வியாழன், 12 ஜனவரி, 2012

புத்தக விழாக் குறிப்புகள்


முப்பதைந்து ஆண்டுகளாக நடை பெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சுமார் இருபது முறையாவது சென்று வந்திருப்பேன். ஒரு வாசகனாகவும் இலக்கியவாதியாகவும். சிலமுறை கவிதை வாசித்திருக்கிறேன். ஆனால் இந்த ஆண்டுதான் ஒரு நட்சத்திரமாகி யிருக்கிறேன். நட்சத்திரமாக்கியவர் நண்பர் மனுஷ்யபுத்திரன். உயிர்மையின் இந்த ஆண்டு நட்சத்திரங்கள் என்று அவர் வைத்திருந்த பானரில் முதல் நட்சத்திரம். அடுத்த ஆண்டும் நட்சத்திர அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என்ற கவலை இப்போதே உலுக்கத் தொடங்கி விட்டது.

உண்மையில் எந்த ஆண்டையும் விட இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியை முன்னிருத்தி வேகமாகச் செயல்பட்டிருக்கிறேன். என்னுடைய நான்கு புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. 'நீருக்குக் கதவுகள் இல்லை' என்ற தலைப்பில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. 'வாழிய நிலனே' என்று உயிர்மை, உயிரோசை, வார்த்தை இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மலையாளத்திலிருந்து அவ்வப்போது மொழியாக்கம் செய்த கதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த 12 சிறுகதைகளின் தொகுப்பு. இவை மூன்றும் உயிர்மை வெளியீடுகள். ஏறத்தாழ அதே கால அளவில் ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கம் செய்தவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த 13 கதைகளின் தொகுப்பு 'லயோலா என்ற பெரும் பாம்பின் கதை' காலச்சுவடு பதிப்பகம் வாயிலாக வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டு கதைத் தொகுதிகளுக்கும் எழுதிய முன்னுரைகள் என் அளவில் மிக முக்கியமானவை; கதைகளைப் பற்றியல்ல கதைகளுக்கு வந்து சேர்ந்த வழியின் நினைவுகளையும் காலங்களையும் பற்றிப் பேசக் கிடைத்த வாய்ப்பு
என்பதால்.

இவை சொந்தக் கதையின் பக்கங்கள். இவற்றுக்கிணையான சிரத்தையுடனும் மரியாதையுடனும் ஈடுபட்ட பிற செயல்பாடுகள்தாம் என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்தவை.

காலச்சுவடு நவீன தமிழ் கிளாஸிக் வரிசையில் வெளியாகி இருக்கும் தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' நாவலுக்கு முன்னுரை எழுதக் கிடைத்த வாய்ப்பு மனதுக்குள் கொண்டாட்டத்தைத் தந்தது. என் தனிப்பட்ட ரசனையில்தமிழின் மிகப் பெரும் எழுத்துக் கலைஞர்களில் ஒருவராக ஜானகிராமனை மதிக்கிறேன்.கலைத்தன்மை கூடா தஅவருடைய எழுத்துக்களிலும் கூட ஓர் உயிர்ப்பை, இன்றும் பழசாகாத மலர்ச்சியைக் காண முடியும். எனில் அவரது ஆகச் சிறந்த படைப்பான 'அம்மா வந்தா'ளில் நான் எவ்வளவு குதூகலத்தை அடைந்திருப்பேன் என்பதற்குச் சான்று இந்த முன்னுரை.

லாவண்யா சுந்தரராஜனின் ' இரவைப் பருகும் பறவை' (காலச்சுவடு பதிப்பகம்), சக்தி ஜோதியின் ' காற்றில் மிதக்கும்
நீலம்'
( உயிரெழுத்து பதிப்பகம்), திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமியின் ' காற்றால் நடந்தேன்' ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளுக்கும் த சண்டே இந்தியன் இதழின் ஆசிரியர், நண்பர் அசோகனின் 'போதியின் நிழல்' என்ற நூலுக்கும் முன்னுரை எழுதியிருக்கிறேன்.எல்லாம் விரும்பிச் செய்தவை. முன்னுரை எழுதுவதில் சில வசதிகள் இருக்கின்றன. ஒரு நூலை முதல் வாசகனாக வாசிக்கும் வாய்ப்பு. அப்படி ஒரு வாய்ப்பு இல்லை என்றால் அந்த நூலை பின்னர் என்றாவது வாசிக்க வேண்டிய தேவையும் எழாமற் போகலாம்.

நூல் வெளியீட்டு விழாக்கள் நான்கில் பேசியிருக்கிறேன். உயிர்மை சார்பில் கலாப்ரியாவின் புதிய கவிதைத் தொகுப்பு ' நான் நீ மீன்' நூல் வெளியீட்டில், காலச்சுவடு கொண்டுவந்திருக்கும் ஏழு கவிதை நூல்கள் வெளியீட்டில்
சிறப்புரையாகவும் மண்குதிரையின் தொகுப்பு ' புதிய அறையின் சித்திரம்' பற்றியும். ஈழத்து எழுத்தாளர் நௌஸாத்தின்
'வெள்ளி விரல்' சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டும்.

ஞாநியும் பாரதி புத்தகாலயம் நாகராஜனும் ஒருங்கிணைத்த வாசகர் எழுத்தாளர் சந்திப்பில் பேசியதுதான் உண்மையில் நட்சத்திர மதிப்பைக் கூட்டியது. 'முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறேன். கவிதைகள் தவிர கட்டுரைகளும் மொழிபெயர்ப்புகளும். இருந்தும் நான் பிரபலமானவனல்ல; மிகப் பிரபலமான வார இதழிலும் தொலைக் காட்சியிலும் பணி புரிந்திருக்கிறேன். அவை மூலம் என்னை முன்னிருத்திக் கொள்ள விரும்பியதில்லை. எழுத்தை முன் வைத்து மட்டுமே அறியப்பட விரும்பியிருக்கிறேன். இந்தப் புத்தகக் கண் காட்சியை ஒட்டி வெளியான நான்கு புத்தகங்களையும் சேர்த்து 25 நூல்கள் வெளியாகி யிருக்கின்றன. இதில் எதையாவது நீங்கள் படித்திருக்கலாம் என்ற அவ்வளவு வலுவில்லாத நம்பிக்கையுடன் பேசுகிறேன்' என்றுதான் பேச்சையே தொடங்கினேன். ஒரு மணி நேரப் பேச்சுக்குப் பிறகு வெளியே வந்தபோது ஓர் இளைஞர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். 'நான் சரவணன்.உங்கள் எழுத்துகளைப் படித்திருக்கிறேன் என்று சொல்வதற்காகவே வந்தேன்' என்றவர் எனக்கே நினைவில் இராத என்னுடைய கவிதை ஒன்றை உணர்ச்சிபூர்வமாகச் சொன்னார்.

'வாழையடி வாழையாக வரும் எவனோ ஒரு வாசகனுக்காகவே எழுதுகிறேன்' என்றார் புதுமைப்பித்தன்.உண்மைதான்போல.சரவணன் என்ற வாழையின் அடிவாழையாக இன்னொரு வாசகன் இருக்கக்கூடும். நட்சத்திரமாக இருப்பதல்ல; வானத்தில் இருப்பதே முக்கியம். இதற்கு மேலே என்ன வேண்டும்?

புதன், 21 டிசம்பர், 2011

திங்கள், 19 டிசம்பர், 2011

பசியின் வாசனை








திருவனந்தபுரம் சென்ட்ரலிலிருந்து
சென்னை சென்ட்ரல்வரை செல்லும்
12624 சென்னை மெயில்
பத்தொன்பது மணி பதினைந்து நிமிடத்துக்கு
எர்ணாகுளம் டவுன் சந்திப்பைக் கடந்ததும்
கூட்டம் நிரம்பிய பொதுப் பெட்டிக்குள்
வாசனைகளின் மாநாடு ஆரம்பமானது.

விறைப்போ குழைவோ இல்லாமல்
பதமாகக் கிளறப்பட்ட புளியோதரை
சம்புடத்தைத் திறக்கச் சொல்லி
மூடி வழியாகக் கசிந்து கொண்டிருந்தது.

சிட்டிகைப் பெருங்காயம் கூடிப்போன
கத்தரிக்காய் சாம்பார்
பிளாஸ்டிக் கலத்துக்குள்ளிருந்து
வழியத் தயாராகிக் கொண்டிருந்தது

ஒட்டி நின்ற இன்னொரு கலத்துக்குள்
மூழ்கி மிதந்து கொண்டிருந்த கொத்துமல்லி
இனியும் உடம்பில் ரசமில்லை என்று
ஒப்புதல் வாக்குமூலம் அளித்துக் கொண்டிருந்தது.

தருணம் இது; விட்டால்
மறுதரப்புக்கு மாறிவிடுவேன் என்று
தியாகத்தால் வாடிய இலையின் ஆதரவுடன்
தயிர் சாதம்
புளித்த அறிக்கையைத் தயாரித்துக் கொண்டிருந்தது.

அட்டைப் பெட்டிக்குள்ளிருந்து
சப்பாத்திகளில் புரண்டெழுந்த லவங்கக் கும்மாளம்
மின்விசிறியை ஒருமுறை வட்டமிட்டு
பல்லேபல்லே என்று இருக்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது

இணையைப் பிரிந்த கோழிக்கால்
வெள்ளி மினுக்கும் அலுமினிய உறையை
உதைத்துக் கிழித்து வெளியே நீட்டிக் கொண்டிருந்தது

குடம்புளியும் உப்பும் சொன்ன
அந்தரங்க நகைச்சுவைக்குக் கெக்கலித்த சாளைமீன்
நகைச்சுவையின் அர்த்தத்தை யோசித்துப்
பிளாஸ்டிக் உறைக்குள் குழம்பிக் கொண்டிருந்தது

கொஞ்சம் கூட அடக்கமில்லை என்று
செய்தித்தாள் பொதிக்குள்ளிருந்த அயிரைக் கருவாடு
உரத்த குரலில் அதட்டிக் கொண்டிருந்தது

இருக்கைகளில் இருந்தபடியும்
எழுந்தபடியும் நடந்தபடியும்
வாசனைகள்
ஒன்றோடு ஒன்று கைகுலுக்கிக் கொண்டன
வாசனைகளின் சகவாசனைகளும்
எல்லா வாசனைகளையும் அணைத்துக் கொண்டன

வாசனைகளின் சந்தடிக்கிடையில்
பார்வையற்ற பாடலொன்று
எந்த வாசனை மேலும்
மோதி விடாமல் தள்ளாடியபடியே
'கண்ணு திறக்காத தெய்வங்களே,
களிமண் பொம்மைகளே' என்று
தாவணி ஏந்திப் போய்க் கொண்டிருந்தது


சென்னை மெயிலை அங்கமாலி ரயில் நிலையம்
பத்தொன்பது மணி நாற்பத்தேழு நிமிடங்களுக்கு
வரவேற்று நிறுத்தியது
எல்லா வாசனைகளும் இருக்கையில் அமர்ந்தன

வாசலைத் துளாவி நடந்த
பார்வையற்ற பாடல்
'இன்றும் ஒன்றுமில்லை' என்ற
சொற்களை மென்று விழுங்கி
ஏப்பத்தை ரயில் பெட்டிக்குள் விட்டுவிட்டு
இறங்கிப் போனது

பத்தொன்பது மணி நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு
அங்கமாலியை ரயில் கடந்ததும்
உள்ளே திரும்பிய பார்வையற்ற ஏப்பம்
ஒவ்வொரு வாசனையையும் முகர்ந்து கொண்டிருந்தது
ஏக்கத்துடன்.

ஞாயிறு, 13 நவம்பர், 2011

கபீர் நெய்துகொண்டிருக்கிறார்






மனம் - தறி
வாக்கு - இழை
பூமிக்கான ஆடையை
நெய்துகொண்டிருக்கிறார் கபீர்

நெய்யும் துணியின் மறுமுனை
எங்கே முடிகிறது?
நதிபோல் கடலிலா?
வானம்போல் வெளியிலா?

சொல்கிறார் கபீர்:
'உருவமற்ற நாடா
ஊடோடிப் பின்னிய துணி
கரையோ நுனியோ இல்லாதது'.

நெசவின் தரமென்ன?
கனத்த கம்பளியா?
இழைத்த பருத்தியா?
மெல்லிய பட்டா?

சொல்கிறார் கபீர்:
'நீரினும் மெல்லியது
புகையினும் நுண்ணியது
காற்றினும் எளியது'

நெய்த துணிக்குச் சாயமெது?
வெயிலின் காவி?
பிறையின் பசுமை?
நட்சத்திர வெள்ளி ?

சொல்கிறார் கபீர்:
'நிறம் நிறத்திலிருந்தே பிறக்கிறது
எனவே
எல்லாம் ஒரேநிறம்
உயிரின் நிறமென்ன சகோதரா!
நீதான் கண்டுபிடியேன்'

தறி இறக்கி நிறந்தோய்த்த துணியை
எப்படிப்போய் விற்க?
எவர்வந்து வாங்க?

சொல்கிறார் கபீர்:
'வாங்குபவர் மொய்க்கும்
சந்தையில் நானில்லை
என் இடம்தேடி
வாடிக்கை வருவதில்லை'

உடுப்பவர் இல்லாமலா உடை?
எவர் அணிவார் பூமியின் வஸ்திரம்?

சொல்கிறார் கபீர்:
'தோல் ஒன்று எலும்பும் ஒன்று
சிறுநீர் மலம் எல்லாம் ஒன்று
ஒரே ரத்தம்
ஒரே மாமிசம்
ஒரே துளியில் உருவானது பிரபஞ்சம்
பிராமணனென்ன? சூத்திரனென்ன?
உடுப்பவன் யாரானால் உடைக்கு என்ன?'

எவர் நிர்வாணம் காக்குமிந்தச் சொல்?
ஆண் அல்லது பெண்?

சொல்கிறார் கபீர்:
அதுதானே மனிதா, பெருங்குழப்பம்
வேதம் எது?
குர் ஆன் எது?
எது புனிதம்?
எது நரகம்?
ஆண் எது? பெண் எது?
காற்றோடு விந்துமுயங்கி
இறுகிச் சுட்ட மண்பாண்டம்
விழுந்துடைந்த பின்பு
என்ன என்பாய்?

மனம் - தறி
உண்மை - இழை
பூமிக்கான வாக்கை
நெய்துகொண்டிருக்கிறார் கபீர்.




வாசிப்பு






காத்திருக்க வேறிடமின்றி
நூலகத்தை நீங்கள் தேர்ந்தது
இயல்பானது -

காலத்தைக் கடந்து
வெளியை மீறி
மொழியைத் துறந்து கேட்கும்
குரலுக்காகவோ
அல்லது
காகிதமணத்தின் போதைக்காகவோ
அல்லது
அலுத்துச் சுழலும் மின்விசிறியின்
சங்கீத மீட்டலுக்காகவோ
அல்லது
நூலகத்தில் கவிந்திருக்கும்
நிர்ப்பந்த அமைதிக்காகவோ
நீங்கள் நூலகத்தைத் தேர்ந்திருக்கலாம்.

காலியிருக்கைகள் பல கிடக்க
முந்திய விநாடியில்
ஆளெழுந்துபோன
நாற்காலையைத் தேர்ந்ததும்
இயல்பானது -

காற்றோட்டமான இடமென்பதாலோ
அல்லது
முன்னவர் மிச்சமாக்கிய
மனிதச் சூட்டை உணர்வதற்காகவோ
அல்லது
பின்னல் அவிழ்ந்த ஆசனத்தை
யோசனையுடன் முடைவதற்காகவோ
அல்லது
கற்பனைக்கு உகந்த தோற்றத்தில் உட்கார்ந்து
மனதுக்குள் ரசிப்பதற்காகவோ
நீங்கள் நாற்காலியைத் தேர்ந்திருக்கலாம்.

நூலகத்தில் நீங்கள் அமர்ந்திருக்கும் மேஜைமேல்
முன்பு இருந்தவர்
பாதி வாசித்துக் குப்புறக் கிடத்திய
புத்தகத்தை எடுத்ததும்
அவர் விட்டுப்போன பக்கத்தில்
வாசிப்பைத் தொடங்கியதும்
இயல்பானது.

எனது சந்தேகம்
அவர் எங்கே நிறுத்தினார் என்பதை
நீங்கள் அறிவீர்களா?
இரண்டு பக்கங்களில்
இரண்டு பக்கங்களிலுமுள்ள பத்திகளில்
இரண்டு பக்கப் பத்திகளின் வாக்கியங்களில்
எங்கே அவரது நிறுத்தம்?
அங்கிருந்து நீங்கள் தொடங்குவீர்களா?
அல்லது
நீங்களும் மேஜைமேல்
குப்புறக்கிடத்திப் போனால்
அடுத்தவர் எங்கிருந்து தொடங்குவார்?

ஒரு புத்தகம்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு புத்தகமாவது
எவ்வளவு இயல்பானது.

புதன், 2 நவம்பர், 2011

புத்தகங்களின் கூட்டறிக்கை






பொதுவாக நாங்கள் நிர்க்குணமானவர்கள்
எங்களைப் புரட்டும்போது
முனகலைவிடவும்
சுவாசத்தைப்போலவும் எழும்
மெல்லிய ஓசையிலிருந்து
நீங்கள் அதைத் தெரிந்து கொண்டிருக்கலாம்.


நீங்கள் அறியாத ஏதோ வனத்தின்
பூர்வ ஜென்ம பந்தம்
இன்றும் எங்களுக்குள் தொடர்கிறது
நாங்கள் புரண்டுகொடுக்கும்போது
ஒரு கானகமும் அசைவதைக் கவனித்திருக்கலாம்


நீங்கள் தொட்டுத் துடிப்பறியாத நாளங்களில்
மண்ணின் குருதி
இன்றும் எங்களுக்குள் பாய்கிறது
மை வரிகளுக்கிடையில் விரலோட்டும்போது
அதன் ஓட்டம் அதிர்வதை உணர்ந்திருக்கலாம்


உங்களில் யாரோ ஒருவரின்
கண்டு தீராக் கனவு
இன்றும் எங்களுக்குள் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது
திரைக் காட்சியைப்போல
முதுகுக்குப் பின்னாலிருந்தல்ல
தொலைக்காட்சியைப்போல
தலைக்கு முன்னாலிருந்தே
அது எல்லார் கண்களுக்குள்ளும் நுழைவதைப் பார்த்திருக்கலாம்

பொதுவாக நாங்கள் சாத்வீகமானவர்கள்
எங்களில்
உன்னதர்களும் நடுவர்களும் கடையர்களும்
நிர்வாணிகளும் வேடதாரிகளும்
வழிகாட்டிகளும் திசைதிருப்பிகளும் இருப்பது உண்மை
எனினும்
நாங்கள் விதிகளை மதிப்பவர்கள்
எங்களைப்போல வரிசையைக் கடைப்பிடிப்பவர்களை
நீங்கள் ஒருபோதும் காணமுடியாது

நாங்கள் சமாதானப் பிரியர்கள்
எங்களுடைய
ஒரு பக்கம் கிழியும்போது
மறுபக்கம் தானாகவே பிய்த்துக் கொள்கிறது
அழிந்தும் அழியாமல் இருக்கிறோம் என்பது உண்மை
ஏனெனில்
நாங்கள் பக்கங்களில் மட்டும் இருப்பவர்களல்ல

நாங்கள்
குணமற்றவர்கள்
இன்முறையானவர்கள்
அமைதி விரும்பிகள்

எனினும் நீங்கள்
எப்போதும் எங்களை நினைத்து மிரளுகிறீர்கள்
வரிசையாக நிற்கும் நாங்கள்
விதிகளை மீறி
ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்படுவோம் என்றும்
அதன் உயரம்
உங்களை விட உயர்ந்திருக்குமென்றும்
அஞ்சுகிறீர்கள்
பிய்த்துக் கிழித்தாலும்
எங்கள் பக்கங்களுக்கிடையிலிருந்து
அழியாக் கனவுகளின் சாபம்
உங்களைப் பின் தொடரும் என்று
பயப்படுகிறீர்கள்

உங்கள் வெருட்சிக்குக் காரணம்
நாங்களல்ல
பயத்தின் களிமண் கால்களில் நிற்கும்
உங்கள் அதிகார உடல்

நாங்கள் அப்பாவிகள்
தன்னியக்கமில்லாத வெறும் ஜடங்கள் -
மனதில் ஜுவாலையுள்ள ஒருவர்
எங்களைத் தொடும்வரை.