வியாழன், 23 மார்ச், 2017

அசோகமித்திரன்





லையாள எழுத்தாளரும் நண்பருமான சக்கரியாவுடன் பேசிக் கொண்டிருந்த சந்தர்ப்பமொன்றில் பின்வருமாறு சொன்னார்.

''மலையாள எழுத்தாளர்களான நாங்கள் நவீனத்துவம் என்ற பெயரில் சிரமப்பட்டு எட்டிய இடங்களை உங்கள் ஆசாமி மிக எளிதாக அடைந்து விடுகிறார். முகத்தைப் பார்த்ததும்  முன்னால் இருக்கும் ஆளின் முழு ஜாதகத்தையும் சொல்லி விடுகிற தேர்ந்த ஜோதிடரைப் போன்றவர். ஒரு வரியில், ஒற்றைக் குறிப்பில் ஒரு கதாபாத்திரத் தையும் ஒரு பின்னணி யையும் உருவாக்கி விடுகிறார். அலங்காரங்கள் எதுவும் இல்லாத  வரிகள் மூலமே இடத்தையும் காலத்தையும் மனித மனங்களையும் சித்தரித்து விடுகிறார். அவர் எழுத்துக்களைத் தாமதமாகத்தான் படித்தேன்  என்பது நிஜமாகவே வெட்கத்தைத் தருகிறது. இன்னும் சிறிது காலத்துக்கு முன்னாலேயே படிக்கக் கிடைத்திருந்தால் நான் இன்னும்  மேலான  மனிதனாகவும் இன்னும் சிறந்த எழுத்தாளனாகவும் ஆகியிருக்கலாம்''.

சக்கரியா குறிப்பிட்ட ஆசாமி நவீனத் தமிழின் மகத்தான எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன். சக்கரியா குறிப்பிட்ட வாசகங்கள் மிகையல்ல. மிகவும் உணர்வுபூர்வமாகச் சொன்னவை. பொதுவாக மலையாள எழுத்தாளர்கள் பிற இந்திய மொழி எழுத்தாளர்களைப் பொருட் படுத்துவதோ அவர்கள் எழுத்துக்களைப் பற்றிப் பேசுவதோ அபூர்வம். வங்க மொழி எழுத்தாளர்கள் மட்டும் இதில் விதி விலக்கு. எனவே சக்கரியாவின் சொற்கள்  தமிழ் வாசகனாக என்னைப் பரவசமடையச் செய்தன. வாய்ப் பேச்சாக மட்டுமல்லாமல் அசோகமித்திரனின் 'தண்ணீர்' நாவலின் ஆங்கிலப் பதிப்புக்கு எழுதிய முன்னுரையிலும் தமிழில் எழுதிய கட்டுரைகள் சிலவற்றிலும் சக்கரியா  தனது கருத்தை அழுத்தமாகவே குறிப்பிட்டிருக்கிறார்.

காலச்சுவடு இதழுக்காக நண்பர் தேவிபாரதியும் நானும் அசோகமித்திர னுடன் நேர்காணல் மேற்கொண்டபோது  இதைச் சுட்டிக் காட்டினேன். உலகத்துச் சிறந்த எழுத்தாளர்களில்  ஒருவர் என்று நான் கருதும் சக்கரியா என் மொழியில் எழுதும் எழுத்தாளரைப் பாராட்டிச் சொன்ன வார்த்தைகள் முக்கியமானவை என்ற சிலாகிப்புடன் அதைத் தெரிவித்தேன். கேட்டுக் கொண்டிருந்த அசோகமித்திரனிடம் அதையொட்டி எந்தச் சலனமும் இல்லை. மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் சிறிய இடைவெளிக்குப் பிறகு மெல்லிய குரலில்  'சக்கரியா ரொம்ப மிகையாகச் சொல்கிறார் ' என்று சாதாரணமாகச் சொன்னார். அந்த எதிர்வினை உடனடியாக எனக்கு ஏமாற்றத்தையே அளித்தது. பின்னர் நிதானமாக யோசித்துப்  பார்த்தபோது புரிந்தது,  அசோகமித்திரன் அப்படியல்லாமல் வேறு எப்படிச் சொல்வார்? என்று.

அசோகமித்திரன்  சாதாரணமானவர்; எளிமையானவர் .அவரது இந்த இயல்புகளே அவரது எழுத்தின் இயல்புகளாகவும் அமைந்திருக்கின்றன. இது மிக அரியது என்று நம்புகிறேன்.

