வெள்ளி, 25 ஜனவரி, 2019

செவ்வாய்க்கு மறுநாள் ஆனால் புதன்கிழமை அல்ல - முதல் பார்வை

புதிய கவிதைத் தொகுப்புக்கு வந்த முதல் எதிர்வினை இது. நண்பர் சிவராஜ் பாரதிக்கு மிக்க நன்றி.






ளவு என்பது எண்களால் தீர்மானிக்கப்படுவது அல்ல. அளவு என்ற வரையறை விரிவானது, ஆழமானது. கவிஞர் சுகுமாரனின் எழுத்துகளுக்கும் இது பொருந்தும். கவிதை என்பது உணர்வல்ல, அது ஒரு அனுபவம். படைப்புகள் உருவாவதில்லை, அவை வெளிப்படுகின்றன. கவிஞனின் மொழியாளுமையையும் கற்பனாவாதத்தையும் கருவியாகக் கொண்டு படைப்பு தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்கிறது. அதில் கவிஞனுக்கான இருப்பையும் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்கிறது. அப்படியொரு கவிதானுபவம் தான் "செவ்வாய்க்கு மறுநாள் ஆனால் புதன்கிழமை அல்ல".


அன்பிற்கும் மதிப்பிற்கும் மட்டுமல்ல கவிதைக்குமுரிய கவிஞர். சுகுமாரனின் ஏழாவது கவிதைத் தொகுப்பு இது. 46 கவிதைகளின் அரூப கணங்களைச் சுமக்கின்ற சிற்றுரு  நூல். "ஜியார்ஜியா ஓ' கீஃபி"யின் ஓவியம் கொண்ட அட்டை வடிவமைப்பே முழுமையான கவிதானுபவத்திற்கு வரவேற்பாய் அமைகிறது. நூல் முழுதும் கவிஞரின் கவிதாதிகாரம் தான்! ' சொற்கள் சுடர்க!' எனும் முன்னுரைக் கரையிலிருந்து கைப்பிடித்து அழைத்துச் சென்று 'கவிதை'க்குள் கால்நனைத்து, மெல்ல கடலுக்குள் இறக்கி, மூழ்கவைத்து நம்மை தனியே விட்டுவிட்டு அவர் மாயமாய் மறைந்துவிட்ட உணர்வு. நல்ல கவிதைக்கு தொடக்கம் இருக்கலாம், முடிவு இருக்கிறதா என்று தெரியவில்லை. சுகுமாரனின் கவிதைகள் முடிவதில்லை, அது மௌனமாய் (அ) ' செவி துளைக்கும் ஈனப்புலம்பலாய்' நமக்குள் பயணித்துக் கொண்டே இருக்கிறது.


"செவ்வாய்க்கு மறுநாள் ஆனால் புதன்கிழமை அல்ல" என்ற தலைப்பே என்னை பெரும் வியப்பில் ஆழ்த்தியது. முதன்முதலில் தலைப்பை படித்ததும், இதன்மூலம் என்ன சொல்ல வருகிறார் கவிஞர் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். கிழமைகளுக்கு நாம் அந்த பெயர் வைத்துவிட்டோம் என்பதனாலேயே அதை அந்தப் பெயரைக் கொண்டுதான் அழைக்கத் தேவையில்லை  என்று சொல்ல  வருகிறாரா? அல்லது செவ்'வாய்' என்பதைக் குறிக்கிறாரா என்று குமைந்து கொண்டிருந்தேன். கவிதையை படித்ததும் வேறு விதமாக புரிந்து கொண்டேன். மனிதனின் மரணத்துக்குப் பிறகு அவன் சூட்டிய கிழமைகளின் பெயர் என்னவாக இருக்கும் என்று நம்மை சிந்திக்க வைக்கிறார் கவிஞர் என்று தோன்றியது. இது சரியான புரிதலா என்றுகூட தெரியவில்லை. சுகுமாரனின் மொழி என்னை ஏளனமாகப் பார்க்கிறது. உன் அறிவுக்கெல்லாம் என் பொருள் எட்டிவிடும் என்று நீ நினைக்கும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டதா என்று புலம்புவது என் காதில் விழுகிறது.


தாமஸ் டிரான்ஸ்டோமரின் கவிதையை மேற்கோளாக காட்டி தன்னை விளக்க முற்படுகிறார் கவிஞர் சுகுமாரன். ஆனால் சுகுமாரனின் கவிதைகள் அவரை ஒதுக்கவோ வெளியே தள்ளவோ முயலவில்லை. அது அவருக்குள்ளேயே விதைந்து, முளைத்து, நெறித்து, தெறித்து விழுகிறது. வெளியே 'நிகழ்கால' கவிதையாய் விழாமல் உள்ளேயே 'வருங்கால' கவிதைக்கான விதையாய் விழுந்தது தான் அதிகம் என்று தோன்றுகிறது. 'கவிஞர் இசைக்கு' என்ற குறிப்புடன் அவர் எழுதியிருக்கும் கவிதையில், மகாகவி இசை நடைபெயர்ச்சி செய்கிறார், அவரோடு காற்றும் ஒளியும், புல்லும் புழுவும், புள்ளும் நாயும் பூனையும், மனிதர்களும் நடைப்பயிற்சி செல்கின்றன. அவ்வப்போது பிசாசும் கடவுளும் மகாகவி இசையுடன் நடைப்பயிற்சி செல்வதாக எழுதுகிறார். 

"......
வீடு திரும்பும்போது
கூட வந்தது பிசாசென்றால்
மகாகவி கவிதை எழுதுகிறார்
தெய்வமென்றால்
இசை சண்டை போடுகிறார்."

என்று முடிக்கிறார். நான் இதை இப்படியும் புரிந்து கொள்கிறேன். புனைவு என்பது பிசாசின் செயல், நேரடியான விவாதம் (சண்டை) என்பது கடவுளின் செயல். ஒரு கேள்வியும் எழுகிறது. பிசாசும் கடவுளும் அல்லாமல் பூனையுடனோ நாயுடனோ திரும்பி வந்தால், மகாகவி இசை என்ன செய்திருப்பார்? கவிஞர் சுகுமாரனுக்கே வெளிச்சம்! 


"ஹைக்கூ"வின் அழகியலை ஆச்சரியத்தை சுகுமாரன் தான் கட்டமைக்கும் அனைத்து வடிவமைப்புக்குள்ளும் கச்சிதமாக பொருத்துகிறார். அவருடைய கவிதைகள் முடிவதேயில்லை. ஒன்று அது எல்லையற்ற வெளிக்குள் நம்மை உலவவிடும் அல்லது மீண்டும் தொடக்கத்துக்கே அழைத்துவந்து அந்தாதி விளையாட்டு ஆடும். கவிதைகளின் இறுதி வரிகள் இத்தகைய அனுபவத்தைத் தான் தரும்.  'ஒரு சொல் இருந்தால்' என்ற கவிதையை
".....
ஆனால் 
அந்த சொல் இருக்கிறதே
கரைக்குக் கடல் தூரத்தில்..."

என்று முடித்திருக்கிறார். அந்தக் கரைக்கும் கடலுக்குமான தூரத்தில் நான் நெடுநேரம் தத்தளித்துக் கொண்டிருந்தேன். அதேபோல் "ஆழல்" என்ற கவிதையை ' அடையாக் கண்களுடன் ஆழலாம்' என்று முடித்திருப்பார். மொழி இவரது செல்லக் குழந்தையாகி, மிக அழகாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. 'ஆழல்' என்ற சொல்லுக்காகவே சுகுமாரனைக் கொண்டாடலாம். 


படைப்பு தன்னை சாதாரணமாய் வெளிப்படுத்த முனைந்தாலும், சுகுமாரனின் அசாதாரணம் விட்டுவிடவில்லை. "எனினும்" கவிதை எளிமையாக சாதாரணமாக தொடங்குகிற போதே, இப்படி தான் முடியும் என்பதும் ஊகிக்க முடிகிறது. ஆனால் இறுதிவரிக்கு முந்தைய வரியில் வெளிப்படுகிறது சுகுமாரனின் அசாதாரணம். முன்னுரையின் இடையிலும், பின்னட்டைக் குறிப்பின் கடையிலும் வரும் வரிகளோடு, "எனினும்" கவிதையின் இறுதிப்பகுதியை ஒப்பிட்டுப் பார்த்த நொடியில் சுகுமாரனின் அசாதாரண ஒளி பளிச்சிட்டது.


கவிஞரின் மீமெய்மையில் நம்முடைய பல கோட்பாடுகள், புரிதல்கள் எல்லாம் கட்டுடைகின்றன. எல்லா காலத்துக்குமான உண்மை என்ற ஒன்று இருக்கிறதா எனத் தெரியவில்லை. "வேதாந்திகளின் கைக்குச் சிக்காத கடவுள் போல" உண்மை நம் அறிவுக்கு சிக்காமல் காலத்துக்கேற்ற வடிவத்தை மாற்றிக் கொண்டு அலைகிறது. இதை புரியாதவர்கள் தேங்கிவிடுகிறார்கள், புரிந்தவர்கள் தொடர்ந்து பயணிக்கிறார்கள். "கடக்க முடியாமல் உறைந்தது நான்காம் காலம்", "நாளையை மறந்துவிட்ட நேற்றைய நேற்று", "செவிக்குத்தலின் அரை வெண்மை", "குடலிறக்கத்தின் வெளிர் மஞ்சள்", "திரைக்கடலாகும் குமிழ்", "பாயுமொளியாகும் வான்சுடர்" என பல்வேறு உண்மைகளைத் தேடி தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார் சுகுமாரன்.


எல்லா கவிதைகளையும் பற்றிச் சொல்வது நியாயமல்ல. ஒவ்வொருவருக்குமான உண்மைகளை, என் ஒருவனால் கண்டடைய முடியாது. அவரவர் உண்மைகள் அவரவருக்குத் தான் புலப்படும். கவிதை என்பது நேரடி உரையாடல் அல்ல, மனதுக்குப் பிடித்த எதிர்பாலினத்தவரை மறைமுகமாக ரசிக்கும் கலையே கவிதை (என்பது என் கருத்து).

".........
முந்தானைக் குடைநிழலும் தணிக்காத
வெயிலில் துவண்ட இடுப்புச் சிசு..." வை நான் ரசித்தது போன்று வேறு யாரும் மறைமுகமாக ரசித்தார்களா என்பது  எனக்குத் தெரியாது, மேலும் 'ஜகன்மோகினி' என்ற கவிதை காதலும் காமமுமாக வெளிப்படுவதும் எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை! இத்தனைக்கும் அது ராகத்தைப் பற்றிய கவிதை என்ற குறிப்பும் தந்திருக்கிறார் கவிஞர். இப்படி ஒவ்வொருவரும் கவிஞர் சுகுமாரனின் படைப்புலகுக்குள் மூழ்கி திளைக்கும் தருணங்கள் பல உண்டு.


காதல், தத்துவம், தனிமை, பொறுப்பு, தன்னிலை என உணர்வுகளுக்குள் நீந்தவிடும் கவிஞருக்கு என் சொற்களும் என் மொழியும் தக்க மரியாதையைச் செய்துவிடுமா என்றுத் தெரியவில்லை. என்னைவிட சிறந்த மொழியில் பாராட்டுகளும் மதிப்புரைகளும் விமர்சனங்களும் நிறைய அவர் நினைவுப் பைக்குள் நிறைந்திருக்கும், ஆனால் என் மொழியில் இதுவரை வந்திருக்காது என்பது உறுதி! (சமாதானம் செய்து கொள்கிறேன்)


"வாழ்க நீ" என்று கவிஞர், காந்தியைக் கொண்டாடும் போது மெலிதாக எழும் எதிர்நிலைக் குரல், "மரியாளின் சுவிசேஷ'த்தில் சற்று ஆறுதல் அடைகிறது (சபரிமலை சர்ச்சையையும் தொடர்புப்படுத்திக் கொண்டேன்). அவருடைய வரிகளை சற்று மாற்றி இந்த உரையை(!) நிறைவு செய்யலாம் என்று நினைக்கிறேன்,

"சுகுமாரன் 
ஒன்றும் செய்வதில்லை
சரி
சுகுமாரனையும்
ஒன்றும் செய்வதற்கில்லை!"


சிவராஜ் பாரதி  

                                                                      சிவராஜ் பாரதி








புதன், 9 ஜனவரி, 2019

ஒ ரு மு ன் னு ரை




நண்பர் ரவிகுமார் மலையாளத்தில் எழுதியுள்ள  எம்.டி.ராமநாதன் என்ற நீள் கவிதையின் தமிழாக்கம் நூல்வடிவில் வெளியாகிறது. மொழியாக்கம் மா. தக்ஷிணாமூர்த்தி. கேரளத்தின் புகழ்பெற்ற ஓவியரான நம்பூதிரியின் கோட்டோவியங்களும் நவீன ஓவியரான ஷிபு நடேசனின் தைல்வண்ண ஓவியமும் கவிதைத் தருணங்களை மேலும் துலங்கச் செய்பவை. முகப்பு வடிவமைப்பு பி. ஆர். ராஜன்.

நூலுக்கு எழுதிய முன்னுரையை இங்கே பகிர்கிறேன்.







                         சங்கீதம் ராமநாதம்

ர்நாடக இசையுலகில்  தான்தோன்றிக் கலைஞர்கள் சிலர் உண்டு. அவர்களில் ஒருவர் எம்.டி.ராமநாதன். தோற்றத்திலும் பழக்கவழக்கங்களில் வைதீகச்சாயல் கொண்டிருந்தவர். ஆனால் அவரது இசை எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காதது. தனித்த வழியில் உருவானது. அவரது குரல் செவிக்கினியது அல்ல. அவரது பாடல்முறை ஜனரஞ்சகமானது அல்ல. சங்கீதத்தால் வாழ்ந்தவர் அல்லர். சங்கீதத்துக்காக வாழ்ந்தவர். இந்த இயல்புகள்தாம் அவரைப் பாடகர்கள், கலைஞர்கள் நிறைந்த இசையுலகில் மேதையாக உயர்த்தியது.


வாழ்ந்த காலத்தில் ராமநாதன் போற்றப்பட்டதைக் காட்டிலும் விமர்சிக்கப் பட்டதே அதிகம். சங்கீதத்தால் வாழ்ந்தவராக மட்டுமேயிருந்தால் ஒருவேளை அவர் இந்த விமர்சனங்களுக்குச்  செவிசாய்த்திருக்கக் கூடும். சங்கீதத்துக்காக வாழ்ந்தவர்.எனவே விமர்சனங்களை, சரியாகச் சொன்னால் ஏளனங்களை, அவர் ஒருபோதும் பொருட்படுத்தவில்லை. தன்னுடைய கலை என்று நம்பிய ஒன்றை அடைவதற்கான நீண்ட பயணத்திலேயே அவரது சிந்தனையும் செயலும் ஆழ்ந்திருந்தன. பழைமைப் பிசுக்கேறிய சொற்கள் என்று தவிர்க்காமல் சொல்வதானால், அவரது வாழ்க்கை நாத யோகம். அவர் நாத யோகி.


பெரும் இடர்ப்பாடுகளைக் கடந்தே இந்த யோக வாழ்க்கையை ராமநாதன் அடைந்தார். அவரது அசுரக் குரல் இசைக்குப் பொருத்தமில்லாதது என்று இகழப் பட்டது. ' எதுக்குதேவேசா குழந்தையைப் போட்டுக் கஷ்டப் படுத்துறே?  ராமநாதனுக்குச் சாரீரமே வராது' என்று இந்த நீள்கவிதையில் ஓர் இடத்தில் வரும் வரிகள் ராமநாதன் இளமைக் காலத்தில் கேட்டவை. அவை அவரது இறுதிக் காலம்வரையும் பின் தொடர்ந்தன. அவரது முதல் கச்சேரியே 'பாதாளக் குரல்' காரணமாகத் தோல்வி அடைந்தது. 'எந்தக் குரலை இவர்கள் சங்கீத த்துக்கு ஒவ்வாதது என்று சொல்கிறார்களோ அதே குரலின் சங்கீதத்தை ரசிக்கும் காலம் வரும்' என்று தீவிரம் கொண்டதுதான் அவரது சங்கீத வாழ்க்கை. வெறும் மினுமினுப்பான  குரல் அல்ல இசை; அதற்கும் அப்பாற்பட்ட ஒன்றை வெளிக்கொணர்வது என்ற கலையின் மர்மத்தை அவரது இசை நிறுவியது. ராமநாதன் வெறும் பாடகராகவோ கலைஞராகவோ நிலைத்து விடாமல் நாத மேதையாக இன்று கருதப்படுகிறார். இசைத் தீவிரவாதிகளான ஒரு சாராரால் வழிபாட்டுக்குரிய பிம்பமாக (Cult figure ) போற்றப்படுகிறார். இந்தப் போற்றுதலில் ஓரளவுக்கு தன்னை உயர்ந்த ரசிகனாகக் காட்டிக்கொள்ளும் பாவனைக்கு இடமிருக்கிறது.எனினும் ராமநாதனின் மெய்யான ரசிகர்களுக்கு அவர் நிகரற்ற கலைஞர்.  தனித்துவம் மிக்க மேதை. ஒருவகையில் இந்த ரசிகர்களின் ஒருங்குணர்வுதான் இன்று எம்.டி. ராமநாதன் தொடர்ந்து நினைக்கப்படவும் அவரது இசை முன் எப்போதையும் விட இன்று  பரவலாகக் கேட்கப்படவும் சில கலைஞர்களால் பின்தொடரப்படவும் காரணங்கள் எனலாம். ராமநாதனின் இசை ஜனரஞ்சகமானது அல்ல; அவரும்  பெரும் புகழ் தேடியவரல்லர்; விருதுகளை வாங்கிக் குவித்தவரும் அல்லர். எனினும், ஆழங்களைத் தேடும் இசை ரசிகனுக்கு தான் பெற்ற அனுபவத்தை அளிக்கும் என்று அவர் விடாப் பிடியாகக் கொண்டிருந்த நன்னம்பிக்கைதான் அவரது வழிபாட்டுத் தகுதிக்கும் பரவலான ரசிக எண்ணிக்கைக்கும் ஆதாரம். இப்படிச் சொல்லலாம்; ராமநாதனின் இசை காலத்துடன் ஒட்ட ஒழுகியதல்ல; அதை முந்திச் சென்ற ஒன்று. துரதிர்ஷ்டவசமாக அவரது காலத்தில் அது இனங்காணப்படவில்லை.


எம். டி.ராமநாதனின் இசைக்குத் தமிழகத்தில் கிடைத்திருப்பதைவிட அதிக வரவேற்பு கேரளத்தில்தான். கேரளத்தில் பிறந்தவர் என்பதனால் இந்த வரவேற்போ என்று சந்தேகப் பட்டதுண்டு. ஆனால் கேரளக் கலைஞர் களால் அரிதாகவே பாராட்டப் பட்டிருக்கிறார். சில கச்சேரிகளில் அவருக்கு மிருதங்கம் வாசித்தவரான பாலக்காடு  மணி அய்யர் அவரது பாடும்முறையை  கடுமையாக விமர்சித்திருப்பதை இசை விமர்சகர் இந்திரா மேனோன் மேற்கோள் காட்டுகிறார் ( எப்படிப் பாடினாரோ?  பக்கம் 215 ).  இசையில் தோய்ந்தவர்களின் கருத்து இதுவென்றால் இசையைப் பிய்த்து அலசும் விமர்சகர்களின் எண்ணம் என்னவாக இருக்கும் என்பது எளிதில் ஊகிக்கக் கூடியதுதானேஒருவேளை முன் தலைமுறையின் உதாசீனத்தை உணர்ந்து கொண்ட கேரளத்தின் புதிய ரசிகத் தலைமுறை அவரைக் கொண்டாடுகிறதோ என்னவோ? இன்று பழைய நாட்களைச் சேர்ந்த வேறு எந்த இசைக் கலைஞரும் நினைவுகூரப்படுவதை விட அதிகமாக ராமநாதன் நினைவு கூரப்படுகிறார். அன்றைய நட்சத்திரக் கலைஞர்களுக்கு இருப்பதை விட இந்த துருவ நட்சத்திரத்துக்கு இன்று ஒளி அதிகம்.


இலக்கியச் சூழலில் பரவலாகப் பேசப்பட்ட கலைஞர் ராமநாதன் என்பதை வியப்புடன் உணர முடிகிறது. இசை ரசிகனாகவும் இலக்கிய வாசகனாகவும் என்னை மகிழ்வித்த  செயல் இது. 'ராமநாதன் பாடுகிறார்' என்ற சச்சிதானந்தனின் கவிதை, 'கேதாரம்' என்ற கிருஷ்ணமூர்த்தியின் நாவல், எம்.டி. ஆர். என்ற டாக்டர். மது வாசுதேவனின் தொகுப்புஅதன் ஆங்கில வடிவம். இவையெல்லாம் அவரை இலக்கியத்தில் நிறுவியிருப்பவை. அவற்றின் நீட்சியாகவும் அவற்றைக் கடந்த ஒன்றாகவும் உருவானதுதான் பி. ரவிகுமாரின் 'எம்.டி.ராமநாதன் ' நீள் கவிதை. நான் அறிந்த அளவில் ஓர் இசைக் கலைஞரை மையமாக்கி எழுதப்பட்ட கவிதை இதுவாகவே இருக்கலாம். அசோக் வாஜ்பாயின் நீண்ட கவிதை ஒன்றின் பகுதியில் ஹிந்து ஸ்தானி இசைக்கலைஞர் குமார் கந்தர்வாவைப் பற்றிய பகுதி உள்ளது என்பதும் நினைவுக்கு வருகிறது. சௌதாமினி இயக்கிய பித்ருசாயா - முன்னொடிகளின் நிழல்கள்' என்ற ஆவணப்படமும் நினைவில் புரள்கிறது. இந்த அளவுக்குப் பிற துறைகளை ஈர்த்த இன்னொரு இசைக் கலைஞர் ஏறத்தாழ இல்லை என்றே தோன்றுகிறது. இன்னொரு வியப்பையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். எம்.டி.ராமநாதனின்  தீவிர ரசிகர்களில் பலரும் இடதுசாரிச் சிந்தனையைப் பின்பற்றுபவர்கள். அவர்களை ஈர்ப்பது அந்த இசையின் எந்தக் கூறுஒருவேளை இசை சென்று முடியுமிடத்தில் எஞ்சுவது மானுட இணக்கம் என்ற தெய்வீக குணமாக இருக்குமோ?


ரவிகுமார் பத்திரிகையாளர். கவிஞர். நுட்பமான வாசகர். இவையெல்லா வற்றையும் விட முதன்மையானது தேர்ந்த இசை ரசிகர். அதை விட முதன்மையானது எம்.டி. ராமநாதனின் தீவிர ரசிகர். ரவிகுமாரின் இந்த ராமநாதப் பற்றுத்தான் என்னை அவருக்கு நெருக்கமாக்கியது. எம். டி. ராமநாதனைப் பற்றி  நான் எழுதிய கட்டுரை ஒன்றுதான் ரவிகுமார் என்னைப் பொருட்படுத்தக் காரணம். அதுதான் தோழமை யாகவும் இந்த நூலுக்கு முன்னுரை எழுதுவதற்கான தகுதியாகவும் மாறியிருக்கிறது. ராமநாதனின் இசை ரசிகனாக இல்லாமலிருந்தால் இந்த நட்பு ஏற்பட்டிருக்காது என்று உறுதியாகவே நம்புகிறேன். கூடவே எங்களை இணைத்தவர் எம்.டி. ஆர் என்றும் பெருமைகொள்ள விரும்புகிறேன்.


எம்.டி.ராமநாதன் வாழ்க்கைச் சம்பவங்களை மையப் பொருளாகக் கொண்ட இந்த நீள் கவிதை 'கலாகௌமுதி' வார இதழில் தொடராக வெளிவந்தது. கவிதையொன்று தொடராக வார இதழில் வெளிவருவதும் அதை வாசகர்கள் வரவேற்பதும் தமிழ் வாசகனாக எனக்கு அரியதாக மட்டுமல்ல; அதிர்ச்சியளிக்கும் நிகழ்வாகவே தென்பட்டது. பின்னர் அதுவே நூல் வடிவில் வெளியானது அதிர்ச்சியின் அளவைக் கூட்டியது. நிலநடுக்கம் போன்ற அபூர்வ நிகழ்வு என்று ஒதுக்கி விடமுடியாமல் அடுத்தடுத்து வந்த இந்தி , ஆங்கில மொழிபெயர்ப்புகள் திகைப்பை ஏற்படுத்தின. திகைப்பிலிருந்து மீள நான் கண்ட வழி இதன் தமிழாக்கத்தை மேற்கொள்வது என்பதுதான். ஆனால் என்னை விட அதிர்ஷ்டசாலியான மா. தக்ஷிணாமூர்த்தி ஒரே இருப்பில் தமிழாக்கத்தைச் செய்து முடித்தார். அவரே ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்தார்.  'எழுத்து' இதழில் வெளியான கவிதைகள் மூலம் அறிமுகமானவர் மா. தக்ஷிணாமூர்த்தி. அவரது வெளிவந்த ஒரே தொகுப்பான 'திவ்ய தர்சனம்' தமிழின் முதல் அகத்திணைக் கவிதைகள் என்றும் எண்ணுகிறேன். இந்த மொழியாக்கம் மீண்டும் அவர் தமிழ்க் கவிதைக்குள் பேசப்படுவதற்கான வாய்ப்பு.  


மலையாளத்தில் எழுதப்பட்ட கவிதை. இதற்கு உள்ளேயும் வெளியேயும் புலப்படும் தமிழ்த் தொடர்புகள் குறிப்பிடத் தகுந்தவை. ராமநாதன் வாழ்க்கையின் பெரும்பகுதி சென்னையிலும் தமிழ்ச் சூழலிலும் கழிந்தவை. அவரது வீட்டு மொழி தமிழ். வடமொழியிலும் தெலுங்கிலும் கீர்த்தனைகளையும் சங்கீத உருப்படிகளையும் எழுதியிருக்கிறார். எனினும் அவற்றின் உள்ளோட்டத்தில் தமிழ்ப் பாடல்களின் மரபையும் இலக்கணத்தையும் காணமுடியும். 'ஹரியும் ஹரனும் ஒன்றே என்று அறியாதாரும் உளரோ?' என்ற அடாணா ராக சொந்த சாகித்தியத்தில் தமிழ்ப் பாடல்களின் தொடர்ச்சியையும் ' வருகலாமோ அய்யா' என்ற மாஞ்சி ராக நந்தன் சரித்திரக் கீர்த்தனையைப் பாடும் விதத்தில் தமிழின் நெகிழ்வையும் எளிதில் உணரலாம்.


ரவிகுமார் நவீன தமிழ்ப் படைப்பாளிகளை வாசித்து அறிந்திருப்பவர்.  அதற்கு முகாந்திரமாக இருந்தது சக திருவனந்தபுரவாசியான நகுலனின் தொடர்பு என்பது என் அனுமானம். இந்த நீள் கவிதையிலும் நகுலனின் சாயலைக் காண முடியும். தமிழில் எதிர்க் கவிதையை முன்னெடுத்தவர் நகுலன் என்பது என் எண்ணம். கவிதைக்கான சொற்களோ , கவிதையைத் துலக்கிக் காட்டும் அணிகளோ இல்லாமல் எளிய உரைநடையில் கவிதையின் சாத்தியத்தைக் கொண்டுவர முயன்றவர் அவர். 'மழை மரம் காற்று ' என்ற நகுலனின் நீண்ட கவிதையை எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். ரவிகுமாரின் கவிதையில் அதன் லேசான பாதிப்பைக் காணமுடிகிறது. இதில் எந்தச் சொல்லும் கவித்துவத்தில் ஊறவைத்து எடுத்தவையல்ல.மறைபொருள் கொண்டவையல்ல. இயல்பான உரையாடலில் புழங்குபவைதாம் கவிதையைக் கட்டமைக்கின்றன. சொற்களைக் கடந்த ஒன்றைக் கவிதைக்குள் தொனிக்கச் செய்கின்றன. ஒருவகையில் ராமநாதனின் இசையைப் போன்றதுதான் இந்தக் கவிதையின் உயிர்க்கூறும். வெறும் ஸ்வர நிரவல்கள் அல்ல; அவற்றின் உள் ஓசைதாம் சங்கீதம் என்பதுபோல. சொற்களின் சேர்க்கையல்ல; அவற்றின் பொருள்முயக்கம்தான் இங்கே கவிதையாகிறது.


இந்த நூலின் மொழியாக்கப் பிரதி ஏறத்தாழப் பத்து ஆண்டுகளாக என் கைசமே இருந்தது. மொழிபெயர்ப்பு முடிந்த கையோடு நூலாக வெளியிட முயற்சித்தேன்.எனினும் வெவ்வேறு காரணங்களால் காரியம் கைகூட வில்லை. இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்து வாசிக்கப்பட்ட பிரதியை தமிழ் வாசகர்கள் முன் வைக்காமலிருப்பது முறையல்ல என்ற ஆதங்கத்தை காலச்சுவடு இப்போது தீர்த்து வைத்திருக்கிறது. அதற்காகக் கண்ணனுக்கு மனமார்ந்த நன்றிகள். கேரளத்தின் புகழ் பெற்ற ஓவியரான நம்பூதிரியின் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. முகப்பை பி.ஆர். ராஜன் வடிவமைத்துள்ளார். இரு ஓவியர்களுக்கும் நூலுருவாக்கத்தில் உதவிய கலா முருகன், ஹெமிலா இருவருக்கும் மனமார்ந்த நன்றி.


திருவனந்தபுரம்                                                        சுகுமாரன்
25 டிசம்பர் 2018

ஓவியம் : நம்பூதிரி




                            ஓவியம்: ஷிபு நடேசன்







செவ்வாய், 1 ஜனவரி, 2019

மூன்று நூல்கள்

ஆங்கிலம் வழி ஒன்றும் மலையாளத்திலிருந்து ஒன்றுமாக இரண்டு மொழிபெயர்ப்புகள். ஒரு கவிதைத் தொகுப்பு. ஆக மூன்று நூல்களுடன்  புதிய ஆண்டு தொடங்குகிறது. 


பாதுஷா என்ற கால்நடையாளன் ( மலையாளச் சிறுகதைகள் )
உண்ணி ஆர்.







ண்ணி ஆர் இன் சிறுகதைத் தொகுப்பு' பாதுஷா என்ற கால்நடையாளன் 'ஒரு மறுபதிப்பு. உண்ணியின் 12 கதைகள் கொண்ட தொகுப்பு 'காளி நாடகம்' 2007 இல் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்தது. தமிழ் வாசகர்களால் அதிகம் கவனிக்கப்பட்ட தொகுப்பு என்று அறிய முடிந்தது, எனினும் அதற்கு ஒரு மறுபதிப்பைக் கொண்டுவர இயலவில்லை.  காளி நாடகம் வெளிவந்த பின்னர் உண்ணியின் முக்கியமான சில கதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறேன். அவற்றையும் உள்ளடக்கியது 'பாதுஷா என்ற கால்நடையாளன் ' என்ற இப்போதைய தொகுப்பு. சிறுகதைகளாக வெளிவந்து மலையாள வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற கதையான லீலையும் பாங்கு என்ற கதையும் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. 'லீலை' திரைப் படமாக வெளிவந்தது. 'பாங்கு' வரவிருக்கிறது.

இந்தப் புத்தகம் தொடர்பாகப் பகிர்ந்து கொள்ள  இரண்டு மகிழ்ச்சிகள்  இருக்கின்றன. காளி நாடகத்துக்கு நான் எழுதிய முன்னுரைதான் உண்ணியின்  சிறுகதைகள் பெருந்திரட்டில் ஆய்வுக் கட்டுரையாக வெளியானது. அதன் பகுதிகள்தாம்  பின்னட்டைக் குறிப்பாகவும் கொடுக்கப்பட்டன. தமிழில் எழுதப்பட்ட முன்னுரை ஒரு மலையாளப் புத்தகத்தின் மதிப்பீடாக மாறுவது அபூர்வம். இது முதல் மகிழ்ச்சி. இரண்டாவது மகிழ்ச்சிக்குக் காரணகர்த்தர் புத்தகத்தின் முகப்பை வடிவமைத்த ஜெய்னுல் ஆபித். இன்று மலையாளப் பதிப்புலகில் அதிகம் பாராட்டுப் பெறும் வடிவமைப்பாளர் அவர். கிடைத்தற்கரியவர். ஆபித் வடிவமைக்கும் முதல் தமிழ்ப் புத்தகம் இதுதான்.


ஷா இன் ஷா ( வரலாறு )
ரிஸார்த் காபுஸின்ஸ்கி




காலச்சுவடு நவீன கிளாசிக் வரலாற்று வரிசையில் வெளியாகும் நூல் 'ஷா இன் ஷா'. போலந்தைச் சேர்ந்த கவிஞரும் பத்திரிகையாளருமான ரிஸார்த் காபுஸின்ஸ்கியின்  ஆக்கம். 1936 - 81 வரையான ஆண்டுகளில் உலகில் நடைபெற்ற ஆட்சி மாற்றங்கள், உள் நாட்டுக் கலவரங்கள், புரட்சிகள் எல்லாவற்றிலும் நேரடிச் சாட்சியாகப் பங்கேற்றவர். களத்தில் பெற்ற அனுபவங்களை முன்வைத்து நூல்கள் எழுதியர். அவற்றை வெறும் இதழாளனின் குறிப்புகளாக இல்லாமல் வரலாறு, பண்பாடு ஆகியவற்றின் பின்புலத்தில் இலக்கிய இயல்புடன் எழுதியவர். 1979 - 80 கால அளவில் இரானில் நடைபெற்ற ஷா முஹம்மது ரெஸா பஹ்லவியின் அதிகார வீழ்ச்சியையும் அயதுல்லா கொமெய்னியின் தலைமையிலான இஸ்லாமியப் புரட்சியையும் நேரில் கண்டு எழுதிய நூல் 'ஷா இன் ஷா'.


கவிதைகள், கதைகள்., கட்டுரைகள், நாவல்கள் என்று ஆங்கிலம் வாயிலாகச் சில படைப்பு களை முன்னரே மொழிபெயர்த்திருக்கிறேன். அவை எவற்றிலும் உணராத சிக்கலை இந்த மொழிபெயர்ப்பு ஏற்படுத்தியது. அதற்கு காபுஸின்ஸ்கியின் எழுத்தின் இயல்பே காரணம். இந்நூலில் கையாண்டிருக்கும் நடை (பொதுவாகவே அவரது எல்லா நூல்களிலும் கையாளப்படும் நடையும்) மாறுபட்டது. கவிதையின் பூடகத்தையும் செறிவையும் கொண்டது. ஒன்றைச் சொல்லும்போதே  தொடர்புடைய வேறொன்றைச் சுட்டுவது. இது இதழியலாளனின் நடையோ வரலாற்றாளனின் நடையோ அல்ல. புனைவு எழுத்தின் நடை. பருண்மையான தகவல்களையும் அரூபமான ஒன்றாகவே  காபுஸின்ஸ்கி முன்வைக்கிறார். ஒருவகையில் மாய எதார்த்தவாதமானது அவரது எழுத்துமுறை. இதைத் தமிழாக்குவது பெரும்பாடாக இருந்தது.


போலிஷ் மொழி மூலத்திலிருந்து வில்லியம் ஆர். பிராண்ட், கதார்ஸினா ம்ரோஸ்கோவ்ஸ்கா ஆகியோர் ஆங்கிலத்தில் மேற்கொண்ட ஆக்கமே இந்தத் தமிழ் வடிவத்தின் மூலம். வாசிப்பில் பரவசத்தையும் புதிய உலகைக் கண்டடைந்த பெருமிததையும் அளித்த நூல் இது. ஆனால் தமிழாக்கத்துக்குப் பிடிவாதமாக இணங்க மறுத்த்து. மொழியாக்கத்துக்கு என்று தனிப்பட்ட முறையில் நான் வகுத்துக் கொண்டிருந்த விதிகளை மீறவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களை அடியொற்றிய தமிழாக்கமாக இந்த நூலைக் குறிப்பிட விரும்பவில்லை. தமிழ் வாசகருக்கு புரிந்துகொள்ள இசைவானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சுதந்திரமாக அத்து மீறப்பட்டிருக்கிறது. போலிஷ் சோஷலிஸ்டான ரிஸாத் காபுஸின்ஸ்கியின் ஆன்மா இந்த அத்துமீறலை மன்னிக்கும் என்பது என் மூடநம்பிக்கை.


செவ்வாய்க்கு மறுநாள், ஆனால் புதன்கிழமை அல்ல ( கவிதைகள் )
சுகுமாரன்








ன்னுடைய ஏழாவது கவிதைத் தொகுப்பு .'நீருக்குக் கதவுகள் இல்லை' ( 2011 )  தொகுப்புக்குப் பிறகு எழுதிய கவிதைகள் இவை.


இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் கவிதைகளைத் தொகுத்துக் கொண்டிருந்த போது இத்தனை காலமும் எழாத பல கேள்விகள் எனக்குள்ளேயே எழுந்தன. கவிதை எப்போதும் நிகழ்காலத்தைச் சார்ந்தது. அப்படியிருக்கும்போதே காலத்தை மீறிய ஒன்று அதில் இல்லையா? கவிதையின் பேசுபொருள் அன்றாட நடவடிக்கையின் சித்தரிப்பா, இல்லை, அதைப் பற்றிய விசாரணையா? கவிதை மொழியின் துணைப்பண்டமா, உற்பத்தியின் மூலமா? கவிதையின் மொழி வெளிப்படையானதா, தொனிவேற்றுமை கொண்டதா? கவிதைக்குள் இயங்கும் பார்வை மோஸ்தருக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டுமா? அதைப் புறக்கணிக்கும் ஒன்றாகவிதை செய்திக்கான வாகனமா, தனியான இருப்பா? கவிதை கைப்பழக்கமா, மனக் கனிவாகவிதை என்னவாக இருக்க வேண்டும், கவிதையைப் போலவா அல்லது கவிதையாகவாகவிதை எழுத்துத் தொடங்கிய காலம்முதல் இடைவிடாமல் உறுத்திவந்த கேள்விகள் தாம் இவை. எல்லாக் காலத்திலும் அவற்றுக்கான பதில்களைத் தேடிக் கண்டடைந்திருக்கிறேன். எனினும் இந்தத் தொகுப்பின் தருணத்தில் அவை உரத்த குரலில் முழங்கின.ஒருவேளை கவிதைகள் பல்கிப் பெருகி மலிந்திருக்கும் சூழலில் என்னுடைய கவியிருப்புக் குறித்த பதற்றத்திலிருந்து அவை எழுந்திருக்கலாம். வழக்கம்போலவே அவற்றுக்கான பதில்களைக் கண்டுபிடித்துமிருக் கிறேன். எங்கே எப்படி என்ற பெரும் கேள்விகளுக்கு இங்கே இந்தக் கவிதைகளில்தான் என்பதே பதில்.
                                   ---   *   ---