சனி, 13 ஜூலை, 2013

நல்வரவு, மார்க்கேஸ்





அனைவருக்கும் வணக்கம். இந்த அரங்கில் இருக்கும் கூட்டத்தை தமிழ் வாசகர்களின் பிரதிநிதிகளாக எடுத்துக் கொண்டே பேச விரும்புகிறேன். முதலில் இரண்டு விஷயங்களுக்காக மன்னிப்புத் தெரிவித்து விட்டுப் பேச்சைத் தொடரலாம் என்று நினைக்கிறேன்.

காப்ரியேல் கார்சியா மார்க்கேசின் நாவல் 'தனிமையின் நூறு ஆண்டுகள்' நாவலின் தமிழாக்கம் ஏப்ரல் மாதம் இறுதியில் வெளியாகும் என்று காலச் சுவடு பதிப்பகம் அறிவித்திருந்தது. கிட்டத்தட்ட முந்நூறுக்கும் மேற்பட்ட வாசகர்கள் முன்பதிவு செய்திருந்தார்கள்.  ஆனால் கொஞ்சம் தாமதமாக  ஜூன் இறுதியில் இன்றுதான் வெளியிடப்படுகிறது. தவிர்க்க முடியாத காரணங்கள் நூலைத் தயாரித்து முடிப்பதில் தாமதத்தை ஏற்படுத்தின.  அதில் முக்கியமான காரணம் நான். மொழிபெயர்ப்பை முடிக்கக் கொடுக்கப்பட்ட அவகாசத்தை விட மிக மிக அதிகமாகவே எடுத்துக் கொண்டேன். அதுவே தொடர்ச்சியாகக் கால தாமதத்தை ஏற்படுத்தியது. அதற்காக எல்லா வாசகர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருகிறேன். 

ஒரு மொழிபெயர்ப்பு  நாவலுக்காக இத்தனை வாசகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இந்த வாசக வரவேற்பு இந்த நாவலுக்கு ஆரம்பத்திலிருந்தே கிடைத்து வந்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு புத்தகம் வெளியாக இருந்தது. அது குளிர்காலம். இருந்தும் மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் நடுங்க வைக்கிற குளிரில் புத்தகக் கடை முன்னால் நீண்ட வரிசையில் நின்றிருந்தார்கள். கடைக்கு வந்த சில மணிநேரங்களில் புத்தகம் விற்றுத்தீர்ந்தது. வரிசையிலிருந்த பலரும் புத்தகம் கிடைக்காத ஏமாற்றத்துடன் திரும்பிப் போனர்கள். அந்தப் புத்தகம் ஒரு நாவல். சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய கிறிஸ்துமஸ் கரோல்’.
இருபதாம் நூற்றாண்டிலும் அதே போல ஒரு புத்தகத்துக்காக மக்கள் காத்து நின்றார்கள் என்பது காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் ஒன் ஹன்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சாலிட்டியூடுக்காகத்தான். டிக்கன்சின் நாவலை வாங்க லண்டன்வாசிகள் மட்டுமே காத்திருந்தார்கள். மார்க்கேஸின் நாவலுக்காக ஸ்பானிய மொழி பேசுகிற எல்லா நகரங்களிலும் வாசகர்கள் காத்திருந்தார்கள் என்பது மட்டுமே வித்தியாசம்.

1967இல் வெளிவந்த நாவல் மூல மொழியான ஸ்பானிஷில் மூன்று கோடிப் பிரதிகள் விற்பனை ஆனது. இன்றுவரையும் அதிகம் விற்பனை யாகும் நாவல்களின் பட்டியலிலும்  இருந்து கொண்டே இருக்கிறது. 1970 ஆங்கில மொழி பெயர்ப்பு வெளிவந்தது. 1982இல் இலக்கியத்துக்கான நோபெல் பரிசு மார்க்கேஸுக்கு வழங்கப்பட்டது.  தொடர்ந்து உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இன்றைய கணக்குப் படி இந்த நாவல் 37 மொழிகளில் வெளிவந்திருக்கிறது. தமிழ் 38 ஆவது மொழி. நாவல் அதிகாரபூர்வமாக மொழியாக்கம் பெற்றிருக்கும் மூன்றாவது மொழி. மலையாளம், இந்தி இப்போது தமிழ். பதிப்புரிமை பெறாமல் பல மொழிகளில் பெயர்க்கப் பட்டிருப்பதன் கணக்குத் தெரியவில்லை. எனவே தமிழிலும் இந்த நாவல் வாசகர்களின் எதிர்பார்ப்பைப் பெற்றிருக்கிறது என்பது ஆச்சரியமாகவும் அதே சமயம் இயல்பானதாகவும் தோன்றுகிறது. இந்த எதிர்பார்ப்பை நான் கவனத்தில் கொள்ளவில்லை என்பதும் தாமதத்துக்குக் காரணம் என்று இப்போது தோன்றுகிறது. அதற்காகவும் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இனி நான் பேசப் போவதில் கொஞ்சம் சுய தம்பட்டம் ஒலிக்கலாம். அதற்காக முன்கூட்டியே உங்களிடம் மன்ன்னிப்புக் கோருகிறேன்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் நண்பர் காலச்சுவடு கண்ணன் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலின் மொழிபெயர்ப்பு உரிமையை வாங்கியிருந்தார். மொழிபெயர்ப்பதற்குப் பொருத்தமான நபரைத் தேடிக் கொண்டுமிருந்தார். அந்தச் சமயத்தில் பெரியவர் ஞாலன் சுப்ரமணியன் எனக்கு அறிமுகமானர். அந்த அறிமுகமே சுவாரசியமானது. பாப்லோ நெரூதாவின் கவிதைகளை மொழிபெயர்த்து ஒரு தொகுப்பை வெளியிட்டிருந்தேன். உயிர்மை வெளியீடு. புத்தகம் வெளியாகி சில மாதங்கள் கழிந்த பிறகு ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. பேசியவர் ஞாலன் சுப்ரமணியன்.கவிதை மொழி பெயர்ப்பு சிறப்பானதாக இருக்கிறது என்று பாராட்டினார். நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்றார். நான் இருப்பது திருவனந்தபுரத்தில். அவர் சென்னையில். எனவே சென்னை வரும்போது சந்திக்கலாம் என்று தெரிவித்தேன். இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து ஒரு மாலை நேரம் மீண்டும் தொலைபேசியில் அழைத்தார். பார்க்க வேண்டும்என்று சொன்னார்.

‘’நான் சென்னையில் இல்லையே சார் எப்படிப் பார்க்க?’’ என்று மரமண்டைத்தனமாகப் பதிலையும் சொன்னேன்.

‘’இல்ல தோழர் நான் இங்கே திருவனந்தபுரத்துலதான், ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல ஒரு லாட்ஜுல இருக்கேன். எங்கே வந்தா உங்களைப் பார்க்கலாம்’’என்று கேட்டார்.

’’இல்லை நானே வருகிறேன்’’ என்று அவர் குறிப்பிட்ட லாட்ஜுக்குப் போனேன்.

திருவனந்தபுரத்தில் ஏதாவது வேலையா வந்தீங்களா சார்?’’ என்று கேட்டேன்.

உங்களைப் பார்க்கிறது மட்டும்தான் ஒரே வேலை. அதுக்காகத்தான் வந்தேன்’’ என்றார்.

அவருக்கு ஒரு எழுபது எண்பது வயதாவது இருக்கும். ஆனால் என்னை விட உற்சாகவானாகவும் பரபரப்பானவராகவும் இருந்தார். யாரோ ஒருவன் அவனுடைய தனிப்பட்ட ஆர்வத்தின் பேரில் செய்த மொழிபெயர்ப்பை வாசித்து விட்டு அவனைப் பார்க்கக் கைக்காசை செலவு செய்து ஆயிரம் கிலோமீட்டர் தாண்டிவந்திருக்கிறாரேகிறுக்கு முற்றிய கிழவராக இருப்பார் என்றுதான் முதலில் பட்டது. அவரைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டபோது அது கிறுக்கல்ல; பேரார்வம் என்பது புரிந்தது. அவர் தோழர் ஜீவாவால் இடது சாரி இயக்கத்துக்குள் அழைத்து வரப்பட்டவர். முதலில் ரஷ்யாவிலும் பின்னர் லத்தீன் அமெரிக்க நாடுகள் ஏதோ ஒன்றிலும் இருந்தவர். ஸ்பானிய மொழியில் எழுதவும் வாசிக்கவும் தெரிந்தவர். அந்த மொழியின் நவீன இலக்கியங்களுடன் ஓரளவு அறிமுகம் உள்ளவர். எல்லாவற்றுக்கும் மேலாகச் சென்னையில் பாப்லோ நெரூதாவின் பெயரால் ஸ்பானிய மொழி கற்பிக்கும் பள்ளி ஒன்றையும் நடத்திக் கொண்டிருப்பவர். இந்தப் பின்னணியில் தான் மார்க்கேஸின் நாவலை அவரால் மொழிபெயர்க்க முடியும் என்று நினைத்தேன். அவரை நண்பர் கண்ணனுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

 நாவல் மொழிபெயர்ப்புத் தொடங்கியது. நாவலின் முதல் அத்தியாயம் காலச் சுவடு இதழிலும் வெளியானது. சரியாக ஆறு அத்தியாயங்கள் மொழியாக்கம் செய்யப்பட்ட பின்பு அதை வாசித்துப் பார்க்கும் பணி எனக்குத் தரப்பட்டது. அதை செம்மைப்படுத்தி வெளியிட முடிவு செய்தோம். ஆனால் ஏதோ காரணங்களால் ஞாலன் சுப்ரமணியத்தால் ஆறு அத்தியாயங்களைத் தாண்ட முடியவில்லை. அதற்குள் காலக்கெடு நெருங்கிக் கொண்டிருந்தது. எனவே மாற்று ஏற்பாடாகப் புதிய மொழிபெயர்ப்பாளரைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வெவ்வேறு ஆட்களை அணுகினோம். தில்லியில் வாழும் ஸ்பானிய மொழி தெரிந்த தமிழ்ப் பெண் ஒருவரை அணுகிப் பார்த்தோம். அவருக்கு நவீனத் தமிழ் இலக்கியத்துடன் எந்தப் பரிச்சயமும் இல்லை. நவீன தமிழ் இலக்கியத் திலும் லத்தீன் அமெரிக்க இலக்கியத்திலும் பரிச்சயமுள்ள ஒருவரும் வாய்ப்பை ஏற்றுக் கொள்ளத் தயங்கினார். இதையெல்லாம் காதலிக்கு மாப்பிள்ளை பார்க்கிற மனநிலையில்தான் செய்து கொண்டிருந்தேன். அதைத் தெரிந்து கொண்டோ அல்லது தெரியாமலோ நண்பர் கண்ணன் பெருந்தன்மையாக நீங்களே பண்ணிடுங்கஎன்றார். அந்த வார்த்தை காதில் விழுந்த விநாடி நான் அடைந்த சிலிர்ப்பை விளக்கிச் சொல்வது கடினம். முப்பது வருடங்களாகச், சரியாகச் சொன்னால் 1982ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கண்ணன் சொல்லும்வரை மனதுக்குள் இருந்த கனவு அது.

வாசிப்பு தீவிரமாக மாறிய காலகட்டத்தில் தமிழில் கவனமாக வாசித்ததைப் போலவே ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் வாசித்துக் கொண்டிருந்தேன். அந்த நாட்களில் எனக்கு அறிமுகமான பெயர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். மலையாளத்தில் சிறந்த நாவல்களில் ஒன்றான  ஓ.வி. விஜயனின் கசாக்கின்டெ இதிகாசம்லத்தீன் அமெரிக்க நாவலான One Hundred Years of Solitude’இன் சாயலில் எழுதப்பட்டது என்ற புரளி இலக்கிய வட்டங்களில் நிலவியது. அது அன்றைய இலக்கிய வாதிகள் நடுவே  விவாதமாக இருந்தது. அதில் மார்க்கேஸ் நாவலின் பகுதிகள் மேற்கோள் காட்டப்பட்டிருந்தன. மாஜிக்கல் ரியலிசம் என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டிருந்தது. இவை எல்லாம் உருவாக்கிய வாசகக் குறுகுறுப்பு நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தேட வைத்தது. அன்று - 70களின் இறுதியில் அல்லது 80களின் ஆரம்பத்தில் ஆங்கிலப் புத்தகங்கள் கிடைப்பது அரிது. அதுவும் இதுபோன்ற நவீன நூல்கள் எங்கள் ஊரான கோயம்புத்தூரில் உடனடியாகக் கிடைப்பது சிரமம். அன்றைக்கு எனக்குத் தெரிந்த ஒரே பதிப்பாளரான க்ரியா ராமகிருஷ்ணன் மூலம் அந்தப் புத்தகத்தின் பெங்குவின் பதிப்பு கிடைத்தது. தன்னுடைய நண்பரான பத்மநாப ஐயர் லண்டலிருந்து வாங்கி அனுப்பியதாகக் கொடுத்தார். அது ஒரு டிசம்பர் மாதக் கடைசி நாட்கள் என்பதும் சென்னைப் புத்தகக் கண்காட்சி முடிவடைய இருந்த நேரம் என்பதும் ஞாபகமிருக்கிறது. ஊருக்குப் போய் வாசிக்க ஆரம்பித்தேன். முதல் நாலு பக்கங்களைப் படித்துப் புரிந்துகொள்ளவே நாற்பது முறை அகராதியைப் புரட்ட வேண்டியிருந்தது. அது ஒரு தொல்லை. ஆனால் கதையின் சுவாரசியம் அதைப் பொறுத்துக்கொள்ளச் செய்தது. இருந்த போதும் மூன்று அத்தியாயங்களுக்கு மேல் - அதுவே அறுபது பக்கங்களுக்கு மேல் வரும் - வாசிப்பைத் தொடர முடியவில்லை. அந்த ஆண்டு அக்டோபரில் மார்க்கேஸுக்கு நோபெல் இலக்கியப் பரிசு அளிக்கப்பட்டது. நோபெல் பரிசுகளின் வரலாற்றில் மிக அதிகம் இலக்கியப் பரபரப்பை ஏற்படுத்திய விருதுகளில் அதுவும் ஒன்று. 82க்கும் 84க்கும் இடையே கிட்டத்தட்ட மார்க்கேஸின் அதுவரையிலான படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் எல்லாம் பிக்கடோர் பதிப்புகளாகக் கிடைக்க ஆரம்பித்திருந்தன. நானும் அறுபத்தியோராவது பக்கத்திலிருந்து மீண்டும் தொடங்கி One Hundred Years of Solitude’ஐ வாசித்து முடித்தே விட்டேன். கிறிஸ்டோபர் கொலம்பஸுக்குப் பிறகு மனிதர்கள் நிரம்பிய புதிய உலகத்தைக் கண்டு பிடித்த அடுத்த ஆள் நான் தான் என்று கொஞ்சம் பெருமிதமாக உணர்ந்தேன். உண்மையில் நாவலின் பல பகுதிகள் அப்போது புரியவில்லை.

கடந்த முப்பதுக்கும் மேற்பட்ட வருடங்களில் பகுதிகளாகவும் முழுமையாக வும் நான்கைந்து முறையாவது இந்த நாவலை வாசித்திருப்பேன். அப்போதும் முழுமையாகப் புரிந்ததில்லை. உண்மையாகச் சொல்வதென்றால் வரிக்குவரி நாவலைப் புரிந்துகொண்டது அதை மொழிபெயர்க்கத் தொடங்கியபோதுதான். இது இரண்டுச் செய்திகளை எனக்கு உணர்த்தியது. ஒரு படைப்பை நெருக்க மாகப் புரிந்துகொள்வதற்குச் சிறந்தவழி அதை மொழிபெயர்ப்பதுதான் என்பதை அனுபவமாகத் தெரிந்துக்கொண்டேன். இன்னொன்று வெறும் வாசகனாக ஒரு படைப்பை அணுகுகிறபோது கிடைக்கும் சலுகை. ஒரு வாசகன் பல பக்கங்களைப் புரட்டி வாசித்தும் ஒரு நாவலைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் மொழிபெயர்ப்பாளனால், ஒரு வரியை ஒரு வார்த்தையைக் கூட விட்டுவிட முடியாது என்ற கட்டுப்பாட்டை அனுபவத்தில் உணர்ந்தேன்.

மார்க்கேஸின் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான கிரகோரி ரபாஸா, தன்னுடைய நினைவுக் குறிப்புகளில் -  'If This Be Treason: Translation and Its Dyscontents' என்ற குறிப்புகளில் சொல்லியிருப்பது நினைவுக்கு வருகிறது ஒரு மொழி பெயர்ப்பாளனும் எழுத்தாளன்தான். அவன் முன்னால் கதைக்கான களன், பாத்திரங்கள், சம்பவம் எல்லாம் அப்படியப்படியே இருக்கின்றன. அவன் செய்ய வேண்டியது அடக்க ஒடுக்கமாக உட்கார்ந்து அதை எழுதி முடிப்பதுதான்.இந்த மொழிபெயர்ப்பை அப்படித்தான் செய்திருப்பதாக நம்புகிறேன்.

நாவலைப் புரியாமல் வாசித்த காலத்திலேயே ஒரு சாகசத்தையும் செய்தி ருக்கிறேன். மார்க்கேஸுக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது. அதையொட்டி கோவை வானொலி நிலையத்தின் இலக்கிய நிகழ்ச்சியொன்றில்
 'தனிமையின் நூறு ஆண்டுகள்' நாவலைப் பற்றி ஓர் உரை கூட நிகழ்த்தினேன்.  சென்னை வானொலி நிலைய இயக்குநராக இருந்து மிக அண்மையில் பணி ஓய்வு பெற்ற நண்பர் ஜே. கமலநாதன் தான் அந்தச் சாகசத்துக்குத் தூண்டுதலாக இருந்தார். எண்பதுகளிலும் தொண்ணூறு களிலும் எழுத, வாசிக்க வந்த எல்லாரிடமும் மார்க்கேஸ் எழுத்துகள் மீதான பிரியமும் பாதிப்பும் இருந்தன என்று சொல்ல முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ்ப் புனைகதையை ஒவ்வொரு பிறமொழி எழுத்தாளர்கள் பாதித்திருக்கிறார்கள். புதுமைப்பித்தன் காலம் முதல் இன்றுவரை இந்தப் பாதிப்பின் சாயல்களைப் பார்க்கலாம். மாப்பசான், ஓஹென்றி, ஆன்டன் செகாவ், டால்ஸ்டாய், ஜேம்ஸ் ஜாய்ஸ், காஃப்கா என்று பலர். இந்த வரிசையில் பரவலாக வாசிக்கப்பட்ட, விவாதிக்கப்பட்ட, மொழி பெயர்க்கப்பட்ட எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்தான் என்று தோன்றுகிறது. மார்க்கேஸின் சாயலையொட்டி அவர் முன்வைத்த மாந்திரீக எதார்த்தவாதம்என்ற போக்கையொட்டித் தமிழில் நிறையவே  எழுதப் பட்டிருக்கின்றன. தமிழவனின் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’  முதல் பா. வெங்கடேசனின் தாண்டவராயன் கதைவரையிலான நாவல்கள், ஜெயமோகனின் டார்த்தீனியம்என்ற குறுநாவல், தமிழ்ச்செல்வனின் வாளின் தனிமை’, விமலாதித்த மாமல்லனின் சிறுமி கொண்டுவந்த மலர்’ ‘உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தைமுதல் கோணங்கி எழுதிவரும் கதைகள், நாவல்கள் வரை - இவை உடனடி உதாரணங்கள்-  மார்க்கேஸின் பாதிப்பு அல்லது மாஜிக்கல் ரியலிசத்தின் பாதிப்பு தென்படுகின்றன. இதன் பொருள் இவர்கள் எல்லாம் இடதுகையில் மார்க்கேஸின் புத்தகத்தைப் பிடித்துக் கொண்டு வலது கையால் தங்களது கதைகளை எழுதினார்கள் என்பது அல்ல. ஒட்டுமொத்தமாக உலக இலக்கியத்தைப் பாதித்த ஒரு போக்கின் விளைவை - அதிர்வை - வாசிப்பின் மூலமோ வாசித்தவர்கள் சொல்லக் கேட்டதன் மூலமோ பிரதிபலித்திருக்கிறார்கள் என்பதுதான். கொஞ்சம் விரிவாக யோசித்தால் மார்க்கேஸின் பாதிப்பு இல்லாமலிருந்தால் சல்மான் ரஷ்டியின் ‘Midnight’s Children’,  அருந்ததி ராயின் ‘God of small things’  போன்ற நாவல்களின் கதையாடலும் வடிவமும் வேறாக அமைந்திருக்கும் என்பது என் யூகம்.
மாஜிக்கல் ரியலிசம்என்பது மார்க்கேஸின் கண்டுபிடிப்பல்ல. லத்தீன் அமெரிக்கப் புனைகதையில் அவருக்கு முன்பே கையாளப்பட்டுவந்த போக்கு. அதைத் தனது அனுபவங்களால் மார்க்கேஸ் செழுமைப் படுத்தினார். அவரே ஒரு பேட்டியில் சொன்னார். என்னுடைய எழுத்தில் மாந்திரீக எதார்த்தம் என்று ஒன்றைப் பற்றிச் சொல்கிறார்கள். அப்படி ஒன்றை நான் உணர்ந்ததே இல்லை. கரீபியப் பகுதியில் வாழ்க்கையில் தட்டுப்படும் அன்றாட எதார்த்தங்கள் வெளியில் இருப்பவர்களுக்கு மாயத்தன்மை கொண்டதாகத் தெரிகிறது.மற்றவர்களின் மாய எழுத்தில் வாசகனை வசீகரிக்கும் மாயத் தன்மைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டபோது மார்க்கேஸ் தனது எழுத்துகளில் அந்த மாயத்தன்மையின் அடிப்படையான எதார்த்தத்தை மறைக்காமல் இருந்தார். இந்த நாவலின் ஒரு பாத்திரமான அழகி ரெமேதியோஸ் ஒரு பிற்பகல் நேரம் காயப்போட்டிருக்கும் படுக்கை விரிப்புகளுடன் அந்தரத்தில் எழும்பி உயிரோடும் உடலோடும் நேரடியாக சொர்க்கத்துக்குப் போகிறாள். அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் இன்னொரு பாத்திரமான பெர்னாண்டா கடவுளிடம் பிரார்த்திக்கிறாள். விலை உயர்ந்த அந்த விரிப்புகளைத் திரும்பக் கொடுக்க வேண்டும்என்றுதான். இந்தத் தெளிவுநிலை -  lucidity தான் மார்க்கேஸை முக்கியமானவராக்கியது. தமிழில் எழுதப்பட்ட மாஜிக் ரியலிச எழுத்துகளில் பெரும்பான்மை யானவற்றில் புரிந்துக்கொள்ளப்படாமல் விடப்பட்ட அம்சம் இதுதான்.
இந்த மாயக்கூறுதான் மேற்கத்திய வாசகர்களையும் நம்மைப் போன்ற கீழைத்தேய வாசகர்களையும் கவர்ந்தது. மார்க்கேஸை அபிமான எழுத்தாளர் ஆக்கியது. மேற்கத்திய வாசகர்களுக்கு புதிய கதையைச் சொன்னதால். கிழக்கத்திய வாசகர்களுக்கு அவர்களது வாழ்க்கையில் பார்க்கும் காட்சி களைப் புனைவில் வெளிப்படுத்திய நெருக்கத்தினால். நாவலிலிருந்து ஒரு காட்சியை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். மகோந்தா நகரத்தை உருவாக்கிய ஹோஸே அர்க்காதியோ புயேந்தியா, தனது ஆராய்ச்சிகளால் பைத்தியம் முற்றி வீட்டு முற்றத்தில் மரத்தடியில் கட்டப்பட்டுக் கிடக்கிறார். இந்த உலக நினைவே இல்லாத அவர் இருந்த இடத்திலேயே கழித்த மலத்தை மனைவி உர்சுலா மண்ணைப்போட்டு மூடி மண்வெட்டியால் அள்ளி வீசுகிறாள். இப்படியான காட்சியை நாம் வியந்து பாராட்டும் எந்த மேற்கத்திய நாவலிலும் பார்ப்பது அரிது. ஆனால் ஓர் இந்திய நாவலில் - அல்லது தமிழ்நாவலில் - இதை மிக எதார்த் தமானதாக அடையாளம் கண்டு கொள்ளமுடியும். மேற்கத்திய Sophisticationக்குப் பதிலாக இயல்பான வெகுளித்தனம் மிளிர்வதுதான் மார்க்கேஸ் நமக்கு நெருக்கமானவராகத் தெரியக் காரணம். அண்மைக் காலத்தில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட எழுத்துகளும் அவருடையதாக இருக்கக் காரணமும் இந்த நெருக்கம்தான். இத்தனை இணக்கமான ஓர் எழுத்து தமிழுக்கு அதிகாரபூர்வமாக இப்போது தான் வாய்த்திருக்கிறது என்பது விந்தையாகவே தோன்றுகிறது.

இந்த மொழிபெயர்ப்பு தொடர்பாக சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

எந்த மொழிபெயர்ப்பும் முழுமையானதல்ல; நூறு விழுக்காடு பொருத்த மானதும் அல்ல. இதை அண்மையில் அனுபவபூர்வமாக உணர்ந்தேன். மலையாளக் கவிஞரான வினயசந்திரனின் மறைவையொட்டி நான் ஒரு அஞ்சலிக் குறிப்பை - மாத்ருபூமி வாரஇதழில் எழுதியிருந்தேன், மலையாளத்தில். திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் செயலாளரான தோழர் வானமாமலை அதைத் தமிழாக்கம் செய்து சங்கத்தின் இதழான கேரளத் தமிழில்வெளியிட்டிருந்தார். அதே கட்டுரையை நானும் தமிழில் எழுதி காலச்சுவடு இதழிலும் வெளியிட்டேன். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்த போது வியப்பாக இருந்தது. இரண்டும் வெவ்வேறு தமிழ் வடிவங்களிலி ருந்தன. இரண்டிலும் குறிப்பிடப்படும் சம்பவங்களும் பெயர்களும் உரையாடல் களும் எல்லாமும் ஒன்றாகவே இருந்தபோதும் வேறுவேறாகவே தென்பட்டன. அது ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தியது. மொழிபெயர்ப்பில் மூலத்தைச் சார்ந்து வலுவான நம்பகத் தன்மையை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படை உண்மையை உணரவைத்தது. தனிமையின் நூறு ஆண்டுகளில் நான் பின்பற்றி யிருக்கும் முதலாவது விதி இந்த நம்பகத் தன்மையை உருவாக்கியது தான். அதை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளை மார்க்கேஸே அவரது இதர படைப்புகள் மூலம் வழங்கினார். இந்த நாவலுடன் தொடர்பு டையவையாகவே, இந்த நாவலுக்கு முன்னும் பின்னுமாக எழுதிய கதைகளில் அதைச் செய்திருந்தார். தனிமையின் நூறு ஆண்டுகளில்வரும் கர்னல் அவுரேலியானோ புயேந்தியா கர்னலுக்கு யாரும் கடிதம் எழுதுவ தில்லை, குறுநாவலில் வருகிறார். ரியோஹாச்சா என்ற இடத்திலிருந்து வாடிகனுக்குப் போப் ஆண்டவரைப் பார்க்கச் செல்லும் பயணம்விநோத புனிதயாத்திரிகர்கள் தொகுப்பின் சிறுகதை ஒன்றில் இடம் பெறுகிறது. இந்த அம்சங்கள் மொழிபெயர்ப்பில் நம்பகத்தன்மையை உருவாக்க உதவின.

ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் ஒவ்வொரு நடையைக் கோருகின்றன. மூலத்துக்கு வரிவரியாக ஒத்துப்போகும் நடை, ஆசிரியனுக்கு விசுவசமாக இருக்கும் நடை, என்று. இந்த நாவல் வலியுறுத்தியது கதையாடலை மட்டும் முன்னிருந்தும் நடையை அல்ல; அதற்குள் இருக்கும் துணைப் பிரதிகளையும் மேªலுழுவதற்கு உதவும் நடையை. எனவே வரிக்கு வரியாள மொழிபெயர்ப்பு நடையோ கதையாடலே முன் நகர்த்தும் நடையோ இதில் பயன்படுத்த வில்லை. கருத்தையும், உணர்வுகளையும் முதன்மைப்படுத்தும் நடையையே பயன்படுத்த நேர்ந்தது. மார்க்கேஸை மார்க்கேஸாக அடையாளப்படுத்தும் நடையை.

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸே மூன்று தனித்தனி நடைகளில் இந்த நாவலை எழுதியிருக்கிறார். ஒன்று டான்குவிக்ஸோட்எழுதிய செர்வான்டிஸின் செவ்வியல் நடை. தனிமையின் நூறு ஆண்டுகள்நாவலைப் பற்றிச் சொல்லப்பட்ட மிக உயர்வான மதிப்புரை பாப்லோ நெரூதா – செர்வான்டிஸூக்குப் பிறகு ஸ்பானிய மொழி தன் ஆற்றலை வெளிப்படுத்தியிருப்பது இந்த நாவலில்தான் - சொன்னதுதான். பைபிளின் சாயலுள்ள நடை, இரண்டாவது. நாவலில் இடம் பெறும் சமகாலத் தன்மையுள்ள நிகழ்வுகளில் பத்திரிகையாளனின் துல்லியமான நடை. இந்த மூன்றையும் தான் பிறந்து வளர்ந்த கொலம்பியக் கிராமமான அரக்காடாக்கா வட்டார வழக்குடன் இணைந்த தனது உணர்வுகளுடன் கலந்து உருவாக்கிய நடையில்தான் மார்க்கேஸ் எழுதியிருக்கிறார். ஓர் உதாரணத்தைச் சொல்லலாம். அமரந்தா உர்சுலா என்ற பாத்திரம் பிரஸ்ஸெல்லில் படிப்பு முடித்து கணவன் காஸ்ட்டனுடன் மகோந்தா திரும்புகிறாள். அவர் கொண்டுவந்திருக்கும் பொருட்களில் ஒன்றின் பெயர் Velocipede. வேறு எதுவும் இல்லை. சைக்கிள்தான். அரக்காடாகா வழக்குச் சொல் அது.

நாவலை நீங்களே வாசிக்கவிருப்பதால் அதன் கதைப் போக்கைப் பற்றியோ அதிலுள்ள வரலாற்றுப் பின்னணி இலக்கிய மேன்மைகள் பற்றியோ பேசத் தேவையில்லை என்று நினைக்கிறேன். கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலக மொழிகளில் எழுதப்பட்டவற்றில் மிகச் சிறந்த நாவல்என்று சல்மான் ரஷ்டி குறிப்பிட்டிருப்பது பொருத்தமான மதிப்பீடுதான்.
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸை விடவும் அவரது சமகாலத்தவரான ஜார்ஜ் லூயி போர்ஹேயின் எழுத்துகள் அறிவார்ந்த தர்க்கங்கள் நிரம்பியவை. மார்க்கேஸின் நாவல்களை விட கார்லோஸ் புயெந்திஸின் படைப்புகள் இன்னும் வசீகரமானவை. மார்க்கேஸின் கதையாடலை விட மரியா வர்கஸ் யோஸாவின் கதையாடலில் அரசியல் உள்ளோட்டங்கள் அதிகம். இவை அனைத்தையும் கடந்து எல்லா மொழிகளிலும் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் அந்தந்த மொழியின் எழுத்தாளராக சொந்தம் கொண்டாடப் படுவதன் காரணம்: அவர் எழுத்து இவை எல்லாவற்றையும் விட மானிடத் தன்மை மிகுந்தது more human என்பதுதான். மனிதச் சிக்கல்களை கலையின் வெகுளித்தனத்துடன் சொன்ன நாவல் தனிமையின் நூறு ஆண்டுகள்என்பதுதான் மார்க்கேஸை நிகரற்ற நிலைக்கு உயர்த்தியிருக்கிறது.

மொழிபெயர்ப்புகளைப் பற்றி பீட்டர் ஹெச் ஸ்டோனுடன் நடத்திய நேர்காணலில் மார்க்கேஸ் இப்படிக் குறிப்பிடுகிறார். நான் எனக்கு விருப்பமான புத்தகங்களை அந்நிய மொழியில் வாசிக்க விரும்பவில்லை. காரணம், நான் மிக நெருக்கமாக உணர்வது ஸ்பானிய மொழியில்தான்.காப்ரியேல் கார்சியா மார்க்கேஸை ஒரு தமிழ் வாசகன் தனக்கு நெருக்கமாக உணர்ந்துகொள்ள இந்த மொழிபெயர்ப்பு துணை செய்யுமானால் முப்பது ஆண்டுகள் கனவுகண்ட இலக்கியக் காதல் பலித்துவிட்டதாகக் கருதுவேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. 


காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்நாவலின் தமிழாக்கத்தின் வெளியீட்டு விழா சென்னையில் ‘டிஸ்கவரி புக்பேலசில்கடந்த ஜூன் 30 அன்று மாலை நடைபெற்றது. நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை இது. புகைப்படத்தில் நூலை வெளியிட்ட ஃப்ரண்ட்லைன் இதழின் ஆசிரியர் விஜயசங்கர், பெற்றுக் கொண்ட ஜி.குப்புசாமி ஆகியோருடன் நானும்.

புதன், 10 ஜூலை, 2013

ஆப்பிள் தருணங்கள்


(இத்தாலிய நடிகை மோனிகா பெலூசிக்கு)


"Of all the girls who asked me to remember them, 
the only one I remembered is the one who did not ask."


ப்பிள் ஒரு சொல்
எச்சரிக்கையை மீறி ஏவாள் கடித்த ஆப்பிளின்
இரண்டாவது கடி என்னுடையது
அன்று 'விடுதலை' என்ற வார்த்தை உருவானது

ஆப்பிள் ஒரு பொருள்
நாணில் பொருந்தி விறைத்திருந்த
அம்பின் இலக்கான ஆப்பிள்
நம்பிக்கையுடன் கொந்தளித்த
என் தலைமீதுதான் இருந்தது
அப்போது துணிவச்சம் என்ற பொருள் திரண்டது

ஆப்பிள் ஒரு தாவரம்
தனக்குள் உறங்கும் விதைகளில்
ஒரு தோட்டத்தைக் கனவு காணும் தருணத்தில்
காற்றின் குறும்புக் கைகளால் உலுக்கப்பட்டு
என் மடியில்தான் வீழ்ந்தது
அதிலிருந்து ஞானம் துளிர்த்துக் கிளைத்தது.

ஆப்பிள் ஒரு பொய்
நோயாளிக்குச் சிகிச்சையளிக்க வரும்
மருத்துவரின் கைப்பையில் வதங்கிக் கிடந்தது
அங்கிருந்தே சரீரம் தன்னை ஆராய்ந்தது

ஆப்பிள் ஓர் உண்மை
பூமியின் முதல் பழமே
பூமியைப்போலிருப்பதை நானே கண்டடைந்தேன்
அந்தக் கணம் முதல்தான்  உலகம் சுழலத் தொடங்கியது


மலினா ஸ்கார்தியா
நீதிமன்ற பெஞ்சில் அமரும்போது
நிர்வாணப் பழம்
மெல்ல மெல்ல மிதந்து இறங்குவதையும்  பார்த்தேன்
அந்த நொடியில் புரிந்தது
ஆப்பிள் ஒரு பெண்.



இத்தாலிய இயக்குநர் கியூசெப்பே டோர்னடோரேயின் ' மலீனா' படத்தில் இடம் பெறும் உரையாடல். மலீனாவாக நடித்திருப்பவர் நடிகை மோனிகா பெலூசி.



புதன், 26 ஜூன், 2013

வெள்ளி, 27 ஏப்ரல், 2012


ஏப்ரல் 28 - சர்வதேச தவளைகள் பாதுகாப்பு நாள்




தவளை மொழி


@


எனது புறநகர்க் குடியிருப்பு
வயல்களின் சமாதி என்று
நினைவுபடுத்தியவை தவளைகளே

மழைவாசனை
எப்படியோ தெரிந்து விடுகிறது தவளைகளுக்கு
முதல்துளி விழுந்ததும்
எங்கிருந்தோ வந்து விடுகின்றன

யாரும் அவற்றிடம் கேள்வி கேட்பதில்லை
எனினும்
ஓயாமல் பதில் சொல்லிக் கொண்டேயிருக்கின்றன
க்ராக்... க்ராக்...க்ராக்...க்ராக்

சாஸ்திரக் குரலில் சுலோகம் சொல்லி
மழையிரவுகளைத்
தள்ளி நகர்த்துபவை
தவளைகள் மட்டுமே

மழை மறைந்த பொழுதுகளில்
கட்டிடங்களில் ஆழ இருளில் மூச்சுத் திணறும்
விதைகளுக்காக
சுற்றுச்சூழல் பாதுகாப்பாளனின் பதற்றத்துடன் வாதடுகின்றன

மண்ணை விரும்பும் ஈரஜீவிகள்
தவளைகள் தவிர வேறில்லை

எப்போதும் தவளைகள்
பாடம் எனக்கு

முன்பு
ஆய்வுக்கூட மேஜையில்
மல்லாந்து மயங்கிய ஒரு தவளை
கற்றுக் கொடுத்தது
உயிரின் விஞ்ஞானத்தை
மரணத்தின் அமைதியை

இப்போது
வாசற்படி தாண்டிவந்த ஒரு தவளை
கற்றுக் கொடுக்கிறது -
பிழைப்பின் சூத்திரத்தை

'' நாங்கள்
நீர்ல் எதார்த்தவாதிகள்
நிலத்தில் சந்தர்ப்பவாதிகள்''


(1997)

திங்கள், 23 ஏப்ரல், 2012

வாசிப்பு





@

காத்திருக்க வேறிடமின்றி
நூலகத்தை நீங்கள் தேர்ந்தது
இயல்பானது -

காலத்தைக் கடந்து
வெளியை மீறி
மொழியைத் துறந்து கேட்கும்
குரலுக்காகவோ
அல்லது
காகிதமணத்தின் போதைக்காகவோ
அல்லது
அலுத்துச் சுழலும் மின்விசிறியின்
சங்கீத மீட்டலுக்காகவோ
அல்லது
நூலகத்தில் கவிந்திருக்கும்
நிர்ப்பந்த அமைதிக்காகவோ
நீங்கள் நூலகத்தைத் தேர்ந்திருக்கலாம்.

காலியிருக்கைகள் பல கிடக்க
முந்திய விநாடியில்
ஆளெழுந்துபோன
நாற்காலையைத் தேர்ந்ததும்
இயல்பானது -

காற்றோட்டமான இடமென்பதாலோ
அல்லது
முன்னவர் மிச்சமாக்கிய
மனிதச் சூட்டை உணர்வதற்காகவோ
அல்லது
பின்னல் அவிழ்ந்த ஆசனத்தை
யோசனையுடன் முடைவதற்காகவோ
அல்லது
கற்பனைக்கு உகந்த தோற்றத்தில் உட்கார்ந்து
மனதுக்குள் ரசிப்பதற்காகவோ
நீங்கள் நாற்காலியைத் தேர்ந்திருக்கலாம்.

நூலகத்தில் நீங்கள் அமர்ந்திருக்கும் மேஜைமேல்
முன்பு இருந்தவர்
பாதி வாசித்துக் குப்புறக் கிடத்திய
புத்தகத்தை எடுத்ததும்
அவர் விட்டுப்போன பக்கத்தில்
வாசிப்பைத் தொடங்கியதும்
இயல்பானது.

எனது சந்தேகம்
அவர் எங்கே நிறுத்தினார் என்பதை
நீங்கள் அறிவீர்களா?
இரண்டு பக்கங்களில்
இரண்டு பக்கங்களிலுமுள்ள பத்திகளில்
இரண்டு பக்கப் பத்திகளின் வாக்கியங்களில்
எங்கே அவரது நிறுத்தம்?
அங்கிருந்து நீங்கள் தொடங்குவீர்களா?
அல்லது
நீங்களும் மேஜைமேல்
குப்புறக்கிடத்திப் போனால்
அடுத்தவர் எங்கிருந்து தொடங்குவார்?

ஒரு புத்தகம்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு புத்தகமாவது
எவ்வளவு இயல்பானது.

@
12:22 PM 5/25/2006

திங்கள், 16 ஏப்ரல், 2012

வெ ல் லி ங் ட ன்




@

இரண்டு

@



ஹெத்தே மனையின் பரம்பரைப் பூசாரி மாதாகவுடர் சொல்லத் தொடங்கினார் ''இது நம்ம கதெ. நம்ம வம்சம் வளர்ந்த கதெ. தெய்வம் நம்ம ஜனங்களெக் காப்பாத்துன கதெ''

@

மைசூரு ராஜ்ஜியம் தலைமலையில் படகஹள்ளியில் அவர்கள் ஏழு பேர் இருந்தார்கள். அந்தக் காலத்தில் மைசூரு ராஜ்ஜியத்தை எருமை நாடு என்று அழைத்து வந்தார்கள். ஏழு பேருக்கும் ஒரே பெயர்தான் இருந்தது. ஹெத்தப்பா. ஏழு ஹெத்தப்பரும் ஒரே தாயின் கர்ப்ப இருட்டில் குடியிருந்து பூமியின் வெளிச்சத்துக்கு வந்தவர்கள்.கர்ப்பவாசனை அவர்களை ஒன்றாகவே வசிக்க வைத்தது. ஏழு பேரும் தாயின் ஒரே முலைச்சுரப்பில் பசியாறி வளர்ந்தார்கள்.
அவர்களின் உதடுபடாத இன்னொரு முலையைப் பருக தாய்க்கு ஒரு பெண்மாது பிறந்தாள். அவளுக்கு ஏலிங்கி என்று சந்தோஷப் பெயர் விளங்கியது. அவள் மீதும் அதே கர்ப்ப வாசனை வீசியதனால் மாளாத பாசம் வைத்திருந்தார்கள். ஏழு சகோதரர்களுக்கும் கலியாணமாகியிருந்தது. ஆறாவது சகோதரனை மட்டும் காலம் வஞ்சனை செய்திருந்தது. அவனுடைய மனைவி இறந்து போயிருந்தாள்.

ஏழு சகோதரர்களும் ஆறு மனைவிமார்களும் கிருபையுள்ளவர்களாக இருந்தார்கள். வனங்களை செம்மைப் படுத்தி வருடம் முழுவதற்கும் தின்பதற்கான ஆகார வகைகளுக்காக தானியங்களை விதைத்தார்கள். வித்துக்களுடன் அவர்களுடைய வியர்வையும் மண்ணில் விழுந்திருந்தது. அது மண்ணை இளகச் செய்தது.அதனால் பயிர்கள் செழித்து வளர்ந்தன. அவர்களுடைய வாத்சல்யத்தை பார்த்துப் பூரித்து மரங்களும் செடிகளும் காய்களாகவும் கனிகளாகவும் அன்பைக் கொடுத்தன. ஏழு பேரும் ஆறு மனைவியரும் பாடுபட்டு விளைத்த தானியத்தை அளப்பதற்கு பொதுவான ராசிக் கூடையைத்தான் வைத்திருந்தார்கள்.
ஏழு பேர் பிரசாதம் உண்ணுவதற்கும் ஒரே ஒரு சத்து வட்டிலைத்தான் வைத்திருந்தார்கள்.

ஏழு பேரின் சகோதரியை தெய்வம் தன்னுடைய மிக அதிகமான சந்தோஷ முகூர்த்தத்தில் ஜனிக்கச் செய்திருந்தது. அவளுடைய தேகத்தில் பச்சிலைத்தளிர்களின் மிருது இருந்தது. மண்ணிலிருந்து பெருகிய ஊற்றின் முதல் தேக்கத்தில் சிலுசிலுக்கும் ஜலத்தில் பௌர்ணமி ராத்திரியில் பிரதிபலிக்கும் சந்திர பிம்பம்போல அவளுடைய முகம் இருந்தது. அவளுடைய கூந்தல் மழைக்கால மேகம்போல கருமையாகவும் அடர்த்தியாகவும் இருந்தது. அவளுடைய நிழலும் பிரகாசம் கொண்டதாக இருந்தது. வம்சத்திலேயே அதிரூப சுந்தரி அவள்தானென்று எல்லாரும் சம்மதித்திருந்தார்கள். அதனாலேயே ஏழு சகோதரர்களும் அவளைப் பிரியத்துடன் பாதுகாத்து வளர்த்தார்கள். மையெழுதும் கோல் தவறுதலாகப் பட்டு அவளுடைய கண்கள் கலங்கினால் கூட ஏழு சகோதர்களும் தின்னாமலும் குடிக்காமலும் அவளைச் சுற்றி நின்று பதறுவார்கள். அந்த மாதியான சந்தர்ப்பங்களிலெல்லாம் சகோதரிக்கு வேடிக்கையாகச் சிரிக்கத் தோன்றும்.அண்ணன்மார்களின் பாசம்தான் அதற்குக் காரணமென்று அறிந்து வைத்திருந்தாள். அதனால் சிரித்ததில்லை. சிரிப்பும் மனுஷரை சங்கடப்படுத்த ஏதுவானது என்றும் அவள் அறிந்து வைத்திருந்தாள்.

ஒரு அந்திப் பொழுதில் துர் நிமித்தம் சம்பவிக்கும் வரையிலும் அவர்களுடைய எல்லா நாட்களும் சுப தினங்களாகவே போய்க்கொண்டிருந்தன. ஏழு பேரின் சகோதரி நியமம்போல அன்றைக்கு மாலை பசுக்களைக் கறக்கப் போகாமலிருந்திருந்தால் அந்த சுப தினங்கள் இருள் மூடாமல் இருந்திருக்கும்.அப்படி இருந்தால் அதன் பெயர் ஜீவிதமா? துயரங்களோ கஷ்டங்களோ இல்லாமற் போனால் ஜீவிதத்தை நடத்தி வைப்பது தெய்வம் என்றாகாதே?

தொழுவத்தில் கட்டிப் போட்டிருந்த பசுக்கள் அவள் முற்றத்திலிறங்கியதும் கத்தத் தொடங்கின. மடியின் கனம் அந்தக் கத்தலில் புரிந்தது. கன்றுகளும் பால்குடித் தவிப்பில் 'ம்மா ' என்று கத்தின. சகோதரி ஆதுரமான குரலில் 'பர்த்தினு பர்த்தினு' என்று சொல்லிகொண்டே தொழுவத்தை நெருங்கினாள். முதல் முளையில் கட்டியிருந்த பசு உடம்பை வளைத்து அவளைப் பார்த்தது. வாலை ஒருமுறை சுழற்றி வீசி தலையைக் குலுக்கி தயாராக இருப்பதைத் தெரிவித்தது. சகோதரி மண்கலத்தை இடுப்பில் இடுக்கியபடி மூக்கு விடைக்கத் துள்ளிக்கொண்டிருந்த கன்றுக்குட்டியை அவிழ்த்து விட்டாள்.அது 'ம்மா 'என்று தாவி தாய்ப்பசுவிடம் ஓடியது. அகிட்டில் முட்டி இழுத்து பால் குடிக்கத் தொடங்கியது. கன்று தாயின் மடிக்காம்புகளை உறிஞ்சுவதை கனிவுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் சகோதரி. வயிறு நிரம்பியதும் உடம்பைச் சிலிர்த்துக்கொண்டு நின்றது. சகோதரி குத்தவைத்து உட்கார்ந்து பால்கறக்க ஆயத்தமானாள். அந்த நேரம் பார்த்துக் கன்று முதுகை நெளித்து ஓடத் தொடங்கியது. பால் கறக்க உட்கார்ந்த சகோதரி கலத்தைக் கீழே வைத்துவிட்டு கன்றைப் பிடித்துக் கட்டக் கயிற்றைத் தேடி எழுந்தாள். அதன் கழுத்தில் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டிருப்பது ஞாபகம் வந்தது. கயிற்றை அவிழ்த்தெடுக்க மரத்தடியை நோக்கிப் போவதற்குள் கன்று கைக்கெட்டாத தூரத்தில் நின்று துள்ளிகொண்டிருந்தது. ''ஆட்டா மாடுதியா காரு ?'' என்று செல்லமாகக் கேட்டுக்கொண்டு கூந்தலை உலுக்கினாள். மழைமேகம்போல கருநிறமும் சுருட்டை இல்லாத நீளமும் பளபளப்புமாக இருந்த அவளுடைய
கூந்தல் காற்றில் பறந்தது. மயிரிழைகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து புரிகளாயின. புரிகள் ஒன்று சேர்ந்து கயிறாயின. அந்தக் கூந்தல் கயிறு கறுப்பு மின்னல்போல அந்தரத்தில் ஊர்ந்துபோய் கன்றின் கழுத்தில் சுற்றிக்கொண்டது. கன்று துள்ளலடங்கி நின்றது. சகோதரி தலையை அசைத்து கயிறை இழுத்தாள். அதில் இழுபட்டு கன்று அவளருகில் வந்தது. '' ஓடுதியா '' என்று கேட்டுக்கொண்டு அதன் கழுத்தை வருடிக் கொடுத்தாள்.மனைக்குள்ளிருந்து வாசலுக்கு வந்த மூத்த ஹெத்தப்பா இந்தக் காட்சியைப் பார்த்து அதிசயப்பட்டு நின்றார். ''அண்ணா, அந்தப் பசுவைக் கறந்து விடு. நான் இதைக் கட்டி ப்போடட்டும்'' என்றாள்
சகோதரி. சகோதரர் கலத்தை எடுத்து பசுவின் காலடியில் குந்தினார். சொற்ப நிமிஷங்களுக்கு முன்பு பார்த்த காட்சி அவரை வாயடைக்கப் பன்ணியிருந்தது.அதிசயமான அந்தக் காட்சி என்னவோ அபாயத்தையும் கொண்டுவரப் போகிறது என்று அவருக்குப் பட்டது.அவருடைய ஊகம் பொய்யானதல்ல.

இந்த அதிசய சம்பவத்தை தூரத்திலிருந்து இன்னொரு பிறவியும் பார்த்துக் கொண்டிருந்தது.

மாறுவேடத்தில் வனத்துக்குள்ளே குதியையில் சவாரி செய்துகொண்டிருந்த துருக்க ராஜாவின் கண்ணில் காட்சி விழுந்தது. அவர் வாயை பிளந்து இந்த அதிசயத்தைப் பார்த்தார். அவர் பார்க்கிறபோது கருங்கூந்தல் காற்றில் நெளிந்து கன்றின் கழுத்தில் விழுந்து கட்டிக் கொண்டிருந்தது. அந்தக் கூந்தல் புறப்பட்ட சிரசு மட்டுமே அவருடைய பார்வைக்குத் தெரிந்தது. திரும்பி நிற்கிற அந்த சிரசுக்குரியவள் எப்படி இருப்பாள் என்று யோசனை செய்தார். மழைத்தாரைபோல சுருளே இல்லாத கூந்தலின் உடைமைக்காரி ரூபவதியாகத்தான் இருக்கவேண்டுமென்று அவர் மனம் சொன்னது. அவளானால் தான் நிற்கும் திசைப் பக்கம் திரும்பாமலிருக்கிறாளே என்று உள்ளுக்குள் சிணுங்கிக்கொண்டிருந்தார். அவருடைய உதடுகள் 'ஸ்த்ரீயே , முகங்காட்டு' என்று பிரார்த்தனைபோல முணுமுணுத்துக் கொண்டிருந்தன. விநாடிகள் விரயமாகிக் கொண்டிருந்தன. அவள் திரும்பவில்லை. முதுகைக் காட்டியபடியே
கன்றுக்குட்டியை இழுத்துப் போவதையும் அதை மரத்தில் கட்டுவதையும் தவிப்புடன் பார்த்தார். அவருடைய தத்தளிப்பு அதிகமாகிக் கொண்டே வந்தபோது அவருடைய வலது பாதம் ஆத்திரத்துடன் குதிரையின் விலாவில் மோதியது. குதிரை உடல் சிலிர்த்து முன்னங்கால்களைத் தூக்கி 'பிஹிஹீ..ஹீ' என்று கனைத்ததும் அவள் திரும்பியதும் ஒரே விநாடியில் சம்பவித்தன. துருக்க ராஜாவின் கண்கள் தெறித்து விழுந்து விடுவதுபோல அகன்றன. அவரால் நம்பமுடியவில்லை. கானகக் கிராமத்துக்குள்ளே இப்படி ஒரு சவுந்தரியவதியா என்று திகைத்தார். அவளுடைய தேகத்திலிருந்து வீசிய ஜோதி அவருடைய
விழிகளை இருட்டாக்கியது. 'இறைவனே, இது என்ன அற்புதம். யாரும் காணாமல் பூத்திருக்கும் காட்டு ரோஜாவுக்குத் துல்லியமானதாக இருக்கிறதே இவள்
அழகு ' என்று பரிதவித்தார். அவருடைய நாடிகளில் ரத்தம் வேட்கையுடன் ஓடியது. மோக ஜுரம்கொண்டு தேகம் நடுங்கியது.

குதிரையை முடுக்கி அவள் இருக்கும் முற்றத்தில் போய் நிறுத்தினார். ஏழு பேரின் சகோதரி அன்னிய புருஷனைப் பார்த்து வெலவெலப்புடன் ''அண்ணா''என்று உரக்கக் கத்தினாள். பசுவைக் கறந்து கொண்டிருந்த மூத்தவர் திரும்பிப் பார்த்ததும் பயந்தார். பால் கலத்தை தரையில் வைத்து விட்டு உடம்பை வளைத்து முன்னால் வந்தார். துருக்கராஜா தங்கள் மனையின் முன்னால் நிற்பது ஏனென்று கலங்கிக் கொண்டிருந்தார். ''தாயி, நீனு ஒளகே ஹோகு '' என்று சகோதரியிடம் சொன்னார். அவள் ஒரு நொடி நின்று மலங்க விழித்தாள். குதிரை மேல் உட்கார்ந்திருக்கும் புருஷனைப் பார்த்தாள். அந்த உடையலங்காரமும்
தோரணையும் அவளுக்குச் சிரிப்பூட்டின. சிரிப்பை அடக்கிக்கொண்டு வீட்டுக்குள்ளே போகலானாள். அவளுடைய தேகம் ஒசிந்து நகருவதைப் பார்த்தும் துருக்க ராஜாவின் மனதுக்குள் அக்கினி மூண்டது. மூத்தவரைப் பார்த்து துருக்க பாஷையில் '' இது யார்? நீங்கள் யார்?'' என்று கேட்டார்.

அவர் பேசிய பாஷையின் அர்த்தம் புரியாமல் பயத்துடன் '' என்ன ஹெசரு ஹெத்தப்பா'' என்றார். துருக்கராஜாவுக்கும் மூத்தவர் சொன்னது புரியவில்லை.மறுபடியும் துருக்க பாஷையில் என்னமோ கேட்டார். அதற்குள் வீட்டுக்குள்ளே போன சகோதரி சொன்னதைக் கேட்டு மற்ற சகோதரர்களும் அங்கே வந்தார்கள். நடப்பது என்னவென்று விளங்காமல் அவர்களும் நின்று விழித்தார்கள். ராஜாவுக்கு இவர்களிடம் என்ன சொல்லிப் புரியவைப்பது என்ற தர்மசங்கடம் வந்தது.சகோதரர்களுக்கும் ராஜா சொல்வது என்னவென்று புரியாமல் தடுமாற்றமாக இருந்தது. அதே சமயம் ராஜாவின் அங்க ரட்சகன் இன்னொரு குதிரையில்
அங்கே வந்து சேர்ந்தான்.ராஜா அவனிடம் அவர்கள் பாஷையில் உத்தரவிட்டார். அவன் வாய்பொத்திக் கேட்டிருந்து விட்டு சகோதரர்களைப் பார்த்து ''இதி நிம்ம ஹட்டியா?'' என்றான்.சகோதரர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களுடைய பாஷையை பிறத்தியான் ஒருவன் பேசுவதைக் கேட்க சந்தோஷமாகவும் இருந்தது. மூத்தவர் ''ஹா, இது நம்ம ஹட்டி'' என்று பதில் சொன்னார். ''ஈ ஹெண்ணு எவரு?'' என்று கேட்டான். '' நம்ம தங்கெ'' என்றார் .

அங்கரட்சகன் மறுபடியும் வாயைப் பொத்திக்கொண்டு ராஜாவிடம் பேசினான். ராஜா உத்தரவுபோடும் தோரணையில் அவனிடம் சில விநாடிகள் பேசினார்.''ஹாங் ஹுசூர் ,ஹாங் ஹுசூர் '' என்று மட்டுமே அவன் சொல்லிக் கொண்டிருந்தான். கடைசியில் சகோதரர்கள் பக்கமாகத் திரும்பினான். அவன் சொன்னதைக் கேட்டதும் அவர்கள் நடுநடுங்கிப் போனார்கள். ஏழு பேரின் கண்களிலிருந்தும் நீர் வழிந்தது.ஏழுபேரும் ஒரே சமயத்தில் மண்டியிட்டு உட்கார்ந்து மன்றாடினார்கள். அவர்கள் கெஞ்சுவதைப் பொருட்படுத்தாமல் துருக்கராஜா அங்கரட்சகனிடம் முத்தாய்ப்பாக எதையோ சொல்லிவிட்டு குதிரையின்
விலாவில் உதைத்தார். ஹூங்காரம் எழுப்பிக்கொண்டு குதிரை வேகமாகப் பாய்ந்தது. அது கிளறி விட்ட புழுதிப்படலம் அந்திச் சூரியனின் கதிர்கள் பட்டு தரையில் மேகமாகப் புரண்டது. மரக்கிளைகளிலிருந்து சில கரியன் சிட்டாக்களும் காக்கைகளும் படபடத்துப் பறந்தன. அந்த சத்தத்தில் வெருண்ட பசுக்கள் கனைத்துக் கத்தின. குதிரை மேல் உட்கார்ந்த படியே '' சொன்னதை மறக்க வேண்டாம். மறந்தால் உயிர் பிழைக்க மாட்டீர்கள்'' என்று எச்சரிக்கை செய்தான். அவனுடைய குதிரையும் புழுதி மேகத்தை உண்டு பண்ணிக்கொண்டு ஓடியது.

துருக்க ராஜாவுக்கு ஏழுபேரின் சகோதரியைக் கண்டதும் இஷ்டமாகி விட்டது. அவளை விவாகம் செய்துகொள்ள விரும்புகிறார். அதுவும் உடனடியாகச் செய்து கொள்ள விரும்புகிறார். அதனால் நாளை பொழுது விடிந்ததும் சகோதரியை ஸ்நானம் செய்வித்து அலங்காரம் பண்ணி தயாராக வைக்கவேண்டும். ராஜாவின் சிப்பாய்கள் வந்து அவளை அரண்மனைக்கு அழைத்துச் செல்வார்கள். ராஜா அவளை ரோஜாப் பூவைப் போலப் பார்த்துக் கொள்ளுவார். தவிரவும் இவ்வளவு சுந்தராங்கியான பெண் ராஜாவைத் தவிர வேறு யாருக்குச் சொந்தமாக முடியும்? இது ராஜாவின் உத்தரவு. அதில் பிசகினால் உங்கள் வம்சமே
இல்லாமல் போய்விடும்.ஜாக்கிரதை.

இதுதான் அங்கரட்சகன் மூலமாகத் துருக்க ராஜா அவர்களிடம் தெரிவித்தது. கலக்கமடைந்த ஏழு சகோதரர்களும் ஆறு மனைவியரும் கூடியிருந்துஆலோசனை செய்தார்கள். ராஜாவின் இச்சை அநியாயமானதாக இருக்கிறதே?என்ன செய்வது? இந்த இக்கட்டிலிருந்து எப்படித் தப்புவது? என்று யோசித்தார்கள். லிங்கத்தை ஆராதனை செய்யும் நாம் எப்படி துருக்க ராஜாவுக்கு நமது பெண்ணைக் கொடுப்பது? அது தெய்வ நிந்தனையாகுமே? என்று புலம்பினார்கள்.

தின்னாமலும் குடிக்காமலும் இப்படி உட்கார்ந்து யோசிப்பதில் பிரயோஜமில்லை என்றார் மூத்தவர். ராஜாவின் தண்டனையிலிருந்து தப்ப ஒரே ஒரு மார்க்கம்தான் அவர்கள் முன்னால் இருந்தது.குலத்துக்கு அழிவு வராத படிக் காப்பாற்ற வேண்டுமென்றால் இதைத் தவிர வேறு உபாயம் அவர்களுக்குப் புலப்படவில்லை.முடிவாக அன்றைக்கு ராத்திரியே நடு இருளில் புறப்பட்டு சோலைக்குள் புகுந்து ராஜாவின் கன்ணுக்கோ சேனையின் கண்ணுக்கோ எட்டாத தூரம் போய் விட வேண்டும் என்று தீர்மானித்தார்கள். ஒரே கர்ப்பத்தின் கவிச்சையைப் பங்குபோட்டுக்கொண்டவர்கள் என்பதனால் அவர்களுக்கு மத்தியில் வேறே யோசனை இருக்கவில்லை.

வழக்கமாக நெருப்பு அணைந்து குளிரத் தொடங்குகிற அகாலத்தில் அவர்கள் வீட்டு அடுப்பு எரியத் தொடங்கியது. பெண்கள் மூன்று வேளைக்கு உண்பதற்கான கட்டுச் சாதத்தை சமைத்தார்கள். வன சஞ்சாரத்தில் அது தீர்ந்துபோனால் காய்கனிகளைத் தின்று ஜீவிக்கலாம் என்று மூத்தவர் சொன்னதை எல்லாரும் ஒத்துக்கொண்டார்கள்.அன்றைய இரவு நடு ஜாமத்திலேயே வீட்டை விட்டுப் புறப்பட்டார்கள். புறப்படுகையில் குல தெய்வமான லிங்கத்தையும் ராசிக் கூடையையும் விசேஷ நாளில் பிரசாதம் உன்ணும் சத்து வட்டிலையும் மறக்காமல் எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் வீட்டை விட்டிறங்கும்போது தொழுவத்தில் கட்டியிருந்த பசுக்களும் எருமைகளும் தீனமாகக் கதறின. அவற்றின் கன்றுகள் காதுகளை அசைக்க மறந்து ஏக்கத்துடன் பார்த்தன. சகோதரி ஓடிப்போய் அவை ஒவ்வொன்றின் கழுத்தையும் வருடிக் கொடுத்து விட்டு வந்தாள். அவளுடைய காலடிச் சத்தம் கேட்டு மரக் கூடுகளில் நித்திரை செய்து கொண்டிருந்த பட்சிகள் வெருண்டு விழித்து கீச்சிட்டன. அந்த வாசலில் தேங்கி நின்ற துக்கத்தைப் பார்க்கச் சகிக்காமல் நிலா மேகங்களுக்குப் பின்னால்
விலகியது.

அந்த துக்கத்தைத் தாள முடியாமலும் யாராவது அறிந்து விடுவார்கள் என்ற காப்ராவாலும் அவர்கள் காட்டு வழியில் ஒருவர் பின் ஒருவராக சத்தமின்றி நடந்தார்கள். சோலைகளுக்குள்ளாகவும் வனங்களைத் தாண்டியும் சுமார் நூறு மைல் நடந்த பிறகு எல்லாரும் களைப்படைந்து விட்டார்கள். செடிகளின் மறைவில் இளைப்பாற உட்கார்ந்தார்கள். கண்ணுக்கெட்டாத தூரம் வந்து விட்டோம் என்ற நம்பிக்கை வந்திருந்தது. ஒருவரோடு ஒருவர் முகம் பார்த்துப் பேச ஆரம்பித்தார்கள். அப்போதுதான் கவனப்பிசகாகச் செய்திருந்த புத்திகெட்ட காரியம் அவர்களுடைய ஞாபகத்துக்கு வந்தது. புறப்படுகிற அவசரத்தில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த பெண் குழந்தையை விட்டுவிட்டு வந்திருந்தது உறைத்தது. குழந்தையின் தாய் அலற அவளுடன் சேர்ந்து பெண்கள் எல்லாரும் துக்கித்து அழுது புலம்பினார்கள்.

ஆண்கள் கலந்து யோசித்தார்கள். திரும்பப்போய் எடுத்துவரப் பார்த்தாலும் விடியற்காலை ஆகிவிடும். யாராவது கண்டுவிட்டால் அதுவும் ஆபத்து.வேறு வழியில்லை. நாமெல்லாருமே இன்றைக்கோ நாளைக்கோ காட்டுக்குள் விழுந்து மடியப் போகிறோம். அந்தச் சிறுபெண்ணாவது பிழைக்கட்டும். பொழுது விடிந்தால் எப்படியும் வீடு காலியாக இருப்பதை யாராவது பார்ப்பார்கள்.பக்கத்தில் வந்து பார்த்து குழந்தையை எடுப்பார்கள். கொண்டுபோய்
வளர்ப்பார்கள். இனி அந்தப் பெண் மாதை மறந்து விடுவோம் என்று தேற்றிக்கொண்டார்கள். மறந்து விடுவோம் என்று தீர்மானித்ததுபோலவே வேறு ஒரு முடிவையும் செய்தார்கள். இனி வம்சத்தில் பிறக்கிற எந்தக் குழந்தையையும் தொட்டிலில் கிடத்துவதில்லை என்பது அந்த முடிவு.

அப்படியாக அவர்கள் மூன்று இரவும் மூன்று பகலும் நடந்து வெகுதூரம் வந்திருந்தார்கள்.

இதற்கிடையில் துருக்க ராஜா தான் இச்சைப்பட்ட பெண்ணை அழைத்து வரும்படி சிப்பாய்களையும் பிரதானிகளையும் அனுப்பி வைத்தார். அவர்கள் ஹள்ளியில் வந்து பார்க்கும்போது வீடுகள் மூடிக்கிடந்தன. பாழ் வீடாகக் கிடக்கிறது என்று அவர்கள் வந்து சொன்ன சேதி ராஜாவை ஆத்திரமடையச் செய்தது.'அவர்கள் எங்கே இருந்தாலும் தேடிப்பிடித்து என் முன்னால் கொண்டுவரவேண்டும்' என்று கட்டளையிட்டார். சிப்பாய்கள் நாலாப் பக்கமும் அவர்களைத் தேடி அலைந்தார்கள். மலைப் பிரதேசத்தின் வடக்கே மோயார் ஆற்றின் அக்கரையில் அவர்கள் இளைப்பாறிக் கொண்டிருப்பது சிப்பாய்களின் கண்களில் பட்டது. கண்டுபிடித்து விட்டோம் என்ற ஆனந்தத்துடன் அதி வேகமாக ஆற்றை நெருங்கி வந்தார்கள். இக்கரையிலிருந்தவர்களும் காடு அசாதாரணமாக அசைவதைப் பார்த்து சிப்பாய்களின் நடமாட்டத்தைக் கண்டுகொண்டார்கள். 'மோசம் போனோமே' என்று திகிலடைந்தார்கள். என்ன செய்வது என்று ஏங்கினார்கள். ஏழு சகோதரர்களில் மூத்தவர் தோளின் மேல் வைத்திருந்த லிங்கத்தை நினைத்து உருகினார். 'எங்களுக்கு ஆபத்து வந்துவிட்டது. எங்களைக் காப்பது உமது கடமை. இந்த அத்துவானக் காட்டில் எங்களுக்கு உம்மையன்றி வேறு திக்கில்லை' என்று ஒரே மனதுடன் வேண்டினார். சகோதரர்களும் அவர்களது மனைவியரும் சகோதரியும் பீதியுடன் பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள்.

சிப்பாய்கள் ஆற்றங்கரையில் நின்று கும்மாளமாக சத்தம்போட்டுக்கொண்டு நீரில் கால்வைத்தார்கள். கரையைத் தாண்டி ஆற்றுக்குள் கால்வாசி தூரம் வந்திருப்பார்கள். அந்த விநாடியில் ஆறு சீற்றம் கொண்டு பொங்கியது. முழங்காலளவு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் வெள்ளம் பிரவாகமெடுத்துப் பாய்ந்தது. இக்கரையிலிருக்கிறவர்களுக்கு ஜலத்தைத் தவிர அந்தப் பக்கம் இருக்கிற எதுவும் தெரியவில்லை. யானைகள் ஒன்றுக்குப் பின்னால் ஒன்று நகர்வதுபோல தண்ணீர் உயரமாக ஓடிக்கொண்டிருந்தது. கங்கா தேவி ஆவேசத்துடன் தலைவிரி கோலமாக ஓடுவதை அவர்கள் பார்த்தார்கள். எல்லாரும் கல்லும் புல்லும் இறைந்து கிடந்த அந்த மண்ணிலேயே தெண்டனிட்டு கண்களில் நீர் வழிய தெய்வத்தைக் கும்பிட்டார்கள். அகதிகளான அவர்களை துரத்தி வந்த சிப்பாய்களில் அநேகம் பேரை வாரி எடுத்துக்கொண்டு போயிருந்தன கங்கா தேவியின் நீர்க்கரங்கள். மிஞ்சின ஒன்றிரண்டு சிப்பாய்கள் விசித்திர சம்பவத்தை துருக்க ராஜாவிடம் அறிக்கை செய்ய அச்சத்துடன் ஓடினார்கள்.

காடுகளிலும் மலைகளிலும் நாள்கணக்கில் அலைந்து திரிந்து காரை மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கும் வனத்தை அடைந்தார்கள். சுமந்து வந்த சாமான்களை இறக்கி வைத்து காரை மரங்களின் நிழலில் இளைப்பாறினார்கள். அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்துக்கு நேர்முகமாக மலைத் தொடர்கள் நிமிர்ந்து நின்றிருந்தன. பூமிக்கு வேலிபோட்டது போல இருந்தன மலைகள். அதற்கு அப்பால் எதுவும் இருக்காது என்று சொல்லும்படியாக உயர்ந்து நின்றிருந்தன. தொடரின் ஒரு மலையைவிட இன்னொரு மலை உயரம். அடுத்தது அதைவிட உயரம். அடுத்தது இன்னும் உயரம்.அதற்கடுத்தது இன்னும் இன்னும் உயரம் என்று நீண்டிருந்த மலைகளின் மீது மேகங்கள் உரசிக் கலந்து போவதை அவர்கள் பார்த்தார்கள். மலையில் சரிவிலும் உச்சியிலும் மரங்களும் செடிகளும் தழைத்திருந்தன. வெயில் காங்கையால் அந்த மலைகள் நீல நிறமாகத் தோன்றின.சகோதரர்களில் மூத்தவர் சொன்னார் '' அதோ தெரிகிற நீலமலையில் ஏறி அந்த வனத்தில் ஜீவித்துவருவோம்''. எல்லாரும் ஒத்துக்கொண்டு மலையேறினார்கள்.

அவர்கள் வந்து சேர்ந்த இடம் மேட்டுசமவெளியாக இருந்தது. மலைகளுக்கு நடுவில் தானியமடிக்கும் களம்போல இருந்த அந்த இடத்தில் வசிக்கத்
தீர்மானித்தார்கள். அந்த இடத்துக்குப் பேட்டிலாடாஎன்று பெயரும் வைத்தார்கள்.

சில காலம் அங்கே வசித்ததில் அவர்களுடைய பயம் விலகியிருந்தது. இனி ராஜாவைப் பற்றிய பயம் இல்லை. அதனால் விவசாயம் செய்தும் மாடுகளையும் எருமைகளையும் வளர்த்தியும் ஜீவிக்கலாம் என்ற நம்பிக்கை வந்திருந்தது. தனித்தனியாக ஹட்டிகள் கட்டி வாழலாம் என்று ஆசைப்பட்டார்கள். அப்படியான ஒரு நாள் வனத்தில் அகஸ்மாத்தாக ஒரு கலைமான் அவர்கள் கண்ணுக்குப் புலப்பட்டது. ஏழு சகோதரர்களில் ஐந்து பேர் அந்த மானைப்
பிடித்துக் கொள்வோம் என்று அதன் பின்னால் ஓடினார்கள்.இளையவர்களில் ஒருவன் மூத்தவர் கூடவே நின்றான். இருட்டுக்குள் வெளிச்சம் துளைத்துப் போகிற வேகத்தில் காட்டுக்குள்ளே மான் ஓடியது. அதைத் துரத்திக்கொண்டு ஓடிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் அதைப் பிடிக்க முடியாமல் களைத்துப் போய் நின்றார்கள். ஒவ்வொருவரும் வனத்தில் அவரவர் நின்ற இடங்களில் மயங்கி விழுந்து அப்படியே உறங்கிப் போனார்கள். மறுநாள் விழித்துப் பார்க்கையில்தான் ஒவ்வொருவருக்கும் சகோதரர்களைப் பிரிந்து தனியாகிப் போனது தெரியவந்தது. வனங்களில் தட்டுத் தடுமாறி தனித்தனியாக பேட்டிலாடாவுக்கு வந்து
சேர்ந்தார்கள். நான்கு பேரால் மட்டுந்தான் அப்படித் திரும்ப முடிந்தது. இரண்டு மூன்று நாட்களாகியும் ஒருவன் வரவேயில்லை. ஆறு பேரும் துக்கத்துடன் அவன் காணாமற் போனதை ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது.

ஒண்டியாக வனாந்தரத்தில் மானைத் துரத்திப் போனவர்கள் கலைத்து விழுந்தது தெய்வச் செயல் என்றார் மூத்தவர். அவர்கள் விழுந்த இடங்களை கடவுள் காண்பித்த இடமென்று பாவிக்க வேண்டுமென்றும் அந்த இடங்களிலேயே போய் அவர்கள் பிழைக்கலாமென்றும் சொன்னார். அவருடைய அனுமதி பெற்று ஒவ்வொருவனும் அந்தந்த இடங்களில் வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.முதலில் குடிசைகள் போட்டார்கள். பூமியில் பாடுபட்டதன் பலன் விளைந்து மனைகள் எழும்பின.ஹட்டிகள் உண்டாயின. ஹட்டிகள் பெருகி ஊர்களாயின. ஊர்கள் சேர்ந்து சீமைகளாயின. தோடநாடு சீமே.பொறங்காடு சீமே. மேக்குநாடு சீமே. குந்தே சீமே. மலைகளின் சரிவுகளிலும் மேட்டுச்சமவெளிகளிலும் ஆறுகளோடும் பள்ளத்தாக்குகளிலும் ஜனங்கள் பரவினார்கள்.அப்படியாக வம்சம் பல்கிப் பெருகியது.