திங்கள், 30 ஜனவரி, 2012

வெ ல் லி ங் ட ன்




மாட்சிமை பொருந்திய பிரித்தானிய மன்னரின் விசுவாச ஊழியனான தன்னுடைய வலதுகை ஆள்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் நடுவிலிருந்துதான் மலைப்பிரதேசத்தின் சரித்திரம் தொடங்குகிறது என்பதை ஜான் சல்லிவன் கொஞ்சம் கர்வத்துடனும் அதைவிட அதிகமான அடக்கத்து டனும் நினைத்துப் பார்த்தார். மலையில் வீசும் காற்றின் ஈரத்தில் தன்னுடைய வியர்வைப் பிசுபிசுப்பும் நிரந்தரமாகக் கலந்திருக்கும். கிழக்கிந்தியக் கம்பெனியின் நூற்றுக்கணக்கான குமாஸ்தாக்களில் ஒருவனாக மதராஸ் பட்டணத்தில் சலிப்பான நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தபோதோ செங்கல்பட் கலெக்டராகக் கொளுத்தும் வெயிலில் அல்லாடிக்கொண்டிருந்த போதோ தனது வாழ்க்கை அந்த மலைகளில் காத்திருப்பதை சல்லிவன் அறிந்திருக்கவில்லை. எல்லாம் கர்த்தரின் கிருபை.

கிழக்கிந்தியக் கம்பெனியார் ஒப்பந்தம் போட்டு திப்பு சுல்தானிடமிருந்து மலைப்பிரதேசத்தைச் சொந்தமாக்கிக் கொண்டது அதிகாரச் செருக்கை ஸ்தாபித்துக் கொள்ளத்தானே தவிர வசிப்பதற்காக அல்லவென்று சல்லிவன் நினைத்தார். கோயம்புத்தூர் ஜில்லா கலெக்டர் ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டு அதுதான் உண்மை என்று நம்பவும் செய்தார். இல்லை யென்றால் கப்பலை விரட்டி கண்காணாத சீமைகளுக்குப் படையெடுத்து அங்கே யெல்லாம் கால்களை ஊன்றிய வெள்ளைக்காரர்கள் இந்த வனத்தின் கன்னி நிலங்களை விட்டு வைத்திருக்க மாட்டார்கள் என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தார்.அதுவும் இரண்டு நூற்றாண்டுக் காலம் யாரும் தீண்டிக் களங்கப் படாமல் கிடக்குமா இந்த மலைமடிப்புகள்? மலைப் பிரதேசத்தை வசப்படுத்தி யிருந்தும் ஆள்வதற்குக் கணிசமான ஜனத்திரள் இல்லை என்பது காரணமாக இருக்கலாம். மலைக்காட்டின் சந்ததிகளான பூர்வகுடிகளையும் அவர்களின் தெய்வங்களையும் பிரித்தானிய மாமன்னரின் பிரஜைகளாக நினைக்க விருப்பமில்லாம லிருக்கலாம்.

ஏனெனில் அவர்கள் வென்று சொந்தமாக்கிய இடங்களெல்லாம் பெரும்பாலும் சமவெளிகள். அங்கிருந்தவர்களில் சாதாரண ஜனங்கள் அப்பாவிகளாகவும் அவர்களை ஆட்சி செய்தவர்கள் சுயநலமிகளாகவும் இருந்தனர். சுயநலம் முற்றி அடுத்தவனின் ராஜாங்கத்திலும் சம்பத்திலும் ஸ்திரீகள் மேலும் மோகங்கொண்டு ஓயாமல் சண்டை போடுபவர்களாக இருந்தனர்.என்றோ கலைந்துபோன பிரதாபங்களைப் பேசிக் குதூகலித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை மயக்குவது கம்பெனியாருக்கு சிரமமான செயலாக இருக்க வில்லை. கையை ஓங்கி உரக்கக் கத்தினால் காலடியில் விழுபவர்களாக இருந்தவர்களை மிரட்டினார்கள்.சபல சித்தர்களாக இருந்தவர்களை ஆசை காட்டி அடிமைகளாக்கினார்கள். அடிமைகள் தங்களுக்குரிய பூமியையும் காற்றையும் தாவரங்களையும் கம்பெனியாரின் காலடியில் சமர்ப்பித்து கைகட்டி வாய்பொத்தி நடந்தார்கள்.

மாநிறமுள்ள குட்டையான ஜனங்களின் கூட்டம் தலைகுனிந்து நிற்கும் சித்திரம் மனதுக்குள் வரும்போதெல்லாம் சல்லிவன் கேட்டுக்கொள்வார் - ''என்ன மாதிரியான ஜனங்கள் இவர்கள்? முட்டாள்களா? வெகுளிகளா?'' இரண்டுமாகத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் கம்பெனியாரின் உடைமைகளை மாட்சிமை தங்கிய மன்னரின் சாம்ராஜ்ஜியம் எடுத்துக் கொண்டபோது எங்களை எப்படி பண்டமாற்றுச் செய்யப் போயிற்று என்று முனகக்கூடத் தெரியவில்லையே இந்தக் கூட்டத்துக்கு.

இவ்வளவு யோசிக்கிற நானே கேட்டதில்லையே. கம்பெனிக் குமாஸ்தாவான என்னை ஏன் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அங்கத்தினன் ஆக்கினீர்கள்? மதராஸ் பட்டணத்திலிருந்த என்னை எதற்காக கோயம்புத்தூர் ஜில்லாவுக்கு வீசி யெறிந்தீர்கள்? எந்த எதிர்ப்பும் காட்டாமல்தானே நானும் இசைந்திருக்கிறேன். நானும் அடிமைதான். ஜான் சல்லிவன் எம்.சி.எஸ். ஜான் சல்லிவன் மதராஸ் சிவில் சர்வீஸ். ஜில்லா கலெக்டர் என்ற அதிகாரத்துக்கு ஆசைப்பட்ட அடிமை. அதனால்தானே இப்படி வசதியாக உட்கார்ந்து யோசிக்க முடிகிறது. இந்த யோசனைகளே கூட அடிமைத்தனம் தருகிற சௌகரியம். உண்மையில் இப்படி யோசிப்பது ராஜத் துரோகம். உதடுகள் இந்த வாசகத்தை உருவாக்கும் போது சல்லிவனின் வெளிர்சிவப்பு முகத்துக்குள் சிரிப்பின் அலை புரண்டது. 'பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் நீடூ வாழ்க. மாட்சிமை தங்கிய மன்னரைக் கர்த்தர் காப்பாற்றுவாராக' என்று உச்சரித்தார்.உச்சரிப்பில் கேலி தொனிக்கிறதா என்றும் சந்தேகப்பட்டார்.

ஜனங்களை அடக்கிய பிறகும் ஆட்சியை ஸ்தாபித்த பிறகும் இந்த மலைப் பிரதேசத்தில் வெள்ளைக்காரர்கள் கால்வைக்காதது ஏனென்பது சல்லிவனுக்குப் பிடிபடாமலேயே இருந்தது. மனிதர்களை ஜெயிப்பதுபோல இயற்கையை ஜெயிப்பது அவ்வளவு எளிதில்லையா? அதன் வசீகரம் புதிரானதா? விளங்கிக் கொள்ள நெருங்கும்போதெல்லாம் புதிர் இன்னும் அடர்த்தி யாகிறதா? இந்த மலையும் வனங்களும் அப்படியான மர்மங்களை ஒளித்து வைத்திருக் கின்றனவா? அந்த அகங்காரம்தான் மலைமடிப்புகளுக்குள் நுழைந்து பார்க்க முடியாமல் பயமுறுத்துகிறதா? இயற்கை அச்சமூட்டக் கூடியதுதானா? கருணையின் சொரூபமில்லையா? ஒருவேளை கருணையே அச்சமூட்டக் கூடியதுதானோ ,கடவுளைபோல. ஆனாலும் கடவுளை நெருங்கத்தானே விரும்புகிறோம். அப்படிக் கூட யாரும் இந்த மலைகளிலும் வனாந்தரங்க ளிலும் பிரவேசிக்கவில்லையா? அங்கே வேறு என்ன இருக்கும்? மனிதர்கள் இருப்பார்களா? ஜீவராசிகள் இருக்குமா?

இருக்கத்தான் வேண்டும். இல்லையென்றால் அதைத் தன்னுடைய சாம்ராஜ்ஜியக் கனவின் பாகமாகத் திப்பு நினைத்திருப்பானா? அந்த மலைகளைப் பற்றித் தெரிய வந்திருக்குமா? மனிதர்களைத் தவிர யாருக்கு விவரங்கள் தேவைப்படுகின்றன?

சல்லிவனின் மனதுக்குள் கேள்விகள் ஒன்றின் பின் ஒன்றாகப் புரண்டு கொண்டேயிருந்தன.

திப்பு சுல்தானிடமிருந்து பிரதேசத்தின் ஆட்சியதிகாரத்தை கம்பெனியார் கைச்சாத்துப்போட்டு வாங்கியது சும்மாவா? ஆட்சியோ அதிகாரமோ செய்ய வேண்டாம். ஒரு மர்மத்தைத் தெரிந்து கொள்ளும் ஆசை கூடவா இல்லாமற் போகும். அங்கே ஜன சஞ்சாரமிருக்கிறது என்பது நிச்சயம். அவர்களுக்கு இயற்கை கனிவு காட்டுகிறது என்பது நிச்சயம். அதை எப்படித் தெரிந்து கொள்வது? யாராவது போய்ப் பார்க்காமல் தெரியுமா? யார் போகக்கூடும்?யாரை அனுப்ப முடியும்?
@
சல்லிவன் இப்படி யோசித்துக்கொண்டிருந்த நாட்களிலும் மலைப் பிராந்தியத்தில் ஆள் போக்குவரத்து நடந்து கொண்டுதான் இருந்தது. ஜில்லா ரெவினியூ ரிக்கார்டுகளில் அதற்கு ஆதாரமிருந்தது. ஜில்லாவில் விளைகிற புகையிலையைக் கள்ளத்தனமாகச் சிலர் மலைகளுக்குள் கொண்டு போகிறார்கள் என்று பிரஸ்தாபிக்கப்பட்டிருப்பது கலெக்டரின் ஞாபகத்துக்கு வந்தது. புகையிலை அரசாங்கத்தின் குத்தகைப் பண்டம். அதை மலபார் ஜில்லாவுக்குக் கடத்துகிற கூட்டத்தைப் பற்றி ரிக்கார்டுகளில் எழுதி யிருந்தது.சல்லிவனின் ஜில்லாவில் புகையிலை சாகுபடி நடக்கும் வளமான ஊர்கள் இரண்டோ மூன்றோ இருந்தன. எல்லாம் வாயில் நுழையாத பெயர்கள். தாராபுரம், ஒட்டன்சத்திரம். பல்லடம். சோறு தின்னுகிற நாக்கு களுக்குத்தான் இந்தப் பெயர்களை தப்பில்லாமல் உச்சரிக்க முடியும் என்ற எண்ணத்தில் ஒருமுறை சொல்லிப் பார்த்தார் . பார்லியை விழுங்குகிற நாக்கில் ஒட்டாமல் விழுந்து சிதறின அந்த ஊர்கள்.

ஜில்லா மேப்பில் குறித்திருக்கும் அந்த ஊர்களின் இடத்தை கவனத்துக்குக் கொண்டுவந்தார் கலெக்டர். மேஜைமேல் நனைந்த கடற்பஞ்சு வைத்திருந்த கண்ணாடிக் கிண்ணத்தில் காப்பியிங் பென்சிலின் முனையைச் செருகி ஈரப்படுத்திக்கொண்டார். ராஜமகுடம் அச்சிட்டிருந்த பழுப்புக் காகிதத்தை எடுத்துப் பென்சிலால் மானசீகமாகப் புள்ளிவைத்து அந்த ஊர்களைக் குறித்தார். டாராபுர்ம், வொட்டான்சட்ரம், பல்லாடம். மூன்று ஊர்களின் பெயர்களும் ஊதா நிறத்தில் எழுந்தன. பென்சிலால் மூன்று ஊர்களையும் இணைத்துக் கோடுபோட்டார். கிட்டத்தட்ட முக்கோணம். 'மை லார்ட்' என்ற ஆச்சரியப் பெருமூச்சு அவரிடமிருந்து வந்தது. 'டுபாக்கோ டைரயாங்கிள்'.

'இந்த முக்கோணத்திலிருந்துதான் புகையிலைச் சிப்பங்கள் ஜில்லாவுக்கு வருகின்றன. இங்கிருந்து மதராசுக்கு. அங்கேயிருந்து இங்கிலாந்துக்கு. சாம்ராஜ்ஜியம் கிழித்திருக்கும் கோட்டை யாரோ குறுக்கே வெட்டுகிறார்கள். வரிகொடாமல் புகையிலையை உள்ளுக் குள்ளேயே விநியோகம் செய்கிறார்கள். நமக்கு இது சட்ட விரோதம். ஆனால் அவர்களுக்கு வயிற்றுப் பிழைப்பாக இருக்கும். ஒருவேளை அரசாங்கத்தை எதிர்க்கிற வழியாக இருக்கும். புகையிலைக் கடத்தலைப் பற்றி கவர்னருக்கு தெரிவிப்பது கலெக்டரின் கடமை. அதைச் செய்வேன். பிரிட்டிஷ் போலீஸ்காரர்களும் ரெவின்யூ அதிகாரிகளும் அதைப் பார்த்துக் கொள்ளட்டும். என்னுடைய அக்கறையெல்லாம் கடத்தல்காரர்கள் எப்படி மலையேறுகிறார்கள்? பாதையே இல்லாத சரிவுகளிலும் செங்குத்தான பாறைகளிலும் அடர்ந்த கானகத்திலும் எப்படி ஊடுருவிப் போகிறார்கள்? மலைப்பாறைகளில் வசிக்கும் எலிகளைப் போல அவர்களுக்கும் மலைக்காட்டின் பூகோளப் படம் ஜென்ம சித்தியாக இருக்குமோ? இல்லை, இயற்கையே கனிந்து அவர்களுக்கு வழிகொடுப்பதாக இருக்குமா? ஆதி படுகர்களுக்கு வழிகொடுக்க நதி இளகியதுபோல மலைகளும் வனங்களும் கடத்தல்காரர்களுக்கு விலகிக் கொடுக்கிறதா?'

சம சீதோஷ்ணமான கோயம்புத்தூர் காற்றில் தாவரக் குளுமை அதிகமாக இருப்பதுபோலக் கலெக்டருக்குத் தோன்றியது. இந்தச் சீண்டல்தான் என்னை அமைதியில்லாதவனாக்குகிறது. கலெக்டர் ஜான் சல்லிவனைவிட தோட்டக் காரன் ஜான் சல்லிவன் தொந்தரவுக் குள்ளாகிறான். கலெக்டருக்கு இது ரெவின்யூ பூமிப் பிரச்சனை. நீதி நியாயப் பிரச்சனை. இயற்கைவாதியான சல்லிவனுக்கு இது ரத்தத்துக்குள்ளே துடிக்கும் வேட்கை.ஓயாமல் என்னைச் சீண்டித் தவிக்கவைக்கும் அந்தப் போக்கிரி மலைத்தொடர்களை அடையும் பாதைகள் எங்கிருக்கின்றன? எங்கேயிருந்து தொடங்குகின்றன?

கோயம்புத்தூரிலிருந்து மேட்டுப்பாளையம்வரை கப்பிபோட்ட மண்சாலைகள் இருக்கின்றன. கலெக்டர் ஜான் சல்லிவன் உத்தியோக நிமித்தம் பலமுறை அந்தச் சாலைகளில் யாத்திரை செய்துமிருக்கிறார். அடிவாரத்திலிருந்து பார்த்தால் பூமியின் விளிம்புபோல நிற்கும் மலைத் தொடர்கள். பகல் பொழுதுகளில் வெயிலின் காங்கையால் நீல நிறமாகத் தெரியும். இரவில் காட்டுத் தீயின் வெளிச்சத்தில் நடமாட்டங்கள் தெரியும். மேட்டுப்பாளையத் திலிருந்து மலையேறுவதற்கான பாதைகள் இல்லை என்று ரெவின்யூ ரிக்கார்டுகள் குறிப்பிடுகின்றன. கொஞ்சம் தொலைவிலிருக்கும் சிறுமுகையி லிருந்துசோலைகளுக்குள்ளாக எங்கோ ஒரு வழி மலையேறுகிறது. அதுதான் கடத்தல்காரர்களை இட்டுச் செல்லும் பாதையாக இருக்க வேண்டும். அது எங்கே முடிகிறது என்பது ரிக்கார்டுகளிலும் இல்லை. எங்காவது முடியும்.முடிகிற இடத்தில் ஜன சஞ்சாரம் இருக்கும். அந்த வழியில் புகையிலைக் கடத்தல்காரர்களைத் தவிர யாராவது பயணம் செய்திருக் கிறார்களா?

ஜில்லா கலெக்டராக நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து தன்னை உலுக்கும் இந்தக் கேள்விகள் இன்று ஏன் இவ்வளவு தீவிரமாகத் துளைக்கின்றன? சல்லிவன் யோசித்தார் . எல்லாம் விசேஷ தூதன் மூலம் கவர்னர் அனுப்பிய கடிதத்தின் விளைவு.ஜில்லா அபிவிருத்திக்காக என்னென்ன புதிய திட்டங்களை வகுக்க போகிறாய் என்று கேட்கும் கவர்னரின் கடிதத்திலிருந்து தொடங்கிய உளைச்சல்.

பாளையக்காரர்களும் குட்டி ஜமீன்தார்களும் செலுத்துகிற வரிப்பணம் ஜில்லாவை நிர்வாகம் பண்ணக் காணாது.' உபரி வருவாய்க்கு என்ன செய்யப்போகிறாய்?'என்று கவர்னர் கேட்டிருக்கிறார். விவசாயத்தையும் நெசவையும் கைத்தொழிலையும் செய்து நிம்மதியாகப் பிழைத்துக் கொண்டிருக்கும் அப்பாவி ஜனங்கள் மீது இனியும் வரி சுமத்த முடியாது. அவர்கள் முதுகு ஒடிந்து போகும். வேண்டுமென்றால் நெல்லையும் கரும்பையும் இதர தானியங் களையும் பயிர் செய்பவர்களை வேறு நாணயப் பயிர்களை சாகுபடி செய்ய நிர்ப்பந்திக்கலாம். ஆனால் அதற்கு அவர்கள் சம்மதிப்பார்களா? தவிர முட்டைக்கோஸும் டர்னிப்பும் உருளைக் கிழங்கும் காரட்டும் முள்ளங்கியும் பீட் ரூட்டும் இந்த மண்ணில் முளைக்குமா? வெயிலில் காய்ந்தாலும் ஈரப்பசை விடாத மண்வாகு ஜில்லாவிலேயே கிடையாது. இங்கிருக்கும் பூமியெல்லாம் ஆற்றின் ஓட்டத்தில் உயிர் பெறுபவை. ஆறு இல்லாத இடங்களில் கிணறுகள். அந்த ஜீவரகசியம் இந்தக் கறுப்பு மனிதர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஏனென்றால் அவர்களுடைய ஜீவனம் மண்ணிலிருக்கிறது. அதை மாற்றமுடியாது.

மாற்ற முடியாதா அல்லது எனக்கு மாற்ற விருப்பமில்லையா? பிரிட்டிஷ் கலெக்டர் சல்லிவனுக்கு விருப்பமிருந்தாலும் இயற்கையின் ஆராதகனான சல்லிவனுக்கு விருப்ப மில்லைதான். 'நான் யாருக்கு ஊழியன்? பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் மன்னருக்கா?பரமண்டலத்திலிருக்கிற பிதாவுக்கா? 'குழப்பமாக இருந்தது சல்லிவனுக்கு.

புதிய தொழில்களைத் தொடங்கினால் தைரியமாகப் புதிய வரிகளைப் போடலாம். ஜில்லா முழுக்க அதிகமான பருத்தி சாகுபடிக்கான திட்டங்களை ரேகைப்படுத்தி காகிதங்களை கவர்னர் அவர்களின் சமூகத்துக்குச் சமர்ப் பித்திருக்கிறார். சாத்தியமானால் ஜின்னிங் மில்களும் ஸ்பின்னிங் மில்களும் கட்டலாம். மான்செஸ்டரின் சீதோஷ்ணமிருக்கிற பூமி. அந்தச் சீதோஷ்ணத்துக்குக் காரணமும் மலைத்தொடர்கள். முடியுமானால் மலைகளிலிருந்து துள்ளி இறங்கியோடும் நதிகளை அணைபோட்டுத் தடுக்கலாம். பாசனமும் நடக்கும். மன்னர்மனது வைத்தால் மின்சார உற்பத்தியும் நடக்கும். கவர்னர் வேண்டியபடி உபரி வருவாயைக் காட்டலாம். காகிதங்கள் இங்கிலாந்துக்குப் போய் பார்லிமெண்டில் விவாதிக்கப்பட்டு காரியமாகத் தொடங்க எவ்வளவு அவகாசம் தேவைப்படுமோ? உடனடியாக வருவாயைப் பெருக்க ஒரு யோசனை யிருக்கிறது. அதை அரசாங்கம் அமல்படுத்துமா என்பது சந்தேகம். மாமன்னரின் சிரசு பதித்த பவுண்டு நாணயத்தாள்களை இரட்டிப்பாக அச்சடிக்கலாம்.

@

இரவு முழுவதும் சல்லிவன் தஸ்தாவேஜுகளைப் புரட்டிக்கொண்டிருந்தார். இலக்கங்களும் எழுத்துக்களும் விவரணக் குறிப்புகளும் அலுப்பூட்டின. சர்வே நம்பர்கள், ரெவின்யூ வசூல் கணக்குகள், நிலுவையிலிருக்கும் பாக்கிகள், ஜில்லாவுக்கு வந்துபோன ராஜாங்கப் பிரதிநிதிகள் பற்றிய விவரங்கள், அவர்களுக்காக ஜில்லா நிர்வாகம் செய்த செலவினங்கள் எல்லாம் எண்களாகவும் தகவல்களாகவும் காகிதங்களில் இறைந்து கிடந்தன. கண்கள் அயரவிருந்த நொடியில் பார்வையில் பதிந்த தகவல் சல்லிவனை வியப்புக்குள்ளாக்கியது.

ஆறு வருடங்களுக்கு முன்னால் இரண்டுபேர் சல்லிவனின் கற்பனையில் இருக்கும் பாதை வழியாக மலையேறிருக்கிறார்கள். இதே ஜில்லாவின் பழைய கலெக்டர் காரோ மதராசி லிருக்கும் ரெவின்யூ போர்டுக்குச் சிபாரிசு செய்து சர்வேயர் கேய்ஸையும் அப்ரண்டிஸ் மக்மஹோனையும் அனுப்பிவைத்திருக்கிறார்.

'இத்தனை நாட்கள் இதே தஸ்தாவேஜுகளைப் எத்தனைமுறை புரட்டி யிருப்போம். இந்தத் தகவல் ஏன் கண்ணில் படவில்லை. இன்று மட்டும் எதற்காகப் பார்வையில் படவேண்டும்? என் பிரபுவே, உமக்குத் தோத்திரம். இந்த மலைப்பிராந்தியத்தின் சரித்திரத்தை சிருஷ்டிக்க என்னை நியமித் திருக்கிறீரே அந்தக் கருணைக்காக. மாட்சிமை தங்கிய மன்னரே ,தங்களுக்கு என் வந்தனம். என்னுடைய ஜீவிதத்தின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்கும் சந்தர்ப்பத்தை தங்களுடைய செங்கோல் கொடுத்திருக்கிறது. கர்த்தருடைய நாணயத்தையும் சீசருடைய நாணயத்தையும் ஒன்றாகச் செலவுசெய்யும் பாக்கியம் என்னையல்லாமல் யாருக்கு வாய்த்தி ருக்கிறது? '.

பரவசத்தில் ஜான் சல்லிவனின் சருமத்துக்குள்ளே ரத்தம் கொப்பளித்துப் பரவியது. அரைத்தூக்கத்தில் பங்கா இழுத்துக்கொண்டிருந்த சிப்பாய் கலெக்டர் துரை கூப்பிடுவதைக் கேட்டு மலங்க விழித்தான். அவனுடைய கோலத்தைப் பார்த்துக் கலெக்டருக்குச் சிரிப்பு வந்தது.பாவம், ஓய்ந்து விட்டான். சைகை காட்டி அவனைப் போகச் சொன்னார். நடந்து போகும்போது அவனுடைய நிழல் வழக்கத்தை விட நீண்டு அலைவதைக் கவனித்தார். கூரையிலிருந்து தொங்கி எரியும் கண்ணாடி விளக்கின் சுடர் அணையப்போவதுபோல குதித்துக் கொண்டிருந்தது. ஆசனத்திலிருந்து எழுந்து அறைக்குள்ளேயே நடந்தார். மரப்பலகைகள் பாவிய தரையில் அவருடைய காலடிகள் தாளமெழுப்பின. நடந்து வாசல் கதவு வரை போனார். வெளியே உட்கார்ந்திருந்த பாராக்காரன் பதறி எழுந்து நின்றான். அவனிடம் விளக்குக்கு எண்ணெய் எடுத்துவரும்படி பணித்தார். நகரத் தொடங்கிய அவனை நிறுத்தி குசினியில் ஆளிருந்தால் ஒரு கோப்பைத் தேநீரும் தயாரித்து வாங்கிவரச் சொன்னார். இரண்டையும் ஒரே இடத்திருந்து கொண்டு வரலாம். பாராக்காரன் அகன்றதும் மறுபடியும் அறைக்குள் நடந்து ஆசனத்தில் உட்கார்ந்தார். கூரைவிளக்கு மினுக்கிமினுக்கி பிரகாசிப்பதைச் சட்டை செய்யாமல் தஸ்தாவேஜில் கடைசியாகப் பார்த்துக்கொண்டிருந்த பக்கத்தில் பார்வையைப் படர விட்டார்.

மலைப்பிரயாணத்துக்கு முந்தின நாட்கள் வரைக்கும் கேய்ஸும் மக்மஹோனும் சர்வே நடத்துவதற்காக மதுரா ஜில்லாவில் இருந்திருக் கிறார்கள்.அதற்கு முன்பு இருவரும் கோயம்புத்தூர் ஜில்லாவில்தான் உத்தியோகம் பார்த்திருக்கிறார்கள். சாமர்த்தியசாலிகள். காரியத்தை பிசகில்லாமல் செய்து முடிப்பதில் வல்லவர்கள். அதனால் இரண்டு ஊழியர்களின் சேவையை மலைபிரதேச சர்வேக்காகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென்று கலெக்டர் காரோ குறிப்பெழுதியிருக்கிறார். இரண்டு ஊழியர்களும் மறுபடியும் கோயம்புத் தூருக்கு வரவழைக்கப் பட்டார்கள். பிரயாணம் என்றைக்குத் தொடங்கியதென்று பதியப்ப டவில்லை. தேவநாய்க்கன் கோட்டையிலிருந்து புறப்பட்டிருக்கிறார்கள். அப்படியானால் சிறுமுகை வழியாகத்தான் புறப்பட்டிருப்பார்கள். யூகித்தார் சல்லிவன். திப்புவின் மேல்கோட்டைப் படை அந்தப் பாதையைத்தான் போக்குவரத்துக்கு உபயோகித்திருந்தது என்பதும் மனதில் ஓடியது.

கலெக்டருக்கு முகமன் செய்து கேய்ஸ் ஜில்லா நிர்வாகத்துக்கு எழுதிய முதல் கடிதம் டேநாட்டிலிருந்து எழுதப்பட்டிருந்தது. கோத்தகிரிக்குக் கிழக்கே டேநாடு. அடுத்த கடிதம் மேல்கோட்டையிலிருந்து. கல்லட்டிக்கு அப்பால் சீகுர் மலைப்பாதையின் தொடக்கம். சல்லிவனின் தேகத்தில் பரபரப்பு ஏறியது. இன்னும் நாலே முக்கால் மைல் ஏறினால் வோட்டகமண்ட். சபாஷ், பரவாயில்லையே பையன்கள். சாதித்து விட்டார்களே.

ஆனால் அடுத்துப் பதிந்திருந்த குறிப்புகளில் கேய்ஸும் சகாவும் வழிமாறிப் போயிருந்தார்கள். கல்லட்டியிலிருந்து கிளைபிரியும் பாதைகளில் பெரியதை விட்டுவிட்டு குறுக்குப் பாதையில் முன்னேறியிருக்கிறார்கள். 'முட்டாள்களே, பெரிய பாதையை விட்டு அதில் ஏன் போனீர்கள்? அது தண்டாநாட்டுக்குப் போகிற பாதையாயிற்றே? அங்கிருந்து வோட்டகமண்டுக்குப் போவது முடியாதே'.

முடியவில்லை தான். கேய்ஸின் பிரயாண அறிக்கைக் குறிப்புகள் அத்தோடு முடிந்திருந்தன. அவர்கள் ஜில்லா தலைநகரத்துக்குத் திரும்பிய தினத்தைக் குறித்து அதன் அருகில் கையொப்ப மிட்டு தஸ்தாவேஜை மூடியிருந்தார் காரோ.

ஜான் சல்லிவனுக்கு வியர்த்தது. ஏமாற்றம் முகத்தில் அறைந்தது. மனது கோபத்திலும் பச்சாத்தாபத்திலும் பொங்கியது. எத்தனை பொன்னான சந்தர்ப்பம். கன்னிப் பெண்ணின் சரீரத்தில் ஒற்றை விரலால் அழுத்தமாக வருடிய அடையாளம் மறைவதற்குள் பார்த்துவிடத் துடிக்கும் பரவச விநாடிகளையல்லவா பாழாக்கி இருக்கிறார்கள். முட்டாள்கள்.

காகிதத்தில் மிஞ்சியிருந்த குறிப்புகள் மங்குவதுபோலத் தோன்றியது. கண்களைக் கசக்கிப் பார்த்தார். ஒரு வரி மட்டும் தெளிவாகப்பட்டது. ''இந்த மலைக் காடுகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் இராக் காலங்களில் கண்ணாடிப் பாளமாகிறது. அவ்வளவு குளிர்.ஆனாலும் ஜனங்கள் வாசம் செய்கிறார்கள்''

பாராக்காரன் வாசலில் வந்து நின்றான். சல்லிவன் நிமிர்ந்து பார்த்துத் தலையசைப்பில் உள்ளே வரச்சொன்னார். அவனுடைய வலதுகையில் சீனப் பீங்கான் கோப்பை இருந்தது. கோப்பையின் விளிம்பிலிருந்து தேநீரின் ஆவி நெளிந்து உயருவது விநோதமாக இருந்தது. எண்ணெய்ப் பாத்திரத்தையும் எண்ணெயை முகந்து ஊற்றும் துரட்டிக் கிண்ணத்தையும் இடது கையில் ஒன்றுசேர்த்துப் பிடித்திருந்தான். தேநீர்க் கோப்பையை மேஜைமேல் வைத்து விட்டு விளக்குக்கு எண்ணெய்விட நகர்ந்தான். எண்ணெய் ஊற்றியதும் சுடர் பிரகாசித்து வெளிச்சம் விரிந்தது. பாராக்காரன் அவரை நோக்கித் தலை தாழ்த்தினான். தேநீர்க் கோப்பையை வாயருகே கொண்டு போவதற்கிடையில் தலையசைத்து சமிக்ஞை செய்தார் சல்லிவன். கதவைத் தாண்டிப் போகிறவனை பின்தொடர்ந்தது அவர் பார்வை. பாராக்காரன் மறைந்ததும் அவரது பார்வை கோப்பைக்குள் குவிந்தது.பொன்பழுப்பு நிறத்திரவத்திலிருந்து மெல்லிய ஆவி யெழுவதை ரசித்துக் கொண்டே முதல் மிடற்றுத் தேநீரை உறிஞ்சினார். புத்துணர்வு நாவில் ஊறி தேகத்தில் பரவியது.

''தேயிலைச் சாற்றில் உற்சாக ரசத்தை இயற்கை ஒளித்து வைத்திருக்கிறது, ஜான்'' என்று பிரெஞ்சுக்கார சிநேகிதர் லூயி சொல்லுவது சல்லிவனுக்கு நினைவு வந்தது. உண்மைதான். இந்த கசப்புச் சாற்றில் மனதை இளக்குகிற ஏதோ ஒன்று இருக்கிறது. பழகியவனை அடிமைப் படுத்தும் வசிய ரசாயனம். மாத ஆரம்பத்தில் கலெக்டர் பங்களாவின் குசினிக்கு எந்தெந்தச் சரக்கு வந்திருக்கிறது என்று அக்கறைகாட்டாத அவர் அசாமிலிருந்தும் டார்ஜீலிங் கிலிருந்தும் தருவிக்கப்படும் தேயிலை வந்திருக்கிறதா என்பதை மட்டும் தவறாமல் பரிசோதிப்பார். எல்லாம் இந்தச் சிறு போதைக்காக. எல்லாம் ஜீன் பாப்டிஸ்ட் லூயி அறிமுகப்படுத்திய ருசி.

சல்லிவனின் மண்டைக்குள் சட்டென்று மின்னல் ஓடியது. தேநீர்க் கோப்பையை மேஜைமேல் வைத்தார். எழுதுபலகையில் காகிதங்களை ஒழுங்குபடுத்தினார். சொருகு பேனாவை எடுத்து மைக்கூட்டில் முக்கினார். எழுத ஆரம்பித்தார்.

இரண்டு கடிதங்கள். முதல் கடிதம் மதராஸ் கவர்னர் சர். தாமஸ் மன்றோவுக்கு.

'இந்த மலைப்பகுதியைப் பணம் விளையும் பிரதேசமாக மாறச் செய்யும் திட்டத்தை மாட்சிமை தங்கிய கவர்னர் அவர்கள் சமூகத்தின் பார்வைக்கு கோயம்புத்தூர் ஜில்லா கலெக்டர் ஜான் சல்லிவன் எம்.சி.எஸ். சமர்ப்பிக்கிறார்.

மலைச்சரிவுகளில் ஜீவிதம் நடத்தும் படகர்களும் தோடர்களும் மலபாரிலி ருந்து வந்து குடியேறியிருக்கும் மலையாளத்தார்களும் மைசூரிலிருந்து வந்த கன்னடிகர்களும் சமவெளி யிலிருந்து புகையிலை கடத்தல் நிமித்தம் மலையேறி ஸ்திர ஜீவிதமாக்கியிருக்கும் கவுண்டர்களும் பறையர்களும் செய்யும் பாரம்பரிய விவசாயத்தை ஐரோப்பிய முறைக்கு மாற்றலாம். ஐரோப்பிய பூகண்டத்தில் பயிராகும் தாவரங்கள் சகலமும் இந்த மலைத்தொடரில் முளைக்கும்.

கவர்னர் அவர்களே, இங்குள்ள சீதோஷ்ணத்தை சுவிட்சர்லாந்து வெப்பமானியை வைத்து அளந்தால் இரண்டும் துல்லியமானதாக இருக்கக் காண்பீர்கள். இங்கிருக்கும் விவசாயிகள் ஏற்கனவே ஐரோப்பிய உணவுப் பயிர்களை சில இடங்களில் விளைவித்திருக்கிறார்கள். மலபாரிலிருந்து கள்ளிக்கோட்டை மார்க்கமாக வந்த சுவிசேஷகர்கள் மேற்படிப் பயிர்களை விளைவித்துப் பார்த்திருப்பதாக ரிக்கார்டுகளில் பதிவு செய்யப்பட்டிருப்பது கவர்னர் அவர்களுக்குத் தெரிந்த விஷயமே.

எல்லையற்று நீண்டிருக்கும் மலைத்தொடரின் விரிந்த மடிகள் இன்னும் கன்னி நிலங்களாவே காத்துக்கிடக்கின்றன. அவற்றில் நமது வித்துகள் செழித்து முளைவிடும். நமது மலர்கள் விரியும். மலையின் சரிவுகளில் தேயிலை வளர்வதற்கான சாத்தியங்களைக் காண்கிறேன். இவையெல்லாம் திட்டங்கள். ஆனால் எதிர்காலத்தின் வசமிருக்கின்றன. இன்றிருப்பவை கானகத்தின் மர்மம். அதை அறிய நாம் அந்த மர்மத்துக்குள் பிரவேசிப்பதைத் தவிர்த்து வேறு மார்க்கங்கள் இல்லை என்பதைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டுவருவது கடமையாகிறது. நமது அதிருஷ்டத்தை அடையும் வழிகளை உருவாக்குவதே இப்போது என் முன்னால் உள்ள பணி.

மலையில் பாதைகளை உண்டுபண்ணும் முஸ்தீபுக்காக ஜில்லா நிர்வாகத்தின் சேவையிலுள்ள இருவரை நியமிக்கிறேன். அசிஸ்டெண்ட் கலெக்டர்கள் மிஸ்டர். ஜே.சி.விஷ், மிஸ்டர். என்.டபிள்யூ. கிண்டர்ஸ்லே இருவரும் இந்தப் பணிநிமித்தம் மலைப்பயணம் மேற்கொள்ள அனுமதியளிக்குமாறு கவர்னர் அவர்களைக் கோருகிறேன். திட்டமிட்டபடி இவர்களின் சர்வே பூர்த்தியாகுமானால் நமது கஜானாவில் அதிருஷ்ட தேவதை வாசம் செய்யத் தயங்கமாட்டாள்.

மேற்படித் திட்டத்துக்கு கவர்னர் அவர்களின் அனுமதியையும் பொருளாதார சகாயத்தையும் கோருகிறேன். கர்த்தர் மாட்சிமை தங்கிய மன்னரையும் வந்தனத்துக்குரிய தங்களையும் ஆசீர்வதிப்பாராக.

தங்கள் விசுவாசமுள்ள
ஜான் சல்லிவன் எம்.சி.எஸ்.'

எழுதிய கடிதத்தை ஒருமுறை வாசித்துப் பார்த்தார் சல்லிவன். எல்லாம் கச்சிதம். வேகமாக எழுதியதில் கலங்கிப் போயிருந்த ஒன்றிரண்டு வார்த்தைகளில் எழுத்தைச் சரிசெய்தார்.மறுபடியும் வாசித்தார். எழுதிய காகிதத்தைத் தனியாக எடுத்தார். கையொப்பத்துக்குக் கீழே உத்தியோக முத்திரை பதித்து அதன் மேல் ஊதினார். நாசூக்காக மடித்தார். பழுப்பு நிற உறையொன்றை எடுத்துக் கடிதத்தை அதற்குள் வைத்தார்.'காலையில் அனுப்பச் செய்யவேண்டும்' என்று சொல்லிக்கொண்டே உறையை ஒதுக்கி வைத்தார். இன்னொரு காகிதத்தை எழுதுபலகையில் ஒழுங்காகப் பொருத்தினார்.
' மெசியே. ஜீன் பாப்டிஸ்ட் லூயி....'

இரண்டாவது கடிதத்தை எழுதத் தொடங்கினார் சல்லிவன்.


@

நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் முதல் அத்தியாயம்

திங்கள், 16 ஜனவரி, 2012

வாழும் கணங்கள்

















திருவனந்தபுரம் பத்திரிகையாளர் சங்கத்தின் இதழியல் பட்டய வகுப்புக்கான தேர்வுத்தாளைத் தயாரிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. மனோரமா நாளிதழின் ஊழியரும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளருமான நண்பர் ஜெயச்சந்திரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கினேன். அச்சு, புகைப்படம், தொலைக்காட்சி ஆகிய எல்லா ஊடகங்களுக்குமான வினாத்தாளை உருவாக்க வேண்டும். ஜெயச்சந்திரன் புகைப்படக் கலைஞர். மனோரமாவின் தலைமைப் புகைப்படக்காரர். சுந்தர ராமசாமி சிறு வயதில் வாழ்ந்த கோட்டயம் வீட்டை - குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலின் களம் - படமெடுத்தவர். எனவே போட்டோகிராபி பற்றி ஏதாவது கேள்வி இருந்தால் நல்லது என்பது அவர் விருப்பம். சம்மந்தமே இல்லாத துறை பற்றி என்ன கேள்வி எழுதுவது என்று தயக்கமாக இருந்தது. கூடவே புகைப்பட இதழியலைப் பாடமாக எடுத்துக்கொண்ட மாணவர்கள் யாருமில்லை என்பதும் யோசனையை நடைமுறைப்படுத்தத் தடையாக இருந்தது. யோசனையைச் சொன்னவரே கேள்வியையும் உருவாக்கித் தந்தார்.

'உலகின் முதல் பெண் புகைப்படப் பத்திரிகையாளர் யார்? இந்தியாவின் முதல் பெண் புகைப்படப் பத்திரிகையாளர் யார்?'இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் தேர்வெழுதிய மாணவர்களில் யாருக்கும் தெரியவில்லை. பத்து மாதங்கள் பாடம் படித்த அவர்களுக்கே தெரியாதபோது இரண்டு மூன்று நாட்கள் பாடத்திட்டத்தைப் புரட்டிப் பார்த்த எனக்கு எப்படித் தெரியும்? ' இல்லை, நான் புகைப்படக் கலை பற்றி இந்த மாணவ்ர்களுக்கு நடத்திய முதல் வகுப்பிலேயே அந்தத் தகவலைச் சொல்லியிருக்கிறேன்' என்றார் ஜெயச்சந்திரன். மாணவர்களுக்கு வகுப்பெடுப்பதற்காகத் தயாரித்து வாசித்த கட்டுரையின் படியையும் காண்பித்தார்.

மார்கரெட் வைட் போர்க்கே என்ற அமெரிக்கப் பெண்தான் உலகின் முதலாவது புகைப்படப் பத்திரிகையாளர் என்று பரவலாக நம்பப்படுகிறது.ஃபார்ச்சூன் பத்திரிகையில் பணியாற்றியவர். தகப்பனார் அச்சுத்துறையில் பொறியியல் வடிவமைப்பாளராக இருந்தவர். தாயார் பதிப்புத் துறையில் ஈடுபட்டிருந்தார்.மார்கரெட் பயின்றது ஊர்வனவற்றையும் நீந்துவனவற்றையும் பற்றிய உயிரியல் பாடங்களை. ஆனால் விருப்பம் புகைப்படத்துறையில். அந்தக் கலை மீது இருந்த ஆர்வம் காரணமாக வெவ்வேறு கல்வி நிலையங்களில் பயின்றார். கல்லூரி மலருக்காக அவர் எடுத்த புகைப்படங்கள் அவரை புகைப்படக்காரராக அறிமுகப்படுத்தின. அதற்கிடையில் திருமணமும் ஓராண்டுக்குப் பின்னர் மணவிலக்கும் நிறைவேறியது. அந்தக் காயத்தை ஆற்றிக்கொள்வதற்காக பத்திரிகைப் புகைப்படக்காரராக ஆனார். பொதுவாகப் பெண்கள் காலூன்றாத துறை. ஆனால் மார்கரெட் அதை அறைகூவலாக எடுத்துக்கொண்டார். உலகப்போர் மூண்டிருந்த அந்தத் தருணத்தில் புகைப்படக் கலைஞராக சோவியத் யூனியனுக்குப் போனார்.போர்க்களத்தில் அனுமதிக்கப்பட்ட சொற்பமான புகைப்படக்காரர்களில் அவரும் ஒருவர். சோவியத் யூனியனுக்குள் அனுமதிக்கப்பட்ட முதல் ஐரோப்பியப் புகைப்படக்காரரும் அவர்தான்.

தொடர்ந்து போரில் ஈடுபட்டிருந்த எல்லா நாடுகளிலும் மார்கரெட் காமிராவுடன் அலைந்தார்.அந்த அலைச்சல் அவரை லைஃப் பத்திரிகையின் புகைப்படக் கலைஞராக்கியது. போர்க்களக் காட்சிகள், நாஜி வதைமுகாமில் எடுத்த படங்கள் இன்றும் பெரும் ஆவனங்களாகக் கருதப்படுகின்றன. போர்க்கள வன்முறையைப் படம் பிடிப்பதை விட அதனால் நேர்ந்த பாதிப்புகளையே தன்னுடைய காமிராவில் சுருட்டினார். உறவிழந்த பெண்கள், தவித்து அழும் சிறார்கள், சாவதற்காக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள், வதை முகாம்கள், யுத்த நாசங்கள், அழிவின் மிச்சங்கள் இவற்றை அவர் படமாக்கிய விதம் முன்னுதாரணமாக அமைந்தது. இந்தப் படங்களின் தொகுப்பை இரண்டு நூல்களாகவும் வெளியிட்டார். படங்களுக்கான குறிப்புகளை அவரது இரண்டாவது கணவரும் எழுத்தாளருமான எர்ஸ்கின் கால்டுவெல் எழுதினார். லைஃப் பத்திரிகையின் தலைமைப் புகைப்படக்காரராகப் பிரசித்தி பெற்றார் மார்கரெட். அந்தப் பிரசித்தியும் மார்கரெட்டின் சாகசக் குணமும் கால்டுவெல்லை அச்சுறுத்தியிருக்க வேண்டும். இருவரும் மணவிலக்குச் செய்துகொண்டார்கள். இரண்டாம் உலகப் போர் இறுதிக் கட்டத்தை எட்டிய காலப் பகுதியில் மார்கரெட் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். 1950 வாக்கில் பார்க்கின்சன் நோய் அவரைப் பீடித்தது.அதைப் பொருட்படுத்தாமல் ஆப்பிரிக்காவில் பணியாற்றச் சென்றார்.கொரியப் போர்முனைக்குப் போய் படங்களை எடுத்தார். 1971 ஆம் ஆண்டு தன்னுடைய அறுபத்தியேழாம் வயதில் மறைந்தார்.
இந்தத் தகவல்களை நண்பரின் கட்டுரையில் வாசித்தேன். கூடவே அவர் மார்கரெட் வைட்டின் தன்வரலாற்று நூலையும் கொடுத்தார் - 'என்னுடைய உருவப்படம்' (Portrait of Myself). அதிலிருந்த ஓர் உருவப்படம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. லைஃப் இதழில் வெளியான படம். வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மிகப் பிரபலமான அந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்திருக்கிறது. ஆனால் அதைப் படமாக்கியவர் யாரென்று கவனித்ததில்லை. அந்தப் புகழ் பெற்ற படத்தில் மகாத்மா காந்தி தியான மனோநிலையுடன் ராட்டை அருகில் அமர்ந்து சிரத்தையாக பத்திரிகை வாசிதுக் கொண்டிருக்கிறார் அந்த அபூர்வ கணத்தை நிரந்தமாக்கியவர் மார்கரெட் வைட்.

ஜெயச்சந்திரன் காண்பித்த இன்னொரு புகைப்படமும் அபூர்வமானது. லண்டனிலிருந்து இந்தியாவுக்கு வரும் பிரிட்டிஷ் விமானத்தின் உட்பகுதி. உதடுகளில் பற்றவைக்கப்படாத சிகரெட்டுடன் உட்கார்ந்திருக்கும் ஜவஹர்லால் நேரு பிரிட்டிஷ் ஹை கமிஷனரான சைமனின் மனைவி உதட்டில் பொருத்தியிருக்கும் சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டிருக்கிறார்.

'இது இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் எடுத்த படம்' என்று ஜெயச்சந்திரன் விளக்கம் சொன்னார். கண நேர அசிரத்தையில் அந்தப் பெயர் நினைவில் தங்காமல் நழுவிப் போனது. கடந்துபோன மகளிர் தினத்தன்று அந்தப் படம் நினைவுக்கு வந்தது. ஒரு வித்தியாசமான கட்டுரைக்கான சங்கதி என்று ஆயத்தமானேன்.பெயரை மறந்த காரணத்தால் யோசனையைச் செயல்படுத்த முடியாமலாயிற்று. ஜெயச்சந்திரனையே தொலைபேசியில் அழைத்து விசாரித்தேன். 'நேருவின் படத்தை எடுத்த அம்மணியின் பெயர் என்ன?' மறுநொடியே பதில் கிடைத்தது. 'ஹோமாய் வியாரவாலா - இந்தியாவின் முதல் பெண் புகைப்படப் பத்திரிகையாளர். அவரைப் பற்றிய புத்தகத்தைக் கூட உங்களிடம் காண்பித் திருக்கிறேன்.கேமரா கிரானிக்கிள்ஸ் என்று பெயர்'. ஜெயச்சந்திரன் சொடுக்கிய பதில் ஞாபகத்தின் இருட்டில் வெளிச்சத்தைப் பரப்பியது. பெயர் தெரியவந்ததும் அகழ்வாராய்ச்சியில் இறங்கினேன்.

புகைப்படக்கலை இந்தியாவுக்கு அறிமுகமானது 1840இல். இந்தியாவின் சர்வேயர் ஜெனரலாக இருந்த மெக்கென்சி நில அளவை நடத்திய இடங்களையும் புராதன இந்தியக்கலைச் செல்வங்க¨ளையும் பதிவு செய்வதற்கு ஓவியத்தையே நம்பியிருந்தார். அஜந்தா குகைச் சிற்பங்களையும் புடைப்போவியங்களையும் கிட்டத்தட்ட அதே அளவில்ஓவியங்களாகவே தீட்டச் செய்திருந்தார். 1850வரை இதுதான் நடைமுறை. மெட்ராஸ் மிலிட்டரி சர்வீசில் பணியாற்றிய கேப்டன் ராபர்ட் கில் ராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு முழுநேர ஓவியராக பாலங்களையும் சாலைகளையும் புராதனச் சின்னங்களையும் தீட்டித் தள்ளிக்கொண்டிருந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசால் அவருக்குஒரு காமிரா வழங்கப்பட்டது. அதை வைத்து அவர் எடுத்த முதல் படங்கள் எல்லோரா குகை ஓவியங்கள். ஆக அவர்தான் இந்தியாவின் முதல் புகைப்படக்காரர்.

சொற்ப காலத்துக்குள் கேமராக்கள் பரவலாயின. பிரிட்டிஷ்காரர்களும் மேல்தட்டு இந்தியர்களும் காமிராக்களுடன் திரிய ஆரம்பித்தார்கள். மேல்தட்டுப் பெண்களும் கேமராக்களுடன் உலாவினார்கள். அந்த வரிசையில் ஒருவர்தான் குஜராத்தி பார்சி வகுப்பைச் சேர்ந்த பெண்ணான ஹோமாய். தகப்பனார் பார்சி, குஜராத்தி நாடக நடிகர். வறிய குடும்பம்.எனினும் ஹோமாயின் கலை ஆர்வத்தைப் பெற்றோர் ஊக்குவித்தனர். பம்பாய்ப் பல்கலைக்கழகத்திலும் பின்னர் ஜேஜே ஓவியப் பள்ளியிலும் படிக்க அனுப்பினர். கல்லூரிக் காலத்தில் மானெக்ஷா என்ற புகைப்படக் கலைஞரைக் காதலித்து மணந்தார். அவர்தான் ஹோமாய்க்குப் படமெடுக்கக் கற்றுக் கொடுத்தார். முதலில் அவர் எடுத்தவைமிகச் சாதாரணக் காட்சிகள்தாம். பம்பாய்ச் சாலைகளில் ஓடும் வாகனங்கள். கிளப்பில் கூடியிருக்கும் பெண்கள். அவற்றிலேயே ஹோமாய் தன்னையறியாமல் காமிராவை கலைக்கருவியாக்கியிருந்தார். மானெக்ஷாவுக்கு ஹோமாய் தன்னை விட நேர்த்தியான புகைப்படக்காரர் என்று விளங்கியது. பாராட்டுதலுடன் ஒத்துழைத்தார். ஹோமாயின் படங்களைப் பிரிண்ட் போட்டவர் அவர்தான்.

சுதந்திரப் புகைப்படக்காரராக இல்லஸ்டிரேட்டட் வீக்லியில் சேர்ந்தார் ஹோமாய். முக்கிய நிகழ்வுகள் அனைத்திலும் அவருடைய காமிரா இருந்தது. பதவி உறுதி பெற்று டில்லிக்குக் குடிபெயர்ந்தார்கள் தம்பதியர். அது இந்திய வரலாற்றின் சாட்சியத்துக்கான தருணமாக மாறியது. உடுத்திய சேலையை சொருகிக் கொண்டு பெரிய ஸ்டாண்டுகளை ஒரு கையிலும் ஏரிபிளக்ஸ் காமிராவை இன்னொரு கையிலும் சுமந்து உலக வரலாற்றுச் சம்பவங்கள் அனைத்துக்கும் கண் கண்ட சாட்சியானார் ஹோமாய்.இருபதாம்நூற்றாண்டின் அரசியல் பிரபலங்களில் ஹோமாயின் விரல் சொடுக்கில் சிறைப்படாதவர்கள் அநேகமாக யாருமில்லை. மவுண்ட்பாட்டன் பிரபு, மார்ஷல் டிட்டோ, கென்னடி,குருசேவ், சூ யென்லாய். ஆனால் ஹோமாயின் காமிரா அதிகம் கண் சிமிட்டியது நேருவை நோக்கித்தான். நேருவின் தனிப்பட்ட நொடிகள் கூட ஹோமாயின் காமிராவிலிருந்து தப்பியதில்லை. முப்பத்தைந்து ஆண்டுக்காலம் புகைப்படப் பத்திரிகையாளராக புகழ் மிளிர இயங்கினார் ஹோமாய். 1969 ஆம் ஆண்டு மானெக்ஷா காலமானார். அதற்குப் பின்னர் யாருக்கும் தெரியாமல் போனது அவருடைய வாழ்க்கை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரைப் பற்றி எழுதப் பட்ட நூல் ( Camera Chronicles of Homai Vyarawalla by Sabeena Gadihoke ) வெளியீட்டின்போதுதான் அவர் உயிரோடிருப்பதே தெரியவந்தது. அந்த நூலும் கூட அவரது இனமான பார்சி இனத்தவரின் முயற்சியால் வெளியானது.

இன்றைய தேதிக்கு ஹோமாய் வியராவாலாவுக்கு தொண்ணூற்றி ஐந்து வயது. இருக்கிறாரா என்று விசாரிக்க வேண்டும்.

ஹோமாய் புகைப்படப் பத்திரிகையாளர் வேலையை விட்டதற்கு சொல்லப்படும் காரணம் இது. ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் அவரும் அவர் காமிராவும் ஒதுக்கப்பட்டனர்.ஆமாம், பெண்பிள்ளை போட்டோ எடுத்துத்தான் செய்தி வெளியாக வேண்டுமா?' என்ற கேலிக்குரல் அவர் காதில் விழுந்தது. அந்தக் கூட்டத்திலிருந்து காமிராவைத்தூக்கிக்கொண்டு வெளிநடப்புச் செய்தார் ஹோமாய். அதற்குப் பின்பு காமிராவுக்குப் பின்னால் அவரை யாரும் பார்க்கவில்லை. காமிராவுக்கு முன்னாலும்.

பின் குறிப்பு:
ஹோமாய் 15 ஜனவரி 2012 அன்று 98 ஆவது வயதில் வதோதராவிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

இந்தக் கட்டுரை உயிரோசை இணைய இதழில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது.
அண்மையில் வெளியாகியுள்ள ‘வாழிய நிலனே’ என்ற கட்டுரை நூலிலும் இடம் பெற்றிருக்கிறது.

வியாழன், 12 ஜனவரி, 2012

ஏழு கவிதை நூல்கள் - காலச்சுவடு வெளியீடு

நண்பர்கள் எல்லாருக்கும் வணக்கம். இன்று இங்கே காலச்சுவடு பதிப்பகம் ஏழு கவிதை நூல்களை வெளியிடுகிறது. இது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. குறிப்பிடத்தகுந்த நிகழ்வு. நானும் கவிதை எழுதுகிறவன் என்பதால் இந்த நிகழ்ச்சி எனக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் கொடுக்கிறது. ஏனென்றால் இதன் மூலம் கவிதை மீது கவனம் செலுத்தப் படுகிறது. கவிதைக்கான இடம் உறுதி செய்யப்படுகிறது. பொதுவாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு 'இப்போதெல்லாம் யாரும் கவிதைகளை வாசிப்பதில்லை' என்பது. பதிப்பாளர்கள் சொல்லும் குறை 'கவிதை நூல்கள் விற்பனையே ஆவதில்லை' என்பது. இந்தக் குற்றச் சாட்டிலும் குறை கூறலிலும் உண்மை இருக்கலாம்.

இருந்தாலும் கவிதை நூல்கள் தொடர்ந்து வெளியாகின்றன. காலச்சுவடு பதிப்பகம் இந்த நிகழ்ச்சியில் வெளியிடும் ஏழு நூல்கள் உட்பட மொத்தம் பதினோரு நூல்களை இந்தப் பருவத்தில் வெளியிடுகிறது. இது ஒரு பதிப்பகத்தின் கணக்கு. இதே போல பிற பதிப்பகங்களும் குறைந்த பட்சம் ஐந்து அதிக பட்சம் பத்து என்ற எண்ணிக்கையில் கவிதை நூல்களை வெளியிடுகின்றன. கவிதை நூல்களை வெளியிடுவது தவிர்க்க முடியாதது என்றோ அல்லது அப்படி வெளியிடுவது அந்தப் பதிப்பகத்தை மதிப்புக் குரியதாக்குகிறது என்றோ நாம் எடுத்துக் கொள்ளலாம். காரணம் எதுவானாலும் இவ்வளவு கவிதைப் புத்தகங்கள் வெளியிடப்படுவது கவிதைக்கான இடம் பத்திரமாக இருக்கிறது என்பதை, கவிதை வாசிப்ப வர்கள் என்ற இனம் அழிந்து விடவில்லை என்பதைக் காட்டுகிறது.

இங்கே ஏழு கவிஞர்களின் தொகுப்புகள் வெளியிடப்படுகின்றன. இளங்கோ கிருஷ்ணனின் 'பட்சியன் சரிதம்', பூமா ஈஸ்வரமூர்த்தியின் 'நீள்தினம்' இசையின் 'சிவாஜி கணேசனின் முத்தங்கள்', குவளைக்கண்ணனின் 'கண்ணுக்குத் தெரியாததன் காதலன்', தேவேந்திர பூபதியின் 'ஆகவே நானும்' , லாவண்யா சுந்தரராஜனின் 'இரவைப் பருகும் பறவை' மண்குதிரையின் ' புதிய அறையின் சித்திரம்' - ஆக ஏழு தொகுப்புகள். இந்த தொகுப்புகளையும் முதல் வாசகனாக ஒருமுறை வாசித்திருக்கிறேன். அவை ஒவ்வொன்றைப் பற்றியும் நண்பர்கள் பேச இருக்கிறார்கள். எனவே ஒட்டு மொத்தமாகப் பார்த்தபோது இந்தத் தொகுப்புகள் ஏற்படுத்திய சில எண்ணங்களை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன். இவை இந்தக் கவிதைகளைப் பற்றிய என்னுடைய பார்வையோ விமர்சனமோ அல்ல. வாசிப்பின்போது தென்பட்ட சில சுவாரசியமான செய்திகள், ஒப்பிட்டுப் பார்த்தபோது கண்டுபிடித்த சில விஷயங்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழு தொகுப்புகளில் ஒன்று மட்டுமே பெண் எழுதியது. 'இரவைப் பருகும் பறவை'யை எழுதிய லாவண்யா சுந்தரராஜன்.ஆறு பேருக்கு இது அவர்களுடைய முதல் தொகுப்பல்ல. லாவண்யா, இளங்கோ கிருஷ்ணன் ஆகியவர்களுக்கு இது இரண்டாவது தொகுப்பு. இசைக்கும் குவளைக் கண்ணனுக்கும் மூன்றாவது தொகுப்பு. தேவேந்திர பூபதியின் ஐந்தாவதும் பூமா ஈஸ்வர மூர்த்தியின் ஆறாவதும் தொகுப்புகள் இங்கே வெளியிடப்படுபவை. இந்த அறிமுகங்களுக்கு இடையில் புது முகம் மண்குதிரை. 'புதிய அறையின் சித்திரம்' அவருடைய முதல் தொகுப்பு.

இவ்வளவு கவிஞர்கள் தொடர்ந்து எழுத முடிகிறது என்றால் தமிழ்க் கவிதை முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தக் கவிஞர்கள் அந்த ஆரோக்கியத்தை மேலும் கூட்டுவார்கள் என்று எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. அதற்காக இந்த என் சக கவிஞர்கள் எல்லாருக்கும் வாழ்த்துகள். இந்தப் பட்டியலில் கடைக் குட்டியான மண்குதிரைக்கு பிரத்தியேக வாழ்த்துகள்.

நூலில் உள்ள ஆசிரியர் பற்றிய குறிப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது கவிஞர்களின் வயதை ஒட்டி ஒரு வரிசை உருவானது. பூமா ஈஸ்வரமூர்த்தி, குவளைக்கண்ணன், லாவண்யா சுந்தரராஜன், இசை, இளங்கோ கிருஷ்ணன், மண்குதிரை என்று வயது வாரியான வரிசை. இதில் வயதைச் சொல்லாத ஒரு கவிஞரும் இருக்கிறார். ஆக அவரே இந்தப் பட்டியலில் மிகவும் இளைஞர் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். நண்பர் தேவேந்திர பூபதிக்கு அவரது நித்திய யௌவனத்துக்குப் பாராட்டுகள்.

கவிதை வாசித்தால் போதாதா, கவிஞரின் வயதைத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டுமா என்று நீங்கள் கேட்டால் இல்லை என்றுதான் நானும் சொல்வேன். ஆனால் தெரிந்து வைத்திருப்பது ஒரு தூண்டுதலுக்கு உதவும் என்றும் சொல்வேன். என் வயது ஐம்பத்து நான்கு. இந்த மூப்பின் சலுகையில் சொல்லலாம் என்று தோன்றுகிறது. முப்பத்து ஒன்பது வயது கூட நிறைவடையாமல் மறைந்துபோன ஒரு ’சின்னப் பைய’னிடமிருந்துதான் நம்முடைய நவ கவிதை ஆரம்பமாகிறது. அவன் எழுதியது போன்ற நாலு வரியை எழுதி விட முடியாதா என்ற உந்துதல்தான் நமது கவிதை உலகத்தை சுழலச் செய்கிறது. அவன் மகா கவியா இல்லையா என்று இன்றும் விவாதம் நடக்கிறது. அது ஓர் இலக்கு. அதை நோக்கித்தான் தமிழ்க் கவிதை முன்னேறுகிறது. நாற்பது வயசுக்குள் ஒருவன் நிகழ்த்திய சாதனைக்கு எட்டவாவது நம்மால் ஐம்பது அறுபது எழுபது வயதிலாவது நெருங்க முடியுமா என்பதுதான் இந்த மொழியில் எழுதும் யாருக்கும் கனவாக இருக்கும். இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

இதைச் சொல்லும்போது அண்மையில் வாசித்த ஒரு புத்தகத்தின் பக்கங்கள் நினைவுக்கு வருகின்றன. பழைய புத்தகம்தான். 'மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சித்திரம்' என்ற தலைப்பில் தி.முத்துக் கிருஷ்ணன் எழுதியது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் 1986 இல் வெளியிட்ட புத்தகம். பாரதியின் வாழ்க்கையை அவருடைய கவிதைகள் மூலமாகவும் கட்டுரைகள் மூலமாகவும் உருவாக்கும் முயற்சி இந்தப் புத்தகம். இதைப் பலமுறைப் புரட்டிப் பார்த்திருக்கிறேன். சிலமுறை வாசித்திருக்கிறேன். இப்போது வாசித்தபோது ஒரு நிகழ்ச்சி பற்றிய குறிப்பு மனதில் பதிந்தது. புதுச்சேரி வாழ்க்கைக் காலத்தில் பாரதியின் இருப்பில் 1916 மார்ச் மாதம் 29 ஆம் தேதி நடந்த உல்லாச சபையில் கவிதை பற்றிய விவாதம் அது.

குண்டுராவ் என்பவர் சொல்கிறார்.

'பெல்ஜியம் தேசத்திலே எமில் வெர்ஹேரன் என்ற கவி இருக்கிறார். அவருடைய கவிதை புது வழியாக இருக்கிறது என்று பத்திரிகையிலே வாசித்தேன். எப்படி என்றால் இதுவரை உலகத்துக் கவிதைகள் நமது நவீன நகரங்களிலுள்ள யந்திர ஆலைகள் மோட்டார் வண்டிகள் முதலிய வஸ்துக்களைக் கவிதையில் சேர்ப்பதில்லை.இந்த வஸ்துக்களில் அழகில்லையாதலால் கவிதையிலே சேர்க்கத் தகாதென நினைத்துக் கொண்டிருந்தார்கள். காற்று, வானம் நீர் மலை பெண் செல்வம் மது தெய்வம் தவம் குழந்தைகள் முதலிய அழகுடைய வஸ்துக்களையே கவிகள் வர்ணிப்பது வழக்கம். எமில் வெர்ஹேரனுடைய கொள்கை யாதென்றால் வலிமையே அழகு. ஒரு பொருளின் வெளி உருவத்தைப் பார்த்து அது அழகா இல்லையா என்று தீர்மானம் செய்யலாகாது. யந்திரங்களிலே வலிமை நிகழ்கின்றன. ஆதலால் அவை அழகுடையன. அவற்றைக் கவி புகழ்தல் தகும்.

இதற்குப் பாரதியின் பதில்.

வலிமை ஓர் அழகு. அழகு ஓர் வலிமை. யந்திர ஆலை.நீராவி வண்டி, நீராவிக் கப்பல், வானத்தேர், பெரிய பீரங்கி எல்லாம் அழகுதான். உயர்ந்த கவிகள் வலிமையுடைய பொருள்களை அவ்வக் காலத்தில் வழங்கிய வரையில் வர்ணித்தே இருக்கிறார்கள். இதிலே புதுமையொன்றுமில்லை. வலிமைக் கருவிகள் சில இப்போது புதுமையாகத் தோன்றுகின்றன. இவற்றை ஐரோப்பியக் கவிகள் விலக்கி வைத்தது பிழை. ஆனால் பழைய தெய்வத்தையும் இயற்கையையும் மறந்து யந்திரங்களைப் பாடத் தொடங்கினால் கவிதை செத்துப் போய்விடும்.

இந்தப் பகுதியைப் படித்தபோது இரண்டு நிலையில் வியப்பு ஏற்பட்டது. இன்றைக்கு நமக்கு இருக்கும் அறிவுத் தேடலுக்குரிய வசதிகள் எதுவும் இல்லாமலிருந்த காலத்தில் ஒரு தமிழ்க் கவிஞன் அயல்மொழிக் கவிதை பற்றிக் கொண்டிருந்த கருத்து முதலாவது ஆச்சரியம். தகவல் தொடர்புகள் எளிதானவையாக இருக்கும் இந்தக் காலம் வரைக்கும் கூட எமில் வெர்ஹேரன் என்ற கவிஞரைப் பற்றி என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை என்று வெட்கம் வந்தது.வெட்கத்திலிருந்து விடுபடுவதற்காக வெர்ஹேர்னைப் பற்றிய தகவல்களைத் தேடத் தொடங்கினேன்.

பாரதி பெல்ஜியத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்ட வெர்ஹேரன் பிரெஞ்சு மொழியில் கவிதைகள் எழுதியவர். சிம்பலிசத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர்.கிட்டத் தட்ட பாரதியின் சமகாலத்தவர். 1911இல் நோபெல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் படவிருந்து வாய்ப்பை இழந்தவர். புதுச்சேரி போன்ற உலகத்தின் இந்தக் கோடியில் இருந்த ஒரு கவிஞன் எட்டாத் தொலைவில் இருந்த இன்னொரு கவிஞனை அடையாளம் கண்டு கொண்டது வியப்பை அதிகமாக்கியது. பாரதியின் மழை, காற்று ஆகிய கவிதைகள் வெர்ஹேரனின் பாதிப்பில் எழுதப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எனக்குத் தோன்றியது. வெர்ஹேரனின் கவிதை இயல்பை இந்த உதாரணத்தை வைத்துச் சொல்லலாம். 'ஒரு பழைய ஆலை மெல்லிய வெளிறிய பாசியுடன் குன்றின் மேல் தெரிகிறது ஒரு திடீர் மருபோல'என்பது வெர்ஹேரனின் கவிதையில் ஒரு வரி. ஒரு தகவலுக்காக மட்டுமே இது.

பாரதியின் வாதத்தையொட்டி யோசித்தபோது இன்றைய கவிதைக்கும் அது பொருந்துவதாகவே பட்டது. இது இரண்டாவது நிலையில் ஏற்பட்ட வியப்பு. கவிதையின் உள் தளத்தில் எதைச் சொல்வது, எப்படிச் சொல்வது என்ற இரண்டு தன்மைகள் இருப்பதாக யோசிக்க முடிந்தது. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தன்மை கவிதையை நிர்ணயிக்கிறது. நேற்றைய கவிதையின் பிரச்சனை எதைச் சொல்வது என்பதாக இருந்திருக்கலாம். இயற்கையை,
வாழ்வின் சிக்கலை, அறம் சார்ந்த தடுமாற்றங்களைச் சொல்வதாக இருந்திருக்கலாம். அவற்றையெல்லாம் சொல்லியாகி விட்ட பின்னர் என்ன செய்வது? உதாரணத்துக்குப் பெண்களின் நிலையைக் கவிதையில் சொல்லலாம். சரி,சொல்லியாகி விட்டது. தொடர்ந்து அதையே சொல்லிக் கொண்டிருப்பதா கவிதையின் பணி? இந்தக் கேள்விக்கு விடை காண்பதுதான் இன்றைய கவிதையின் சிக்கல். எதைச் சொல்வது என்பதல்ல; எப்படிச் சொல்வது என்பதுதான். பெண்களின் நிலையை எப்படிச் சொல்வது என்பதில்தான் பல குரல்களும், பல நிறங்களும் பல கோணங்களும் உருவாகின்றன. இந்தத் தன்மைதான் கவிதையை என்றும் புத்துணர்வோடு வைத்திருக்கிறது. கவிதை எப்போதும் புதுமையை நாடி நிற்கும் இலக்கியத் துறை. புதிய மொழியை, புதிய உணர்வை, புதிய நடையைப் பிடிவாதமாகக் கோரும் துறை. முன்னோடிகளின் நடையிலோ அவர்கள் மொழியிலோ அவர்கள் உணர்வு சார்ந்தோ இன்றுள்ள கவிஞன் எழுத முடியாது. இது இயற்கையின் கட்டாயமும் கூட. எந்தச் செடியிலாவது நீங்கள் பழைய பூவைப் பார்த்திருக்கிறீர்களா?

எப்படிச் சொல்வது என்பதில் மேலும் சில சிக்கல்கள் ஒளிந்திருக்கின்றன. கவிதைக்கான ஒரு விஷயத்தை யோசிக்கும் போதே அதில் உங்கள் அனுபவம் என்ன? உங்கள் பார்வை என்ன? உங்கள் சார்பு என்ன? எவ்வளவு தூரம் உண்மையாக அந்த விஷயத்தைக் கவிதையாக்கப் போகிறீர்கள்? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள்விகளைக் கடந்துதான் கவிதையாக்கம் நிகழ்கிறது. அதனால்தான் கவிதை இன்னும் கவிதையாக இருக்கிறது; அதன் இடம் பத்திரமாக இருக்கிறது. எப்படிச் சொல்வது என்பது முக்கியமானதாக இருப்பதனால்தான் இத்தனை கவிதைகள் எழுதப்படுகின்றன. இத்தனை கவிஞர்கள் எழுதுகிறார்கள். ஓர் உதாரணம் சொல்லலாம். ஈழப் பிரச்சனையை எழுத ஒரு கவிஞர் போதும். அதை எப்படிச் சொல்வது என்ற கேள்வி முளைக்கிறபோதுதான் இத்தனை கவிதைகள். இந்தப் புதுமைதான் மொழியை வளப்படுத்துகிறது.வாழ்க்கையை விளக்க முயற்சி செய்கிறது என்று நினைக்கிறேன்.

இதுவரைக்கும் பேசியதன் அடிப்படையில் இங்கே வெளியிடப்படும் நூல்களில் கவிதை எப்படிச் சொல்லப் பட்டிருக்கிறது என்று பார்க்க விரும்புகிறேன். இது இந்தக் கவிதைகள் பற்றிய திட்டவட்டமான கருத்து அல்ல. இவற்றை அறிமுகப்படுத்துகிற வாசகங்கள் மட்டுமே.

பூமா ஈஸ்வர மூர்த்தி அன்றாட நிகழ்வுகளில் மறைந்திருக்கும் எளிய ரகசியங்களைப் பிரபஞ்ச அளவில் விரித்துப் பார்க்கிறார்; 'சிறு துளி நீர் எறும்புக்குப் பெருமழையாகிறது' அவரிடம். குவளைக் கண்ணன், எளிய செயல்களில் அவை கொண்டிருப்பதைத் தாண்டிய பொருளைத் தேடுகிறார், 'நகரத்தில் மனிதர்களோடு மனிதர்களாக தெய்வங்களை வசிக்கச் செய்ய முடிகிறது' அவரால். லாவண்யா சுந்தரராஜன் எல்லாச் சொற்க¨ளையும் அன்பின் சுகந்த திரவியத்தால் துடைத்துத் தூய்மை செய்து முன்வைக்கிறார்; அவரது கவிதையில் 'பிரியங்களைப் பொழிவிக்கும் மழை பாறையென்றும் மண்ணென்றும் பார்ப்பதில்லை'. இளங்கோ கிருஷ்ணன் நேற்றைய வரலாற்றை இன்றைய சம்பவமாகவும் இன்றைய செயலை என்றைக்குமான தொன்மமாகவும் மாற்றுகிறார். கிரகோர் சம்சா என்ற விற்பனைப் பிரதி நிதியைக் கரப்பான் பூச்சியாக மாற்றினார் காஃப்கா. கரப்பான் பூச்சியை கிரகோர் சம்சாவாக அல்லல்பட வைக்கிறது இளங்கோ கிருஷ்ணன் கவிதை. கை நழுவிப் போன நற்கணங்களை மீண்டும் எதார்த்தமாக்க விரும்புகிறார் தேவேந்திர பூபதி. அவருடைய வயதைக் காலத்தின் குறுக்காகக் கடந்து போகும் உன்னில் அல்லது பெண்ணில் அளவிட்டுக் கொள்கிறார். கவிதையை ஆபத்தான கேளிக்கையாக மாற்றுகிறார் இசை. ஊழியை வாலில் கட்டி இழுத்து வரும் குரங்கு அவருடைய கவிதை. இடம் காலம் உணர்வு எல்லாவற்றையும் இயற்கையின் சாயலில் முன்வைக்கிறார் மண்குதிரை. அவர் கவிதைக்குள் புயல் அதிர்ச்சியிலிருந்து மீளாத மரங்கள் முணு முணுத்துக் கொண்டிருக்கின்றன' பறவைகள் கம்பளி அணிந்து பறக்கின்றன.

இந்த ஏழு தொகுப்புகளிலுமாக மொத்தம் 356 கவிதைகள் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் ஒருமுறை வாசித்திருக்கிறேன். சில கவிதைகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாசித்திருக்கிறேன். அதிலிருந்து ஒரு உண்மை புலப்பட்டது. இந்த ஏழு கவிஞர்களும் இலக்காகக் கொண்டிருப்பது ஒரே வாசகனைத்தான். அவனிடம்தான் இவர்கள் சொல்லுவது வார்த்தையாகப் பொருள்பட்டு அவனுடைய புரிந்து கொள்ளலில் மீண்டும் கவிதையாக அனுபவமாகிறது. அந்த வாசகனுக்குப் பல்வேறு தோற்றங்கள். பல்வேறு இருப்புகள். இத்தனை கவிதைகளுக்கிடையில் அந்த வாசகன் கையை உயர்த்தி தானிருப்பதைக் காட்டுகிறான்.

நான் நீ மீன் - கலாப்ரியா தொகுப்பு வெளியீடு
















எல்லாருக்கும் வணக்கம்.
நண்பர் கலாப்ரியாவின் புதிய கவிதைத் தொகுப்பை வெளியிட்டுப் பேசும் இந்த வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. அதற்காக நண்பர் மனுஷ்யபுத்திரனுக்கும் உயிர்மை பதிப்பகத்துக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே வெளியிடப்பட்ட 'நான் நீ மீன்' தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கவிதைகளில் எனக்குப் பிடித்த ஒரு கவிதையை வாசித்து என்னுடைய பேச்சைத் தொடர விரும்புகிறேன். 'மந்திரச் சிமிழ்' என்ற கவிதை எனக்குப் பிடித்துப் போக முதல் காரணம் - அது கவிதையாக இருக்கிறது. கவிதையல்லாத நிறைய சமாச்சாரங்களுக்கு இடையில் ஒரு கவிதையை வாசிக்கக் கிடைத்த மகிழ்ச்சியால் பிடித்துப் போனது. இரண்டாவது காரணமும் இருக்கிறது. சுய நலமான காரணம். அது என்னவென்பதைக் கவிதையை வாசித்து முடிப்பதற்குள் நீங்களே புரிந்து கொள்வீர்கள். இனி கவிதை.

இதை
வாசிக்கத் தொடங்கி விட்டீர்களா,
எனில் நீங்கள்தான்
ஏழு கடல்தாண்டி
ஏழுமலைதாண்டி
மந்திரவாதியின் உயிர் இருக்கும்
சிமிழ் தேடிப் போகும் இளவரசன்.

முதல் கடலின் கரையில்
நம்பிக்கையளிக்கும் விதமாய்
'உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது' என்கிறது
பிரமிளின் வண்ணத்துப் பூச்சி

மலையேறி இறங்கிக்
கடலேகும் முன் கழிமுகத்தில்
அள்ளிப் பருகிய நீரில்
சுகுமாரன் கை கவிழ்த்த நீரும்
கலந்திருக்கிறது

கானகமொன்றின் இசை
உங்கள் முகம் கை கழுத்தைத்
தழுவி உவகையுறுகிறது
நகுலனின் அம்மா என
'நண்பா, அவள்
எந்தச் சுவரில்
எந்தச் சித்திரத்தைத் தேடுகிறாள்' என
அவர் காதில் விழும் குரலை
நீங்களும் செவியுறுகிறீர்கள்
அது அவரது அம்மாவா
கொல்லிப் பாவைகளா

தீவை விட்டுத் தெப்பத்தை
அலையுள் சரிக்கும்பொழுது
கரையில் வேறெதுவும்
செய்ய முடியாமல்
ஒதுங்கப் பாடை நிழலுமின்றிப்
பார்த்துக் கொண்டிருக்கிறது
ஞானக்கூத்தனின் நாய்

தெப்பம் சிதையக்
கடலுக்குக் கீழ்
ஓட்டமும் நடையுமாய்
அலைந்து கொண்டிருக்கின்றன
தேவதச்சனின் அன்பின் சிப்பிகள்

பொன்னிலைகள் ஆபரணமாய் உதிர்ந்து கிடக்கும்
மரத்தின் கழுத்தைக் காலடி எனக் கற்பித்து
இளைப்பாறியதை நினைக்கக்
கவ்விக்கொள்ளும் தேவதேவனின் வெட்கம்

கண்டு கொள்கிறீர்கள்
பைய அருகிருந்து
குருடனின் சுயமைதுனம் பார்க்கும்
ஜோடிக் கண்களென
இரண்டு வண்டுகளைச் சிமிழுக்குள்
எதில் மந்திரவாதியின் உயிர்

படைப்பின் மகத்துவம் புரிந்த
வாசகன் நீங்கள்
கொல்ல மனமின்றி
இரண்டையும் தப்பவிட்டு
மறுபடியும் தேடத் துவங்குகிறீர்கள்
இம்முறை என்னோடு.
@
நண்பர்களே, இன்று இங்கே தங்களுடைய புதிய தொகுப்புகளை வெளியிட்ட இரண்டு கவிஞர்களுடனும் எனக்குத் தொடர்பும் உறவும் இருக்கிறது. கலாப்ரியா, அய்யப்ப மாதவன் இரண்டு பேருடைய தலா ஒரு தொகுப்புக்கு முன்னுரை எழுதியிருக்கிறேன். அந்த அடிப்படையில் இந்த மேடையில் நிற்பது மகிழ்ச்சியளிக்கிறது. பொதுவாகவே கவிதை பற்றிப் பேசுவதில் எனக்கு மகிழ்ச்சி உண்டு. கவிதை ஆர்வலனாக நான் வாசிக்கிற சிந்திக்கிற யோசிக்கிற மொழியில் கவிதை என்னவாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி. கவிஞனாக நானும் அதே மொழியில் எழுதுகிறவன். அதனால் கவிதையைப் பற்றிய பேச்சு நான் எங்கே இருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்ளுகிற மகிழ்ச்சி. ஆனால் எல்லா சமயத்திலும் கவிதையைப் பற்றி மகிழ்ச்சியாகவே பேசிவிட முடிவதில்லை.

தமிழில் இன்று ஏராளமான கவிதைகள் இருக்கின்றன. அதை விட அதிக எண்ணிக்கையில் கவிஞர்களும் இருக்கிறார்கள்.எல்லாக் கவிதைகளையும் எல்லாக் கவிஞர்களையும் பற்றிப் பேசப் பேராசை இருக்கிறது. ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை. சில கவிதைகளைப் பற்றிப் பேசலாம். அது நம்முடைய இலக்கிய அறிவுக்கு நல்லது. சில கவிஞர் களைப் பற்றிப் பேசலாம். அது நம்முடைய இலக்கிய வளர்ச்சிக்கு உதவும். சில கவிதைகளையும் சில கவிஞர்களையும் பற்றிப் பேசாமலிருக்கலாம். அது நம்முடைய உடல் நலத்துக்கும் மனநலத்துக்கும் நல்லது. அண்மையில் கவிஞர் ஒருவர் தொலைபேசியில் அழைத்திருந்தார். அவருடைய வெளிவரவிருக்கும் தொகுப்புக்கு முன்னுரை எழுதித் தரச் சொல்லிக் கேட்டார். ஏற்கனவே முன்னுரைக் கவிஞன் என்ற நற்பெயரைப் பெற்று விட்டேன். அதனால் இனிமேல் யாருக்கும் முன்னுரை எழுதுவதாக இல்லை. மன்னிக்கவும் என்றேன். மறுமுனையிலிருந்து வசவுமழை பெய்யத் தொடங்கியது. இதுவரை நான் முன்னுரை எழுதிய கவிதைப் புத்தகங்களின் ஆசிரியர்களின் பெயரைக் குறிப்பிட்டு அதையெல்லாம் விட மோசமான கவிதையைத் தான் எழுதவில்லை என்று ஆர்ப்பாட்டம் செய்து விட்டார். அவர் பேசியது வெளிநாட்டிலிருந்து என்பதால் தப்பித்தேன். உள்ளூராக இருந்தால் அவர் பேச்சில் தெரிந்த ஆவேசத்துக்கு என்னை தேக உபத்திரவம் செய்திருந்தாலும் ஆச்சரியமில்லை. அதிலிருந்து ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டேன்.கவிஞன் என்று அறியப்பட கவிதை மட்டும் எழுதினால் போதாது காட்டுக் கூச்சல் போடவும் தெரிந்திருக்க வேண்டும். தன்னுடைய கவிதைகள் மூலமாகவே தன்னை நிறுவிக் கொண்டவர் கலாப்ரியா. எழுத வந்த நாள் முதல் இன்றுவரை அவரைப் பின் தொடர்பவனாகவே இருக்கிறேன். அதிகம் பேச வாய்ப்புத்தரும் கவிதைகளை எழுதியிருப்பவர். கவிதைகளைப் பற்றி விரிவாக ஒரு முன்னுரையிலும் சுருக்கமாக இரண்டு மேடைகளிலும் பேசியிருக்கிறேன். இங்கே பேசக் கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. அதற்குக் காரணமும் அவர்தான். நினைவின் தாழ்வாரங்கள் என்ற அவருடைய புத்தகத்தின் முன்னுரையில் ஒரு வாசகம் இருக்கிறது. 'பாராட்டை மட்டுமே விரும்புகிற சாதாரணனாகிய நான்' என்று ஒரு வாசகம். அந்த வாசகத்தைப் படித்த பிறகு அவரைப் பற்றிப் பேச ஒருவிதமான தயக்கம் வந்து விட்டது. யோசித்துப் பார்த்தால் எழுதுகிற எல்லாரும் பாராட்டை மட்டுமே விரும்புகி றவர்கள்தான். அதை அவர்கள் அவ்வளவு வெளிப் படையாகச் சொல்லு வதில்லை. கலாப்ரியா சொல்கிறார். அந்தப் பாசாங்கு இல்லாத தன்மைதான் அவருடைய இயல்பு. அவரது கவிதைகளின் இயல்பு.

நவீனக் கவிஞர்களில் தீர்க்கதரிசி கலாப்ரியா என்று நினைக்கிறேன். இன்றைக்கு எழுதப்படும் கவிதைகளைப் பற்றி மிக நீண்ட காலத்துக்கு முன்பே ஆருடம் எழுதியவர் .

'படிம
உருவக
குறியீட்டு இடையீடில்லாத
நிர்வாணக் கவித்துவம் வேண்டி
நீ
எப்போது தியானிக்கப் போகிறாய்? என்பது அவர் கவிதை. இன்று எழுதும் புதியவர்கள் இந்த தியானத்தைத்தான் கவிதையில் மேற்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு எழுதப்படுகிற பெரும்பாலான கவிதைகள் 'திறந்த கவிதைகளாக' plain poetry ஆக இருப்பவை. கலாப்ரியாவைப் படித்துத்தான் இதைச் செய்தார்கள் என்று சொல்ல வரவில்லை.கவிதை ஆக்கத்தில் நிகழும் தொடர்ச்சியாக இதைச் சொல்லலாம். அதற்கு உந்துதல் கொடுத்த கவிஞர்களில் ஒருவர் கலாப்ரியா.

கலாப்ரியா கவிதைகளில் நான் முக்கியமானதாகக் கருதுவது மூன்று அம்சங்களை.

ஒன்று; காட்சிப்படுத்துதல்.நான்கைந்து காட்சிகளை ஒன்றின் பின் ஒன்றாகவோ பக்கம் பக்கமாகவோ முன்னும் பின்னுமாகவோ அடுக்கி வைத்து விட்டுக் கவிதை என்கிறார். வாசிக்கவும் வாசித்ததும் இதைப் போல நாமும் எழுதி விட முடியுமே என்று சுலபமாக எண்ணவைக்கிற கவிதையாக்கம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. அந்தக் காட்சிகளின் தேர்வில் அவர் காட்டுகிற கவனமும் அவை ஒன்று சேரும்போது பொருள்தருவதாக அமைவதும்தான் கவிதையாக மாறுகிறது.

இரண்டாவது: நவீன கவிதையில் ஒரு இடத்தின் சித்திரமும் அங்கே வாழ்பவர்களின் சூழலையும் சித்தரித்தவர் கலாப்ரியா. ஒரு சமூகத்தின் அகப் பிரச்சனைகளை அவர் அதிகம் ஆராயவில்லை. புறத் தோற்றங்களைச் சார்ந்து அந்த சமூகத்தின் அந்த மனிதர்களின் இருப்பைப் பற்றிச் சொல்லி யிருக்கிறார். இந்தத் தொகுப்பிலும் அந்த மாதிரியான ஒரு கவிதை இருக்கிறது. வீடுகளையொட்டிய வாய்க்காலில் நல்ல நீர் ஓடியபோது அதை எல்லாரும் பயன்படுத்துகிறார்கள். குழந்தைகள் வாழைமட்டையில் தெப்பம் செய்து விளையாடுகிறார்கள். காலப்போக்கில் வாய்க்கால் சாக்கடையாக மாறுகிறது. நீர் தேங்குகிறது. அதில் பிணம் மிதக்கிறது. இப்போதும் எல்லாரும் கழியுடன் சாக்கடையை நெருங்குகிறார்கள். மிதக்கிற பிணம் தங்கள் வீட்டு எல்லைக்குள் வந்து விடக் கூடாது என்று கழியால் தள்ளி விடுகிறார்கள். 'வளர்ச்சி' என்ற கவிதை இது. இந்தச் சித்திரமும் அதற்குள் இருக்கும் கதைத்தன்மையும் தான் கவிதை ஆகின்றன. இது அவர் கவிதைகளில் முக்கியமான அம்சம். கலாப்ரியா சிறுகதைகள் எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் அவர் எழுதாமல் விட்ட பல சிறுகதைகள்தாம் அவரிடம் கவிதையாகியிருக்கின்றன.

மூன்றாவது: தமிழ்க் கவிஞர்களில் வாசகர்களின் பங்களிப்பை அதிகம் கேட்கிற கவிஞர் கலாப்ரியா. வாசகனை சக கவிஞனாக்குபவை அவரது கவிதைகள். நான்கைந்து காட்சிகளை முன்னால் வைத்து விட்டு நகர்ந்து விடுகிறார். அவற்றை இணைக்கிற வேலை வாசகனுடையது. அவன் அதைச் செய்கிறபோதுதான் கவிதை முழுமையடைகிறது.

இப்படி நிறையப் பேச இடமளிப்பவை கலாப்ரியாவின் கவிதைகள். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக எழுதி வருபவர். அவருடைய கவிதைகளின் மொத்தத் தொகுப்பு 2000 ஆவது ஆண்டில் தமிழினி வெளியீடாக வந்தது. அதற்குப் பிறகும் இரண்டு தொகுப்புகள் வந்திருக்கின்றன. post complete collection வரிசையில் இந்த 'நான் நீ மீன்'மூன்றாவது தொகுப்பு. மூன்று தலை முறைகளைத் தாண்டியும் பேசப்படும் பெயராகக் கலாப்ரியா இருப்பது அவருடைய வாசகனாக எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. 'பெயர்களின் நிழலை அழிய விடுவதில்லை ஒளி' என்று இந்தத் தொகுப்பில் ஒரு கவிதையில் அவரே குறிப்பிடுகிறார்.

பெயர்களைப் பற்றிச் சொல்லும்போது ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. கலாப்ரியா சம்பந்தப்பட்டதுதான்.அவருடைய 'வனம் புகுதல்' தொகுப்புக்கு நான் முன்னுரை எழுதியிருக்கிறேன். முன்னுரையை எழுதி அவருக்கு அனுப்பிய பிறகு அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. 'இந்த முன்னுரையில் 37 இடங்களில் 'கலாப்ரியா' என்று என் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். படிக்க சந்தோஷமாக இருக்கிறது' என்று எழுதியிருந்தார். படித்ததும் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. என்னடா இது, ஒருவன் கிட்டத்தட்ட ஒரு மாதம் இந்த ஆளின் கவிதைகளை வாசித்து, அரை மாதம் குறிப்பெடுத்து, ஐந்தாறு நாள் வார்த்தை வார்த்தையாகத் திரட்டி பத்து பக்கங்களுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அந்த ஆள் இத்தனை இடத்திலே என் பேர் வந்திருக்கு என்று பதில் எழுதிறாரே என்று இருந்தது. யோசித்துப் பார்த்த போது இந்த 'சௌந்தர்யக் கிறுக்குதானே கவிதைக்கு அடிப்படை' என்ற ஞானம் வந்தது. சிரித்துக் கொண்டேன். இந்தப் பேச்சிலும் 'கலாப்ரியா' என்ற பெயரை 15 முறை மனநிறைவுடன் குறிப்பிட்டிருக்கிறேன் என்ற அறிவிப்புடன் என் பேச்சை நிறைவு செய்கிறேன். எல்லாருக்கும் வணக்கம். நன்றி.

லீலை - 12 மலையாளக் கதைகள்

எழுத்தின் கடைசி இலக்கிய வடிவம் சிறுகதைதான்.

1985இல் வெளியான ஆ.மாதவன் கதைகள் தொகுப்பில் முன்னுரையாகச் சேர்க்கப்பட்டிருந்த 'கலைகள், கதைகள்,சிறுகதைகள்' என்ற கட்டுரையில் 'சிறுகதையே படைப்புச் சக்தியின் கடைசிக் குழந்தை. படைப்புச் சக்தி அதற்குப் பின் இன்றுவரை கருத்தரிக்கவில்லை' என்று சுந்தர ராமசாமி குறிப்பிட்டிருந்தார். ஒருவேளை படைப்புச் சக்தி கருத்தரித்திருந்தாலும் பேர் சொல்லும் சந்ததிகள் பிறக்கவில்லை. எழுதப்படும் மொழிகள் எல்லா வற்றிலும் இதுவே நிலைமை.

சிறுகதையைத் தாண்டிய ஓர் இலக்கிய வடிவத்தைக் கண்டுபிடிக்க எழுத்தாளர்கள் முயற்சி செய்யாமலில்லை.தமிழில் அதுபோன்ற முயற்சியை மேற்கொண்டவர் மு.தளையசிங்கம். பெரும் கனவுடன் மெய்யுள் என்ற வடிவத்தை அறிமுகப்படுத்தினார். அவரைத் தவிர வேறு யாரும் அந்த வடிவத்தைப் பொருட்படுத்தவில்லை. மலையாள எழுத்தாளரான எஸ்.கே.பொற்றேக்காடு நாவலையும் நாடகத்தையும் இணைத்து நாவடகம் என்ற வடிவத்தை முன்வைத்தார். அதுவும் பின் தொடரப்படவில்லை. மினிக் கதைகள் என்ற பெயரில் ஒரு சோதனையை மலையாள எழுத்தாளர்கள் செய்து பார்த்தார்கள். பி.கே.பாறக்கடவு என்ற ஓர் எழுத்தாளர் மட்டுமே தொடர்ந்து இந்த வடிவத்தைப் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார். இந்த முயற்சிகள் எதுவும் 'சிறுகதையே படைப்புச் சக்தியின் கடைசிக் குழந்தை' என்ற இலக்கியத் தகுதியைக் கேள்விக்குட்படுத்தவில்லை.

ஆக நூற்றாண்டைக் கடந்த சிறுகதையே இலக்கியத்தில் இன்றைக்கும் இளமை மாறாத வடிவம்.ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குக் கொண்டு செல்ல முதலில் பரிந்துரைக் கப்படுவது சிறுகதைகள்தாம் என்று தோன்றுகிறது.ஓர் எளிய மொழிபெயர்ப்பாளனின் தேர்விலும் சிறுகதையே முதன்மையாக இருக்கும். நாவல் அதன் நீளம் காரணமாக மொழியாக்கத்தில் சுணக்கத்தை ஏற்படுத்துகிறது. கவிதை அதன் மொழி நுட்பம், பண்பாட்டுக் குறிப்பீடுகள் ஆகியவை காரணமாகத் தயக்கத்தைக் கொடுக்கிறது. ஆனால் ஆர்வமுள்ள மொழிபெயர்ப்பாளன் எந்தத் தடையும் இல்லாமல் ஒரு சிறுகதையை மொழியாக்கம் செய்யக் கூடுமென்று என்ணுகிறேன். மொழிபெயர்ப்பில் வெற்றி பெறாத கவிதைகள் இருக்கலாம். புனை கதைகள் இருக்க முடியாது. குறிப்பாகச் சிறுகதைகள். உலக மொழிகளிருந்தும் இந்திய மொழிகளிருந்தும் ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டுத் தொகுக்கப்படும் கதைகள் இதற்கு எடுத்துக் காட்டுகள். எளிதில் மொழியாக்கம் செய்யப்பட இசைவானது என்பது மட்டுமல்ல; பிற மொழி வாசகர்களை உடனடியாக நெருங்க உதவும் வடிவம் என்பதும் காரணம். கவிதையின் ஆழத்தையும் நாவலின் விரிந்த காட்சியையும் சிறுகதைகள் சாத்தியப்படுத்துகின்றன என்று சொல்லப்படும் கருத்தும் ஒருவேளை அவற்றின் மொழியாக்கத்துக்குத் தூண்டுதலாக இருக்கலாம்.

கவிதைக்கும் நாவலுக்கும் கொஞ்சமும் மாற்றுக் குறையாத இலக்கிய வடிவம் சிறுகதை என்று நம்பும் இலக்கியவாதிகளில் ஒருவர் இந்தத் தொகுதியிலுள்ள 'கடையநல்லூரில் ஒரு பெண்' ணின் ஆசிரியர் டி.பத்மநாபன். சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணூரில் ஓர் இலக்கிய நிகழ்ச்சியில் சந்தித்தேன். அறிமுகப்படுத்தியவர் 'இவர் எழுத்தாளர் டி.பத்மநாபன்' என்றார். சற்றுக் கோபமான குரலில் பத்மநாபன் திருத்தினார்.'இல்லா,செறுகதா க்ருத்து டி.பத்மநாபன்'. அந்தத் திருத்தம் அவரளவில் சரியானது. கட்டுரைகள் சிலவற்றை எழுதி யிருக்கிறார் என்பதை விட்டுவிட்டால் அவரது முதன்மையான எழுத்துக்கள் சிறுகதைகள் மட்டுமே.அவரது சம காலத்தவர்களாக சிறுகதைகள் வாயிலாக அறிமுகமான எம்.டி.வாசுதேவன் நாயரும் மாதவிக் குட்டியும் நாவல் ஆக்கத்தில் நுழைந்தபோதும் பத்மநாபன் 'செறுகதாக்ருத்'தாகவே (சிறுகதைப் படைப்பாளியாகவே) தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். அமெரிக்க இலக்கியத்தின் நவீனத் தலைமுறை எழுத்தாளரான ரேமண்ட் கார்வர் கவிதைகள் எழுதியிருந்தாலும் இலக்கியப் புகழ் பெற்றது சிறுகதைகளால் மட்டுமே.

இந்தத் தொகுப்பில் இடம் பெறும் கதைகளை மீண்டும் வாசித்துக் கொண்டிருந்தபோது எழுந்த எண்ணங்கள் இவை.எல்லா மொழிகளிலும் சிறுகதையில்தான் பெரும் சாதனைகள் நிகழ்ந் திருக்கின்றன என்ற மையக் கருத்தை நோக்கியே இந்த எண்ணங்கள் சுழன்றன. நூற்றாண்டைக் கடந்த மலையாளச் சிறுகதையும் இதற்கு விதிவிலக்கல்ல.

பகுத்துப் பேசும் வசதிக்காக மலையாளச் சிறுகதை வரலாற்றை ஆரம்பக் காலம், மறு மலர்ச்சிக் காலம், நவீனத்துவம், நவீனத்துவத்துக்குப் பின், தற்காலம் என்று வகைப் படுத்தலாம். சிறுகதைப் பிரக்ஞை உருவாகி வந்த ஆரம்பக் காலக் கதைகளைவிலக்கி வைத்தால் தகழி சிவசங்கரப் பிள்ளை, வைக்கம் முகம்மது பஷீர், பொன்குன்னம் வர்க்கி, பி.கேசவதேவ் ஆகியோர் கதைகள் எழுதிய மறுமலர்ச்சிக் கால முதற்கட்டம். காரூர் நீல கண்டப் பிள்ளை, எஸ்.கே.பொற்றேக்காடு, லலிதாம்பிகா அந்தர்ஜனம் போன்றவர்கள் எழுதிய இரண்டாம் கட்டம்,எம்.டி.வாசுதேவன் நாயர், மாதவிக்குட்டி, டி.பத்மநாபன், என்.மோகனன் முதலானவர்கள் செயல்பட்ட மூன்றாம் கட்டங்களில் சிறுகதை தனிக் கலையாகத் தன்னை அறிவித்தது. முதற்கட்ட கதைகள் வாழ்வின் புறச் செயல்பாடுகளில் ஊன்றிய பார்வையைக் கொண்டவை. இரண்டாம் கட்டம் வாழ்வின் உளவியலை உணர்ச்சி ததும்பும் நடையில் ஆராய்ந்தவை. மூன்றாம் கட்டக் கதைகள் வாழ்வின் மையமான மனிதனின் மன வோட்டங்களில் கவனம் செலுத்தியவை. இப்படி வகைப்படுத்துவது ஒரு வசதிக்காகத்தான். முற்போக்குக் கதைகளின் மிகச் சிறந்த முன் மாதிரிகள் என்று சொல்லப்படும் பஷீரின் கதைகள் எந்த நவீனப் போக்குக்கும் சவால் விடும் கலையழகு கொண்டவை என்பதை நினைவில் வைத்துக் கொண்டே இதைக் குறிப்பிடுகிறேன். இதேபோன்று எந்தக் போக்கிலும் வசப்படாத இன்னொரு எழுத்தாளர் வி.கே.என்.

ஆதுனிகதா என்று அழைக்கப்பட்ட நவீனத்துவக் காலக் கதைகள் மலையாள இலக்கியத்தில் புதிய திசை மாற்றத்தை உருவாக்கியவை. நாலு கெட்டுத் தறவாடுகளிலிருந்தும் கிராமியப் புனிதங்களிருந்தும் விடுபட்டமலையாளியின் சமூக வாழ்க்கையைப் பல கோணங்களில் முன் வைத்தவை இந்தக் கதைகள். ஓ.வி.விஜயன், எம். முகுந்தன், காக்கநாடன், சேது, எம்.சுகுமாரன், பட்டத்துவிள சக்கரியா,புனத்தில் குஞ்ஞப்துல்லா, எம்.பி. நாராயணப் பிள்ளை, வி.பி.சிவகுமார், டி.ஆர். ஆனந்த்,என்.எஸ்.மாதவன் என்ற முதன்மையான போக்கும் அதற்கிணையாக யூ.பி.ஜெயராஜ், விக்டர் லீனஸ், டி.பி.கிஷோர் என்று தொடர்ந்த சமாந்தரப் போக்கும் நவீனத்துவக் காலம்தான் மலையாளச் சிறுகதையில் உச்ச பட்ச சாதனைகள் நிகழ்ந்த கட்டம் என்று சொல்லலாம். இடதுசாரிச் சிந்தனைகளை மையமாகக் கொண்டு எழுதிய எம்.சுகுமாரன், யூ.பி ஜெயராஜ் ஆகியவர்களை வேறுபடுத்திப் பார்க்கலாம். இந்தத் தொகுப்புக்கான கதைகளை வரிசைப்படுத்திக் கொண்டிருக்கும்போது நவீனத்துவத்தின் நடைமுறைக் காலம் பற்றிய ஒரு தகவல் கவனத்தில் துலங்கியது. அறுபதுகளின் மைய ஆண்டுகளில் தொடங்கி எண்பதுகளின் முற்பாதிவரை நீண்டிருந்த நவீனத்துவ காலத்தில் ஒரு பெண் கூட முதன்மையான போக்கில் சேர்க்கப்படவில்லை. பெண்நிலை அணுகுமுறையுடன் மானஸி சில கதைகளை எழுதினார். சாரா ஜோசப்பும் கிரேசியும் சந்திரமதியும் பெண்மையவாதம் சார்ந்த பார்வையுடன் கதைகளை எழுதினார்கள். அவை நவீனத்துவத்தின் பெரும் வீச்சில் கவனிக்கப் படாமற் போயின.

நவீனத்துவத்துக்குப் பிந்தைய காலப் பகுதியை மலையாளச் சிறுகதையின் தேக்க காலம் என்று சொல்லலாம். ஒரு புதியதலைமுறை சிறுகதை எழுத்தில் கவனம் செலுத்தியது. சதீஷ்பாபு பையன்னூர், எம்.ராஜீவ்குமார், அசோகன் சருவில், பாபு குழிமற்றம், பி.சுரேந்திரன், என். பிரபாகரன், கே.பி.ராமனுண்ணி, டி.வி.கொச்சுபாவா, வி.ஆர் சுதீஷ் என்று குறிப்பிடத் தகுந்த பெயர்கள் தென்பட்டாலும், சராசரிக்கு மேம்பட்ட கதைகளையே இவர்கள் எழுதியிருந்தாலும் அவை மறுமலர்ச்சிக் கால எழுத்துக்களைப் போலவோ, நவீனத்துவக் கால ஆக்கங்கள் போலவோ அழுத்தமான பாதிப்புகளை ஏனோ உருவாக்கவில்லை.

தொண்ணூறுகளுக்குப் பின்வந்த தலைமுறையின் பங்களிப்புத்தான் மலையாளச் சிறுகதையை மீண்டும் கவனத்துக்குரிய வடிவமாக நிறுவியது. சுபாஷ் சந்திரன், தாமஸ் ஜோசப், சந்தோஷ் எச்சிக்கானம், பி.முரளி, உண்ணி ஆர், பிரியா ஏ.எஸ்.சி.எஸ். சந்திரிகா, கே,ரேகா, ஈ.சந்தோஷ்குமார், எஸ்.சிதாரா, கே.ஆர்.மீரா, இந்து மேனோன் என்று அறிமுகமான தலைமுறை சிறுகதைக்குப் புதிய களங்களையும் புதிய நுட்பங்களையும் அளித்திருக்கிறது. தலித் வாழ்க்கையைச் சொல்லும் கதைகளை சி.அய்யப்பன் எழுதி இன்னொரு கிளைவழியை அமைத்தார். இந்த வரிசையில் இன்னும் சில பெயர்களையும் குறிப்பிட முடியும். .

தொகுப்புக்குள் நுழையும் வாசகனுக்கு உதவக் கூடும் என்று எண்ணத்தில் இந்தக் குறிப்புகள் முன்வைக்கப் படுகின்றன. இவை விமர்சனக் குறிப்புகள் அல்ல. கால் நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாக மலையாளச் சிறுகதை இலக்கியத்தை வாசிப்பில் பின் தொடரும் வாசகனின் குறிப்புகள். இது முற்றான பட்டியலும் அல்ல.

@

இனி இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் பற்றி.

கடந்த இருபதுக்கும் அதிகமான ஆண்டுகளில் வெவ்வேறு தருணங்களில் மலையாளத்திலிருந்து தமிழாக்கம் செய்த 12 கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. முன்னர் குறிப்பிட்ட வெவ்வேறு தலைமுறைகளைச் சார்ந்த படைப்பாளிகளின் படைப்புகள் இவை. வாசித்தபோது என்னைக் கவர்ந்தவை. அதனாலேயே மொழிபெயர்ப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவை. ஏதேனும் போக்கையோ காலத்தையோ பிரதிபலிப்பவையாகவோ அல்லது எழுதப்பட்ட மொழியின் மிகச் சிறந்த கதைகளாகவோ இவை அமையும் வாய்ப்பு இல்லை. அவ்வப்போது வெளியான கதைகள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன என்பது மட்டுமெ இந்தத் தொகுப்பின் முறையியல். நான் படித்துச் சிறிதாவது சலனமடைந்தவை சக வாசகனையும் ஈர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இதிலுள்ள ஒவ்வொரு கதையும் அதை உருவாக்கிய படைப்பாளியின் எழுத்தாளுமையைச் சிறிதாவது வெளிக்காட்டும் என்ற நம்பிக்கையுமே இந்தத் தொகுப்பின் முறையியலாகக் கருதப்படலாம்.

இந்தக் கதைகள் முன்னரே அச்சிதழ்களிலும் இணையப் பத்திரிகைகளிலும் வெளியானவை. இவ்விரு ஊடகங்களின் தேவையையொட்டி வெளியானவை. எனினும் கதைத் தேர்வு என் விருப்பம் சார்ந்தே அமைந்தது. ஏற்கனவே செய்து வைத்திருந்த தமிழாக்கங்கள்தாம் பொருத்தமான தருணத்தில் ஊடகங்களில் வெளி வந்தன.வைக்கம் முகம்மது பஷீரின் கதை அவரது நூற்றாண்டையொட்டி 'காலச்சுவடு' இதழில் வெளியானது. டி.பத்மநாபனின் கதை 'இந்தியா டூடே' இலக்கிய மலரில் வெளியானது. எழுத்து முறையால் வாசிப்பில் இடம் பிடித்த கதை 'தூது'. கதையைப் புரிந்து கொள்வதற்காகத் தமிழாக்கம் செய்து வைத்துக் கொண்டேன். நண்பர் ராஜமார்த்தாண்டன் அதை ' தினமணி கதிர்' இதழில் வெளியிட்டார். சிவசங்கரியின் இலக்கியம் மூலம் இந்தியாவை இணைக்கும் திட்டத்தின் கீழ் கதிரில் வெளியான சேதுவின் நேர்காணலுக்கு உபரி மதிப்பாக அதே பத்திரிகையின் அடுத்த இதழில் கதையின் மொழிபெயர்ப்பும் வெளிவந்தது. அவருடைய 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - (முதல் தொகுப்பு: தென்னிந்திய மொழிகள்' நூலிலும் இடம் பெற்றுள்ளது. மாதவிக் குட்டி. சக்கரியா, பி.முரளி, உண்ணி ஆர். ஆகியவர்களின் கதைகள் 'உயிர்மை'யில் வெளிவந்தவை. கீதா ஹிரண்யன், கே.ஆர்.மீரா, சி.எஸ்.சந்திரிகா, தாமஸ் ஜோசப், இந்து மேனோன் கதைகள் 'தோழி' இணைய இதழில் பதிவேற்றம் செய்யப்பட்டன. திவாகர் ரங்கநாதனின் தூண்டுதல்தான் அதற்கு மூலகாரணம். மொழிபெயர்ப்புக்கு பத்துக் கதாசிரியர்களும் மனமுவந்து அனுமதியளித்தார்கள். அமரர்களாகிவிட்ட பஷீரிடமும் கீதாவிடமும் அனுமதி பெற முடியவில்லை. அவர்கள் சார்பாக குடும்பத்தினர் இசைவு தெரிவித்தார்கள். இந்தப் பன்னிரண்டு கதைகளையும் வாசித்துக் கருத்துகளையும் திருத்தங்களையும் சொன்னவர் கே.என்.செந்தில். உதிரியாக கிடந்த இந்தக் கதைகளைத் திரட்டித் தொகுக்கும் யோசனையைத் தெரிவித்ததுடன் அதை நூலாகவும் வெளியிடுகிறார் மனுஷ்யபுத்திரன். இவர்கள் அனைவரின் ஆதரவுக்கும் மனதை ஒற்றைச் சொல்லில் மொழிபெயர்த்து முன்வைக்கிறேன் -' நன்றி'.

புத்தக விழாக் குறிப்புகள்


முப்பதைந்து ஆண்டுகளாக நடை பெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சுமார் இருபது முறையாவது சென்று வந்திருப்பேன். ஒரு வாசகனாகவும் இலக்கியவாதியாகவும். சிலமுறை கவிதை வாசித்திருக்கிறேன். ஆனால் இந்த ஆண்டுதான் ஒரு நட்சத்திரமாகி யிருக்கிறேன். நட்சத்திரமாக்கியவர் நண்பர் மனுஷ்யபுத்திரன். உயிர்மையின் இந்த ஆண்டு நட்சத்திரங்கள் என்று அவர் வைத்திருந்த பானரில் முதல் நட்சத்திரம். அடுத்த ஆண்டும் நட்சத்திர அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என்ற கவலை இப்போதே உலுக்கத் தொடங்கி விட்டது.

உண்மையில் எந்த ஆண்டையும் விட இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியை முன்னிருத்தி வேகமாகச் செயல்பட்டிருக்கிறேன். என்னுடைய நான்கு புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. 'நீருக்குக் கதவுகள் இல்லை' என்ற தலைப்பில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. 'வாழிய நிலனே' என்று உயிர்மை, உயிரோசை, வார்த்தை இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மலையாளத்திலிருந்து அவ்வப்போது மொழியாக்கம் செய்த கதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த 12 சிறுகதைகளின் தொகுப்பு. இவை மூன்றும் உயிர்மை வெளியீடுகள். ஏறத்தாழ அதே கால அளவில் ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கம் செய்தவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த 13 கதைகளின் தொகுப்பு 'லயோலா என்ற பெரும் பாம்பின் கதை' காலச்சுவடு பதிப்பகம் வாயிலாக வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டு கதைத் தொகுதிகளுக்கும் எழுதிய முன்னுரைகள் என் அளவில் மிக முக்கியமானவை; கதைகளைப் பற்றியல்ல கதைகளுக்கு வந்து சேர்ந்த வழியின் நினைவுகளையும் காலங்களையும் பற்றிப் பேசக் கிடைத்த வாய்ப்பு
என்பதால்.

இவை சொந்தக் கதையின் பக்கங்கள். இவற்றுக்கிணையான சிரத்தையுடனும் மரியாதையுடனும் ஈடுபட்ட பிற செயல்பாடுகள்தாம் என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்தவை.

காலச்சுவடு நவீன தமிழ் கிளாஸிக் வரிசையில் வெளியாகி இருக்கும் தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' நாவலுக்கு முன்னுரை எழுதக் கிடைத்த வாய்ப்பு மனதுக்குள் கொண்டாட்டத்தைத் தந்தது. என் தனிப்பட்ட ரசனையில்தமிழின் மிகப் பெரும் எழுத்துக் கலைஞர்களில் ஒருவராக ஜானகிராமனை மதிக்கிறேன்.கலைத்தன்மை கூடா தஅவருடைய எழுத்துக்களிலும் கூட ஓர் உயிர்ப்பை, இன்றும் பழசாகாத மலர்ச்சியைக் காண முடியும். எனில் அவரது ஆகச் சிறந்த படைப்பான 'அம்மா வந்தா'ளில் நான் எவ்வளவு குதூகலத்தை அடைந்திருப்பேன் என்பதற்குச் சான்று இந்த முன்னுரை.

லாவண்யா சுந்தரராஜனின் ' இரவைப் பருகும் பறவை' (காலச்சுவடு பதிப்பகம்), சக்தி ஜோதியின் ' காற்றில் மிதக்கும்
நீலம்'
( உயிரெழுத்து பதிப்பகம்), திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமியின் ' காற்றால் நடந்தேன்' ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளுக்கும் த சண்டே இந்தியன் இதழின் ஆசிரியர், நண்பர் அசோகனின் 'போதியின் நிழல்' என்ற நூலுக்கும் முன்னுரை எழுதியிருக்கிறேன்.எல்லாம் விரும்பிச் செய்தவை. முன்னுரை எழுதுவதில் சில வசதிகள் இருக்கின்றன. ஒரு நூலை முதல் வாசகனாக வாசிக்கும் வாய்ப்பு. அப்படி ஒரு வாய்ப்பு இல்லை என்றால் அந்த நூலை பின்னர் என்றாவது வாசிக்க வேண்டிய தேவையும் எழாமற் போகலாம்.

நூல் வெளியீட்டு விழாக்கள் நான்கில் பேசியிருக்கிறேன். உயிர்மை சார்பில் கலாப்ரியாவின் புதிய கவிதைத் தொகுப்பு ' நான் நீ மீன்' நூல் வெளியீட்டில், காலச்சுவடு கொண்டுவந்திருக்கும் ஏழு கவிதை நூல்கள் வெளியீட்டில்
சிறப்புரையாகவும் மண்குதிரையின் தொகுப்பு ' புதிய அறையின் சித்திரம்' பற்றியும். ஈழத்து எழுத்தாளர் நௌஸாத்தின்
'வெள்ளி விரல்' சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டும்.

ஞாநியும் பாரதி புத்தகாலயம் நாகராஜனும் ஒருங்கிணைத்த வாசகர் எழுத்தாளர் சந்திப்பில் பேசியதுதான் உண்மையில் நட்சத்திர மதிப்பைக் கூட்டியது. 'முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறேன். கவிதைகள் தவிர கட்டுரைகளும் மொழிபெயர்ப்புகளும். இருந்தும் நான் பிரபலமானவனல்ல; மிகப் பிரபலமான வார இதழிலும் தொலைக் காட்சியிலும் பணி புரிந்திருக்கிறேன். அவை மூலம் என்னை முன்னிருத்திக் கொள்ள விரும்பியதில்லை. எழுத்தை முன் வைத்து மட்டுமே அறியப்பட விரும்பியிருக்கிறேன். இந்தப் புத்தகக் கண் காட்சியை ஒட்டி வெளியான நான்கு புத்தகங்களையும் சேர்த்து 25 நூல்கள் வெளியாகி யிருக்கின்றன. இதில் எதையாவது நீங்கள் படித்திருக்கலாம் என்ற அவ்வளவு வலுவில்லாத நம்பிக்கையுடன் பேசுகிறேன்' என்றுதான் பேச்சையே தொடங்கினேன். ஒரு மணி நேரப் பேச்சுக்குப் பிறகு வெளியே வந்தபோது ஓர் இளைஞர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். 'நான் சரவணன்.உங்கள் எழுத்துகளைப் படித்திருக்கிறேன் என்று சொல்வதற்காகவே வந்தேன்' என்றவர் எனக்கே நினைவில் இராத என்னுடைய கவிதை ஒன்றை உணர்ச்சிபூர்வமாகச் சொன்னார்.

'வாழையடி வாழையாக வரும் எவனோ ஒரு வாசகனுக்காகவே எழுதுகிறேன்' என்றார் புதுமைப்பித்தன்.உண்மைதான்போல.சரவணன் என்ற வாழையின் அடிவாழையாக இன்னொரு வாசகன் இருக்கக்கூடும். நட்சத்திரமாக இருப்பதல்ல; வானத்தில் இருப்பதே முக்கியம். இதற்கு மேலே என்ன வேண்டும்?