வெள்ளி, 11 செப்டம்பர், 2015

சில கட்டுரைகள் - சாமி திந்தகத்தோம்...தோம்

அந்திமழை - அச்சிதழின் ஆரம்ப நாட்களில் ‘மனக்கணக்கு ‘ என்ற பத்தியில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதினேன். கணினிச் சேகரத்தில் வேறு எதையோ தேடிக் கொண்டிருந்த போது இந்தக் கட்டுரைகள் மீண்டும் பார்வைக்குக் கிடைத்தன. சில வருட இடை வெளிக்குப்  பின்பு இவற்றை வாசித்தபோது ‘பரவாயில்லாமல்தான் எழுதியிருக்கிறேன்’ என்று தோன்றியது. 

ஒருவேளை  அந்த இடைவேளைதான் அப்படித் தோன்றக் காரணமோ ?






















சாமி திந்தகத்தோம்...தோம்


பொது மேலாளரின் டிரைவர் மூலம் தகவல் கசிந்ததும் செய்திப் பிரிவில் என் மேஜையைச் சுற்றி சகஊழியர்கள் திரண்டுவிட்டார்கள். அவர்கள் கேள்விப் பட்டது உண்மையா என்று விசாரித்தார்கள். ஆமாம் என்ற போதும் நம்ப மறுத்தார்கள். வலிறுத்திச் சொன்னதும் அவநம்பிக்கை கேலியாக மாறியது. அடப்பாவமே உனக்கும் இந்தக் கதியா? என்ற பரிதாபமாக மாறியது. 'தெரியுமே,  இதுவரை போட்டதெல்லாம் வெளிவேஷம்'  என்ற இளப்பமாக மாறியது. இவ்வளவு களேபரமும் பொது மேலாளருடன் சபரிமலைக்கு வருகிறேன் என்று சொன்னதன் விளைவு.

அவர் எல்லா மலையாள மாத முதல் தேதியும் மாலையணிந்து விரதமிருந்து சபரிமலைக்குப் போகிறவர். பெரும்பாலும் அவருடைய நண்பர்களோ, அலுவலகத்திலிருந்து யாராவது பக்தசிரோன்மணிகளோ துணைக்குப் போவார்கள். அந்த முறை துணைக்கு யாரும் இல்லை. உடன் வருவதாகச் சொன்ன ஊழியர் ஒருவரும் புறப்படுவதற்கு முன்பு வரவில்லை என்று பின் வாங்கி விட்டார். தனியாக அவ்வளவு தூரம் காரோட்டிப் போய்த் திரும்புவதில் தயக்கம் தோன்றியதைப் பேச்சு வாக்கில் சொன்னார். எதுவும் யோசிக்காமல் நானும் வருகிறேன் என்றேன். முதலில் விழித்தார். அப்புறம் விஷமமாகச் சிரித்தார். பிறகு கனிவு நிரம்பிய பார்வையுடன் பரிவு ததும்பும் குரலில் சொன்னார். '' அய்யப்பன் சக்தியுள்ள சுவாமிதான் சார். உங்களையும் தன்னுடைய சந்நிதிக்கு அழைத்துவிட்டார், பார்த்தீர்களா?'' இதைச் சொல்லும்போது அவர் கண்களில் பக்திக் கண்ணீர் துளும்பியது. இதே  கனிவையும் பரிவையும் அவ்வப்போது ஊழியர்களிடமும் காட்டினால் எவ்வளவு நல்லது என்று நினைத்துக் கொண்டேன். '' அய்யப்பன் ரொம்ப நாளைக்கு முன்பே அழைப்பு விடுத்து விட்டார். நான் தான் ஏற்கவில்லை'' என்றேன். ''இப்படி முடக்குவாதம் பேசிக்கொண்டேதான் வருவீர்கள் என்றால் நான் தனியாகவே போய்க் கொள்கிறேன்'' என்று கடிந்துகொண்டார்.

திருவனந்தபுரத்திலிருந்து சபரிமலைக்கு நூற்றுச் சொச்சம் மைல்கள். வசீகரிக்கும் மலைப் பாதை. அந்த முறை மழைப்பருவத்தில் சரியான மழை. அதனால் தாவரப் பசுமை தழைத்திருக்கும். சொகுசான குளிர்பதனம் செய்யப்பட்ட காரில் பயணம். விரதம் இருக்காமல் சடங்குகள் நடத்தாமல் ஒரு புனித யாத்திரை. வாய்ப்பை நழுவ விட மனமில்லை. சமாதானத் தொனியில் சொன்னேன். '' முடக்கு வாதமே இல்லை. உண்மையாகவே அய்யப்பன் முன்பே அழைத்திருக்கிறார். என் பாட்டி வாயிலாக. பாட்டி எப்போதோ நேர்ந்து கொண்டார்களாம். என்னை சபரிமலைக்கு அழைத்து வருவதாக. நான் தான் நழுவிக் கொண்டிருந்தேன். என்னை அய்யப்பனிடம் ஆஜர் படுத்தாமலேயே பாட்டியும் இறந்து போய்விட்டாள். அவர்கள் வார்த்தையைக் காப்பாற்றுவதற்காகவாவது சபரிமலைக்குப் போக வேண்டும் என்று  நினைத்திருந்தேன். இத்தனை வருடங்களுக்குப் பிறகு உங்கள் மூலம் அது நிறைவேறப் போகிறதோ என்னவோ? '' 

ஜி.எம்.  என்னைத் தீர்க்கமாகப் பார்த்தார். நான் சொன்னதை முழுவதுமாக நம்பவில்லை என்று புரிந்தது. நம்பவும் வாய்ப்பில்லை. நான் தொலைக் காட்சியின் செய்திப் பிரிவுக்குத் தலைமை ஆசிரியர். என் பொறுப்பில் ஒளிபரப்பாகும் செய்திகளில் தெய்வீகக் கைங்கரியங்களுக்குப்  போதுமான இடம் அளிப்பதில்லை என்ற வருத்தம் என்மேல் உண்டு. மதச் சார்பற்றவன் என்று காட்டிக் கொள்வதற்காக பெருவாரியான மக்கள் பார்க்கக் கூடிய செய்திகளை இருட்டடிப்புச் செய்கிறேன் என்று முகத்துக்கு நேராகவும் சொல்லியியிருக்கிறார். அதை விட அபச்சாரமான காரியத்தைச் செய்திருக்கிறேன் என்றும் நினைத்திருந்தார். மாலை ஏழு மணிச் செய்திகளில் ஒரு சின்ன ஐட்டத்தைச் சொருகியிருந்தேன். 'சபரிமலையில் நாளை' என்று அடுத்த நாள் சடங்குகளை அறிவிக்கும் செய்தித் துணுக்கு. அதில் அவருக்கு ஆட்சேபம் இருந்தது.  ஒரு புனித சமாச்சாரத்தை கடைச் சரக்காக்கி விட்டேன் என்று நிர்வாகத்திடமும் முறையிட்டார். அந்த அறுபது நொடித் துணுக்குக்கு விளம்பரதாரர் மூலம் வருவாய் கிடைக்கிறது என்று தெரிந்ததும் நிர்வாகம் என் தரப்பை ஆதரித்தது. நிர்வாகத் தலைமையும் பகுத்தறிவுப் பாசறையின் கொழுந்து என்பதால் ஜி.எம்மால்எதுவும் செய்ய முடியவில்லை.

இப்படியான முன் கதையுள்ள ஒருவன் சபரிமலைக்கு நேர்த்திக் கடன் பாக்கியிருக்கிறது என்று சொல்வதை நம்ப மறுத்தது நியாயம். ஆனால் கிளம்புவதற்குத் தயாரான சமயத்தில் எனக்குப் பதிலாக ஒருவரைக் கண்டுபிடிப்பது கால விரயம் என்று தோன்றியதால் அரை மனசுடன் கார்க் கதவைத் திறந்து வைத்தார். ஏறிக் கொண்டேன். பழவங்காடி பிள்ளையாருக்கு ஒரு எறி தேங்காய் சமர்ப்பணத்துடன் என்னுடைய 'கன்னி யாத்திரை' தொடங்கியது.

நகர எல்லையைத் தாண்டும் வரை பேசாமலேயே இருந்தோம். கார் ஸ்டீரியோ வழியே யேசுதாஸ் அய்யப்ப கானங்களைப் பொழிந்து பரவசப்படுத்திக் கொண்டிருந்தார். '' இந்த ஆள் மட்டும் இவ்வளவு பாடல்களைப் பாடி உருக்காமலிருந்தால் அய்யப்பனுக்கு இவ்வளவு மவுசு வந்திருக்குமா சார்? என்று கேட்டேன்.

சாலையில் பதிந்த பார்வையை விலக்காமல் பதில் சொன்னார். '' இந்த வம்புதானே வேண்டாங்கிறது. ஆனால் ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா? பிறப்பால் கிறிஸ்தவரான ஒரு ஆளை தன் மேல் இத்தனை பக்தியுடன் பாட வைத்தது ஒரு நிமித்தமில்லையா? உங்களை மாதிரி ஒரு நாத்திகனை மலையேற வைத்ததுபோல''. வாதத்தில் வெற்றி பெற்ற புன்னகையுடன் காரை மலைப் பாதையில் செலுத்தினார்.பதில் சொல்ல வேண்டுமா வேண்டாமா என்று யோசித்தபடி தலையசைத்துப் பின்னோக்கி ஓடும் மழை நனைந்த மரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு '' இல்லை சார், இதில் தெய்வ நிமித்தமோ அற்புதமோ ஒன்றும் இல்லை. எல்லாரும் உடலை வருத்தி பாடுபட்டுப் போய்ச் சேரும் இடத்தில் என்னதான் இருக்கிறது என்று பார்த்து வைக்கிற குறுகுறுப்பு மட்டும்தான் இருக்கிறது. அப்புறம் நான் நாத்திகனில்லை.  சந்தேகப் பிராணி. ஆத்திகனாக இருப்பது எவ்வளவு சுலபமோ அவ்வளவு சுலபம்தான் நாத்திகனாக மாறுவது. இரண்டும் தீர்மானமான இரண்டு எல்லைகள். அதனால்தான் நீண்ட காலமாக நாத்திகம் பேசுகிற ஒருவன் சட்டென்று ஆத்திகனாகிவிட முடிகிறது. நான் இரண்டும் கெட்டான். சந்தேகி. விசுவாசத்துக்கும் அவிசுவாசத்துக்கும் நடுவில் இருப்பவன். அது த்ரில்லிங்கான இடம். ஆத்திகனுக்கும் நாத்திகனுக்கும் கிடைக்காத சுதந்திரம் கிடைக்கும் இடம்'' என்றேன். ''சாமீ, ஆளை விடுங்க,. உங்க கூடப் பேச நான் வரலை'' என்று ஸ்டியரிங்கிலிருந்து கையை எடுத்துக் கும்பிடு போட்டார். சிரித்துக்கொண்டே ஜன்னலை இறங்கி வழியோரக் காட்சிகளில் கவனத்தைச் செலுத்தினேன்.

அது ஜூன் மாத நடு நாட்களில் ஒன்று. கேரளத்தில் பருவ மழைக் காலம்.சற்று ஓய்ந்திருந்த மழையின் மிச்சம் பாறைகளில் கசிந்து கொண்டிருந்தது. தார்ச் சாலைக் குழிகளில் தேங்கியிருந்தது.காட்டுத்தனமாக வளர்ந்திருந்த தாவரங்களில் அந்திநேரப் பசுமை மின்னியது. வண்டி மேல் நோக்கிச் செல்லச் செல்ல கானக வாசனை அடர்ந்து வந்தது.  சிள் வண்டுகளின் இடைவிடாத ரீங்காரத்துடன் இருட்டு நகர்ந்து வந்து கொண்டிருந்தது. மணி ஆறைக் கூட எட்டவில்லை. பம்பைக்குப் போய்ச் சேர்வதற்குள்  இருட்டு எல்லா இடங்க¨ளையும் ஆக்கிரமித்திருந்தது.

எங்கள் தொலைக்காட்சியின் சபரிமலைச் செய்தியாளரும் ஒளிப்பதிவாளரும் காத்திருந்தார்கள். ஜி.எம். கணபதியை வணங்கி விட்டு தலையில் இருமுடிக் கட்டுடன் வந்து ''ஏறலாமா?'' என்றார். என்னுடைய பையை ஒளிப்பதிவாளர் வாங்கிக் கொண்டார். ''சார், சுமையில்லாமல் ஏறலாம்'' என்றார்.  செய்தியாளர் சில முன்னெச்சரிக்கைகளைச் சொன்னார். மெதுவாக ஏறுங்கள். கால்களை ஊன்றி நடந்து செல்லுங்கள். அட்டைகள் இருக்கும் பார்த்துச் செல்லுங்கள். செடி கொடிகளத் தொடவேண்டாம். கேட்டுக் கொண்டிருந்த பொது மேலாளர்  '' ஒரு காரியம் பண்ணுங்க. நீங்க கூடவே இருந்து சாரை அழைச்சுட்டு வாங்க. நான் மேலே போய்க் காத்திருக்கிறேன்'' என்று செய்தியாளரிடம் என்னை ஒப்படைத்தார். உருக்கமும் ஏக்கமும் கலந்த குரலில் '' சாமியே சரணம் அய்யப்பா'' என்று கோஷமிட்டார். அந்த மலைக் காட்டின் இருட்டிலிருந்து கண்ணுக்குப் புலப்படாத ஏதேதோ முகங்கள் அந்தக் கோஷத்துக்குப் பதில் முழக்கம் செய்தன. ஜி.எம். கறுப்பு வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டு படிகளில் ஏறி இருளில் கரைந்தார். நான் பேண்ட்டைச் சுருட்டி விட்டுக் கொண்டு ஏற ஆரம்பித்தேன். நண்பர்கள் உடன் வந்தார்கள். ஒரு மணி நேரம் வேகமாக ஏறிக் கொஞ்சம் சமதளமாக இருந்த இடத்தில் நின்று பார்த்தபோது பம்பா கணபதி கோவில் குட்டியூண்டாகத் தெரிந்தது. பம்பையாறு மின் ஒளியில் சரிகைத் துகள்களாகத் தெரிந்த்து.   

மறுபடியும் மலையேறத் தயாரானபோது கால்கள் நகர மறுத்தன. மூச்சுத் திணறியது.  வயிறு கலங்கி வாய் வழியாக வந்து விடுவது போலக் கலவரம் செய்தது.கண்கள் அடைத்துக் கொண்டன. மழைத் தூறலில் இருந்த குளிரையும் தாண்டி தலைமுதல் கால்வரை வியர்த்தது. பிரயத்தனப்பட்டு எட்டு வைத்தபோது கால்கள் துவண்டன. சரிந்து விழப்போன என்னை நண்பர்கள் தாங்கிக் கொண்டார்கள். அணைத்துப் பிடித்து பாதையோரமாக ஒரு பாறை மேல் உட்கார வைத்தார்கள். கண்கள் தானாக மூடிக் கொண்டன. காதுகளில் மௌனம் இரைச்சலிட்டது. 'சாமியே அய்யப்போ... அய்யப்போ சாமியே' என்ற கூட்டுக்குரல்கள் வேறு ஏதோ கிரகத்திலிருந்து வந்தன. நீண்ட நேர இளைப்பாறலுக்குப் பிறகு புலன்கள் சமநிலைக்குத் திரும்பின. நண்பர்கள் ஆறுதலாகச் சிரித்தார்கள். எனக்கு வெட்கமாக இருந்தது. ''முதல் தடவைதானே சார் அப்படித்தான் இருக்கும். அப்புறம் நாமெல்லாம்தான் நடக்கறதோ உடம்பாலே உழைக்கிறதோ  இல்லையே? அதுதான் பிரச்சனை. ஒண்ணும் அவசரமில்லை. மெதுவா ஏறிப் போகலாம். இல்லே, உங்களாலே முடியலேன்னா டோலில போகலாம். ஆனா அது புண்ணியமில்ல. அதுவுமில்லாமல் டோலிக்குக் கொடுக்கிற காசில் ஒரு தடவை துபாய்க்குப் போய்ட்டு வந்துடலாம்'' என்றார் செய்தியாளர்.



















