.


மீன்காரன் / பக். 47 / 2003
**

படகைப் பற்றி ஒரு கவிதை


புத்தகத்தில் ஒரு கவிதை எழுதிவைத்தேன்
எடைக்கு விற்ற காகிதங்களில் அதுவும் இருந்தது.



கடைக்காரன் மிளகாயமோ வெங்காயமோ பொட்டலம் கட்டியிருப்பானோ?
குடிசையிலே குழந்தைக்கு அது கிடைத்திருக்குமோ?
அவனால் எழுத்துக் கூட்டிப் படிக்க முடிந்திருக்காதே?
அவன் தங்கைக்குப் படகு செய்து கொடுத்திருப்பானோ?
தோணியில் அவர்கள் எங்கே போக?



ஏனென்றால்
ஏராளமான கவிதைகள் அங்கும் இங்கும்
எழுதிப் போட்டிருக்கிறேன்
கடையிலிருந்து மிளகாயும் வெங்காயமும்
பொட்டலம் கட்டிய காகிதங்கள் வாசித்திருக்கிறேன்
எழுத்துக் கூட்டிப் படிப்பது சில வேளைகளில் கடினந்தான்
தங்கைகளுக்குப் படகு செய்து கொடுத்திருக்கிறேன்
தோணியில் அவர்கள் ஏறியதுமில்லை.



புத்தகத்தில் எழுதிவைத்த கவிதை
எதைப் பற்றியதாக இருந்தது?
எதைப் பற்றியதாக இருக்க வேண்டும்?
படகைப் பற்றி.

சரி, அது படகைப் பற்றியதுதான்.


மீன்காரன் / பக். 37 / 2003
**



மீன்காரன்


கொஞ்சமே நீரோட்டமுள்ள வாய்க்காலில்
மீன்காரன் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தான்.

தாழைகள் தென்படவில்லை
வாய்க்கால் நேராகப் போய் முட்டித் திரும்பும் இடம்
ஒரு ஒர்க்ஷாப்பாக இருந்தது.
அதன் கற்சுவரும் தெரியவில்லை.

வாய்க்காலுக்கு இணையாக
தெற்கும் வடக்குமாக
எம்.சி.ரோடு பாய்ந்து போனது.

நாங்கள், குழந்தைகள்தாம் பார்த்தோம்
அரையடிகூட உயரமில்லாத நீரில்
கவிழ்ந்து கிடக்கும் மீன்காரனின் உடல்
பாத்திரம், தராசும் படிக்கல்லும்.

இவனை வலிப்பு சுழற்றிப்போட்டிருக்கிறது
தலையில் தண்ணீர் விளையாடுகிறது
தண்ணீரில் தாழை மடல்
குத்திக் கிழித்து விளையாடுகிறது.
வாய்க்காலின் ஓய்ந்துபோன மூலையில்
நீர்ப்பூச்சி சுழல்கிறது.

இப்போது அதே இடத்தையடையும்போது
தெரிபவை:
ஒரு கோழிக்கடை
சிமெண்ட் பூசிய ஒர்க்ஷாப்
மண்கொட்டி உயர்த்திய வயல்

மீன்காரனைப் பார்க்கவே முடிவதில்லை.


மீன்காரன் / பக். 54 / 2003

**

இந்த வரிகளுக்கிடையில்

இந்த வரிகளுக்கிடையில்
சில சமயம் நானும் சிலசமயம் நீங்களும்
இல்லாமற் போகலாம்.
நமக்கிடையில் அறிமுகமில்லை.
பட்டணத்திலோ கடற்கரையிலோ பார்த்திருக்கலாம்
பாலத்தின் கைப்பிடிச் சுவரைப் பற்றிக்கொண்டு
கீழே ஒருவன் தூண்டில்போடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தது
நீங்களாக இருக்கலாம்
அல்லது
இறைச்சியோ மருந்தோ வாங்கப்
போகும்போது பார்த்திருக்கலாம்
நாமெல்லாம் எத்தனை சாதாரணர்கள், இல்லையா?
அசாதாரணமான காரியங்கள் செய்ய முயல்கிறோம்

நீங்கள் ஒரு வண்டி ஓட்டுகிறீர்கள்
அல்லது லோன் வாங்கி ஒரு கடை தொடங்குகிறீர்கள்
பரீட்சையில் தேறுகிறீர்கள் பாட்டுப் பாடுகிறீர்கள்
நான் கவிதைகள் எழுத முயல்கிறேன்
நமது செயல்கள் நம்மைத்தாண்டி நீண்டு நிற்கலாம்
எழுத்துக்களுக்கிடையில் நான் இல்லாமற் போகலாம்
வாசிப்புக்கிடையில் நீங்களும்.


