வெள்ளி, 18 ஏப்ரல், 2025

 


                                             ஐ ம் ப து 


                                                          

ன் இலக்கிய வாழ்க்கையின் ஐம்பதாவது ஆண்டு இது. 

பதினாறு பதினேழாவது வயதில் எழுதிய கவிதைகளும் கதைகளும் கண்ணதாசன், தாமரை, தீபம்  இதழ்களில் வெளிவந்தன. பள்ளி இறுதி வகுப்புகளில் படித்துக் கொண்டிருந்தபோதே இலக்கியத்தின் மீதான மாளாத காதல் முளைவிட்டிருந்தது. அது துளிர்த்து வந்த பருவத்தில்  கதையாகவும் கவிதையாகவும் எழுதிய பிள்ளைக்கிறுக்கல்களை ஆசிரியர்களும் சில நண்பர்களும் சில பெண்களும் பாராட்டிச் சொன்னார்கள். அவற்றில் சில பத்திரிகைகளிலும் வெளியாயின. கவிதைப் போட்டிகள் சிலவற்றிலும் பங்கேற்றேன். அப்படி வாசித்த ஓரிரு செய்யுள்கள் பள்ளி ஆண்டு மலரிலும் உள்ளூர் நாளிதழின் ‘கலைப் பூங்கா’விலும்  வெளிவந்தன. அவை மகிழ்ச்சியளித்தாலும் அன்று மூர்க்கமாக ஈடுபட்டிருந்த வாசிப்பும் இலக்கியம் அறிந்தவர்களின் ஆலோசனைகளும் அந்தச் சொல்வித்தைகளின் ஆழமின்மையையும் கச்சாத்தனத்தையும் சுட்டிக் காட்டின. அவற்றைக் களைவதற்காக வாசிப்பில் மேலும் தீவிரமாக மூழ்கினேன். அதிலிருந்து பாடங்களைப் பயின்றேன். ‘உனக்கே உனக்காகச் சொல்ல எதுவும் இல்லையென்றால் எழுதாதே’ என்ற எச்சரிக்கையைக் கற்றுக் கொண்டேன். அதுவரை எழுதிய சரக்குகளைக் கைவிட்டேன். ‘சொல் எளிது, பொருள் வலிது , புலன் புதிது’ என்று எழுத்துக்கான வரையறையைத் தீர்மானித்துக் கொண்டேன். அதன் பின்னர் எழுதியவை இதழ்களில் வெளியாயின. பாராட்டையும் பெற்றன. அவையும் அத்தனை சிலாக்கியமானவையல்ல; எனினும் என்னுடைய விரலடையாளம் பதிந்தவை என்பது ஆறுதலாக அமைந்தது.

 

இன்று கவிதை என்று நான் நம்பும் வடிவத்தில் எழுதிய கவிதைகளில் சில எழுபதுகளின் ஆரம்ப ஆண்டுகளில் ஓர் இடைவெளிக்குப் பின்னர் வெளிவந்து கொண்டிருந்த கண்ணதாசன் இதழில் வெளியாயின. அது 1974 ஆம் ஆண்டு என்று மனதில் பதிந்து போயிருந்தது. அந்த மனப் பதிவின் அடிப்படையில் ‘சுகுமாரன் கவிதைகள்’ மொத்தத் தொகுப்பில் அவற்றைச் சேர்த்தேன். தொகுப்பின் தலைப்பில் 1974 – 2019 என்றும் குறிப்பிட்டிருந்தேன். நாகர்கோவில் சுந்தர ராமசாமி நூலகத்தில் பார்க்கக் கிடைத்த கண்ணதாசன் இதழ்களிருந்து அந்த வருடத்தைக் கண்டுபிடித்திருந்தது நினைவிலிருந்தாலும் அதைச் சரி பார்க்க விரும்பினேன். துரதிர்ஷ்டவசமாக நான் பார்வையிட்ட அந்த இதழ்களைத் திரும்பப் பார்க்க இயலவில்லை. நூலக வருகையாளர் எவரோ அவற்றைத் திரும்ப ஒப்படைக்க மறந்திருக்க வேண்டும்.

 

என்னுடைய இலக்கியப் பிறப்பு ஆண்டு தொடர்பான சந்தேகத்தை நண்பர் பேராசிரியர் சுப்பிரமணி இரமேஷிடம் பகிர்ந்து கொண்டேன். ‘கவலையை விடுங்க, கண்டுபிடித்து விடலாம்’ என்றார். தளரா முயற்சியுடன் வெவ்வேறு நூலகங்களை அணுகியும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்ணதாசன் இதழில் வெளிவந்தவற்றிலிருந்து  தேர்ந்தெடுத்த ஆக்கங்களை ஒரு தொகுப்பாகக் கண்ணதாசன் பதிப்பகம்  சில ஆண்டுகளுக்கு முன்பு  வெளியிடப்பட்டது. அந்தத் திரட்டில் என் கவிதையோ கதையோ இல்லை. பதிப்பகத்தாரின் சேகரத்திலுள்ள இதழ்களைப் பார்வையிட  அனுமதி கோரியும் பலனளிக்கவில்லை.

 

ஆண்டு 74 ஆக இருந்தால் என்ன 75 ஆக இருந்தால் என்ன? எழுத வந்த ஐம்பது வருடங்கள் ஆயிற்று என்றிருந்தால் போதாதா? துல்லியமாக நிரூபிக்கவும் என்று யாராவது கட்டாயப்படுத்தினார்களா?  இது என்ன சரித்திர ஆவணமா? இல்லை , இலக்கியச் சேவைக்கு  ஓய்வூதியம் கொடுக்கப் போகிறார்களா? என்ற கேள்விகள் உள்ளுக்குள் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தன. கடைசியில் வரலாறே பிழைகளின் தொகுப்புத்தானே, அதில் 74லோ 75 எதுவானால் என்ன? அதுவும் உபரிப் பிழையாக இருக்கட்டும் என்று அமைதியானேன். விவகாரத்தை மறந்தும் போனேன்.

 

பணி நிமித்தம் நாகர்கோவிலுக்குப் போன மாதம் சென்றிருந்தபோது நண்பர் சீனிவாச கோபாலனைச் ( அழிசி பதிப்பகம் ) சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. க.நா.சுப்ரமண்யத்தின் காணக் கிடைக்காத எழுத்துக்களைத் தேடி சுந்தர ராமசாமி நூலகத்துக்கு வந்திருந்தார். அவருடைய தேடலுக்கு இடையே என்னுடைய ஆரம்பக் காலக் கவிதை ஒன்றையும் கண்டுபிடித்துத் தந்தார். தீபம் 1975 ஜனவரி இதழில் கவிதை வெளிவந்திருந்தது. அவர் அதைக் காண்பித்தபோது  பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவர் விடைபெற்றுச் சென்ற பிறகு அந்தக் கவிதையின் தோற்றுவாய், வெளியீடு பற்றிய நினைவுகள் மேலெழுந்தன. அந்த உந்துதலில் நண்பரைத் தொடர்பு கொண்டு அவர் கண்டுபிடித்துப் படமாகப் பதிவு செய்திருந்த அந்தக் கவிதையை அனுப்பித் தரும்படிக் கேட்டுக் கொண்டேன். வாட்ஸ் அப் வழியாக அனுப்பித் தந்தார்.


                                                                                                   தீபம் ஜனவரி 1975

 

நீண்ட கவிதையொன்றின் நான்கு வரிகள் தீபம் இதழில் வெளிவந்திருந்தன. அதுவும் பெட்டித் துணுக்காக இடம் பெற்றிருந்தது. ( ( நா.பார்த்தசாரதி நல்ல எடிட்டர்தான் ) .  உண்மையில் அது கவிதைக்குரிய எந்தக் குணத்தையும் கொண்டிருக்கவில்லை. பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும்போது கலந்து கொண்ட கவிதைப் போட்டி ஒன்றில் வாசிப்பதற்காக தயார் செய்த சரக்கு. போட்டியில்  இரண்டாம் பரிசாக அறிவிக்கப்பட்ட 75 ரூபாய் பரிசையும் பெற்றது. அந்தக் கவிதையை எழுதிய மிகக் குறுகிய காலத்திலேயே நான் என்னுடைய கவிதையாக்க  முறையைக் கண்டறிந்திருந்தேன். அந்த முறையில் எழுதிய கவிதைகள் தாம் கண்ணதாசன் இதழில் வெளிவந்தவை. கவியரங்கக் கவிதையை அனுப்பினேன் என்று நினைவிருந்ததே தவிர எந்த இதழுக்கு என்பது பதியவில்லை. அதுதான் தீபம் இதழில் வெளியாகியிருந்தது. அதே கவிதையின் இன்னொரு துண்டு  மற்றொரு இதழில் வெளிவந்ததும்  ஞாபகத்திலிருக்கிறது.

 

1974இல் அல்லது 75 இல் இலக்கியவாதியாகப் பிறப்பெடுத்தேன் என்று நானாகக் கணித்துக் கொண்ட ஜாதகத்தின்படி என் இலக்கிய வாழ்க்கை ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் அதிகமாக எழுதிக் குவித்து விடவில்லையென்றாலும் தொடர்ச்சியாக இயங்கியிருக்கிறேன் என்பதே மகிழ்ச்சியளிக்கிறது. கலையின் பாதையிலான பயணம் இறுதி நிறுத்தம் இல்லாதது என்ற பிரக்ஞை தொடக்கத்திலேயே உறுதியாகியிருந்தது. என் எழுத்து எனக்குக் கழிவிரக்கம் ஏற்படுத்தி விடக் கூடாத ஒன்றாக இருக்க வேண்டும், என்னை வெட்கித் தலைகுனியச் செய்யாததாக இருக்கவேண்டும், தளுக்கானதாகவோ பொய்யானதாகவோ இருக்கக் கூடாது  என்ற வீம்புகளை இன்று வரை கடைப்பிடிக்க முடிந்திருக்கிறது என்பதும் மகிழ்ச்சியின் இன்னொரு பக்கம்.

 

எழுத வந்து ஐம்பது ஆண்டுகளாகி விட்டன என்று தற்செயலாக நண்பர் ஒருவரிடம் சொன்னேன். பதிலுக்குக் கேள்விகளை எய்ய ஆரம்பித்தார். ‘திரும்பிப் பார்த்தால் என்ன தொன்றுகிறது? இத்தனை கால எழுத்துக்களை எப்படி மதிப்பிடுவீர்கள்? எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைத்திருப்பதாக நினைக்கிறீர்களா?’ நண்பரின் எந்தக் கேள்விக்கும் என்னிடம் உடனடியான பதில் இருக்கவில்லை. பின்பு யோசித்தபோது இப்படிச் சொல்லியிருக்கலாம்  என்று தோன்றியது.

 

சூசன் சாண்டாக்கின் புகழ் பெற்ற வாசகம் ஒன்று உண்டு.  ‘நான் எழுத்தாளர் ஆகவேண்டும் என்று எழுத வரவில்லை. இலக்கியம் என்று ஒன்று இருப்பதனால்தான் எழுத்தாளர் ஆனேன்’. என்பதுதான் எப்போதும் என்னுள்ளே ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த வாசகம். தவிர, ஓர் எழுத்தாளனின்  எழுத்துக்களை மதிப்பிட வேண்டியது அவற்றை வாசித்தவர்களும் காலமும்தான். ஏதோ ஒன்றைத் தமது இருப்பின் அடையாளமாக விட்டுச் செல்ல எல்லா மனிதர்களும் விரும்புகிறார்கள். நான் இங்கே இருந்தேன் என்பதற்கும் என்னவாக இருந்தேன் என்பதற்குமான தடயம் என் எழுத்து. இருப்பின் பொருள் அங்கீகாரமோ புகழோ அல்ல. இருப்பதுதான்.

 

இந்த பதிலைச் சொன்னது நண்பரிடமல்ல, என்னிடமே. எனினும் ஐம்பது ஆண்டுகளாக இலக்கியத்தில் உழன்று கொண்டிருப்பதற்கான இருப்பு நியாயம் இங்கே இருக்கிற வளமான இலக்கியம். முப்பத்து ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து பதினேழு ஆண்டுகள் மட்டுமே இலக்கியப் பணியில் ஈடுபட்ட பெருங்கவிஞனும் நாற்பத்திரண்டு வயதுவரையே ஜீவித்து,  பதினைந்து ஆண்டுகள் மட்டுமே எழுத்தில் செயல்பட்ட பெருங்கலைஞனும் உயிர் கொடுத்த  மொழிக்குள் நாமும் இருக்கிறோம் என்ற பெருமிதமே அந்த இருப்பு நியாயத்தின் உட்கிடக்கை. இதைப் புரிந்து கொள்ளத்தான் ஐம்பது ஆண்டுகள் தேவைப் பட்டிருக்கின்றன.

@

நன்றி: சீனிவாச கோபாலன் ( அழிசி ), சுப்பிரமணி இரமேஷ்


 

 

 

 

 


சனி, 12 ஏப்ரல், 2025

 



                                                      காணீர் ... அகண்ட காவிரி

                                                                              ***




 

திரூரில் சில நாட்களுக்கு முன்பு, ( பிப்ரவரி 28 – மார்ச் 3, 2025 )  நடைபெற்ற துஞ்சன் உற்சவத்தில் பங்கேற்கச் சென்றிருந்தபோது மலையாளக் கவிஞர், நண்பர் பி.ராமனையும் சந்தித்தேன். கடந்த இரு ஆண்டுகளிலாக வெளிவந்திருக்கும்  அவரது இரண்டு கவிதைத் தொகுப்புகளை ( நனவுள்ள மின்னல் / ஈரமுள்ள மின்னல்) , ஆ ஸ்தலம் அணிஞ்ஞ ஷர்ட் ஞான் / அந்த இடம் அணிந்த சட்டை நான் ) அன்பளிப்பாகக் கொடுத்தார். வீடு திரும்பி தொகுப்புகளை வாசிக்கத் தொடங்கினேன். வேகமான வாசிப்பிலும் இரண்டு கவிதைகள் கவனத்தைப் பிடித்து நிறுத்தின. அவை இரண்டும்  இசையைப் பற்றிய கவிதைகள். இரண்டுக்கும் பாட்டுடைத் தலைவர் சங்கீத கலாநிதி சஞ்சய் சுப்ரமணியன்.





 

சமகால இலக்கியவாதிகள் பலருக்கும் அபிமானப் பாடகர் சஞ்சய் சுப்ரமணியன் என்பது அவர்களுடைய படைப்புகள் வழியாக வெளிப்படுவதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. இலக்கியவாதிகள் தங்களது துறையல்லாமல் இன்னொரு கலைத் துறையிலும் ஆர்வமுடையவர்கள் என்பதன் சான்றாகவும் கலைகள் ஒன்றை ஒன்று பாதிக்கும் தன்மை கொண்டவை என்பதன் சான்றாகவும் இதைக் கொள்ளலாம்.

 

நிகழ் கால எழுத்துக்களில் அதிகம் சீராட்டப்பட்டிருப்பது சஞ்சய் சுப்ரமணியனும் அவரது இசையும்தான். நேரடியாகவும் உள்ளுறையாகவும் அவரது இசை கணிசமான ஆக்கங்களில் பேசப்பட்டிருக்கின்றன. கவிஞர் இசையும் இந்தக் குறிப்பை எழுதுபவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளில் சஞ்சயின் இசை தரும் அனுபவத்தை விவரித்திருக்கிறார்கள். மலையாளக் கவிஞரான வி.எம். கிரிஜா ஒரு கவிதையில் சஞ்சயின் ‘கர்ப்பூரம் நாறுமோ…’ என்ற ஆண்டாள் திருமொழியும் ‘பெற்றதாய் தனை மக மறந்தாலும்…’ என்ற வள்ளலாரின் பாடல் விருத்தமும் தனக்குள் ஏற்படுத்திய சலனங்களைப் பதிவு செய்திருந்தார். அண்மையில் வெளியாகியுள்ள சஞ்சய் சுப்ரமணியனின் வாழ்க்கைக் குறிப்புகளின் தொகை நூலான ‘ஆன் தட் நோட்’ டுக்கு ஸ்ருதி இதழில் நேர்த்தியான மதிப்புரையையும் கிரிஜா எழுதியிருக்கிறார். சஞ்சயின் பாட்டுத் திறத்தால் பாலிக்கப்பட்டு  நாங்கள் மூவரும் எழுதிய கவிதைகள் , முறையே இசையின் ‘மகத்தான ஈ’ , கிரிஜாவின் ‘மாத்திரைகள் மட்டுமே’ என்னுடைய ‘கானமூர்த்தி’ ஆகியவை விகடன் தடம் இதழில் ‘ ஒரு பாடகரும் மூன்று கவிஞர்களும்’  என்று வெளியாயின.

 

சஞ்சய் சுப்ரமணியன் பாடிய அருணாசல கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனைகளில் ஒன்றான ‘ எழுந்தாளே பூங்கோதை’யையும் ( ராகம்: மோகனம் ) அவர் பாடியிருந்தால் என்ற கற்பனையின் விளைவாக தியாகராஜரின் சாரி வெடலின ( ராகம்: அசாவேரி ) கீர்த்தனையையும்  மையப் பொருளாகக் கொண்டவை பி.ராமனின் இரண்டு கவிதைகளும். அவற்றின் தமிழாக்கத்தை இங்கே பகிர்கிறேன்.

 

கவிதைகள் ‘ எந்த ருசிரா ராமா’…

 

                                              எழுந்தாளே பூங்கோதை


சீதையை மகுடமாக ஏந்திய

தீச்சுடர்கள் பாடுகின்றன

‘எழுந்தாளே பூங்கோதை’

 

தீமரக் கிளையில் பூத்த

பூப்போலே எழுந்தாளே

 

சுடவேயில்லை , கீழே பூமியும் பாடுகிறது

‘எழுந்தாளே’

 

அந்தக் குளிரூற்றை வேர்  உறிஞ்சுவதால்

தீமரம் குளிர்கிறது; குளிர் அலைகளுக்குமேல்

சீதையின் முகம் காட்சியளிக்கிறது

உலர்ந்து உதிர்ந்திருக்கலாம் திரு நெற்றியில் இட்ட குங்குமம்

சூடு தணிக்க இப்பாடல் இல்லாமலிருந்தால்

சஞ்சயின்  எழுந்தாளே துணைவராதிருந்தால் தேவி

உள்ளே பொசுங்கியிருப்பாள் அக்கினி தேவன் கைகளில்

 

தீயைக் குளிரவைத்து சீதையைப் பொசுக்காமல்

பூமிக்குத் திரும்பத் தந்த பாடலே நன்றி.


தலைக்காவிரி



                                                                            பாகமண்டலம்


                                                           சாரி வெடலின...


தலைக் காவேரியில் இப்போது

என் காலை நனைக்கும் நீர்

எத்தனையோ நாட்கள் கழித்து

ஒருமுறை

திருவையாற்றைக் கடந்து போகலாம்

 

தியாகராஜரின் சாரி வெடலின…

அசாவேரியில் ஒழுகும் காவேரிக் கீர்த்தனை

நூற்றாண்டுகளினூடே

மீண்டும் மீண்டும்

என்னை அடைவதுபோல அல்ல

 

ஒரு குளம் காவேரி

கீழே பாகமண்டலத்தில்

நதியாகச் சட்டென்று தோன்றும்

சங்கமமாக விரியும்

 

சஞ்சய் சுப்ரமணியன் பாடி

நான் கேட்டதில்லை

‘சாரி வெடலின…’

 

எனினும்

… ஈ காவேரி ஜூடரே

 

சஞ்சயின் குரல்வளையில்

சட்டென்று தோன்றி

எனக்குள் எப்போதும்

துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டேயிருக்கும்.


                                                                           பி ராமன் 

 

வியாழன், 10 ஏப்ரல், 2025

குளிர் தருவின் நிழல்

                                                          குளிர் தருவின் நிழல்

என்னுடைய கணினிக் கோப்புகளை அண்மையில் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். முன்பு எழுதிய சில கட்டுரைகளும் கவிதைகளும் அங்கங்காகச் சிதறி ஒளிந்திருந்தன. அவற்றை வரிசைப்படுத்தவும் விலக்கவும் ஒருமுறை வாசித்துப் பார்ப்பது நல்லது என்று வாசிப்பில் ஈடுபட்டேன். சில கட்டுரைகள் வாசிப்புக்குச் சேதாரம் விளைவிக்காதவையாக இருந்தன. அவற்றில் ஒன்று என்னுடைய கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர். கமலேசுவரனைப் பற்றி எழுதிய கட்டுரை. பேராசிரியரின் எண்பத்தைந்தாம் வயது நிறைவையொட்டி அவரது நண்பர்களும் நம் விரும்பிகளும் மாணவர்களும் பங்கேற்ற  மலருக்காகக் கட்டுரையை எழுதினேன். மலர் வெளிவந்திருந்தும் காணக் கிடைக்கவில்லை. வெளிவந்திருந்தாலும் பரவலாக வசிக்கப்படும் வாய்ப்பில்லை. எனவே கட்டுரையைப் பத்திரப்படுத்தி வைக்கும் நோக்கிலும் பேராசிரியரின் மாணவர்கள் எவராது அவரை நினைவுகூரலாம் என்ற ஆசையிலும்  எவருக்காவது சின்ன அளவிலாவது பயன்படலாம் என்ற எதிர்பார்ப்பிலும் இங்கே பகிர்கிறேன்.





                            டாக்டர்  கே எஸ் கமலேசுவரன் துணைவியாருடனும் மாணவர்  பெருமாள் முருகனுடனும்  


 

ன்னிடம் பயின்ற மாணவர்களைக் குறிப்பாக நினைவில் வைத்துக் கொள்வது ஓர் ஆசிரியருக்கு இயலாத செயல். ஆனால் தங்கள் மீது நல்லாதிக்கம் செலுத்திய ஆசிரியரை மாணவர்கள் எப்போதும் நினைவுகூர்வது இயல்பு. எனக்குக் கற்பித்த ஆசிரியர்களில் நினைவில் அகலாது நிற்கும் தகுதியுடையவர்களில் பேராசிரியர் டாக்டர். கே. எஸ். கமலேசுவரனும் ஒருவர். அவரிடம் பயின்றவன், அவரது ஆளுமையால் பாதிப்படைந்தவன் என்ற நிலைகளில் அவர் எனக்கு மறத்தற்கு அரியவர்.

 

எனது கல்லூரிப் படிப்பைக் கோவை,  பூசாகோ கலை அறிவியல் கல்லூரியில் மேற்கொண்டேன். புகுமுக வகுப்பு, பட்ட வகுப்பின் முதல் இரண்டு ஆண்டுகளில் தமிழ்ப் பாடத்தைக் கற்றுக் கொடுத்தவர்களில் கமலேசுவரனும் ஒருவர். செய்யுட் பகுதிகளைக் பேராசிரியர். பாஸ்கரதாசும் உரைநடை, துணைப்பாடப் பகுதிகளைக் கமலேசுவரனும் கற்பித்தார்கள். அவர்களிடம் கற்ற தமிழ்தான் இன்று ஓர் எழுத்தாளனாகவும் இலக்கியச் செயல்பாடுகளில் தொடர்ந்து ஆர்வம் கொள்பவனாகவும் வைத்திருக்கும் காரணிகளில் முக்கியமானது. சரியாக அரை நூற்றாண்டுக் காலத்துக்குப் பின்னரும் அந்த நினைவுகள் பசுமை மங்காமல் மிளிர்கின்றன. அந்தப் பாடங்கள் காலாவதியாகாமல் தொடர்கின்றன.

 

புகுமுக வகுப்பில் முதல் தமிழ்ப் பாடவேளையிலேயே டாக்டர். கமலேசுவரன் அறிமுகமானார். நான் பயின்றது உயிரியல் பிரிவில். அந்தப் பிரிவின் தலைவரான தாவரவியல் பேராசிரியர் ராஜாராம் முதலில் அறிமுகமானார். இரண்டாவது அறிமுகமானவர் தமிழ்ப் பேராசிரியரான கமலேசுவரன் அவர்கள்.  கறுத்த குள்ளமான உருவம். அரைக் கை சட்டையும் கால் சராயும் அணிந்த தோற்றம். வகிடெடுத்து ஒழுங்குபடுத்தினாலும் ஒதுங்காமல் நெற்றியில் விழும் கோரை முடி, அதை அடிக்கடி ஒதுக்கி விட உயரும் கைகள். தடித்த கண்ணாடி. இந்தக் கோலத்தில் அவரைப் பார்த்த முதல் நொடி இன்னும் நினைவில் இருக்கிறது. மற்ற மாணவர்களுக்கு அவரைப் பற்றிய எண்ணம் என்னவாக இருந்திருக்கும் என்று ஊகிக்க முடியவில்லை. ஆனால் மாணவர்களைத் தோழமையுடன் ‘குஞ்சுகளா’ என்று அழைத்த பாங்கு என்னை அவர்பால் ஈர்த்தது. அவருடைய மாணவனாக இருந்த நாள்கள் அனைத்திலும்  அந்த அழைப்பைக் கேட்கும்  வாய்ப்பு அமைந்தது.

 

அன்று புகுமுக வகுப்புப் பாடத்திட்டத்தில் புதுமைப் பித்தன், அகிலன், ஜெயகாந்தன், ஜெகசிற்பியன், அறிஞர் அண்ணா ஆகியோர் உள்ளிட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இடம் பெற்றிருந்தது. தொகுப்பின் முதல் கதை புதுமைப் பித்தனின் ‘ஒரு நாள் கழிந்தது’. கமலேசுவரன் முதல் வகுப்பில் பேசியதும் அதைப் பற்றித்தான். மாணவர்களுடனான அறிமுகத்துக்கும் ஆசிரியரின் தன்னறிமுகத்துக்கும் பிறகு கதையைப் பற்றிய பேச்சைத் தொடங்கினார். கதையை முன்னிருத்தியதற்குக் காரணம் அறிமுக  வகுப்பிலேயே மாணவர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தி விடக் கூடாது என்ற நல்லெண்ணமாக இருக்க வேண்டும். ஆனால் அது எல்லா மாணவர்களுக்கும் உகந்ததாக இல்லை. அந்தப் பேச்சு  நான் ஏற்கனவே அறிந்த உலகத்துக்கு என்னை மீண்டும் அழைத்து செல்லும் வாசலாக இருந்தது. ‘புதுமைப் பித்தன் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ என்ற அவருடைய கேள்விக்குத் தயக்கத்துடன் எழுந்து உற்சாகத்துடன் புதுமைப்பித்தன் தொடர்பாகச் சில வார்த்தைகளைச் சொன்னேன். அப்போது அந்தத் தடித்த கண்ணாடிக்குப் பின்னால் அவருடைய விழிகள் விரிந்து சிரித்ததைக் காண முடிந்தது. பிந்தைய ஆண்டுகளில் அந்த விழிநகையைப் பல முறை பார்க்க முடிந்தது.

 

அன்றைய பாடவேளை முடிந்ததும் தமிழ்த் துறைக்கு வந்து பார்க்கும்படிச் சொன்னார். போனேன். என்னைப் பற்றி விசாரித்தார். என்னுடைய இலக்கிய ஆர்வத்தைக் குறித்துக் கேட்டார். ‘புதுமைப்பித்தன் யார்னு கேட்டா எம்ஜியார் படத்தைப் பற்றித்தான் சொல்றாங்க. என்ன பண்றது? நீ சொன்னது ஆச்சரியமா இருந்ததுப்பா’ என்று பாராட்டினார். ஓர் இளம் இலக்கிய ஆர்வலனுக்கு அது பெரும் ஊக்கம். பின்னர் அவ்வாறு பல முறை ஊக்கமூட்டியிருக்கிறார்.

 

அப்போது கல்லூரியில் ‘மாணவர்களுக்காக மாணவர்களால் நடத்தப்படும்  மாணவர்’ இதழ் ஒன்று வெளியிடப்பட்டது. பெயர் ‘புது வெள்ளம்’. மாணவர் இதழ் எனினும் பொறுப்பாளராகத் தமிழ்த் துறைப் பேராசிரியர் முத்துராமலிங்கம் இருந்தார். அதன் முதல் இதழிலேயே என்னுடைய கதை ஒன்று வெளிவந்தது. இரண்டாம் இதழில் கவிதையும் கதையும் வெளியாயின.  அவற்றை ஒட்டித் தமிழ்த்துறைக்கு அடிக்கடி செல்லும் தேவையும் வாய்ப்பும் ஏற்பட்டன. அந்தத் தருணங்களில் அதிகமும் சந்தித்தது டாக்டர். கமலேசுவரனைத்தான் என்பது தற்செயல்  அல்ல. துறையின் பிற பேராசிரியர்களுடன் உரையாடுவதை விட அவருடன் உரையாடுவதன் மூலம் புதிய செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது என்பதே காரணம். அந்தப் போக்குவரத்தில் நவீனச் சிற்றிதழ்களையும் புதிய புத்தகங்களையும் குறித்து அறிந்துகொள்ள முடிந்தது. தமிழ்த்துறை நூலகத்திலிருந்து சில நூல்களை எடுத்துச் சென்று வாசிக்கும் சலுகையையும்  அளித்திருந்தார்.

 

புகுமுக வகுப்புக்குப் பிறகு எனது படிப்பில் ஓர் ஆண்டு இடைவெளி விழுந்தது. வெறும் பட்டப்படிப்புக்குப் பதிலாக வேறு படிப்பை விரும்பினேன். குடும்பப் பொருளாதாரச் சூழலால்  அந்தக் கனவு நிறைவேறாமல் போனது. ஓர் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அதே கல்லூரியின் இளம் அறிவியல்- வேதியியல் பட்ட வகுப்பில் சேர்ந்தேன். அது மகிழ்ச்சியைக் கொடுத்தது. நான் பார்த்து வியந்த அற்புதமான கல்லூரி நூலகத்துக்குச் செல்லவும் என் தமிழைச் செம்மைப்படுத்த உதவும்  தமிழாசிரியர்களைச் சந்திக்கவும் மீண்டும் கிடைத்த வாய்ப்பு அந்த மகிழ்ச்சியின் பின்னணி.

 

இடைவெளி ஏற்பட்டிருந்த ஓராண்டில் நிறைய வாசிக்கவும் கவனத்துடன் எழுதவும் கற்றுக் கொண்டிருந்தேன். அதை எனக்கு உணர்த்தியவரும் டாக்டர். கமலேசுவரன் அவர்கள்தான். பட்ட வகுப்பின் முதலாம் ஆண்டைப் பெரும்பாலும் கல்லூரி நூலகத்திலேயே செலவழித்தேன். பாடத்துக்குத் துணையாகும் புத்தகங்களை வாசித்ததை விட இலக்கிய நூல்களை வாசித்ததே அதிகம். அப்படி ஒரு நாள் நூலகத்தில் நான் வாசித்துக் கொண்டிருந்தேன். வாசித்துக் கொண்டிருந்தது ஓர் ஆங்கில நூல். பிரெஞ்சு எழுத்தாளரும் தத்துவவாதியுமான சார்த்தரின் ‘ எக்சிஸ்டென்ஷியலிசம் ( Exisitentialism ? ) என்ற நூல். வாசிப்பில் மூழ்கியிருந்தபோது புத்தகத்தின் மீது நிழல் விழுவதை உணர்ந்தேன். என் முதுகுப் பக்கமாக இருந்து நான் வாசித்துக் கொண்டிருந்த நூலின் பக்கத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார் பேராசிரியர். வகுப்பு நடக்கும் நேரத்தில் ஒருவன் அத்துமீறலாக நூலகத்தில் இருக்கிறான் என்பதைக் கண்டுபிடித்து விட்டார் என்ற அச்சத்தில் எழுந்து நின்றேன். அவர் புத்தகத்தை எடுத்து முகப்பைப் பார்த்து விட்டு மேசைமீதே வைத்தார். ‘அடே குஞ்சு நீ இதையெல்லாம் படிக்கிறியா என்ன? ‘ என்று கேட்டு விட்டு நகர்ந்தார். அச்சம் நீங்கிப் பெருமூச்சு விட்டேன். அந்த நாளின் சுப விளைவு மறுநாள் தெரிந்தது.

 

அடுத்த நாள் உயிர் வேதியியம் வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது அறை வாசலில் பேராசிரியர் கமலேசுவரன் வந்து நின்றார். வகுப்பை நடத்திக் கொண்டிருந்த பேராசிரியர் சுதாகரிடம் அனுமதி கோரி என்னை வெளியே அழைத்தார். போனேன். கையிலிருந்த கனமான புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். ‘நீதான் எக்சிஸ்டென்ஷியலிசம் படிக்கிறியே, இதையும் படி’ என்று அவர் கொடுத்த புத்தகம் சார்த்தரின் ‘இருப்பும் இன்மையும்’ ( Being and Nothingness ). அவர் கொடுத்தது என்பதனாலேயே அந்தப் புத்தகத்தை விழுந்து விழுந்து படித்தேன். அவரிடம் திரும்பக் கொடுத்தபோது ‘படிச்சேன் சார், ஆனா ஒண்ணும் புரியல’ என்றேன். ‘சரி , புரியவரைக்கும் படி. அதை நீயே வெச்சுக்கோ’ என்றார். மிக நீண்ட காலம் அந்தப் புத்தகம் என் புத்தகச் சேகரிப்பில் இருந்தது. பேராசிரியரை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. இருப்பிடம், ஊர் மாற்றங்களில் அந்த நூல் காணாமற் போனது. ஆனால் அந்த இன்மை பேராசிரியரின் இருப்பைப் பற்றிய உணர்வைப் போக்கி விடவில்லை.

 

பேராசிரியர் கமலேசுவரனின் வகுப்புகள் ஆர்வமுள்ள மாணவருக்கு சுவாரசியம் அளிப்பவை. பாடப் பொருளைச் சார்ந்து தீவிரமாக அமைந்தவை. மையப் பொருளை விட்டு விலகாத பயிற்று முறை அவருடையது . மையப் பொருளை ஒட்டிய வெளி விவரங்கள், சம காலத் தகவல்கள் இடம் பெறும் . இவையெல்லாம் பாட வேளையின் ஒரு மணி நேரத்தின் முக்காற் பங்கில் நிறைவேறும், எஞ்சிய கால் மணி நேரம் ஏறத்தாழ அரட்டைப் பொழுதுதான். ஆனால் அந்த அரட்டையிலும் பயனுள்ள தகவல்களும் புதிய பார்வைகளும் நிச்சய்ம் இருக்கும். சமயங்களில் நகைச்சுவையும் ததும்பும். அந்த நகைச்சுவை காலமெல்லாம் நினைத்துச் சிரிக்கவைப்பதாகவும் . இலக்கியத்தில் இடம் பெறும் வருணனைகளப் பற்றி ஒருமுறை சொல்லிக் கொண்டிருந்தார். ‘புலவர் சொல்கிற வர்ணணைகளை ஆராய்ந்து பார்த்தால் வில்லங்கமாக இருக்கும் . அன்ன நடைன்னு சொல்றாங்க இல்லையா, அதைப் பார்த்திருக்கீங்களா? சகிக்காது. பொச்ச ஆட்டீட்டு நடக்கறதப் பார்த்தா நல்லாருக்குமா?’ என்று கேட்டதும் வகுப்பே அதிர்ந்து சிரித்தது. இன்றும் அந்த கூட்டுச் சிரிப்பு ஞாபகத்தில் முழங்குகிறது.

 

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழுக்குச் செம்மொழித் தகுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம் , அ.ராமசாமியின் முன்னெடுப்பில் நடத்திய இலக்கிய நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டேன். நண்பர் பெருமாள் முருகனும் கலந்து கொண்டிருந்தார். அவரது உரை கேட்க அமர்ந்திருந்த மாணவர்களில் ஒருவனாக நானும் அமர்ந்திருந்தேன். உரை இயல்பாகத் தொடங்கி வகுப்பறைப் பாட வேளையாக மாறியது. மெல்ல மெல்லத் தகவல்கள் கோக்கப்பட்டு வளர்ந்து உச்சத்தை எட்டியது. முடியும்போது தீவிரமான வகுப்பறையில் பாடம் கேட்ட உணர்வு எழுந்தது. கூடவே இதே போலப் பாடம் நடத்துவதை முன்பே கேட்டிருக்கிறோம் என்ற எண்ணம் ஓடியது. சற்று நேரம் யோசித்த பின்னர் மூலம் பிடிபட்டது. அது பேராசிரியர் கமலேசுவரனின் பயிற்று முறை. முருகனும் அவர் மாணவர் என்பது நினைவுக்கு வந்ததும் பேராசிரியரின் பாதிப்புப் புலப்பட்டது.

 

என்னுடைய கல்லூரி நாட்களில் கமலேசுவரனை இளநிலை பட்ட வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடத்தைக் கற்றுத்தரும் வாத்தியாராக மட்டுமே அறிந்திருந்தோம். ஏனெனில் அன்று முதுநிலைப் பட்ட வகுப்பில் மட்டுமே தமிழ் தனிப்பாடமாக இருந்தது. அவருக்கு அணுக்கமான மாணவர்கள் ஒரு சிலர் மட்டுமே அவரது ஆளுமையின் இன்னொரு பக்கத்தை அறிந்திருந்தார்கள். மொழியியலாளராக அவரது பங்களிப்பைப் புரிந்து கொண்டிருந்தார்கள். அவரை ஒரு மொழியியல் ஆய்வாளராக நான் அறிந்து கொண்டதும் எதிர்பாராத செயல். அது அவரும் பங்களிப்புச் செய்து வந்த ‘புலமை’ இதழ் மூலம் நிகழ்ந்தது. அவர் எனக்கு வாசிக்கக் கொடுத்த இதழ்களில் புலமையும் இருந்தது. ஆனால் அது என்னுடைய வாசிப்புக்காகக் கொடுக்கப் பட்டதல்ல. எனது இன்னொரு ஆசிரியரான கோவை ஞானியிடம் சேர்ப்பிக்க என்னிடம் ஒப்படைக்கப் பட்டது. எல்லா இதழ்களையும்புரட்டிப் பார்ப்பதுபோல அதையும் புரட்டிப் பார்த்ததில் பேராசிரியரின் கட்டுரையையும் வாசிக்க நேர்ந்தது. வாசிப்பில் எழுந்த ஐயங்களை அவரிடம் கேட்டேன். ‘இன்னிக்கு சாயங்காலம் வகுப்பு முடிந்ததும் துறைக்கு வா’ என்றார். சென்றேன். ‘ராத்திரி வீட்டுக்கு வரலேன்னா தேட மாட்டங்கன்னா என் கூட வா’ என்றார். எங்கள் பகுதியிலிருந்து வந்து படிக்கும் சக மாணவரிடம் வீட்டுக்குத் தகவல் தெரிவிக்கச் சொல்லி விட்டு அன்று மாலை அவருடன் அவர் வீட்டுக்குச் சென்றேன். அன்றைக்கு அவர் மட்டுமே இருந்தார். தயாராக இருந்த உணவை அருந்தி முடித்த பின்பு அவரது மொழியியல் வகுப்பு நடைபெற்றது. புதிய திசையின் கதவுகளைத் திறந்து விட்ட சிறப்பு வகுப்பு அது. அன்று அதன் பயன் தெரியவில்லை. இலக்கியத்தில் மும்முரமாக ஈடுபட்ட காலத்தில் புதிய பேசுபொருளாக மொழியியலும் இடம் பெற்றபோது அவர் எடுத்த தனி வகுப்பின் பொருத்தம் விளங்கியது.

 

டாக்டர். கமலேசுவரன் மரபான தமிழ்ப் பேராசிரியர் அல்லர் என்பது என் கருத்து. பிற தமிழாசிரியர்களிடம் காணப்பட்ட தமிழ் வெறி அவரிடம் காணப் பட்டதில்லை. அவரிடம் கண்டது தமிழ் மீதான பற்றும் அதை அறிவியல் சார்ந்து பார்க்கும் அணுகுமுறையும். அவரது ஒப்பாய்வுகளிலும் மொழி ஆய்வுகளிலும் ஓர் இலக்கியப் பயிற்சியாளனாக எனக்குத் தேவையானதாக எடுத்துக் கொண்டது அந்தப் பார்வையைத்தான். கல்லூரிப் பருவத்துக்குப் பின்பு அவரை அனேகமாகச் சந்தித்ததில்லை. அது விட்டகுறையாக இப்போது உறுத்துகிறது. தொடர்பில் இருந்திருந்தால் இன்னும் திட்பமான எல்லைகளை இலக்கியத்திலும் எட்டியிருக்க முடியும். முடியாமற் போனது பேரிழப்புத்தான்.

 

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவரைச் சந்தித்தேன். அவருக்கு என்னையும் எனக்கு அவரையும் அடையாளம் தெரியவில்லை. நினைவூட்டல் அவருக்குப் பயனளிக்கவில்லை என்பது உரையாடலில் விளங்கிற்று. அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுப் பல ஆண்டுகள் கடந்திருந்தன. உடல் தளர்ந்திருந்தது. நினைவு அந்தி வெளிச்சத்தை அடைந்திருந்தது. இரண்டு விஷயங்கள் அன்று சட்டென்று புலப்பட்டன. ஒன்று; முன்னாள் மாணவனை பன்மையில் அழைத்தார். இரண்டு : குஞ்சு என்ற வாஞ்சையான முகமனை மறந்திருந்தார். அவற்றை அவரும் அவரது துணைவியாரும் உபசரிப்பால் ஈடுகட்டினார்கள். முதிய வயதிலும் இளமை மிளிர அவர்கள் காட்டிய விருந்தோம்பல் என்றும் நினைவில் சுவை குன்றாமலிருக்கும்.

 

இந்தச் சந்திப்புக்குப் பிறகும் ஏனோ அவருடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற முனைப்பு உருவாகவில்லை. அதையும் பேராசிரியரே நிறைவேற்றினார். சென்ற ஆண்டு ( 2023 ) இதய நோய் அறுவைச் சிகிச்சைக்கு உள்ளானேன். இன்றைய மருத்துவ முன்னேற்றத்தில் அது பொருட்படுத்தப்பட வேண்டாதது  என்பதால் அதைப் பற்றி யாருக்கும் தெரிவிக்கவும் விரும்பவில்லை. ஒரு நாள் காலை தொலைபேசி அழைத்தது. ‘’ நான் கமலேசுவரன் பேசுகிறேன். அறுவைச் சிகிச்சை பற்றிக் கேள்விப்பட்டேன். நலமாக இருக்கிறீர்களா?’’ என்று விசாரித்தார். விசாரிப்புக்குச் சட்டென்று பதில் சொல்ல முடியாதபடி குரல் தழுதழுத்தது. கண்கள் நிறைந்தன. அந்தப் பெருந்தன்மைக்கு முன் பேச்சு வரவில்லை.

 

பெருமரங்கள் நிழல் கொடுக்கின்றன. அந்தக் கொடையை மரங்கள் நினைவில் கொள்வதில்லை. ஆனால் நிழலை உணர்ந்தவன் அந்தக் கொடையை மறப்பதில்லை. பேராளுமையான கமலேசுவரனின் நிழலில் இளைப்பாறிய ஆயிரக் கணக்கான மாணவர்களில் நானும் ஒருவன் என்பது கிடைத்த வாய்ப்பு அல்ல; கிட்டிய பேறு.

                                                                                    @

புகைப்படத்துக்கு நன்றி: பெருமாள் முருகன்

 


 


 

 

 

 

 

 

 

வெள்ளி, 24 ஜனவரி, 2025

 




எம்.டி.யின் காலம் 

 

நவீன மலையாள இலக்கியத்தில் எம்.டி. வாசுதேவன் நாயருக்குக் கிடைத்த முதன்மையும் புகழும் வாசக அங்கீகாரமும் கேரளத்தில் வேறு எந்த எழுத்தாளருக்கும் வாய்க்கவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். 1950 களில் தொடங்கி 2000 வரையிலான நீண்ட அவருடைய எழுத்து வாழ்க்கையில் அனேகமாகப் பின்னடைவு ஏற்பட்டதில்லை. அவருடைய கடைசிச் சிறுகதைத் தொகுப்பு 1998 இலும் கடைசி நாவல் 2002 இலும் வெளிவந்தன. அதன் பின்னர் அவருடைய படைப்பாக எதுவும் வெளியாகவில்லை. ஆனால் எம்டியின் அதுவரையான படைப்புகளில் மனம் தோய்ந்திருந்த வாசகர்கள் அவரிடமிருந்து எதோ ஒன்றுக்காகக் காத்திருந்தார்கள். அப்படி அவர்கள் காத்திருக்கும் மனநிலையை ஒரு படைப்பாளியாக எம்டி உருவாக்கி வைத்திருந்தார். அவருடைய ஏறத்தாழக் கடைசி எழுத்தாக நான் வாசிக்கக் கிடைத்தது ஒரு சிறு பத்தி. மலையாள மொழி வாரத்துக்காக அவர் எழுதிய மொழிப் பிரகடனம். மலையாள மொழியின் சிறப்புகளை வரிசைப்படுத்தி சொல்லி விட்டு இறுதியாக 'என் மொழியே நான் நானே என் மொழி' என்று அந்தப் பிரகடனத்தை முடித்திருந்தார். அது பொதுவான பிரகடனமல்ல; தன்னைப் பற்றிய எம்டியின் பிரகடனமும் கூட என்றே தோன்றியது. எழுத்தாளன் காலத்தின் கையில் ஒப்படைத்துச் செல்வது தன்னுடைய மொழியைத்தான்.


எம்டியை ஒரு காலகட்டத்தின் பிரதிநிதி என்றும் காலகட்டத்தை உருவாக்கிய முன்னோடியென்றும் கருதுகிறேன். அவர் எழுத வந்தது முற்போக்கு இலக்கியத்தின் செல்வாக்கு மங்கத் தொடங்கிய காலத்தில். வைக்கம் முகம்மது பஷீர், தகழி சிவசங்கரப் பிள்ளை, பொன்குன்னம் வர்க்கி, பி.கேசவதேவ், செறுகாடு போன்ற எழுத்தாளர்கள் மனிதர்களின் சமூக வாழ்க்கையை எதார்த்தமாகச் சித்தரிக்கும் படைப்புகளை உருவாக்கியிருந்தார்கள். இதற்கு இணையாகவே எஸ்.கே.பொற்றேகாடு உரூப் ஆகியவர்கள் கற்பனைவாத
ப்  புனைவுப் போக்கைக் கடைப்பிடித்தார்கள். மனித அகங்களை முன்னிருத்திய படைப்புகளை எழுதினார்கள். இந்த இரண்டு வகையான எழுத்து முறைகள் சாதனைகளை முன்வைத்தது போலவே  போதாமையையும் கொண்டிருந்தன. மனித மனத்தின் உட்கிடைக்கைகளை அவை இயல்பாக வெளிப்படுத்தவில்லை என்பதே அந்தப் போதாமை. அந்தப் போதாமையை இல்லாமற் செய்த எழுத்துகள்  எம்டியுடையவை. மனிதர்களின் அகச் சிக்கல்களை மிகையுணர்ச்சி சாராமல் இயல்பாக வெளிப்படுத்தும் படைப்புகளை எம்டி வழங்கினார். தனி நபர்களே அவற்றில் முதன்மை பெற்றார்கள். அவருடைய சம காலத்தவர்களான மாதவிக் குட்டியும் டி.பத்மனாபனும் இதே போக்கிலான படைப்புகளை எழுதினார்கள். ஆனால் இந்தப் போக்கின் வலுவான பிரதிநிதியாக எம்டியைத்தான் குறிப்பிட விரும்புகிறேன். அழுத்தமானது அதே சமயம் மென்மையானது, மிதமானது அதேசமயம் அமைதியானது உணர்ச்சிகரமானது அதேசமயம் அசட்டுருக்கம் இல்லாதது என்று எம்டியின் எழுத்தைச் சொல்வேன்.


சமூக எதார்த்தத்தை மையமாகக் கொண்ட படைப்புகளும் அக உணர்வுகளைச் சித்தரித்த செவ்வியல் நோக்கிலான ஆக்கங்களும் தேக்கம் காணத் தொடங்கிய கால அளவில் மலையாள இலக்கியத்தில் நவீனத்துவம் அறிமுகமானது. புழக்கத்திலிருந்த எழுத்து முறைகளை நவீனத்துவம் கேள்விக்குட்படுத்தியது.
படைப்பின் உள்ளும் புறமும் மாறின.  எதார்த்தமான படைப்பாக்கத்தில் ஈடுபட்டிருந்த முக்கியமான எழுத்தாளர்கள் நவீனத்துவத்துக்கு மாறினார்கள். அதுவரை தன்னுடையதான எதார்த்தவாதப் போக்கில் கதைகள் எழுதி வந்த ஓவி விஜயன் நவீனத்துவத்துக்கு மாறியதை உதாரணமாகச் சொல்லலாம். நவீனத்துவத்தின் அலை வீச்சு அந்த அளவுக்கு வீரியமானதாகவும் பரவலானதாகவும் இருந்தது.

 

ஆனால் நவீனத்துவப் போக்கைப் பற்றி அறிந்திருந்த எம்டி இந்தப் அலை வீச்சுக்கு ஈடுகொடுத்தார். தானாகக் கண்டடைந்த எழுத்துமுறையிலேயே காலூன்றி நின்றார். அதையே தொடர்ந்தார். ஆனால் ஓர் இலக்கியவாதியாக நவீனத்துவ எழுத்தை ஊக்குவித்தார். இன்று நவீனத்துவ எழுத்தாளர்களாகக் கொண்டாடப்படும் சக்கரியா, என்.எஸ்.மாதவன், சேது, ஓவி விஜயன் ஆகியோரது படைப்புகள் அவர் ஆசிரியராக இருந்த மாத்ருபூமியில் வெளியாயின. அமெரிக்க நவீனத்துவ எழுத்தின் முன்னவர்களில் ஒருவராகக் கருதப்படும் ஹெமிங்வேயைப் பற்றி விரிவான அறிமுக நூலையும் (ஹெமிங்வே -ஒரு முகவுரை ) அவர்தான் எழுதினார். இவையெல்லாம் ஒரு காலகட்டத்தை உருவாக்கிய பிரதிநிதியாக அவரை அடையாளம் காட்டுபவை.

 

குறிப்பிட்ட சூழலில் மனிதர்கள் எப்படி நடந்து கொள்கிறாள் என்பதற்கு இணையாகவே எப்படி நினைக்கிறார்கள், எப்படிச் சிந்திக்கிறார்கள் என்பதை எம்டி தன்னுடைய படைப்புகளில் ஆராய்ந்தார். இந்த ஆராய்ச்சியே அவரது படைப்புகளில் இடம் பெறும் பாத்திரங்களின் செயல்கள் அந்தப் பாத்திரங்களின் கதையாக மட்டுமல்ல அவர்கள் வாழும் சமூகத்தின் கதையாகவும் குடும்பங்களின் கதையாகவும் உறவுகளின் கதையாகவும் மாற உதவுகின்றன.


மலையாளிகளின் சமூக வாழ்க்கையின் ஒரு குறிப்பிடத் தகுந்த காலப் பகுதியை எம்டி தன்னுடைய படைப்புகளில் சித்தரித்தார். மருமக்கள் தாய முறையிலிருந்து மக்கள் தாய முறைக்குக் கேரளத்தின் சமூகம் மாறிக்கொண்டிருந்த காலம். அதன் விளைவாக எழுந்த சிக்கல்களையே எம்டியின் கணிசமான படைப்புகளும் பேசுகின்றன. தாய்வழிச் சமூக மரபில் தாய் மாமனே ( தாய் மாமனே ) ஒரு குடும்பத்தின் காரணவர் (தலைவர்). அவரது அதிகாரமே
ஓங்கி நின்ற நாட்கள் அவை. ஆனால் கல்வியும் உலகியல் அறிவும் கைவரப் பெற்ற புதிய தலைமுறை அந்த அதிகாரத்தின்கீழ் மூச்சுத் திணறியது. அதிலிருந்து விடுபடத் தவித்தது. அந்த அதிகாரத்தை எதிர்த்தது. இந்த சிக்கலான காலத்தின் மனிதர்கள் படும் அவலங்களையே எம்டி தன் எழுத்தில் வெளிப்படுத்தினார். குறிப்பாக இளம் தலைமுறையின் மௌனக் கோபத்தை அவரது படைப்புகள், பெரும்பான்மையும் அவரது முக்கியமான நாவல்கள், வெளிப்படுத்தின. தறவாட்டு அமைப்பில் தாங்கள் இழந்துபோன சுயத்தை மீட்டெடுக்கும் சீற்றம் அது. கேரள சமூகத்திலும் இந்தக் கோபம் நிலவியது. அந்த எதார்த்தத்தை எம்டி எழுத்தில் காட்டினார் என்பதும் எம்டி எழுத்தில் காட்டிய எதார்த்தம் நடைமுறை வாழ்க்கையில் பிரதிபலித்தது என்பதும் உண்மை. இலக்கியமும் வாழ்க்கையும் இணையும் அந்தப் புள்ளியை எம்டி சுட்டிக் காட்டினார். அறுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளிலும் மலையாளத்தில் எழுதப்பட்ட பல நாவல்களும் கோபக்காரர்களை முதன்மைப் பாத்திரங்களாகக் கொண்டிருந்தன என்பது நினைவுக்கு வருகிறது.


எம்டியின் முதல் நாவல் 'நாலுகெட்டு'. 1958 இல் வெளிவந்தது. தொடராக இல்லாமல் நாவலாகவே வெளிவந்த படைப்பு இது. தலைப்பு எடுத்துக் காட்டுவதுபோல நாலுகெட்டுத் தறவாட்டின் அங்கமான அப்புண்ணியின் அனுபவங்கள்தாம் கதையாடல். வாழ்க்கையால், அதை நிர்ணயிக்கும் மனிதர்களால் பட்ட அவமானங்களுக்குப் பழி தீர்க்கத் துடிப்பவன். அந்தச் சிக்கல்களையே நாவல் பேசுகிறது. குற்றவுணர்வும் துணிவும் வன்மமும் கழிவிரக்கமும் சாகசமும் இணைந்த  ஆளுமையாக அவனைச் சித்தரிக்கிறார் எம்டி. இந்த குணச்சித்திரம் அவரது மற்ற நாவல்களான காலம், அசுரவித்து ஆகியவற்றின் ஆக்கத்திலும் காண முடிகிறது.

 

'காலம்' (1969) நாவலின் மையப்பாத்திரமான சேது தறவாட்டிலிருந்து வெளியேறத் தவிக்கிறான். படிப்பை முடித்து தொழில் செய்து முதலாளியாகிறான். தன்னுடைய சுய நலத்துக்காகத் தன்னை நேசிக்கும் பெண்களைச் சரணடையச் செய்கிறான். இறுதியில் இதுவரை தான் அடைந்த எதுவும் நிரந்தரமில்லை என்று உணர்கிறான்.

 

'அசுரவித்து' ( 1962 ) நாவலின் பாத்திரமான கோவிந்த குட்டியுடன் சமூகம் முரண்படுகிறது. இந்து முஸ்லிம் விரோதம் கிராமத்தையே உலுக்குகிறது. இஸ்லாமைத் தழுவி அப்துல்லாவாக மாறுகிறான்.


கெட்டி தட்டிப் போன அமைப்புக்களுக்கெதிராக மனிதர்கள் மேற்கொள்ளும் போராட்டத்தையே இந்த நாவல்கள் ஆராய்கின்றன. தங்களது அகப் போராட்டங்களின் இறுதியில் இந்தக் கதை மாந்தர்கள் அடையும் பக்குவம் அல்லது படிப்பினைகள்தாம் முக்கியமானவை. நாலுகெட்டு நாவலின் பாத்திரமான அப்புண்ணியின் எண்ணம் தன்னுடைய தந்தையைக் கொன்ற செய்தாலியைப் பழிவாங்குவது. ஆனால் அவன் பெறும் அனுபவங்கள் இறுதியில் அவனை செய்தாலியின் பாதுகாவலனாக மாற்றுகின்றன. பழி வாங்குவதற்கான தகுதியை வளர்த்துக் கொண்டால் போதும் பழி வாங்க வேண்டுமென்று அவசியமில்லை என்பதை உணர்த்துகி
ன்றன தன்னுடைய வாழ்க்கையை அவலத்துக்குள்ளாக்கிய கிராமத்தினரை அப்துல்லா என்ற கோவிந்தன் குட்டி கருணையின் மூலமாக வஞ்சம் தீர்த்துக் கொள்கிறான். காலராவால் மரித்தவர்களை அடக்கம் செய்ய முன்வந்து அன்பால் பகையை வீழ்த்துகிறான். காலம் நாவலின் மையப் பாத்திரமான சேதுவை வீழ்த்துவதும் பழி தீர்த்துக் கொள்வதும் மனிதர்களல்ல; காலம்தான்.


எம்.டியின் படைப்புகள் மீதான விமர்சனங்களில் ஒன்று அவை ஆண் உலகை மையமாகக் கொண்டவை என்பது. அதை அவரது படைப்புகளின் மீதான விமர்சனமாக இல்லாமல் அந்தக் காலத்தின் மீதான குற்றச்சாட்டாகவே
காண விரும்புகிறேன். பெண்களுக்கு முதன்மையில்லாத கூட்டுக் குடும்ப அமைப்பில், ஆணுக்கு மட்டுமே அதிகாரமுள்ள அமைப்பில் இது பொருத்தமானது. தவிர்க்கவியலாதது என்றே படுகிறது. ஆணின் பிடிக்குள் நெரிபடும் பெண்களையும் இதே படைப்புகளில் சித்தரித்திருக்கிறார் என்றும் பதிலாகச் சொல்ல முடியும். அதை நிவர்த்தி செய்யும் விதத்தில் எம்டி எழுதிய நாவல் மஞ்ஞு (1964). எம்.டியின் நாவல்களில் பெண்ணை மையமாகக் கொண்ட ஒரே நாவல் இதுதான். விமலா என்ற தனியள் காத்திருக்கிறாள். தன்னைக் காதலித்து விட்டுப் போன உத்தரவாதமில்லாத காதலன் திரும்ப வருவான் என்று காத்திருக்கிறாள். அவளுடன் சேர்ந்து ஒரு ஆண் காத்திருக்கிறார். முகமறியாத அன்னிய தேசத்துத் தகப்பனுக்காக ஒரு சிறுவன் காத்திருக்கிறான். ஆணின் காத்திருப்பை விடப் பெண்ணின் காத்திருப்பு முடிவற்றது என்கிறது நாவல்.


எம்டி படைப்புகள் மீதான இன்னொரு விமர்சனம் அவை குடும்பக் கதைகள் என்பது. குடும்பம் என்ற அமைப்பை சமூகம் என்ற பெரிய கட்டுமானத்தின் நுண்வடிவமாகக் காண்கிறார் என்று இதற்கு பதிலளிக்க முடியும். குடும்பம் என்ற சின்ன வடிவத்தைச் சமூகம் என்ற பெரிய வடிவமாகச் சித்தரித்தது போலவே பிரம்மாண்டமானது என்று கற்பிக்கப்பட்ட இதிகாச வடிவத்தையும் எம்டி கையளவு உலகமாக மிக நேர்த்தியாக 'இரண்டாம் ஊழ' (1984) த்தில் காட்டுகிறார். எம்டி படைப்புகளின் ஆதார இயல்புகள் ஒன்று திரண்ட நாவலாக இதைக் குறிப்பிடலாம். இதன் மையப்பாத்திரம் பீமன். சமூக நாவல்களில் நாம் பார்த்த ஆண் பாத்திரங்களின் இதிகாச வடிவம். அவனும் கைவிடப்பட்டவன். சகோதரர்கள் ஐவரில் பலசாலி. அதிகாரத்தில் தருமனுக்குப் பிறகுதான் அவனுக்குப் பங்கு. காதலில் அர்ஜுனனுக்குப் பின்னர்தான் அவனுக்கு இன்பம். எல்லாச் சூழ்நிலையிலும் அவனுக்கு விதிக்கப்பட்டது இரண்டாவது இடம். பீமனின் இந்தக் குமுறலிலிருந்தே மகா பாரதக் கதை விரிகிறது. பீமனுக்குச் சமூகம் தன்னைப் புறக்கணிக்கிறது என்ற கோபம் இருக்கிறது. இரண்டாம் இடத்தில் இருப்பதன் காரணமாக எழும் கொந்தளிப்பே கதையின் மையமாகிறது. நாவல் வெளியானபோது மாபெரும் இதிகாசத்தை எம்டி தறவாட்டுக் கதையாகச் சுருக்கி விட்டார் என்று சொல்லப்பட்டது. இப்போது வாசிக்கும்போது அந்தக் குற்றச் சாட்டு பொருத்தமற்றது என்று தோன்றுகிறது. உண்மையில் மகா பாரதம் சித்தரிப்பது குடும்பப் பகையைத்தான். உறவினர்களே ஒருவருக்கொருவர் எதிரியாகி மோதிக் கொள்வதைத்தான். தெய்வீகக் கதை என்று பாராட்டப்படும் ஒன்றை மானுடக் கதையாக எம்டி மாற்றியிருக்கிறார். இதில
அமானுஷ்யமான சம்பவங்களோ, அசாதாரண மனிதர்களோ இல்லாமல் சித்தரித்திருப்பதை அவரது படைப்பாற்றலின் வெற்றியாகவே பார்க்கிறேன். அவரது படைப்பியல் சார்பு அவதாரப் பெருமையையோ அல்லது இதிகாச மகிமையையோ சார்ந்தது அல்ல. மானுட துக்கத்தின் ஊற்றுக் கண்ணை அடையாளம் காண்பது.

 

எம்டி யின் அக்கறை மனிதர்களை மனிதர்களாக இல்லாமல் செய்யும் அவலத்தை எடுத்துக் காட்டுவது என்று வரையறுக்கலாம். சமூகப் படைப்புகளில் மட்டுமல்ல தொன்மக் கதைகளிலும் இந்த அக்கறையைக் காண முடியும். இரண்டாம் இடத்திலிருந்தே உதாரணத்தைக் காட்டவும் முடியும். அர்ஜுனனின் மகன் அபிமன்யு போர்க்களத்தில் பலியாகிறான். அந்த மரணத்துக்கு பாண்டவ குலம் முழுவதும் கண்ணீர் சிந்துகிறது. அதே களத்தில் பீமனின் புதல்வன் கடோத்கஜனும் கொல்லப்படுகிறான். ஆனால் அந்த மரணம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.கிருஷ்ணனும் ' இதில் துக்கப்பட ஒன்றுமில்லை. கடோத்கஜன் கொல்லப்பட்டதால் அர்ஜூனன் உயிர் தப்பியது. அதற்காக மகிழ்ச்சியல்லவா அடையவேண்டும்' என்று உபதேசம் செய்கிறான். இந்த முரண்நிலை வரலாறு முழுவதும் தொடர்வதையே எம்டி குறிப்பாகக் காட்டுகிறார். இந்தக் கண்ணோட்டமே எம்டியை  செவ்வியல் கலைஞராகவும் அதேசமயம் நவீன மனத்தினராகவும் காட்டுகிறது.


மகத்தான நாவல்களை எழுதியவர். எனினும் மேலும் மகத்தானவராக
நான்  உணர்வது அவரது சிறுகதைகளில்தான். மறுமலர்ச்சிக் காலக் கதைகளுக்கும் நவீனத்துவக் கதைகளுக்கும் பின் நவீனத்துவக் கதைகளுக்கும் ஈடு நிற்கக் கூடிய கதைகள் அவருடையவை. இயல்பிலேயே செவ்வியல்தன்மை கொண்டவை. இந்த மதிப்பீட்டில் அவரை தி.ஜானகிராமனுடன் ஒப்பிட விரும்புகிறேன். வடிவிலும் பொருளிலும் செவ்வியல்தன்மை குன்றாத கதைகளை எழுதியவர்கள் இவர்கள். மாத்ருபூமி வார இதழ் நடத்திய சிறுகதை போட்டியில் பரிசு பெற்ற வளர்த்து மிருகங்கள் கதை எம்டியை மலையாளத்தின் முக்கியமான சிறுகதையாளர்களில் ஒருவராக அடையாளம் காட்டியது. முன்பே சிறுகதைகளை எழுதியிருந்தாலும் வளர்ப்பு மிருகங்கள் கதையே அவருக்குப் பெயர் ஈட்டித்தந்தது. இன்று வாசித்தாலும் புதுமை குன்றாத கதையாக மிளிர்கிறது. புதுமை, உத்தி என்று மெனக்கெடாமல் தனது மரபிலான கதைகளையே எழுதினார். ஆனால் அவை காலத்தைக் கடந்தவையாக நிலைபெற்றிருக்கின்றன. தன்னுடைய கிராமமான கூடல்லூரையும் அங்கே ஓடுகிற நிளா நதியையும் அங்கு வாழ்கிற எளிய மனிதர்களையுமே எம்டியின் கதைகள் சித்தரித்தன. இன்று கூடல்லூர் ஓர் இலக்கியத் தலம். எம்டியின் கதைகள் அந்தத் தலத்தின் புராணங்கள்.

 இலக்கியவாதி பத்திரிகையாளர் திரைப்படக்காரர் என்று எம்டிக்குப் பல்முகங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் முதன்மையானது இலக்கியவாதி என்ற அடையாளம்தான். 'நான் முதலும் முடிவுமாக ஓர் இலக்கியவாதி. மற்றவை எல்லாம் அதை ஒட்டியவைதாம்' என்று எம்டி பல தருணங்களிலும் குறிப்பிட்டிருக்கிறார். பத்திரிகையாளர், சினிமாக்காரர் ஆகிய நிலைகள் அவரது இலக்கியத்துக்குப் புகழைச் சேர்த்தன. அவரது இலக்கியப்புகழ் பிற துறைகளுக்கும் சிறப்புச் சேர்த்தன. மூன்றும் சேர்ந்த அவரது ஆளுமை அரியது. அந்த அருமைதான் கேரளக் கலை கலாச்சாரச் சூழலில் அவரை நிகரற்றவராக ஆக்கியது.


இரண்டு முக்கியமான சந்தர்ப்பங்களில் எம்டி பேசியவற்றை மேற்கோள் காட்டி இந்தப் பேச்சை நிறைவு செய்ய விரும்புகிறேன். முதலாவது, சாலியார் நதி மாசுபடுத்தப்படுவதை எதிர்த்து கோழிக்கோட்டில் நடந்த மக்கள் பேரணியைத் தொடங்கி வைத்து எம்டி ஆற்றிய உரை.

 

தாஸ்தயேவ்ஸ்கியின் ஒரு கதை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது. கதையின் பெயர் முதலை. யாரும் பார்த்திராத ஒரு நாட்டுப் புறத்துக்கு ஒரு முதலையைக் கண்காட்சியாகக் கொண்டு வருகிறார்கள். ஒரு பெரிய முதலை. முதலையைப் பார்க்க வந்த ஒரு ஆள் தவறுதலாக முதலையின் வாய்க்குள் விழுந்து விடுகிறான். அவனைக் காப்பாற்றச் சிலர் முயல்கிறார்கள். வாதங்களும் பிரதிவாதங்களும் நடக்கின்றன. கடைசியில் முதலையின் வாயில் அந்த ஆள் விழுந்ததுதான் தவறு என்று சொல்லப்படுகிறது. இப்போது முதலையைக் காப்பாற்றுவதுதான் முக்கியம் என்றாகிறது. முதலை காப்பாற்றப்பட்டு விடுகிறது. இந்தக் கதையில் வரும் முதலையின் வாயில் சிக்கிய மனிதனின் நிலைதான் சாலியார் மக்களின் நிலைமை. முதலையைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் நமக்கில்லை. நான் காப்பாற்ற வேண்டியது மனிதனைத்தான். பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கான இந்த அறப் போராட்டத்தில் என்னுடைய சொற்களாலும் செயலாலும் பலவீனமான இந்த உடலாலும் செய்யக் கூடிய எல்லா உதவிகளையும் அளிக்கிறேன்.


இரண்டாவது மேற்கோள் ஞானபீடப் பரிசு பெற்றபோது பேசியது.


மானுட இயல்பின் கால மாற்றங்கள் எப்போதும் என்னை ஈர்த்து வந்திருக்கின்றன. மனித நிலைமையின் சிக்கல்கள் என்னை ஈர்க்கின்றன. மிகக் கொடியவன் என்று சொல்லப்பட்ட ஒருவன் ஒருமுறையாவஹ்டு தன்னுடைய மென்மையான மனதைத் திறந்து காட்டுகிறான். நன்மைகளின் நிறைகுடம் என்று புகழப்பட்டவன் எதிர்பாராத விதத்தில் தன்னுடைய கொடிய கோரைப் பற்களைக் காட்டுகிறான். மனிதன் என்ற நித்திய விந்தையைப் பற்றி நான் சிந்தித்து நிம்மதியிழக்கிறோம்.

 

இந்த இரண்டு மேற்கோள்களில் ஒலிக்கும் மானுடத் தவிப்புதான் எம்டி என்ற எழுத்தாளனிலூடே காலம் பகிரங்கப்படுத்திய செய்தி என்று நம்புகிறேன்.




 களம் இலக்கிய அமைப்பு, கோவை - 20.1.2025 அன்று நடத்திய கூட்டத்தில் ஆற்றிய உரை.

 


செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024


                                                              நான்      சுலைகா
 



ஞாயிறு, 7 ஜனவரி, 2024

 




பாலஸ்தீனக் குழந்தைக்கு ஒரு தாலாட்டு

@

ஃபெய்ஸ் அஹம்மத் ஃபெய்ஸ்

@

 

அழாதே, என் குழந்தையே,

உன் அம்மா இப்போதுதான் இமை மூடினாள்

அவள் உயிர் அலறி வெளியேறியது.

 

அழாதே, என் குழந்தையே,

உன் அப்பா

கொஞ்சம் முன்புதான்

அவரது துயரங்களைக் களைந்தார்.

 

அழாதே, என் குழந்தையே,

உன் சகோதரன்

எங்கோ தொலைவில்

அவனுடைய கனவுகளில்

வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தான்.

 

அழாதே, என் குழந்தையே,

உன் சகோதரியின் பல்லக்கு

அந்நிய நிலத்துக்குப் புறப்பட்டாயிற்று.

 

அழாதே, என் குழந்தையே,

அவர்கள் இறந்த சூரியனை நீராட்டினார்கள்

ஒரு வினாடி முன்புதான்

உன் முற்றத்தில்

நிலவைப் புதைத்தார்கள்.

அழாதே, என் குழந்தையே,

நீ அழுதால்

உன் அப்பாவும் அம்மாவும் சகோதரியும் சகோதரனும்

நிலவும் நட்சத்திரங்களும்

உன்னை இன்னும் அழவைப்பார்கள்.

 

நீ சிரித்தால்

ஒரு நாள் மாறுவேடத்தில் வருவார்கள்

வந்து உன்னுடன் விளையாடுவார்கள்.

@

 

பெய்ஸ் அஹமத் ஃபெய்ஸ்  ( 1911 – 1984 )

உர்துக் கவிதையில் கற்பனைவாத மிகைகளை மாற்றி எதார்த்தவாத நோக்குக்கும் அரசியல் சார்புக்கும் வழியமைத்த முன்னோடி. பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்த பஞ்சாபில் பிறந்தார். தேசப் பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானில் குடியேறினார். பாகிஸ்தான் டைம்ஸ் இதழின் ஆகிரியராகப் பணியாற்றினார். அரசுக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றஞ் சாட்டப் பட்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். விடுதலை பெற்றும் லெபனானில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். பாகிஸ்தானில் தொழிலாளர் இயக்கத்தை உருவாக்கினார்.

ஃபெய்ஸின் இந்தக் கவிதை அனிசூர் ரஹ்மான் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து தொகுத்த ‘ஹஸார் ரங்க் ஷாயிரி’ ( ஆயிரம் நிறங்களுள்ள கவிதை – 2022 ) நூலில் இடம்பெற்றுள்ளது.

                                                              @@@@@@



ஒரு குழந்தையை இரண்டு முறை கொல்ல முடியாது.

@

டாலியா ரவிகோவிட்ச்

 

@

 

ஸாப்ரா, ஷாட்டிலா கழிவு நீர்க் குட்டைகளுக்கு அருகில்

எண்ணிலடங்கா மனிதர்களை

உயிர்ப்புள்ள உலகிலிருந்து   ஒளிப்பிழம்புக்கு

எடுத்து வந்து போட்டீர்கள்.

இரவோடு இரவாக.

 

முதலில் அவர்களைச் சுட்டீர்கள்

அவர்களைத் தூக்கிலிட்டீர்கள்

பின்னர்

வாள்களால் வெட்டினீர்கள்

 

வெருண்டுபோன பெண்கள்

மண்சாரத்தின் மீது ஏறினார்கள்

பேரச்சத்துடன் ஓலமிட்டார்கள்

‘ஷாட்டிலாவில் எங்களை வெட்டிக் கொல்கிறார்கள்’

 

முகாம்களின் மீது நிலவின் மென் பிறை

அந்த இடமே

பகல்போல ஒளிரும்வரை

தேடுவிளக்குகளைப் பாய்ச்சுகிறார்கள்

எங்கள் படைஞர்கள்.

 

புலம்பிக் கொண்டிருக்கும் 

ஸாப்ரா, ஷாட்டிலாப் பெண்களிடம்

கட்டளையிடுகிறான் ஒரு படைஞன்.

‘முகாமுக்குத் திரும்புங்கள்’.

 

ஆணைக்குப் பணிந்து கொண்டிருந்தான் அவன்.

 

ஏற்கெனவே

சகதிக் குட்டைகளில் கிடைக்கும் குழந்தைகள்

அமைதியாக

வாயால் மூச்சுவிட்டுத் திணறுகிறார்கள்

அவர்களை இனி யாரும்

துன்புறுத்த முடியாது

ஒரு குழந்தையை நீங்கள்

இரண்டுமுறை கொல்ல முடியாது

 

பொன் வட்ட ரொட்டியாக மாறுவரை

நிலவு முழுதாகிறது. முழுதாகிறது.

 

எங்கள் இனிய படைவீரர்கள்

தங்களுக்கென்று எதையும் விரும்பவில்லை

எப்போதும் அவர்கள் கேட்பது

பாதுகாப்பாக வீடு திரும்புவோமா?

@


டாலியா ரவிகோவிட்ச்  (1936 – 2005 )

ஹீப்ரு மொழியில் எழுதியவர். யூதர். எனினும் பாலஸ்தீன மக்களின் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் இடைவிடாது குரல் கொடுத்தவர். ஸாப்ரா, ஷாட்டிலா முகாம்கள் மீது 1982 ஆம் ஆண்டு இஸ்ரேலியத் துணைப்படையினர் நடத்திய கூட்டக் கொலையில் பெண்களும் சிறார்களும் இறந்தனர். அந்தச் சம்பவத்தின் எதிர்வினையே டாலியாவின் கவிதை. போஓர் எதிர்ப்புக் கவிதைகளில் குறிப்பிடத்தக்கதாகச் சொல்லப்படுகிறது.

  ஜே டி மக் க்ளாட்சி தொகுத்த THE VINTAGE BOOK OF CONTEMPORARY WORLD POETRY  ( 1996 ) நூலிலிருந்து எடுக்கப்பட்ட கவிதை இது. ஆங்கிலத்தில்: சானா பிளாச், ஏரியல் பிளாச்.

 

 


சனி, 23 செப்டம்பர், 2023




இன்று பாப்லோ நெரூதா நினைவு நாள். அவர் மறைந்து   ஐம்பது ஆண்டுகளும்  நிறைவடைகின்றன. மனிதர்களையும் மானுட வாழ்க்கையையும்  மகத்தானவை என்று கொண்டாடிய கவிஞர்களில் நெரூதாவுக்கு நிகரற்ற இடம் உண்டு. ‘எந்த மொழியிலும் அவர்தான் இருபதாம் நூற்றாண்டின் பெரும்  கவிஞர்’ என்று இன்னொரு பேராளுமையான காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் குறிப்பிட்டார். இருபதாம் நூற்றாண்டில் மட்டுமல்ல , அடுத்த நூற்றாண்டிலும் நெரூதாவே மகா கவி என்று காலம் சாட்சி சொல்கிறது. 

 

நண்பர் பரிசல் செந்தில்நாதன் , பாப்லோ நெரூதா கவிதைகள், இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும் ஆகிய இரு நூல்களைக் கொண்டு வந்தார். அவை முறையே மூன்றும் இரண்டும் பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. மொழி பெயர்ப்பாளன் என்ற நிலையில் எனக்கு மகிழ்ச்சி அளித்த விஷயம் இது.

 

                          இருபது காதல் கவிதைகளுக்கு எழுதிய முன்னுரையை இங்கே                                     நெரூதா நினைவாக இங்கே பகிர்கிறேன்.



                                 காதல் குறுகியது கவிதை முடிவற்றது


                                 இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும்       பாப்லோ நெரூதாவின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு. 1924 இல் அவரது இருபதாம் வயதில் வெளிவந்தது. அதற்கு முந்தைய ஆண்டு வெளியாகியிருந்த அந்தி வெளிச்சம் என்ற முதல் தொகுப்பு அவருக்குக் கவிஞன் என்ற அறிமுகத்தை அளித்தது. ஆனால் இரண்டாவது தொகுப்பே இலக்கியப் புகழையும் வாசக வரவேற்பையும் பெற்றுத் தந்தது. இன்றளவும் நெரூதாவின் கவிதை நூல்களில் அதிகம் பதிப்பிக்கப்பட்டதும் பரவலாக வாசிக்கப்பட்டதும் அநேகமாக இந்தத் தொகுப்பாகவே இருக்கலாம். நூற்றாண்டை நெருங்கும் நிலையில் அதன் பதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. வாசிப்பும் பரவலாகியிருக்கிறது


இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும் பாபாப்லோ நெரூதா கவிதைகளை அறிந்திராதவர்களும் அவரது காதல் கவிதைகளால் ஈர்க்கப்பட்டிருப்பார்கள். இருபது காதல் கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஏதாவது சில வரிகளைத் தங்கள் காதலைச் சொல்லப் பயன்படுத்தியிருப்பார்கள். குறிப்பாக, நூலின் பதினான்காம் கவிதை (ஒவ்வொரு நாளும் நீ விளையாடுகிறாய்) இன் கடைசி வரியான வசந்தம் செர்ரி மரங்களுடன் நிகழ்த்துவதை/ நான் நிகழ்த்த வேண்டும் உன்னுடன் என்பதும் இருபதாவது கவிதை (இன்றிரவு என்னால் எழுத முடியும்) இன் இடையில் வரும் காதல் குறுகியது, மறதியோ மிக நீண்டது என்ற வரியும் எழுதப்பட்ட காலம் முதல் இன்று வரை காதலர்களால் காதலிகளிடம் அந்தரங்கமாக முணுமுணுக்கப்படுகின்றன. நெரூதாவின் கவிதைகள் ஏறத்தாழ அறுபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன். அதன் வாயிலாக இந்த வரிகள் அந்தந்த மொழிகளின் உணர்வாகவே மாறியிருக்கின்றன. அந்த மொழிகளின் கவிதையாக்கத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ செல்வாக்கும் செலுத்தியுள்ளன,

பரிசுத்த வேதாகமம், பழைய ஏற்பாட்டில் உள்ள சாலமோனின் உன்னதப் பாட்டுகளுக்கு இணையான காதல் கவிதைகளின் தொகுப்பாக நெரூதாவின் இருபது காதல் கவிதைகள் கருதப்படுகிறது. சாலமோனின் பாடல்களுக்கு மதத்தின் பின்புலம் உள்ளது என்ற வேற்றுமையைத் தவிர்த்தால் இரண்டு நூல்களும் பொது ஒற்றுமைகள் கொண்டவை. பெண்மீது ஆண்கொள்ளும் மாளாக் காதலையே இரண்டு நூல்களும் மையமாகக் கொண்டிருக்கின்றன. பெண்மீதான வேட்கையையே இரண்டும் கொண்டாடுகின்றன. முன்னது பழமையின் பின்புலத்திலும் பின்னது நவீனப் பின்னணியிலும். காலமும் பின்புலமும் மாறினாலும் பெண்மீதான ஈர்ப்பு ஒன்றுதான்போல. சாலமோனிடம் பெண்ணுடல் ‘அடைக்கப்பட்ட தோட்டமும் மறைவு கட்டப்பட்ட நீரூற்றும் முத்திரையிடப்பட்ட கிணறுமாக உருவம் கொள்கிறது. நெரூதாவிடம் ‘வெண் குன்றுகளாகவும் வெண் தொடைகளாகவும் சரணடைந்த உலகமாகவும் உயிர் பெறுகிறது..

முதல் தொகுப்புக்குக் கிடைத்த கவனம் பாப்லோ நெரூதாவுக்குத் தனது வழியையும் பயணத்தையும் வகுத்துக்கொள்ள உதவியது. ‘நமக்குத் தொழில் கவிதைஎன்ற தீர்மானத்தைக் கடைப்பிடிக்க ஏதுவானது. ‘அந்தி வெளிச்சம்தொகுப்பின் கவிதைகள் பெரும்பான்மையும் அன்று நடைமுறையிலிருந்த ஸ்பானியக் கவிதைப் போக்கை ஒட்டி எழுதப்பட்டவை.

            ஆனால் அவற்றிலிருந்து மாறுபட்ட கவிதைகளே என்னுடைய விருப்பமாக இருந்தன. என்னுடைய புலனும் உயிரும் பிரிக்கப்பட முடியாமல் இழைந்த கவிதைகளை எழுத ஆசைப்பட்டேன். அது ஒரு சாகசமென்பதை உணர்ந்து கொண்டேன். அதன் விளைவுதான் இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும் தொகுப்பு. நூல் வெளிவந்த பின்னர் உண்மையிலேயே அது சாகசம் என்பது தெரிந்தது.

என்று தொகுப்பு வெளியாகி இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் கவிஞர் ராபர்ட் ப்ளைக்கு வழங்கிய நேர்காணலில் நெரூதா நினைவுகூர்ந்தார். இருபது காதல் கவிதைகளை எழுதத் தூண்டிய சாகசம் நெரூதாவின் இறுதிக் காலம் வரை கவிதையிலும் வாழ்விலும் தொடர்ந்தது.

நெஃப்தாலி ரேயஸ் பஸ்வால்தோ என்ற எளிய மனிதன் உலகப் பெரும் கவிஞர் பாப்லோ நெரூதாவாக அறியப்படவும் இந்த சாகசமே காரணம்.

o

நெரூதாவின் கவிதையுலகம் எண்ணிக்கையால் பரந்தது. பாடுபொருட்களால் விரிந்தது. முதல் கவிதை வெளியான பதின்மூன்றாம் வயது முதல் மரணமடைந்த அறுபத்தொன்பதாம் வயது வரையிலான ஐம்பத்து ஆறு ஆண்டுகளில் எழுதிக் குவித்த கவிதைகளின் எண்ணிக்கை மூவாயிரத்து ஐநூறுக்கும் மேல். இவற்றில் மூன்றில் ஒரு பங்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இலான் ஸ்டாவன்ஸ் தொகுத்திருக்கும் பெருந் திரட்டில் ஏறத்தாழ அறுநூறு கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆங்கிலம் நீங்கலான உலகப் பிற மொழிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நெரூதாவின் கவிதைகள் பேசும் மையப் பொருட்களும் விரிவானவை. உப்பு முதல் பிரபஞ்சம் முடிய அனைத்தும் அவரது கவிதையாக்கத்தில் உள்ளடங்கியிருக்கின்றன. அவருக்கு முன்னும் பின்னுமான காலத்தின் எல்லாத் தருணங்களும் பதிவாகியுள்ளன. மானுட இருப்பின் சகல நிலைகளும் மனிதப் பிறப்பின் வெவ்வேறு உணர்வுகளும் கவிதைகளில் கூறுபொருளாகியுள்ளன. இந்தக் கருத்தை முன்னிருத்தக் காரணம், பாப்லோ நெரூதாவைக் குறிப்பிட்ட ஏதாவது வகைமைக்குள் முடக்கிவிட முடியாது என்பதை எடுத்துக் காட்டவும் அவரது கவிதைகளை ஏதாவது ஒரு பிரிவுக்குள் அடக்கிவிடக் கூடாது என்பதை வலியுறுத்தவும்தான்.

எனினும் அந்தக் கவிப் பேருலகைக் நான்கு நிலைகளிருந்து காண முடியும். இருப்பு, இயற்கை, சமூகம், உலகம் என்று நான்கு பகுப்புகளில் அவரது கவிதைகளை அணுகலாம். இவை ஒவ்வொன்றும் ஒன்றையொன்று பாதிப்பவை. ஒன்றையொன்று சார்ந்தவை. ஒன்றுக்குள் ஒன்று பிணைந்தவை. இவையனைத்துக்கும் அடிப்படையான உறவாகக் காதலைச் சொல்லலாம். காதலின் வெவ்வேறு உணர்வு நிலைகளில்தான் நெரூதா தனது கவியுலகை உருவாக்கியிருக்கிறார் என்பதைக் கவிதைகள் காட்டுகின்றன. இயற்கை மீதான காதல் ஆராதனையாகவும் சமூகத்தின் மீதான காதல் போராட்டமாகவும் உலகத்தின் மீதான காதல் அரசியலாகவும் வெளிப் படுகின்றன. தனது மானிட இருப்பின் ஆதாரப் புள்ளியாக அவர் கருதியது பெண்மீதான மாளாக் காதலைத்தான் என்பதன் சான்றாக இருபது காதல் கவிதைகளைச் சொல்ல முடியும்.

o

இருபது காதல் கவிதைகள் வெளியான காலத்தில் எந்த அளவு புகழப் பட்டதோ அந்த அளவுக்குக் கண்டனங்களுக்கும் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானது. மகத்தான கவிதைகளாகப் பாராட்டப்பட்ட அதேசமயம் ‘விடலைப் பையனின் பிதற்றல்கள்என்றும் விமர்சனம் எழுந்தது. அந்த விமர்சனங்களில் நெரூதா கவிதைகளின் ஆதாரமான அம்சம் கவனிக்கப்படவில்லை. இந்தக் கவிதைகளில் இயற்கையின் அற்புதமான பகுதியாகவும் தவிர்க்க இயலாத மானுடப் பங்காளியாகவும் பெண் சித்தரிக்கப்படுகிறாள். இதுவே இருபது காதல் கவிதைகளை விடலைப் பையனின் காம விழைவாகவோ பெண்ணுடல் மீதான இச்சையாகவோ குறுகி விடாமல் உயிரின் முடிவற்ற வேட்கையாக நிலைநிறுத்துகிறது. நெரூதாவின் இறுதிக் காலக் கவிதை வரை இந்த இயல்பு நீடித்துமிருக்கிறது.

பாப்லோ நெரூதாவை பாத்திரமாக வைத்து உருவாக்கப்பட்ட இத்தாலியத் திரைப்படம் ‘தி போஸ்ட்மேன். சிலியைச் சேர்ந்த எழுத்தாளர் அந்தோனியோ ஸ்கர்மேதா ஸ்பானிய மொழியில் எழுதிய ‘பர்னிங்க் பேஷன்ஸ்நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சினிமா. மையப் பாத்திரமான தபால்காரன் மரியா கவிதை எழுத விரும்புகிறவன். முன்னுதாரணமாக அவன் கருதுவது பாப்லோ நெரூதாவைத்தான். அவரைப் போன்ற ஒரு கவிஞன் ஆகிவிட்டால் ஏராளமான பெண்கள் தன்னை நேசிப்பார்கள் என்று கனவும் காண்கிறான். ஒரு காட்சியில் தனது அதிகாரியான தந்தியாளரிடம் சொல்கிறான்.

ஒருவர் கவிஞராக இருந்தால் பெண்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். பாப்லோவைப் பாருங்கள். எவ்வளவு பெண்கள் அவரை நேசிக்கிறார்கள். அவருக்கு வருகிற தபால்கள் எல்லாம் பெண்களிடமிருந்துதான். அவர் பெண்களால் நேசிக்கப்படுகிறவர்

தந்தியாளர் திருத்துகிறார். “இல்லை. அவர் மக்களால் விரும்பப்படும் கவிஞர். என்கிறார்.

மரியா அரைமனத்துடனேயே அதை ஒப்புக் கொள்கிறான். “சரி, மக்களாலும் பெண்களாலும் நேசிக்கப்படும் கவிஞர்.

இந்தக் காட்சி கற்பனையானதுதான். ஆனால் நெரூதாவைப் பொருத்தவரை மிகமிக உண்மையானது. அவருடைய இயல்பையும் அவர் கவிதைகளின் குணத்தையும் சொல்வது. காதல் உணர்வு பாப்லோ நெரூதாவின் உயிரணுவிலேயே ஓடிய ஒன்று. ஏனெனில் அவரது பெற்றோரே தம்மளவில் மாளாக் காதலில் மூழ்கித் திளைத்தவர்கள்.

o

பாப்லோ நெரூதா என்ற ரிக்கார்தோ எலிஸெர் நெஃப்தாலி ரேயஸ் பஸ்வால்தோ சிலியின் மத்தியப் பகுதி நகரமான பர்ராலில் 1904 ஜூலை 12 அன்று பிறந்தார். தந்தை ஜோஸ் தெல் கார்மன் ரேயஸ் மொரலேஸ் இருப்புப் பாதைப் பணியாளர். தாய் ரோஸா நெஃப்தாலி பஸ்வால்தோ ஒபாஸோ பள்ளி ஆசிரியை. இருவருக்கும் தனித்தனியான காதல் கதைகள் இருந்தன. அவை சுவாரசியமானவை. அதே சமயம் கொந்தளிப்பு மிகுந்தவை. பிள்ளைப் பருவத்திலும் பதின் வயதிலும் நெரூதாவை இந்தக் கொந்தளிப்பு ஆழமாகவே பாதித்தது.

ரோஸாவை மணந்து கொள்வதற்கு முன்னும் பின்னும் ஜோஸ் கார்மன் இரண்டு பெண்களைக் காதலித்திருந்தார். அந்தக் காதல்களை மறைத்து வைத்துத்தான் ரோஸாவையும் மணந்தார். இரு பெண்களில் ஒருவர் டிரினிடாட். மற்றவர் அவுரேலியா, அவர்களில் டிரினிடாடுடனான உறவில் ஓர் ஆண் குழந்தையும் பிறந்திருந்தது, ரொடால்ஃபோ என்ற குழந்தை குடும்பத்தின் நம்பிக்கைக்குரிய தாதியால் ஆற்றங்கரைச் சிற்றூர் ஒன்றில் வளர்க்கப்பட்டான். டிரினிடாடுக்கும் ஜோஸ் கார்மனுடனான உறவுக்கு முன்பு ருடேசிண்டோ ஆர்டெகா என்ற பண்ணைத் தொழிலாளியுடனான உறவில் முதலாவது ஆண் குழந்தை பிறந்திருந்தது. பெயர் ஆர்லாண்டோ. டிரினிடாடின் செல்வந்தக் குடும்பம் அந்தக் குழந்தையையும் ரகசியமாகவே வளர்த்தது. ஜோஸ் கார்மன் தன்னுடைய காதல் உறவுகளைப் பகிரங்கப் படுத்தியதில்லை. அவரது காதலிகள் அவற்றை மறைத்து வைத்ததும் இல்லை. டிரினிடாடுடன் ஜோஸ் கார்மன் கொண்டிருந்த காதல் குறுகியது. ஆனால் அது நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தியது.

ஜோஸ் கார்மன் இருப்புப் பாதைத் தொழிலாளியாக இருந்தவர். ஆனால் அது நிரந்தரமான வேலையல்ல. எனவே பிழைப்புக்காக கூலித் தொழிலாளியாகவும் சுமைதூக்கும் பணியாளராகவும் வெவ்வேறு இடங்களில் அலைந்தார். வெவ்வேறு சிறு நகரங்களில் வாழ்ந்தார். வாழ்ந்த நகரங்களில் எல்லாம் அவருக்குக் காதலிகள் வாய்த்தார்கள். சிறு வயது முதலே காச நோயால் அவதிப்பட்டு வந்த ரோஸா, மருத்துவர் ஆலோசனையின் பேரில் பர்ரால் நகரில் குடியேறினார். குடியேறிய குறுகிய காலத்துக்குள் ஜோஸ் கார்மன் தனது காதலை ரோஸாவிடம் வெளிப்படுத்தினார்.

ரோஸா நெஃப்தாலி இறுக்கமான பெண் அல்லர். எனினும் திடமான எண்ணங்களும் தீர்மான செயலும் கொண்டவர். அதுவரையான நாட்களில் வறுமையையும் கடும் உழைப்பையும் ஓயாத அலைச்சலையும் அனுபவித்து வந்த ஜோஸ் கார்மன் நிலையான குடும்ப வாழ்க்கைக்கு ஆசைப்பட்டார். அது ரோஸா மூலமாகவே அமையும் என்றும் நம்பினார். அந்த நம்பிக்கையுடன் ரோஸாவிடம் தன்னை மணந்துகொள்ளும்படி மன்றாடினார். தனது உடல் நிலை நீண்ட கால உற்சாக வாழ்க்கைக்கு இணங்குமா என்ற சந்தேகத்தில் ஜோஸ் கார்மனின் கோரிக்கைக்குத் தயங்கி வந்த ரோஸா நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒப்புக் கொண்டார். திருமணத்துக்குப் பிறகு பர்ரால் நகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குடியேறினார்கள். மணம் முடித்த ஒன்பதாவது மாதம் நெஃப்தாலி பிறந்தான். காச நோயால் பீடிக்கப்பட்டிருந்த ரோஸா குழந்தைக்கு இரண்டு வயது நிறைந்த வேளையில் மரணமடைந்தார். தன்னுடைய பிறப்பே தாயின் மரணத்துக்குக் காரணம் என்ற அநாவசியக் குற்றவுணர்வை வாழ்நாள் முழுவதும் பாப்லோ நெரூதா சுமந்திருந்தார்.

            ‘நான் பிறந்தபோது

            அவமானத்துக்குள்ளான புனித ஆன்மாவுடன்

            என் தாய் இறந்தாள்

என்று ஆரம்பக் காலக் கவிதையொன்றில் வருந்தியுமிருக்கிறார்.

ரோஸாவின் மறைவு ஜோஸ் கார்மனுக்குப் பெரும் இழப்பானது. சரியான வேலையும் அமையவில்லை. வருமானமும் இல்லை. இரண்டு மாதக் கைக் குழந்தையான நெஃப்தாலியைப் பராமரிக்கத் திணறினார், தன்னுடைய மாற்றந் தாயிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு வேலை தேடிப் போனார். ஆண்டிஸ் மலைகளுக்கு அப்புறமுள்ள பகுதியில் கால்நடைத் தொழுவத்தில் பணிபுரிந்தார். ஆறு மாதங்களுக்குப் பின்பு வெறுங்கையுடன் ஊர் திரும்பினார். ஜோஸின் முன்னாள் முதலாளிகளில் ஒருவரின் மகளான அவுரேலியா டோல்ராவுடன் காதலிலும் ஈடுபட்டார். காதல் சாகசங்களும் நாடோடி அலைச்சலும் இனிமேலும் சரிப்பட்டு வராது என்பதை எடுத்துச் சொன்ன அவுரேலியா அவரை டிரினிடாடிடம் திரும்பச் செல்லும்படி அறிவுறுத்தினார். “அவள் உன் முதல் பிள்ளையின் தாய் அல்லவா?” என்று சுட்டிக் காட்டினார். ஜோஸ் கார்மனும் டிரினிடாடும் முறைப்படி மணந்தார்கள். குழந்தை நெஃப்தாலி மாற்றாந் தாய் டிரினிடாடின் அணைப்பில் வளரத் தொடங்கினான். குடும்பப் பொறுப்பை உணர்ந்த ஜோஸ் கார்மன், தனது முதல் பிள்ளை ரொடால்ஃபோவையும் அழைத்து வந்தார்.

ஜோஸ் கார்மனுக்கு அவுரேலியா மீதான காதல் மறைக்க முடியாததாக இருந்தது. அவர்களுக்கு இடையில் நெருக்கமான உறவும் ஏற்பட்டது. முப்பதுகளின் நடுப்பகுதியிலிருந்த ஜோஸ் கார்மன்மீது பதினெட்டு வயது அவுரேலியானாவுக்கும் ஈர்ப்பு இருந்தது. திடகாத்திரரும் முகப் பொலிவு உள்ளவரும் வசீகரமான நீலக் கண்கள் கொண்டவரும் இதமானவருமான அவர் பால் ஈர்க்கப்பட்டார் அவுரேலியானா. நெஃப்தாலிக்கு இரண்டு வயதைக் கடந்தபோது ஜோஸ் கார்மனுக்கும் அவுரேலியானவுக்குமான உறவில் ஒரு தங்கை பிறந்தாள். லாராட்டா என்ற லாரா.

ஆனால் இந்த உறவில் அவுரேலியானா இடையறாத தார்மீகத் திணறலையே அனுபவித்தார். அவரது கத்தோலிக்க நம்பிக்கை பெரும் பதற்றத்தை அளித்தது. இன்னொரு பெண்ணின் கணவனும் ஒரு பிள்ளைக்குத் தகப்பனுமான நபருடன் கொண்டிருந்த உறவு குற்றவுணர்வையே கொடுத்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குற்ற உணர்வுடன் லாராவைத் தன்னால் வளர்க்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார். ஒன்று ஜோஸ் கார்மன் தன்னுடனும் லாராவுடனும் மட்டுமாக வாழ்க்கை நடத்த வேண்டும். அல்லது டிரினிடாட், ரொடால்ஃபோ, நெஃப்தாலி அடங்கிய குடும்பத்துடன் வாழ வேண்டும். தன்னுடன் வாழ விருப்பமில்லை என்றால் லாராவையும் அழைத்துச் செல்லவேண்டும் என்று நிர்ப்பந்தித்தார். ஜோஸ் கார்மன் லாராவையும் கூட்டிக்கொண்டு குடும்பம் வசிக்கும் டெமூகோ நகருக்குத் திரும்பினார். டிரினிடாட் தன்னுடைய குடும்பப் பெயரை சிறுமிக்கு அளித்து அவளைத் தன்னுடைய மகளாக ஏற்றுக் கொண்டார். ஜோஸ் கார்மனின் ரகசிய உறவு அவருக்கு முன்னமே தெரிந்திருக்கலாம் அல்லது அது பற்றிய சந்தேகம் இருந்திருக்கலாம். ஆனால் அவர் அதை வெளிப்படுத்தவில்லை. தனது சொந்தப் பிள்ளையான ரொடால்ஃபோ, ரோஸாவின் வாரிசான நெஃப்தாலி, அவுரேலியாவின் மகளான லாரா மூவரையும் தன் கரங்களுக்குள் சேர்த்துக் கொண்டார்.

இந்தச் சிக்கலான உறவின் உண்மையும் வினோதமும் நெஃப்தாலியை ஆழமாகப் பாதித்தன. பாப்லோ நெரூதா என்ற பிற்காலக் கவிஞரை இந்த ரகசியங்களும் மீறல்களும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தன.

o

நெஃப்தாலியின் இளமைப் பருவம் சிற்றன்னை டிரினிடாடின் அரவணைப்பிலும் சகோதரி லாராவின் பாசத்திலும் கழிந்தது. சகோதரன் ரொடால்ஃபோ எவரிடமும் ஒட்டுதல் இல்லாமல் நடந்து கொண்டான். தந்தை ஜோஸ் கார்மனின் கண்டிப்பு நெஃப்தாலியை வெருட்டினாலும் இருப்புப் பாதைத் தொழிலாளியான அவருடன் மேற்கொண்ட ரயில் பயணங்கள் குதூகலமளித்தன. தானறியாத உலகத்தில், விந்தைகளின் உலகத்தில் வந்து பிறந்த குழந்தையின் குறுகுறுப்பு அந்தக் கண்களில் எப்போதும் இருந்தது. அதைக் கவிஞனின் பார்வை என்று புகழ்ந்தவர்கள் தாய் டிரினிடாடும் சகோதரி லாராவும் மட்டுமே.

பள்ளிப் பருவத்திலேயே நெஃப்தாலி கவிதைகள் எழுதத் தொடங்கினான்.

பொதுவான இலக்கிய வாசிப்புப் பழக்கமிருந்த டிரினிடாட் சிறுவனை உற்சாகப்படுத்தினார். அந்த ஊக்குவிப்பை மதிக்கும் வகையில் அஞ்சலட்டை ஒன்றில் ஏரியும் பனிமூடிய மரங்களுமிருக்க நடுவில் கவிதையெழுதி, அவருக்குச் சமர்ப்பித்தான் நெஃப்தாலி.

            பொன்னிறப் பகுதிகளின் நிலக் காட்சியிலிருந்து

            அன்புள்ள அம்மா

            உனக்காக இந்த எளிய அஞ்சலட்டையைத் தேர்ந்தெடுத்தேன்.

தந்தையிடம் காண்பித்தபோது ‘இதை எங்கேயிருந்து காப்பி அடித்தாய்?’ என்று கேட்டார். அம்மா ‘இது நல்ல கவிதைஎன்று சிகையை அளைந்து பாராட்டினார். அன்று ஒரு கவிஞன் உருவானான்.

ஜோஸ் கார்மனின் குடும்பம், நெஃப்தாலி பிறந்த ஊரான பர்ராலிலிருந்து டெமூகோவுக்கு இடம் பெயர்ந்தது. நெஃப்தாலியின் பள்ளிப்பருவம் அங்கு கழிந்தது. பள்ளிப் பாடங்களைவிட இலக்கிய வாசிப்பில்தான் ஈடுபாடு அதிகம். இலக்கியம் தவிர்த்து பெண்களும் அரசியலும் அவனை முதன்மையாக ஈர்த்தன. பதினோராம் வயதில் முதல் கவிதை வெளியானது. அதே வயதில் முதல் காதலும் நிகழ்ந்தது. மரியா என்ற பெண் மீது கொண்ட ஈர்ப்பு அவளது புறக்கணிப்பால் வெகு விரைவில் கலைந்தது. எளிய குடும்பத்துப் பையனைக் காதலிக்க அவள் குடும்பம் அனுமதிக்கவில்லை. பிள்ளைக் காதலில் ஏற்பட்ட தோல்வி நெஃப்தாலியை தனியனாக்கியது. “நெரூதா எப்போதும் தன்னை ஓர் அனாதையாகவே எண்ணியிருந்தார். தாயைத் தேடுவதிலேயே வாழ்க்கையைக் கழித்தார். இது ஓரளவு உண்மை. எப்போதும் தாயை இழந்த பெரிய குழந்தையாகவே இருந்தார்என்று அவரது இளம் பருவத் தோழி பிற்காலத்தில் நினைவுகூர்ந்தார். அரசியல் உள்ளடக்கம் தவிர்த்த ஆரம்பக் காலக் கவிதைகளில் தனிமையே பெரிதும் இடம்பெற்றது. இருபது காதல் கவிதைகளில் அதை விரிவாகவே காணலாம்.

தனது தனிமையைத் தீர்த்துக் கொள்ள இரண்டாவது பிள்ளைக் காதலில் விழுந்தான் நெஃப்தாலி. அமேலியா அல்விஸோ முதல் சந்திப்பிலேயே அவனுக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தினாள். அவளிடம் தன்னுடைய காதலைத் தெரிவித்தான். பதின் பருவப் பெண்ணான அவளுக்கு அது விளங்கவில்லை.

தவிர அவள் குடும்பத்தினர் செல்வாக்கு மிகுந்தவர்கள். அவள் தந்தை மின்சார உற்பத்தி நிலையம் நடத்தி நகரத்துக்கே விநியோகித்து வந்தார். வசதியான பின்னணியைச் சேர்ந்தவர்கள். கீழ்மட்ட இருப்புப் பாதைத் தொழிலாளியின் பிள்ளையுடன் தங்கள் பெண் பழகுவதைக் கண்டித்தார்கள். அமேலியா விலகினாள். நொறுங்கிப் போன நெஃப்தாலி கவிதையில் தஞ்சம் புகுந்தான்.

பதினான்கிலிருந்து பதினாறு வயதுக்குள் நெஃப்தாலியின் சுமார் முப்பது கவிதைகள் சிலியில் அந்த நாட்களில் வெளிவந்து கொண்டிருந்த வெவ்வேறு இதழ்களில் அச்சேறின. ‘கனவுலகவாசியாகக் கவிதை எழுதிக் கொண்டு திரிவது நடைமுறை வாழ்க்கைக்கு உதவாதுஎன்ற தந்தையின் கண்டிப்பு இலக்கியப் பெருமையை மறைத்து வைக்கச் செய்தது. அவையனைத்தும் பாப்லோ நெரூதா என்ற புனைபெயரில் வெளிவந்தன. பள்ளி இறுதி நாட்களில் வசந்த கால விழாவையொட்டி நடந்த போட்டியில் முதல் பரிசுக்குரியதாக பாப்லோ நெரூதாவின் கவிதை தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்தக் கவிதையிலிருந்து நெஃப்தாலி ரேயஸ் என்ற இயற்பெயர் மறைந்தது. பாப்லோ நெரூதா என்ற பெயர் உலகத்துக்கு அறிமுகமானது.

o

பதினேழாம் வயதில் உயர் கல்விக்காக நாட்டின் தலைநகரமான சாந்தியாகோவுக்கு பாப்லோ நெரூதா சென்றார். சிலி பல்கலைக் கழகத்தில் பிரெஞ்சு பயிற்றுவிப்புத் துறையில் சேர்ந்தார். இலக்கியத்திலும் கவிதை எழுத்திலும் அவருக்கு இருந்த மோகத்தை அறிந்திருந்த ஜோஸ் கார்மன் ஒழுங்காகப் படித்தால் மட்டுமே தன்னால் உதவ முடியும் என்ற நிபந்தனையுடன் அவரை அனுப்பி வைத்தார். பல்கலைக் கழகத்தில் சேர்ந்த குறுகிய காலத்துக்குள் கல்வி வளாகத்திலும் இலக்கிய வட்டாரத்திலும் பிரபலமடைந்தார் நெரூதா. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது மேலும் புகழுக்குரியவராக்கியது. குறிப்பாகப் பெண்கள் இடையே.

நெரூதாவின் பல்கலைக் கல்விப் பருவம் சிலியின் கொந்தளிப்பான காலம். முதலாவது உலகப் போரில் சிலி நடுநிலைமை வகித்திருந்தும் போரின் பின் விளைவுகள் நாட்டை நாசமாக்கிக் கொண்டிருந்தன. அரசியல் குழப்பங்களும் பொருளாதார வீழ்ச்சியும் நாட்டை உலுக்கிக் கொண்டிருந்தன. மக்கள் எழுச்சி போராட்டமாக வெடித்தது. அரசாங்கம் கலவரங்களை அதிகாரத்தின் மூலம் ஒடுக்க முனைந்தது. ஜனாதிபதி யுவான் லூயிஸ் சான்ஃபுவாண்டஸ் மாணவர்கள்மீது அடக்குமுறையை ஏவினார். அதில் ஒரு மாணவர் பலியானார். மாணவர் கிளர்ச்சியில் பங்கேற்ற பாப்லோ நெரூதா மாணவர் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார். கவிஞர், மாணவர் தலைவர் ஆகிய தகுதிகளுடன் கிளாரிடாட் பத்திரிகையின் செய்தியாளரும் ஆனார்.

            அந்த நாட்களிலிருந்து அவ்வப்போது இடையீடுகள் நேர்ந்தாலும் அரசியல் என் கவிதையிலும் வாழ்க்கையிலும் பாகமானது. என் கவிதைகளில் தெருவைப் பாராதா வகையில் கதவை மூட முடியாதது போலவே என் இளங்கவி மனதில் காதலுக்கோ வாழ்க்கைக்கோ மகிழ்ச்சிக்கோ அல்லது துயரத்துக்கோ கதவை அடைக்கவில்லை (நினைவுக் குறிப்புகள் பக். 53)

என்று பின்னர் நெரூதா சான்றளித்தார்.

படிப்பதற்காகப் பல்கலைக்கழகத்துக்குப் போனவன் கவிதை எழுதுவதிலும் கட்டுரைகள் எழுதி வெளியிடுவதிலும் மூழ்கியதை அறிந்த ஜோஸ் கார்மன் செலவுக்காக நெரூதாவுக்கு அனுப்பி வந்த பணத்தை அடியோடு நிறுத்தினார். பத்திரிகைகளில் எழுதிக் கிடைத்த சொற்ப வருவாயில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. சிற்றன்னை டிரினிடாடும் சகோதரி லாராவும் மறைமுகமாக உதவினார்கள். வசதிக் குறைவான அறைகளில் வசித்தார் நெரூதா. அந்தக் குறுகிய அறைகளிலும் அவருடைய கவிதை வாசிப்பைக் கேட்கவும் அரசியல் பேசவும் இலக்கியக் கலந்துரையாடல் நடத்தவும் ஆண்களும் பெண்களும் அன்றாடம் திரண்டார்கள்.

பல்கலைக் கழகத்தில் சேர்வதற்காகப் புறப்படும் முன்பே நெரூதா காதல் வசப்பட்டிருந்தார். டெமூகோ வசந்தகால விழாவில் சந்தித்த டெரேஸா லியான் பெட்டியன்ஸ் மீது காதல் கொண்டிருந்தார். விழாவில் நகரத்தின் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் தெரேஸா. சாந்தியாகோவுக்குப் புறப்படும் முன்பே தெரேஸாவுடன் நெருக்கமான பிணைப்பு ஏற்பட்டிருந்தது. அவரை தெரூசா என்று அழைத்தார். அவரைப் பிரிந்த துயரம் நெரூதாவை அலைக்கழித்தது. கடிதங்களில் காதலைக் கொட்டி அனுப்பினார். அவரிடமிருந்து வந்த பதில்களால் துள்ளினார். பதில் வரத் தாமதமானால் சுணங்கினார். விடுமுறை நாட்களில் தெரேஸாவைச் சந்திக்க நீண்ட பயணம் மேற்கொண்டார். சந்திக்க முடியாமற் போன தருணங்களில் துவண்டார். தனிமையில் புலம்பினார்.

தெரேஸாவுக்கும் நெரூதா மீது காதல் இருந்தது. எனினும் பெற்றோரின் எதிர்ப்பு அவரைக் கட்டிப்போட்டது. தெரேஸாவின் பெற்றோர் நெரூதாவை வல்லூறு என்று அழைத்தார்கள். அவரைப் பார்க்கக் கூடாது என்று மகளுக்குத் தடை விதித்தார்கள். ஆனாலும் காதலர்கள் இருவரும் ரகசியமாக உறவாடிக் கொண்டிருந்தனர். நெரூதா தனது கவிதைகளை ரகசியமாகத் தெரெஸாவுக்குக் கைமாற்றிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் அவருக்கு இன்னொரு காதலியும் வாய்த்தார். மரியா பரோடிஸ். சிறு தாள்களில் எழுதி அளிக்கும் கவிதைகளை யாருக்கும் தெரியாமல் உள்ளங்கைக்குள் பொத்தி வைத்து வாசித்துப் பரவசப்பட்டார் மரியா. ‘சூரியனையும் தண்ணீரையும்போல நிச்சயமானவள்என்று புகழ்ந்தார் நெரூதா. இருபது காதல் கவிதைகளில் 19 ஆம் கவிதை மரியாவைப் பற்றியது.

தெரேஸாவுடன் காதலில் ஆழ்ந்திருக்கும்போதே சக மாணவியும் நண்பரான ரூபெனின் சகோதரியுமான ஆல்பெர்ட்டினா ரோஸா அசொகருடனும் காதல் கொண்டார் நெரூதா. அவரை விட இரண்டு வயது மூத்தவர் ஆல்பெர்ட்டினா. அவரே விரும்பியும் ஆல்பர்ட்டினா மீது உருவான ஈடுபாட்டை நெரூதாவால் தவிர்க்க முடியவில்லை. மாணவர் வட்டத்தில் அவருக்கு இருந்த புகழ், அவருடைய அறிவுத்திறன் அதற்கும் மேலாக அவருடைய கவிதைகள் ஆல்பட்டினாவையும் கவர்ந்தன. வகுப்புத் தோழன் என்ற பழக்கத்தில் ஆல்பர்ட்டினாவின் வீட்டுக்கு அடிக்கடி செல்லவும் நெரூதாவால் முடிந்தது. அவுரேலியானா, தெரேஸா ஆகிய பெண்களுடனான காதலுக்கு நெரூதாவின் வறிய நிலை இடையூறாக இருந்தது. ஆனால் சாதாரணக் குடும்பத்துப் பெண்ணான ஆல்பெர்ட்டினாவைப் பொறுத்து அந்தச் சிக்கல் எழவில்லை. ஆனால் ஆல்பர்ட்டினாவின் சகோதரி அடேலினா இருவரையும் கண்காணித்து வந்தார். சகோதரன் ரூபென் அவர்களுக்குத் துணையாக இருந்தார். நெரூதாவும் ஆல்பெட்டினாவும் மாலை நடை செல்லும்போது கூடவே போவார். சிறிது தொலைவு கடந்ததும் அவர்களை விட்டு விலகிக் கண் மறைவாகச் செல்வார். இது இருவருக்கிடையிலும் நெருக்கத்தை ஏற்படுத்தியது.

காதலர்களுக்கு இடையில் பாலுறவு என்பது நெரூதாவின் தலைமுறையில் விலக்கப்பட்டதாக இருக்கவில்லை. உண்மையில் நெரூதா உள்ளிட்ட அராஜகவாதி மாணவர்கள் கட்டுப்பாடற்ற காதல் இயக்கத்துக்காக வாதாடிக் கொண்டிருந்தார்கள். ஆல்பெர்ட்டினாவுடன் பந்தம் உருவாகிச் சில மாதங்காளுக்குப் பின்பு நெரூதா கிளாரிடாடில் ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டார். பாலியல் திருப்திக்காகத் திருமணம், கற்பு என்ற பெயரில் பெண்களைக் கருவிகளாக்குவது பற்றிக் கட்டுரையில் விளாசியிருந்தார்.

கட்டுரை வெளிவந்த இரண்டு மாதங்களில் ஆல்பெர்ட்டினா எந்த ரகசியங்களும் மிச்சம் வைக்காமல் தனது உடலை நெரூதாவுக்கு முழு நிறைவுடன் திறந்து கொடுத்தார். பெண்ணுடல் ஒளிவு மறைவு இல்லாமல் முதல் முறையாக நெரூதாவுக்குக் காணக் கிடைத்தது. அந்தத் தூய அனுபவத்தையே ‘பெண்ணின் உடலே, உன் கருணையைத் தொடர்ந்து போற்றுவேன்என்று எழுதி இருபது கவிதைகளின் முதல் கவிதையாகவும் வைத்தார்.

ஒரு பெண்ணுடன் காதலில் திளைத்திருக்கும்போதே தொலைவிலிருக்கும் இன்னொரு காதலிக்காக ஏங்குவது நெரூதாவின் இயல்பு. ஆல்பெர்ட்டினாவுடன் பிணைப்பிலிருந்து கொண்டே தெரேஸாவை நினைத்து உருகிக் கொண்டிருந்தார். கடிதங்களில் விரகத்தைக் கொட்டிக் கொண்டிருந்தார். பெற்றோரின் தடையை உடைத்து தெரேஸா அவரைத் தேடி வந்தார். ஆனால் அந்தக் காதல் பழைய நறுமணத்துடனோ தீராத ஒளியுடனோ மங்காத வேட்கையுடனோ தொடரவில்லை. இருவரும் நிரந்தரமாகப் பிரிந்தார்கள். தெரேசா பின்னர் தட்டச்சு பழுது நீக்குநர் ஒருவரை மணந்தார். பாப்லோ நெரூதா மறைவுக்கு ஓர் ஆண்டு முன்பே தெரேஸா மறைந்தார்.

ஆல்பர்ட்டினாவுடனான உறவையும் நெரூதா கைவிடவில்லை. குடல்வால் அழற்சி முற்றி அடிவயிற்றுச் சவ்வு பாதிக்கப்பட்ட ஆபத்தான நிலையில் ஆல்பெர்ட்டினா அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தன்னை மகத்தான காதலனாக நெரூதா நிரூபித்த சந்தர்ப்பம் அது. ஆல்பெர்ட்டினா மருத்துவமனைப் படுக்கையில் கிடந்த எல்லா நாட்களிலும் நெரூதா அவருக்குத் துணையாக இருந்தார். சிகிச்சை முடிந்த பின்னர் ஆல்பர்ட்டினாவின் பெற்றோர் அவரை சாந்தியாகோ பல்கலைக்கழகத்தில் படிப்பை நிறுத்தி கன்செஷியன் பல்கலைக்கழகக் கல்வியியல் பள்ளியில் சேரும்படிக் கட்டளையிட்டார்கள். நெரூதா உடைந்து போனார். பிரிவு அவருக்கு ஆத்திரமூட்டியது. அதை ஆல்பர்ட்டினாவுக்குக் கடிதங்களாக எழுதியனுப்பினார். தனக்கு வேதனையையும் தன் காதலுக்கு அவமதிப்பையும் செய்தவராக ஆல்பெர்ட்டினாவைக் குற்றம் சாட்டினார். அவரைக் குற்ற உணர்வு கொள்ளச் செய்தார். ‘உன் மௌனம் நட்சத்திரத்தின் மௌனம்என்று சமாதானமும் சொன்னார். இருபது காதல் கவிதைகளில் மிகப் பிரசித்தமான ‘இன்றிரவு என்னால் எழுத முடியும்என்ற கவிதையில் வரும் ‘இனி அவளைக் காதலிப்பதில்லை/ எனினும் அவளை எவ்வளவு நேசித்தேன்என்ற வரிகள் ஆல்பெர்ட்டினாவுக்கு எழுதப்பட்டவை.

நெரூதா சாந்தியாகோவை விட்டு வந்திருந்தால் எங்களுக்கு இடையில் விலகல் நேர்ந்திருக்காது. நான் அவரைத் திருமணம் செய்துமிருப்பேன்என்று பின்னாட்களில் ஆல்பர்ட்டினா குறிப்பிட்டார்.

ஆல்பர்ட்டினாவை மையமாக்கி நெரூதா எழுதிய கவிதைதான் (நீ இருந்ததைப்போலவே உன்னை நினைவு கூர்கிறேன் – கவிதை 6) அடுத்த காதலுக்கு வழிவகுத்தது. நெரூதாவின் கவிதைகளால் ஈர்க்கப்பட்ட லாரா, அவர் படித்து வந்த விடுதிப் பள்ளி விழாவில் கவிதை வாசிக்க நெரூதாவை அழைக்கச் சென்றார். அந்த சந்தர்ப்பத்துக்குப் பிறகு நெரூதா அடிக்கடி பள்ளிக்குச் சென்றார். இருவரும் நெருங்கினார்கள். ஆல்பர்ட்டினா விலகிச் சென்ற சமயம் அது. எனினும் லாராவுக்கும் நெரூதாவுக்கும் இடையில் ஏற்பட்ட காதல் அதிகம் பேசப்படவில்லை. லாராவைப் பற்றி ஒரு வரியும் எழுதவில்லை. நெரூதாவே அது பற்றி மௌனம் சாதித்தார். காரணம் லாராவின் வருங்காலக் கணவரான ஹோமிரோ அர்சேயுடன் நெரூதாவுக்கு இருந்த நட்பும் மரியாதையும். அர்சே பின்னாட்களில் அர்சே நம்பிக்கைக்குரிய செயலாளராக நெரூதாவின் மரணம் வரை பணியாற்றினார். 1977 ஆண்டு சர்வாதிகார ஆட்சியாளர்களால் மண்டை பிளந்து கொல்லப்பட்டார். கணவரின் மறைவுக்குப் பிறகு எழுதிய நினைவுக் குறிப்பில் “நான் பாப்லிட்டொவை முரட்டுத்தனமான குறுகிய காலம் காதலித்திருந்தேன்என்று லாரா ஒப்புதல் செய்தார்.

o

பால்யம் முதல் பதின் பருவம் வரை, தான் காதலித்தவர்களும் தன்னைக் காதலித்தவர்களுமான பெண்களுடன் ஏற்பட்ட உறவையும் பிரிவையும் சொல்லும் கவிதைகளின் தொகுப்பு இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும். தனது தனிமையையும் அதைத் தீர்த்த பெண்களையும் தனது காமத்தையும் அதைத் தணி்த்த துணைகளையும் பாப்லோ நெரூதா இந்தக் கவிதைகளில் அழியாத நினைவுகளாக மாற்றினார். ஆண் மைய நிலையிலிருந்தே இந்தக் கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. காதலிலும் காமத்திலும் சம பங்கு வகித்த பெண்களின் தரப்பிலிருந்து சின்ன எதிர்வினை கூட கவிதைகளில் இல்லை. முற்றிலும் ஓர் ஆணின் காதலும் காமமும் கொப்பளிக்கும் இந்தத் தொகுப்பின் பெருவாரியான வாசகர்கள் பெண்கள் என்பது விந்தை. எந்தப் பெண்களைப் பற்றி கவிதைகள் எழுதப்பட்டனவோ, சந்தேகமின்றி அந்தப் பெண்கள் இந்தக் கவிதைகளை வாசித்திருந்தார்கள் என்பது அந்தப் பெண்களின் பிற்கால நேர்காணல்களில் வெளிப்படுகிறது.

முதன்மையாக நான்கு பேர் இந்தக் கவிதைகளின் மையப் பாத்திரங்கள். அமேலியா, தெரேஸா, ஆல்பர்ட்டினா ஆகிய மூவரும் கணிசமான கவிதைகளின் நாயகிகள். பிற பெண்களுடன் உறவு நிலவியபோதும் இந்த மூவரையும் நெரூதா தீவிரமாகவும் மூர்க்கமாகவும் நேசித்தார். தொகுப்பில் அதிக எண்ணிக்கையிலான கவிதைகளில் இந்தப் பெண்கள் மறைவாகவும் பகிரங்கமாகவும் தெரியக் காரணம் நெரூதாவின் அதீதக் காதல்தான். தான் அவர்களிடம் கண்ட தனித்துவத்தை முன்னிட்டே காதலாகிக் கசிந்திருக்கிறார்.

பதின் மூன்று வயதில் காதல் கொண்ட அமேலியாவைத் தனது விடலைப் பருவப் பதற்றத்தைத் தணித்தவராக நெரூதா கண்டார். தன்னை விடுவித்தவர் என்று தெரேஸவைக் குறிப்பிடுகிறார். கவிதைகளில் மிக அதிக எண்ணிக்கையை ஒதுக்குமளவு அவருடைய பாதிப்பு இருந்தது. இருபது காதல் கவிதைகளில் எட்டு கவிதைகள் தெரேஸாவை மையங்கொண்டவை. நீண்ட காலம் சீராட்டிக் கொண்டிருந்ததும் தெரேஸா மீதான காதலைத்தான். இளமைக் காலம் தாண்டி மேலும் காதலுறவுகள் நேர்ந்த பின்னும் தெரேஸாவைப் பிற்காலக் கவிதைகளிலும் நினைவு கூர்ந்திருக்கிறார். தன்னை ஓர் ஆணாக முழுமையாகத் தனக்குள் வரவேற்றவர் என்று ஆல்பர்ட்டினாவைக் குறிப்பிடுகிறார். தான் வாழ்ந்த காலத்தில் எழுதிய கவிதைகளிலும் கட்டுரைகளிலும் நினைவுக் குறிப்புகளிலும் மறைமுகமாகவும் மாற்றுப் பெயர்களிலும் தனது தோழிகளைக் குறிப்பிடுகிறார் நெரூதா. ஆனால் அவரது காலத்துக்குப் பின்பும் வாழ்ந்த ‘காதலிகள்அவர் மறைவுக்குப் பின்னர் நினைவுகூரல்களில் தங்கள் காதலை ஒப்புக் கொண்டனர்.

            இருபது காதல் கவிதைகளில் இடம்பெறும் பெண் யார் என்ற பதில் சொல்லக் கடினமான கேள்வி எப்போதும் என்னிடம் கேட்கப்படுகிறது. வேதனையும் விழைவும் நிறைந்த இந்தக் கவிதைகளில் உள்ளும் புறமுமாக இரு பெண்கள் ஊடோடியிருக்கிறார்கள். அவர்களை மாரிசால் என்றும் மாரிசோம்ப்ரா என்றும் குறிப்பிடலாம். கடலும் சூரியனும் என்றும் கடலும் நிழலும் என்றும். இரவில் திட்பமான சுதந்திரத்தோடு நட்சத்திரங்கள் ஒளிரும் டெமூகோவின் ஈர வானம் போன்ற விழிகளுள்ள வசீகர நாட்டுப்புறக் காதலிதான் மாரிசால். நீரோட்டங்கள் சூழ்ந்த துறைமுகப் பிரதேசத்திலிருக்கும் மலைகள்மீது பொலியும் அரை நிலவு அவள். நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் தன்னுடைய மொத்தக் குதூகலத்துடனும் உயிர்ப்புள்ள அழகுடனும் தோன்றுகிறாள்.மாரிசோம்ப்ரா நகரத்து மாணவி. தன்னிச்சையும் கட்டற்ற கற்பனையும் நிரம்பிய என் மாணவப் பருவத்தில், சாம்பல் நிறத் தொப்பியணிந்து நளினமான கண்களுடனும் தேன் மலர்களின் வாசனையுடனும் வந்தவள். நகரத்தின் மறைவிடங்களில் நிகழ்ந்த வேட்கை ததும்பிய சந்திப்புக்களில் உடலை அமைதிப்படுத்தியவள்.

என்று தனது நினைவுக் குறிப்புகள் (பக். 52) நூலில் நெரூதா எழுதுகிறார்.

இருபது காதல் கவிதைகள் நூல், வெளிவந்த நாட்களில் மகத்தான வரவேற்பையும் கடுமையான விமர்சனத்தையும் பெற்றது. ஆபாசக் களஞ்சியம் என்றும் தனிநபர் காமக்கனைப்பு என்றும் கண்டனத்துக்குள்ளாது. தனியொரு கவிஞனின் திறந்த வாக்குமூலம் என்று அதைச் சொல்லலாம். அதேசமயம் அது காலத்தின் புத்தகமாகவும் இருந்தது. அதனாலேயே அது இளைஞர்கள் நடுவில் வெகுவாகப் புகழ் பெற்றது.

இந்த நூல் ஒரு யுகத்தை உருவாக்கியது; யுகத்தால் உருவானது. அந்தத் தலைமுறை இளைஞர்கள் அந்தக் கவிதைகளில் தங்களைக் கண்டடைந்தார்கள். அவற்றில் தங்களை அடையாளம் கண்டார்கள். தாங்கள் வாசிக்கும் காதலுடன் தங்களை இனங்கண்டார்கள். அந்த ஆண்டுகளில் இளம் பெண்கள் சமூக வெளியில் அவர்களை உறுதிப்படுத்திக் கொள்ளத் தொடங்கியிருந்தார்கள். 1920 ஆம் ஆண்டு உலகின் பல பாகங்களிலும் பாலியல் சுதந்திரம் அரும்பிய காலமாக இருந்தது. சிலி இளைஞர்கள் இடையில் புரட்சிகரமான பாலியல் இயக்கத்தைப் பற்றிப் பேசப் பக்குவப்பட்டதாக இருந்தது அந்தப் புத்தகம்என்று பாப்லோ நெரூதாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய மார்க் எய்ஸ்னெர் மதிப்பிடுகிறார்.

இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும் வெளிவந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பாப்லோ நெரூதா சிலி நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டு பணிநிமித்தம் பர்மாவுக்குப் புறப்பட்டார். தனது காதலிகளில் எவராவது உடன் வரவேண்டும் என்று விரும்பினார். ஆல்பர்ட்டினாவிடமும் லாராவிடமும் தன்னை மணந்து ரங்கூனுக்கு வருமாறு மன்றாடினார். லாராவுக்கு அப்போது வயது இருபது. சிறு பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்பப் பெற்றோர் மறுத்தார்கள். லாரா துணை வரமாட்டார் என்றானதும் நெரூதா தன்னை ஏற்றுக் கொள்ளும்படி ஆல்பர்ட்டினாவுக்குக் கடிதங்களாக எழுதினார். முன்பு அமேலியா, தெரேஸா ஆகியவர்களுடனும் காதல் முறியக் காரணமாக இருந்த சமூக அந்தஸ்து இங்கும் அவரை வீழ்த்தியது. ஆல்பர்ட்டினாவின் பெற்றோர் மகளைக் கண்காணித்தார்கள். நெரூதாவை மனமாரக் காதலித்தபோதும் ஆல்பர்ட்டினாவா பெற்றோரை மீறி வெளியேவரத் துணியவில்லை. ஏமாற்றத்தையும் துக்கத்தையும் துணையாக அழைத்துக்கொண்டு தன்னந்தனியானாகப் புறப்பட்டார் பாப்லோ நெரூதா. அவரது பயணப் பையில் இழந்த காதல்களின் உயிர்ச் சான்றான ‘இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப் பாடலும்தொகுப்பின் பிரதிகளும் இருந்தன.

@