நான் இதுவரை பார்த்த எழுத்தாளர்களில் இந்த அரிய வகைக்கு இருவரை மட்டுமே உதாரணங்களாச் சொல்ல முடியும். மலையாள எழுத்தாளரான வைக்கம் முகம்மது பஷீரையும்  அசோகமித்திரனையும். இருவரும் முழுநேர எழுத்தாளர்களாக வாழ்க்கையை மேற்கொண்டதும் ஒருவேளை காரணமாக இருக்கலாம். பட்டினிக் கலைஞர்களாக வாழ்ந்தபோதும்  அந்த வாழ்க்கையைப் புகார்கள் இல்லாமல் ஏற்றுக் கொண்டிருந்ததும் துன்பக் கதைகளையும் நுட்பமான நகைச்சுவையுடன் வெளிப்படுத்தியதும் எளிய மனிதர்களின் செயல்களை  மிகுந்த கரிசனத்துடன் முன்வைத்ததும் இந்த ஒப்பீட்டுக்குக் காரணமாக இருக்கலாம்.

சாதாரணமான ஒன்றுக்குள் நாம் காணாமல் போகிற அசாதாரணமான ஒன்றைச் சுட்டிக் காட்டுவதுதான் அசோகமித்திரனின் கதைகளின் இயல்பு. எளிமையானது என்று நாம் மேம் போக்காக நினைப்பது அவ்வளவு எளிமையானதல்ல; கண்ணுக்குப் புலப்படாத சிக்கல்களைக் கொண்டது என்பதைக்  கதைகளை வாசிக்கும்போது உணர முடியும். அவருடைய  கதைகளில் ஒன்று 'விரிந்த வயல்வெளிக்கு அப்பால்'. ரயில் பாதையை ஒட்டிய ஒற்றையடிப் பாதையில் மாணிக்கம் சைக்கிளை ஓட்டிச் செல்கிறான். அந்த நேரத்தில் ஒரு ரயிலும்  வருகிறது. அதுவரை வெறுமனே சைக்கிள் ஓட்டி வந்தவன் இப்போது ரயிலுடன் போட்டி போட்டு ஓட்டுகிறான். ஒரு கட்டத்தில் ரயில் இஞ்சினை  நெருங்கி விடுகிறான். அந்த  கணத்துக்குப் பின்பு ரயிலை முந்த விடுகிறான். உண்மையில் மிக சாதாரணமான காட்சி இது. சைக்கிள் ஓட்டுவதில் விருப்பமுள்ள எந்தச் சிறுவனும் ஈடுபடும் செயல். ஆனால்  அதில் மறைந்திருக்கும் மன உணர்வை எளிமையான சொற்களில் கதை காட்டி விடுகிறது. எந்திரத்துக்கும் மனிதனுக்குமான போட்டி, தான் உருவாக்கிய பொருட்களை விடவும்  மனிதனே மேலானவன் என்ற நம்பிக்கை என்று வெவ்வெறு விளக்கங்களுடன் கதையை அணுகலாம்.

சாதாரணமாகத் தோற்றமளிக்கும் கதையின் உட்பிரதியாக அசாதாரண மான  இன்னொன்றைக் கொண்டிருப்பவையே அசோகமித்திரனின் பெரும்பான்மைக் கதைகள். அசாதாரணம் என்று நாம் நம்பும் ஒன்றின் சாதாரணத்துவத்தையும் அவர் கதைகள் சித்தரி க்கின்றன. பிரயாணம் என்ற கதையின் பின்னணியே வித்தியாசமானது. சாகும் தறுவாயி லிருக்கும் குருவை அவரது சீடன் ஒடு பலகை வண்டியில் வைத்து இழுத்து செல்கிறான்.பனிமலைப் பகுதியில் ஓநாய்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்கின்றன. இருதரப்பினருக்கும் இடையில் நடக்கும் ஆக்கிரமிப்பில் சீடனும் குருவும் தனித்தனியாகப் பிரிந்து போகி றார்கள். சீடன் ஓநாய்களை விரட்டி விடுகிறான். பொழுது விடிந்து பார்க்கும்போது தலையில்லாமல் கிடக்கும் குருவின் பிணம். அதன் கையில் ஒரு ஓநாயின் பிய்த்து எடுக்கப்  பட்ட முன்னங்கால் தென்படுகிறது. அசாதாரணமானவர் என்று கருதப்படும் துறவியின் மன ஆழத்தில் வாழ்க்கை மீதான வேட்கையே மிஞ்சி இருக்கிறது என்ற சாதாரண உண்¨ மயை கதை சொல்லாமல் சொல்லுகிறது. இவை மேலோட்டமான உதாரணங்கள் மட்டுமே.

அசாதாரணம் என்று நான் பயன்படுத்தியிருக்கும் சொல்லே அசோக மித்திரனுக்கு ஒவ்வாமயைத் தரக்கூடும். எளிமை , சாதாரணம் என்பவையே அவரது எழுத்தின் இயல்புகள். இதை அடைவது மிக அசாதாரணம் . பிரம்மாண்டம், ஆடம்பரம், வசதி போன்ற சொற்களுக்கும் செயல்களுக்கும் அவருடைய வாழ்க்கையிலும் எழுத்திலும் இடமில்லை என்றே தோன்றுகிறது. தஞ்சாவூர் பெரிய கோவிலின் முன்னால் அவரை நிற்க வைத்து 'எவ்வளவு பிரம்மாண்டம் இல்லையா சார்? ' என்றுகேட்டால் அவர் மௌனமாக இருப்பார். சிறிது  கழித்து ' சாமி கும்பிடறத்துக்கு சின்னக் கோவில் போதாதா? இவ்வளவு பெரிசா எதுக்கு? ' என்று கேட்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ' இப்போதெல்லாம் புதிய எழுத்தாளர்களே கூட ஆயிரம் பக்கங்களைத் தாண்டிய நாவல்களை எழுதி விடுகிறார்கள். நீங்கள் ஏன் அப்படி முயற்சிக்கக் கூடாது ? ' என்ற கேள்விக்கு சட்டென்று அசோகமித்திரனிடமிருந்து பதில் வந்தது. ' எனக்கு  ஒரு இருநூறு பக்கத்துக்கு அதிகமான நாவலை எடுத்தாலே கை வலிக்க ஆரம்பிச்சிடும். ஆயிரம் பக்க நாவலையெல்லாம் எப்படிப் படிக்கிறதுங்க இல்லை; எப்படிக் கையில தூக்கி வெச்சுக்க முடியும்கிறதே ஆச்சரியமா இருக்கு?'. இந்த பதிலையும் அவரைத் தவிர வேறு யாரும் யோசிக்க முடியுமா?

ஆனாலும் அவரது சமகாலத்தியவர்களுடன் ஒப்பிட்டால் அவரே நிறைய எழுதியிருப்பவர். அவரது இதுவரையான சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு ஆயிரத்து அறுநூறு பக்கங்கள் கொண்டது. அவரது  எல்லா நாவல்களை யும் ஒரே புத்தகமாக்கினால் அதுவும் ஏறத்தாழ அதை விட ஒன்றரைப் பங்கு அதிகமாக வரலாம். கட்டுரைகள் சுமார் இரண்டாயிரம் பக்கங்களை எட்டும்.  எளிமையின் கலையின் பிரம்மாண்ட சாதனை என்று சொல்லத் தோன்றுகிறது. நிறைவளிக்கும் சாதனையும் கூட.



ன் இலக்கிய உலக நுழைவுக் கட்டங்களில் நான் ஆவேசமாக வாசித்த எழுத்தாளில் அசோகமித்திரனும் ஒருவர். மிக விரைவில் அபிமானத்துக்கு உரியவராக மாறினார். எங்களூர்  கோவையில் மார்க்சிய அறிஞர் ஞானி ஓவ்வொரு ஆண்டும் மே மாத வாக்கில் முக்கியமான சமகால எழுத்தாளர் ஒருவரை அழைத்துக் கூட்டம் நடத்துவார். 1976 இல் சுந்தர ராமசாமி. 77 இல் அசோகமித்திரன்.

பத்தொன்பது வயதுப் பையனான நான் முதன்முதலில் வாசிப்பைக் கடந்து கட்டுரை எழுதியது அசோகமித்திரனைப் பற்றித்தான். அவருக்காக நடத்தப் பட்ட சிறப்புக் கூட்டத்தில்  வாசிப்பதற்காக அதுவரை வெளிவந்திருந்த அவரது நாவல்களையும் சிறுகதைத் தொகுப்புகளையும் ஊன்றிப் படித்து நான் எழுதிய கட்டுரையே எனது முதல் இலக்கியக் கட்டுரை.  அதற்குக் கிடைத்த முதல் பாராட்டும் அசோகமித்திரனிடமிருந்துதான் . உபரியாக்க் கிடைத்த ஊக்கம்  - கட்டுரைப் பிரதியைப் பார்வையிட்டு அவர் சொன்ன வாசகம். ‘'உங்க கையெழுத்து அழகா இருக்கு'. 

சென்னை வாழ்க்கையில் அவரைப் பலமுறை கூட்டங்களில் சந்தித் திருக்கிறேன்.  நண்பர் விமலாதித்த மாமல்லனுடன்  ஊர் சுற்றித் திரிந்து விட்டு சும்மா அசோகமித்திரனை அவர்  வீட்டில் போய்ப் பார்த்த நாட்கள் அநேகம். பின்னர் குங்குமம் வார இதழில் பணியாற்றிய காலத்தில் ஒரு தீபாவளி இணைப்பிதழில் வெளியிட அசோகமித்திரனிடம் கட்டுரை § கட்டேன். தலைப்பு நான் சொன்னது. எழுத்தாளருக்குப் பிடித்த ஐந்து படங்கள்'. தலைப்புக்கு உதவியவர் அன்று என் சக ஊழியராக இருந்த எஸ்.ராம கிருஷ்ணன். கட்டுரையை வ ¡ங்கி வந்தவரும் அவரே. (பார்க்க: அசோக மித்திரன் கட்டுரைகள் – 2. கிழக்குப் பதிப்பகம் பக்: 859 ) அதற்கு முன்பே அசோகமித்திரனுடன் ஏற்பட்டிருந்த மானசீக நெருக்கமே  அவரைக் கட்டுரை எழுதச் செய்யலாம் என்று தூண்டியது. மலையாளக் கவிஞரும் நண்பருமான பாலசந்திரன் சுள்ளிக்காடின் முயற்சியில் கேரள மாநிலம் ஆலுவாயில் நடந்த மானசோத்ஸவம்' இலக்கியச் சந்திப்பில் அசோக மித்திரனுடன் ஒரே அறையில் தங்கியிருந்தேன். அன்று அவர் பேசியவை இன்றும் நினைவில் இருப்பவை. குறிப்பாக ஹெமிங்§ வயையும் நார்மன் மெய்லரையும் பற்றிய அகப் பார்வை மிளிரும் பேச்சு. 1999 இல் நண்பரும் வங்காளக் கவிஞருமான அஞ்சென் சென் கேட்டுக் கொண்ட்தற்கிணங்க சென்¨ னயில் வங்கக் கவிஞர் ஜீபனானந்த தாஸ் நூற்றாண்டு விழாவில் அவரை அழைத்து வந்து பேசவைத்தேன். நானும் கட்டுரை வாசித்தேன். அதில் சாகித்திய அக்காதெமி வெளியீடான ஜீபனானந்த தாஸ் வாழ்க்கை வரலாறு தமிழாக்கத்தைப் பற்றிச் சொன்னதை நவீன கவிதையின் முன்னோடியான ஜீபனானந்தா க. த. திருநாவுக்கரசின் மொழியாக்கத்தில்  புராதனக் கவிஞராகத் தென்படுகிறார் என்று நான் சொன்னதைச் சுட்டிக் காட்டிச் சொன்னார். '' திருநாவுக்கரசு அவர் துறையில பெரிய ஸ்காலர். நீங்க இப்படிக் கடுமையாச் சொல்லியிருக்க வேண்டாம்''. அது ஒரு பாடத்தின் பயிற்சியாக மனதில் பதிந்தது. என்றென்றும் பின்பற்ற வேண்டிய அறிவுரையாகவே அதைக் கருதுகிறேன்.

சோகமித்திரனைச் சந்தித்துப் பேசுவது எப்போதும் உற்சாகம் தரும் செயலாகவும் புதிதாக ஏதோ விஷயத்தைத் தரும் அனுபவமாகவும் இருந்திருக்கிறது. அவரது கதைகளில் போலவே பேச்சிலும் சொல்லாமல் விடப்படுபவை அதிகம். அதைப் பின்னர் யோசிக்கும்போது என்னையறியாமல் சிரித்ததும் வியந்ததும் உண்டு. அவருக்கு உடல்நலம் குன்றியிருப்பதாகக்  கேள்விப்பட்டு நண்பர்களுடன் பார்க்கச் சென்றிருந்தோம். அவர் வீட்டின் காவலாளி எங்களை அனுமதிக்க மறுத்து விவாதித்துக் கொண்டிருந்தபோது அவரே வெளியே வந்து  அழைத்துச் சென்றார். ஓரிரு மணிநேர உரையாடலுக்குப் பிறகு விடை பெற்றுக் கொண்டபோது உடன் வந்து வழியனுப்பினார். ' உடம்பு சரியில்லை என்று ஒருவரைப் பார்க்க  வந்தால் யாருக்கு உடம்பு சரியில்லையோ  அவரே ' வாங்கோ' என்று வரவேற்பது பார்க்க வந்தவர்களுக்கு ரொம்ப ஏமாற்றத்தைத் தரும் இல்லையா?' என்று கேட்டார். அந்த நாள்  முழுவதும் இதை யோசித்துச் சிரித்துக் கொண்டிருந்தேன். கவிஞர் ஞானக்கூத்தனின் இறுதி ஊர்வலத்தின்போது எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என்று பலரும்  வந்திருந்தார்கள். இறுதி அஞ்சலி செலுத்த வந்த அசோகமித்திரன் சொன்னது. ' அவருக்குத் தெரிந்த எல்லாரும் வந்திருக்கிறார்கள். இது அவருக்குத் தெரியாது இல்லையா?' அன்றைய தினம் முழுக்க இதையே யோசித்துக் கொண்டிருந்தேன்.

@


 எளிமையின் உன்னதம் - என்ற தலைப்பில் அந்திமழை , ஜனவரி 2017 இதழில் வெளியான கட்டுரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக