புதன், 24 ஜூன், 2026

வெல்லிங்டனும் நீலமலை ரகசியமும்

 

நீலமலை ரகசியம்

@



ண்மையில் நான் வாசித்த நூல் நீலமலை ரகசியம் . ஆசிரியர் சிவராமன் கணேசன். ஜீரோ டிகிரி பப்ளிஷிங், ZDP – Specifics என்ற முத்திரையுடன் 2026 இல் நூலை வெளியிட்டிருக்கிறது.

 

எனது நாவல் ‘வெல்லிங்டன்’ இன்  வாசகர் என்ற நிலையில் அறிமுகமான நண்பர்   சிவராமகிருஷ்ணன் (பங்களூரு )  நீலமலை ரகசியம் நூலின் வெளியீட்டு விவரங்களை வாட்ஸ் ஆப் வழியே எனக்குப் பகிர்ந்திருந்தார். வெல்லிங்டன் நாவலின் கதை நீலகிரியின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டது. ஆகவே நீலமலை  பற்றிய நூலை  என் கவனத்துக்குக் கொண்டுவருவது பொருத்தம் என்ற கருத்தில்  சிவராமகிருஷ்ணன் பகிர்ந்திருந்தார். நீலகிரியைக் குறித்த  எந்தச் செய்தியும் எனக்கு ஆர்வமளிப்பது. எனவே குறிப்பிட்ட நூலின் விவரங்களைப் பெற்ற   உடனேயே  இணைய வழி ஆர்டர் செய்து இரண்டு நாட்களில் நூல் கிடைக்கப் பெற்றேன். நூலை விரைந்து வாசிக்கவும் செய்தேன்.  வாசிப்பில் சில ரகசியங்கள் பிடிபட்டன.

 

‘வெல்லிங்டன்’ நாவலின் முதல் எழுபத்தி ஆறு பக்கங்கள் ஜகதளா என்ற படகர் கிராமத்தில்  ராணுவப் பாளையம் எப்படி உருவானது, அதையொட்டி உதகமண்டலம் என்ற நகரம் எப்படி உருவானது, இந்த நகரத்தை உருவாக்க என்னென்ன முயற்சிகள் நடைபெற்றன, அந்த நாட்களில் கோயம்புத்தூர் ஜில்லாக் கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன் எப்படி அந்தத் திட்டத்தை நிறைவேற்றினார் என்பனவற்றைப் பற்றிப் பேசுகின்றன. இதற்கு ஆதாரமான வரலாற்றுத்  தரவுகளை நாவலில் புனைவு நடவடிக்கைகளாக  மாற்றியிருந்தேன். கற்பனையான காட்சிகளையும் உரையாடல்களையும் எழுதியிருந்தேன். ஒற்றைவரியிலும் சிறு ஆவணக் குறிப்பிலும் விரவியிருந்த தகவல்கள் புனைவின் நோக்கத்துக்கு ஏற்பக் கற்பனை செய்யப்பட்டிருந்தன.

 

என்னுடைய நாவலில் இடம்பெற்றுள்ள பல பகுதிகளை ‘நீலமலை ரகசியம்’ நூலில் சிவராமன் கணேசன் எடுத்துத் தன்னுடைய எழுத்தாகப் பயன் படுத்தியிருப்பது அவரது நூலை வாசித்தபோது தெளிவாகப் புலப்பட்டது. நீலமலை ரகசியம் நூலின் 102 பக்கங்களில் ‘வெல்லிங்டன்’  நாவலின் 60 பக்கங்களில் சொல்லப்பட்டிருக்கும் காட்சிகளை, வர்ணனைகளை, உரையாடல்களை, உணர்வுகளை, தகவல்களை ஏன் ஜோக்கையும் கூட  அநாயாசமாக எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்.

 

‘நீலமலை ரகசிய’த்தை வாசித்து முடித்ததும் இந்த உண்மை தெரிய  வந்தது. உடனே நூலின் பதிப்பாளர் ராம்ஜியைத்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஷயத்தைத் தெரிவித்தேன். எழுத்தாளர் சிவராமன்  கணேசனிடம் பேசி விட்டுத் தொடர்பு கொள்வதாகத் தெரிவித்தார். அதன் படியே உரையாடிவிட்டு மீண்டும் தொடர்புகொண்டார்.  சிவராமன் கணேசன் ராம்ஜியிடம் சொன்ன பதிலின் பிரதான அம்சம். ‘சுகுமாரன் எழுதியிருப்பது ஃபிக்ஷன். நான் எழுதியிருப்பது வரலாறு. நான் ஃபிஷன்’ என்பதே.

 

என்னுடைய எழுத்தை எடுத்தாண்டார் என்ற தனிப் புகாருடன் ஒரு பொதுப் புகாருக்கும் இங்கே சிவராமன் கணேசன் ஆளாகிறார். வரலாற்றிலிருந்து எடுத்த ஒரு தரவு நாவலில் புனைவாக மாறுகிறது. புனைவாக்கப்பட்ட ஒரு தரவை எப்படி மீண்டும் வரலாற்றுத் தகவலாக மாற்ற முடியும்? அது வரலாற்று மோசடியல்லவா? இந்தியா முழுவதும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி ஈறாகப் பல இடங்களில் ராமனின் பாதம் பதிந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. நம்பப்படுகிறது. அதன் பொருள் அந்தந்த ஊர்களுக்கெல்லாம் ராமன் வந்தார் என்று சொல்வதா? அதற்கு நிரூபணம் உண்டா? அது நம்பிக்கை சார்ந்த கற்பனை மட்டுமல்லவா? அந்தக் கற்பனையை வரலாற்று  உண்மையாக  முன்வைப்பது  மோசடி இல்லையா? சிவராமன் கணேசன் செய்திருப்பது அதைத்தான்.

 

நூலின் பின்னிணைப்பில் ஆதார நூல்களின் பட்டியலைக் கொடுத்திருக்கிறார் சிவராமன் கணேசன். அதில் ‘வெல்லிங்டன் – சுகுமாரன்’ என்பதும் இடம்பெற்றுள்ளது. ஆக, என்  நாவலை அவர் வாசித்திருக்கிறார் என்பதும் அதிலிருந்து பகுதிகளை எடுத்தாண்டிருக்கிறார் என்பதும் இதன் மூலம் வெளிப்படுகிறது.  அந்தப் பகுதிகளைச் சில இடங்களில் அப்படியேயும் சில இடங்களில் திருத்தியும் பயன்படுத்தியிருக்கிறார். அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான ஆதார நூல்கள் ‘வெல்லிங்டன்’ நாவலுக்கு நான் எழுதியிருக்கும் ‘சென்ற காலத்தின் நிலப்படம்’ (பக்கம் 335 ) என்ற பின்னுரையில் கொடுக்கப்பட்டிருப்பவை.

 

வெல்லிங்டன் நாவலின் ( முதல் பதிப்பு 2013, காலச்சுவடு பதிப்பகம் ) 35 ஆம் பக்கத்தில் இடம் பெறும் பகுதி பின்வருமாறு:

 

மலைத் தொடரின் இடையிடையே கிடக்கும் உயரமான இந்தப் பீடபூமிப் பிரதேசங்களில்தான் ஜன சஞ்சாரத்தைப் பார்க்க முடிகிறது. கிராமங்கள் என்று சொல்வது டம்பமான வார்த்தை. நாலோ ஐந்தோ மண்குடில்கள். கூரைக்குப் புல்வேய்ந்திருக்கிறார்கள். எல்லாக் குடில்களுக்குப் பக்கத்திலும் தொழுவம் இருக்கிறது. சராசரியாக ஒரு குடிசைவாசி நாலு எருமைகளையாவது வளர்க்கிறான் என்று அனுமானிக்கலாம். சொற்பமாக விவசாயம் செய்கிறார்கள்

 

இந்தப் பகுதி நீலமலை ரகசியம்  நூலில்  ( 5. முதல் சர்வே , பக்கம் 33 ) இப்படி வருகிறது.

 

இவற்றைக் கிராமங்கள் என்று சொல்வது சற்று ஆடம்பரமான பிரயோகம். எண்ணி நான்கைந்து வீடுகள்தான் இருக்கின்றன. அனைத்தும் மண்குடில்கள். புல்லினாலான கூரை வேய்ந்திருக்கிறார்கள். எல்லாக் குடிகளின் பக்கத்திலும் தொழுவம் இருக்கிறது. சராசரியாக ஒரு குடிசைவாசி நான்கு எருமைகளையாவது வளர்க்கிறான். சொற்பமாக விவசாயமும் செய்கிறார்கள்

 

கதையின் காலம் நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்பதால் பழைமையான நடை கையாளப்பட்டது. அதைத் தட்டிக் கொட்டி சிவராமன் கணேசன் தன்னுடையதாக மாற்றிக் கொண்டிருக்கிறார். இரண்டையும் பார்க்கலாம்.

 

வெல்லிங்டன் நாவலின் 34 ஆம் பக்கத்தில் உள்ள  பகுதி இது.

 

குதிரைமுடியிலிருந்து ஏழு மைல் தூரத்திலிருக்கிற மேல்கோட்டைக்கு நாங்கள் வந்து சேர்ந்தது ஒன்பதாம் தேதி. இதற்கு மேல் செங்குத்தான பாதைகள். ஒற்றைக் கால் வைத்து ஜாக்கிரதையாக நடக்க வேண்டிய குறுகிய தடங்கள். அதைக் கடக்க மூன்று நாட்கள் வேண்டி வந்ததிலிருந்தே வழியின் அபாயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.வழி மட்டுமல்ல. பொழுதுகளும் விநோதமானவை. எந்த நேரத்தில் மழை வரும் , எந்த நேரத்தில் மேகங்களுக்குப் பின்னால் சூரியன் ஒளிந்து கொள்ளும், எந்த நேரத்தில் மஞ்சு மூட்டம் கவியும் என்று அனுமானிக்க முடியாத விநோதமான சீதோஷ்ணக் கண்ணாமூச்சி. இந்த மலைப்பிரதேசத்தின் வசியமே இந்தச் சீதோஷ்ணம்தான்.

 

இந்தப் பகுதி சிவராமன் கணேசனின்  கையாடலில் நூலின் 35 ஆம் பக்கத்தில் பின்வருமாறு மாறுகிறது.

 

இதற்கு மேல் செங்குத்தான பாதைகள். ஒற்றைக் கால் வைத்து ஜாக்கிரதையாக நடக்க வேண்டிய குறுகிய தடங்கள். அதைக் கடக்க மூன்று நாள்கள்  வேண்டியிருக்கிறது என்பதிலிருந்தே  வழியில் அபாயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.வழி மட்டுமல்ல. பொழுதுகளும் விரோதமானவை. எந்த நேரத்தில் மழை வரும் , எந்த நேரத்தில் மேகங்களுக்குள் சூரியன் ஒளிந்துகொள்ளும், எந்த நேரத்தில் மேகக் கூட்டங்கள் வானிலிருந்து கீழிறங்கி வெண்படுதா போட்டுப் பாதையை மறைக்கும் என்று அனுமானிக்கவே முடியவில்லை. விநோதமான காலநிலைக்  கண்ணாமூச்சி. இந்த மலைப்பிரதேசத்தின் வசியமே இந்தக் காலநிலைதான்.

 

வெல்லிங்டன் நாவலில் 34 ஆம் பக்கத்தில் இடம் பெற்றிருப்பவை இவை.

 

இங்கிருக்கும் வனத்துக்கு ஒரு பொது சுபாவமிருப்பதை அவதானித்தோம். மலைகளை ஒட்டிய பகுதியில் கானகம் இயற்கையின் குகைபோல முடிவற்றுப் போகிறது. உயரமான மரங்கள். அடர்ந்த புதர்கள். செழித்து வளர்ந்திருக்கும் புல்வெளிகள். மலையின் இடைகளில் காட்டுத் தாவரங்கள் வளர்ந்திருக்கின்றன.சில இடங்களில் குட்டையாக. சில இடங்களில்  ஆளுயரத்துக்கு. அளவு பார்த்து நட்டு வைத்தது போலத் தெரிகின்றன. அதைச் சோலை என்கிறார்கள். இங்கிலாந்தின் தெற்குக் கடற்கரைப் பகுதியில்தான் இவ்வளவு கிரமமான தாவர வளர்ச்சியைப் பார்க்க முடியும். அந்தி வெயில் விடைபெற்று நகர்கிறபோது சோலைகளும் வெளிச்சத்தைப் பின் தொடர்ந்து நடக்கின்றன.

 

இந்த வரிகள் நீலமலை ரகசியம் 35 ஆம் பக்கத்தில் இப்படி மாறுகின்றன.

 

இங்கிருக்கும் காடுகளுக்கு ஒரு பொதுச் சுபாவமிருப்பதைக் கண்டுகொண்டோம். மலைகளையொட்டிய பகுதியில் கானகம் இயற்கையின் குகைபோல முடிவேயற்று நீள்கிறது. உயரமான மரங்கள், அடர்ந்த புதர்கள், செழித்து வளர்ந்திருக்கும் புல்வெளிகள், மலையில் இடைகளில் இன்னவென்று சொல்ல முடியாத காட்டுத் தாவரங்கள் வளர்ந்திருக்கின்றன. சில இடங்களில் ஓர் ஆள் உயரத்துக்கு நெருக்கமாகவும் இருக்கின்றன. அதைச் சோலை என்கிறார்கள். அளவு பார்த்து நட்டுவைத்த இறைவன் யாரென்று தெரியவில்லை. அத்தனை அழகோடு இருக்கிறது.

 

இங்கிலாந்தின் தெற்குக் கடற்கரைப் பகுதியில்தான் இவ்வளவு அடர்த்தியான தாவர வளர்ச்சியைப் பார்க்கமுடியும். மாலை வெயில் விடைபெற்றுச் செல்லும்போது சோலைகளும் வெளிச்சத்தைப் பின்பற்றித் தொடர்ந்து நடக்கின்றன.

 

இது வெல்லிங்டன் நாவலின் 36 ஆம் பக்கத்திலுள்ள பத்தி.

 

சமவெளிக்குத் திரும்புவது என்று தீர்மானமெடுத்தபோதுதான் இந்தப் பூமியைப் பிரிவதை ஏக்கமாக உணர்ந்தோம். கூலிகள் சம்மதிக்கத் தயாராக இல்லாதபோதும் மலைமீது இன்னும் சிறிறுது தூரம் ஏறிப்பார்க்க ஆசைப்பட்டோம். ஏக்கத்துக்கான பரிகாரம். இல்லையென்றால் மலையின் அழைப்பு. அடுத்த நாள் காலை மலையேற்றம் முன்பு இருந்ததை விட லகுவாக இருந்தது. வழக்கத்தை விட வேகமாக ஏறி தண்டநாட்டை அடைந்தோம். இங்கேயிருந்து ஒரு தடம் சோலைகளுக்குள்ளாகவும் வனத்தை ஊடுருவியும் போகிறது. அது முடியும் இடத்தில் படகர்களின் ஊர் இருப்பதாகச் சொன்னார்கள். ஊரின் பெயர் அழகாக இருக்கிறது. ஜகதளா. சங்கிலித் தொடர்போல செங்குத்தான மலைகளும் உயரமான குன்றுகளும் ஊரைப் பத்திரப் படுத்துகின்றன. வோட்டகமண்ட் இங்கிருந்தும் வெகுதொலைவில் கானகங்களுக்கு நடுவில் ஒளிந்திருக்கிறது. அதை அடைவதுதான் உத்தேசம். ஆனால் எங்கள் சேமிப்பிலிருக்கும் ஆகாரங்கள் மலையிறங்கும்  நாட்களுக்குரியவை. வழிகாட்டிகளின் மனங்களும் கூலிகளின் மனங்களும் சமதளத்திலிருக்கிற அவர்களின் குடியிருப்புகளுக்கு எப்போதோ போய்விட்டன.  வாபசாவதைத் தவிர வேறு மார்க்கமில்லை. எங்கள் சாமக்கிரியைகளுடன் நாங்கள் இறங்கிய வேகத்தைப் பவானி ஆறு மலையிறங்கும்  ஆவேசத்துடன் உபமானம் செய்யலாம். பன்னிரண்டு நாட்களில் ஏறிய வழிகளை நாலே நாட்களில் பின்வாங்கச் செய்திருக்கிறோம். அலங்காரமாகச் சொல்வதானால் யுத்தத்தில் பின்வாங்குவது போலத்தான் இதுவும். பின்வாங்குகிறவனுக்குப் பேச எதுவுமில்லை. அவன் மனம் பூராவும் யுத்த களத்தின் காட்சிகள் மிஞ்சியிருக்கும்.  எங்கள் மனதிலும் மலையின் தோற்றங்களும் கானகத்தின் கேலிச் சிரிப்பும் மிஞ்சியிருக்கின்றன. அந்தச் சிரிப்பின் மையத்தில் வெல்லப்படாத ரகசியமாக இருக்கிறது வோட்டகமண்ட்.

 

 

இந்தப் பகுதி நீலமலை ரகசியத்தின் 6 ஆவது அத்தியாயம், வெல்லப்படாத ரகசியத்தில் பின்னுள்ளவாறு  துண்டாடப் பட்டிருக்கிறது. பக்கம் 38, 39.

 

சமவெளிக்குத் திரும்புவது என்று தீர்மானித்த போதுதான் இந்தப் பூமியைப் பிரிவதை ஏக்கமாக உணர்ந்தோம். இன்னும் மலையின் அழைப்பு எங்களுடனே இருப்பதாகவே உணர்ந்தோம். இன்னும் சில நாள் திட்டமிட்டு வந்திருக்கலாமோ என்று யோசித்தோம். எங்களையே சபித்துக் கொண்டோம். மலையில் வீழ்ந்து இறந்த நஞ்சன் என்ற சிறுவனை நினைத்துப் பயந்தோம். ஒருவேளை கிராமவாசிகள் சொல்வதுபோல தெய்வங்கள் மலையேறி வருவதை விரும்பவில்லையோ என்று விவாதித்து ஒரு முடிவுக்கு வர முடியாமல் குழம்பினோம்.

 

வொட்டகமண்ட் என்று இந்தக் கிராமவாசிகள் அழைக்கிற அந்த உச்சிச் சமவெளி இங்கிருந்து வெகுதொலைவில் கானகங்களுக்கு நடுவே காத்திருக்கிறது. ஆனால் நேரமில்லை. மனமில்லை. கூலிகள், வழிகாட்டிகள் எங்களுக்கு எதிராக மாறிவிட்டார்கள். நஞ்சனின் மரணத்துக்குப் பிறகு எங்களுக்கும் வேறு வழி தெரியவில்லை. எங்கள் சேமிப்பிலிருக்கும் உணவுகளின் அளவு குறைந்து போயின. மலையிறங்குவதைத் தவிர எங்களுக்கும் வேறு வழியிருக்கவில்லை.

 

நாங்கள் இறங்கிய வேகத்தை பவானி ஆறு மலையிறங்கும் ஆவேசத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளலாம். பன்னிரண்டு நாள்கள் ஏறிய மலையை நான்கே நாள்களில் பின் தள்ளி  வெகு வேகமாக இறங்கியிருந்தோம். யுத்தத்தில் பின்வாங்குவது போலத்தான் இதுவும். பின்வாங்குகிறவனுக்குப் பேச எதுவுமில்லை. அவன் மனம் முழுவதும் யுத்த களத்தின் காட்சிகள் மிஞ்சியிருக்கும். எங்கள் மனத்திலும் மலையின் தோற்றங்களும் கானகத்தின் காட்சிகளும் மிஞ்சியிருக்கின்றன. அங்கே எங்கோ தூரத்தில் ஒளிந்துகொண்டு பழிப்புக் காட்டிக் கொண்டிருக்கிறது வொட்டகமண்ட். இன்னும் வெல்லப்படாத அந்த ரகசியத்தை, காண முடியாத ஏக்கத்துடனே திரும்பி வந்திருக்கிறோம்’. என்ற கவித்துவமான வாக்கியத்தோடு விஷ்ஷும் கிண்டார்ஸ்லேயும் அளித்த நீலகிரி சர்வே பற்றிய அறிக்கை நிறைவடைந்திருந்தது.

 

ஜான் சல்லிவனால் நீலகிரி மலையில் சர்வே பணிக்காக அனுப்பப் பட்ட அசிஸ்டெண்ட் கலெக்டர்களான ஜே.சி.விஷ், என்.டபிள்யூ, கிண்டர்ஸ்லே இருவரும் அளித்த சர்வே ரிப்போர்ட்டின் வாசகங்களாக நான் எழுதியவற்றை அங்குமிங்கும் தட்டியும் நீட்டியும் சிவராமன் கணேசன் தனது ‘வரலாற்று நூலி’ல் பயன்படுத்தியிருக்கிறார். நீலகிரி கெஸட்டியரில் அறிக்கை பற்றிய தரவுகள் உள்ளன. அவற்றை நான் புனைவாக மாற்றியிருக்கிறேன். அதில் இடம் பெறும் வர்ணனைகள், உரையாடல்கள் அனைத்தும் நான் கற்பனை செய்து உருவாக்கியவை. அதை எந்தக் கூச்சமும் இல்லாமல் வரலாற்றுத் தகவல்களாக சிவராமன் கணேசன் களவாடியிருக்கிறார்.  எந்த நோக்கத்துக்காக நாவலில் அவற்றை முன்னிருத்தினேனோ அதேபடியே பயன்படுத்துகிறார். அவற்றை ஒற்றை மேற்கோள் குறிக்குள் உரையாடலாகக் கொடுக்கிறார். என்ன புத்திசாலித்தனம்!

 

நாவலின் 45 ஆம் பக்கத்தில் இந்த உரையாடல் இடம் பெற்றிருக்கிறது.

 

‘’என்னுடைய பிரித்தானிய நண்பர் மலைப் பிரதேசத்தை ஆராயப் போகிறாரா, ஆக்கிரமிக்கப் போகிறாரா? ‘’ பயணத்துக்காகச் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளைப் பார்த்துக் குழு அங்கத்தினரான அசிஸ்டெண்ட் சர்ஜன் ஜோன்ஸிடம் கேட்கவும் செய்தார்’’

 

இதுவே நீலமலை ரக்சியத்தின் 66 ஆம் பக்கத்தில் இப்படி உருமாற்றம் பெறுகிறது.

 

அதற்குப் பதில் சொல்லாமல் ஜோன்ஸுக்கு மட்டும் கேட்கும் குரலில் ‘நாம் மலையேற்றம் செய்யப் போகிறோமா அல்லது மலைமேல் ஏறி ஏதேனும் போர் தொடுக்கப் போகிறோமா?’

 

உரையாடல் மட்டுமல்ல. பயண ஏற்பாடு பற்றிய தகவல்களும் அப்படியே உருவப்பட்டிருக்கின்றன.

 

நாவலின் 49 ஆம் பக்கத்தில் இந்தக் காட்சி சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

 

வெகுசீக்கிரம் திம்மட்டிவாசியாகக் கூடும் என்று சல்லிவனின் உள்ளுணர்வு முனகியது. உடலெங்கும் பரபரப்புப் பற்றிக் கொண்டது.தனது சாதனங்களைச் சுமந்து வந்த கூலியைச் சைகை காட்டி அழைத்தார். அவன் முதுகுச் சுமையை இறக்கினார். மூட்டைக்குள் மடித்து வைத்திருந்த பிரிட்டிஷ் கொடியை வெளியில் எடுத்தார். சுருக்கங்களை நீவி விரித்தார். பூக்களுடன் குலுங்கிக் கொண்டிருந்த மூங்கில் புதரிலிருந்து விளைந்த மூங்கிலைச் சிப்பாயிடம் காட்டி வெட்டியெடுக்கச் சொன்னார். அந்தக் கம்பில் பிரிட்டிஷ் கொடியைக் கட்டினார். தேக பாரத்தைச் சட்டை பண்ணாமல் முன்னாலிருந்த பாறைமேல் ஏறினார். ஆவேசம் கொப்பளிக்கும் குரலில் பிரகடனம் செய்தார.

‘இந்த நீலமலைகளின் கடவுள்கள் இன்று முதல் மாட்சிமை தங்கிய பிரித்தானிய மன்னரின் பிரஜைகள்’

 

இந்தக் காட்சியைச் சிவராமன் கணேசன் தழுவியிருக்கிறார். நீலமலை ரகசியத்தின் 69 ஆம் பக்கத்தில். அது இப்படி:

 

லூயிக்கும் ஜோன்ஸுக்கும் அது பெரும் வியப்பாக இருந்தது. அவ்வளவாகத் தன்னுடைய இறை நம்பிக்கையை வெளிக்காட்டியிருக்காதவர் சல்லிவன். தனது கனச் சரீரத்தின் எடையைப் பொருட்படுத்தாது அவர் மண்டி போட்டு சிரமப்பட்டு எழுந்ததைப் பார்த்து கைதிக் குழுவினருக்குச் சிரிப்பு வந்தது. சத்தம் வராமல் சிரித்துக் கொண்டனர்.லூயி நேரே சென்று சல்லிவனை அணைத்துக்  கொண்டார். பிரிட்டிஷ் கொடி ஒன்றை முன்னே சென்ற யானைப் பாகனிடம் கொடுத்து அதை அவன் பீடத்தில் செருகி வைக்கச் சொல்லி ‘புறப்படலாம்’ என்றார்.

 

வெல்லிங்டன் நாவலின் 59 ஆம் பக்கத்தில் இங்கிலாந்திலிருக்கும் தனது மனைவிக்கு தாமஸ் மன்றோ எழுதும் கடிதம் இடம் பெற்றுள்ளது . அதன் வாசகங்களில் ஒரு பகுதி இப்படியுள்ளது.

 

இது மலைப்பிரதேசம். ஆனால் குன்றுகளும் முகடுகளும் பசுந்தாவரத்தால் மூடிக் கிடக்கின்றன. கல் வடிவத்தின் மீது இயற்கை கொடிகளையும் புதர்களையும் மரங்களையும் போர்த்தியிருக்கிறது. வெறும் கல் ஒன்றைக் கூட நான் பார்க்கவில்லை என்றால் உன்னால் நம்ப முடிகிறதா?

 

பின்வரும் வரிகள் நீலமலை ரகசியம்  பக்கம் 102 இல்  பின்வருமாறு இடம் பெறுகின்றன.

 

இது மலைப்பிரதேசம். ஆனால் குன்றுகளும் முகடுகளும் பசுந்தாவரங்களும் மூடிக் கிடக்கின்றன. வெறும் கல்லென்று இந்த மலையில் ஓர் இடத்தைக் கூட நான் பார்க்கவில்லை என்றால் உன்னால் நம்ப முடிகிறதா?

 

 

நாவலின் 60 ஆம் பக்கத்தில் அதே கடித வாசகங்கள் இப்படி இடம் பெற்றிருக்கின்றன.

 

இந்தக் கடிதத்தைக்கூட  பெரிய கம்பளிக் கோட்டைப் போட்டுக் கொண்டுதான் எழுதுகிறேன். அப்படியும் விரல்கள் நடுங்குகின்றன. நீ வாசிக்கும் எழுத்துக்கள் வடிவமில்லாமலிருந்தால் அதற்கு நான் ஜவாப்தாரியல்ல. வோட்டகமண்டின் சீதோஷ்ணம் அப்படி.

 

இதே வாசகங்கள் சிவராமன் கணேசனின்  நூலின் 102 ஆம் பக்கத்தில் இடம் பெறுகின்றன.

 

இந்தக் கடிதத்தை பெரிய கம்பளிக் கோட்டைப் போட்டுக் கொண்டுதான் எழுதுகிறேன். ஆனாலும் விரல்கள் நடுங்குகின்றன. நீ வாசிக்கும் எழுத்துக்கள் வடிவமில்லாமல் இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. வொட்டகமண்டின் சீதோஷ்ணம் அப்படி.

 

மேலே எடுத்துக் காட்டப்பட்டுள்ளவை அனைத்தும் என்னுடைய வெல்லிங்டன் நாவலிலிருந்து சிவராமன் கணேசன் தனது  நீலமலை ரகசியம் வரலாற்று நூலில் திருடிச் சேர்த்திருக்கும்  பகுதிகள். இந்தச் செயல் ஓர் எழுத்தாளன் என்ற முறையில் எனக்கு இழைக்கப்பட்ட அநீதி என்பதை  உறுதியாகப் பதிவு செய்கிறேன்.

 

மேற்குறிப்பிட்ட பகுதிகளைத் தன்னுடைய நூலில் எடுத்துக் கொண்டிருக்கும் சிவராமன் கணேசன் அதிபுத்திசாலித்தனமாகச் சில திருத்தங்களையும் செய்திருக்கிறார். நாவலின் நடையில் பழைமை தெரிய வேண்டும் என்பதற்காக நான் பயன்படுத்தியிருந்த வடமொழிச் சொற்களைத் தனித்தமிழ்ச் சொல்லாக மாற்றுகிறார். டம்பம் ( ஆடம்பரம் ), சீதோஷ்ணம் ( காலநிலை ), ஜவாப்தாரி ( பொறுப்பு ), மஞ்சு மூட்டம் ( வெண்படுதா ), ஆகாரம் ( உணவு ) – இவை சில உதாரணங்கள். ஒரு புனைவின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள இயலாத ஒருவர் செய்யும் குயுக்தி இது. முகத்தில் மச்சத்தை ஒட்ட வைத்துக் கொண்டால் ஆளே அடையாளம் மாறி விடுவார் என்ற சினிமாத் தந்திரம் இது.

இந்தக் களவாடலும் அதையொட்டிய கைவேலைகளும் ‘தெரியாமல் நடந்து விட்டவை’ என்று சிவராமன் கணேசன் கூறுகிறார்.

 

@

 

ராம்ஜியின் அறிவுறுத்தலின் படி சிவராமன் கணேசன் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டார். எனது சென்னைப் பயணம் காரணமாக அவருடன் உடனடியாகப்  பேச முடியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு கோவை திரும்புவேன். அன்று பேசலாம் என்று அவருக்குப் பதில் சொன்னேன். இடையில் ‘சிவராமன் பேசினாரா?’ என்று விசாரித்த ராம்ஜிக்கும் விவரங்களைத் தெரிவித்தேன். ‘சிவராமனை உங்களை நேரில் சந்திக்கும்படிச் சொல்லியிருக்கிறேன்’ என்றும் குறிப்பிட்டார்.

 

சென்னையிலிருந்து கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது சிவராமன் கணேசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். பயணத்தில் இருப்பதைச் சொல்லி அன்று மாலை கோவையில் என் வீட்டில் சந்திக்கலாம் என்றேன்.  அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வீட்டு முகவரியையும் இட விளக்கப் படத்தையும் அனுப்பி வைத்தேன்.

 

8. 6.2026 அன்று மாலை எங்கள் சந்திப்பு நடந்தது. பாதிப்புக்குள்ளானவன் என்பதால் சந்திப்பில் அதிகம் பேசியது நானே.  என் தரப்பிலான வாதங்களை விரிவாகவே முன்வைத்தேன். தெரியாமல் நடந்து விட்டது என்ற அவரது சமாதானத்தை என்னால் ஏற்க முடியவில்லை. அவர் வெல்லிங்டன் நாவலை வாசித்திருக்கிறார் என்பதற்கு நீலமலை ரகசியம் நூலின் பின்னிணைப்பே சான்று. இங்கே  பட்டியலிட்டுக் காட்டியிருக்கும் உருவல்களே அத்தாட்சி. இது தெரிந்தே செய்தது. எனவே பிழை அல்ல. திருட்டு. எனவே குற்றம். ஆகவே அவரது மன்னிப்பு இக்கட்டைச் சமாளிக்கும் தந்திரமே தவிர ஆத்மார்த்தமான ஒப்புதல் அல்ல. இதில் எனக்குக் கோபமில்லை. பெரும்  வருத்தமிருக்கிறது. எழுத்தின் நேர்மை பற்றிய சந்தேகமிருக்கிறது என்பதை எடுத்துச் சொன்னேன். ‘தெரியாமல் நடந்து விட்டது, மன்னித்துக் கொள்ளுங்கள்’  என்பதையே அவர் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். இந்த விவகாரத்தில் மன்னிக்கிற பெருந்தன்மை எனக்கு இல்லை என்பதையும் உறுதியாகச் சொன்னேன். நீலமலை ரகசியம் நூலைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். அது என்னுடைய விஷயமல்ல. அவர் பிரச்சனை. நூலை வெளியிட்டவர்களின் பிரச்சனை. ஆனால் இந்த முறைகேட்டைப் பற்றிப் பொது வெளியில் பேசுவேன். எழுதுவேன் என்று அழுத்தமாகவே தெரிவித்தேன். அதன் விளைவே இந்த நீண்ட விளக்கம். என்னைத் தேடி வரும் ஒரு நண்பரை எந்த அளவுக்கு மதித்து உபசரிப்பேனோ அந்த  மதிப்புடனும் விருந்தோம்பலுடனுமே  சிவராமன் கணேசனுக்கு  விடை கொடுத்து அனுப்பவும் செய்தேன். ஏனெனில் அவர் தன்னை எழுத்தாளன் என்று அறிவித்துக் கொள்ள விரும்புபவர். எழுத்தாளனின் பணி கேளிக்கையானதோ பெயரீட்டும் உத்தியோ பொருளீட்டும் தொழிலோ அல்ல; வாழ்வின் பகுதி என்று நான் நம்புவதுதான் காரணம். அதைத் தெரிவிக்க விரும்பியதுதான் இந்த ஆதங்கத்துக்கு அடிப்படை.  

 

வெல்லிங்டன் நாவலின் முதல் பதிப்பு 2013 இல் வெளியானது. இதுவரை ஐந்து பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. சில ஆயிரம் படிகள் விற்பனையாகி இருக்க் கூடும்.  இங்கு விற்பனையைக் குறிப்பிடுவது அதன் வணிக மதிப்பை முன்னிட்டு அல்ல. சில நூறு வாசகர்களாவது நாவலை வாசித்திருப்பார்கள் என்பதை எடுத்துக் காட்டவே. 2026 இல் வெளிவந்திருக்கும் நீலமலை ரகசியத்தின் பகுதிகளை 2013 லேயே நான் களவாடி விட்டேன் என்று அந்த வாசகர்கள் கருதி விடக் கூடாது என்ற எண்ணமே இதைப் பொதுவெளியில் பகிரக்  காரணம்.

 

வெல்லிங்டன் நாவலின் குறிப்பிட்ட 76 பக்கங்கள்- நீலகிரியின் உருவாக்கம் உள்ளிட்டவற்றைக் கொண்ட பகுதிகள் -  சில ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வு மூலமும் சான்றாதார நூல்களின் வாசிப்பு மூலமும் நீலகிரி தொடர்பான ஆய்வுகளைச் செய்திருக்கும் வல்லுநர்களுடன் நடத்திய உரையாடல்கள் மூலமும் பெற்ற தகவல்களைக் கொண்டவை. சான்றாதாரங்கள் பொதுவானவை. அவை எதுவும் நான் கண்டுபிடித்தவையல்ல.  யாரும் பயன்படுத்தக் கூடியவை. அவற்றின் மீது எனக்கு முற்றதிகாரம் இல்லை. தனிப்பட்ட உரிமை இல்லை. ஆனால் அந்தத் தகவல்களையும் தரவுகளையும் புனைவில் நான் கையாண்டிருக்கும் முறை எனக்கே உரியது. அந்த  வரிகளும் வர்ணனைகளும் உரையாடல்களும் சித்தரிப்புகளும் காட்சிகளும் என் கற்பனையில் உருவானவை. என் சிந்தனையில் உருவானவை.  என் உழைப்பின் விளைவு.  என்னுடைய அறிவுசார் சொத்து. என் உடைமைப் பொருள். அதைத்தான்  சிவராமன் கணேசன் ஜேப்படி செய்து தன்னுடையாக ஆக்கியிருக்கிறார். இது கண்டனத்துக்குரியது.

 

@

 

 

 

 

 

 

 

 

சனி, 5 ஜூலை, 2025

 




                                                               பஷீரின் கடிதம்

 


மலையாளத்தின் சிந்தனையாளரும் பேச்சாளரும் திறனாய்வாளரும் கல்வியாளரும் நித்திய பிரம்மச்சாரியுமான  சுகுமார் அழிக்கோடுக்கு வைக்கம் முகம்மது பஷீர் 1991 இல் எழுதிய கடிதம் இது. கவிஞர் சச்சிதானந்தன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். நன்றி – சச்சி மாஷ்.

 


@

மதிப்புக்குரிய தத்வமஸி

 

தாங்கள் அனுப்பிய குறிப்பைப் படித்துப் புரிந்து கொள்ள எங்களாலும் அண்டை வீட்டாராலும் முடியவில்லை. எனவே வழக்கம்போல மருந்துக் கடையில் கொடுத்தோம். அவர்கள் அதைப் படித்துப் பார்த்து 12 குளிகைகளைத் தந்தார்கள். இரண்டை எடுத்து வலது வாயில் போட முயன்றபோது அசரீரி ஒலித்தது. அந்த மாத்திரைகள் இரண்டும் பேதிக்கானவை. 10 மாத்திரைகள் மூச்சுத் திணறலுக்கானவை. நன்றி.

 

என்னுடைய திவ்விய திருஷ்டியை விய்யூர் நோக்கித் திருப்பினேன். தங்கள் இதயத்தை நன்றாகப் பார்த்தேன். இதயத்திலிருந்து 29 அன்று தாங்கள் என் வீட்டுக்கு சாப்பாட்டுக்கு வருவீர்கள் என்று புரிந்தது. நல்ல உணவைத் தயார் செய்கிறோம். அன்றைய தினம் எம்டியையும் என்பியையும் தங்களுடன் அழைத்து வருக . மலையாளம் எழுதவும் வாசிக்கவும் தெரிந்த்வர்கள் அந்தப் பகுதியில் இருந்தால் எம்டிக்கும் என்பிக்கும் கார்டு போடவும்.

 

தங்களுக்கு மலையாளம் கற்றுத் தருவதற்காக ஒரு பெண்ணைத் தங்கள் வசிப்பிடத்துக்கு அனுப்புகிறேன். பேரழகி. தாங்கள் அவளை மணம்முடிப்பதாக இருந்தால் எனக்கு மாதந்தோறும் 250 ரூ அனுப்பித் தரவேண்டும். தங்களுக்கு அவள் மூலமாகப் பிறக்கும் ஆண் பிள்ளைகளை என்னிடம் ஒப்படைத்து விட வேண்டும். ஒரு தற்கொலைப் படையை அமைப்பதற்காக.

 

இந்தக் கடிதத்தை யாரையாவது வைத்து வாசித்து ஞானி ஆவீர்களாக.

 

மங்களம்

கோழிக்கோடு

14 1 1991

@

தத்வமஸி – சுகுமார் அழிக்கோடு எழுதிய நூல். விய்யூர் -சுகுமார் அழிக்கோடு வசித்த இடம். 

எம்டி – எம்.டி. வாசுதேவன் நாயர். என்பி – என்.பி. முகம்மது – எழுத்தாளர்.

 

கடிதத்தை எழுதியவரும் கடிதத்தைப் பெற்றவரும் அதில் குறிப்பிடப் பட்ட ஆளுமைகளும் இன்று இல்லை. ஆனால் பஷீரின் இலக்கியப் பிரசித்தி பெற்ற குறும்புகள் ( குசும்புகள் ) இன்றும் வாழ்கின்றன.


இன்று ( ஜூலை 5 ) வைக்கம் முகம்மது பஷீரின் நினைவு நாள்.


வியாழன், 15 மே, 2025

 


போர் முடிந்து…

@

சச்சிதானந்தன் ( மலையாளம் )

@

தமிழில் : சுகுமாரன்

 @

போர் முடிந்து

பிணங்களின் கணக்கெடுப்புத்

தொடங்கியபோது

கௌரவரும் பாண்டவரும்

ஒருமித்துத்  தலையில் கைவைத்தனர்

 

 

எதற்காகப் போர்?

பாண்டவர் கேட்டனர்

எப்படியிருந்தது மரணம்

கௌரவர் கேட்டனர்

 

யாரிந்தக் கொடுமையைச் செய்தது

பாண்டவர் விசாரித்தனர்

யாரிந்தக் கொடுமையைச் செய்வித்தது

கௌரவர் விசாரித்தனர்

 

நான் ஒரே குடும்பத்தினரல்லவா

பாண்டவர் வியந்தனர்

நாம் நல்ல அயலாரல்லவா

கௌரவர் வியந்தனர்

 

நம் ஆறுகள் ஒன்றே

பாண்டவர் சொல்லினர்

நமது மொழி ஒன்றே

கௌரவர் சொல்லினர்

 

எங்கள் வீடு அக்கரையிலிருந்தது

பாண்டவர் நினைவு கூர்ந்தனர்

எங்கள் வீடும் அக்கரையிலிருந்தது

கௌரவர் நினைவுகூர்ந்தனர்

 

ஒரே ஆகாயம் ஒரே தண்ணீர் ஒரே உணவு

பாண்டவர் பாடினர்

ஒரே விருட்சம் ஒரே ரத்தம் ஒரே துக்கம்

கௌரவர் உடன் பாடினர்

 

பிறகு

துப்பாக்கிளைத் துடைத்துத் துப்புரவாக்கினர்

மீண்டும்

ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்ளத் தொடங்கினர்.

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

 


                                             ஐ ம் ப து 


                                                          

ன் இலக்கிய வாழ்க்கையின் ஐம்பதாவது ஆண்டு இது. 

பதினாறு பதினேழாவது வயதில் எழுதிய கவிதைகளும் கதைகளும் கண்ணதாசன், தாமரை, தீபம்  இதழ்களில் வெளிவந்தன. பள்ளி இறுதி வகுப்புகளில் படித்துக் கொண்டிருந்தபோதே இலக்கியத்தின் மீதான மாளாத காதல் முளைவிட்டிருந்தது. அது துளிர்த்து வந்த பருவத்தில்  கதையாகவும் கவிதையாகவும் எழுதிய பிள்ளைக்கிறுக்கல்களை ஆசிரியர்களும் சில நண்பர்களும் சில பெண்களும் பாராட்டிச் சொன்னார்கள். அவற்றில் சில பத்திரிகைகளிலும் வெளியாயின. கவிதைப் போட்டிகள் சிலவற்றிலும் பங்கேற்றேன். அப்படி வாசித்த ஓரிரு செய்யுள்கள் பள்ளி ஆண்டு மலரிலும் உள்ளூர் நாளிதழின் ‘கலைப் பூங்கா’விலும்  வெளிவந்தன. அவை மகிழ்ச்சியளித்தாலும் அன்று மூர்க்கமாக ஈடுபட்டிருந்த வாசிப்பும் இலக்கியம் அறிந்தவர்களின் ஆலோசனைகளும் அந்தச் சொல்வித்தைகளின் ஆழமின்மையையும் கச்சாத்தனத்தையும் சுட்டிக் காட்டின. அவற்றைக் களைவதற்காக வாசிப்பில் மேலும் தீவிரமாக மூழ்கினேன். அதிலிருந்து பாடங்களைப் பயின்றேன். ‘உனக்கே உனக்காகச் சொல்ல எதுவும் இல்லையென்றால் எழுதாதே’ என்ற எச்சரிக்கையைக் கற்றுக் கொண்டேன். அதுவரை எழுதிய சரக்குகளைக் கைவிட்டேன். ‘சொல் எளிது, பொருள் வலிது , புலன் புதிது’ என்று எழுத்துக்கான வரையறையைத் தீர்மானித்துக் கொண்டேன். அதன் பின்னர் எழுதியவை இதழ்களில் வெளியாயின. பாராட்டையும் பெற்றன. அவையும் அத்தனை சிலாக்கியமானவையல்ல; எனினும் என்னுடைய விரலடையாளம் பதிந்தவை என்பது ஆறுதலாக அமைந்தது.

 

இன்று கவிதை என்று நான் நம்பும் வடிவத்தில் எழுதிய கவிதைகளில் சில எழுபதுகளின் ஆரம்ப ஆண்டுகளில் ஓர் இடைவெளிக்குப் பின்னர் வெளிவந்து கொண்டிருந்த கண்ணதாசன் இதழில் வெளியாயின. அது 1974 ஆம் ஆண்டு என்று மனதில் பதிந்து போயிருந்தது. அந்த மனப் பதிவின் அடிப்படையில் ‘சுகுமாரன் கவிதைகள்’ மொத்தத் தொகுப்பில் அவற்றைச் சேர்த்தேன். தொகுப்பின் தலைப்பில் 1974 – 2019 என்றும் குறிப்பிட்டிருந்தேன். நாகர்கோவில் சுந்தர ராமசாமி நூலகத்தில் பார்க்கக் கிடைத்த கண்ணதாசன் இதழ்களிருந்து அந்த வருடத்தைக் கண்டுபிடித்திருந்தது நினைவிலிருந்தாலும் அதைச் சரி பார்க்க விரும்பினேன். துரதிர்ஷ்டவசமாக நான் பார்வையிட்ட அந்த இதழ்களைத் திரும்பப் பார்க்க இயலவில்லை. நூலக வருகையாளர் எவரோ அவற்றைத் திரும்ப ஒப்படைக்க மறந்திருக்க வேண்டும்.

 

என்னுடைய இலக்கியப் பிறப்பு ஆண்டு தொடர்பான சந்தேகத்தை நண்பர் பேராசிரியர் சுப்பிரமணி இரமேஷிடம் பகிர்ந்து கொண்டேன். ‘கவலையை விடுங்க, கண்டுபிடித்து விடலாம்’ என்றார். தளரா முயற்சியுடன் வெவ்வேறு நூலகங்களை அணுகியும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்ணதாசன் இதழில் வெளிவந்தவற்றிலிருந்து  தேர்ந்தெடுத்த ஆக்கங்களை ஒரு தொகுப்பாகக் கண்ணதாசன் பதிப்பகம்  சில ஆண்டுகளுக்கு முன்பு  வெளியிடப்பட்டது. அந்தத் திரட்டில் என் கவிதையோ கதையோ இல்லை. பதிப்பகத்தாரின் சேகரத்திலுள்ள இதழ்களைப் பார்வையிட  அனுமதி கோரியும் பலனளிக்கவில்லை.

 

ஆண்டு 74 ஆக இருந்தால் என்ன 75 ஆக இருந்தால் என்ன? எழுத வந்த ஐம்பது வருடங்கள் ஆயிற்று என்றிருந்தால் போதாதா? துல்லியமாக நிரூபிக்கவும் என்று யாராவது கட்டாயப்படுத்தினார்களா?  இது என்ன சரித்திர ஆவணமா? இல்லை , இலக்கியச் சேவைக்கு  ஓய்வூதியம் கொடுக்கப் போகிறார்களா? என்ற கேள்விகள் உள்ளுக்குள் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருந்தன. கடைசியில் வரலாறே பிழைகளின் தொகுப்புத்தானே, அதில் 74லோ 75 எதுவானால் என்ன? அதுவும் உபரிப் பிழையாக இருக்கட்டும் என்று அமைதியானேன். விவகாரத்தை மறந்தும் போனேன்.

 

பணி நிமித்தம் நாகர்கோவிலுக்குப் போன மாதம் சென்றிருந்தபோது நண்பர் சீனிவாச கோபாலனைச் ( அழிசி பதிப்பகம் ) சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. க.நா.சுப்ரமண்யத்தின் காணக் கிடைக்காத எழுத்துக்களைத் தேடி சுந்தர ராமசாமி நூலகத்துக்கு வந்திருந்தார். அவருடைய தேடலுக்கு இடையே என்னுடைய ஆரம்பக் காலக் கவிதை ஒன்றையும் கண்டுபிடித்துத் தந்தார். தீபம் 1975 ஜனவரி இதழில் கவிதை வெளிவந்திருந்தது. அவர் அதைக் காண்பித்தபோது  பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவர் விடைபெற்றுச் சென்ற பிறகு அந்தக் கவிதையின் தோற்றுவாய், வெளியீடு பற்றிய நினைவுகள் மேலெழுந்தன. அந்த உந்துதலில் நண்பரைத் தொடர்பு கொண்டு அவர் கண்டுபிடித்துப் படமாகப் பதிவு செய்திருந்த அந்தக் கவிதையை அனுப்பித் தரும்படிக் கேட்டுக் கொண்டேன். வாட்ஸ் அப் வழியாக அனுப்பித் தந்தார்.


                                                                                                   தீபம் ஜனவரி 1975

 

நீண்ட கவிதையொன்றின் நான்கு வரிகள் தீபம் இதழில் வெளிவந்திருந்தன. அதுவும் பெட்டித் துணுக்காக இடம் பெற்றிருந்தது. ( ( நா.பார்த்தசாரதி நல்ல எடிட்டர்தான் ) .  உண்மையில் அது கவிதைக்குரிய எந்தக் குணத்தையும் கொண்டிருக்கவில்லை. பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும்போது கலந்து கொண்ட கவிதைப் போட்டி ஒன்றில் வாசிப்பதற்காக தயார் செய்த சரக்கு. போட்டியில்  இரண்டாம் பரிசாக அறிவிக்கப்பட்ட 75 ரூபாய் பரிசையும் பெற்றது. அந்தக் கவிதையை எழுதிய மிகக் குறுகிய காலத்திலேயே நான் என்னுடைய கவிதையாக்க  முறையைக் கண்டறிந்திருந்தேன். அந்த முறையில் எழுதிய கவிதைகள் தாம் கண்ணதாசன் இதழில் வெளிவந்தவை. கவியரங்கக் கவிதையை அனுப்பினேன் என்று நினைவிருந்ததே தவிர எந்த இதழுக்கு என்பது பதியவில்லை. அதுதான் தீபம் இதழில் வெளியாகியிருந்தது. அதே கவிதையின் இன்னொரு துண்டு  மற்றொரு இதழில் வெளிவந்ததும்  ஞாபகத்திலிருக்கிறது.

 

1974இல் அல்லது 75 இல் இலக்கியவாதியாகப் பிறப்பெடுத்தேன் என்று நானாகக் கணித்துக் கொண்ட ஜாதகத்தின்படி என் இலக்கிய வாழ்க்கை ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் அதிகமாக எழுதிக் குவித்து விடவில்லையென்றாலும் தொடர்ச்சியாக இயங்கியிருக்கிறேன் என்பதே மகிழ்ச்சியளிக்கிறது. கலையின் பாதையிலான பயணம் இறுதி நிறுத்தம் இல்லாதது என்ற பிரக்ஞை தொடக்கத்திலேயே உறுதியாகியிருந்தது. என் எழுத்து எனக்குக் கழிவிரக்கம் ஏற்படுத்தி விடக் கூடாத ஒன்றாக இருக்க வேண்டும், என்னை வெட்கித் தலைகுனியச் செய்யாததாக இருக்கவேண்டும், தளுக்கானதாகவோ பொய்யானதாகவோ இருக்கக் கூடாது  என்ற வீம்புகளை இன்று வரை கடைப்பிடிக்க முடிந்திருக்கிறது என்பதும் மகிழ்ச்சியின் இன்னொரு பக்கம்.

 

எழுத வந்து ஐம்பது ஆண்டுகளாகி விட்டன என்று தற்செயலாக நண்பர் ஒருவரிடம் சொன்னேன். பதிலுக்குக் கேள்விகளை எய்ய ஆரம்பித்தார். ‘திரும்பிப் பார்த்தால் என்ன தொன்றுகிறது? இத்தனை கால எழுத்துக்களை எப்படி மதிப்பிடுவீர்கள்? எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைத்திருப்பதாக நினைக்கிறீர்களா?’ நண்பரின் எந்தக் கேள்விக்கும் என்னிடம் உடனடியான பதில் இருக்கவில்லை. பின்பு யோசித்தபோது இப்படிச் சொல்லியிருக்கலாம்  என்று தோன்றியது.

 

சூசன் சாண்டாக்கின் புகழ் பெற்ற வாசகம் ஒன்று உண்டு.  ‘நான் எழுத்தாளர் ஆகவேண்டும் என்று எழுத வரவில்லை. இலக்கியம் என்று ஒன்று இருப்பதனால்தான் எழுத்தாளர் ஆனேன்’. என்பதுதான் எப்போதும் என்னுள்ளே ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த வாசகம். தவிர, ஓர் எழுத்தாளனின்  எழுத்துக்களை மதிப்பிட வேண்டியது அவற்றை வாசித்தவர்களும் காலமும்தான். ஏதோ ஒன்றைத் தமது இருப்பின் அடையாளமாக விட்டுச் செல்ல எல்லா மனிதர்களும் விரும்புகிறார்கள். நான் இங்கே இருந்தேன் என்பதற்கும் என்னவாக இருந்தேன் என்பதற்குமான தடயம் என் எழுத்து. இருப்பின் பொருள் அங்கீகாரமோ புகழோ அல்ல. இருப்பதுதான்.

 

இந்த பதிலைச் சொன்னது நண்பரிடமல்ல, என்னிடமே. எனினும் ஐம்பது ஆண்டுகளாக இலக்கியத்தில் உழன்று கொண்டிருப்பதற்கான இருப்பு நியாயம் இங்கே இருக்கிற வளமான இலக்கியம். முப்பத்து ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து பதினேழு ஆண்டுகள் மட்டுமே இலக்கியப் பணியில் ஈடுபட்ட பெருங்கவிஞனும் நாற்பத்திரண்டு வயதுவரையே ஜீவித்து,  பதினைந்து ஆண்டுகள் மட்டுமே எழுத்தில் செயல்பட்ட பெருங்கலைஞனும் உயிர் கொடுத்த  மொழிக்குள் நாமும் இருக்கிறோம் என்ற பெருமிதமே அந்த இருப்பு நியாயத்தின் உட்கிடக்கை. இதைப் புரிந்து கொள்ளத்தான் ஐம்பது ஆண்டுகள் தேவைப் பட்டிருக்கின்றன.

@

நன்றி: சீனிவாச கோபாலன் ( அழிசி ), சுப்பிரமணி இரமேஷ்


 

 

 

 

 


சனி, 12 ஏப்ரல், 2025

 



                                                      காணீர் ... அகண்ட காவிரி

                                                                              ***




 

திரூரில் சில நாட்களுக்கு முன்பு, ( பிப்ரவரி 28 – மார்ச் 3, 2025 )  நடைபெற்ற துஞ்சன் உற்சவத்தில் பங்கேற்கச் சென்றிருந்தபோது மலையாளக் கவிஞர், நண்பர் பி.ராமனையும் சந்தித்தேன். கடந்த இரு ஆண்டுகளிலாக வெளிவந்திருக்கும்  அவரது இரண்டு கவிதைத் தொகுப்புகளை ( நனவுள்ள மின்னல் / ஈரமுள்ள மின்னல்) , ஆ ஸ்தலம் அணிஞ்ஞ ஷர்ட் ஞான் / அந்த இடம் அணிந்த சட்டை நான் ) அன்பளிப்பாகக் கொடுத்தார். வீடு திரும்பி தொகுப்புகளை வாசிக்கத் தொடங்கினேன். வேகமான வாசிப்பிலும் இரண்டு கவிதைகள் கவனத்தைப் பிடித்து நிறுத்தின. அவை இரண்டும்  இசையைப் பற்றிய கவிதைகள். இரண்டுக்கும் பாட்டுடைத் தலைவர் சங்கீத கலாநிதி சஞ்சய் சுப்ரமணியன்.





 

சமகால இலக்கியவாதிகள் பலருக்கும் அபிமானப் பாடகர் சஞ்சய் சுப்ரமணியன் என்பது அவர்களுடைய படைப்புகள் வழியாக வெளிப்படுவதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. இலக்கியவாதிகள் தங்களது துறையல்லாமல் இன்னொரு கலைத் துறையிலும் ஆர்வமுடையவர்கள் என்பதன் சான்றாகவும் கலைகள் ஒன்றை ஒன்று பாதிக்கும் தன்மை கொண்டவை என்பதன் சான்றாகவும் இதைக் கொள்ளலாம்.

 

நிகழ் கால எழுத்துக்களில் அதிகம் சீராட்டப்பட்டிருப்பது சஞ்சய் சுப்ரமணியனும் அவரது இசையும்தான். நேரடியாகவும் உள்ளுறையாகவும் அவரது இசை கணிசமான ஆக்கங்களில் பேசப்பட்டிருக்கின்றன. கவிஞர் இசையும் இந்தக் குறிப்பை எழுதுபவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட கவிதைகளில் சஞ்சயின் இசை தரும் அனுபவத்தை விவரித்திருக்கிறார்கள். மலையாளக் கவிஞரான வி.எம். கிரிஜா ஒரு கவிதையில் சஞ்சயின் ‘கர்ப்பூரம் நாறுமோ…’ என்ற ஆண்டாள் திருமொழியும் ‘பெற்றதாய் தனை மக மறந்தாலும்…’ என்ற வள்ளலாரின் பாடல் விருத்தமும் தனக்குள் ஏற்படுத்திய சலனங்களைப் பதிவு செய்திருந்தார். அண்மையில் வெளியாகியுள்ள சஞ்சய் சுப்ரமணியனின் வாழ்க்கைக் குறிப்புகளின் தொகை நூலான ‘ஆன் தட் நோட்’ டுக்கு ஸ்ருதி இதழில் நேர்த்தியான மதிப்புரையையும் கிரிஜா எழுதியிருக்கிறார். சஞ்சயின் பாட்டுத் திறத்தால் பாலிக்கப்பட்டு  நாங்கள் மூவரும் எழுதிய கவிதைகள் , முறையே இசையின் ‘மகத்தான ஈ’ , கிரிஜாவின் ‘மாத்திரைகள் மட்டுமே’ என்னுடைய ‘கானமூர்த்தி’ ஆகியவை விகடன் தடம் இதழில் ‘ ஒரு பாடகரும் மூன்று கவிஞர்களும்’  என்று வெளியாயின.

 

சஞ்சய் சுப்ரமணியன் பாடிய அருணாசல கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனைகளில் ஒன்றான ‘ எழுந்தாளே பூங்கோதை’யையும் ( ராகம்: மோகனம் ) அவர் பாடியிருந்தால் என்ற கற்பனையின் விளைவாக தியாகராஜரின் சாரி வெடலின ( ராகம்: அசாவேரி ) கீர்த்தனையையும்  மையப் பொருளாகக் கொண்டவை பி.ராமனின் இரண்டு கவிதைகளும். அவற்றின் தமிழாக்கத்தை இங்கே பகிர்கிறேன்.

 

கவிதைகள் ‘ எந்த ருசிரா ராமா’…

 

                                              எழுந்தாளே பூங்கோதை


சீதையை மகுடமாக ஏந்திய

தீச்சுடர்கள் பாடுகின்றன

‘எழுந்தாளே பூங்கோதை’

 

தீமரக் கிளையில் பூத்த

பூப்போலே எழுந்தாளே

 

சுடவேயில்லை , கீழே பூமியும் பாடுகிறது

‘எழுந்தாளே’

 

அந்தக் குளிரூற்றை வேர்  உறிஞ்சுவதால்

தீமரம் குளிர்கிறது; குளிர் அலைகளுக்குமேல்

சீதையின் முகம் காட்சியளிக்கிறது

உலர்ந்து உதிர்ந்திருக்கலாம் திரு நெற்றியில் இட்ட குங்குமம்

சூடு தணிக்க இப்பாடல் இல்லாமலிருந்தால்

சஞ்சயின்  எழுந்தாளே துணைவராதிருந்தால் தேவி

உள்ளே பொசுங்கியிருப்பாள் அக்கினி தேவன் கைகளில்

 

தீயைக் குளிரவைத்து சீதையைப் பொசுக்காமல்

பூமிக்குத் திரும்பத் தந்த பாடலே நன்றி.


தலைக்காவிரி



                                                                            பாகமண்டலம்


                                                           சாரி வெடலின...


தலைக் காவேரியில் இப்போது

என் காலை நனைக்கும் நீர்

எத்தனையோ நாட்கள் கழித்து

ஒருமுறை

திருவையாற்றைக் கடந்து போகலாம்

 

தியாகராஜரின் சாரி வெடலின…

அசாவேரியில் ஒழுகும் காவேரிக் கீர்த்தனை

நூற்றாண்டுகளினூடே

மீண்டும் மீண்டும்

என்னை அடைவதுபோல அல்ல

 

ஒரு குளம் காவேரி

கீழே பாகமண்டலத்தில்

நதியாகச் சட்டென்று தோன்றும்

சங்கமமாக விரியும்

 

சஞ்சய் சுப்ரமணியன் பாடி

நான் கேட்டதில்லை

‘சாரி வெடலின…’

 

எனினும்

… ஈ காவேரி ஜூடரே

 

சஞ்சயின் குரல்வளையில்

சட்டென்று தோன்றி

எனக்குள் எப்போதும்

துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டேயிருக்கும்.


                                                                           பி ராமன் 

 

வியாழன், 10 ஏப்ரல், 2025

குளிர் தருவின் நிழல்

                                                          குளிர் தருவின் நிழல்

என்னுடைய கணினிக் கோப்புகளை அண்மையில் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். முன்பு எழுதிய சில கட்டுரைகளும் கவிதைகளும் அங்கங்காகச் சிதறி ஒளிந்திருந்தன. அவற்றை வரிசைப்படுத்தவும் விலக்கவும் ஒருமுறை வாசித்துப் பார்ப்பது நல்லது என்று வாசிப்பில் ஈடுபட்டேன். சில கட்டுரைகள் வாசிப்புக்குச் சேதாரம் விளைவிக்காதவையாக இருந்தன. அவற்றில் ஒன்று என்னுடைய கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர். கமலேசுவரனைப் பற்றி எழுதிய கட்டுரை. பேராசிரியரின் எண்பத்தைந்தாம் வயது நிறைவையொட்டி அவரது நண்பர்களும் நம் விரும்பிகளும் மாணவர்களும் பங்கேற்ற  மலருக்காகக் கட்டுரையை எழுதினேன். மலர் வெளிவந்திருந்தும் காணக் கிடைக்கவில்லை. வெளிவந்திருந்தாலும் பரவலாக வசிக்கப்படும் வாய்ப்பில்லை. எனவே கட்டுரையைப் பத்திரப்படுத்தி வைக்கும் நோக்கிலும் பேராசிரியரின் மாணவர்கள் எவராது அவரை நினைவுகூரலாம் என்ற ஆசையிலும்  எவருக்காவது சின்ன அளவிலாவது பயன்படலாம் என்ற எதிர்பார்ப்பிலும் இங்கே பகிர்கிறேன்.





                            டாக்டர்  கே எஸ் கமலேசுவரன் துணைவியாருடனும் மாணவர்  பெருமாள் முருகனுடனும்  


 

ன்னிடம் பயின்ற மாணவர்களைக் குறிப்பாக நினைவில் வைத்துக் கொள்வது ஓர் ஆசிரியருக்கு இயலாத செயல். ஆனால் தங்கள் மீது நல்லாதிக்கம் செலுத்திய ஆசிரியரை மாணவர்கள் எப்போதும் நினைவுகூர்வது இயல்பு. எனக்குக் கற்பித்த ஆசிரியர்களில் நினைவில் அகலாது நிற்கும் தகுதியுடையவர்களில் பேராசிரியர் டாக்டர். கே. எஸ். கமலேசுவரனும் ஒருவர். அவரிடம் பயின்றவன், அவரது ஆளுமையால் பாதிப்படைந்தவன் என்ற நிலைகளில் அவர் எனக்கு மறத்தற்கு அரியவர்.

 

எனது கல்லூரிப் படிப்பைக் கோவை,  பூசாகோ கலை அறிவியல் கல்லூரியில் மேற்கொண்டேன். புகுமுக வகுப்பு, பட்ட வகுப்பின் முதல் இரண்டு ஆண்டுகளில் தமிழ்ப் பாடத்தைக் கற்றுக் கொடுத்தவர்களில் கமலேசுவரனும் ஒருவர். செய்யுட் பகுதிகளைக் பேராசிரியர். பாஸ்கரதாசும் உரைநடை, துணைப்பாடப் பகுதிகளைக் கமலேசுவரனும் கற்பித்தார்கள். அவர்களிடம் கற்ற தமிழ்தான் இன்று ஓர் எழுத்தாளனாகவும் இலக்கியச் செயல்பாடுகளில் தொடர்ந்து ஆர்வம் கொள்பவனாகவும் வைத்திருக்கும் காரணிகளில் முக்கியமானது. சரியாக அரை நூற்றாண்டுக் காலத்துக்குப் பின்னரும் அந்த நினைவுகள் பசுமை மங்காமல் மிளிர்கின்றன. அந்தப் பாடங்கள் காலாவதியாகாமல் தொடர்கின்றன.

 

புகுமுக வகுப்பில் முதல் தமிழ்ப் பாடவேளையிலேயே டாக்டர். கமலேசுவரன் அறிமுகமானார். நான் பயின்றது உயிரியல் பிரிவில். அந்தப் பிரிவின் தலைவரான தாவரவியல் பேராசிரியர் ராஜாராம் முதலில் அறிமுகமானார். இரண்டாவது அறிமுகமானவர் தமிழ்ப் பேராசிரியரான கமலேசுவரன் அவர்கள்.  கறுத்த குள்ளமான உருவம். அரைக் கை சட்டையும் கால் சராயும் அணிந்த தோற்றம். வகிடெடுத்து ஒழுங்குபடுத்தினாலும் ஒதுங்காமல் நெற்றியில் விழும் கோரை முடி, அதை அடிக்கடி ஒதுக்கி விட உயரும் கைகள். தடித்த கண்ணாடி. இந்தக் கோலத்தில் அவரைப் பார்த்த முதல் நொடி இன்னும் நினைவில் இருக்கிறது. மற்ற மாணவர்களுக்கு அவரைப் பற்றிய எண்ணம் என்னவாக இருந்திருக்கும் என்று ஊகிக்க முடியவில்லை. ஆனால் மாணவர்களைத் தோழமையுடன் ‘குஞ்சுகளா’ என்று அழைத்த பாங்கு என்னை அவர்பால் ஈர்த்தது. அவருடைய மாணவனாக இருந்த நாள்கள் அனைத்திலும்  அந்த அழைப்பைக் கேட்கும்  வாய்ப்பு அமைந்தது.

 

அன்று புகுமுக வகுப்புப் பாடத்திட்டத்தில் புதுமைப் பித்தன், அகிலன், ஜெயகாந்தன், ஜெகசிற்பியன், அறிஞர் அண்ணா ஆகியோர் உள்ளிட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இடம் பெற்றிருந்தது. தொகுப்பின் முதல் கதை புதுமைப் பித்தனின் ‘ஒரு நாள் கழிந்தது’. கமலேசுவரன் முதல் வகுப்பில் பேசியதும் அதைப் பற்றித்தான். மாணவர்களுடனான அறிமுகத்துக்கும் ஆசிரியரின் தன்னறிமுகத்துக்கும் பிறகு கதையைப் பற்றிய பேச்சைத் தொடங்கினார். கதையை முன்னிருத்தியதற்குக் காரணம் அறிமுக  வகுப்பிலேயே மாணவர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தி விடக் கூடாது என்ற நல்லெண்ணமாக இருக்க வேண்டும். ஆனால் அது எல்லா மாணவர்களுக்கும் உகந்ததாக இல்லை. அந்தப் பேச்சு  நான் ஏற்கனவே அறிந்த உலகத்துக்கு என்னை மீண்டும் அழைத்து செல்லும் வாசலாக இருந்தது. ‘புதுமைப் பித்தன் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’ என்ற அவருடைய கேள்விக்குத் தயக்கத்துடன் எழுந்து உற்சாகத்துடன் புதுமைப்பித்தன் தொடர்பாகச் சில வார்த்தைகளைச் சொன்னேன். அப்போது அந்தத் தடித்த கண்ணாடிக்குப் பின்னால் அவருடைய விழிகள் விரிந்து சிரித்ததைக் காண முடிந்தது. பிந்தைய ஆண்டுகளில் அந்த விழிநகையைப் பல முறை பார்க்க முடிந்தது.

 

அன்றைய பாடவேளை முடிந்ததும் தமிழ்த் துறைக்கு வந்து பார்க்கும்படிச் சொன்னார். போனேன். என்னைப் பற்றி விசாரித்தார். என்னுடைய இலக்கிய ஆர்வத்தைக் குறித்துக் கேட்டார். ‘புதுமைப்பித்தன் யார்னு கேட்டா எம்ஜியார் படத்தைப் பற்றித்தான் சொல்றாங்க. என்ன பண்றது? நீ சொன்னது ஆச்சரியமா இருந்ததுப்பா’ என்று பாராட்டினார். ஓர் இளம் இலக்கிய ஆர்வலனுக்கு அது பெரும் ஊக்கம். பின்னர் அவ்வாறு பல முறை ஊக்கமூட்டியிருக்கிறார்.

 

அப்போது கல்லூரியில் ‘மாணவர்களுக்காக மாணவர்களால் நடத்தப்படும்  மாணவர்’ இதழ் ஒன்று வெளியிடப்பட்டது. பெயர் ‘புது வெள்ளம்’. மாணவர் இதழ் எனினும் பொறுப்பாளராகத் தமிழ்த் துறைப் பேராசிரியர் முத்துராமலிங்கம் இருந்தார். அதன் முதல் இதழிலேயே என்னுடைய கதை ஒன்று வெளிவந்தது. இரண்டாம் இதழில் கவிதையும் கதையும் வெளியாயின.  அவற்றை ஒட்டித் தமிழ்த்துறைக்கு அடிக்கடி செல்லும் தேவையும் வாய்ப்பும் ஏற்பட்டன. அந்தத் தருணங்களில் அதிகமும் சந்தித்தது டாக்டர். கமலேசுவரனைத்தான் என்பது தற்செயல்  அல்ல. துறையின் பிற பேராசிரியர்களுடன் உரையாடுவதை விட அவருடன் உரையாடுவதன் மூலம் புதிய செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது என்பதே காரணம். அந்தப் போக்குவரத்தில் நவீனச் சிற்றிதழ்களையும் புதிய புத்தகங்களையும் குறித்து அறிந்துகொள்ள முடிந்தது. தமிழ்த்துறை நூலகத்திலிருந்து சில நூல்களை எடுத்துச் சென்று வாசிக்கும் சலுகையையும்  அளித்திருந்தார்.

 

புகுமுக வகுப்புக்குப் பிறகு எனது படிப்பில் ஓர் ஆண்டு இடைவெளி விழுந்தது. வெறும் பட்டப்படிப்புக்குப் பதிலாக வேறு படிப்பை விரும்பினேன். குடும்பப் பொருளாதாரச் சூழலால்  அந்தக் கனவு நிறைவேறாமல் போனது. ஓர் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அதே கல்லூரியின் இளம் அறிவியல்- வேதியியல் பட்ட வகுப்பில் சேர்ந்தேன். அது மகிழ்ச்சியைக் கொடுத்தது. நான் பார்த்து வியந்த அற்புதமான கல்லூரி நூலகத்துக்குச் செல்லவும் என் தமிழைச் செம்மைப்படுத்த உதவும்  தமிழாசிரியர்களைச் சந்திக்கவும் மீண்டும் கிடைத்த வாய்ப்பு அந்த மகிழ்ச்சியின் பின்னணி.

 

இடைவெளி ஏற்பட்டிருந்த ஓராண்டில் நிறைய வாசிக்கவும் கவனத்துடன் எழுதவும் கற்றுக் கொண்டிருந்தேன். அதை எனக்கு உணர்த்தியவரும் டாக்டர். கமலேசுவரன் அவர்கள்தான். பட்ட வகுப்பின் முதலாம் ஆண்டைப் பெரும்பாலும் கல்லூரி நூலகத்திலேயே செலவழித்தேன். பாடத்துக்குத் துணையாகும் புத்தகங்களை வாசித்ததை விட இலக்கிய நூல்களை வாசித்ததே அதிகம். அப்படி ஒரு நாள் நூலகத்தில் நான் வாசித்துக் கொண்டிருந்தேன். வாசித்துக் கொண்டிருந்தது ஓர் ஆங்கில நூல். பிரெஞ்சு எழுத்தாளரும் தத்துவவாதியுமான சார்த்தரின் ‘ எக்சிஸ்டென்ஷியலிசம் ( Exisitentialism ? ) என்ற நூல். வாசிப்பில் மூழ்கியிருந்தபோது புத்தகத்தின் மீது நிழல் விழுவதை உணர்ந்தேன். என் முதுகுப் பக்கமாக இருந்து நான் வாசித்துக் கொண்டிருந்த நூலின் பக்கத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார் பேராசிரியர். வகுப்பு நடக்கும் நேரத்தில் ஒருவன் அத்துமீறலாக நூலகத்தில் இருக்கிறான் என்பதைக் கண்டுபிடித்து விட்டார் என்ற அச்சத்தில் எழுந்து நின்றேன். அவர் புத்தகத்தை எடுத்து முகப்பைப் பார்த்து விட்டு மேசைமீதே வைத்தார். ‘அடே குஞ்சு நீ இதையெல்லாம் படிக்கிறியா என்ன? ‘ என்று கேட்டு விட்டு நகர்ந்தார். அச்சம் நீங்கிப் பெருமூச்சு விட்டேன். அந்த நாளின் சுப விளைவு மறுநாள் தெரிந்தது.

 

அடுத்த நாள் உயிர் வேதியியம் வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது அறை வாசலில் பேராசிரியர் கமலேசுவரன் வந்து நின்றார். வகுப்பை நடத்திக் கொண்டிருந்த பேராசிரியர் சுதாகரிடம் அனுமதி கோரி என்னை வெளியே அழைத்தார். போனேன். கையிலிருந்த கனமான புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். ‘நீதான் எக்சிஸ்டென்ஷியலிசம் படிக்கிறியே, இதையும் படி’ என்று அவர் கொடுத்த புத்தகம் சார்த்தரின் ‘இருப்பும் இன்மையும்’ ( Being and Nothingness ). அவர் கொடுத்தது என்பதனாலேயே அந்தப் புத்தகத்தை விழுந்து விழுந்து படித்தேன். அவரிடம் திரும்பக் கொடுத்தபோது ‘படிச்சேன் சார், ஆனா ஒண்ணும் புரியல’ என்றேன். ‘சரி , புரியவரைக்கும் படி. அதை நீயே வெச்சுக்கோ’ என்றார். மிக நீண்ட காலம் அந்தப் புத்தகம் என் புத்தகச் சேகரிப்பில் இருந்தது. பேராசிரியரை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. இருப்பிடம், ஊர் மாற்றங்களில் அந்த நூல் காணாமற் போனது. ஆனால் அந்த இன்மை பேராசிரியரின் இருப்பைப் பற்றிய உணர்வைப் போக்கி விடவில்லை.

 

பேராசிரியர் கமலேசுவரனின் வகுப்புகள் ஆர்வமுள்ள மாணவருக்கு சுவாரசியம் அளிப்பவை. பாடப் பொருளைச் சார்ந்து தீவிரமாக அமைந்தவை. மையப் பொருளை விட்டு விலகாத பயிற்று முறை அவருடையது . மையப் பொருளை ஒட்டிய வெளி விவரங்கள், சம காலத் தகவல்கள் இடம் பெறும் . இவையெல்லாம் பாட வேளையின் ஒரு மணி நேரத்தின் முக்காற் பங்கில் நிறைவேறும், எஞ்சிய கால் மணி நேரம் ஏறத்தாழ அரட்டைப் பொழுதுதான். ஆனால் அந்த அரட்டையிலும் பயனுள்ள தகவல்களும் புதிய பார்வைகளும் நிச்சய்ம் இருக்கும். சமயங்களில் நகைச்சுவையும் ததும்பும். அந்த நகைச்சுவை காலமெல்லாம் நினைத்துச் சிரிக்கவைப்பதாகவும் . இலக்கியத்தில் இடம் பெறும் வருணனைகளப் பற்றி ஒருமுறை சொல்லிக் கொண்டிருந்தார். ‘புலவர் சொல்கிற வர்ணணைகளை ஆராய்ந்து பார்த்தால் வில்லங்கமாக இருக்கும் . அன்ன நடைன்னு சொல்றாங்க இல்லையா, அதைப் பார்த்திருக்கீங்களா? சகிக்காது. பொச்ச ஆட்டீட்டு நடக்கறதப் பார்த்தா நல்லாருக்குமா?’ என்று கேட்டதும் வகுப்பே அதிர்ந்து சிரித்தது. இன்றும் அந்த கூட்டுச் சிரிப்பு ஞாபகத்தில் முழங்குகிறது.

 

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழுக்குச் செம்மொழித் தகுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகம் , அ.ராமசாமியின் முன்னெடுப்பில் நடத்திய இலக்கிய நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டேன். நண்பர் பெருமாள் முருகனும் கலந்து கொண்டிருந்தார். அவரது உரை கேட்க அமர்ந்திருந்த மாணவர்களில் ஒருவனாக நானும் அமர்ந்திருந்தேன். உரை இயல்பாகத் தொடங்கி வகுப்பறைப் பாட வேளையாக மாறியது. மெல்ல மெல்லத் தகவல்கள் கோக்கப்பட்டு வளர்ந்து உச்சத்தை எட்டியது. முடியும்போது தீவிரமான வகுப்பறையில் பாடம் கேட்ட உணர்வு எழுந்தது. கூடவே இதே போலப் பாடம் நடத்துவதை முன்பே கேட்டிருக்கிறோம் என்ற எண்ணம் ஓடியது. சற்று நேரம் யோசித்த பின்னர் மூலம் பிடிபட்டது. அது பேராசிரியர் கமலேசுவரனின் பயிற்று முறை. முருகனும் அவர் மாணவர் என்பது நினைவுக்கு வந்ததும் பேராசிரியரின் பாதிப்புப் புலப்பட்டது.

 

என்னுடைய கல்லூரி நாட்களில் கமலேசுவரனை இளநிலை பட்ட வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடத்தைக் கற்றுத்தரும் வாத்தியாராக மட்டுமே அறிந்திருந்தோம். ஏனெனில் அன்று முதுநிலைப் பட்ட வகுப்பில் மட்டுமே தமிழ் தனிப்பாடமாக இருந்தது. அவருக்கு அணுக்கமான மாணவர்கள் ஒரு சிலர் மட்டுமே அவரது ஆளுமையின் இன்னொரு பக்கத்தை அறிந்திருந்தார்கள். மொழியியலாளராக அவரது பங்களிப்பைப் புரிந்து கொண்டிருந்தார்கள். அவரை ஒரு மொழியியல் ஆய்வாளராக நான் அறிந்து கொண்டதும் எதிர்பாராத செயல். அது அவரும் பங்களிப்புச் செய்து வந்த ‘புலமை’ இதழ் மூலம் நிகழ்ந்தது. அவர் எனக்கு வாசிக்கக் கொடுத்த இதழ்களில் புலமையும் இருந்தது. ஆனால் அது என்னுடைய வாசிப்புக்காகக் கொடுக்கப் பட்டதல்ல. எனது இன்னொரு ஆசிரியரான கோவை ஞானியிடம் சேர்ப்பிக்க என்னிடம் ஒப்படைக்கப் பட்டது. எல்லா இதழ்களையும்புரட்டிப் பார்ப்பதுபோல அதையும் புரட்டிப் பார்த்ததில் பேராசிரியரின் கட்டுரையையும் வாசிக்க நேர்ந்தது. வாசிப்பில் எழுந்த ஐயங்களை அவரிடம் கேட்டேன். ‘இன்னிக்கு சாயங்காலம் வகுப்பு முடிந்ததும் துறைக்கு வா’ என்றார். சென்றேன். ‘ராத்திரி வீட்டுக்கு வரலேன்னா தேட மாட்டங்கன்னா என் கூட வா’ என்றார். எங்கள் பகுதியிலிருந்து வந்து படிக்கும் சக மாணவரிடம் வீட்டுக்குத் தகவல் தெரிவிக்கச் சொல்லி விட்டு அன்று மாலை அவருடன் அவர் வீட்டுக்குச் சென்றேன். அன்றைக்கு அவர் மட்டுமே இருந்தார். தயாராக இருந்த உணவை அருந்தி முடித்த பின்பு அவரது மொழியியல் வகுப்பு நடைபெற்றது. புதிய திசையின் கதவுகளைத் திறந்து விட்ட சிறப்பு வகுப்பு அது. அன்று அதன் பயன் தெரியவில்லை. இலக்கியத்தில் மும்முரமாக ஈடுபட்ட காலத்தில் புதிய பேசுபொருளாக மொழியியலும் இடம் பெற்றபோது அவர் எடுத்த தனி வகுப்பின் பொருத்தம் விளங்கியது.

 

டாக்டர். கமலேசுவரன் மரபான தமிழ்ப் பேராசிரியர் அல்லர் என்பது என் கருத்து. பிற தமிழாசிரியர்களிடம் காணப்பட்ட தமிழ் வெறி அவரிடம் காணப் பட்டதில்லை. அவரிடம் கண்டது தமிழ் மீதான பற்றும் அதை அறிவியல் சார்ந்து பார்க்கும் அணுகுமுறையும். அவரது ஒப்பாய்வுகளிலும் மொழி ஆய்வுகளிலும் ஓர் இலக்கியப் பயிற்சியாளனாக எனக்குத் தேவையானதாக எடுத்துக் கொண்டது அந்தப் பார்வையைத்தான். கல்லூரிப் பருவத்துக்குப் பின்பு அவரை அனேகமாகச் சந்தித்ததில்லை. அது விட்டகுறையாக இப்போது உறுத்துகிறது. தொடர்பில் இருந்திருந்தால் இன்னும் திட்பமான எல்லைகளை இலக்கியத்திலும் எட்டியிருக்க முடியும். முடியாமற் போனது பேரிழப்புத்தான்.

 

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவரைச் சந்தித்தேன். அவருக்கு என்னையும் எனக்கு அவரையும் அடையாளம் தெரியவில்லை. நினைவூட்டல் அவருக்குப் பயனளிக்கவில்லை என்பது உரையாடலில் விளங்கிற்று. அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுப் பல ஆண்டுகள் கடந்திருந்தன. உடல் தளர்ந்திருந்தது. நினைவு அந்தி வெளிச்சத்தை அடைந்திருந்தது. இரண்டு விஷயங்கள் அன்று சட்டென்று புலப்பட்டன. ஒன்று; முன்னாள் மாணவனை பன்மையில் அழைத்தார். இரண்டு : குஞ்சு என்ற வாஞ்சையான முகமனை மறந்திருந்தார். அவற்றை அவரும் அவரது துணைவியாரும் உபசரிப்பால் ஈடுகட்டினார்கள். முதிய வயதிலும் இளமை மிளிர அவர்கள் காட்டிய விருந்தோம்பல் என்றும் நினைவில் சுவை குன்றாமலிருக்கும்.

 

இந்தச் சந்திப்புக்குப் பிறகும் ஏனோ அவருடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற முனைப்பு உருவாகவில்லை. அதையும் பேராசிரியரே நிறைவேற்றினார். சென்ற ஆண்டு ( 2023 ) இதய நோய் அறுவைச் சிகிச்சைக்கு உள்ளானேன். இன்றைய மருத்துவ முன்னேற்றத்தில் அது பொருட்படுத்தப்பட வேண்டாதது  என்பதால் அதைப் பற்றி யாருக்கும் தெரிவிக்கவும் விரும்பவில்லை. ஒரு நாள் காலை தொலைபேசி அழைத்தது. ‘’ நான் கமலேசுவரன் பேசுகிறேன். அறுவைச் சிகிச்சை பற்றிக் கேள்விப்பட்டேன். நலமாக இருக்கிறீர்களா?’’ என்று விசாரித்தார். விசாரிப்புக்குச் சட்டென்று பதில் சொல்ல முடியாதபடி குரல் தழுதழுத்தது. கண்கள் நிறைந்தன. அந்தப் பெருந்தன்மைக்கு முன் பேச்சு வரவில்லை.

 

பெருமரங்கள் நிழல் கொடுக்கின்றன. அந்தக் கொடையை மரங்கள் நினைவில் கொள்வதில்லை. ஆனால் நிழலை உணர்ந்தவன் அந்தக் கொடையை மறப்பதில்லை. பேராளுமையான கமலேசுவரனின் நிழலில் இளைப்பாறிய ஆயிரக் கணக்கான மாணவர்களில் நானும் ஒருவன் என்பது கிடைத்த வாய்ப்பு அல்ல; கிட்டிய பேறு.

                                                                                    @

புகைப்படத்துக்கு நன்றி: பெருமாள் முருகன்