சனி, 5 ஜூலை, 2025

 




                                                               பஷீரின் கடிதம்

 


மலையாளத்தின் சிந்தனையாளரும் பேச்சாளரும் திறனாய்வாளரும் கல்வியாளரும் நித்திய பிரம்மச்சாரியுமான  சுகுமார் அழிக்கோடுக்கு வைக்கம் முகம்மது பஷீர் 1991 இல் எழுதிய கடிதம் இது. கவிஞர் சச்சிதானந்தன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். நன்றி – சச்சி மாஷ்.

 


@

மதிப்புக்குரிய தத்வமஸி

 

தாங்கள் அனுப்பிய குறிப்பைப் படித்துப் புரிந்து கொள்ள எங்களாலும் அண்டை வீட்டாராலும் முடியவில்லை. எனவே வழக்கம்போல மருந்துக் கடையில் கொடுத்தோம். அவர்கள் அதைப் படித்துப் பார்த்து 12 குளிகைகளைத் தந்தார்கள். இரண்டை எடுத்து வலது வாயில் போட முயன்றபோது அசரீரி ஒலித்தது. அந்த மாத்திரைகள் இரண்டும் பேதிக்கானவை. 10 மாத்திரைகள் மூச்சுத் திணறலுக்கானவை. நன்றி.

 

என்னுடைய திவ்விய திருஷ்டியை விய்யூர் நோக்கித் திருப்பினேன். தங்கள் இதயத்தை நன்றாகப் பார்த்தேன். இதயத்திலிருந்து 29 அன்று தாங்கள் என் வீட்டுக்கு சாப்பாட்டுக்கு வருவீர்கள் என்று புரிந்தது. நல்ல உணவைத் தயார் செய்கிறோம். அன்றைய தினம் எம்டியையும் என்பியையும் தங்களுடன் அழைத்து வருக . மலையாளம் எழுதவும் வாசிக்கவும் தெரிந்த்வர்கள் அந்தப் பகுதியில் இருந்தால் எம்டிக்கும் என்பிக்கும் கார்டு போடவும்.

 

தங்களுக்கு மலையாளம் கற்றுத் தருவதற்காக ஒரு பெண்ணைத் தங்கள் வசிப்பிடத்துக்கு அனுப்புகிறேன். பேரழகி. தாங்கள் அவளை மணம்முடிப்பதாக இருந்தால் எனக்கு மாதந்தோறும் 250 ரூ அனுப்பித் தரவேண்டும். தங்களுக்கு அவள் மூலமாகப் பிறக்கும் ஆண் பிள்ளைகளை என்னிடம் ஒப்படைத்து விட வேண்டும். ஒரு தற்கொலைப் படையை அமைப்பதற்காக.

 

இந்தக் கடிதத்தை யாரையாவது வைத்து வாசித்து ஞானி ஆவீர்களாக.

 

மங்களம்

கோழிக்கோடு

14 1 1991

@

தத்வமஸி – சுகுமார் அழிக்கோடு எழுதிய நூல். விய்யூர் -சுகுமார் அழிக்கோடு வசித்த இடம். 

எம்டி – எம்.டி. வாசுதேவன் நாயர். என்பி – என்.பி. முகம்மது – எழுத்தாளர்.

 

கடிதத்தை எழுதியவரும் கடிதத்தைப் பெற்றவரும் அதில் குறிப்பிடப் பட்ட ஆளுமைகளும் இன்று இல்லை. ஆனால் பஷீரின் இலக்கியப் பிரசித்தி பெற்ற குறும்புகள் ( குசும்புகள் ) இன்றும் வாழ்கின்றன.


இன்று ( ஜூலை 5 ) வைக்கம் முகம்மது பஷீரின் நினைவு நாள்.