புதன், 29 ஏப்ரல், 2015

தனுவச்சபுரம் - இரண்டாவது ( மாற்றப்பட்ட ) பதிப்பு


தனுவச்சபுரம் - இரண்டாவது ( மாற்றப்பட்ட ) பதிப்பு




1

ங்ஙம்புழையைத் தெரியுந்தானே உங்களுக்கு?
கிருஷ்ணப் பிள்ளையைத் தெரியாவிட்டாலும்
சங்ஙம்புழையைப் பற்றிக் கேட்டிருப்பீர்கள் இல்லையா?
கபட லோகத்தில் ஆத்மார்த்தமான
இதயம் சுமந்திருந்த தோத்தாங்குளிக் கவிஞன்.
ஒவ்வொரு இரவும் பூமொட்டின் நறுமணத்தில்
உறங்கி எழுந்த பாட்டுப் பிசாசு.
நண்பன் ராகவனின்
காவியக் காதலை நாடகமாக்கி
கோடானு கோடி விழிகளைப் பிழிந்தவன்.
தரித்திர ராகவனை ரமணனாக்கினான்.
செல்வக் காதலியைப் பெயரிலி ஆக்கினான்.
எல்லாக் காதலர்களும் ரமணன்கள்.
எல்லாக் காதலிகளும் சந்திரிகைகள்.

2

சங்ஙம்புழையைத் தெரியுந்தானே உங்களுக்கு?
சங்ஙம்புழையைத் தெரியாவிட்டாலும்
சந்திரிகையைப் பற்றிக் கேட்டிருப்பீர்கள் இல்லையா?
கானகச் சாயலில் காதல் இடையனுடன்
ஆடு மேய்க்க வீடு துறந்த சீமாட்டி
சந்திரிகையைத் தெரியாவிட்டாலும்
ராகவனைத் தெரியுந்தானே உங்களுக்கு?
காதலில் தோற்றுக் கயிற்றில் தொங்கியவன்
ராகவனாய் மரித்து ரமணனாய் வாழ்பவன்
தற்கொலையில் முடிந்த
எல்லாக் காதலர்களும்  ரமணன்கள்
தற்கொலைக்குத் தள்ளிய
எல்லாக் காதலிகளும் சந்திரிகைகள்.

3

சங்ஙம்புழையை, ராகவனை, சந்திரிகையை,
ரமணனை தெரியாவிட்டாலும்
தனுவச்சபுரத்தைத் தெரியுந்தானே உங்களுக்கு?
ரயில் நிற்கும்போதெல்லாம் யாரேனும்
தனுவைத்தபுரம் என்று திருத்தி உச்சரிக்கும் பெயரூர்
எல்லா ஊரும் இன்று தனுவச்சபுரந்தான் என்று
பசுவய்யா பண்டு சாட்சி பகர்ந்த இடம்

இன்றும் ரயில்  நின்றதும்
நானும் சரியாக உச்சரித்தேன் தனு வைத்த புரம்
நின்ற ரயில் நகராமல் நின்றிருக்க
பார்த்து வந்து யாரோ சொன்னார்கள்
'பாய்ந்து செத்திருக்கிறாள், பாவம் இடைச்சி'
ஆமோதித்துக் கலங்கியது இன்னொரு குரல்
'அயல்காரிதான் சந்திரிகா, அநியாயச் சாவு'

நடுங்கும் குரலில் அந்தரத்தில் கேட்டேன்
'சாவுக்குள் தள்ளியது ரமணனா?'

ஏன் அப்படிக் கேட்டேன் என்று
இப்போதும் விளங்கவில்லை
தனு வைத்த புரமும் சங்ஙம்புழையும் தெரியுமா உங்களுக்கு?
எல்லாக் காதலர்களும் ரமணன்களா?
எல்லாக் காதலிகளும் சந்திரிகைகளா?
@




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக