வியாழன், 15 மே, 2025

 


போர் முடிந்து…

@

சச்சிதானந்தன் ( மலையாளம் )

@

தமிழில் : சுகுமாரன்

 @

போர் முடிந்து

பிணங்களின் கணக்கெடுப்புத்

தொடங்கியபோது

கௌரவரும் பாண்டவரும்

ஒருமித்துத்  தலையில் கைவைத்தனர்

 

 

எதற்காகப் போர்?

பாண்டவர் கேட்டனர்

எப்படியிருந்தது மரணம்

கௌரவர் கேட்டனர்

 

யாரிந்தக் கொடுமையைச் செய்தது

பாண்டவர் விசாரித்தனர்

யாரிந்தக் கொடுமையைச் செய்வித்தது

கௌரவர் விசாரித்தனர்

 

நான் ஒரே குடும்பத்தினரல்லவா

பாண்டவர் வியந்தனர்

நாம் நல்ல அயலாரல்லவா

கௌரவர் வியந்தனர்

 

நம் ஆறுகள் ஒன்றே

பாண்டவர் சொல்லினர்

நமது மொழி ஒன்றே

கௌரவர் சொல்லினர்

 

எங்கள் வீடு அக்கரையிலிருந்தது

பாண்டவர் நினைவு கூர்ந்தனர்

எங்கள் வீடும் அக்கரையிலிருந்தது

கௌரவர் நினைவுகூர்ந்தனர்

 

ஒரே ஆகாயம் ஒரே தண்ணீர் ஒரே உணவு

பாண்டவர் பாடினர்

ஒரே விருட்சம் ஒரே ரத்தம் ஒரே துக்கம்

கௌரவர் உடன் பாடினர்

 

பிறகு

துப்பாக்கிளைத் துடைத்துத் துப்புரவாக்கினர்

மீண்டும்

ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்ளத் தொடங்கினர்.