சனி, 25 மார்ச், 2017

கரையாத நிழல்




நவீனத் தமிழ் உரைநடை இலக்கியத்தில் குறிப்பிடத் தகுந்தவை யாகவும் தவிர்க்கவே இயலாதவையாகவுமான ஆக்கங்களைப் பங்களிப்புச் செய்தவர் அசோகமித்திரன். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் இயங்கியவர். யோசித்துப் பார்த்தால் அவர் அளவுக்கு இவ்வளவு நீண்டகாலம் தொடர்ந்து இயங்கியவர்கள் மிகக் குறைவு. தொடர்ச்சியான செயல்பாட்டில் மிக விரிவாகவே தமது எழுத்துக்களை முன்வைத்திருக்கிறார் என்பதே அவரைக் குறிப்பிடத்தக்கதவிர்க்க இயலாத படைப்பாளியாக நிலை நிறுத்துகிறது. பத்து நாவல்கள், பத்துக்கும் மேற்பட்ட குறுநாவல்கள், ஏறத்தாழ இருநூற்று எழுபது சிறுகதைகள், நானுறுக்கும் அதிகமான கட்டுரைகள் என்று விரிவடைந் திருப்பது அவரது படைப்புச் செயல் விளைச்சல். இவற்றுடன் அவர் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் கதை, கட்டுரைகளைச் சேர்த்தால் புலனாகும் விஸ்தீரணம் வியப்பை அளிப்பதுதான்.

அசோகமித்திரனின் ஆக்கங்கள் அனைத்தையும் மேலோட்டமாக வாசிக்கும் ஒருவருக்கு உடனடியாகப் புலப்படும் ஓர் அம்சம் , அதன் எளிமை. அவர் கையாளும் சொற்கள் எளிமையானவை. அவரது நடை ஜோடனைகள் இல்லாதது. உரக்க ஒலிக்காத குரலே அவர் கதைகளில் வெளிப்படுவது. ஆனால் இந்த எளிமையின் ஆழத்தில் பொருள்படுவது வாழ்வின் அவிழ்க்க இயலாப் புதிர்கள். அறிய முடியாத மர்மங்கள். இதை ஒரு வாசகன் புரிந்து கொள்ள அவரது எழுத்துக்களையே மீண்டும் மீண்டும் வாசிக்க நேர்கிறது. இதை இப்படிச் சொல்லலாம். அசோக மித்திரனைப் புரிந்து கொள்ள எளிய வழி அசோகமித்திரனைத் தொடர்ந்து வாசிப்பதுதான். அப்படி வாசிக்கும் ஒரு வாசகனுக்கு அவர் ஒருபோதும் மறக்க முடியாதவராகவோ தவிர்க்க முடியாதவராகவோ  மாறுகிறார். இந்த படைப்பாக்க முறை முற்றிலும் அவருக்கே உரியது. நவீனப் புனைவிலக்கியத்துக்கு அவரது கொடை இதுவே.

எளிமையான எழுத்து முறைக்குத் தமிழில் முன்னோடிகள் இருக்கிறார்கள். கு.ப. ராஜகோபாலன், கு. அழகிரிசாமி போன்றவர்களை இந்தப் போக்கின் எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம். அசோகமித்திரனையும் அவர்கள் வரிசையில் வைத்துப் பார்க்க முடியும். ஆனால் அசோகமித்திரனின் எளிமைக்கு அப்பால் தெரியும் தீவிர உணர்வுகளே அவரைத் தனித்துக் காட்டுகின்றன. இது அவரது எழுத்தின் இயல்பு மட்டுமல்ல; அவர் வாழ்ந்த வாழ்க்கையின் குணமும் கூட. அவரது தோற்றம் எளிமையானது. எழுத்தாளன் என்ற நிலையில் சமூகம் சின்னதாகப் புருவம் உயர்த்தி லேசாக வியந்து  பார்க்கும் பார்வைக்கு முற்றிலும் மாறுபட்டவர்.  சாதாரணமானவர் . அவரை அணுகுவது சுலபம். அவரது எழுத்துக்கள் பெரும் பத்திரிகைகளிலும் பொதுப் பார்வைக்கே எட்டாத சிற்றிதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன. 'யாரும் பார்க்கக் கூடச் செய்யாத பத்திரிகை களுக்கெல்லாம் எதற்காக உங்கள் படைப்புகளைக் கொடுக்கிறீர்கள்? ' என்று ஒருமுறை கேட்டபோது சொன்னார். 'என்னை நம்பிக் கேட்கிறார்களே, அவர்களை எப்படி ஏமாற்றம் அடையச் செய்வது? அதுதான் எழுதிக் கொடுத்து விடுகிறேன்'. 

எளிமையும் சாதாரணத்தன்மையும் அவருக்கு இயல்பாகவே அமைந்தவை. எனினும் அதிலும் சமரசம் மேற்கொள்ளாதவராகவே இருந்தார். பத்திரிகைகளின் தேவைக்காக  எழுத்தை மலினப்படுத்தாமல்  தனது தரத்திலேயே நின்றவர். வாழ்விலும் அதையே பின்பற்றினார் என்று சொல்ல முடியும்.

மலையாளக் கவிஞர் பாலசந்திரன் சுள்ளிக்காடு இருபது ஆண்டுகளுக்கு முன்பு, ஆலுவாயில் அனைத்திந்திய இலக்கியத் திருவிழா ஒன்றை நடத்தினார்.  அதற்கு அழைக்கப்பட்டிருந்த தமிழ் இலக்கியவாதிகளில் அசோகமித்திரனும் ஒருவர். அவரது எளிமையான தோற்றம் காரணமாக வட மாநிலங்களிலிருந்து வந்திருந்த இலக்கியவாதிகள் அவரை யாரோ ஒருவர் என்ற எண்ணத்தில் கடந்து போனார்கள். விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த நட்சத்திர எழுத்தாளர்களான யூ. ஆர். அனந்தமூர்த்தி. தகழி சிவசங்கர பிள்ளை, எம்.டி.வாசுதேவன் நாயர் போன்றோர் அசோக மித்திரனைத் தேடி வந்து நலம் விசாரித்தபோதுதான் அவர்களுக்கு அவரது அருமை புரிந்தது. அவரைக் கடந்து போன எழுத்தாளர்களிடம் தானும் எழுத்தாளனே என்று அவர் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கலாம். அவர்களது கண் மலர்வதையோ, இதழ் புன்னகையில் அரும்புவதையோ பார்த்திருக்கலாம். 'ஏன் சார் அதைச் செய்யவில்லை? ' என்று அசட்டுத் தனமாகக் கேட்டதும் ' எல்லாரும் எழுதுகிறார்கள். நானும் எழுதுகிறேன். அதில் எடுத்துச் சொல்லிக் கொள்ள என்ன இருக்கு? ரைட்டரும் சாதாரணமான ஆள்தானேப்பா? என்று சாதாரணமான பதிலைத்தான் சொன்னார். சாதாரணமாகச் சொல்லப்பட்ட அசாதாரணமான பதில் இது. இதுவே அவரது எழுத்துகளிலும் துலங்குகிறது.

புகழ் பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனமொன்றில் சுமாரானது என்றாலும் நிரந்தரமான வேலையில் இருந்தவர் அசோகமித்திரன். எழுத்தின் மீதுள்ள காதலால் முழு நேர எழுத்தாளர் ஆனவர்.  ஆங்கிலம் தவிர அவர் எழுதிய படைப்புகள் பெரும்பாலும் சிறிய அளவிலான இதழ்களிலேயே வெளிவந்தன. அதன் வாயிலாகக் கிடைத்திருக்கும் ஊதியம் முட்டில்லாத அன்றாட வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிப்பதாக நிச்சயம் இருந்திராது. எனினும் தனது வறுமையைக் குறித்தோ சொந்தத் துயரங்களைக் குறித்தோ அவர் ஒரு சொல் சொன்னதில்லை. எழுதியது மில்லை. எழுத்தாளனாகத் தன்னை சமூகம் கொண்டாவில்லை என்று குறைப்பட்டுக் கொள்ளவும் இல்லை. எல்லாத் தொழிலையும் போல எழுத்தும் ஒரு தொழில்; அதை நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செய்வதே தனது கடமை என்று வாழ்ந்து காட்டினார் . அவரது இயல்பில் மேன்மையானது இந்த சுயநிர்ணயம் எனலாம். அதுவே பின்னர் பெரும் விருதுகளையும் பாராட்டுகளையும் கொண்டு வந்து சேர்த்தது. அப்போதும் தன்னைத் தானாகவே வைத்துக் கொண்டார் என்பதே அவரது பெருமை.

அசோகமித்திரனின் படைப்பு முன்வைக்கும் உலகம் சாதாரணமானது. அதில் நடமாடும் மனிதர்கள் எளியவர்கள். அவர்களது எளிய செயல்களே அவரது கதைகளுக்கு மையங்களாகின்றன. ஆனால் எளிய செயல்களில் உள்ளோடியிருக்கும் ஆழமான சிக்கல்களை, வியப்புகளை, மகிழ்ச்சிகளை, வலிகளை அசாதாரணமான வகையில் வெளிப்படுத்தினார். அவரது கதைமாந்தர் எல்லாரும் சலிப்பூட்டும் வாழ்க்கையைத் தொடர்பவர்கள். பெரும்பாலும் பெரும் கனவுகளோ பேராசைகளோ இல்லாதவர்கள். வயிற்றுக்காகவும் தன்மதிப்புக்காகவும் போராடுகிறவர்கள். அவர்களது அன்றாடச் செயல்களில் அவர்களே அறியாத நுண் ரகசியங்களையே அவர் கதையாக மாற்றினார். வெற்றி பெற்ற மனிதர்களின் கதைகளை அல்ல; தோல்வியில் துவண்டும் வாழ்க்கையை மீட்க விரும்புகிறவர்களே அவரது மனிதர்கள். பிழைப்புக்காக ஆந்திராவிலிருந்து மெட்ராசுக்கு வந்து கார் ஓட்டக் கற்றுக் கொள்ளும் சிறுவன் மல்லையாவின் செயலில் என்ன சுவாரசியமான கதை இருக்க முடியும்தட்டுத்தடுமாறி ஓட்டப்பழகிய கார் அவனுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் அவன் பெறும் தன்னம்பிக்கை அசோக மித்திரனிடம் கதையாகிறது. அகில இந்தியப் புகழ் பெற்ற திரை நட்சத்திரமான சத்யன் குமாரின் பளபளப்பும் படாடோபமுமான வாழ்க்கையின் வெற்றிக் கதையை அசோகமித்திரன் நாவலாக்கவில்லை. அவனுடைய தார்மீகச் சறுக்கலையே, குற்ற உணர்வையே  'மானசரோவர்' நாவலில் சித்தரிக்கிறார். இவை மேலோட்டமான உதாரணங்களே. எளிமையை நுட்பமாகவும் சாதாரணத்தை அசாதாரணமாகவும் பாவனைகள் இல்லாமல் இலக்கியமாக்கியவர் என்பதே அசோகமித்திரனை இலக்கிய உலகம் மதிக்கவும் நினைவில் வைத்திருக்கவுமான காரணமாக இருக்கும். 'சிக்கனமும் நுட்பம் கொண்டதுமான உரைநடைக்காகவும் கீழ் மத்தியதர வர்க்க மானுடர்களின் சலிப்பாகத் தென்படும் வாழ்க்கைச் சிக்கலுக்குள் ஊடுருவிப் பார்க்கும் திறனுக்காகவும் அசோகமித்திரன் போற்றப்படுவார்' என்று எழுத்தாளர் அரவிந்த் அடிகா குறிப்பிடுவது இதற்குச் சான்று.

25 மார்ச் 2017 தி இந்து நாளிதழில் வெளிவந்த அஞ்சலிக் கட்டுரையின் சுருக்கப்படாத வடிவம்


வியாழன், 23 மார்ச், 2017

அசோகமித்திரன்





லையாள எழுத்தாளரும் நண்பருமான சக்கரியாவுடன் பேசிக் கொண்டிருந்த சந்தர்ப்பமொன்றில் பின்வருமாறு சொன்னார்.

''மலையாள எழுத்தாளர்களான நாங்கள் நவீனத்துவம் என்ற பெயரில் சிரமப்பட்டு எட்டிய இடங்களை உங்கள் ஆசாமி மிக எளிதாக அடைந்து விடுகிறார். முகத்தைப் பார்த்ததும்  முன்னால் இருக்கும் ஆளின் முழு ஜாதகத்தையும் சொல்லி விடுகிற தேர்ந்த ஜோதிடரைப் போன்றவர். ஒரு வரியில், ஒற்றைக் குறிப்பில் ஒரு கதாபாத்திரத் தையும் ஒரு பின்னணி யையும் உருவாக்கி விடுகிறார். அலங்காரங்கள் எதுவும் இல்லாத  வரிகள் மூலமே இடத்தையும் காலத்தையும் மனித மனங்களையும் சித்தரித்து விடுகிறார். அவர் எழுத்துக்களைத் தாமதமாகத்தான் படித்தேன்  என்பது நிஜமாகவே வெட்கத்தைத் தருகிறது. இன்னும் சிறிது காலத்துக்கு முன்னாலேயே படிக்கக் கிடைத்திருந்தால் நான் இன்னும்  மேலான  மனிதனாகவும் இன்னும் சிறந்த எழுத்தாளனாகவும் ஆகியிருக்கலாம்''.

சக்கரியா குறிப்பிட்ட ஆசாமி நவீனத் தமிழின் மகத்தான எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன். சக்கரியா குறிப்பிட்ட வாசகங்கள் மிகையல்ல. மிகவும் உணர்வுபூர்வமாகச் சொன்னவை. பொதுவாக மலையாள எழுத்தாளர்கள் பிற இந்திய மொழி எழுத்தாளர்களைப் பொருட் படுத்துவதோ அவர்கள் எழுத்துக்களைப் பற்றிப் பேசுவதோ அபூர்வம். வங்க மொழி எழுத்தாளர்கள் மட்டும் இதில் விதி விலக்கு. எனவே சக்கரியாவின் சொற்கள்  தமிழ் வாசகனாக என்னைப் பரவசமடையச் செய்தன. வாய்ப் பேச்சாக மட்டுமல்லாமல் அசோகமித்திரனின் 'தண்ணீர்' நாவலின் ஆங்கிலப் பதிப்புக்கு எழுதிய முன்னுரையிலும் தமிழில் எழுதிய கட்டுரைகள் சிலவற்றிலும் சக்கரியா  தனது கருத்தை அழுத்தமாகவே குறிப்பிட்டிருக்கிறார்.

காலச்சுவடு இதழுக்காக நண்பர் தேவிபாரதியும் நானும் அசோகமித்திர னுடன் நேர்காணல் மேற்கொண்டபோது  இதைச் சுட்டிக் காட்டினேன். உலகத்துச் சிறந்த எழுத்தாளர்களில்  ஒருவர் என்று நான் கருதும் சக்கரியா என் மொழியில் எழுதும் எழுத்தாளரைப் பாராட்டிச் சொன்ன வார்த்தைகள் முக்கியமானவை என்ற சிலாகிப்புடன் அதைத் தெரிவித்தேன். கேட்டுக் கொண்டிருந்த அசோகமித்திரனிடம் அதையொட்டி எந்தச் சலனமும் இல்லை. மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் சிறிய இடைவெளிக்குப் பிறகு மெல்லிய குரலில்  'சக்கரியா ரொம்ப மிகையாகச் சொல்கிறார் ' என்று சாதாரணமாகச் சொன்னார். அந்த எதிர்வினை உடனடியாக எனக்கு ஏமாற்றத்தையே அளித்தது. பின்னர் நிதானமாக யோசித்துப்  பார்த்தபோது புரிந்தது,  அசோகமித்திரன் அப்படியல்லாமல் வேறு எப்படிச் சொல்வார்? என்று.

அசோகமித்திரன்  சாதாரணமானவர்; எளிமையானவர் .அவரது இந்த இயல்புகளே அவரது எழுத்தின் இயல்புகளாகவும் அமைந்திருக்கின்றன. இது மிக அரியது என்று நம்புகிறேன்.

நான் இதுவரை பார்த்த எழுத்தாளர்களில் இந்த அரிய வகைக்கு இருவரை மட்டுமே உதாரணங்களாச் சொல்ல முடியும். மலையாள எழுத்தாளரான வைக்கம் முகம்மது பஷீரையும்  அசோகமித்திரனையும். இருவரும் முழுநேர எழுத்தாளர்களாக வாழ்க்கையை மேற்கொண்டதும் ஒருவேளை காரணமாக இருக்கலாம். பட்டினிக் கலைஞர்களாக வாழ்ந்தபோதும்  அந்த வாழ்க்கையைப் புகார்கள் இல்லாமல் ஏற்றுக் கொண்டிருந்ததும் துன்பக் கதைகளையும் நுட்பமான நகைச்சுவையுடன் வெளிப்படுத்தியதும் எளிய மனிதர்களின் செயல்களை  மிகுந்த கரிசனத்துடன் முன்வைத்ததும் இந்த ஒப்பீட்டுக்குக் காரணமாக இருக்கலாம்.

சாதாரணமான ஒன்றுக்குள் நாம் காணாமல் போகிற அசாதாரணமான ஒன்றைச் சுட்டிக் காட்டுவதுதான் அசோகமித்திரனின் கதைகளின் இயல்பு. எளிமையானது என்று நாம் மேம் போக்காக நினைப்பது அவ்வளவு எளிமையானதல்ல; கண்ணுக்குப் புலப்படாத சிக்கல்களைக் கொண்டது என்பதைக்  கதைகளை வாசிக்கும்போது உணர முடியும். அவருடைய  கதைகளில் ஒன்று 'விரிந்த வயல்வெளிக்கு அப்பால்'. ரயில் பாதையை ஒட்டிய ஒற்றையடிப் பாதையில் மாணிக்கம் சைக்கிளை ஓட்டிச் செல்கிறான். அந்த நேரத்தில் ஒரு ரயிலும்  வருகிறது. அதுவரை வெறுமனே சைக்கிள் ஓட்டி வந்தவன் இப்போது ரயிலுடன் போட்டி போட்டு ஓட்டுகிறான். ஒரு கட்டத்தில் ரயில் இஞ்சினை  நெருங்கி விடுகிறான். அந்த  கணத்துக்குப் பின்பு ரயிலை முந்த விடுகிறான். உண்மையில் மிக சாதாரணமான காட்சி இது. சைக்கிள் ஓட்டுவதில் விருப்பமுள்ள எந்தச் சிறுவனும் ஈடுபடும் செயல். ஆனால்  அதில் மறைந்திருக்கும் மன உணர்வை எளிமையான சொற்களில் கதை காட்டி விடுகிறது. எந்திரத்துக்கும் மனிதனுக்குமான போட்டி, தான் உருவாக்கிய பொருட்களை விடவும்  மனிதனே மேலானவன் என்ற நம்பிக்கை என்று வெவ்வெறு விளக்கங்களுடன் கதையை அணுகலாம்.

சாதாரணமாகத் தோற்றமளிக்கும் கதையின் உட்பிரதியாக அசாதாரண மான  இன்னொன்றைக் கொண்டிருப்பவையே அசோகமித்திரனின் பெரும்பான்மைக் கதைகள். அசாதாரணம் என்று நாம் நம்பும் ஒன்றின் சாதாரணத்துவத்தையும் அவர் கதைகள் சித்தரி க்கின்றன. பிரயாணம் என்ற கதையின் பின்னணியே வித்தியாசமானது. சாகும் தறுவாயி லிருக்கும் குருவை அவரது சீடன் ஒடு பலகை வண்டியில் வைத்து இழுத்து செல்கிறான்.பனிமலைப் பகுதியில் ஓநாய்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்கின்றன. இருதரப்பினருக்கும் இடையில் நடக்கும் ஆக்கிரமிப்பில் சீடனும் குருவும் தனித்தனியாகப் பிரிந்து போகி றார்கள். சீடன் ஓநாய்களை விரட்டி விடுகிறான். பொழுது விடிந்து பார்க்கும்போது தலையில்லாமல் கிடக்கும் குருவின் பிணம். அதன் கையில் ஒரு ஓநாயின் பிய்த்து எடுக்கப்  பட்ட முன்னங்கால் தென்படுகிறது. அசாதாரணமானவர் என்று கருதப்படும் துறவியின் மன ஆழத்தில் வாழ்க்கை மீதான வேட்கையே மிஞ்சி இருக்கிறது என்ற சாதாரண உண்¨ மயை கதை சொல்லாமல் சொல்லுகிறது. இவை மேலோட்டமான உதாரணங்கள் மட்டுமே.

அசாதாரணம் என்று நான் பயன்படுத்தியிருக்கும் சொல்லே அசோக மித்திரனுக்கு ஒவ்வாமயைத் தரக்கூடும். எளிமை , சாதாரணம் என்பவையே அவரது எழுத்தின் இயல்புகள். இதை அடைவது மிக அசாதாரணம் . பிரம்மாண்டம், ஆடம்பரம், வசதி போன்ற சொற்களுக்கும் செயல்களுக்கும் அவருடைய வாழ்க்கையிலும் எழுத்திலும் இடமில்லை என்றே தோன்றுகிறது. தஞ்சாவூர் பெரிய கோவிலின் முன்னால் அவரை நிற்க வைத்து 'எவ்வளவு பிரம்மாண்டம் இல்லையா சார்? ' என்றுகேட்டால் அவர் மௌனமாக இருப்பார். சிறிது  கழித்து ' சாமி கும்பிடறத்துக்கு சின்னக் கோவில் போதாதா? இவ்வளவு பெரிசா எதுக்கு? ' என்று கேட்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ' இப்போதெல்லாம் புதிய எழுத்தாளர்களே கூட ஆயிரம் பக்கங்களைத் தாண்டிய நாவல்களை எழுதி விடுகிறார்கள். நீங்கள் ஏன் அப்படி முயற்சிக்கக் கூடாது ? ' என்ற கேள்விக்கு சட்டென்று அசோகமித்திரனிடமிருந்து பதில் வந்தது. ' எனக்கு  ஒரு இருநூறு பக்கத்துக்கு அதிகமான நாவலை எடுத்தாலே கை வலிக்க ஆரம்பிச்சிடும். ஆயிரம் பக்க நாவலையெல்லாம் எப்படிப் படிக்கிறதுங்க இல்லை; எப்படிக் கையில தூக்கி வெச்சுக்க முடியும்கிறதே ஆச்சரியமா இருக்கு?'. இந்த பதிலையும் அவரைத் தவிர வேறு யாரும் யோசிக்க முடியுமா?

ஆனாலும் அவரது சமகாலத்தியவர்களுடன் ஒப்பிட்டால் அவரே நிறைய எழுதியிருப்பவர். அவரது இதுவரையான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு ஆயிரத்து அறுநூறு பக்கங்கள் கொண்டது. அவரது  எல்லா நாவல்களை யும் ஒரே புத்தகமாக்கினால் அதுவும் ஏறத்தாழ அதை விட ஒன்றரைப் பங்கு அதிகமாக வரலாம். கட்டுரைகள் சுமார் இரண்டாயிரம் பக்கங்களை எட்டும்.  எளிமையின் கலையின் பிரம்மாண்ட சாதனை என்று சொல்லத் தோன்றுகிறது. நிறைவளிக்கும் சாதனையும் கூட.



ன் இலக்கிய உலக நுழைவுக் கட்டங்களில் நான் ஆவேசமாக வாசித்த எழுத்தாளில் அசோகமித்திரனும் ஒருவர். மிக விரைவில் அபிமானத்துக்கு உரியவராக மாறினார். எங்களூர்  கோவையில் மார்க்சிய அறிஞர் ஞானி ஓவ்வொரு ஆண்டும் மே மாத வாக்கில் முக்கியமான சமகால எழுத்தாளர் ஒருவரை அழைத்துக் கூட்டம் நடத்துவார். 1976 இல் சுந்தர ராமசாமி. 77 இல் அசோகமித்திரன்.

பத்தொன்பது வயதுப் பையனான நான் முதன்முதலில் வாசிப்பைக் கடந்து கட்டுரை எழுதியது அசோகமித்திரனைப் பற்றித்தான். அவருக்காக நடத்தப் பட்ட சிறப்புக் கூட்டத்தில்  வாசிப்பதற்காக அதுவரை வெளிவந்திருந்த அவரது நாவல்களையும் சிறுகதைத் தொகுப்புகளையும் ஊன்றிப் படித்து நான் எழுதிய கட்டுரையே எனது முதல் இலக்கியக் கட்டுரை.  அதற்குக் கிடைத்த முதல் பாராட்டும் அசோகமித்திரனிடமிருந்துதான் . உபரியாக்க் கிடைத்த ஊக்கம்  - கட்டுரைப் பிரதியைப் பார்வையிட்டு அவர் சொன்ன வாசகம். ‘'உங்க கையெழுத்து அழகா இருக்கு'. 

சென்னை வாழ்க்கையில் அவரைப் பலமுறை கூட்டங்களில் சந்தித் திருக்கிறேன்.  நண்பர் விமலாதித்த மாமல்லனுடன்  ஊர் சுற்றித் திரிந்து விட்டு சும்மா அசோகமித்திரனை அவர்  வீட்டில் போய்ப் பார்த்த நாட்கள் அநேகம். பின்னர் குங்குமம் வார இதழில் பணியாற்றிய காலத்தில் ஒரு தீபாவளி இணைப்பிதழில் வெளியிட அசோகமித்திரனிடம் கட்டுரை § கட்டேன். தலைப்பு நான் சொன்னது. எழுத்தாளருக்குப் பிடித்த ஐந்து படங்கள்'. தலைப்புக்கு உதவியவர் அன்று என் சக ஊழியராக இருந்த எஸ்.ராம கிருஷ்ணன். கட்டுரையை வ ¡ங்கி வந்தவரும் அவரே. (பார்க்க: அசோக மித்திரன் கட்டுரைகள் – 2. கிழக்குப் பதிப்பகம் பக்: 859 ) அதற்கு முன்பே அசோகமித்திரனுடன் ஏற்பட்டிருந்த மானசீக நெருக்கமே  அவரைக் கட்டுரை எழுதச் செய்யலாம் என்று தூண்டியது. மலையாளக் கவிஞரும் நண்பருமான பாலசந்திரன் சுள்ளிக்காடின் முயற்சியில் கேரள மாநிலம் ஆலுவாயில் நடந்த மானசோத்ஸவம்' இலக்கியச் சந்திப்பில் அசோக மித்திரனுடன் ஒரே அறையில் தங்கியிருந்தேன். அன்று அவர் பேசியவை இன்றும் நினைவில் இருப்பவை. குறிப்பாக ஹெமிங்§ வயையும் நார்மன் மெய்லரையும் பற்றிய அகப் பார்வை மிளிரும் பேச்சு. 1999 இல் நண்பரும் வங்காளக் கவிஞருமான அஞ்சென் சென் கேட்டுக் கொண்ட்தற்கிணங்க சென்¨ னயில் வங்கக் கவிஞர் ஜீபனானந்த தாஸ் நூற்றாண்டு விழாவில் அவரை அழைத்து வந்து பேசவைத்தேன். நானும் கட்டுரை வாசித்தேன். அதில் சாகித்திய அக்காதெமி வெளியீடான ஜீபனானந்த தாஸ் வாழ்க்கை வரலாறு தமிழாக்கத்தைப் பற்றிச் சொன்னதை நவீன கவிதையின் முன்னோடியான ஜீபனானந்தா க. த. திருநாவுக்கரசின் மொழியாக்கத்தில்  புராதனக் கவிஞராகத் தென்படுகிறார் என்று நான் சொன்னதைச் சுட்டிக் காட்டிச் சொன்னார். '' திருநாவுக்கரசு அவர் துறையில பெரிய ஸ்காலர். நீங்க இப்படிக் கடுமையாச் சொல்லியிருக்க வேண்டாம்''. அது ஒரு பாடத்தின் பயிற்சியாக மனதில் பதிந்தது. என்றென்றும் பின்பற்ற வேண்டிய அறிவுரையாகவே அதைக் கருதுகிறேன்.

சோகமித்திரனைச் சந்தித்துப் பேசுவது எப்போதும் உற்சாகம் தரும் செயலாகவும் புதிதாக ஏதோ விஷயத்தைத் தரும் அனுபவமாகவும் இருந்திருக்கிறது. அவரது கதைகளில் போலவே பேச்சிலும் சொல்லாமல் விடப்படுபவை அதிகம். அதைப் பின்னர் யோசிக்கும்போது என்னையறியாமல் சிரித்ததும் வியந்ததும் உண்டு. அவருக்கு உடல்நலம் குன்றியிருப்பதாகக்  கேள்விப்பட்டு நண்பர்களுடன் பார்க்கச் சென்றிருந்தோம். அவர் வீட்டின் காவலாளி எங்களை அனுமதிக்க மறுத்து விவாதித்துக் கொண்டிருந்தபோது அவரே வெளியே வந்து  அழைத்துச் சென்றார். ஓரிரு மணிநேர உரையாடலுக்குப் பிறகு விடை பெற்றுக் கொண்டபோது உடன் வந்து வழியனுப்பினார். ' உடம்பு சரியில்லை என்று ஒருவரைப் பார்க்க  வந்தால் யாருக்கு உடம்பு சரியில்லையோ  அவரே ' வாங்கோ' என்று வரவேற்பது பார்க்க வந்தவர்களுக்கு ரொம்ப ஏமாற்றத்தைத் தரும் இல்லையா?' என்று கேட்டார். அந்த நாள்  முழுவதும் இதை யோசித்துச் சிரித்துக் கொண்டிருந்தேன். கவிஞர் ஞானக்கூத்தனின் இறுதி ஊர்வலத்தின்போது எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என்று பலரும்  வந்திருந்தார்கள். இறுதி அஞ்சலி செலுத்த வந்த அசோகமித்திரன் சொன்னது. ' அவருக்குத் தெரிந்த எல்லாரும் வந்திருக்கிறார்கள். இது அவருக்குத் தெரியாது இல்லையா?' அன்றைய தினம் முழுக்க இதையே யோசித்துக் கொண்டிருந்தேன்.

@


 எளிமையின் உன்னதம் - என்ற தலைப்பில் அந்திமழை , ஜனவரி 2017 இதழில் வெளியான கட்டுரை.

செவ்வாய், 14 மார்ச், 2017

க நா சு வின் மதிப்புரை


கோடை காலக் குறிப்புகள் என்ற என் முதல் கவிதைத் தொகுப்பு 1985 மார்ச்சில் வெளியானது.சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன்,வல்லிக் கண்ணன், தி.க.சி., ஆகியோர் சுருக்கமாகவும் விரிவாகவும் தங்கள் கருத்துக்களை எழுதி யிருந்தனர். ஓர் இளங்கவிஞனுக்கு பெரும் ஊக்கத்தை அளித்தவை அந்தக் கருத்துக்கள். தன்னம்பிக்கையையும் கொஞ்சூண்டு கர்வத்தையும் அவை அளித்தன. தொகுப்பு வெளியாகிச் சரியாக ஓராண்டுக்குப் பிறகு வெளியான மதிப்புரை மேலும் மகிழ்ச்சி அளித்தது. தில்லியிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்திருந்த க.நா.சுப்ரமண்யன் சிறப்பாசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்ட 'ஞானரதம்' இதழில்  அந்த மதிப்புரையை எழுதியிருந்தார். மதிப்புரை வெளியான இதழ் இட மாற்றங்களால் கைநழுவிப் போனது.க.நா.சு. நூற்றாண்டை ஒட்டி காலச்சுவடு வெளியிட்ட சிறப்பிதழில் ( ஜனவரி 2012 ) எழுதிய ‘ க. நா.சு.வின் எழுத்து மேஜை ‘ கட்டுரையிலும் இந்த இழப்புப் பற்றிப் பின்வருமாறு எழுதி யிருந்தேன்.

