வியாழன், 21 அக்டோபர், 2021

மலர் நினைவுகள்

2018                                                       
                                                                                     


 
2019











2020



2021

ள்ளிப் பருவம். பாடங்களை விடவும் பிற புத்தகங்களைத் தேடித் தேடி வாசித்த காலம். வாசிப்பு பித்தாக முற்றியிருந்த நாட்கள். 


ஆனந்த விகடன், கல்கி இதழ்களில் வெளியாகியிருந்த தீபாவளி மலர் விளம்பரங்களைப் பார்த்து வாங்கி வாசித்தே ஆகவேண்டும் என்ற ஆவல் முட்டிக் கொண்டிருந்தது. அம்மாவை நச்சரித்துக் காசு வாங்கிக்கொண்டு பள்ளிக்குப் போனேன். உணவு இடைவேளையின் போது சாப்பிடாமல் வெரைட்டிஹால் ரோட்டிலிருந்த விகடன் ஏஜெண்ட் அலுவலகத்துக்கும் ஐந்து முக்கிலிருந்த பாயின் பேப்பர் கடைக்கும் ஓடி 'மலர்கள் வந்தாச்சா?' என்று விசாரித்தேன். 


‘இன்னைக்கு வரலை. நாளைக்குத்தான் வரும்’ என்று பதில் கிடைத்தது. மறுநாள் நண்பகலிலும் பள்ளி விட்டதும் மாலையிலுமாக விசாரணையைத் தொடர்ந்தேன். அன்றும் வரவில்லை. நாளைக்கு வரும் என்ற அதே பதில் கிடைத்தது. மூன்றாம் நாளும் பகலிலும் மாலையிலும் அதே விசாரிப்பு. அதே பதில். அடுத்த நாள் மத்தியான்னம் போனபோதும் அப்படியே.


இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஏஜெண்ட் அவர் மேஜைக்கு அருகில் அழைத்து விவரம் கேட்டார். சொன்னேன்.


‘’இன்னும் நம்ம ஊருக்கு வரல்லே.வந்தா இங்க வெச்சிருப்போம். முக்கியமான கடைகளுக்குக் குடுப்போம். அங்கேர்ந்து வாங்கு. கெடக்கலேன்னா இங்க வா. இதுக்குன்னு ஸ்கூல்லேர்ந்து ஓடி ஓடி வராதே.என்னா?’’ என்றார்.


தலைகுனிந்து கேட்டுக் கொண்டிருந்தேன். பிறகு நிமிர்ந்து ‘’ நாளைக்கு வந்துடுமா?’’ என்றேன்.


ஏஜெண்ட் வாய்விட்டுச் சிரித்து விட்டார். ‘’ வந்துடும். வந்துடும். வந்ததும் உனக்குக் கிடைக்க ஏற்பாடு பண்றேன். இந்த உஷாரைப் படிக்கறதுலயும் காட்டறி்யோ என்னவோ?’’ என்று புத்தியில் தட்டினார்.


அந்தத் தட்டு உறைக்கவில்லை. இவர் எப்படி புத்தகம் கிடைக்க ஏற்பாடு செய்வார் என்ற சந்தேகமே அரித்துக்கொண்டிருந்தது. திரும்பி வந்தேன். அன்று மாலை அந்த அலுவலகத்துக்குப் போகவில்லை. யாரோ ஒருவர் சொல்லும் புத்திமதியைக் கேட்க எனக்கென்ன தலையெழுத்து?


மறுநாளும் அந்தப் பக்கம் போகவில்லை. பாய்கடையிலோ மோகன் புக் ஸ்டாலிலோ கிடைக்கும்.அப்போது வாங்கிக் கொள்ளலாம் என்று அடக்கமாக இருந்தேன். அத்தியாவசியச் செலவுகள் வந்தும் மலர்களுக்காக வாங்கிய ரூபாயைப் பத்திரமாக இறுக்கி வைத்திருந்தேன்.

 

முதல் இரண்டு பீரியட்கள் முடிந்து ரீசஸ் விட்டதும் வெளியில் வந்தேன்.  பள்ளி அலுவலகத்துக்கு முன்னால் விகடன் ஏஜெண்டின் மொபெட் நிற்பதைப் பார்த்தேன். அழைப்பதுபோலக் கையை உயர்த்துவதையும் பார்த்தேன். என்னையா அழைக்கிறார்? சந்தேகம் தெளிவதற்குள் அவரே சைகை காட்டிக் கூப்பிட்டார். சக மாணவன் ரங்கராஜனைத் ( ரங்காவின் பெரியப்பா பிரபல எழுத்தாளர். பெயர் - சாண்டில்யன் )  துணைக்கு அழைத்துக்கொண்டு மொபெட்டை நெருங்கினேன். அதன் கேரியரில் அந்த வாரத்து ஆனந்த விகடன் இதழ்கள் அடுக்கடுக்காக வைத்துக் கட்டப் பட்டிருந்தன. அன்று வெள்ளிக்கிழமை என்பதும் அப்போது நினைவுக்கு வந்தது.

 

மொபெட்டின் ஹாண்டில் பாரில் மாட்டியிருந்த கித்தான் பையிலிருந்து ஆனந்த விகடன் தீபாவளி மலரை எடுத்துக் கொடுத்தார் ஏஜெண்ட். டிரவுசர் பையில் பத்திரப்படுத்தியிருந்த பத்து ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தேன். மீதி ஐந்து ரூபாயைக் கொடுத்துவிட்டு ‘’ நீயா ஓடி வர வேண்டாம்னுதான் எடுத்துண்டு வந்தேன். பத்திரிகை படிக்கறதெல்லாம் நல்லதுதான். படிப்புல கோட்டை விட்டுடாமப் பாத்துக்கோ’’ என்றார். 


மறுபடியும் புத்திமதியா? என்று அலுவலக வாசலில் குதிரைமேல் ஈட்டியுடன் வீற்றிருந்த மிக்கேல் சம்மனசைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பதிலாக ரங்கா பதில் சொன்னான். ‘’ அதெல்லாம் நன்னாப் படிப்பான் மாமா. மொத அஞ்சு ரேங்க்குள்ள வாங்கிடுவோம். இவன் கவிதையெல்லாம் நன்னா எழுதுவான்”. நான் பார்வையைத் திருப்பினேன்.


‘’அப்போ அடுத்த தீவாளி மலர்ல ஒன்னோட கவிதையும் வரட்டும்’’ என்று முகம் முழுவதுமாகப் பூத்த சிரிப்புடன் ஏஜெண்ட் மொபெட்டை முடுக்கி ஸ்டாண்டிலிருந்து விடுவித்து ஏறிப் பறந்தார்.

 

மிச்ச ஐந்து ரூபாயில் அன்று மாலையே ஐந்துமுக்கு பாய் கடையில் கல்கி தீபாவளி மலரும் கிடைத்தது. அப்போது நான் புதிதாகத் தெரிந்து கொண்ட எழுத்தாளர் ஒருவரின் கதைகள் இரண்டு மலர்களிலும் இருந்தன.விகடனில் ‘விளையாட்டுப் பொம்மை’ என்ற கதை. கல்கியில் ‘கடைசி மணி’ என்ற கதை. எழுதியவர் – தி.ஜானகிராமன்.

 

கைக்கு வந்த ஆனந்த விகடன் தீபாவளி மலர் 2021ஐப் புரட்டிக் கொண்டிருந்தபோது இந்தப் பழைய நினைவுகளும் புரண்டு வந்தன.

 

கடந்த நான்கு ஆண்டுகளாக ஆனந்த விகடன் தீபாவளி மலர்களில் என்னுடைய கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. 2018 இல் மதுரை சோமுவைப் பற்றிய கட்டுரை ‘ மனோ தர்மர்’. 2019 இல் கொரியாவிலுள்ள எழுத்தாளர் உறைவிட முகாம் ‘தோஜி மையத்தில் கழித்த நாட்களைப் பற்றிய அனுபவம் ‘தோஜி’. 2020 இல் தி.ஜானகிராமன் நூற்றாண்டை ஒட்டி எழுதிய ‘காலத்தைப் படைத்த ஆளுமை’ என்ற கட்டுரை. இந்த 2021 இல் திருவனந்தபுரத்தின் நவீனத் தொன்மக் கதையான ‘ மகாராஜாவின் காதலி’.

 

விகடன் தீபாவளி மலர் ஆசிரியரான கா.பாலமுருகனின் தூண்டுதல் இல்லாமலிருந்தால் இந்தக் கட்டுரைகளை எழுதியிருக்க மாட்டேன். வீயெஸ்வி, லலிதாராம், வெ. நீலகண்டன் ஆகியோரது பாராட்டுகள் கிடைக்காமலிருந்தால் தொடர்ந்து எழுதியிருக்கவும் முடியாது. இவர்களுக்கு மிக்க நன்றி.


இவர்களுக்கெல்லாம் நன்றி பாராட்டும் அதேசமயம் ‘’ அடுத்த தீவாளி மலர்ல ஒன்னோட கவிதையும் வரட்டும்’’ என்று சொன்ன விகடன் ஏஜெண்டுக்கும் மானசீக நன்றி. அந்த வாக்குப் பலிக்க நாற்பத்து எட்டு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அதனால் என்ன, மெய்யான சொல் என்றாவது வெல்லும் தானே? அவர் இன்று இல்லை என்றே அறிகிறேன். ஆனால் ஆதரவுக் குரல் எழுப்பிய ரங்கா நீ எங்கே? 

@

 

 


புதன், 13 அக்டோபர், 2021

நெடுமுடி வேணு

 



நெடுமுடி வேணு (1948-2021)

கலைப் பிரபலங்களின் மறைவின்போது மலையாள ஊடகங்கள் பயன்படுத்தும் நிரந்தர வாசகங்களில் ஒன்று: ‘அன்னார் அரங்கு நீங்கினார்’ என்பது. நெடுமுடி வேணுவைப் பொருத்து இந்த வாசகம் ‘அரங்குகளை நீங்கினார்’ என்று பன்மையில் பயன்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் அவர் பல்துறைக் கலைஞராக விளங்கியவர். இலக்கியம், இசை, நாடகம், சினிமாத் துறைகளில் பங்களித்தவர். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலக் கலைவாழ்க்கையில் தொடர்ந்தும் அவ்வப்போதுமாக இந்தத் துறைகளில் ஈடுபட்டுச் செயலாற்றியவர்.


கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம் நெடுமுடியில் 1948இல் பிறந்தவர் வேணு என்ற வேணுகோபாலன். அவர் பிறந்த மண்ணான குட்டநாடு கலைகளின் கூடற்களம். கர்நாடக இசை, கதகளி ஆகிய செவ்வியல் கலைகளுக்கும், சோபான சங்கீதம் போன்ற சடங்குக் கலைகளுக்கும், படையணி முதலான நாட்டார் கலைகளுக்கும் ஈரமும் செழுமையும் ஊட்டிய மண். தகழி சிவசங்கரன் பிள்ளை, அய்யப்ப பணிக்கர், காவாலம் நாராயணப் பணிக்கர் உள்ளிட்ட எழுத்தாளர்களும் கவிஞர்களும் இலக்கியப் பின்புலமாகச் சித்தரித்த நிலம்.  குட்டநாட்டின் இந்த இயல்புகள் மனித வடிவத்தில் வெளிப்பட்டது நெடுமுடி வேணு என்ற கலைஞனில்.


கல்லூரிக் காலத்தில் சக மாணவரும் நண்பரும் பின்னாட்களில் மலையாளத் திரையுலகில் பிரபல இயக்குநராகப் புகழ்பெற்றவருமான பாசில் மாணவர்களுக்கான போட்டிக்கு எழுதிய நாடகத்தில் வேணு நடித்தார். நடுவராக வந்திருந்த கவிஞரும் நாடகக்காரருமான காவாலம் நாராயணப் பணிக்கர் வேணுவுக்குள் ஒரு நடிகரைக் கண்டார். பட்டப் படிப்புக்குப் பின்பு சிறிது காலம் தனிப் பயிற்சிக் கல்லூரி ஆசிரியராக ஆலப்புழையிலும் பத்திரிகைச் செய்தியாளராகத் திருவனந்தபுரத்திலும் பணியாற்றினார்.


காவாலம் நாராயணப் பணிக்கரின் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்ததும் வேணு திருவனந்தபுரத்துக்குக் குடிபெயர்ந்தார். அவரது கலைவாழ்க்கையின் தொடக்கம் அந்தக் குடிபெயர்வு. 1972இல் வெளியான ‘ஒரு சுந்தரியுடெ கத’ என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சொல்லிக் கொள்ளும்படியான முக்கியத்துவம் இல்லாத வேடம். ஆனால் படத்தின் பின்னணி வலுவானது. மறுமலர்ச்சிக் கால எழுத்தாளர் பி. கேசவதேவின் நாவலை ஆதாரமாகக் கொண்ட கதை. திரைக்கதையும் இயக்கமும் பிரபல இயக்குநர் தோப்பில் பாசி. பிற்கால நேர்காணல் ஒன்றில் முதல் பட அனுபவம் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார் வேணு. “நடனமாடும் கல்லூரி மாணவர்களில் ஒருவனாகச் சின்னப் பாத்திரம். யாரும் என்னைக் கவனித்திருக்க முடியாதவேடம். எனக்கும் மனக்குறைதான். ஆனால் கவனத்துக்குரிய படத்தில் அறிமுகமானேன் என்பதால் அந்தக் குறை பெரிதாகப் படவில்லை.”


1978இல் அரவிந்தன் இயக்கத்தில் வெளிவந்த ‘தம்பு’ நெடுமுடி வேணுவைத் திரையுலகின் கவனத்துக்கும் பார்வையாளரின் வரவேற்புக்கும் இலக்காக்கிற்று. எழுபதுகளின் இறுதியில் உருவான கலைப் படங்களிலும் எண்பதுகளில் வெளிவந்த இடைநிலைப் படங்களிலும் நெடுமுடி வேணு நிரந்தரப் பங்கேற்பாளரானார். பரதன் இயக்கிய ‘தகர’ (1979) படத்தில் வேணு ஏற்றிருந்த செல்லப்பன் ஆசாரி பாத்திரம் அவரது நடிப்பின் நுண்ணியல்பை எடுத்துக்காட்டியது. ஜான் ஆப்ரகாம் இயக்கிய ‘செறியாச்சன்டெ குரூர கிருத்தியங்களில்  கிறிஸ்தவப் பாதிரியாராக வேடமேற்றார். பத்மராஜன் இயக்கிய ‘கள்ளன் பவித்ர’னில் (1981) மனந்திருந்திய கள்வனாக நடித்தார். இந்த ஆரம்பக் கால வேடங்களில் அவரது நடிப்பு புதிய தோற்றங்களைக் கொண்டிருந்தது. அதன் விளைவாக ‘சமாந்தர சினிமா’ என்ற இடைநிலைப் படங்களில் வேணு இன்றியமையாதவராக ஆனார். பரதன், பத்மராஜன், மோகன், கே.ஜி. ஜார்ஜ், லெனின் ராஜேந்திரன் போன்றவர்களின் படங்களில் அவரை நம்பிப் பாத்திரங்கள் கொடுக்கப்பட்டன. மோகன் இயக்கிய ‘விட பறயும் முன்பே’ (1981) வேணுவின் நடிப்புக்காகவே பார்க்கப்பட்ட படமாக இருந்தது.


நெடுமுடி வேணு கதாநாயகராகச் சில படங்களில் நடித்திருந்தாலும் நட்சத்திர நடிகரல்லர். நிகழ்த்துநர். எனவே துணைப் பாத்திரங்களிலேயே பெரும்பாலும் அவரைக் காணமுடிந்தது. அந்தப் பாத்திரங்களிலேயே அவரது நடிப்பு சிறப்பாக வெளிப்பட்டது. அவரைத் தவிர அந்தப் பாத்திரங்களில் வேறு எவராலும் சோபிக்க முடியாது என்று சொல்லும்படியான நுண் உணர்வுகளைத் திரையில் வெளிப்படுத்தினார். சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்த ‘ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா’ (1990)வில் அவரது பாத்திரம் ஒரு சிற்றரசர். அவரது உறவினர்களாலேயே கொல்லப்படும் சதிக்குள் அகப்பட்டிருக்கிறது அந்தப் பாத்திரம். அவரைத் தீர்த்துக் கட்ட அமர்த்தப்படும் வாடகைக் கொலையாளியின் இசைத் திறனிலும் நல்லியல்பிலும் தன்னை இழந்துபோகிறார். தான் நம்பிய அந்தப் பாத்திரம் தன்னை ஏமாற்றியதைப் புரிந்து கொள்கிறார். அந்தத் தருணத்தில் நெடுமுடி வேணு வெளிப்படுத்தும் நடிப்பு நுட்பமானது. உடலும் பார்வையும் சோர்ந்த நிலையிலிருப்பவராக அந்தக் காட்சியில் அவர் நிரம்பி நிற்கிறார்.


வேணுவின் நடிப்புப் பாணி நாடகத்திலிருந்து பெறப்பட்ட ஒன்று. நாடகத்தில் நடிகனின் முழு உடலுமே நடிப்புக் கருவியாகச் செயல்படுகிறது. அந்தப் பாணியையே திரை நடிப்பிலும் வேணு கையாண்டார். அவரது சிகை முதல் கால் நகம் வரையுமே அவரது நடிப்பை வெளிப்படுத்தின. ‘மனசின் அக்கரே’ (2003) என்ற சத்யன் அந்திக்காடு படத்தில் அவருக்கு சவடால் பேர்வழியான கிறிஸ்தவப் பாத்திரம், ஒரு காட்சியில் பாத்திரத்தின் டம்பத்தைக் காட்டுவதற்காகப் புட்டம் குலுங்க நடப்பார். அந்த நடையிலேயே பாத்திரத்தின் குணத்தைக் கொண்டு வருவார். திரைப்படங்களின் குளோஸ் அப் காட்சிகளில் வேணு காட்டும் நுட்பமான சலனங்கள் நாடக நடிப்பிலிருந்து முற்றிலும் வேறானவை.


ஒரு படத்தில் வேணு ஏற்றிருந்த பாத்திரம் இறந்த நிலையில் கால்நீட்டிக் கிடப்பதாகக் காட்சி. காட்சி படமாக்கப்படும்வரை அசையாமல் கிடந்தார். காட்சி முடிந்ததும் சிரித்துக் கொண்டே எழுந்தார். ‘அசையாமல் படுத்துக் கிடப்பதை சுலபமாக நடித்து விடலாம், இல்லையா?’ என்று ஒருவர் குறிப்பிட்டார். ‘இல்லை அதுவும் சிரமமானதுதான். சும்மா கட்டைபோலக் கிடப்பதல்ல நடிப்பு. அந்தப் பாத்திரம் இறக்கும்போது என்ன மனநிலையில் இருந்தது என்பதையும் நடிகன் முகத்தில் காட்டவேண்டும். நிம்மதியான சுக வாழ்க்கை நடத்தியவரென்றால் சிரித்த முகமாக இறந்திருப்பார். கடன்பட்டு நொந்து போனவரானால் அந்தச் சலிப்பும் நோயாளியாக இருந்தால் அந்த வாதையும் முகத்தில் தென்படும். அதை வெளிப்படுத்துபவனே நல்ல நடிகன்’ என்று பதில் சொன்னார் வேணு. நெடுமுடி வேணு நல்ல நடிகர்தான் என்று சான்றளிக்க ஐந்நூறுக்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன.


அரைநூற்றாண்டுக் காலம் திரைப்படங்களில் நடித்து வந்தவர். எனினும் நாடகத்தின் மீதான நெடுமுடி வேணுவின் காதல் ஒருபோதும் ஓய்ந்ததில்லை. காவாலம் நாராயணப் பணிக்கரின் ‘அவனவன் கடம்ப’, ‘தெய்வத்தார்’ போன்ற நாடகங்கள் வேணுவின் நடிப்பால் உயிர்பெற்றன. நாடகத்துக்கு இணையாகவே அவரது இலக்கிய ஆர்வமும் மங்காமல் தொடர்ந்தது. அய்யப்ப பணிக்கர் கடம்மனிட்ட ராமகிருஷ்ணன் ஆகிய கவிஞர்களை கவிதைகளை அவர் சொல்லும் பாங்கு கவிதைகளுக்கு இன்னொரு பரிமாணத்தையே அளிக்கும். இந்த இலக்கிய ஈடுபாடுதான் அவரை திரைக்கதை எழுத்தாளராக்கியது. பரதன் இயக்கிய ‘காற்றத்தெ கிளிக்கூடு’ (1983) முதலாக ஏழு திரைக்கதைகளை எழுதியுள்ளார். ‘பூரம்’ (1989) என்ற திரைப்படத்தை இயக்கியும் இருக்கிறார். நடிகராக மட்டுமல்லர் சினிமாவின் பிற தளங்களிலும் செயல்பட்ட கலை ஆளுமை அவருடையது.


குறைந்த எண்ணிக்கையிலான படங்களில் நடித்திருந்தாலும் நெடுமுடி வேணுவுக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. ‘இந்தியன்’, ‘அந்நியன்’ ‘பொய் சொல்ல போறோம்’, ‘சர்வம் தாள மயம்’ ஆகிய படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அவரது நடிப்பு மிகவும் சிலாகிக்கப்பட்டது, ‘மோக முள்’ளில்தான். ஜானகிராமன் உயிரும் உடலுமாக கற்பனைச் செய்த ரங்கண்ணா வேடத்துக்கு வேணுவைத் தவிர பொருத்தமான இன்னொரு நடிகர் இருக்க வாய்ப்பில்லை.


நடிப்பைப் ‘பகர்ந்தாட்டம்’ என்று மலையாளத்தில் குறிப்பிடுவது உண்டு. நெடுமுடி வேணு என்ற ஒற்றைப்பிறவி ஏரத்தாள ஐந்நூறு உடல்களில் பகர்ந்தாடியிருக்கிறது. வெவ்வேறு மனிதராக வெவ்வேறு வயதினராக வெவ்வேறு பின்னணி சார்ந்தவராக உருவாக்கப்பட்ட பாத்திரங்களில் நெடுமுடி வேணு வாழ்ந்துக்காட்டினார்.


பார்வையாளர்களின் ஏற்பைத் தாண்டி நெடுமுடி வேணுவுக்குக் கிடைத்த அதிகார பூர்வமான அங்கீகாரங்கள் குறைவே. ஆறு முறை கேரள மாநில அரசின் விருதுகளைப் பெற்றார். இரண்டுமுறை மத்திய அரசின் விருதுகள் அளிக்கப்பட்டன. ஆனால் அந்த இரு விருதுகளும் அவர்களுடைய தகுதிக்கு பெருமைச் சேர்ப்பவை அல்ல. பி.ஜே. ஆன்டணி முதல் சுராஜ் வெஞ்ஞாறமூடு வரையான மலையாள நடிகர்களுக்கு வழங்கப்பட்ட சிறந்த நடிகருக்கான தேசிய விருது மலையாளத்தின் மகத்தான இரு கலைஞர்களுக்கு அளிக்கப்படவே இல்லை. அவர்கள் திலகனும் நெடுமுடி வேணுவும். 

சில ஆண்டுகளுக்கு முன்பு வேணுவுடனான நேர்ச்சந்திப்பில் இதைச் சுட்டிக் காட்டியதும் கண்களைச் சிமிட்டி தோளைக்குலுக்கி வாய்விட்டு சிரித்தார். அசல் குட்ட நாட்டுக்காரனின் பகடிச்சிரிப்பு. அது இப்போதும் காதில் ஒலிக்கிறது.

@

நன்றி: இந்து தமிழ் திசை    13 அக்டோபர்  2021


செவ்வாய், 5 அக்டோபர், 2021

கவி நாராயணர்


 



அனைவருக்கும் வணக்கம். ஸ்ரீ நாராயண குரு கல்லூரி சார்பாக நடைபெறும்  நாராயண குரு – வாழ்வும் வாக்கும் பன்னாட்டுக் கருத்தரங்கில் பேசக் கிடைத்த இந்த வாய்ப்புக்காக தொடர்புடைய எல்லாருக்கும் முதலில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இந்த நிகழ்ச்சியின் அமைப்புச் செயலாளரான டாக்டர் கிரீசன் என்ன தலைப்பில் பேச விரும்புகிறீர்கள் என்று கேட்டார். கொஞ்சமும் யோசிக்காமல் ‘கவி நாராயணர்’ என்று சொன்னேன். நான் கவிதையில் ஆர்வம் கொண்டவன். கவிதை எழுதி வருபவன் என்பதால் நாராயண குருவைக் கவிஞராகப் பார்ப்பது நெருக்கத்தைக் கொடுக்கிறது. இது ஒரு காரணம். சில மாதங்களாக நாராயண குருவின் சம்பூர்ண கிருதிகள் என்ற நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். அதையொட்டியே அவரைக் கவிஞராகப் பார்க்க விரும்புவது மகிழ்ச்சி தருகிறது. இது இன்னொரு காரணம்.

 

நாராயண குரு என்ற பேராளுமைக்குப் பல பரிமாணங்கள் இருக்கின்றன. தத்துவ ஞானி, ஆன்மீகப் பெரியார், கேரள மறுமலர்ச்சியின் விடிவெள்ளி, சமூகச் சீர்திருத்தங்களின் முன்னோடி, ஒடுக்கப்பட்டிருந்த சமுதாயங்களுக்கு சமூக நீதியைப் பெற்றுத் தந்த போராளி, சாதிக்கும் மதத்துக்கும் அப்பாற் பட்ட மனிதப் பற்றாளர் என்று அவரைப் பல நிலைகளில் காண முடியும். அவை அனைத்துக்குமான பேருருவாக இருந்தவர், இருப்பவர் குரு.

 

மகாத்மா காந்தியைப் பற்றி பாரதி எழுதிய கவிதையின் ஒரு பகுதியை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். மகாத்மா காந்தி பஞ்சகத்தின் நான்காவது பகுதி அது.

தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும்
பிறனுயிர் தன்னையும் கணித்தல்
மன்னுயி ரெல்லாம் கடவுளின் வடிவம்
கடவுளின் மக்களென் றுணர்தல்
இன்னமெய்ஞ் ஞானத் துணிவினை மற்றாங்கு
இழிபடு போர், கொலை, தண்டம்
பின்னியே கிடக்கும் அரசிய லதனில்
பிணைத்திடத் துணிந்தனை பெருமான்.

 

காந்தியைச் சிறப்பித்து பாரதி  சொல்லும் இயல்புகள் எழுத்துப் பிசகாமல் நாராயண குருவுக்கும் பொருந்தக் கூடியவை. இந்தக் கவிதை எழுதப்பட்ட காலத்தில் நாணு சுவாமி கேரளத்தில் குரு நாராயணராக அறியப் பட்டிருந்தார். அவரது சிந்தனையின் சாரம் வெளிப்பட்ட ஒன்றாகச் சொல்லப் படும் ‘தெய்வ தசகம்’ என்ற படைப்பு வெளியாகிக் கவிஞராகவும் போற்றப் பட்டிருந்தார். பாரதி எழுதிய காந்தி பஞ்சகம் இதற்கெல்லாம் சில ஆண்டு களுக்குப் பின்னர் எழுதப்பட்டது. காலத்தால் பிற்பட்டது. இன்னொரு ஆளுமையைப் பற்றிப் பேசப்பட்டது என்பதெல்லாம் இருந்தாலும் பாரதி சொல்லும் குணங்களான தன்னுயிர்போலப் பிறன் உயிரைக் கணித்தவர்; பூமியில் உள்ள உயிர்கள் யாவும் கடவு:ளின் வடிவம் என்று உணர்ந்தவர் நாராயண குரு என்பதால் இந்தப் புகழ் அவருக்கும் பொருந்தும். அரசியல் விடுதலையை முன்னிருத்திச் செயல்பட்ட காந்தி கைக்கொண்ட ஒன்றை சமூக விடுதலைக்காகப் போராடிய நாராயண குருவும் முன்னமே கொண்டிருந்தார். அதற்கு அவரை ஊக்கு வித்தது பாரதி குறிப்பிடும் ‘மெய்ஞ் ஞானத் துணிவு’ என்று நம்புகிறேன்.

 

நாராயண குருவின் ஆன்மீகத்தின் அடிப்படை இந்த மெய்ஞ் ஞானத் துணிவு என்று குறிப்பிடுவது சரியாக இருக்கும். ‘அவனவன் தன் சுகத்துக்காக விரும்புவது பிறனொருவனின் சுகத்துகாகவும் வரவேண்டும்’ ( அவனவன் ஆத்மசுகத்தினு ஆசரிக்குன்னது அபரன்டெ சுகத்தினாய் வரேணம் ) என்ற குரு வாசகம் மெய்ஞ் ஞானத் துணிவின் அடையாளம். ஆன்மீகவாதி என்ற நிலையில்  அத்வைத தத்துவத்தைக் கடைப்பிடித்தவராகக் கருதப்படுபவர் நாராயண குரு. அவரே அப்படிக் கருதியவர். தோற்றத்தில் பலப்பலவாகத் தெரியும் எல்லாம் ஒன்றே என்பதுதான் அத்வைதத்தின் அடிப்படை. எல்லா உயிர்களும் ஒன்று. நம்முடைய மாயையால்தான் அவை வெவ்வேறாகத் தெரிகின்றன. இந்த மாயை கலைந்துவிட்டால் வேற்றுமைகள் இல்லாமல் போய்விடும் என்பது அத்வைதத்தின் விளக்கம்.

‘ஆழியும் திரையும் காற்றும்

ஆழமும்போல நாங்களும்

மாயையும் நின் மகிமையும்

நீயும் என் உள்ளத்தில் ஒன்றாகுக

என்று தெய்வ தசகத்தின் நான்காவது பாடலில் குரு குறிப்பிடுவது அதைத் தான். எல்லாமறக் கலந்த ஒன்றுக்கு பேதமில்லை என்பதைத்தான். 

 

இதை உபதேசமாகச் சொன்னவர்களே பெரும்பாலும் அதிகம். ஆதி சங்கரர் முதல் இன்றைய ஆன்மீக விற்பனையாளர்கள்வரை. இதை நடைமுறை யில் காட்டிய பெருமை நாராயண குருவுக்கு உரியது. அவரது வாழ்வே அதற்கு எடுத்துக்காட்டு.

 

மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் எந்த வேற்றுமையும் இல்லை என்று சொன்னது மட்டுமல்லாமல் அதைச் செயலிலும் காட்டியவர் நாராயண குரு. இதைத் தத்துவ அறிவுநிலை என்பதைவிடக் கவித்துவ உணர்வுநிலையாகக்  காணவே விரும்புகிறேன். தத்துவத்தில் சிந்திக்கும் திறனில்லாத ஒன்றுக்கு இடமில்லை. தர்க்கத்துக்கு விளங்காத ஒன்றுக்கு தகுதியில்லை. ஆனால் கவிதையில் எல்லாவற்றுக்கும் இடம் உண்டு. எல்லாமும் கவிதைக்கான உயிர்ப் பொருள்கள்தாம். தன்னை இன்னொன்றாகவும் இன்னொன்றைத் தானாகவும் மாற்றுகிற கவிதையின் தர்க்கத்தையே நாராயண குரு ஆன்மீகத்தின் வெளிப்பாடாக ஆக்கினார். ஆற்றில் மூழ்கிக் கிடந்த ஒரு கல். அந்த வெறும் கல் தத்துவக் கண்ணோட்டத்தில் நிச்சலனமான பொருள். ஆனால் அதைக் கடவுளாகக் கண்டதும் காணச் செய்ததும் அவருக்குள் ஆழ்ந்திருந்த உணர்வு நிலைதான். கவித்துவ நிலைதான். எல்லாரையும் எல்லாவற்றையும் நிகரானதாகக் கொண்ட மனநிலையிலிருந்துதான் மனிதனுக்கு ஒரு கடவுள் போதும் என்று சொல்ல அவரால் முடிந்தது. ‘ஒரு ஜாதி ஒரு மதம் ஒரு தெய்வம் மனிதனுக்கு'ப் போதும் என்று சொன்னதும் தன்னில் பிறரையும் பிறரில் தன்னையும் காணும் உணர்வு நிலையில்தான். அவரது கவித்துவம் முகிழ்ப்பது அந்தத் திட்பமான தருணத்தில்தான் என்று கருதுகிறேன். சிற்பக் கலையின் அத்தனை சிறப்புகளும் வெளிப்படும் உருவச் சிலையின் இடத்தில் எளிய கல்லைக் கடவுளாக நிறுவியதுதான் அவரது பெருமைக்கு உரிய கவிச்செயல். ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றைக் காலத்தின் அடையாளமாகக் கண்டால் அதில் கிடக்கும் கல்லை அழிவற்ற ஒன்றின் சின்னமாகக் கருதலாம். நிலையில்லாத ஒன்றுக்குள் வாழ்வின் அடையாளத்தைப் பிரதிஷ்டை செய்த உணர்வைக் கவிதையிலிருந்துதானே பெற்றிருப்பார்?.

 

ஆன்மீகவாதிகளாக அறியப்பட்ட பலரும் கவிஞர்களாகவும் இருந்திருக் கிறார்கள். அறியப் பட்டவர்கள்தாம். அவர்களிடமிருந்து நாராயண குருவை வேறுபடுத்துவதாக ஒரு அம்சத்தைக் கருதுகிறேன். அது மரபார்ந்த ஆன்மீகவாதிகள் கடவுளிடம் மனிதர்களைக் கொண்டு சேர்க்க உபாயங்களை முன்வைத்தார்கள். மாறாக குரு மனிதர்களிடையில் கடவுளைக் காண விரும்பினார் என்பது. நிலவில் மனிதன் உலவுவது அரிய சாதனைதான். ஆனால் அதைவிட நிலவின் ஒளியில் எல்லா மானுடர்களும் பிரகாசிப்பது மேலானது. மகத்தானது. இதை ஒரு கவித்துவக் கற்பனையாகச் சிந்தித்தால் குருவின் கவிமனம் விளங்கும். அந்த நிலைதான் அவரிடமிருந்து ‘மதம் ஏதாயாலும் மனுஷன் நன்னாயால் மதி’ ( மதம் எதுவானாலும் மனிதன் மேம்பட்டால் போதும்) என்ற எளிய வாசகமாக வெளிப்படுகிறது. அவர் இங்கே முன்னுரிமை அளிப்பது மதத்துக்கு அல்ல; மனிதனுக்குத்தான். இதைக் குறிப்பிடும்போது கூடவே பாரதியின் வரியொன்றும்நினைவுக்கு வருகிறது. ‘பல பித்த மதங்களிலே தடுமாறி பெருமை அழிப்பீரோ?’ என்ற வரி. பாரதி முதன்மையளிப்பதும் மதத்துக்கல்ல; மனிதர்களுக்குத்தான்.

 

நாராயண குருவைப் பற்றிய பேச்சில் பாரதி இடம் பெறுவது உங்களுக்கு வியப்பை அளிக்கலாம். அதற்கு வரலாற்று அடிப்படையிலான காரணங்கள் சில இருக்கின்றன. பாரதி பிறந்த காலத்துக்கு 26 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து அவர் மறைந்து  ஏழு ஆண்டுகளுக்குப் பின் மறைந்தவர் நாராயண குரு. இருவரும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு நேர்ந்திருக்கவில்லை. இரண்டு நாடோடிகள் சந்தித்துக் கொள்வது அரிதான செயல்தான். ஆனால் தமிழ் உலகத்துக்கு நாராயண குருவை அறிமுகப்படுத்திய முதல் ஆளுமை பாரதி என்பது வியப்பளிக்கும் செய்தி.

 

நாராயண குரு பின்பற்றிய அத்வைதம் இந்து மதத்தில் அடங்கியது என்று சொல்லப்படுகிறது. அதை குருவும் மறுத்ததில்லை. பிற்காலத்தில் அவர் பிரதிஷ்டை செய்ததெல்லாம் இந்துக் கடவுள்களின் பிரதிமைகள் என்பதிலிருந்தே இது புரியும். ஆனால் உண்மையில் நாராயண குரு இந்து மதச் சாமியாராக இருக்கவில்லை என்பதை எடுத்துச் சொன்னவர் பாரதி. தனது கட்டுரைகளில்  இதைச் சொல்கிறார். சரியாகச் சொன்னால் கேரளம் மட்டுமே அறிந்திருந்த ஸ்ரீ நாராயண குருவை பாரதியே  தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். கேரளத்தைப் பற்றி பாரதி ஆறு கட்டுரைகளில் குறிப்பிடுகிறார். அவற்றில் மூன்றில் பேசப்படும் பாத்திரமாக இருப்பவர் நாராயண குரு. குருவை ஸ்ரீ நாராயண ஸ்வாமி என்று பாரதி குறிப்பிடுகிறார்.  ஒரு கட்டுரையில் அவர் தெரிவிக்கும் விவரம் நாராயண குரு இந்து மதத்தைக் கடந்து சென்றிருப்பதைச் சொல்கிறது. ஆலுவா கல்லூரியில் முஸ்லிம் மாணவன் ஒருவன் சமஸ்கிருதம் கற்பதைப் பற்றி எழுதுகிறார் பாரதி. அதற்குக் காரணகர்த்தா ஸ்ரீ நாராயண ஸ்வாமி என்றும் பாராட்டுகிறார்.

 

நாராயண குருவைப் பற்றி யோசிக்கும் சந்தர்ப்பங்களில், அவரது படைப்புகளை வாசிக்கும் வேளைகளில், தவிர்க்க இயலாமல் பாரதி குறுக்கிடுவதற்குத் தனிப்பட்ட காரணம் எனக்கு இருக்கிறது. நாராயண குரு என்ற பெயரை, அவரது ஆளுமையைத் தெரிந்து கொண்டது பாரதி வாயிலாகவே என்பதே காரணம். இருவரும் அத்வைத சித்தாந்தத்தின் நடைமுறையாளர்கள். அவர்களது சிந்தனை மையங்கொண்ட இடம் சித்தாந்தங்களுக்கும் மதங்களுக்கும் அப்பாற்பட்ட சுதந்திரமான ஒளி பொருந்திய பகுதி. கவிதையும் கலைகளும் அந்த இடத்தைத்தான் இலக்காகக் கொள்கின்றன. ஏனெனில் அந்த மையத்தில்தான் மனிதர் களையும் சராசரங்களையும் இணக்கமாகக் காண்முடிகிறது. இந்த மானுட இணக்கமே நாராயணன் என்ற குருவை நிறுவுகிறது. அதுவே அவரது கவிதையின் ஊற்று முகமாகவும் பெருகுகிறது.

 

கவிஞராக நாராயண குருவை அறிய நேர்ந்த சம்பவத்தையும் இங்கே பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன். தனிப்பட்ட அனுபவம் அது. நான் மலையாளம் அதிகம் புழங்காத மலையாளிக் குடும்பத்தில் பிறந்தவன். தமிழில் பிறந்து தமிழுடன் வளர்ந்து தமிழால் வாழ்பவன். என்னைச் சிறுவயதில் வளர்த்தவர் என்னுடைய அத்தை. அப்பாவின் அக்கா. எங்கள் குடும்பத்துக்கு மாறாக அவர் தனி மலையாளியாக அதன் நல்லதும் கெட்டதுமான பழக்க வழக்கங்களுடன் வாழ்ந்தவர். மாலையில் விளக்கேற்றி வைத்ததும்  நாராயணீயத்திலிருந்தோ ஞானப் பானையிலிருந்தோ வேறு ஏதாவது பக்தி இலக்கியத்திலிருந்தோ பாடலைச் சொல்வதும் சுலோகங்களைப் பாராயணம் செய்வதும் அவருடைய பழக்கம். மலையாளம் தெரிந்த அதே அளவுக்குத் தமிழும் தெரியும். ஆகவே அவ்வப்போது தமிழ்ப்பாடல்களும் பாடப்படும். அப்படி ஒருநாள் அவர் பாடக் கேட்ட பாடல் ஒன்று என்னை மிகவும் ஈர்த்தது. அன்றைக்கு அத்தைக்குச் சஞ்சலம் முட்டி நின்ற நாளாக இருந்திருக்க வேண்டும். ‘தெய்வமே காத்து கொள்கங்ஙு கைவிடாதிங்ஙு ஞங்களெ’ என்ற இரண்டு வரிகளை மட்டும் கண்ணீர் வழியத் திரும்பத் திரும்பப் பாடிக் கொண்டிருந்தார். எனக்கும் துக்கம் தொண்டையை நெரித்தது. இந்த நிகழ்ச்சிக்குச் சில நாட்கள் பின்பு தற்செயலாக ஒரு படம் கைக்குக் கிடைத்தது. பளபளப்பான தாளில் அச்சிட்ட வண்ணப் படம். படத்தில் பெரியவர் ஒருவர் அமர்ந்திருந்தார். மழிக்கப்பட்டுப் பாதிவளர்ந்த தலைமுடி. மழிக்காத முகத்தில் குற்றுத் தாடி. காவிப் போர்வையுடன் அமர்ந்திருக்கும் படம். அந்தக் கண்கள் என்னைப் பார்ப்பது போலத் தென்பட்ட அதேசமயத்தில் என்னைத் தாண்டியும் பார்ப்பதுபோல சுடர்கொண்டிருந்தன. தலைக்குப் பின்புறம் ஒளிவட்டம்  இருந்தது. தலைக்குப் பின்னால் ஒளிவட்டமிருந்தால் நிச்சயம் கடவுளாகத்தானே இருக்க முடியும். எனவே படத்தை சுவரில் அத்தை மாட்டியிருந்த மற்ற தெய்வப் படங்களுக்கு இடையில் வைத்தேன். அத்தை கோபித்துக் கொண்டார்.

’இவர் படத்தையெல்லாம் நாம் நம் வீட்டில் வைக்கக்கூடாது’ என்றார். 

‘யார் இவர்? என்று கேட்டேன். 

‘நாராயண குரு. நான் எப்போதும் பாடுவேனே ஒரு பாட்டு. தெய்வமே காத்துகொள்கங்ஙு என்று. அந்தப் பாட்டை எழுதினவர் அவர்தான்.’ என்று பதில் சொன்னார்.

‘நீங்கள் அழுதுகொண்டே பாடுகிற பாட்டுத்தானே?’ என்று மறுபடியும் கேட்டேன்.

‘ஆமாம்’ என்றார் அத்தை. 

‘நீங்கள் உருகிப் பாடுகிற பாட்டை எழுதியவர் படத்தை வைத்தால் என்ன தப்பு?’ என்றேன். 


அத்தை பதில் சொல்லவில்லை. ஆனால் மாமாவிடம் சொல்லி அந்தப் படத்தைக் கண்ணாடிச் சட்டமிட்டு வாங்கி முப்பத்து முக்கோடி தெய்வங் களுக்கு நடுவில் மாட்டி வைத்தார். நாராயண குரு அப்படியாக எங்கள் வீட்டிலும் என்னுடைய மனதிலும் குடியேறினார். ஊர்களும் வீடுகளும் மாறிப் போன பின்பும் மரணம்வரையும் அத்தையின் கடவுள் வரிசையில் குரு வீற்றிருந்தார்.

 

நாராயண குருவை முதன்முதலில் அறிந்தது கவிஞராகவே. அவரது பன்முக ஆளுமையில் அதுவும் முக்கியமானது. இறுதிக் காலத்துக்குச் சில ஆண்டுகள் முன்புவரையும்  கவிதையுடனான உறவைக்  கைவிடவில்லை என்று அவருடைய வரலாறு தெரிவிக்கிறது. அவருடைய வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் அவர் கவிஞராகவே வாழ்ந்திருக்கிறார். டாக்டர், சுகுமார் அழீக்கோடு குருவின் வாழ்க்கையை மூன்று கட்டங்களாகப் பகுக்கிறார். அவதூதராக வாழ்ந்த காலம், தவமுனியாக வாழ்ந்த காலம், அனுபூதி நிலையை – அனுபவித்த அறிந்த நிலையை – அடைந்த காலம் என்று மூன்று. இந்த மூன்று காலங்களிலும் குரு கவிதை இயற்றும் செயலில் ஈடுபட்டிருந்திருக்கிறார். அந்த மூன்று காலங்களும் அவரது கவிதைகளில் இயல்பாகவே வெளிப்படுகின்றன. 


முதலாவது கட்டத்திலிருந்து  மூன்றாவது கட்டத்துக்குச் செல்லும்போது உண்டான நிலைகள் கவிதையின் வளர்ச்சியையும் ஆன்மீக முன்னேற்றத் தையும் காட்டுகின்றன.அவதூத நிலையிலும் தவநிலையிலும் இயற்றியவை அனுபூதி நிலையை அடைவதற்கான படிநிலைகளாகக் காணப்படுகின்றன. அனுபவமே கவிதையை உருவாக்குகிறது என்ற ஆகப் பழைய, ஆனால் என்றென்றும் நிரந்தரம் பெற்ற இலக்கியக் கருத்துக்கு இது வலுவூட்டுகிறது.

 

அவதூத காலங்களில் குரு படைத்த கவிதைகள் அனைத்தும் நற்குணங் களைப் போற்றுபவை. தெய்வங்களைத் துதிப்பவை. இவை அனைத்தும் பக்தியை உள்ளடக்கமாகக் கொண்டவை. சந்தமும் வர்ணனையும் நிறைந்தவை. அலங்காரச் சுமை மிகுந்தவை. சில சமயங்களில்  அனுபவத்தைப் பின்னுக்கு தள்ளிவிட்டுச் சொற்களுக்குப் பின்னால் ஓடுபவை. வார்த்தை ஜாலத்தில் திளைப்பவை. சொற்களின் ஓசையால் கவித்துவம் பெறுபவையே தவிர பொருளின் ஆழத்தால் கவிதையானவை அல்ல.

 

குரு இயற்றிய ஸ்தோத்திரப் பாடல்களில் இதைக் காணலாம். அவற்றில் அமைந்திருப்பது ஒரு பக்குவமற்ற கவிஞனின் சொல் விளையாட்டு. ஷண்முக ஸ்தோத்திரத்தில் இதைப் பார்க்கலாம். அ, ஆ. இ. ஈ என்று தொடங்கிச் செல்லும் பாடல்கள் 'ரு' (ஹ்ரு) என்ற எழுத்தை அடைந்ததும் தடுமாறி விடுகின்றன. இவற்றை அவதூத எக்களிப்பின் வெளிப்பாடுகளாகச் சொல்லலாம். ஊற்றிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் காட்டாற்றைப் போன்றவை இவை.

தூய திங்கட்பிறையும் திருமுடியடியில்

பாம்பெலும்பு உம்பராறும்

திருச்செம்பொன் சிகையுள் திருகி ஒளி

சிந்திச்சிதறும் அந்திச்செம்மையும்

நாமப்பொட்டு இணைந்த நெற்றியில்

சிறுபிறைக்கீற்றும் கார்வில்லும், வெல்லும் அரிய

புருவக்கொடியும் அடியவன் அகக்கண்

முனையால் ஒருமுறை காண்குவேன்.

இது ஷண்முக தசகத்தின் இரண்டாவது பாடல். முருகனை அலங்கார ரூபனாகப் பார்க்கும் பக்தனின் ஆசையைச் சொல்கிறது. அலங்காரமான வார்த்தைகளிலும் துடிப்பான ஓசையிலும் சொல்கிறது. இது ஓசையின் கவிதை. பக்தியின் கவிதை. இதில் தன் அனுபவத்தின் எந்தத் துளியும் இடம்பெறுவதில்லை. குருவின் அவதூத காலக் கவிதைகள் மிகுதியும் மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்த தறுவாயில் இயற்றப்பட்டவை. புறத் தேவைகளுக்காக உருவானவை. அதிகமும் அன்றைய காலத்தில் அவருக்கு அறிமுகமாகியிருந்த தமிழ்ப் பக்திக் கவிதைகளின் அடியொற்றி இயற்றப் பட்டவை. அவற்றில் ஒரு கவிஞரைக் காண்பது அரிது.

 

குருவின் இரண்டாம் கட்டமான தவக் காலக் கவிதைகள் சமதளத்தில் ஓடும் நதிக்கு ஒப்பானவை. முன்கட்டக் கவிதைகள் கொண்டிருந்த பல இயல்புகளை இந்தக் காலக் கவிதைகள் கைவிடுகின்றன. தெய்வங்களைத் துதிக்கும் கவிதைகள் மிக அரிதாகவே உள்ளன. தனக்குள் நிகழும் அனுபவங்களைச் சொல்லும் கவிதைகளாக இவை மாறுகின்றன. ஒரு தீர்க்கதரிசியின் குரலைப் பிரதிபலிக்கின்றன. தனக்குள் நிகழும் மாற்றத்தில் பெற்ற மெய்ஞ் ஞானத்தின் மின்னல்கள் கவித்துவம் பெறுகின்றன. முன்பு குறிப்பிட்ட மெய்ஞ் ஞானத் துணிவு  வெளிப்படுவது இந்தக் கட்டக் கவிதைகளில்தான்.

 

கடவுளற்ற ஓர் உலகை அல்லது மனிதன் தனக்குள் கடவுளைத் தேடும் ஒரு உலகை குரு கண்டடைகிறார். ‘ ஞானம் வெளியே தனித்து வாராது கண் வேண்டும் வருதற்கு. கண்ணுக்கு வெளிச்சம்போல’ என்ற வரிகளுக்கு வரும்போது ஆன்மீக நோக்கில் அத்வைதியாகவும் இலக்கியப் பார்வையில் கவிதையில் விற்பன்னராகவும் மாறுகிறார். இந்தக் கட்டமே மூன்றாவது காலமான, அனுபூதிக் காலத்துக்கு அழைத்துச் செல்கிறது. நாராயண குரு மகத்தான கவிஞராகப் பரிணமிப்பது அங்குதான். அவரது ஆகச் சிறந்த கவிதைகள், அவை ஆகச் சிறந்த ஆன்மீகப் படைப்புகளும் கூட, வெளிப் படுவது அப்போதுதான். கடலின் பரப்பும் ஆழமும் கொண்ட ஆளுமை யாகவும் ஆன்மீகவாதியாகவும் கவிஞராகவும் பேருருவம் கொள்கிறார் குரு.

 

குரு நாராயணரின் அனுபூதிக் காலக் கவிதைகள் கடவுள்களைத் துறக் கின்றன. அவர்களைப் புகழும் மொழியைத் துறக்கின்றன. தன் வெளிப் பாட்டின் வெளிச்சத்தைப் பரப்புகின்றன. ஆன்மீகம் இந்த நிலையை ஆத்ம சாட்சாத்காரம் என்கிறது. கவிதை தன்னை வெளிப்படுத்தல் என்கிறது. இரண்டும் ஆழ்ந்த பொருளில் ஒன்றுதான். அதனால்தான் ஆன்மீகவாதிகள் கவிதையை நாடுகிறார்கள். கவிஞர்கள் ஆன்மாவின் தூதுவர்களாகிறார்கள். குருவின் அனுபூதிக் கவிதைகள் பருண்மையிலிருந்து நுட்பத்துக்குச் செல்கின்றன. புற எதார்த்தங்களிருந்து அக உண்மைகளுக்குள் புகுகின்றன. தெய்வீகத்திலிருந்து மானுடத்துக்கு மாறுகின்றன. அவற்றில் கடவுளின் இடத்தை மனிதன் எடுத்துக்கொள்கிறான். அவதூத காலக் கவிதைகளிலும் தவக் காலக் கவிதைகளிலும் தெய்வத்திடம் இறைஞ்சுபவனாகவும் வேண்டுபவனாகவும் சித்தரிக்கப்பட்ட மனிதன் தன்னைக் காப்பாற்றும் கடமை அவருடையது என்று விதி வகுக்கிறான். ஆன்மீகப் பொருளில் அத்வைதியின் பார்வையில் எல்லாரும் கடவுள்கள். எல்லா மனிதர்களும் கடவுள்கள். அப்படியானால் ஒரு மனிதனைக் காப்பாற்றக் கடமைப்பட்டவன் இன்னொரு மனிதன் தானே?

தெய்வமே காத்துகொள்கங்ஙு

கைவிடாதி்ங்ங்கு ஞங்ஙளெ

என்று தெய்வதசகத்தில் அவர் சொல்வது கடவுளிடம் அல்ல; மனிதர்களிடம் என்று காணவே விரும்புகிறேன். இந்த மானுட இணக்கத்தையே ஆன்மீகவாதியாகவும் சீர்திருத்தவாதியாகவும் குரு நாராயணர் காண்கிறார். கவி நாராயணரின் கவிதை நோக்கும் கவிதைப் பொருளும் இந்த மானுடக் கருணைதான்  என்றும் நம்புகிறேன்.

 

நாராயண குரு கவிதைகளின் தன்மையைப் புரிந்துகொள்ளும் முயற்சியின் விளைவாகவே இந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன். கடல் நீரை சிப்பியில் முகந்தெடுப்பது போன்ற செயல் இது. எனினும் சிப்பிக்குள் ஒடுங்கிய நீரும் கடலின் பகுதிதானே?

 

நாராயண குரு பிறந்து 136 ஆண்டுகளும் மறைந்து 98 ஆண்டுகளும் அவரது முதல் கவிதை இயற்றப்பட்டு 128 ஆண்டுகளும் கடந்து விட்டன. இன்று நவீனமான காலத்திலிருந்து அந்தக் கவிதைகளை வாசிக்குப் போது சில எண்ணங்கள் எழுகின்றன. கவிதையின் தரிசனம் பற்றியும் கவிதையாக்கம் பற்றியும். கவிஞராக குரு செயலாற்றிய முறையைப் பற்றி்யும் எழுகிற கருத்துக்கள்.

 

குருவின் படைப்புகளை வாசிக்கும் ஒருவர் ஒட்டு மொத்தமாக அடையும் உணர்வு கருணை என்பதை அறிய முடியும். அந்தக் கருணையை நிலை நிறுத்துவதற்கான சிந்தனைகளே கவிதையின் பார்வையை நிர்ணயிக் கின்றன. அவரது படைப்புகளில் அனுகம்ப என்ற சொல்லையும் பொருளையும் பார்க்கலாம். தெய்வத்தை அவர் காண்பது தயா சிந்து என்றுதான். சகல ஜீவராசிகளையும் தனக்குள் காண்கிற காட்சியையே அவரது கவிதையின் தரிசனமாகத் தோன்றுகிறது. இன்றைக்கும் தேவையானது இந்த தன்வயப் படுத்தலும் தரிசனமும். அவைதான் குருவின் கவிதைகளை சமகாலப் பொருத்தமுடையதாக்குகின்றன.   

 

கவிதைகளில் கையாண்டிருக்கும் உத்திகள் சில அவரை நவீனமானவரா கவும் காலத்துக்கு முன் நடந்தவராகவும் காட்டுகிறது. தெய்வதசகத்தின் முதல் கண்ணியிலிருந்தே இதற்கு உதாரணம் காட்டலாம்.

தெய்வமே காத்துகொள்கங்ஙு

கைவிடாதி்ங்ங்கு ஞங்ஙளெ

நாவிகன் நீ பவாப்திக்கோர்

ஆவிதன் தோணி நின் பதம்.

பவக் கடலை – பிறவிக் கடலை - நீந்த உதவும் வாகனத்துக்கு உவமையாக அவர் குறிப்பிடுவது ஆவித் தோணியை. நீராவிப் படகை. ஸ்டீம் போட்டை. அவர் காலத்தில் கவிதையாக்கத்தில் ஈடுபட்டிருந்த எந்தக் கவிஞரும் இது போன்ற உவமையை நிச்சயம் கையாண்டிருக்க முடியாது. சுப்ரமண்ய கீர்த்தனத்தின் நான்காவது பாடலில் உடலை எண் சாண் ரோட்டுடன் ஒப்பிடுகிறார். ‘எண்சாண் ரோட்டூடே உள்ள சகடம்’ என்ற வரி அவர் காலத்துக்கு மிகப் புதியதாகவே இருக்க வேண்டும். கவிஞன் அவனது காலத்தின் மொழியுடனும் வாழ்க்கையுடனும் கொண்ட உறவின் அடையாளம் இல்லையா இது?

 

நாராயண குரு பன்முகமானவர். அதைப் போலவே கவி நாராயணரும் பன்முகமானவர். சமஸ்கிருதம், மலையாளம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் கவிதைகளை இயற்றியிருக்கிறார். சமஸ்கிருத ஸ்லோகங் களையும் மலையாளப் படைப்புகளையும் தமிழ்ச் செய்யுள்களையும் இயற்றியிருக்கிறார். திருக்குறளுக்கு முதல் மலையாள மொழிபெயர்ப்பைச் செய்தவர் அவர்தான். தேவாரத்துக்கு நிகரான பதிகங்களை இயற்றி யிருக்கிறார். அழுத்தமாகச் சொன்னால் தமிழ்க் கவிதை மரபையோ பண்பாட்டு மரபையோ பக்தி மரபையோ தெரிந்துகொள்ளாமல் குருவை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. தமிழ்க் கவிதையில் செயல் படுபவனாக என்னை மிகவும் கவர்ந்தவை அவரது தமிழ் ஆக்கங்கள். அவதூத காலக் கவிதைகளில் குரு அடியொற்றி இயற்றியவை தேவாரம், திருவாசகம், பட்டினத்தார், சித்தர் பாடல்களையே. அவரடு இரண்டாம் கட்டக் கவிதைகளில் சிறந்ததான குண்டலினிப் பாட்டு சித்தர் பாடல்களின்  வடிவும் வனப்பும் கொண்டது. 

 

ஆடு பாம்பே புனந்தேடு  பாம்பே – அருள்

ஆனந்தக்கூத்து கண்டுஆடு பாம்பே

திங்களும் கொன்றையும் சூடும் ஈசன் – பத

பங்கயஞ் சேர்ந்துநின் றாடு பாம்பே

வெண்ணீ றணீந்து விளங்கும் திருமேனி

கண்ணீரொழுகக் கண்டாடு பாம்பே

இது மலையாளப் பாடலின் தமிழாக்கம். இதை நாராயண சித்தர் இயற்றியது என்று குறிப்பிட்டால் குருவை 19 ஆவது சித்தராகத் தமிழ் இலக்கியம் ஏற்றுக் கொள்ளும் என்றே நினைக்கிறேன்.

 

'ஒவ்வொன்றாய் எண்ணித் தொட்டு

எண்ணிய பொருள் முடிந்ததும்

மிஞ்சி நிற்கும் பார்வைபோல்

உனக்குள்ளே துடிப்பாக வேண்டும் ' என்ற வரிகளை எழுதிய குரு அதன் சான்றாகவும் கவிதையில் இருந்தார். வாழ் நாள் முழுவதும் கவிதைகளை இயற்றியவர் அந்தப் பொருள் முடிந்ததும் பார்வையின் துடிப்பாக மட்டுமே தன்னை வைத்துக் கொண்டார். ஆன்மீகக் கவிஞர்கள் பலரும் தமது கவிதைகளில் அவர்களுடைய முத்திரையை அடையாளமிட்டிருக்கிறார்கள். கபீர், லால்தெத், மீரா, பசவண்ணர் போன்ற கவிஞானிகளின் பாடல்களில் அவர்களது பெயரையோ அடையாளச் சொற்களையோ காணலாம். ஏறத்தாழ அறுபதுக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்த நாராயண குரு எந்த இடத்திலும் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ளவில்லை என்பது வியப்பளிக்கிறது. அவர் கவிதைகளை இயற்றியதோடு சரி. அவற்றைப் பாதுகாக்க முற்பட்டதில்லை. எழுதியவனின் அடையாளமல்ல கவிதைக்கு முக்கியம். அதைக் கடந்த பொருள்தான் முதன்மையானது என்று அவர் எண்ணியிருக்கலாம். அவர் கவிதை எழுதியதெல்லாம் பயணியாகச் சென்று தங்கிய இடங்களில் கிடைத்த காகிதங்களில் எழுதி அங்கேயே விட்டுச் சென்றுமிருக்கிறார். ஒரு கவிஞனின் படைப்பு முற்றுப் பெற்றதும் அவனுக்கு மட்டும் உரியதல்ல என்ற நவீன இலக்கியக் கோட்பாட்டை நாராயண குரு தீர்க்க தரிசனத்தில் அறிந்திருக்க வேண்டும். அவரை உபசரித்தவர்களோ அல்லது அணுக்கத் தொண்டர்களோதான் குருவின் படைப்புகளைப் பாதுகாத்து நமக்கு அளித்திருக்கிறார்கள். அவர்களை நன்றியுடன் வணங்குகிறேன்.

 

ஸ்ரீ நாராயண குருவின்டெ சம்பூர்ண க்ருதிகள்’ நூலுக்கு முன்னுரை எழுதிய டாக்டர் சுகுமார் அழிக்கோடு அந்தப் படைப்புகளை நவீன கங்கை என்று குறிப்பிடுகிறார். உண்மைதான். கங்கையும் கவிதையும் வற்றாதவை. குருவின் கவிதைகளும் வற்றாதவை. வற்றிவிடக் கூடாதவை. ஏனெனில் அந்தக் கங்கை பெருக்கெடுப்பது மானுடக் கருணை என்ற ஊற்றிலிருந்து அல்லவா?




கோவை, ஸ்ரீ நாராயண குரு கல்லூரி ஆதரவில் நடைபெற்ற ஸ்ரீ நாராயணகுரு - வாழ்வும் வாக்கும் மூன்று நாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் இரண்டாம் நாள் அமர்வில் (05.10.2021) ஆற்றிய உரை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வெள்ளி, 1 அக்டோபர், 2021

பொன்மான்












 

நேற்றைக்கு முன் தினம். செல்லத் தூறல் விழுந்து கொண்டிருந்தது. ஆனி ஆடியில் பொழிந்திருக்க வேண்டிய சாரல் மழை தாமதமாக வந்து சேர்ந்திருந்தது. மாடியறை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஜன்னலுக்கு அப்பால் தெரியும் மின் கம்பிகளில் நீர் மணிகள் திரண்டு தொங்கின. சில துளிகள் உதிர்ந்தபோது பார்வையை நகர்த்தினேன். நீல நிறப் பறவை கம்பியில் அமர்ந்திருந்தது. முதலில் முகத்தை காட்டி உட்கார்ந்திருந்த பறவை சட்டென்று திரும்பி வாலைக்காட்டி அமர்ந்தது. ட்ரூவ் என்று ஒலியெழுப்பினேன். கேட்காத பாவனையில் மழையில் நனைந்து கொண்டிருந்தது. இன்னொரு ட்ரூவுக்குத் தலையை மட்டும் திருப்பி அலட்சியமாகக் கண்களை உருட்டிவிட்டுத் திரும்பவும் மழையில் நனைந்து கொண்டிருந்தது. கைபேசியை ஜன்னலுக்கு வெளியில் நீட்டிப் பிடித்து நாலைந்து படங்கள் எடுக்கும்வரை நீல வாலையும் சிறகையும் காட்டிப் போஸ் கொடுத்தது. மறுபடியும் ஒருதடவை ட்ரூவ் என்று சத்தம் கொடுத்தேன். உனக்கு வேறு வேலை இல்லை என்று வாலைக் குலுக்கிக் கம்பியிலிருந்து எவ்விப் பறந்தது. அதற்குள் மழையும் வலுத்தது. ஜன்னலை அடைத்து விட்டு நகர்ந்தேன்.
அது எங்கள் குடியிருப்புப் பகுதியில் அவ்வப்போது பார்க்கக் கிடைக்கும் பறவைதான். மீன்கொத்தி. முன்பு விளைமண்ணாகக் கிடந்த நிலம் இப்போது குடியிருப்பாக மாற்றப்பட்டிருக்கிறது. எனினும் அங்குமிங்குமாக நீரோட்டம் உள்ள பூமி. அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை திருவனந்தபுரத்துக்கும் கொல்லத்துக்கும் நீர்வழிப் போக்குவரத்து நடந்த பார்வதி புத்தனாறு கால்வாய் அருகில் இருக்கிறது. நீர் ஊறும் சதுப்பு. மழை நீரில் சிப்பிகளும் நத்தைகளும் பொடி மீன்களும் நீந்தும். அவற்றை இரை கொள்ள வரும் பறவைகளில் ஒன்றுதான் இந்த மீன்கொத்தி வகையறா.

எடுத்த படங்களை எந்த உத்தேசமும் இல்லாமல்தான் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தேன். நண்பர்கள் அம்பை, சேரன், தியடோர் பாஸ்கரன் மூவரும் பின்னூட்டம் இட்டார்கள். சேரன் அது குக்குறுவான் என்றார். பாஸ்கரன் மீன்கொத்தி என்றார். இரண்டையும் பார்த்ததில் பெயர்க் குழப்பம் ஏற்பட்டது. கேரளத்தின் புகழ் பெற்ற பறவையிலாளரான இந்து சூடனின் ‘ கேரளத்தில் பறவைகள்’, மற்றொரு பறவையியலாளரான சி.ரஹீமின் ‘ தென்னிந்தியப் பறவைகள்’ ஆகிய நூல்கள் சேகரிப்பில் இருக்கின்றன. அவற்றை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். அது மீன் கொத்திதான் என்று உறுதியானது. சிறகும் வாலும் நீல நிறம், வயிற்றுப் பகுதி காவி, மார்புப் பகுதியில் வெள்ளை, காதோரம் செம்பட்டையும் தவிட்டு நிறமும். ஆக நான் பார்த்தது மீன் கொத்தியைத்தான்.

பறவையை இனங்கண்ட மகிழ்ச்சியை விட அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது அதற்குக் கேரளத்தில் வழங்கும் விளிப்பெயர். அந்தப் பெயரைப் பல்லவியில் கொண்ட புகழ்பெற்ற திரைப்பாடலும் நினைவுக்கு வந்தது. வயலார் ராமவர்மா எழுதி சலீல் சௌதுரி இசையமைத்து யேசுதாஸும் மாதுரியும் பாடிய ‘நெல்லு’ படத்தின் பாடல். அதைக் கேட்கும் போதெல்லாம் பாட்டு முன்னிலைப் படுத்துவது இருகால் பறவையையா நாலுகால் விலங்கையா என்று தடுமாற்றம் ஏற்பட்டதுண்டு. ‘ நீலப் பொன்மானே, என்டெ நீலப் பொன்மானே’ என்று பாடலில் குறிப்பிடப்படுவது எது என்று குழம்பியதும் உண்டு. பல்லவியின் வரி அதைத் தெளிவாக்கும். ‘ வெயில் நெய்த புடைவை தருவாயா? என்று நாலு கால் மானிடம் கேட்க முடியாது. ஆகாயத்தில் உலவும் பறவையிடம் கேட்கலாம். ஏனெனில் மலையாளத்தில் மீன்கொத்திக்கு வழங்கும் சாதாரணப் பெயர் ‘பொன்மான்’.

இவையெல்லாம் இரண்டு நாட்களுக்கு முந்தைய சமாச்சாரங்களும் யோசனைகளும். இன்று காலை அறைக்குள் வந்து அமர்ந்தேன். ட்வீக் என்றொரு சத்தம். ஜன்னல் பக்கமாகப் பார்த்தேன். மார்பு வெள்ளை முந்தித் தெரிய நீல வாலைக் குடைந்து கொண்டு திட்டில் உட்கார்ந்திருந்தது ஒரு மீன்கொத்தி. முன்பு பிணக்கத்துடன் வாலைக் காட்டிய பறவை முக தரிசனம் அருளிக் கொண்டு உட்கார்ந்திருந்தது. ‘பொன் மானே’ என்று அழைத்ததும் தலையைக் குலுக்கியது. ‘பார்த்து விட்டாயா, போகட்டுமா?’ என்பதுபோல சின்ன உடலை அசைத்தது. ‘நீலப் பொன்மானே’ என்றதும் சரி என்று பறந்தது. பறந்துபோன பின்புதான் அதைப் படமெடுக்க மறந்தது உணர்வில் தட்டியது.


இன்று வந்தது பழைய பறவையா, இல்லை, புதிய பறவையா? தெரிய வில்லை. அன்று வந்த பறவைதான் இன்றும் வந்தி்ருக்க வேண்டும். அந்தப் பொன்மானுக்குத்தானே என்னை முன்னமே தெரியும்?