சனி, 8 ஆகஸ்ட், 2020
வெள்ளி, 24 ஜூலை, 2020
ராமநாதனின் சஹானா
ஒளி
இடறிஇடறி
உரையாடும் அடர்வனம்
ஓசையற்ற
ஒலியுடன் ஒசியும் பெருமரங்கள்
வானிலிருந்து
தடையற்று
ஒழுகும் அமுத தாரை
அதல
பாதாளத்தில் விழும் தாளக்கட்டுடன்
என்னைநோக்கி
வருகிறது
ஒரு
மாறுகண் யானை
அதன்
செருமலில் எவரும் அறியாச் சுருதிகள்
அதன்
பிளிறலில் யாரும் கேளாத சங்கதிகள்
அதன்
மூச்சிரைப்பில் எவரும் நிரவாத ஸ்வரங்கள்
அதன்
அசைவில் மந்தர சலனம்
அதன்
நிமிர்வில் மத்திய சஞ்சாரம்
அதன்
நடையில் ஆரம்பமும் முடிவுமில்லா ஆலாபனை
அது
என்னைநோக்கி
வருகிறது
ஆயிரம்
படைகளைப் புறமுதுகிடச் செய்த அன்பைப்போல
ஆயிரம்
கடல்களைப் பருகிய அமைதிபோல
ஆயிரம்
மலைகளை உலுக்கிய தவம்போல
அஞ்சி
நின்ற என்னைத் துதிக்கையால் வளைத்து
அந்தரத்தில்
உயர்த்தி முதுகின்மேல் அமர்த்துகிறது
ஆகாயத்தில்
துழாவி
அளவில்லா
மலர்கொய்து கைகளில் வைக்கிறது.
அடர்வனத்தின்
எட்டுத் திசைகளிலும்
எதிரொளிக்கிறது
அம்மலரின் தெவிட்டாத தேன்
எதிரொலிக்கிறது
அம்மலரின் அகலாத நறுமணம்.
10.07.2020
தற்கொலைக் குறிப்பு
தற்கொலைக்கு
எத்தனை காரணங்கள் உண்டோ
அத்தனை வழிகளும் உண்டு.
ஒரு காரணத்துக்கு
நூறுநூறு வழிகள் இருப்பதைப்போலவே
ஒரு வழிக்கும்
நூறுநூறு காரணங்கள் இருக்கின்றன
தற்கொலை
விருப்பத்தின் விளைவு அல்ல
விளைவின் விருப்பம்
எவரும் தற்கொலை செய்துகொள்வது
விருப்பத்தால் அல்ல
விரும்ப முடியாத விளைவால்.
தற்கொலையின் வழி
நாம் நினைப்பதுபோல நேரானதல்ல
மத்தி மீன்முள்ளைப்போல ஊடுகிளைகள் கொண்டது
தற்கொலையின் நிச்சய முனையை அடைவதற்குள்
ஏதேனும் கிளைவழியே
வெளியேற உந்தித்தள்ளும் கருணைகொண்டது
நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிளைவழியாகப்
பயணத்தைப் பாதியில் கைவிட்டுத் திரும்பியவர்கள்தாம்
கிளையைக் கவனியாதவர்களே உயிரைத் தொலைக்கிறார்கள்.
நேற்று உயிரைத் தொலைத்தவர்
இறுதிக் கடிதத்தில் இப்படி எழுதியிருந்தார்:
‘சாவைப் பகடிசெய்யும் வாழ்வின் சாகசமே தற்கொலை’.
அந்த நாட்களில் ஒன்று
நான் மிக மிக மகிழ்ந்த நாட்களில்
அதுவும் ஒன்று
கானகத்தின் அமர வாழ்வுக்குச்
சாவா நெல்லி பறிக்க மலையேறிய
யானை
சறுக்கி விழுந்து காலைச் சிராய்த்துக்கொண்டது
பொந்திடை அணில் பதறி வந்து
பச்சிலைகளைக் கொறித்துப்போட்டது
நான் அதை விழுதாக அரைத்தேன்
அணில் காயத்துக்குப் பற்றுப்போட்டது
அப்போது
வானம் ஆதுரமாகப்
புன்னகை செய்தது
நூற்றாண்டுக்
கடம்பமரம் மலர்மாரி பெய்தது
மிக மிக மிக மகிழ்ச்சியாக
நானிருந்த நாட்களில் ஒன்று அது.
கனம்
ஒரு கல் கிடக்கிறது
காட்சிக்கு
எளியது
கைப்பிடிக்குள்
அடங்குவது
கடினம்
தோன்றாதது
கையில்
எடுக்கிறேன்
பார்வை
அளந்ததுபோலவே
கனம்
அவ்வளவு இல்லாதது
காட்சி
அலமாரியில் வைத்தால்
அழகுக்கு
அர்த்தம் கூட்டும்
மேஜைப்பளுவாக
வைத்தால்
தாள்
பதற்றம் தணிக்கும்
கல்லை
எடுத்ததற்குக்
காரணங்கள்
கிடைத்ததும்
வீட்டுக்குக்
கொண்டுபோகத் தீர்மானிக்கிறேன்
வலக்கையால்
நினைவையும்
இடக்கையால்
கனவையும்
இறுகப்
பிடித்திருக்கிறேன்
கையறு
நிலை
பிறகு
இருகையும்
தளர்த்தி
இருகையால்
எடுத்து
சும்மாதானே
இருக்கிறது என்று
தலைமேல்
சுமந்து
பிடிவிட்டவற்றை
மீண்டும் பற்றி
நடக்கத்
தொடங்குகிறேன்
பதில்
கிடைக்காமல் விடப்பட்ட கேள்விபோல்
நீளும்
நெடுவழியில் காண்கிறேன்
என்னைப்
போலவே கல்சுமந்து நகரும் கூட்டம்
ஒவ்வொரு
தலைக்கல்லுக்கும்
ஒவ்வொரு
பருமன்
ஒருதலைமேல்
சல்லி
ஒருதலைமேல்
துண்டு
ஒருதலைமேல்
பாறை
ஒருதலைமேல்
குன்று
எல்லா
வலக்கையிலும் நினைவு
எல்லா
இடக்கையிலும் கனவு
என்
தலைமறந்து
ஏளனமாய்
யோசிக்கிறேன்
‘கல்
சுமக்கும் சிரத்தினர்
நாசி
அரித்தால் என்ன செய்வர்?’
அக்கணமே
ஞாபகம் வருகிறது
என்
தலைக்கல்
இட்ட
அடி ஒவ்வொன்றுக்கும்
ஒவ்வொரு
அடியாக வளர்ந்து பருப்பதும்
வீட்டை
அடையும் முன்பே
மலையாக
மாறிவிடும் என்பதும்.
ஓவியம்: ஜியோவன்னி பாட்டிஸ்டா லங்கேட்டி ( 1635 - 1676 )
நாம் இல்லாமற் போனால்...
நாம்
இல்லாமற் போனால்
நம்
வீடு என்ன ஆகும்
நாம்
இல்லாமற் போனால்
நம்
தெரு என்ன ஆகும்
நாம்
இல்லாமற் போனால்
நம்
ஊர் என்ன ஆகும்
நாம்
இல்லாமற் போனால்
நம்
நாடு என்ன ஆகும்
நாம்
இல்லாமற் போனால்
நம்
உலகம் என்ன ஆகும்
நாம்
இல்லாமற் போனால்
நமது
பிரபஞ்சம் என்ன ஆகும்
நாம்
இல்லாமற் போனால்
நாம்
என்ன ஆவோம்?
சிற்பம்: சாரதா பிரதிக்ஷா
சிற்பம்: சாரதா பிரதிக்ஷா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)