ஐடென்டிட்டி கார்ட் / பக். 21 / 2005
**


ஐடென்டிட்டி கார்டு

படித்துக்கொண்டிருந்த காலத்தில்
ஒரு பெண் சிரித்துக்கொண்டு வந்தாள்
அவளுடைய சோற்றுக்கும் சூரைமீன் கறிக்கும் மேலாக
எங்களுடைய கைகள் குழைந்தன
நாங்கள் ஒரே பெஞ்சில்
இந்து கிறித்துவக் குடும்பமானோம்
நான் நெரூதாவின் கவிதைகள் வாசித்து நடந்தேன்
அதற்கிடையில் என் ஐடென்டிட்டி கார்டு காணாமற் போனது

நான் பார்த்தேன். கார்டைக் கொடுத்தவள் சொன்னாள்:
சிவப்புப் பேனாவால் குறித்திருக்கிறதே
ஸ்டைபெண்ட் வாங்கிய கணக்கு.

இந்தக் காலத்தில் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் உட்கார்ந்து
தம்மை மறப்பதைப் பார்ப்பதேயில்லை
சற்றுக் கழிந்து அவர்கள் பிரிந்து போவார்கள்
இனி அவர்கள் சேர்ந்தாலும் வியப்பில்லை
அவர்களுடைய ஐடென்டிட்டி கார்டுகளில் செந்நிறக் குறிகள் இருக்காது.



ஐடென்டிட்டி கார்டு / பக். 28 / 2005
***


நிலவை நேசித்த பெண்

வீடுவாசல் பெருக்கி, செருப்பணிந்த
கோழிக்குத் தீனிவைத்து, சிரிக்கின்ற
பூனைக்குப் பால்வார்த்து, காலையுணவுண்டு
நேசம் பரிமாறி நிலவை நேசித்து
இரவுக்குப் பயந்து நீ உறங்குகிறாயோ?

சோஃபீ, பிஞ்சுமனமே, உனக்கானவை என்
கவிதைக் குருவிகள் எல்லாமும்.

நிலவை நேசித்த குழந்தாய், தனிமையால்
உருவாக்கப்பட்டாயோ நீ, பள்ளியின்
வாசலில் கூட்டாளிகள் ஓடியாட
பேசாமல் பார்த்து நிற்கிறாய் சோஃபியா, நீ,
பேசாதிருப்பதேன் பசித்ததோ?

கூட்டாளிகளில்லாத பெண்ணே, ஒருமுறை நீ
பாட்டுப் பாடக் கேட்டேன், உன் நீள்முடி
காற்றிலவிழ்த்து வட்டமிட்டு நீ
விழுந்து சிரிப்பதைப் பார்த்தேன், வழிகளில்
தனக்குத்தானே மெதுவாகப் பேசி
மெல்ல நடந்து நீ போவதைப் பார்த்தேன்.

வீட்டருகில் ஒருமுறை காணாமற்போக
வாய்க்கால் கரைவரை தேடித் திரும்பிய
நீ வளர்க்கும் நாய், குரைத்தபடி
கேட்டதென்ன? பதிலுக்கு என்ன சொன்னாய் நீ?

ஆந்தைகள் முனகும் இரவில்
பெட்டைப் பூனையும் நீயும் உறங்குகிறீர்கள்
பிரார்த்தனைபோல குறுக்கும் நெடுக்குமாய்.

குட்டிச் சிறுத்தைகள்போல வெய்யில்
துள்ளி விளையாடிக் களிக்கும் புலரியில்
வீட்டின் கதவை விரியத் திறந்து நீ
சிந்தும் புன்னகை வாழ்வின் நீர்.

தாயிழந்த குழந்தாய், உனக்கு நான்
என்ன கொடுக்க, பசிக்கும், நேசத்துக்கும்?
என் கை வெறுமை, இதயம் விஷமயம்
இல்லை, சேற்றில் மலர்கிறது பவளமல்லி.

என் கவிதை காட்டு நாவல் பழம்
என் கவிதை தாயின் உதடுகள்
என் கவிதையின் ஞானஸ்நானத்தால்
உன்னைச் சகோதரியாக்குகிறேன் நான்.

துக்கங்களையெல்லாம் கவிதைகளாக்க
துக்கமே, நீ என்னுடனே இருக்க வேண்டும்.


கறுத்த கல் / பக். 16 / 2000

கறுத்த கல்

கறுத்த கல்லின் மேலமர்ந்து
சிறுவயதில் விளையாடியதை நினைக்கிறேன்.
எனக்கு முன்பே பிறந்த கல்லிது
கறுத்தவன் என் கடுமையுள்ள கல்
வெய்யிலிலும் கொடும் மழையிலும்
ஒரு வருத்தமுமில்லாமல்
உணர்ச்சியில்லாமல் கிடந்திருந்த கல்
அதன் யானைமுதுகிலமர்ந்து
சடசடவென்று மண்ணப்பம் சுட்டு விளையாடியதை நினைக்கிறேன்.

அரண்ட காற்றின் சன்னலில்
அம்மா வருவதைப் பார்த்து
கறுத்த கல்லின் தாழ்வாரத்தில்
தனித்திருந்தேன்
மகர வயல்கள் கடந்து பணியிடங்களிலிருந்தோ
தலையில் ரேஷனும் பயிறுமாக
தூரத்து நாற்சந்தியிலிருந்தோ
அம்மா வருகிறாள்.

பசிக்கு மேலாகச் சாரல் மழை.
இருள் மூடிய விளைநிலங்கள்
இருட்டில் பாடும் மலைப் பறவை
இருட்டினூடே வரும் அண்டை வீட்டான்
ஓரினச் சேர்க்கையாளனுக்கு நிறமில்லை.

இவையெல்லாம் பால்யத்தின் குப்பைக்கூடை
இவையெல்லாம் மொத்தமாய் எறிந்து தொலைவில் போகிறேன்

எனினும்
ஆய்வகத்தைக் குடைந்து போயின பிரவாகங்கள்.

கறுத்த பாதைகள்
கறுத்த வேசிகள்
கறுத்த குழந்தைகள்
கறுத்த புத்தகத்தைத் திறக்கையில் காலாட்படைகள்
கறுப்புக்கு என் கறுப்புக்கு
நான் திரும்பி வருகிறேன்.
கருங்கல் உடைத்து எனக்கு
உணவு தந்த தகப்பனை
மரணத்திலிருந்து அழுகையால்
நாங்கள் மீட்ட அன்னையை
சிரட்டை எரித்து
உடைகளைத் தேய்த்துத் தந்த சகோதரிகளை
மறந்தாலும் உன்னை மறவேன் நான்.


போதாது எனக்கு, கருங்கல்லே,
உன் உள்ளம் குடைந்து போகணும் நான்
தூர வனங்களில்
இறந்த நண்பர்கள் கிடக்கும் கல்லறையின்
மூடி திறந்து பார்க்கணும் நான்
தெருவிலலையும் நாடோடிக்கு இசைந்தவன் ஆகணும்
அவளுடன் சேர்ந்து மழையில் நனையணும்
வானில் ஒரு புலியை
விழிகளால் தோண்டி வரையணும்.

கடும் குளிரில் கறுத்த வெறுமை
அதற்குள்ளிருக்கிறது கல்
கதவு மூடாத மௌனத்துக்குள்ளே
மறு வாக்கு இல்லாமல் உறங்குகிறதோ?
கருங்கல் முன்பு ஆழத்திலிருந்து எழுந்து வந்ததோ?
முடிவின்மைக்குள்ளே உருண்டு போகுமோ?


கறுத்த கல் / பக்.36 / 2000

@

எஸ். ஜோசப் என்ற செபாஸ்டியன் ஜோசப் 1965ஆம் ஆண்டு கோட்டயம் மாவட்டம் பட்டித்தானத்தில் பிறந்தார். பதினாறாவது வயது முதல் கவிதை எழுதி வருகிறார். இப்போது எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் மலையாள விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். கோட்டயத்தில் வசிக்கிறார்.


தொண்ணூறுகளில் வாசக கவனத்துக்கு வந்த புதிய தலைமுறையின் நம்பிக்கைக்குரிய கவிஞர்களில் ஜோசப்பும் ஒருவர். இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவை - கறுத்த கல் (2000), மீன்காரன் (2003), ஐடண்டிட்டி கார்டு (2005), உப்பன்டெ கூவல் வரைக்குன்னு (2009). இதில் ‘கறுத்த கல்’ தொகுதி கேரள சாகித்திய அக்காதெமியின் கனகஸ்ரீ விருதும் ‘உப்பன்டெ கூவல் வரைக்குன்னு’ தொகுதி திருவனந்தபுரம் புத்தக் கண்காட்சி விருதும் பெற்றவை. ‘புலரியியிலெ மூந்நு தெங்ஙுகள்’ என்ற நாவலும் எழுதியிருக்கிறார். இங்கே இடம் பெறும் கவிதைகள் ஜோசப்பின் மேற்குறிப்பிட்ட தொகுதிகளிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. 2008 மே மாதம் ஜெயமோகன் உதகை நாராயண குருகுலத்தில் நடத்திய தமிழ் மலையாளக் கவிஞர்கள் சந்திப்பில் விவாதிப்பதற்காக இவற்றுள் பெரும்பான்மையும் தமிழாக்கம் செய்யப்பட்டன.

நன்றி : காலச்சுவடு (மாத இதழ்) / எட்டுத்திக்கும் (இணைய தளம்)

சனி, 26 ஜூன், 2010

சொற்குற்றம்
























யாரிடமும் எதுவும் பேசப் பயமாக இருக்கிறது
யாரிடமும் எதுவும் சொல்லப் பயமாக இருக்கிறது

சொன்னதைச்
சொல்லவேயில்லை என்கிறார்கள்
சொல்லாதைச்
சொன்னதாகச் சொல்கிறார்கள்

நினைத்ததைச்
சொன்னதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்
சொன்னதை
நினைத்துக் கொண்டிருந்ததாகக் குறைப்படுகிறார்கள்

ஒருவேளை
சொல்லவேண்டியதை நினைக்காமல்
நினைப்பதைச் சொல்லியிருப்பேனா?
ஒருவேளை
நினைப்பதைச் சொல்லாமல்
சொல்லவேண்டியதை நினைத்திருப்பேனா?

சொன்ன சொற்கள்
சொல்லாத சொற்கள்
சொல்ல நினைத்த சொற்கள்
சொல்ல மறந்த சொற்கள்
எல்லாச் சொற்களும் ஏய்க்கின்றன
எதுவும் சொல்லப் பயமாக இருக்கிறது

யானைப்பாகனின் பயத்தைப்போல
பாம்புப்பிடாரனின் பயத்தைப்போல
வெடிகுண்டு செய்பவனின் பயத்தைப்போல.

வெள்ளி, 25 ஜூன், 2010

ஆப்பிள்



















'துக்கம்
பாதி உரித்த ஆப்பிள்
அது
ஓர் உருவகமோ
ஒரு கவிதையோ அல்ல
அங்கே
அது
இருந்து கொண்டிருக்கிறது'

என்றார் தனிக்காவா.

'இங்கே
இரண்டு ஆப்பிள்கள் இருக்கின்றன
ஒன்று குளிர்பதனப் பெட்டியில்
இரண்டாக நறுக்கப்பட்ட மற்றொன்று உணவு மேஜையில்.

குளிர்ந்த ஆப்பிள் பாதுகாப்பாக வியர்த்திருக்கிறது
நறுக்கிய ஆப்பிள் நிறம் பிறழ்ந்து கிடக்கிறது '

இதில்
எது துக்கம்? எது மகிழ்ச்சி?'

தனிக்காவாவைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன் நான்.

'அட, போங்கப்பா,
பசித்திருக்கிறேன் இப்போது
எதைத் தின்ன?
துக்கத்தையா? மகிழ்ச்சியையா?'

எங்களைக் கேட்கிறாய் நீ.

@