வர்  ( க.நா. சுப்ரமண்யன் ) பயன்படுத்திய மேஜை இன்னும் ( என்னிடம் ) இருக்கிறது. ஈட்டி மரத்தில் செய்த மேஜை. வலது பக்கம் மேலே இழுப்பறையும் அதற்குக் கீழே ஓர் அறையும் கொண்ட மேஜை. இடது பக்கம் கால்களை நுழைத்து உட்கார வசதியான அமைப்பு. அதைக் கொண்டு வந்தபோது இழுப்பறைக்குள் காலியாகத்தான் இருந்தது. ஏதோ ஒரு நாள் அந்த இழுப்பறையை முழுவதுமாகக் கழற்றி எடுத்தேன். இரண்டு அறைகளுக் கும் இடையில் பத்திரிகைத் தாள்களிலொன்று பதுங்கி ஒட்டியிருந்தது.எடுத்துப் பார்த்தேன். க. நா. சு. ஆசிரியராக இருந்து நடத்திய ஞானரதம் பத்திரிகைப் பின்னட்டைப் பக்கத்தின் கிழிசல். கீழே க. நா. சுவின் பெயர். தமிழ்நாடு மேப்பைப் போலிருந்த கிழிசலில் படிக்க முடிந்த சில அரை, கால் வரிகளில் என் பெயர். என் முதல் தொகுப்பான கோடைகாலக் குறிப்புகளுக்கு அவர் எழுதிய மதிப்புரை அது. முழுப்பிரதி எங்கோ காணாமற்போனதில் ஏற்கனவே துக்கப்பட்டுக்கொண்டிருந்தேன். கிழிசல் துக்கத்தை அதிகமாக்கியது.


சென்னையில் க. நா. சு.வைச் சந்திக்கப் போனதே அந்த மதிப்புரைக்கு நன்றி தெரிவிக்கத்தான். புத்தகம் வெளியான சமயத்தில் மூத்த எழுத்தாளர்களுக்கும் நண்பர் களுக்கும் பிரதிகளை அனுப்பியிருந்தேன். நான் அனுப்பாதவர்களில் ஒருவர் க. நா. சு. அனுப்பாத சிற்றிதழ் ஞானரதம். ஆனால் அதில்தான் மதிப்புரை வெளிவந்தது. அதற்கு நன்றி பாராட்டுவது நாகரிகம். ஆனால் க.நா.சுவை நேரில் சந்தித்தபோது சங்கோஜத்திலும் தயக்கத்திலும் அதைச் சொல்ல முடியவில்லை. பின்னர் வெகுகாலம் வரை அந்தத் துண்டுத்தாளைப் பாதுகாத்து வைத்திருந்தேன். வீடும் ஊரும் மாறியதில் அந்தப் பொக்கிஷம் காணாமற்போனது. அந்த ஞானரதம் இதழை இப்போதும் தேடிக் கொண்டிருக்கிறேன். எனக்கும் எல்லாத் தமிழ் எழுத்தாளர்களும் ஒரு காலத்தில் தவித்தது போன்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. நானும் தமிழ் இலக்கியக் காரனல்லவா? தேடிக் கண்டு பிடித்துப் பார்க்க வேண்டும்.

என்னைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார், க.நா.சு.?’


















                                                ஞானரதம் பிப்ரவரி 1986

வெவ்வேறு தேவைகளுக்காக கடந்த சில ஆண்டுகளில் ரோஜாமுத்தையா நினைவு நூலகம், கன்னிமரா பொது நூலகம் ஆகியவற்றில் தேடியபோது கூடவே 1986 பிப்ரவரி மாத ஞானரதம் இதழையும் தேடிக்கொண்டிருந்தேன். அகப்படவில்லை. சுந்தர ராமசாமி நூலகத்தில் ஜெயகாந்தன் ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ்களின் பைண்டு வால்யூம்கள்தாம் எப்போதும் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தன. க.நா.சுவின் ஞானரதம் தென்படவே இல்லை. இன்று தற்செயலாக சுரா நூலகத்தில் துளாவியபோது உதிரியாக வைத்திருப் பவற்றில் ஞானரதம் இதழ்களைப் பார்த்தேன். க நா சு சிறப்பாசிரியராக இருந்து கொண்டு வந்தவை எல்லா இதழ்களும். அவற்றுள் நான் தேடிய இதழும் கிடைத்தது.

















                                                    க நா சு  மதிப்புரை


மதிப்புரை வெளிவந்த ஞானரதம் இதழை சென்னை மயிலாப்பூர் லஸ் முனைக் கடையிலிருந்து வாங்கினேன். அதைப் பிரித்து மதிப்புரை வெளிவந்திருந்த கடைசிப் பக்கத்தை வாசித்தபோது மயிலாப்பூர் வான வீதியில் கந்தர்வர்கள் பாடிக் கொண்டும் கின்னரர்கள் இசைத்துக் கொண்டும் அரம்பையர்கள் ஆடிக் கொண்டும் போனார்கள். நாகர்கோவில் ஆகாயத்தில் இன்றும் அவர்களே போனதைப் பார்த்தேன். முப்பத்தியோரு ஆண்டுகளுக்குப் பிறகும் அதே இளமையுடன் இருந்தார்கள்.