செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

தேவி மகாத்மியம்


தெய்வமானாலும் பெண் என்பதால்
செங்ஙன்னூர் பகவதி
எல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள்

ஈரேழு உலகங்களையும் அடக்கும்
அவள் அடிவயிறு
வலியால் ஒடுங்குகிறது; கனன்று எரிகிறது

விடாய்த் தினங்களில் விடும் பெருமூச்சு
யுகங்களாக வேரூன்றிய
விருட்சங்களை உலுக்குகிறது.

தொடைபிளக்கும் வேதனையில்
அவள் எழுப்பும் தீனக்குரலில்
திசைகள் எட்டும் அதிர்கின்றன

எரிமலைக் குழம்புபோலப் பொங்கி
யோனியிலிருந்து வழியும் குருதித் தாரையில்
நதிகள் சிவந்து புரள்கின்றன.

விலக்கப்பட்ட உதிரத்தை ஒற்றிய வெண்பட்டு
புனிதச் செம்பட்டாகிறது
அண்டமெங்கும் தெறித்த செந்நீர்த் துளிகள்
உலர்ந்து குங்குமமாகிறது

எந்தத் தேவி இந்தப் பூமியைப் புரக்கிறாளோ
அவளே ஆற்றல் என்று
விண் முழங்குகிறது. மண் எதிரொலிக்கிறது.

செங்ஙன்னூர் பகவதி தேவியானது
தெய்வம் என்பதால் அல்ல
பெண்ணாக இருந்ததால்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக