வெள்ளி, 24 ஏப்ரல், 2020

அந்த நாட்களில் ஒன்று









   நான் மிக மிக மகிழ்ந்த நாட்களில்
       அதுவும் ஒன்று

கானகத்தின் அமர வாழ்வுக்குச்
சாவா நெல்லி பறிக்க மலையேறிய யானை
சறுக்கி விழுந்து காலைச் சிராய்த்துக்கொண்டது
பொந்திடை அணில் பதறி வந்து
பச்சிலைகளைக் கொறித்துப்போட்டது
நான் அதை விழுதாக அரைத்தேன்
அணில் காயத்துக்குப் பற்றுப்போட்டது


அப்போது
வானம் ஆதுரமாகப் புன்னகை செய்தது
நூற்றாண்டுக் கடம்பமரம் மலர்மாரி பெய்தது

   மிக மிக மிக மகிழ்ச்சியாக
   நானிருந்த நாட்களில் ஒன்று அது.









செவ்வாய், 21 ஏப்ரல், 2020

இந்த இரவு


              

னிதப் புழக்கமற்ற இந்த இரவுக்குத்தான்
எத்தனை அமைதி

காற்றில் அசையும் தளிர்
மரத்தின்மீது சிறகுகுடையும் பறவை
நடைபழகும் பூனை
இருளை மெல்லும் சிள்வண்டு

எல்லாவற்றின்
ஓசையும் ஒலியும் அரவமும்
எத்தனை தெளிவு

என் உள் வெளி மூச்சுகளின் பேரோசைக்கு
எத்தனை துல்லியம்

தாங்க முடிவதில்லை
இந்த மௌனத்தின் அமைதியை


இதோ
இரவை நடுக்கிவரும் மரணத்தின்
ஓசையில்லாக் காலடிகளுக்கு
எத்தனை இடிகளின் முழக்கம்

எனக்காக பூமியே
ஒரே ஒரு நொடிமட்டும்
அதிர் 
உடை
பிளர்
ஓலமிடு

வீறிட்டழும் மழலையின்
அழுகுரலேனும் கேட்க உதவு

இந்த அமைதியின் மௌனத்தைத்
தாங்க முடியவில்லை.




 ஓவியம்: எட்வர்ட் மன்ச்