எனக்கு இரண்டு யோசனைகள் இருந்தன. ஒன்று - அவர்கள் சொல்வதுபோல டோலியில் போகலாம். சாய்வு நாற்காலியின் இரு பக்கக் கால்களையும் இரண்டு நீண்ட உருட்டுக்கட்டைகளில் கட்டிவைத்த தற்காலிகப் பல்லக்குதான் டோலி. நாற்காலியில் ஒருவர் உட்கார்ந்திருக்க முன்னும் பின்னும் இரண்டு ஆட்கள் சுமந்து செல்லும் டோலிகளை வழியில் பார்த்தேன். முதியவர் களுக்கும் உடல் நலம் குன்றியவர்களுக்குமான மலைப் பல்லக்கு. ''நான் முதியவனோ நோயாளியோ இல்லையே ஷாஜி. நீங்க சொன்ன மாதிரி கன்னி யாத்திரீகன்'' என்று சாக்குச் சொல்லி டோலியை மறுத்தேன். இரண்டாவது யோசனை எனக்கே பிடித்திருந்தது. பேசாமல் வந்த வழியிலேயே திரும்பி விடலாம். 'கைலாசத்தை விடப் புனிதமான சபரிமலையின் பாதத்தில் நின்றாயிற்று. கங்கையை விடப் புனிதமான பம்பை நீரைத் தொட்டாயிற்று. போதும். தன்னுடைய பக்தர்களின் வருகைப் பதிவேட்டில் ஒரு நபர் குறைவதை காருண்ய மூர்த்தியான அய்யப்பன் பொருட்படுத்த மாட்டார்'. மலையிறங்கும் யோசனையைச் சொன்னதும் செய்தியாள நண்பர் விழித்தார். '' சார், நீங்க திரும்பக் கீழே போக வேண்டுமானால் இன்னும் ஒரு மணி நேரம் நடக்க வேண்டும். நீங்கள் ஏறுவதைப் பார்த்தபோது சமாளித்து விடுவீர்கள் என்று நினைத்தேன். ஏறுவதை விட இறங்குவது சிரமம். அதுவும் மழை பெய்திருக்கும்போது. கவலைப் படாதீங்க சார், மெல்ல ஏறுங்க. விடிவதற்குள் ஏறி நடையை அடைந்து விடலாம்'' என்றார்.

குழப்பம் கலையாமல் தயக்கத்துடன் உட்கார்ந்திருந்தபோதுதான்  எங்களை நெருங்கி வந்த மூதாட்டியைப் பார்த்தேன். ஆந்திராவையோ கர்நாடகத் தையோ சேர்ந்தவர் என்று தோன்றியது. கனத்த சரீரம். நரைத்த தலை. உடலோடு ஒட்டிய கழுத்தில்  கருகுமணிகள் கோர்த்த தங்க மாலை. அவற்றுடன் சின்னச் சின்ன  ருத்திராட்ச வடங்கள். கறுப்புச் சேலையும் ஜாக்கெட்டும். சிவந்த முகம். மலையேறிய சிரமத்தில் முகம் மேலும் சிவந்திருந்தது. நெற்றி முழுக்க அப்பிய சந்தனம் மழையிலும் வியர்வை யிலும் கலைந்திருந்தது. வாயால் மூச்சு விட்டுக் கொண்டு நான் உட்கார்ந்திருந்த பாறையில் வந்து உட்கார்ந்து '' சாமீயே சரணம், தேவுடா சரணம்'' என்றதும் அவரது ஊரும் புரிந்தது. '' ஒரே இக்கட கூச்சுரா'' என்று சொன்னபோதுதான் அவருடன் வந்த இளைஞனைக் கவனித்தேன். மூதாட்டியின் ஆண் பதிப்பு. அதே நிறம், கனம்,முகம். தலை மட்டும் நிலை கொள்ளாமல் ஆடிக் கொண்டிருந்தது. கடைவாயில் ஒழுகிக் கொண்டிருந்த எச்சிலைப் புறங்கையால் துடைத்துக் கொண்டே இருந்தான். நாங்கள் மூவரும் அந்த இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தோம். சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டதும் மூதாட்டி இதமான சிரிப்புடன் பேச ஆரம்பித்தார். எங்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டார். 'முதல் தடவை எல்லாமே சிரமமாகத்தான் இருக்கும். அப்புறம் சரியாகி விடும்'என்று எனக்கு ஆறுதல் சொன்னார். அந்த ஆறுதல் வார்த்தைகள் எனக்குள் உறங்கிக் கிடந்த பிடிவாதத்தை எழுப்பி விட்டன. நண்பர்களிடம் சொன்னேன் '' ஷாஜி, நான் மெதுவாக ஏறி வந்து விடுகிறேன். நீங்கள் முன்னால் போகலாம். இவ்வளவு வயசான கிழவி மலையேற முடியுமென்றால் என்னால் முடியாதா? '' நண்பர் அவநம்பிக்கையுடன் பார்த்தார். தயங்கி நின்றார். இல்லை நான் வந்து விடுவேன் என்று உறுதி சொன்ன பிறகு அவரும் ஒளிப்பதிவாளரும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே ஏறினார்கள். மரக் கூட்டங்களுக்கு இடையில் மறைந்தார்கள். வழக்கமான சீசன் அல்ல. இருந்தாலும் நூற்றுக் கணக்கானவர்கள் மலையேறிக் கொண்டிருந்தார்கள்.

மலையேற்றத்தைத் தொடர எழுந்தபோது மூதாட்டியும் இளைஞனும் எழுந்தார்கள். சேர்ந்தே போகலாமே என்றார் பாட்டி. இசைந்தேன். நடக்கத் தொடங்கியதும் பாட்டி பேசத் தொடங்கினார். சொந்த ஊர் குண்டூர் பக்கம் கிராமம். புகையிலை விவசாயம். அதுவும் கடந்த இரண்டு வருடங்களாகத் தான் புகையிலை சாகுபடி. அதற்கு முன்பு பருத்திதான் பயிர் செய்திருந் திருக்கிறார். வழக்கமாக மண்டலக் காலத்திலோ மகர விளக்குக் காலத்திலோதான் சபரிமலைக்கு வருவார். புகையிலைப் பராமரிப்பை முன்னிட்டு கடந்த இரண்டு வருடங்களாகத்தான் ஜூன் ஜூலையில் வருகிறார். கணவர் போய்ச் சேர்ந்தே பத்துப் பன்னிரண்டு வருடங்கள் ஆகி விட்டன. மூன்று பிள்ளைகளில் இரண்டு பெண்கள். கல்யாணம் முடிந்து விட்டது. இவன் நடுப் பிள்ளை. பிறந்ததிலிருந்தே இப்படி இருக்கிறான். பேச்சு சரியாக வராது. எந்தக் காரியத்தையும் சுயமாகச் செய்து கொள்ளத் தெரியாது. எல்லா வைத்தியமும் பார்த்தாகி விட்டது. எல்லாக் கோவில்களும் ஏறி இறங்கியாகி விட்டது. 'அய்யப்ப சாமி வழிகாட்டுவார்' என்று மூன்றாவது வருடமாக மாலை போட்டு மலையேறிக் கொண்டிருக்கிறார்.


ஆந்திரப் பாட்டி சொல்லிக் கொண்டிருந்தபோது எனக்கு என்னுடைய பாட்டி நினைவுக்கு வந்தார். அம்மா வழிப் பாட்டி. அம்மாவைச் சேர்த்து ஏழு பிள்ளைகளின் தாய். அம்மா கடைக் குட்டி. ஆறு அண்ணன்களில் ஒருவர் இளம் வயதிலேயே காலமாகி விட மிஞ்சியவர்களில் ஐந்தாமவரும் ஆறாமவரும் உடற் குறை கொண்டவர்கள். இருவருக்கும் பேச்சுத் திறன் இல்லை. ஐந்தாமவருக்கு உபரியாக இரு கால்களும் பிறவியிலேயே வளைந்தவை.அம்மாவின் இளம் பருவத்தில் தாத்தா மறைந்து போக ஏழு ஜீவன்களையும் பாட்டிதான் வளர்த்து ஆளாக்கியிருந்தார். வீடு வீடாக வேலை செய்தும் ஆடு,  கோழிகளைப் பராமரித்தும் கோவில் தெய்வத்துக்கு நைவேத்தியம் பொங்கிப் போட்டும் பிள்ளைகளின் வயிற்றை வாடாமல் காப்பாற்றினார். பாட்டி அபாரமான பக்தை. அவர் வீட்டுச் சுவர்கள் முழுக்க எல்லாக் கடவுள்களும் கொலுவிருந்தார்கள். அவர்களில் பிரதானமானவர் அய்யப்பன். மாத விலக்கு நின்ற நாள் முதல் பாட்டி சபரிமலைக்குப் போய் வந்து கொண்டிருந்தார். அய்யப்பனிடம் அவருக்கு ஒரே ஒரு வேண்டுகோள் தான் இருந்தது. 'என்னுடைய இரண்டு ஊமைப் பிள்ளைகளையும் பேச வைத்து விடு'. பத்துப் பதினைந்து வருடங்கள் மலையேறி மன்றாடிக் கொண்டிருந்தார். அவர்கள் இருவரைத் தவிர அவர் அய்யப்பனிடம் நேர்ந்து கொண்டது எனக்காகவும் என்னுடைய இரண்டாவது தங்கைக்காகவும். டைபாயிடு காய்ச்சலில் விழுந்த தங்கைக்காக மனமுருகி வேண்டிக் கொண்டார். சீக்கிரம் காய்ச்சலைப் போக்கி விட்டால் அடுத்த வருடம் தங்கையையும் சன்னிதானத்துக்கு அழைத்து வருவதாக நேர்ந்து கொண்டார். பத்து வயதுச் சிறுமியை அழைத்துப் போய் அய்யப்பனுக்குக் காட்டினார். பள்ளிக்கூடம் முடிக்கும் முன்பே புத்தி கழன்றுபோன என்னைப் பழுது பார்க்கும்படியும் பையன் மறுபடியும் கடவுளைக் கும்பிடுபவனாக மாறியதும் கூட்டி வருவதாகவும் அய்யப்பனுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமலேயே கண்ணையும் மூடினார்.

அங்கங்கே உட்கார்ந்தும் நின்றும் மூச்சிரைக்க மலையேறி சரங்குத்தியை அடைந்தபோது கிட்டத்தட்ட நள்ளிரவாகியிருந்தது. வழியில் பெய்த மழைக்கு ஒதுங்கியதில் ஆந்திரப் பாட்டியையும் பிள்ளையையும் நழுவ விட்டிருந்தேன். வருத்தமும் குற்றமுமாக மனது  அடித்துக் கொண்டது. ஜி.எம்.மும் நன்பர்களும் காத்திருந்தார்கள். நாங்கள் மலையாளத்தில் முக்கியமான தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள். அதனால் வனத் துறையின் விருந்தினர் மாளிகையில் அறை ஒதுக்கப்பட்டது. அறையில் போய்ச் சுருண்டு கொண்டால் போதும் என்று கால்களும் உணர்வும் கெஞ்சின. ஆனால் அப்படிச் செய்ய மனம் மறுத்தது. பைகளை அறையில் போட்டு விட்டு தனியாக சன்னிதானத்தின் பக்கவாட்டு வழியாகப் போய் அந்த உயரத்திலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். மலைகளின் நடுவிலான ஆலயம். சுற்றிலும் காடு. காட்டு மரங்களுக்கிடையில் மலையேறி வந்து கொண்டிருந்த பக்தர்களின் டார்ச் வெளிச்சமும் தீப்பந்தங்களின் ஒளியும் மறைந்தும் தெளிந்தும் அலைந்தன. நடுநிசிக்குப் பிறகும் ஆட்கள் வந்து கொண்டிருந்தார்கள். குளிர் காற்று விரட்டியதும்  அறைக்குத் திரும்பினேன். சிள் வண்டுகளின் ஒலியும் சரண கோஷங்களும் எப்போதோ தூக்கத்தில் கரைந்தன.

விடியற் காலை மூன்று மணிக்கெல்லாம் ஜி.எம். குளித்துத் தயாராகி விட்டார். கறுப்பு வேட்டி. சட்டை போடாத உடம்புடன் இருந்தார். நானும் தயாரானேன். இரவு வந்த வழியாகவே சன்னிதானத்தை அடைந்தோம். பொது மேலாளர் குளிர்ந்து விறைத்திருந்த கல் தரையில் சயனப் பிரதட்சணம் ஆரம்பித்தார். சரணம் விளித்துக் கொண்டு தரையில் உருண்டவரைப் புரட்டி விடும் வேலையை உற்சாகமாகச் செய்தேன். உயர் அதிகாரியைத் தரையில் உருட்டி விடும் அரிய வாய்ப்பைத் தந்த அய்யப்பனுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன். அங்கப் பிரதட்சணம் முடிந்ததும் எழுந்தார். ''வாங்க, ரூமுக்குப் போய்க் குளித்துவிட்டு நடை திறக்கும் முன்னால் வந்து விடலாம்'' என்று அழைத்துப் போனார். எல்லாம் முடித்துத் திரும்பி வரும்போது என்னை பக்கவாட்டு வழியாகவும் வரச் சொன்னார். அவர் பதினெட்டாம் படி வழியாக இருமுடியுடன் மேலே வந்தார். அவருடன்  சில முக்கியப் பிரமுகர்களும். எல்லாரும் கருவறையின்  அடைந்திருந்த பொற்கதவுக்குமுன்னால் நின்றோம். நான்கு மணிக்கு நடை திறந்தது. பரவசக் கோஷங்களும் மணி நாதமும் ஒலித்தன. அந்த மலைகளில் முட்டி எதிரொலித்தன. கூட்டம் அதிகமில்லாத நேரம். போதாக்குறைக்கு நாங்கள் அதி முக்கியப் பிரமுகர்கள் என்பதால் யாரும் விரட்டவுமில்லை. ஒரு நொடிப் பார்வைக்குமேல் எனக்கும் அய்யப்பனுக்கும் பரிமாறிக் கொள்ள எதுவுமில்லை. நான் விலகி நடந்தேன். பதினெட்டுப் படிக¨ளையும் கடந்து ஆந்திரப் பாட்டி பிள்ளையுடன் வந்து நின்றார். தேவஸ்தானக் காவலர்களை அவர்களை விலக்கி நிறுத்தினார்கள். பாட்டி கெஞ்சிக்கொண்டிருந்தார். பார்க்கப் பரிதாபமாகவும் எரிச்சலாகவும் இருந்தது. அப்போது வந்து சேர்ந்த நண்பர்களையும் அழைத்துக் கொண்டு பாட்டியை நெருங்கினேன். காவலரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பாட்டியை என்னுடன் வந்தவர் என்றேன். தொலைக் காட்சிக்காரன் என்பதால் வழி திறந்தது. பாட்டியையும் பிள்¨ளையும் அழைத்துச் சென்று நடையில் நிறுத்தினோம். கண்ணீர் மல்க வாழ்க்கையின் மொத்த துக்கத்தையும் கொட்டுகிற குரலில் கேவிக் கொண்டு பாட்டி வழிபடுவதைப் பார்த்தபோது எனக்கு உடல் சிலிர்த்தது. கண்கள் கலங்கின. யாராவது குறிப்பாகப் ஜி.எம். பார்த்தால் நான் பக்தியில் பழுத்து விட்ட்தாக நினைக்கலாம் என்பதால் கூட்டத்திலிருந்து வெளியேறினேன்.

'' சாமீ...'' என்று பாட்டி அழைத்தார். குரல் கம்ம அவர் தெலுங்கில் சொன்னது அரைகுறையாகப் புரிந்தது. '' மூணு வருஷமா வர்றேன். இந்தத் தடவை மாதிரி நிம்மதியா தரிசனம் செய்ததில்லை. உன்னால்தான் அது நடந்தது. பாரேன், அடுத்த வருஷம் வரும்போது இவன் நல்லா ஆயிடுவான்'' பாட்டி அடுத்துச் செய்ததுதான் என்னை உலுக்கியது. அந்த இளைஞனின் கையில் வெற்றிலை பாக்கை வைத்து என்னிடம் கொடுக்கச் சொல்லித் தெலுங்கில் சொன்னாள். சில நொடிகளுக்குப் பிறகு தலையை ஆட்டி எச்சில் ஒழுகும் வாயைப் புறங்கையால் துடைத்துக் கொண்டு அவன் அதை நீட்டினான். அதில் வெற்றிலையும் முழுப் பாக்கும் ஒரு நூறு ரூபாய்த்தாளும் இருந்தன. அதைக் கையில் திணித்து விட்டு அவன் என் கால்களைத் தொடக் குனிந்தான். நான் துள்ளி நகர்ந்தேன். ஒரே சமயத்தில் பரிவும் அருவருப்புமாக இருந்தது. அரைகுறைத் தெலுங்கில் கடவுள் சன்னிதியில் மனிதர்களை வணங்கக் கூடாது என்று உபதேசம் செய்தேன்.''இக்கடெ அந்தரூ தேவுடு காதா?'' என்றார் பாட்டி. புரிந்தபோது பாட்டியை வணங்கத் தோன்றியது. கும்பிட்டேன். நான் கும்பிட்டது ஆந்திரப் பாட்டியையா இல்லை எனக்காக நேர்ந்து கொண்ட மறைந்துபோன என் பாட்டியையா? தெரியவில்லை.

என்னுடைய ஊமை மாமாக்களில் ஒருவர் பேசாமலேயே இறந்து போனார். இன்னொருவர் இன்றும் பேசாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆந்திரப் பாட்டியின் பிள்ளை இப்போது பேசிக்கொண்டிருப்பானா? பாட்டியின் பக்தியை மெச்சி அய்யப்பன் அவனைப் பேசவைத்திருக்கக் கூடும். இல்லையா?
@

ஓவியங்கள்: பி ஆர் ராஜன் 

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக